பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    வண்ண மாடங்கள் சூழ்*  திருக்கோட்டியூர்க்* 
    கண்ணன் கேசவன்*  நம்பி பிறந்தினில்*

    எண்ணெய் சுண்ணம்*  எதிரெதிர் தூவிடக்* 
    கண்ணன் முற்றம்*  கலந்து அளறு ஆயிற்றே. (2)


    ஓடுவார் விழுவார்*  உகந்து ஆலிப்பார்*
    நாடுவார் நம்பிரான்*  எங்குத்தான் என்பார்*

    பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*
    ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே


    பேணிச் சீர் உடைப்*  பிள்ளை பிறந்தினில்*
    காணத் தாம் புகுவார்*  புக்குப் போதுவார்*

    ஆண் ஒப்பார்*  இவன் நேர் இல்லை காண்*  திரு-
    வோணத்தான்*  உலகு ஆளும் என்பார்களே


    உறியை முற்றத்து*  உருட்டி நின்று ஆடுவார்* 
    நறுநெய் பால் தயிர்*  நன்றாகத் தூவுவார்*

    செறி மென் கூந்தல்*  அவிழத் திளைத்து*  எங்கும் 
    அறிவு அழிந்தனர்*  ஆய்ப்பாடி ஆயரே


    கொண்ட தாள் உறி*  கோலக் கொடுமழுத்*
    தண்டினர்*  பறியோலைச் சயனத்தர்*

    விண்ட முல்லை* அரும்பு அன்ன பல்லினர்*
    அண்டர் மிண்டிப்*  புகுந்து நெய்யாடினார்


    கையும் காலும் நிமிர்த்துக்*  கடார நீர்*
    பைய ஆட்டிப்*  பசுஞ் சிறு மஞ்சளால்*

    ஐய நா வழித்தாளுக்கு*  அங்காந்திட* 
    வையம் ஏழும் கண்டாள்*  பிள்ளை வாயுளே


    வாயுள் வையகம் கண்ட*  மடநல்லார்* 
    ஆயர் புத்திரன் அல்லன்*  அருந்தெய்வம்*

    பாய சீர் உடைப்*  பண்பு உடைப் பாலகன்* 
    மாயன் என்று*  மகிழ்ந்தனர் மாதரே


    பத்து நாளும் கடந்த*  இரண்டாம் நாள்* 
    எத் திசையும்*  சயமரம் கோடித்து*

    மத்த மா மலை*  தாங்கிய மைந்தனை*
    உத்தானம் செய்து*  உகந்தனர் ஆயரே


    கிடக்கில் தொட்டில்*  கிழிய உதைத்திடும்* 
    எடுத்துக் கொள்ளில்*  மருங்கை இறுத்திடும்*

    ஒடுக்கிப் புல்கில்*  உதரத்தே பாய்ந்திடும்* 
    மிடுக்கு இலாமையால்*  நான் மெலிந்தேன் நங்காய்.


    செந்நெல்லார் வயல் சூழ்*  திருக்கோட்டியூர்* 
    மன்னு நாரணன்*  நம்பி பிறந்தமை*

    மின்னு நூல்*  விட்டுசித்தன் விரித்த*  இப் 
    பன்னு பாடல் வல்லார்க்கு*  இல்லை பாவமே (2)   


    சீதக் கடலுள்*  அமுது அன்ன தேவகி* 
    கோதைக் குழலாள்*  அசோதைக்குப் போத்தந்த*

    பேதைக் குழவி*  பிடித்துச் சுவைத்து உண்ணும்*
    பாதக் கமலங்கள் காணீரே* 
      பவள வாயீர் வந்து காணீரே  (2) 


    முத்தும் மணியும்*  வயிரமும் நன்பொன்னும்*
    தத்திப் பதித்துத்*  தலைப்பெய்தாற் போல்*  எங்கும்

    பத்து விரலும்*  மணிவண்ணன் பாதங்கள்* 
    ஒத்திட்டு இருந்தவா காணீரே* 
          ஒண்ணுதலீர்! வந்து காணீரே


    பணைத்தோள் இள ஆய்ச்சி*  பால் பாய்ந்த கொங்கை*
    அணைத்து ஆர உண்டு*  கிடந்த இப் பிள்ளை*

    இணைக்காலில்*  வெள்ளித் தளை நின்று இலங்கும்*
    கணைக்கால் இருந்தவா காணீரே*
          காரிகையீர்! வந்து காணீரே


    உழந்தாள் நறுநெய்*  ஒரோர் தடா உண்ண*
    இழந்தாள் எரிவினால்*  ஈர்த்து எழில் மத்தின்*

    பழந்தாம்பால் ஓச்ச*  பயத்தால் தவழ்ந்தான்**
    முழந்தாள் இருந்தவா காணீரே*
          முகிழ்முலையீர் வந்து காணீரே


    பிறங்கிய பேய்ச்சி*  முலை சுவைத்து உண்டிட்டு*
    உறங்குவான் போலே*  கிடந்த இப்பிள்ளை*

    மறம் கொள் இரணியன்*  மார்வை முன் கீண்டான்*
    குறங்குகளை வந்து காணீரே* 
          குவிமுலையீர் வந்து காணீரே


    மத்தக் களிற்று*  வசுதேவர் தம்முடைச்* 
    சித்தம் பிரியாத*  தேவகிதன் வயிற்றில்*

    அத்தத்தின் பத்தாம் நாள்*  தோன்றிய அச்சுதன்* 
    முத்தம் இருந்தவா காணீரே* 
          முகிழ்நகையீர் வந்து காணீரே


    இருங்கை மதகளிறு*  ஈர்க்கின்றவனைப்* 
    பருங்கிப் பறித்துக்கொண்டு*  ஓடும் பரமன்தன்* 

    நெருங்கு பவளமும்*  நேர்நாணும் முத்தும்* 
    மருங்கும் இருந்தவா காணீரே* 
          வாணுதலீர் வந்து காணீரே


    வந்த மதலைக்*  குழாத்தை வலிசெய்து* 
    தந்தக் களிறு போல்*  தானே விளையாடும்*

    நந்தன் மதலைக்கு*  நன்றும் அழகிய* 
    உந்தி இருந்தவா காணீரே* 
    ஒளியிழையீர்! வந்து காணீரே


    அதிருங் கடல்நிற வண்ணனை*  ஆய்ச்சி 
    மதுரமுலை ஊட்டி*  வஞ்சித்து வைத்துப்*

    பதறப் படாமே*  பழந் தாம்பால் ஆர்த்த* 
    உதரம் இருந்தவா காணீரே* 
    ஒளிவளையீர் வந்து காணீரே


    பெருமா உரலிற்*  பிணிப்புண்டு இருந்து*  அங்கு 
    இரு மா மருதம்*  இறுத்த இப் பிள்ளை*

    குருமா மணிப்பூண்*  குலாவித் திகழும்* 
    திருமார்வு இருந்தவா காணீரே*
    சேயிழையீர் வந்து காணீரே


    நாள்கள் ஓர் நாலைந்து*  திங்கள் அளவிலே*
    தாளை நிமிர்த்துச்*  சகடத்தைச் சாடிப்போய்*

    வாள் கொள் வளைஎயிற்று*  ஆருயிர் வவ்வினான்*
    தோள்கள் இருந்தவா காணீரே*
     சுரிகுழலீர் வந்து காணீரே 


    மைத்தடங்கண்ணி*  யசோதை வளர்க்கின்ற*
    செய்த்தலை நீல நிறத்துச்*  சிறுப்பிள்ளை*

    நெய்த்தலை நேமியும்*  சங்கும் நிலாவிய* 
    கைத்தலங்கள் வந்து காணீரே* 
    கனங்குழையீர் வந்து காணீரே


    வண்டு அமர் பூங்குழல்*  ஆய்ச்சி மகனாகக்* 
    கொண்டு வளர்க்கின்ற*  கோவலக் குட்டற்கு*

    அண்டமும் நாடும்*  அடங்க விழுங்கிய* 
    கண்டம் இருந்தவா காணீரே* 
    காரிகையீர்! வந்து காணீரே


    எம் தொண்டை வாய்ச் சிங்கம்*  வா என்று எடுத்துக்கொண்டு* 
    அந் தொண்டை வாய்*  அமுது ஆதரித்து*  ஆய்ச்சியர்

    தம் தொண்டை வாயால்*  தருக்கிப் பருகும்*  இச் 
    செந் தொண்டை வாய் வந்து காணீரே* 
    சேயிழையீர்! வந்து காணீரே


    நோக்கி யசோதை*  நுணுக்கிய மஞ்சளால்* 
    நாக்கு வழித்து*  நீராட்டும் இந் நம்பிக்கு*

    வாக்கும் நயனமும்*  வாயும் முறுவலும்* 
    மூக்கும் இருந்தவா காணீரே* 
     மொய்குழலீர் வந்து காணீரே


    விண்கொள் அமரர்கள்*  வேதனை தீர*  முன் 
    மண்கொள் வசுதேவர்*  தம் மகனாய் வந்து*

    திண்கொள் அசுரரைத்*  தேய வளர்கின்றான்* 
    கண்கள் இருந்தவா காணீரே* 
     கனவளையீர் வந்து காணீரே


    பருவம் நிரம்பாமே*  பாரெல்லாம் உய்யத்*
    திருவின் வடிவு ஒக்கும்*  தேவகி பெற்ற*

    உருவு கரிய*  ஒளி மணிவண்ணன்*
    புருவம் இருந்தவா காணீரே* 
    பூண்முலையீர்! வந்து காணீரே


    மண்ணும் மலையும்*  கடலும் உலகு ஏழும்* 
    உண்ணுந் திறத்து*  மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு*

    வண்ணம் எழில்கொள்*  மகரக்குழை இவை* 
    திண்ணம் இருந்தவா காணீரே* 
     சேயிழையீர்! வந்து காணீரே


    முற்றிலும் தூதையும்*  முன்கைமேல் பூவையும்* 
    சிற்றில் இழைத்துத்*  திரிதருவோர்களைப்*

    பற்றிப் பறித்துக்கொண்டு*  ஓடும் பரமன்தன்* 
    நெற்றி இருந்தவா காணீரே* 
    நேரிழையீர்! வந்து காணீரே


    அழகிய பைம்பொன்னின்*  கோல் அங்கைக் கொண்டு* 
    கழல்கள் சதங்கை*  கலந்து எங்கும் ஆர்ப்ப* 

    மழ கன்றினங்கள்*  மறித்துத் திரிவான்* 
    குழல்கள் இருந்தவா காணீரே* 
     குவிமுலையீர் வந்து காணீரே


    சுருப்பார் குழலி*  யசோதை முன் சொன்ன* 
    திருப் பாதகேசத்தைத்*  தென்புதுவைப் பட்டன்*

    விருப்பால் உரைத்த*  இருபதோடு ஒன்றும் 
    உரைப்பார் போய்*  வைகுந்தத்து ஒன்றியிருப்பரே (2)


    மாணிக்கம் கட்டி*  வயிரம் இடை கட்டி* 
    ஆணிப் பொன்னால் செய்த*  வண்ணச் சிறுத்தொட்டில்*

    பேணி உனக்குப்*  பிரமன் விடுதந்தான்* 
    மாணிக் குறளனே தாலேலோ* 
    வையம் அளந்தானே தாலேலோ (2)


    உடையார் கனமணியோடு*  ஒண் மாதுளம்பூ* 
    இடை விரவிக் கோத்த*  எழிற் தெழ்கினோடும்*

    விடை ஏறு காபாலி*  ஈசன் விடுதந்தான்* 
    உடையாய்! அழேல் அழேல் தாலேலோ* 
    உலகம் அளந்தானே! தாலேலோ


    என்தம்பிரானார்*  எழிற் திருமார்வற்குச்*
    சந்தம் அழகிய*  தாமரைத் தாளற்கு*

    இந்திரன் தானும்*  எழில் உடைக் கிண்கிணி* 
    தந்து உவனாய் நின்றான் தாலேலோ* 
    தாமரைக் கண்ணனே! தாலேலோ


    சங்கின் வலம்புரியும்*  சேவடிக் கிண்கிணியும்* 
    அங்கைச் சரிவளையும்*  நாணும் அரைத்தொடரும்*

    அங்கண் விசும்பில்*  அமரர்கள் போத்தந்தார்* 
    செங்கண் கருமுகிலே! தாலேலோ* 
     தேவகி சிங்கமே! தாலேலோ   


    எழில் ஆர் திருமார்வுக்கு*  ஏற்கும் இவை என்று*
    அழகிய ஐம்படையும்*  ஆரமும் கொண்டு*

    வழு இல் கொடையான்*  வயிச்சிரவணன்* 
    தொழுது உவனாய் நின்றான் தாலேலோ* 
    தூமணி வண்ணனே தாலேலோ


    ஓதக் கடலின்*  ஒளிமுத்தின் ஆரமும்* 
    சாதிப் பவளமும்*  சந்தச் சரிவளையும்*

    மா தக்க என்று*  வருணன் விடுதந்தான்* 
    சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ* 
    சுந்தரத் தோளனே! தாலேலோ


    கானார் நறுந்துழாய்*  கைசெய்த கண்ணியும்* 
    வானார் செழுஞ்சோலைக்*  கற்பகத்தின் வாசிகையும்*

    தேனார் மலர்மேல்*  திருமங்கை போத்தந்தாள்* 
    கோனே! அழேல் அழேல் தாலேலோ* 
     குடந்தைக் கிடந்தானே! தாலேலோ


    கச்சொடு பொற்சுரிகை*  காம்பு கனகவளை*
    உச்சி மணிச்சுட்டி*  ஒண்தாள் நிரைப் பொற்பூ*

    அச்சுதனுக்கு என்று*  அவனியாள் போத்தந்தாள்*
    நச்சுமுலை உண்டாய்! தாலேலோ*
    நாராயணா! அழேல் தாலேலோ


    மெய் திமிரும் நானப்*  பொடியொடு மஞ்சளும்*
    செய்ய தடங்கண்ணுக்கு*  அஞ்சனமும் சிந்துரமும்*

    வெய்ய கலைப்பாகி*  கொண்டு உவளாய் நின்றாள்*
    ஐயா! அழேல் அழேல் தாலேலோ* 
     அரங்கத்து அணையானே! தாலேலோ


    வஞ்சனையால் வந்த*  பேய்ச்சி முலை உண்ட*
    அஞ்சன வண்ணனை*  ஆய்ச்சி தாலாட்டிய*

    செஞ்சொல் மறையவர் சேர்*  புதுவைப் பட்டன் சொல்*
    எஞ்சாமை வல்லவர்க்கு*  இல்லை இடர்தானே  (2)


    தன்முகத்துச் சுட்டி*  தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்* 
    பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப்*  புழுதி அளைகின்றான்*

    என்மகன் கோவிந்தன்*  கூத்தினை இள மா மதீ!* 
    நின்முகம் கண்ணுள ஆகில்*  நீ இங்கே நோக்கிப் போ (2)


    என் சிறுக்குட்டன்*  எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்*
    தன் சிறுக்கைகளால்*  காட்டிக் காட்டி அழைக்கின்றான்*

    அஞ்சன வண்ணனோடு*  ஆடல் ஆட உறுதியேல்*
    மஞ்சில் மறையாதே*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா 


    சுற்றும் ஒளிவட்டம்*  சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*
    எத்தனை செய்யிலும்*  என்மகன் முகம் நேரொவ்வாய்*

    வித்தகன் வேங்கட வாணன்*  உன்னை விளிக்கின்ற*
    கைத்தலம் நோவாமே*  அம்புலீ! கடிது ஓடி வா      


    சக்கரக் கையன்*  தடங்கண்ணால் மலர விழித்து*
    ஒக்கலைமேல் இருந்து*  உன்னையே சுட்டிக் காட்டும் காண்*

    தக்கது அறிதியேல்*  சந்திரா! சலம் செய்யாதே*
    மக்கட் பெறாத*  மலடன் அல்லையேல் வா கண்டாய்


    அழகிய வாயில்*  அமுத ஊறல் தெளிவுற*
    மழலை முற்றாத இளஞ்சொல்லால்*  உன்னைக் கூகின்றான்*

    குழகன் சிரீதரன்*  கூவக் கூவ நீ போதியேல்*
    புழையில ஆகாதே*  நின்செவி புகர் மா மதீ!


    தண்டொடு சக்கரம்*  சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்*
    கண் துயில்கொள்ளக் கருதிக்*  கொட்டாவி கொள்கின்றான்*

    உண்ட முலைப்பால் அறா கண்டாய்*  உறங் காவிடில்*
    விண்தனில் மன்னிய*  மா மதீ! விரைந்து ஓடி வா


    பாலகன் என்று*  பரிபவம் செய்யேல்*  பண்டு ஓர் நாள்
    ஆலின் இலை வளர்ந்த*  சிறுக்கன் அவன் இவன்*

    மேல் எழப் பாய்ந்து*  பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்*
    மாலை மதியாதே*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா


    சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை*  இகழேல் கண்டாய்*
    சிறுமையின் வார்த்தையை*  மாவலியிடைச் சென்று கேள்*

    சிறுமைப் பிழை கொள்ளில்*  நீயும் உன் தேவைக்கு உரியை காண்*
    நிறைமதீ! நெடுமால்*  விரைந்து உன்னைக் கூகின்றான்


    தாழியில் வெண்ணெய்*  தடங்கை ஆர விழுங்கிய* 
    பேழை வயிற்று எம்பிரான் கண்டாய்*  உன்னைக் கூகின்றான்* 

    ஆழிகொண்டு உன்னை எறியும்*  ஐயுறவு இல்லை காண்* 
    வாழ உறுதியேல்*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா


    மைத்தடங் கண்ணி*  யசோதை தன்மகனுக்கு*  இவை- 
    ஒத்தன சொல்லி*  உரைத்த மாற்றம்*  ஒளிபுத்தூர்-

    வித்தகன் விட்டுசித்தன்*  விரித்த தமிழ் இவை* 
    எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு*  இடர் இல்லையே  (2)      


    உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா *  ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்* 
    பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!*  பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே!*

    செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி*  செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக* 
    ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.(2)  


    கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்*  குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்!* 
    மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி*  மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்*

    காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்*  கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே!* 
    ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.


    நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!*  நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்- 
    தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும்*  தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்* 

    விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்*  விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!* 
    அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 


    வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள*  வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே!* 
    கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்*  கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே!* 

    தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்*  என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்* 
    ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.  


    மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்*  வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி*  ஒருங்கு- 
    ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை*  ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!* 

    முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்*  முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய* 
    அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.


    காய மலர்நிறவா! கருமுகில் போல் உருவா!*  கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே* 
    தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா!*  துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே!* 

    ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை*  அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்!* 
    ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே  


    துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்*  தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய* 
    நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய*  நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே!* 

    தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்*  தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய*  என்- 
    அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 


    உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி*  உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்* 
    கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர*  கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி* 

    மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்-  சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!* 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே 


    பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்*  பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர* 
    கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்*  கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக* 

    நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே*   நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ* 
    ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.    


    செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்*  சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும்*  அரையிற்- 
    தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்*  பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்* 

    மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்*  மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக* 
    எங்கள் குடிக்கு அரசே! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே. 


    அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்*  ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே! 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று* 

    அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு*  ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்* 
    இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.  


    மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப*  மருங்கின் மேல்* 
    ஆணிப் பொன்னாற் செய்த*  ஆய்பொன் உடை மணி* 

    பேணி பவளவாய்*  முத்துஇலங்க*  பண்டு- 
    காணி கொண்ட கைகளால் சப்பாணி* 
    கருங்குழற் குட்டனே! சப்பாணி. (2)  


    பொன் அரைநாணொடு*  மாணிக்கக் கிண்கிணி* 
    தன் அரை ஆட*  தனிச் சுட்டி தாழ்ந்து ஆட* 

    என் அரை மேல்நின்று இழிந்து*  உங்கள் ஆயர்தம்*   
    மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி* 
    மாயவனே*  கொட்டாய் சப்பாணி  


    பல் மணி முத்து*  இன்பவளம் பதித்தன்ன* 
    என் மணிவண்ணன்*  இலங்கு பொற் தோட்டின் மேல்* 

    நின் மணிவாய் முத்து இலங்க*  நின் அம்மைதன்* 
    அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி*
    ஆழியங் கையனே சப்பாணி      


    தூ நிலாமுற்றத்தே*  போந்து விளையாட* 
    வான் நிலா அம்புலீ*  சந்திரா! வா என்று*

    நீ நிலா நிற் புகழாநின்ற*  ஆயர்தம்* 
    கோ நிலாவ கொட்டாய் சப்பாணி* 
    குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.  


    புட்டியிற் சேறும்*  புழுதியும் கொண்டுவந்து* 
    அட்டி அமுக்கி*  அகம் புக்கு அறியாமே* 

    சட்டித் தயிரும்*  தடாவினில் வெண்ணெயும் உண்* 
    பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி* 
    பற்பநாபா! கொட்டாய் சப்பாணி. 


    தாரித்து நூற்றுவர்*  தந்தை சொற் கொள்ளாது* 
    போர் உய்த்து வந்து*  புகுந்தவர் மண் ஆளப்* 

    பாரித்த மன்னர் படப்*  பஞ்சவர்க்கு*  அன்று- 
    தேர் உய்த்த கைகளால் சப்பாணி* 
    தேவகி சிங்கமே! சப்பாணி       


    பரந்திட்டு நின்ற*  படுகடல் தன்னை* 
    இரந்திட்ட கைம்மேல்*  எறிதிரை மோதக்* 

    கரந்திட்டு நின்ற*  கடலைக் கலங்கச்* 
    சரந் தொட்ட கைகளால் சப்பாணி* 
    சார்ங்க விற்கையனே! சப்பாணி.  


    குரக்கு இனத்தாலே*  குரைகடல் தன்னை* 
    நெருக்கி அணை கட்டி*  நீள் நீர் இலங்கை*

    அரக்கர் அவிய*  அடு கணையாலே* 
    நெருக்கிய கைகளால் சப்பாணி* 
    நேமியங் கையனே! சப்பாணி.  


    அளந்து இட்ட தூணை*  அவன் தட்ட* ஆங்கே- 
    வளர்ந்திட்டு*  வாள் உகிர்ச் சிங்க உருவாய்*

    உளந் தொட்டு இரணியன்*  ஒண்மார்வு அகலம்* 
    பிளந்திட்ட கைகளால் சப்பாணி*  
    பேய் முலை உண்டானே! சப்பாணி.


    அடைந்திட்டு அமரர்கள்*  ஆழ்கடல் தன்னை* 
    மிடைந்திட்டு மந்தரம்*  மத்தாக நாட்டி* 

    வடம் சுற்றி*  வாசுகி வன்கயிறு ஆகக்* 
    கடைந்திட்ட கைகளால் சப்பாணி* 
    கார்முகில் வண்ணனே! சப்பாணி    


    ஆட்கொள்ளத் தோன்றிய*  ஆயர்தம் கோவினை* 
    நாட்கமழ் பூம்பொழில்*  வில்லிபுத்தூர்ப் பட்டன்* 

    வேட்கையால் சொன்ன* சப்பாணி ஈரைந்தும்* 
    வேட்கையினால் சொல்லுவார்*  வினை போதுமே (2)   


    தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்*  தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
    படு மும்மதப் புனல் சோர வாரணம்  பைய*  நின்று ஊர்வது போல்* 

    உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப*  உடை மணி பறை கறங்க* 
    தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி*  தளர்நடை நடவானோ    
      


    செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்*   சிறுபிறை முளைப் போல* 
    நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே*   நளிர் வெண்பல் முளை இலக* 

    அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி  பூண்ட*  அனந்தசயனன்* 
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*  தளர்நடை நடவானோ


    மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்*  சூழ் பரிவேடமுமாய்ப்* 
    பின்னற் துலங்கும் அரசிலையும்*  பீதகச் சிற்றாடையொடும்* 

    மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்* கழுத்தினிற் காறையொடும்* 
    தன்னிற் பொலிந்த இருடிகேசன்* தளர்நடை நடவானோ    


     
    கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்*  கணகண சிரித்து உவந்து* 
    முன் வந்து நின்று முத்தம் தரும்*  என் முகில்வண்ணன் திருமார்வன்* 

    தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து* என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
    தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே*  தளர்நடை நடவானோ    


    முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்*   மொடுமொடு விரைந்து ஓடப்* 
    பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்*  பெயர்ந்து அடியிடுவது போல்* 

     பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்*   பலதேவன் என்னும்* 
    தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்* தளர்நடை நடவானோ 


    ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்*  உள்ளடி பொறித்து அமைந்த* 
    இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்*  இலச்சினை பட நடந்து* 

    பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்*  பின்னையும் பெய்து பெய்து* 
    தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை*  தளர்நடை நடவானோ     


    படர் பங்கைய மலர்வாய் நெகிழப்*  பனி படு சிறுதுளி போல்* 
    இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி*  இற்று இற்று வீழநின்று* 

    கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்*  உடை மணி கணகணென* 
    தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி*  தளர்நடை நடவானோ   


    பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே*  அருவிகள் பகர்ந்தனைய* 
    அக்குவடம் இழிந்து ஏறித் தாழ*  அணி அல்குல் புடை பெயர* 

    மக்கள் உலகினிற் பெய்து அறியா*  மணிக் குழவி உருவின்*
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*  தளர்நடை நடவானோ     


    வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்*  வேழத்தின் கருங்கன்று போல்* 
    தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்*  சிறு புகர்பட வியர்த்து* 

    ஒண் போது அலர்கமலச் சிறுக்கால்*  உறைத்து ஒன்றும் நோவாமே* 
    தண் போது கொண்ட தவிசின் மீதே*  தளர்நடை நடவானோ    


    திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்*  செங்கண்மால் கேசவன்*  தன்- 
    திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி*  திகழ்ந்து எங்கும் புடைபெயர* 

    பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்*  பெரியதோர் தீர்த்த பலம்- 
    தரு நீர்ச்*  சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்*  தளர்நடை நடவானோ


    ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய*  அஞ்சனவண்ணன் தன்னைத்* 
    தாயர் மகிழ ஒன்னார் தளரத்*   தளர்நடை நடந்ததனை*   

    வேயர் புகழ் விட்டுசித்தன்*  சீரால் விரித்தன உரைக்கவல்லார்* 
    மாயன் மணிவண்ணன் தாள் பணியும்*  மக்களைப் பெறுவர்களே* (2)


    பொன் இயல் கிண்கிணி*  சுட்டி புறங் கட்டித்* 
    தன் இயல் ஓசை*  சலன்-சலன் என்றிட*

    மின் இயல் மேகம்*  விரைந்து எதிர் வந்தாற்போல்* 
    என் இடைக்கு ஓட்டரா அச்சோ* அச்சோ 
     எம்பெருமான்!  வாராய் அச்சோ அச்சோ  (2)


    செங்கமலப் பூவிற்*  தேன் உண்ணும் வண்டே போல்* 
    பங்கிகள் வந்து*  உன் பவளவாய் மொய்ப்ப*

    சங்கு வில் வாள் தண்டு*  சக்கரம் ஏந்திய* 
    அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ* 
     ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ


    பஞ்சவர் தூதனாய்ப்*  பாரதம் கைசெய்து* 
    நஞ்சு உமிழ் நாகம்*  கிடந்த நற் பொய்கை புக்கு* 

    அஞ்சப் பணத்தின்மேல்*  பாய்ந்திட்டு அருள்செய்த* 
    அஞ்சனவண்ணனே!  அச்சோ அச்சோ* 
     ஆயர் பெருமானே!  அச்சோ அச்சோ


    நாறிய சாந்தம்*  நமக்கு இறை நல்கு என்னத்*
    தேறி அவளும்*  திருவுடம்பிற் பூச*

    ஊறிய கூனினை*   உள்ளே ஒடுங்க*  அன்று_
    ஏற உருவினாய்!  அச்சோ அச்சோ* 
     எம்பெருமான்!  வாராய் அச்சோ அச்சோ  


    கழல் மன்னர் சூழக்*  கதிர் போல் விளங்கி*
    எழலுற்று மீண்டே*  இருந்து உன்னை நோக்கும்*

    சுழலை பெரிது உடைத்*   துச்சோதனனை*
    அழல விழித்தானே!  அச்சோ அச்சோ*
    ஆழி அங் கையனே!  அச்சோ அச்சோ


    போர் ஒக்கப் பண்ணி*   இப் பூமிப்பொறை தீர்ப்பான்* 
    தேர் ஒக்க ஊர்ந்தாய்!*  செழுந்தார் விசயற்காய்* 

    கார் ஒக்கு மேனிக்*  கரும் பெருங் கண்ணனே!* 
    ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ* 
     ஆயர்கள் போரேறே!  அச்சோ அச்சோ 


    மிக்க பெரும்புகழ்*  மாவலி வேள்வியிற்*
    தக்கது இது அன்று என்று*  தானம் விலக்கிய* 

    சுக்கிரன் கண்ணைத்*  துரும்பாற் கிளறிய* 
    சக்கரக் கையனே!  அச்சோ அச்சோ*
     சங்கம் இடத்தானே!  அச்சோ அச்சோ


    என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*
    முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*

    மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய* 
    மின்னு முடியனே!  அச்சோ அச்சோ* 
     வேங்கடவாணனே! அச்சோ அச்சோ  


    கண்ட கடலும்*  மலையும் உலகு ஏழும்*  
    முண்டத்துக்கு ஆற்றா*  முகில்வண்ணா ஓ!  என்று* 

    இண்டைச் சடைமுடி*  ஈசன் இரக்கொள்ள*  
    மண்டை நிறைத்தானே!  அச்சோ அச்சோ*
     மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ 


    துன்னிய பேரிருள்*  சூழ்ந்து உலகை மூட* 
    மன்னிய நான்மறை*  முற்றும் மறைந்திடப்*  

    பின் இவ் உலகினில்*  பேரிருள் நீங்க*  அன்று- 
    அன்னமது ஆனானே!  அச்சோ அச்சோ* 
     அருமறை தந்தானே!  அச்சோ அச்சோ      


    நச்சுவார் முன் நிற்கும்*  நாராயணன் தன்னை*
    அச்சோ வருக என்று*  ஆய்ச்சி உரைத்தன* 

    மச்சு அணி மாடப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
    நிச்சலும் பாடுவார்*  நீள் விசும்பு ஆள்வரே  (2)


    வட்டு நடுவே*  வளர்கின்ற*  மாணிக்க- 
    மொட்டு நுனையில்*  முளைக்கின்ற முத்தே போல்* 

    சொட்டுச் சொட்டு என்னத்*  துளிக்கத் துளிக்க*  என் 
    குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்  கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்* (2)


    கிண்கிணி கட்டிக்*  கிறி கட்டிக் கையினிற்*
    கங்கணம் இட்டுக்*  கழுத்திற் தொடர் கட்டித்* 

    தன் கணத்தாலே*  சதிரா நடந்து வந்து*
    என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்*  எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் 


    கத்தக் கதித்துக்*  கிடந்த பெருஞ்செல்வம்* 
    ஒத்துப் பொருந்திக்கொண்டு*  உண்ணாது மண் ஆள்வான்*

    கொத்துத் தலைவன்*  குடிகெடத் தோன்றிய* 
    அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்*  ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்


    நாந்தகம் ஏந்திய*  நம்பி சரண் என்று*
    தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி*  தரணியில்* 

    வேந்தர்கள் உட்க*   விசயன் மணித் திண்தேர்*
    ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்  உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்


    வெண்கலப் பத்திரம் கட்டி*  விளையாடிக்*
    கண் பல பெய்த*  கருந்தழைக் காவின் கீழ்ப்*

    பண் பல பாடிப்*  பல்லாண்டு இசைப்ப*  பண்டு- 
    மண் பல கொண்டான் புறம்புல்குவான்*  வாமனன் என்னைப் புறம்புல்குவான்


    சத்திரம் ஏந்தித்*  தனி ஒரு மாணியாய்*
    உத்தர வேதியில்*  நின்ற ஒருவனைக்* 

    கத்திரியர் காணக்*  காணி முற்றும் கொண்ட* 
    பத்திராகாரன் புறம்புல்குவான்*  பார் அளந்தான் என் புறம்புல்குவான்


    பொத்த உரலைக் கவிழ்த்து*  அதன்மேல் ஏறி* 
    தித்தித்த பாலும்*  தடாவினில் வெண்ணெயும்*

    மெத்தத் திருவயிறு*  ஆர விழுங்கிய*
    அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்*  ஆழியான் என்னைப் புறம்புல்குவான்


    மூத்தவை காண*  முது மணற்குன்று ஏறிக்* 
    கூத்து உவந்து ஆடிக்*  குழலால் இசை பாடி* 

    வாய்த்த மறையோர் வணங்க*  இமையவர்- 
    ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்*  எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்


    கற்பகக் காவு*  கருதிய காதலிக்கு*
    இப்பொழுது ஈவன் என்று*  இந்திரன் காவினில்*  

    நிற்பன செய்து*  நிலாத் திகழ் முற்றத்துள்* 
    உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்*  உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் 


    ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்*  புறம்புல்கிய* 
    வேய்த் தடந்தோளி சொல்*  விட்டுசித்தன் மகிழ்ந்து* 

    ஈத்த தமிழ் இவை*  ஈரைந்தும் வல்லவர்* 
    வாய்த்த நன்மக்களைப் பெற்று*  மகிழ்வரே (2)


    மெச்சு ஊது சங்கம் இடத்தான்*  நல் வேய் ஊதி* 
    பொய்ச் சூதிற் தோற்ற*  பொறை உடை மன்னர்க்காய்*

    பத்து ஊர் பெறாது அன்று*  பாரதம் கைசெய்த* 
    அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
          அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் (2)


    மலை புரை தோள் மன்னவரும்*  மாரதரும் மற்றும்* 
    பலர் குலைய*  நூற்றுவரும் பட்டழிய*  பார்த்தன்

    சிலை வளையத்*  திண்தேர்மேல் முன்நின்ற*  செங்கண் 
    அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
          அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.


    காயும் நீர் புக்குக்*  கடம்பு ஏறி*  காளியன் 
    தீய பணத்திற்*  சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி* 

    வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
    ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    இருட்டிற் பிறந்து போய்*  ஏழை வல் ஆயர்* 
    மருட்டைத் தவிர்ப்பித்து*  வன் கஞ்சன் மாளப்-

    புரட்டி*  அந்நாள் எங்கள்*  பூம்பட்டுக் கொண்ட* 
    அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    சேப் பூண்ட*  சாடு சிதறித்*  திருடி நெய்க்கு 
    ஆப்பூண்டு*  நந்தன் மனைவி கடை தாம்பால்*

    சோப்பூண்டு துள்ளித்*  துடிக்கத் துடிக்க*  அன்று 
    ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.


    செப்பு இள மென்முலைத்*  தேவகி நங்கைக்குச்* 
    சொப்படத் தோன்றி*  தொறுப்பாடியோம் வைத்த* 

    துப்பமும் பாலும்*  தயிரும் விழுங்கிய* 
    அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    தத்துக் கொண்டாள் கொலோ?*  தானே பெற்றாள் கொலோ?* 
    சித்தம் அனையாள்*  அசோதை இளஞ்சிங்கம்*

    கொத்து ஆர் கருங்குழற்*  கோபால கோளரி* 
    அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் 


    கொங்கை வன்*  கூனிசொற் கொண்டு குவலயத்* 
    துங்கக் கரியும்*  பரியும் இராச்சியமும்* 

    எங்கும் பரதற்கு அருளி*  வன்கான் அடை* 
    அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    பதக முதலை*  வாய்ப் பட்ட களிறு* 
    கதறிக் கைகூப்பி*  என் கண்ணா! கண்ணா! என்ன*

    உதவப் புள் ஊர்ந்து*  அங்கு உறுதுயர் தீர்த்த* 
    அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    வல்லாள் இலங்கை மலங்கச்*  சரந் துரந்த* 
    வில்லாளனை*  விட்டுசித்தன் விரித்த*

    சொல் ஆர்ந்த அப்பூச்சிப்*  பாடல் இவை பத்தும் 
    வல்லார் போய்*  வைகுந்தம் மன்னி இருப்பரே (2)


    அரவு அணையாய்! ஆயர் ஏறே!*  அம்மம் உண்ணத் துயிலெழாயே* 
    இரவும் உண்ணாது உறங்கி நீ போய்*  இன்றும் உச்சி கொண்டதாலோ*

    வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்*  வன முலைகள் சோர்ந்து பாயத்* 
    திரு உடைய வாய்மடுத்துத்*  திளைத்து உதைத்துப் பருகிடாயே (2)


    வைத்த நெய்யும் காய்ந்த பாலும்*  வடி தயிரும் நறு வெண்ணெயும்* 
    இத்தனையும் பெற்றறியேன்*  எம்பிரான்! நீ பிறந்த பின்னை*

    எத்தனையும் செய்யப் பெற்றாய்;*  ஏதும் செய்யேன் கதம் படாதே* 
    முத்து அனைய முறுவல் செய்து*  மூக்கு உறிஞ்சி முலை உணாயே


    தந்தம் மக்கள் அழுது சென்றால்*  தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்* 
    வந்து நின்மேற் பூசல் செய்ய*  வாழ வல்ல வாசுதேவா!*

    உந்தையார் உன்திறத்தர் அல்லர்*  உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்* 
    நந்தகோபன் அணி சிறுவா!*  நான் சுரந்த முலை உணாயே


    கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட*  கள்ளச் சகடு கலக்கு அழிய* 
    பஞ்சி அன்ன மெல்லடியால்*  பாய்ந்த போது நொந்திடும் என்று*

    அஞ்சினேன் காண் அமரர் கோவே!*  ஆயர் கூட்டத்து அளவன்றாலோ* 
    கஞ்சனை உன் வஞ்சனையால்*  வலைப்படுத்தாய்! முலை உணாயே


    தீய புந்திக் கஞ்சன் உன்மேல்*  சினம் உடையன் சோர்வு பார்த்து* 
    மாயந்தன்னால் வலைப்படுக்கில்*  வாழகில்லேன் வாசுதேவா!*

    தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்*  சாற்றிச் சொன்னேன் போகவேண்டா* 
    ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!*  அமர்ந்து வந்து என் முலை உணாயே


    மின் அனைய நுண் இடையார்*  விரி குழல்மேல் நுழைந்த வண்டு* 
    இன் இசைக்கும் வில்லிபுத்தூர்*  இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*

    என்ன நோன்பு நோற்றாள் கொலோ*  இவனைப் பெற்ற வயிறு உடையாள்* 
    என்னும் வார்த்தை எய்துவித்த*  இருடிகேசா! முலை உணாயே (2)


    பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்*  பெறுதும் என்னும் ஆசையாலே* 
    கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்*  கண்ணிணையால் கலக்க நோக்கி*

    வண்டு உலாம் பூங்குழலினார்*  உன் வாயமுதம் உண்ண வேண்டிக்* 
    கொண்டு போவான் வந்து நின்றார்*  கோவிந்தா நீ முலை உணாயே 


    இரு மலை போல் எதிர்ந்த மல்லர்*  இருவர் அங்கம் எரிசெய்தாய்!*  உன் 
    திரு மலிந்து திகழு மார்வு*  தேக்க வந்து என் அல்குல் ஏறி* 

    ஒரு முலையை வாய்மடுத்து*  ஒரு முலையை நெருடிக்கொண்டு* 
    இரு முலையும் முறை முறையாய்*  ஏங்கி ஏங்கி இருந்து உணாயே


    அங் கமலப் போதகத்தில்*  அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்* 
    செங் கமல முகம் வியர்ப்ப*  தீமை செய்து இம் முற்றத்தூடே*

    அங்கம் எல்லாம் புழுதியாக*  அளைய வேண்டா அம்ம! விம்ம* 
    அங்கு அமரர்க்கு அமுது அளித்த*  அமரர் கோவே! முலை உணாயே


    ஓட ஓடக் கிண்கிணிகள்*  ஒலிக்கும் ஓசைப் பாணியாலே* 
    பாடிப் பாடி வருகின்றாயைப்*  பற்பநாபன் என்று இருந்தேன்*

    ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு*  அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி* 
    ஓடி ஒடிப் போய்விடாதே*  உத்தமா! நீ முலை உணாயே


    வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி*  மாதவா! உண் என்ற மாற்றம்* 
    நீர் அணிந்த குவளை வாசம்*  நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*

    பார் அணிந்த தொல் புகழான்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
    சீர் அணிந்த செங்கண்மால் மேல்*  சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)   


    போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்*  பொரு திறற் கஞ்சன் கடியன்* 
    காப்பாரும் இல்லை கடல்வண்ணா*  உன்னை தனியே போய் எங்கும் திரிதி*

    பேய்ப்பால் முலை உண்ட பித்தனே!*  கேசவ நம்பீ! உன்னைக் காது குத்த* 
    ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்*  அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (2)


    வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி*  மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப* 
    நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத*  நாராயணா! இங்கே வாராய்* 

    எண்ணற்கு அரிய பிரானே*  திரியை எரியாமே காதுக்கு இடுவன்* 
    கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய*  கனகக் கடிப்பும் இவையாம்!


    வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்*  மகரக்குழை கொண்டுவைத்தேன்* 
    வெய்யவே காதில் திரியை இடுவன்*  நீ வேண்டிய தெல்லாம் தருவன்*

    உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய*  ஒண்சுடர் ஆயர்கொழுந்தே* 
    மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து*  மாதவனே! இங்கே வாராய்


    வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு*  வார்காது தாழப் பெருக்கிக்* 
    குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்*  கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்*

    இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்*  இனிய பலாப்பழம் தந்து* 
    சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்*  சோத்தம் பிரான்! இங்கே வாராய்


    சோத்தம் பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய்*  சுரிகுழலாரொடு நீ போய்க்* 
    கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்*  குணங்கொண்டு இடுவனோ? நம்பீ*

    பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்*  பிரானே! திரியிட ஒட்டில்* 
    வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்*  விட்டுவே! நீ இங்கே வாராய்


    விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்!*  உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி* 
    மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி*  மதுசூதனே என்று இருந்தேன்*

    புண் ஏதும் இல்லை உன்காது மறியும்*  பொறுத்து இறைப் போது இரு நம்பீ! 
    கண்ணா! என் கார்முகிலே! கடல்வண்ணா*  காவலனே! முலை உணாயே   


    முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி*  நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு* 
    மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*  பசுநிரை மேய்த்தாய்*

    சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*  திரு ஆயர்பாடிப் பிரானே!* 
    தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?


    என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்*  என்னை நான் மண் உண்டேனாக* 
    அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்*  அனைவர்க்கும் காட்டிற்றிலையே?*

    வன் புற்று அரவின் பகைக் கொடி*  வாமன நம்பீ! உன்காதுகள் தூரும்* 
    துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே! திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே


    மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்*  தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று* 
    கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்*  காணவே கட்டிற்றிலையே?*

    செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்*  சிரீதரா! உன்காது தூரும்* 
    கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற*  காரிகையார் சிரியாமே


    காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்*  காதுகள் வீங்கி எரியில்?* 
    தாரியா தாகில் தலை நொந்திடும் என்று*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?*

    சேரியிற் பிள்ளைகள் எல்லாரும்- காது பெருக்கித்*  திரியவும் காண்டி* 
    ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட*  இருடிகேசா! என்தன் கண்ணே!


    கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்*  கடிகமழ் பூங்குழலார்கள்* 
    எண்ணத்துள் என்றும் இருந்து*  தித்திக்கும் பெருமானே! எங்கள் அமுதே* 

    உண்ணக் கனிகள் தருவன்*  கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்* 
    பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட*  பற்பநாபா இங்கே வாராய்    


    வா என்று சொல்லி என்கையைப் பிடித்து*  வலியவே காதிற் கடிப்பை* 
    நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?*  காதுகள் நொந்திடும் கில்லேன்*

    நாவற் பழம் கொண்டுவைத்தேன்*  இவை காணாய் நம்பீ*  முன் வஞ்ச மகளைச் 
    சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட*  தாமோதரா இங்கே வாராய்


    வார் காது தாழப் பெருக்கி அமைத்து*  மகரக்குழை இட வேண்டிச்* 
    சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்*  சிந்தையுள் நின்று திகழப்*

    பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்*  பன்னிரு நாமத்தால் சொன்ன* 
    ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்*  அச்சுதனுக்கு அடியாரே (2)


    வெண்ணெய் அளைந்த குணுங்கும்*  விளையாடு புழுதியும் கொண்டு* 
    திண்ணென இவ் இரா உன்னைத்*  தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*

    எண்ணெய் புளிப்பழம் கொண்டு*  இங்கு எத்தனை போதும் இருந்தேன்* 
    நண்ணல் அரிய பிரானே!*  நாரணா! நீராட வாராய்  (2)


    கன்றுகள் ஓடச் செவியிற்*  கட்டெறும்பு பிடித்து இட்டால்* 
    தென்றிக் கெடும் ஆகில்*  வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்*

    நின்ற மராமரம் சாய்த்தாய்!*  நீ பிறந்த திருவோணம்* 
    இன்று நீ நீராட வேண்டும்*  எம்பிரான்! ஓடாதே வாராய்


    பேய்ச்சி முலை உண்ணக் கண்டு*  பின்னையும் நில்லாது என்நெஞ்சம்* 
    ஆய்ச்சியர் எல்லாரும் கூடி*  அழைக்கவும் நான் முலை தந்தேன்*

    காய்ச்சின நீரொடு நெல்லி* கடாரத்திற் பூரித்து வைத்தேன்* 
    வாய்த்த புகழ் மணிவண்ணா!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கஞ்சன் புணர்ப்பினில் வந்த*  கடிய சகடம் உதைத்து* 
    வஞ்சகப் பேய்மகள் துஞ்ச*  வாய் முலை வைத்த பிரானே!*

    மஞ்சளும் செங்கழுநீரின்*  வாசிகையும் நறுஞ்சாந்தும்* 
    அஞ்சனமும் கொண்டு வைத்தேன்*  அழகனே! நீராட வாராய்


    அப்பம் கலந்த சிற்றுண்டி*  அக்காரம் பாலிற் கலந்து* 
    சொப்பட நான் சுட்டு வைத்தேன்*  தின்னல் உறுதியேல் நம்பி!*

    செப்பு இள மென்முலையார்கள்*  சிறுபுறம் பேசிச் சிரிப்பர்* 
    சொப்பட நீராட வேண்டும்*  சோத்தம் பிரான்! இங்கே வாராய்


    எண்ணெய்க் குடத்தை உருட்டி*  இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்* 
    கண்ணைப் புரட்டி விழித்துக்*  கழகண்டு செய்யும் பிரானே!*

    உண்ணக் கனிகள் தருவன்*  ஒலிகடல் ஓதநீர் போலே* 
    வண்ணம் அழகிய நம்பீ!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கறந்த நற்பாலும் தயிரும்*  கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்* 
    பிறந்ததுவே முதலாகப்*  பெற்றறியேன் எம்பிரானே!*

    சிறந்த நற்றாய் அலர் தூற்றும்*  என்பதனால் பிறர் முன்னே* 
    மறந்தும் உரையாட மாட்டேன்*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கன்றினை வால் ஓலை கட்டி*  கனிகள் உதிர எறிந்து* 
    பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்*  பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்* 

    நின்திறத்தேன் அல்லேன் நம்பீ!*  நீ பிறந்த திரு நன்னாள்* 
    நன்று நீ நீராட வேண்டும்*  நாரணா! ஓடாதே வாராய்


    பூணித் தொழுவினிற் புக்குப்*  புழுதி அளைந்த பொன்-மேனி* 
    காணப் பெரிதும் உகப்பன்*  ஆகிலும் கண்டார் பழிப்பர்*

    நாண் இத்தனையும் இலாதாய்!*  நப்பின்னை காணிற் சிரிக்கும்* 
    மாணிக்கமே! என்மணியே!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கார் மலி மேனி நிறத்துக்*  கண்ணபிரானை உகந்து* 
    வார் மலி கொங்கை யசோதை*  மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*

    பார் மலி தொல் புதுவைக் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
    சீர் மலி செந்தமிழ் வல்லார்*  தீவினை யாதும் இலரே  (2)


    பின்னை மணாளனை*  பேரிற் கிடந்தானை* 
    முன்னை அமரர்* முதற் தனி வித்தினை* 

    என்னையும் எங்கள்*  குடி முழுது ஆட்கொண்ட* 
    மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்! (2)  


    பேயின் முலை உண்ட*  பிள்ளை இவன் முன்னம்* 
    மாயச் சகடும்*  மருதும் இறுத்தவன்* 

    காயாமலர் வண்ணன்*  கண்ணன் கருங்குழல்* 
    தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்! 


    திண்ணக் கலத்திற்*  திரை உறிமேல் வைத்த* 
    வெண்ணெய் விழுங்கி*  விரைய உறங்கிடும்*

    அண்ணல் அமரர்*  பெருமானை ஆயர்தம்* 
    கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!


    பள்ளத்தில் மேயும்*  பறவை உருக் கொண்டு* 
    கள்ள அசுரன்*  வருவானைத் தான் கண்டு* 

    புள் இது என்று*  பொதுக்கோ வாய் கீண்டிட்ட* 
    பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!


    கற்றினம் மேய்த்துக்*  கனிக்கு ஒரு கன்றினைப்* 
    பற்றி எறிந்த*  பரமன் திருமுடி* 

    உற்றன பேசி*  நீ ஓடித் திரியாதே* 
    அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    கிழக்கிற் குடி மன்னர்*  கேடு இலாதாரை* 
    அழிப்பான் நினைந்திட்டு*  அவ் ஆழிஅதனால்* 

    விழிக்கும் அளவிலே*  வேர் அறுத்தானைக்* 
    குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்! 
    கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    பிண்டத் திரளையும்*  பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்* 
    உண்டற்கு வேண்டி*  நீ ஓடித் திரியாதே*

    அண்டத்து அமரர்*  பெருமான் அழகு அமர்* 
    வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்! 
    மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    உந்தி எழுந்த*  உருவ மலர்தன்னில்*  
    சந்தச் சதுமுகன்*  தன்னைப் படைத்தவன்* 

    கொந்தக் குழலைக்*  குறந்து புளி அட்டித்* 
    தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்! 
    தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    மன்னன்தன் தேவிமார்*  கண்டு மகிழ்வு எய்த* 
    முன் இவ் உலகினை*  முற்றும் அளந்தவன்*

    பொன்னின் முடியினைப்* பூ அணைமேல் வைத்துப்* 
    பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!


    கண்டார் பழியாமே*  அக்காக்காய் கார்வண்ணன்!* 
    வண்டு ஆர் குழல்வார*  வா என்ற ஆய்ச்சி சொல்*

    விண் தோய் மதில்*  வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்* 
    கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே! (2)


    வேலிக் கோல் வெட்டி*  விளையாடு வில் ஏற்றி* 
    தாலிக் கொழுந்தைத்*  தடங்கழுத்திற் பூண்டு*

    பீலித் தழையைப்*  பிணைத்துப் பிறகிட்டு* 
    காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா! (2)


    கொங்கும் குடந்தையும்*  கோட்டியூரும் பேரும்* 
    எங்கும் திரிந்து*  விளையாடும் என்மகன்* 

    சங்கம் பிடிக்கும்*  தடக்கைக்குத் தக்க*  நல் 
    அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா! 
    அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.


    கறுத்திட்டு எதிர்நின்ற*  கஞ்சனைக் கொன்றான்* 
    பொறுத்திட்டு எதிர்வந்த*  புள்ளின் வாய் கீண்டான்* 

    நெறித்த குழல்களை*  நீங்க முன் ஓடிச்* 
    சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!


    ஒன்றே உரைப்பான்*  ஒரு சொல்லே சொல்லுவான்* 
    துன்று முடியான்*  துரியோதனன் பக்கல்*

    சென்று அங்குப் பாரதம்*  கையெறிந்தானுக்குக்* 
    கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா 
    கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.


    சீர் ஒன்று தூதாய்த்*  திரியோதனன் பக்கல்* 
    ஊர் ஒன்று வேண்டிப்* பெறாத உரோடத்தால்* 

    பார் ஒன்றிப் பாரதம்*  கைசெய்து பார்த்தற்குத்* 
    தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா 
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா 


    ஆலத்து இலையான்*  அரவின் அணை மேலான்* 
    நீலக் கடலுள்*  நெடுங்காலம் கண்வளர்ந்தான்*

    பாலப் பிராயத்தே*  பார்த்தற்கு அருள்செய்த*  
    கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா! 
    குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.


    பொற்றிகழ்*  சித்திரகூடப் பொருப்பினில்* 
    உற்ற வடிவில்*  ஒரு கண்ணும் கொண்ட* அக் 

    கற்றைக் குழலன்*  கடியன் விரைந்து உன்னை* 
    மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா! 
    மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா!


    மின்னிடைச் சீதை பொருட்டா*  இலங்கையர்* 
    மன்னன் மணிமுடி*  பத்தும் உடன் வீழத்* 

    தன் நிகர் ஒன்று இல்லாச்*  சிலை கால் வளைத்து இட்ட* 
    மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.


    தென் இலங்கை மன்னன்*  சிரம் தோள் துணிசெய்து* 
    மின் இலங்கும் பூண்*  விபீடண நம்பிக்கு* 

    என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற* 
    மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.


    அக்காக்காய்! நம்பிக்குக்*  கோல் கொண்டு வா என்று* 
    மிக்காள் உரைத்த சொல்*  வில்லிபுத்தூர்ப் பட்டன்* 

    ஒக்க உரைத்த*  தமிழ் பத்தும் வல்லவர்* 
    மக்களைப் பெற்று*  மகிழ்வர் இவ் வையத்தே.


    ஆனிரை மேய்க்க நீ போதி*  அருமருந்து ஆவது அறியாய்* 
    கானகம் எல்லாம் திரிந்து*  உன் கரிய திருமேனி வாட* 

    பானையிற் பாலைப் பருகிப்*  பற்றாதார் எல்லாம் சிரிப்ப* 
    தேனில் இனிய பிரானே* செண்பகப் பூச் சூட்ட வாராய்* (2) 


    கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
    உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 

    திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
    மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் 


    மச்சொடு மாளிகை ஏறி*  மாதர்கள்தம் இடம் புக்கு* 
    கச்சொடு பட்டைக் கிழித்து*  காம்பு துகில் அவை கீறி* 

    நிச்சலும் தீமைகள் செய்வாய்!*  நீள் திருவேங்கடத்து எந்தாய்!* 
    பச்சைத் தமனகத்தோடு*  பாதிரிப் பூச் சூட்ட வாராய்.


    தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத்*  தீமை செய்யாதே* 
    மருவும் தமனகமும் சீர்*  மாலை மணம் கமழ்கின்ற*

    புருவம் கருங்குழல் நெற்றி*  பொலிந்த முகிற்-கன்று போலே* 
    உருவம் அழகிய நம்பீ!* உகந்து இவை சூட்ட நீ வாராய்.


    புள்ளினை வாய் பிளந்திட்டாய்!*  பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்!* 
    கள்ள அரக்கியை மூக்கொடு*  காவலனைத் தலை கொண்டாய்!* 

    அள்ளி நீ வெண்ணெய் விழுங்க*  அஞ்சாது அடியேன் அடித்தேன்* 
    தெள்ளிய நீரில் எழுந்த*  செங்கழுநீர் சூட்ட வாராய்.


    எருதுகளோடு பொருதி*  ஏதும் உலோபாய் காண் நம்பீ!* 
    கருதிய தீமைகள் செய்து*  கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!* 

    தெருவின்கண் தீமைகள் செய்து*  சிக்கென மல்லர்களோடு* 
    பொருது வருகின்ற பொன்னே*  புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்.


    குடங்கள் எடுத்து ஏற விட்டுக்*  கூத்தாட வல்ல எம் கோவே!* 
    மடம் கொள் மதிமுகத்தாரை*  மால்செய வல்ல என் மைந்தா!* 

    இடந்திட்டு இரணியன் நெஞ்சை*  இரு பிளவு ஆக முன் கீண்டாய்!* 
    குடந்தைக் கிடந்த எம் கோவே!*  குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.


    சீமாலிகன் அவனோடு*  தோழமை கொள்ளவும் வல்லாய்!* 
    சாமாறு அவனை நீ எண்ணிச்*  சக்கரத்தால் தலை கொண்டாய்!* 

    ஆமாறு அறியும் பிரானே!*  அணி அரங்கத்தே கிடந்தாய்!* 
    ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!*  இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.


    அண்டத்து அமரர்கள் சூழ*  அத்தாணியுள் அங்கு இருந்தாய்!* 
    தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!*  தூமலராள் மணவாளா!*

    உண்டிட்டு உலகினை ஏழும்*  ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்!* 
    கண்டு நான் உன்னை உகக்கக்*  கருமுகைப் பூச் சூட்ட வாராய்.


    செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி* 
    எண் பகர் பூவும் கொணர்ந்தேன்*  இன்று இவை சூட்ட வா என்று* 

    மண் பகர் கொண்டானை*  ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை* 
    பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பத்தே. (2)


    இந்திரனோடு பிரமன்*   ஈசன் இமையவர் எல்லாம்* 
    மந்திர மா மலர் கொண்டு*  மறைந்து உவராய் வந்து நின்றார்*

    சந்திரன் மாளிகை சேரும்*  சதுரர்கள் வெள்ளறை நின்றாய்* 
    அந்தியம் போது இது ஆகும்*  அழகனே!  காப்பிட வாராய்  (2)


    கன்றுகள் இல்லம் புகுந்து*  கதறுகின்ற பசு எல்லாம்*
    நின்றொழிந்தேன் உன்னைக் கூவி*  நேசமேல் ஒன்றும் இலாதாய்!*

    மன்றில் நில்லேல் அந்திப் போது*  மதிற் திருவெள்ளறை நின்றாய்!* 
    நன்று கண்டாய் என்தன் சொல்லு*  நான் உன்னைக் காப்பிட வாராய் 


    செப்பு ஓது மென்முலையார்கள்*  சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு* 
    அப்போது நான் உரப்பப் போய்*  அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!* 

    முப் போதும் வானவர் ஏத்தும்*  முனிவர்கள் வெள்ளறை நின்றாய்! 
    இப்போது நான் ஒன்றும் செய்யேன்*  எம்பிரான் காப்பிட வாராய்!


    கண்ணில் மணல்கொடு தூவிக்*  காலினால் பாய்ந்தனை என்று என்று* 
    எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்* 

    கண்ணனே!  வெள்ளறை நின்றாய்!*  கண்டாரொடே தீமை செய்வாய்! 
    வண்ணமே வேலையது ஒப்பாய்!*  வள்ளலே! காப்பிட வாராய்        


    பல்லாயிரவர் இவ் ஊரில்*  பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
    எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது*  எம்பிரான்!  நீ இங்கே வாராய்* 

    நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!*  ஞானச் சுடரே!  உன்மேனி*
    சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்*  சொப்படக் காப்பிட வாராய்  


    கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்*  கரு நிறச் செம் மயிர்ப் பேயை* 
    வஞ்சிப்பதற்கு விடுத்தான்*  என்பது ஓர் வார்த்தையும் உண்டு* 

    மஞ்சு தவழ் மணி மாட*  மதிற் திருவெள்ளறை நின்றாய்! 
    அஞ்சுவன் நீ அங்கு நிற்க*  அழகனே!  காப்பிட வாராய்


    கள்ளச் சகடும் மருதும்*  கலக்கு அழிய உதைசெய்த* 
    பிள்ளையரசே!*  நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை* 

    உள்ளவாறு ஒன்றும் அறியேன்*  ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
    பள்ளிகொள் போது இது ஆகும்*  பரமனே!  காப்பிட வாராய்   


    இன்பம் அதனை உயர்த்தாய்!*  இமையவர்க்கு என்றும் அரியாய்!* 
    கும்பக் களிறு அட்ட கோவே!*  கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!* 

    செம்பொன் மதில் வெள்ளறையாய்!*  செல்வத்தினால் வளர் பிள்ளாய்! 
    கம்பக் கபாலி காண் அங்கு*  கடிது ஓடிக் காப்பிட வாராய்     


    இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு*  எழில் மறையோர் வந்து நின்றார்* 
    தருக்கேல் நம்பி!  சந்தி நின்று*  தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்* 

    திருக்காப்பு நான் உன்னைச் சாத்த*  தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
    உருக் காட்டும் அந்தி விளக்கு*  இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் 


    போது அமர் செல்வக்கொழுந்து*  புணர் திருவெள்ளறையானை* 
    மாதர்க்கு உயர்ந்த அசோதை*  மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்* 

    வேதப் பயன் கொள்ள வல்ல*  விட்டுசித்தன் சொன்ன மாலை* 
    பாதப் பயன் கொள்ள வல்ல*  பத்தர் உள்ளார் வினை போமே  (2)


    வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை- வெற்பிடை இட்டு*  அதன் ஓசை கேட்கும்* 
    கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்*  காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*

    புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை*  புரை புரையால் இவை செய்ய வல்ல* 
    அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  (2)  


    வருக வருக வருக இங்கே*  வாமன நம்பீ!  வருக இங்கே* 
    கரிய குழல் செய்ய வாய் முகத்து*  எம்  காகுத்த நம்பீ!  வருக இங்கே*

    அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்!*  அஞ்சனவண்ணா*  அசலகத்தார்* 
    பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்*  பாவியேனுக்கு இங்கே போதராயே  


    திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு*  தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்* 
    உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்*  உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்* 

    அருகு இருந்தார் தம்மை அநியாயம்  செய்வதுதான்*  வழக்கோ? அசோதாய்!* 
    வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்*  வாழ ஒட்டான் மதுசூதனனே


    கொண்டல்வண்ணா!  இங்கே போதராயே*  கோயிற் பிள்ளாய்!  இங்கே போதராயே* 
    தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த*  திருநாரணா!  இங்கே போதராயே* 

    உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி*  ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்*
    கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்*  கண்ணபிரான் கற்ற கல்வி தானே


    பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்*  பல்வளையாள் என்மகள் இருப்ப*
    மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று*  இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்* 

    சாளக்கிராமம் உடைய நம்பி*  சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்* 
    ஆலைக் கரும்பின் மொழி அனைய*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  


    போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்*  போதரேன் என்னாதே போதர் கண்டாய்* 
    ஏதேனும் சொல்லி அசலகத்தார்*  ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்* 

    கோதுகலம் உடைக்குட்டனேயோ!*  குன்று எடுத்தாய்!  குடம் ஆடு கூத்தா!* 
    வேதப் பொருளே!  என் வேங்கடவா!*  வித்தகனே!  இங்கே போதராயே


    செந்நெல் அரிசி சிறு பருப்புச்*  செய்த அக்காரம் நறுநெய் பாலால்* 
    பன்னிரண்டு திருவோணம் அட்டேன்*  பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்* 

    இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி*  எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்* 
    உன்மகன் தன்னை அசோதை நங்காய்!*  கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே 


    கேசவனே!  இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே*
    நேசம் இலாதார் அகத்து இருந்து*  நீ விளையாடாதே போதராயே*

    தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்*  தொண்டரும் நின்ற இடத்தில் நின்று*
    தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்*  தாமோதரா!  இங்கே போதராயே 


    கன்னல் இலட்டுவத்தோடு சீடை*  காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு* 
    என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்*  இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்* 

    பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்*  பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்* 
    உன்மகன் தன்னை அசோதை நங்காய்!*  கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே 


    சொல்லில் அரசிப் படுதி நங்காய்!*  சூழல் உடையன் உன்பிள்ளை தானே*
    இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்*  கையில் வளையைக் கழற்றிக்கொண்டு* 

    கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற*  அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து* 
    நல்லன நாவற் பழங்கள் கொண்டு*  நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே 


    வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்*  வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
    பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்*  பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்* 

    கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்*  கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* 
    எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்*  இணையடி என்தலை மேலனவே (2) 


    ஆற்றில் இருந்து*  விளையாடுவோங்களைச்*
    சேற்றால் எறிந்து*  வளை துகிற் கைக்கொண்டு*

    காற்றிற் கடியனாய்*  ஓடி அகம் புக்கு* 
    மாற்றமும் தாரானால் இன்று முற்றும்* 
     வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (2)


    குண்டலம் தாழ*  குழல் தாழ நாண் தாழ*
    எண் திசையோரும்*  இறைஞ்சித் தொழுது ஏத்த* 

    வண்டு அமர் பூங்குழலார்*  துகிற் கைக்கொண்டு* 
    விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்* 
     வேண்டவும் தாரானால் இன்று முற்றும் 


    தடம் படு தாமரைப்*  பொய்கை கலக்கி* 
    விடம் படு நாகத்தை*  வால் பற்றி ஈர்த்து* 

    படம் படு பைந்தலை*  மேல் எழப் பாய்ந்திட்டு* 
    உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்* 
     உச்சியில் நின்றானால் இன்று முற்றும்


    தேனுகன் ஆவி செகுத்துப்* 
    பனங்கனி தான் எறிந்திட்ட*  தடம் பெருந்தோளினால்* 

    வானவர் கோன் விட*  வந்த மழை தடுத்து* 
    ஆனிரை காத்தானால் இன்று முற்றும்*
    அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்


    ஆய்ச்சியர் சேரி*  அளை தயிர் பால் உண்டு*
    பேர்த்து அவர் கண்டு பிடிக்கப்*  பிடியுண்டு* 

    வேய்த் தடந்தோளினார்*  வெண்ணெய் கோள் மாட்டாது*
    அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்* 
     அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் 


    தள்ளித் தளர் நடை யிட்டு*  இளம் பிள்ளையாய்*
    உள்ளத்தின் உள்ளே*  அவளை உற நோக்கிக* 

    கள்ளத்தினால் வந்த*  பேய்ச்சி முலை உயிர்* 
    துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்* 
     துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்


    மாவலி வேள்வியில்*  மாண் உருவாய்ச் சென்று*  
    மூவடி தா என்று*  இரந்த இம் மண்ணினை* 

    ஒரடி இட்டு*  இரண்டாம் அடிதன்னிலே* 
    தாவடி இட்டானால் இன்று முற்றும்* 
     தரணி அளந்தானால் இன்று முற்றும்   


    தாழை தண்-ஆம்பற்*  தடம் பெரும் பொய்கைவாய்* 
    வாழும் முதலை*  வலைப்பட்டு வாதிப்பு உண்*

    வேழம் துயர் கெட*  விண்ணோர் பெருமானாய்* 
    ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்* 
     அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் 


    வானத்து எழுந்த*  மழை முகில் போல்*
    எங்கும் கானத்து மேய்ந்து*  களித்து விளையாடி* 

    ஏனத்து உருவாய்*  இடந்த இம் மண்ணினைத்* 
    தானத்தே வைத்தானால் இன்று முற்றும் 
     தரணி இடந்தானால் இன்று முற்றும் 


    அங் கமலக் கண்ணன்தன்னை*  அசோதைக்கு* 
    மங்கை நல்லார்கள்*  தாம் வந்து முறைப்பட்ட* 

    அங்கு அவர் சொல்லைப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
     இங்கு இவை வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே* (2) 


    தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு*  தளர்நடைஇட்டு வருவான்* 
    பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு*  ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்*

    மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச*  வாய்வைத்த பிரானே!* 
    அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  (2)


    பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன்*  வருமளவு இப்பால்* 
    வன் பாரச் சகடம் இறச் சாடி*  வடக்கில் அகம் புக்கு இருந்து*

    மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை*  வேற்றுருவம் செய்து வைத்த* 
    அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  


    கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்*  குடத் தயிர் சாய்த்துப் பருகி* 
    பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்*  பொன்றுவித்து இன்று நீ வந்தாய்*

    இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ!*  உன்னை என்மகனே என்பர் நின்றார்* 
    அம்மா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை*  மையன்மை செய்து அவர் பின்போய்* 
    கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று*  குற்றம் பல பல செய்தாய்*

    பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ*  புத்தகத்துக்கு உள கேட்டேன்* 
    ஐயா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு*  தயிரும் விழுங்கி* 
    கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த*  கலத்தொடு சாய்த்துப் பருகி*

    மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல*  விம்மி விம்மி அழுகின்ற* 
    அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  


    கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்*  கற்றாநிரை மண்டித் தின்ன* 
    விரும்பாக் கன்று ஒன்று கொண்டு*  விளங்கனி வீழ எறிந்த பிரானே!*

    சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்*  சூழ்வலை வைத்துத் திரியும்* 
    அரம்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு*  வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி* 
    சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்*  சுற்றும் தொழ நின்ற சோதி!*

    பொருள்- தாயம் இலேன் எம்பெருமான்!*  உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு- 
    அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    வாளா ஆகிலும் காணகில்லார்*  பிறர் மக்களை மையன்மை செய்து* 
    தோளால் இட்டு அவரோடு திளைத்து*  நீ சொல்லப் படாதன செய்தாய்*

    கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன்!*  வாழ்வில்லை*  நந்தன்- 
    காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    தாய்மார் மோர் விற்கப் போவர்*  தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்* 
    நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*  நேர்படவே கொண்டு போதி*

    காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*  கண்டார் கழறத் திரியும்* 
    ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்*  சோலைத் தடம் கொண்டு புக்கு* 
    முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை*  மூவேழு சென்றபின் வந்தாய்*

    ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்*  உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்* 
    அத்தா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 


    காரார் மேனி நிறத்து எம்பிரானைக்*  கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி* 
    ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்*  அம்மம் தாரேன் என்ற மாற்றம்*

    பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
    ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்*  இருடிகேசன் அடியாரே*  (2)


    அஞ்சன வண்ணனை*  ஆயர் கோலக் கொழுந்தினை* 
    மஞ்சனம் ஆட்டி*  மனைகள்தோறும் திரியாமே*

    கஞ்சனைக் காய்ந்த*  கழல் அடி நோவக் கன்றின்பின்* 
    என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!* (2)


    பற்றுமஞ்சள் பூசிப்*  பாவைமாரொடு பாடியிற்* 
    சிற்றில் சிதைத்து எங்கும்*  தீமை செய்து திரியாமே*

    கற்றுத் தூளியுடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!*


    நன்மணி மேகலை*  நங்கைமாரொடு நாள்தொறும்* 
    பொன்மணி மேனி*  புழுதியாடித் திரியாமே*

    கல்மணி நின்று அதிர்*  கான்- அதரிடைக் கன்றின்பின்* 
    என் மணிவண்ணனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    வண்ணக் கருங்குழல்*  மாதர் வந்து அலர் தூற்றிடப்* 
    பண்ணிப் பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

    கண்ணுக்கு இனியானைக்*  கான் -அதரிடைக் கன்றின்பின்* 
    எண்ணற்கு அரியானைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    அவ்வவ் இடம் புக்கு*  அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்* 
    கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்*  கூழைமை செய்யாமே*

    எவ்வும் சிலை உடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    தெய்வத் தலைவனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    மிடறு மெழுமெழுத்து ஓட*  வெண்ணெய் விழுங்கிப் போய்ப்* 
    படிறு பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

    கடிறு பல திரி*  கான் -அதரிடைக் கன்றின் பின்* 
    இடற என்பிள்ளையைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    வள்ளி நுடங்கு-இடை*  மாதர் வந்து அலர் தூற்றிடத்* 
    துள்ளி விளையாடித்*  தோழரோடு திரியாமே*

    கள்ளி உணங்கு*  வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்* 
    புள்ளின் தலைவனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    பன்னிரு திங்கள்*  வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்* 
    என் இளங் கொங்கை*  அமுதம் ஊட்டி எடுத்து யான்*

    பொன்னடி நோவப்*  புலரியே கானிற் கன்றின் பின்* 
    என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    குடையும் செருப்பும் கொடாதே*  தாமோதரனை நான்* 
    உடையும் கடியன ஊன்று*  வெம் பரற்கள் உடைக்*

    கடிய வெங் கானிடைக்*  கால்- அடி நோவக் கன்றின் பின்* 
    கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்*  :எல்லே பாவமே!*


    என்றும் எனக்கு இனியானை*  என் மணிவண்ணனைக்* 
    கன்றின் பின் போக்கினேன் என்று*  அசோதை கழறிய*

    பொன் திகழ் மாடப்*  புதுவையர்கோன் பட்டன் சொல்* 
    இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு*  இடர் இல்லையே* (2)


    சீலைக் குதம்பை ஒருகாது*  ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ* 
    கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்*  குளிர் முத்தின் கோடாலமும்*

    காலிப் பின்னே வருகின்ற*  கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்* 
    ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்*  நங்கைமீர்! நானே மற்று ஆரும் இல்லை  (2)


    கன்னி நன் மா மதில் சூழ்தரு*  பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்* 
    மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!*  பாவியேன் வாழ்வு உகந்து*

    உன்னை இளங்கன்று மேய்க்கச்*  சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்* 
    என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை*  என்குட்டனே முத்தம் தா*


    காடுகள் ஊடு போய்க்*  கன்றுகள் மேய்த்து மறியோடிக்*  கார்க்கோடற்பூச்- 
    சூடி வருகின்ற தாமோதரா!*  கற்றுத் தூளி காண் உன் உடம்பு*

    பேடை மயிற் சாயற் பின்னை மணாளா!*  நீராட்டு அமைத்து வைத்தேன்* 
    ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்*  உன்னோடு உடனே உண்பான்*


    கடி ஆர் பொழில் அணி வேங்கடவா!*  கரும் போரேறே!*  நீ உகக்கும்- 
    குடையும் செருப்பும் குழலும்*  தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*

    கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன*  சிறுக்குட்டச் செங் கமல* 
    அடியும் வெதும்பி*  உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்!* 


    பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை*  வாய்வைத்த போரேறே!*  என்
    சிற்றாயர் சிங்கமே! சீதை மணாளா!*  சிறுக்குட்டச் செங்கண் மாலே!*

    சிற்றாடையும் சிறுப்பத்திரமும்*  இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்* 
    கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்*  கலந்து உடன் வந்தாய் போலும்*


    அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!*  நீ பொய்கை புக்கு* 
    நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்*  நான் உயிர் வாழ்ந்திருந்தேன்*

    என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?*  ஏதும் ஓர் அச்சம் இல்லை* 
    கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்*  காயாம்பூ வண்ணம் கொண்டாய்!*


    பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய*  பாற்கடல் வண்ணா!*  உன்மேல்- 
    கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த*  கள்ள அசுரர் தம்மைச்*

    சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே*  விளங்காய் எறிந்தாய் போலும்* 
    என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்*  அங்ஙனம் ஆவர்களே*


    கேட்டு அறியாதன கேட்கின்றேன்*  கேசவா! கோவலர் இந்திரற்குக்* 
    காட்டிய சோறும் கறியும் தயிரும்*  கலந்து உடன் உண்டாய் போலும்*

    ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு*  ஒருபோதும் எனக்கு அரிது* 
    வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா!*  உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்*


    திண் ஆர் வெண்சங்கு உடையாய்!*  திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்*  முன்- 
    பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்*  பல்லாண்டு கூறுவித்தேன்*

    கண்ணாலம் செய்யக்*  கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன்* 
    கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்*  கோலம் செய்து இங்கே இரு*


    புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி*  தன் புத்திரன் கோவிந்தனைக்* 
    கற்றினம் மேய்த்து வரக் கண்டு*  உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்*

    செற்றம் இலாதவர் வாழ்தரு*  தென்புது வை விட்டுசித்தன் சொல்* 
    கற்று இவை பாட வல்லார்*  கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (2)


    தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்*  தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி* 
    குழல்களும் கீதமும் ஆகி*  எங்கும்- கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு* 

    மழைகொலோ வருகின்றது என்று சொல்லி*  மங்கைமார் சாலக வாசல் பற்றி* 
    நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்*  உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.* (2)


    வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு*  வசை அறத் திருவரை விரித்து உடுத்து* 
    பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி*  பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே* 

    முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்- அணிந்து*  பல் ஆயர் குழாம் நடுவே* 
    எல்லியம் போதாகப் பிள்ளை வரும்*  எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே*


    சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்*  மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட* 
    ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி*  ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்*

    வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்*  மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்* 
    அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்*  அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே.*


    குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்*  கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்* 
    கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு*  கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு* 

    என்றும் இவனை ஒப்பாரை நங்காய்*  கண்டறியேன் ஏடி! வந்து காணாய்* 
    ஒன்றும்நில்லா வளை கழன்று*  துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே.* 


    சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்*  சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து* 
    பற்றி நின்று ஆயர் கடைத்தலையே*  பாடவும் ஆடக் கண்டேன்*  அன்றிப் பின்- 

    மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்*  மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்* 
    கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்*  கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*


    சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்*  திருத்திய கோறம்பும் திருக்குழலும்* 
    அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்*  வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச*

    அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை*  அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்* 
    பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்* பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ !*


    சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்*  தன் திருமேனிநின்று ஒளி திகழ* 
    நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து*  பல் ஆயர் குழாம் நடுவே* 

    கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்*  குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து* ஆயரோடு- 
    ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை*  அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே.*


    சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்*  திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்* 
    அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை*  அழகிய நேத்திரத்தால் அணிந்து* 

    இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை*  எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன* 
    சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்*  துகிலொடு சரிவளை கழல்கின்றதே.


    வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து*  மல்லிகை வனமாலை மௌவல் மாலை* 
    சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்*  தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி* 

    அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை*  அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு*
    விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்* வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.* 


    விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ*  மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே* 
    கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு*  இளஆய்க் கன்னிமார் காமுற்ற- 

    வண்ணம்*  வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்*   விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்* 
    பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)  


    அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்*  தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்- 
    பொட்டத் துற்றி*  மாரிப் பகை புணர்த்த*  பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை* 

    வட்டத் தடங்கண் மட மான் கன்றினை*  வலைவாய்ப் பற்றிக் கொண்டு*  குறமகளிர்- 
    கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)


    வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்*  வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட* 
    மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப*  மதுசூதன் எடுத்து மறித்த மலை* 

    இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி*  இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்* 
    குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்*  ஆனாயரும் ஆநிரையும் அலறி* 
    எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப*  இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை* 

    தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்*  புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று* 
    கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்*  கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்* 
    அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு*  அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை* 

    கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்*  கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி*  எங்கும்- 
    குடவாய்ப் பட நின்று மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    வானத்தில் உள்ளீர்! வலியீர் உள்ளீரேல்*  அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்* 
    ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை*  இடவன் எழ வாங்கி எடுத்த மலை*

    கானக் களி-யானை தன் கொம்பு இழந்து*  கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்* 
    கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    செப்பாடு உடைய திருமால் அவன் தன்*  செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*  
    கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்*  காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை*

    எப்பாடும் பரந்து இழி தெள் அருவி*  இலங்கு மணி முத்துவடம் பிறழக்* 
    குப்பாயம் என நின்று காட்சிதரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்*  படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்* 
    தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்*  தாமோதரன் தாங்கு தடவரைதான்* 

    அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த*  அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்* 
    குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    சலமா முகில் பல் கணப் போர்க்களத்துச்*  சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு* 
    நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்*  நாராயணன் முன் முகம் காத்த மலை* 

    இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்*  இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்* 
    கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்*  வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை* 
    தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்*  தாமோதரன் தாங்கு தடவரை தான்* 

    முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்*  முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்* 
    கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்*  கோலமும் அழிந்தில வாடிற்று இல* 
    வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல*  மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்*

    முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்*  முன் நெற்றி நரைத்தன போல*  எங்கும்- 
    குடி ஏறி இருந்து மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு*  அரவப்-பகை ஊர்தி அவனுடைய*  
    குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*

    திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்*  பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்* 
    பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)


    நாவலம் பெரிய தீவினில் வாழும்*  நங்கைமீர்கள்! இது ஓர் அற்புதம் கேளீர்* 
    தூ வலம்புரி உடைய திருமால்*  தூய வாயிற் குழல்-ஓசை வழியே* 

    கோவலர் சிறுமியர் இளங் கொங்கை- குதுகலிப்ப*  உடல் உள் அவிழ்ந்து*  எங்கும்- 
    காவலும் கடந்து கயிறுமாலை*  ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2)  


    இட அணரை இடத் தோளொடு சாய்த்து*  இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்* 
    குடவயிறு பட வாய் கடைகூடக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 

    மட மயில்களொடு மான்பிணை போலே*  மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ* 
    உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி*  ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே.*


    வான் இளவரசு வைகுந்தக்  குட்டன்*  வாசுதேவன் மதுரைமன்னன்*  நந்த- 
    கோன் இளவரசு கோவலர் குட்டன்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 

    வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி*  மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்* 
    தேன் அளவு செறி கூந்தல் அவிழச்*  சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.*


    தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்*  தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்* 
    கானகம் படி உலாவி உலாவிக்*  கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது* 

    மேனகையொடு திலோத்தமை அரம்பை*  உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி* 
    வானகம் படியில் வாய் திறப்பு இன்றி*  ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.*a


    முன் நரசிங்கமது ஆகி*  அவுணன்- முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்- 
    மன்னர் அஞ்சும்*  மதுசூதனன் வாயிற்*  குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க* 

    நன் நரம்பு உடைய தும்புருவோடு*  நாரதனும் தம் தம் வீணை மறந்து* 
    கின்னர மிதுனங்களும் தம் தம்*  கின்னரம் தொடுகிலோம் என்றனரே* 


    செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்*  தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்* 
    நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்*  கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்*

    அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்*  அமுத கீத வலையால் சுருக்குண்டு* 
    நம் பரம் அன்று என்று நாணி மயங்கி*  நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.*


    புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்*  பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து* 
    அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத*  அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப* 

    அவியுணா மறந்து வானவர் எல்லாம்*  ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்* 
    செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*  கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*  


    சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்*  செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக* 
    குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*

    பறவையின் கணங்கள் கூடு துறந்து*  வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்* 
    கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்*  கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.* 


    திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்*  செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே* 
    சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்*  ஊதுகின்ற குழல்-ஓசை வழியே* 

    மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து*  மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர* 
    இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா*  எழுது சித்திரங்கள் போல நின்றனவே.*


    கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து*  கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை* 
    அருங்கல உருவின் ஆயர் பெருமான்*  அவனொருவன் குழல் ஊதின போது* 

    மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்*  மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்* 
    இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற- பக்கம் நோக்கி*  அவை செய்யும் குணமே.*


    குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்*  கோவிந்தனுடைய கோமள வாயிற்* 
    குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்*  கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்* 

    குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்*  விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்* 
    குழலை வென்ற குளிர் வாயினராகிச்*  சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2)


    ஐய புழுதி உடம்பு அளைந்து*  இவள் பேச்சும் அலந்தலையாய்ச்* 
    செய்ய நூலின் சிற்றாடை*  செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்* 

    கையினில் சிறுதூதை யோடு*  இவள் முற்றில் பிரிந்தும் இலள்* 
    பை அரவணைப் பள்ளியானொடு*  கைவைத்து இவள்வருமே.* (2)


    வாயிற் பல்லும் எழுந்தில*  மயிரும் முடி கூடிற்றில* 
    சாய்வு இலாத குறுந்தலைச்* சில பிள்ளைகளோடு இணங்கி* 

    தீ இணக்கு இணங்கு ஆடி வந்து*  இவள் தன் அன்ன செம்மை சொல்லி* 
    மாயன் மா மணிவண்ணன்மேல்*  இவள் மால் உறுகின்றாளே* 


    பொங்கு வெண்மணல் கொண்டு*  சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்* 
    சங்கு சக்கரம் தண்டு வாள்*  வில்லும் அல்லது இழைக்கலுறாள்* 

    கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில*  கோவிந்தனோடு இவளைச்* 
    சங்கை யாகி என் உள்ளம்*  நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே.* 


    ஏழை பேதை ஓர் பாலகன் வந்து*  என் பெண்மகளை எள்கி* 
    தோழிமார் பலர் கொண்டுபோய்ச்*  செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்?* 

    ஆழியான் என்னும் ஆழ மோழையில்*  பாய்ச்சி அகப்படுத்தி* 
    மூழை உப்பு அறியாது என்னும்*  மூதுரையும் இலளே*


    நாடும் ஊரும் அறியவே போய்*  நல்ல துழாய் அலங்கல்- 
    சூடி*  நாரணன் போம் இடம் எல்லாம்*  சோதித்து உழிதர்கின்றாள்* 

    கேடு வேண்டுகின்றார் பலர் உளர்*  கேசவனோடு இவளைப்* 
    பாடிகாவல் இடுமின் என்று என்று*  பார் தடுமாறினதே.*


    பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து*  இவள் பாடகமும் சிலம்பும்* 
    இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு*  என்னோடு இருக்கலுறாள்*

    பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று*  இவள் பூவைப் பூவண்ணா என்னும்* 
    வட்ட வார் குழல் மங்கைமீர்!*  இவள் மால் உறுகின்றாளே.*


    பேசவும் தரியாத பெண்மையின்*  பேதையேன் பேதை இவள்* 
    கூசமின்றி நின்றார்கள்*  தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்* 

    கேசவா என்றும் கேடிலீ என்றும்*  கிஞ்சுக வாய் மொழியாள்* 
    வாச வார்குழல் மங்கைமீர்!*  இவள் மால் உறுகின்றாளே.*


    காறை பூணும் கண்ணாடி காணும்*  தன் கையில் வளை குலுக்கும்* 
    கூறை உடுக்கும் அயர்க்கும்*  தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்* 

    தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்*  தேவன் திறம் பிதற்றும்* 
    மாறில் மா மணிவண்ணன்மேல்*  இவள் மால் உறுகின்றாளே.*


    கைத்தலத்து உள்ள மாடு அழியக்*  கண்ணாலங்கள் செய்து*  இவளை- 
    வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?*  நம்மை வடுப்படுத்தும்*

    செய்த்தலை எழு நாற்றுப் போல்*  அவன் செய்வன செய்துகொள்ள* 
    மைத் தடமுகில் வண்ணன் பக்கல்*  வளர விடுமின்களே.*


    பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து*   பேணி நம் இல்லத்துள்ளே* 
    இருத்துவான் எண்ணி நாம் இருக்க*  இவளும் ஒன்று எண்ணுகின்றாள்* 

    மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்*  வார்த்தை படுவதன்முன்* 
    ஒருப்படுத்து இடுமின் இவளை* உலகளந்தான் இடைக்கே.*


    ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்*  நாராயணனுக்கு*  இவள்- 
    மாலதாகி மகிழ்ந்தனள் என்று*  தாய் உரை செய்ததனை* 

    கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் சொன்ன* 
    மாலை பத்தும் வல்லவர்கட்கு*  இல்லை வரு துயரே.* (2)


    நல்லது ஓர் தாமரைப் பொய்கை*  நாண்மலர் மேல் பனி சோர* 
    அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு*  அழகழிந்தால் ஒத்ததாலோ* 

    இல்லம் வெறியோடிற்றாலோ*  என்மகளை எங்கும் காணேன்* 
    மல்லரை அட்டவன் பின்போய்*  மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?* (2) 


    ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத*  உருவறைக் கோபாலர் தங்கள்* 
    கன்று கால் மாறுமா போலே*  கன்னி இருந்தாளைக் கொண்டு* 

    நன்றும் கிறி செய்து போனான்*  நாராயணன் செய்த தீமை*
    என்றும் எமர்கள் குடிக்கு*  ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ?*


    குமரி மணம் செய்து கொண்டு*  கோலம் செய்து இல்லத்து இருத்தி* 
    தமரும் பிறரும் அறியத்*  தாமோதரற்கு என்று சாற்றி* 

    அமரர் பதியுடைத் தேவி*  அரசாணியை வழிபட்டு* 
    துமிலம் எழப் பறை கொட்டித்*  தோரணம் நாட்டிடுங் கொல்லோ?* 


    ஒரு மகள் தன்னை உடையேன்*  உலகம் நிறைந்த புகழால்* 
    திருமகள் போல வளர்த்தேன்*  செங்கண் மால் தான் கொண்டு போனான்* 

    பெரு மகளாய்க் குடி வாழ்ந்து*  பெரும்பிள்ளை பெற்ற அசோதை* 
    மருமகளைக் கண்டு உகந்து*  மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?* 


    தம் மாமன் நந்தகோபாலன்*  தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்* 
    செம்மாந்திரே என்று சொல்லி*  செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்*

    கொம்மை முலையும் இடையும்*  கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு* 
    இம் மகளைப் பெற்ற தாயர்* இனித் தரியார் என்னுங் கொல்லோ?* 


    வேடர் மறக்குலம் போலே*  வேண்டிற்றுச் செய்து என்மகளைக்* 
    கூடிய கூட்டமே யாகக்*  கொண்டு குடி வாழுங் கொல்லோ?* 

    நாடும் நகரும் அறிய*  நல்லது ஓர் கண்ணாலம் செய்து* 
    சாடு இறப் பாய்ந்த பெருமான்*  தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?*


    அண்டத்து அமரர் பெருமான்*  ஆழியான் இன்று என்மகளைப்* 
    பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்*  பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?* 

    கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து*  கோவலப் பட்டம் கவித்துப்* 
    பண்டை மணாட்டிமார் முன்னே*  பாதுகாவல் வைக்குங் கொல்லோ?* 


    குடியிற் பிறந்தவர் செய்யும்*  குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ!* 
    நடை ஒன்றும் செய்திலன் நங்காய்!*  நந்தகோபன் மகன் கண்ணன்* 

    இடை இருபாலும் வணங்க*  இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்* 
    கடைகயிறே பற்றி வாங்கிக்*  கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?* 


    வெண்ணிறத் தோய் தயிர் தன்னை*  வெள்வரைப்பின் முன் எழுந்து* 
    கண் உறங்காதே இருந்து*  கடையவும் தான்வல்லள் கொல்லோ?* 

    ஒண்ணிறத் தாமரைச் செங்கண்*  உலகளந்தான் என்மகளைப்* 
    பண் அறையாப் பணிகொண்டு*  பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*


    மாயவன் பின்வழி சென்று*  வழியிடை மாற்றங்கள் கேட்டு* 
    ஆயர்கள் சேரியிலும் புக்கு*  அங்குத்தை மாற்றமும் எல்லாம்*

    தாயவள் சொல்லிய சொல்லைப்*  தண் புதுவைப் பட்டன் சொன்ன* 
    தூய தமிழ் பத்தும் வல்லார்*  தூ மணிவண்ணனுக்கு ஆளரே* (2) 


    என் நாதன் தேவிக்கு*  அன்று இன்பப்பூ ஈயாதாள்* 
    தன் நாதன் காணவே*  தண்பூ மரத்தினை*

    வன் நாதப் புள்ளால்*  வலியப் பறித்திட்ட* 
    என் நாதன் வன்மையைப் பாடிப் பற* 
    எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.* (2) 


    என் வில் வலி கண்டு*  போ என்று எதிர்வந்தான்* 
    தன் வில்லினோடும்*  தவத்தை எதிர்வாங்கி* 

    முன் வில் வலித்து*  முதுபெண் உயிருண்டான்* 
    தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற* 
    தாசரதி தன்மையைப் பாடிப் பற.*


    உருப்பிணி நங்கையைத்*  தேர் ஏற்றிக் கொண்டு* 
    விருப்புற்று அங்கு ஏக*  விரைந்து எதிர் வந்து* 

    செருக்கு உற்றான்*  வீரம் சிதையத்*  தலையைச்- 
    சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற* 
    தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.*


    மாற்றுத்தாய் சென்று*  வனம்போகே என்றிட* 
    ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து*  எம்பிரான்! என்று அழ* 

    கூற்றுத் தாய் சொல்லக்*  கொடிய வனம் போன* 
    சீற்றம் இலாதானைப் பாடிப் பற* 
    சீதை மணாளனைப் பாடிப் பற.*


    பஞ்சவர் தூதனாய்ப்*  பாரதம் கைசெய்து* 
    நஞ்சு உமிழ் நாகம்*  கிடந்த நற் பொய்கை புக்கு* 

    அஞ்சப் பணத்தின்மேல்*  பாய்ந்திட்டு அருள்செய்த* 
    அஞ்சன வண்ணனைப் பாடிப் பற* 
    அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற.*


    முடி ஒன்றி*  மூவுலகங்களும் ஆண்டு*  உன்- 
    அடியேற்கு அருள் என்று*  அவன்பின் தொடர்ந்த* 

    படியில் குணத்துப்*  பரத நம்பிக்கு*  அன்று- 
    அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற* 
    அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.*


    காளியன் பொய்கை*  கலங்கப் பாய்ந்திட்டு*  அவன்- 
    நீள்முடி ஐந்திலும்*  நின்று நடம்செய்து*

    மீள அவனுக்கு*  அருள்செய்த வித்தகன்* 
    தோள்-வலி வீரமே பாடிப் பற* 
    தூ மணிவண்ணனைப் பாடிப் பற.*


    தார்க்கு இளந்தம்பிக்கு*  அரசு ஈந்து*  தண்டகம்- 
    நூற்றவள்*  சொற்கொண்டு போகி*  நுடங்கு இடைச்- 

    சூர்ப்பணகாவைச்*  செவியொடு மூக்கு*  அவள்- 
    ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற* 
    அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.*


    மாயச் சகடம் உதைத்து*  மருது இறுத்து* 
    ஆயர்களோடு போய்*  ஆநிரை காத்து*  அணி- 

    வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
    ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற* 
    ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.* 


    காரார் கடலை அடைத்திட்டு*  இலங்கை புக்கு* 
    ஓராதான் பொன்முடி*  ஒன்பதோடு ஒன்றையும்* 

    நேரா அவன்தம்பிக்கே*  நீள் அரசு ஈந்த* 
    ஆராவமுதனைப் பாடிப் பற* 
    அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.*


    நந்தன் மதலையைக்*  காகுத்த னைநவின்று* 
    உந்தி பறந்த*  ஒளியிழை யார்கள்சொல்* 

    செந்தமிழ்த் தென்புதுவை*  விட்டு சித்தன்சொல்* 
    ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு*  அல்லல் இல்லையே.* (2)


    நெறிந்த கருங்குழல் மடவாய்!*  நின் அடியேன் விண்ணப்பம்*
    செறிந்த மணி முடிச் சனகன்*  சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது-

    அறிந்து அரசு களைகட்ட*  அருந்தவத்தோன் இடை விலங்கச்* 
    செறிந்த சிலைகொடு தவத்தைச்*  சிதைத்ததும் ஓர் அடையாளம்*  (2)


    அல்லியம்பூ மலர்க்கோதாய்!*  அடிபணிந்தேன் விண்ணப்பம்* 
    சொல்லுகேன் கேட்டருளாய்*  துணைமலர்க் கண் மடமானே!*

    எல்லியம் போது இனிதிருத்தல்*  இருந்தது ஓர் இட வகையில்* 
    மல்லிகை மா மாலைகொண்டு*  அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்*


    கலக்கிய மா மனத்தனளாய்க்*  கைகேசி வரம் வேண்ட* 
    மலக்கிய மா மனத்தனனாய்*  மன்னவனும் மறாது ஒழியக்*

    குலக்குமரா! காடு உறையப் போ என்று*  விடை கொடுப்ப* 
    இலக்குமணன் தன்னொடும்*  அங்கு ஏகியது ஓர் அடையாளம்*


    வார் அணிந்த முலை மடவாய்!*  வைதேவீ! விண்ணப்பம்* 
    தேர் அணிந்த அயோத்தியர்கோன்*  பெருந்தேவீ! கேட்டருளாய்*

    கூர் அணிந்த வேல் வலவன்*  குகனோடும் கங்கைதன்னிற்* 
    சீர் அணிந்த தோழமை*  கொண்டதும் ஓர் அடையாளம்*


    மான் அமரும் மென்நோக்கி!*  வைதேவீ! விண்ணப்பம்*
    கான் அமரும் கல்-அதர் போய்க்*  காடு உறைந்த காலத்துத்* 

    தேன் அமரும் பொழிற் சாரல்*  சித்திரகூடத்து இருப்பப்*
    பால்மொழியாய்! பரதநம்பி*  பணிந்ததும் ஓர் அடையாளம*


    சித்திரகூடத்து இருப்பச்*  சிறுகாக்கை முலை தீண்ட* 
    அத்திரமே கொண்டு எறிய*  அனைத்து உலகும் திரிந்து ஓடி*

    வித்தகனே! இராமாவோ!*  நின் அபயம் என்று அழைப்ப*
    அத்திரமே அதன்கண்ணை*  அறுத்ததும் ஓர் அடையாளம்*


    மின் ஒத்த நுண்- இடையாய்!*  மெய்- அடியேன் விண்ணப்பம்* 
    பொன் ஒத்த மான் ஒன்று*  புகுந்து இனிது விளையாட*

    நின் அன்பின் வழிநின்று*  சிலை பிடித்து எம்பிரான் ஏகப்* 
    பின்னே அங்கு இலக்குமணன்*  பிரிந்ததும் ஓர் அடையாளம்*


    மைத் தகு மா மலர்க்குழலாய்!*  வைதேவீ விண்ணப்பம்* 
    ஒத்த புகழ் வானரக்கோன்*  உடன் இருந்து நினைத் தேட* 

    அத்தகு சீர் அயோத்தியர்கோன்*  அடையாளம் இவை மொழிந்தான்* 
    இத் தகையால் அடையாளம்*  ஈது அவன் கைம் மோதிரமே*    


    திக்கு நிறை புகழாளன்*  தீ வேள்விச் சென்ற நாள்* 
    மிக்க பெரும் சபை நடுவே*  வில் இறுத்தான் மோதிரம் கண்டு*

    ஒக்குமால் அடையாளம்*  அனுமான்! என்று*  உச்சிமேல்- 
    வைத்துக்கொண்டு உகந்தனளால்*  மலர்க்குழலாள் சீதையுமே (2)


    வார் ஆரும் முலை மடவாள்*  வைதேவி தனைக் கண்டு* 
    சீர் ஆரும் திறல் அனுமன்*  தெரிந்து உரைத்த அடையாளம்* 

    பார் ஆரும் புகழ்ப் புதுவைப்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
    ஏர் ஆரும் வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே* (2)


    கதிர் ஆயிரம் இரவி*  கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்* 
    எதிர் இல் பெருமை இராமனை*  இருக்கும் இடம் நாடுதிரேல்*

    அதிரும் கழற் பொரு தோள்*  இரணியன் ஆகம் பிளந்து*  அரியாய்- 
    உதிரம் அளைந்த கையோடு இருந்தானை*  உள்ளவா கண்டார் உளர் (2)


    நாந்தகம்சங்குதண்டு*  நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்* 
    ஏந்துபெருமை இராமனை*  இருக்குமிடம் நாடுதிரேல்*

    காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக்*  கடுஞ்சிலை சென்றிறுக்க* 
    வேந்தர்தலைவன் சனகராசன்தன்*  வேள்வியில் கண்டாருளர். 


    கொலையானைக் கொம்பு பறித்துக்*  கூடலர் சேனை பொருது அழியச்* 
    சிலையால் மராமரம் எய்த தேவனைச்*  சிக்கென நாடுதிரேல்*

    தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று*  தடவரை கொண்டு அடைப்ப* 
    அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை*  அங்குத்தைக் கண்டார் உளர் 


    தோயம்பரந்த நடுவுசூழலில்*  தொல்லை வடிவுகொண்ட* 
    மாயக்குழவியதனை நாடுறில்*  வம்மின்சுவடுஉரைக்கேன்*

    ஆயர்மடமகள் பின்னைக்காகி*  அடல்விடைஏழினையும்* 
    வீயப்பொருது வியர்த்துநின்றானை*  மெய்ம்மையேகண்டார்உளர். 


    நீரேறுசெஞ்சடை நீலகண்டனும்*  நான்முகனும் முறையால்* 
    சீரேறுவாசகஞ்செய்யநின்ற*  திருமாலைநாடுதிரேல்*

    வாரேறுகொங்கை உருப்பிணியை*  வலியப்பிடித்துக்கொண்டு- 
    தேரேற்றிச் சேனைநடுவு போர்செய்யச்*  சிக்கெனக்கண்டார்உளர்.   


    பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்*  புணர்முலைவாய்மடுக்க- 
    வல்லானை*  மாமணிவண்ணனை*  மருவும்இடம்நாடுதிரேல்

    பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு*  பௌவம்எறிதுவரை* 
    எல்லாரும் சூழச்சிங்காசனத்தே*  இருந்தானைக்கண்டாருளர்.  


    வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம்*  ஏந்துகையன்* 
    உள்ளவிடம்வினவில்*  உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்*

    வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித்*  தேர்மிசைமுன்புநின்று* 
    கள்ளப்படைத்துணையாகிப்*  பாரதம்கைசெய்யக்கண்டார்உளர். 


    நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற*  அரசர்கள்தம்முகப்பே* 
    நாழிகைபோகப்படைபொருதவன்*  தேவகிதன்சிறுவன்*

    ஆழிகொண்டு அன்றுஇரவிமறைப்பச்*  சயத்திரதனதலையை*
    பாழிலுருளப்படைபொருதவன்*  பக்கமேகண்டார்உளர். 


    மண்ணும்மலையும்மறிகடல்களும்*  மற்றும்யாவும்எல்லாம்* 
    திண்ணம்விழுங்கிஉமிழ்ந்ததேவனைச்*  சிக்கெனநாடுதிரேல்*

    எண்ணற்கரியதோரேனமாகி*  இருநிலம்புக்கிடந்து*
    வண்ணக்கருங்குழல்மாதரோடு*  மணந்தானைக்கண்டாருளர் 


    கரியமுகில்புரைமேனிமாயனைக்*  கண்டசுவடுஉரைத்துப்* 
    புரவிமுகம்செய்துசெந்நெல்ஓங்கி*  விளைகழனிப்புதுவைத்*

    திருவிற்பொலிமறைவாணன்*  பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்* 
    பரவும்மனமுடைப்பத்தருள்ளார்*  பரமனடிசேர்வர்களே (2)


    அலம்பாவெருட்டாக்*  கொன்றுதிரியும் அரக்கரை* 
    குலம்பாழ்படுத்துக்*  குலவிளக்காய் நின்றகோன்மலை*

    சிலம்பார்க்கவந்து*  தெய்வமகளிர்களாடும்சீர்* 
    சிலம்பாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே.  (2)


    வல்லாளன்தோளும்*  வாளரக்கன்முடியும்*  தங்கை- 
    பொல்லாதமூக்கும்*  போக்குவித்தான்பொருந்தும்மலை*

    எல்லாஇடத்திலும்*  எங்கும்பரந்து பல்லாண்டுஒலி- 
    செல்லாநிற்கும் சீர்த்*  தென்திருமாலிருஞ்சோலையே.


    தக்கார்மிக்கார்களைச்*  சஞ்சலம்செய்யும்சலவரை*
    தெக்காநெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை*

    எக்காலமும்சென்று*  சேவித்திருக்கும் அடியரை* 
    அக்கான்நெறியைமாற்றும்*  தண் மாலிருஞ்சோலையே.


    ஆனாயர்கூடி*  அமைத்தவிழவை*  அமரர்தம்- 
    கோனார்க்கொழியக்*  கோவர்த்தனத்துச்செய்தான்மலை*

    வான்நாட்டினின்று*  மாமலர்க்கற்பகத்தொத்துஇழி* 
    தேனாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 


    ஒருவாரணம் பணிகொண்டவன்*  பொய்கையில் கஞ்சன்தன்- 
    ஒருவாரணம் உயிர்உண்டவன்*  சென்றுறையும்மலை*

    கருவாரணம்*  தன்பிடிதுறந்துஓடக்*  கடல்வண்ணன்- 
    திருவாணைகூறத்திரியும்*  தண் மாலிருஞ்சோலையே. 


    ஏவிற்றுச்செய்வான்*  ஏன்றுஎதிர்ந்துவந்தமல்லரைச்* 
    சாவத்தகர்த்த*  சாந்த‌ணிதோள்சதுரன்மலை*

    ஆவத்தனமென்று*  அமரர்களும்நன்முனிவரும்* 
    சேவித்திருக்கும்*  தென்திருமாலிருஞ்சோலையே.


    மன்னர்மறுக*  மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்* 
    முன்னங்குநின்று*  மோழைஎழுவித்தவன் மலை* 

    கொன்னவில்கூர்வேற்கோன்*  நெடுமாறன்தென்கூடற்கோன்* 
    தென்னன்கொண்டாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே


    குறுகாதமன்னரைக்*  கூடுகலக்கி*  வெங்கானிடைச்-
    சிறுகால்நெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை* 

    அறுகால்வரிவண்டுகள்*  ஆயிரநாமம்சொல்லிச்* 
    சிறுகாலைப்பாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 


    சிந்தப்புடைத்துச்*  செங்குருதிகொண்டு*  பூதங்கள்- 
    அந்திப்பலிகொடுத்து*  ஆவத்தனம்செய் அப்பன்மலை* 


    இந்திரகோபங்கள்*  எம்பெருமான் கனிவாய்ஒப்பான்* 
    சிந்தும்புறவிற்*  தென்திருமாலிருஞ்சோலையே    



    எட்டுத் திசையும்*  எண்- இறந்த பெருந் தேவிமார்*  
    விட்டு விளங்க*  வீற்றிருந்த விமலன் மலை*  

    பட்டிப்பிடிகள்*  பகடுறிஞ்சிச் சென்று*  மாலைவாய்த்- 
    தெட்டித்திளைக்கும்*  தென்திருமாலிருஞ் சோலையே.



    மருதப்பொழில‌ணி*  மாலிருஞ்சோலைமலைதன்னைக்* 
    கருதி உறைகின்ற*  கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை* 

    விரதம்கொண்டேத்தும்*  வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்* 
    கருதியுரைப்பவர்*  கண்ணன்கழலிணை காண்பர்களே (2)


    உருப்பிணிநங்கை  தன்னைமீட்பான்*  தொடர்ந்துஓடிச்சென்ற* 
    உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு*  உறைத்திட்டஉறைப்பன்மலை*

    பொருப்பிடைக்கொன்றைநின்று*  முறிஆழியும்காசும்கொண்டு* 
    விருப்பொடுபொன்வழங்கும்*  வியன்மாலிருஞ்சோலையதே.  (2)


    கஞ்சனும்காளியனும்*  களிறும்மருதும்எருதும்* 
    வஞ்சனையில்மடிய*  வளர்ந்தமணிவண்ணன்மலை*

    நஞ்சுஉமிழ்நாகம்எழுந்துஅணவி*  நளிர்மாமதியைச்* 
    செஞ்சுடர்நாவளைக்கும்*  திருமாலிருஞ்சோலையதே.


    மன்னுநரகன்தன்னைச்*  சூழ்போகிவளைத்துஎறிந்து* 
    கன்னிமகளிர்தம்மைக்*  கவர்ந்தகடல்வண்ணன்மலை*

    புன்னைசெருந்தியொடு*  புனவேங்கையும்கோங்கும்நின்று* 
    பொன்அரிமாலைகள்சூழ்*  பொழில்மாலிருஞ்சோலையதே.


    மாவலிதன்னுடைய*  மகன்வாணன்மகள்இருந்த* 
    காவலைக்கட்டழித்த*  தனிக் காளை கருதும் மலை*

    கோவலர்கோவிந்தனைக்*  குற மாதர்கள் பண் குறிஞ்சிப்* 
    பாஒலிபாடிநடம்பயில்*  மாலிருஞ் சோலையதே.


    பலபலநாழம்சொல்லிப்*  பழித்தசிசுபாலன்தன்னை* 
    அலைவலைமை தவிர்த்த*  அழகன்அலங்காரன்மலை*

    குலமலைகோலமலை*  குளிர்மாமலைகொற்றமலை* 
    நிலமலைநீண்டமலை*  திருமாலிருஞ்சோலையதே.


    பாண்டவர்தம்முடைய*  பாஞ்சாலிமறுக்கம்எல்லாம்* 
    ஆண்டுஅங்கு நூற்றுவர்தம்*  பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை*

    பாண்தகு வண்டினங்கள்*  பண்கள்பாடிமதுப்பருக* 
    தோண்டல்உடையமலை*  தொல்லைமாலிருஞ்சோலையதே.


    கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து*  அரக்கர்தங்கள்- 
    இனம்கழுஏற்றுவித்த*  ஏழிற்தோள்எம்இராமன்மலை*

    கனம்கொழிதெள்அருவி*  வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்* 
    இனம்குழுஆடும்மலை*  எழில்மாலிருஞ்சோலையதே.


    எரிசிதறும்சரத்தால்*  இலங்கையினைத்*  தன்னுடைய- 
    வரிசிலைவாயிற்பெய்து*  வாய்க்கோட்டம்தவிர்த்துஉகந்த*

    அரையன்அமரும்மலை*  அமரரொடுகோனும்சென்று* 
    திரிசுடர்சூழும்மலை*  திருமாலிருஞ்சோலையதே.


    கோட்டுமண்கொண்டுஇடந்து*  குடங்கையில்மண்கொண்டுஅளந்து* 
    மீட்டும்அதுஉண்டுஉமிழ்ந்து*  விளையாடும்விமலன்மலை*

    ஈட்டியபல்பொருள்கள்*  எம்பிரானுக்குஅடியுறைஎன்று* 
    ஓட்டரும்தண்சிலம்பாறுஉடை*  மாலிருஞ்சோலையதே.


    ஆயிரம்தோள்பரப்பி*  முடிஆயிரம்மின்இலக* 
    ஆயிரம்பைந்தலைய*  அனந்தசயனன்ஆளும்மலை*

    ஆயிரம்ஆறுகளும்*  சுனைகள்பலஆயிரமும்* 
    ஆயிரம்பூம்பொழிலும்உடை*  மாலிருஞ்சோலையதே (2)


    மாலிருஞ்சோலைஎன்னும்*  மலையைஉடையமலையை* 
    நாலிருமூர்த்திதன்னை*  நால்வேதக்-கடல்அமுதை*

    மேல்இருங்கற்பகத்தை*  வேதாந்தவிழுப்பொருளின்* 
    மேல்இருந்தவிளக்கை*  விட்டுசித்தன்விரித்தனனே (2)


    நாவகாரியம்சொல்இலாதவர்*  நாள்தொறும்விருந்துஓம்புவார்* 
    தேவகாரியம்செய்து*  வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*

    மூவர்காரியமும்திருத்தும்*  முதல்வனைச்சிந்தியாத*  அப்- 
    பாவகாரிகளைப்படைத்தவன்*  எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)


    குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்*  குருக்களுக்குஅனுகூலராய்* 
    செற்றம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*

    துற்றிஏழ்உலகுஉண்ட*  தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்* 
    பெற்றதாயர்வயிற்றினைப்*  பெருநோய்செய்வான்பிறந்தார்களே.


    வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி*  நிழல்எழும்- 
    திண்ணைசூழ்*  திருக்கோட்டியூர்த்*  திருமாலவன்திருநாமங்கள்*

    எண்ணக்கண்டவிரல்களால்*  இறைப்போதும்எண்ணகிலாதுபோய்* 
    உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்*  கவளம்உந்துகின்றார்களே.


    உரகமெல்அணையான்கையில்*  உறைசங்கம்போல்மடஅன்னங்கள்* 
    நிரைகணம்பரந்துஏறும்*  செங்கமலவயற் திருக்கோட்டியூர்*

    நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத*  மானிடசாதியர்* 
    பருகுநீரும்உடுக்குங்கூறையும்*  பாவம்செய்தனதாம்கொலோ!    


    ஆமையின்முதுகத்  திடைக்குதிகொண்டு*  தூமலர்சாடிப்போய்த்* 
    தீமைசெய்து இளவாளைகள்*  விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*

    நேமிசேர்தடங்கையினானை*  நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை* 
    பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.   


    பூதம்ஐந்தொடு வேள்விஐந்து*  புலன்கள்ஐந்துபொறிகளால்* 
    ஏதம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*

    நாதனை நரசிங்கனை*  நவின்றுஏத்துவார்கள்உழக்கிய* 
    பாததூளிபடுதலால்*  இவ்உலகம்பாக்கியம்செய்ததே.


    குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று*  கூடிஆடிவிழாச்செய்து* 
    திருந்துநான்மறையோர்*  இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*

    கருந்தடமுகில்வண்ணனைக்*  கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்* 
    இருந்தஊரில்இருக்கும்மானிடர்*  எத்தவங்கள்செய்தார்கொலோ!  


    நளிர்ந்தசீலன்நயாசலன்*  அபிமானதுங்கனை*  நாள்தொறும்- 
    தெளிந்தசெல்வனைச்*  சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*

    குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்*  குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்* 
    விளைந்ததானியமும் இராக்கதர்*  மீதுகொள்ளகிலார்களே.


    கொம்பின்ஆர்பொழில்வாய்க்*  குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*
    செம்பொன்ஆர்மதில்சூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*

    நம்பனைநரசிங்கனை*  நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்* 
    எம்பிரான் தனசின்னங்கள்*  இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே . 


    காசின்வாய்க்கரம்விற்கிலும்*  கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு* 
    தேசவார்த்தைபடைக்கும்*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*

    கேசவா! புருடோத்தமா!*  கிளர்சோதியாய்! குறளா! என்று* 
    பேசுவார்அடியார்கள்*  எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.


    சீதநீர்புடைசூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்* 
    ஆதியான்அடியாரையும்*  அடிமையின்றித்திரிவாரையும்* 

    கோதில்பட்டர்பிரான்*  குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்* 
    ஏதம்இன்றிஉரைப்பவர்*  இருடீகேசனுக்குஆளரே (2)


    ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி*  அன்னை அத்தன் என் புத்திரர்பூமி* 
    வாசவார் குழலாள் என்றுமயங்கி*  மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*

    கேசவா! புருடோத்தமா! என்றும்*  கேழல்ஆகியகேடிலீ! என்றும்* 
    பேசுவார் அவர் எய்தும் பெருமை*  பேசுவான் புகில் நம்பரம்அன்றே (2) 


    சீயினால் செறிந்துஏறிய புண்மேல்*  செற்றல்ஏறிக் குழம்புஇருந்து*  எங்கும்- 
    ஈயினால் அரிப்புஉண்டு மயங்கி*  எல்லைவாய்ச்சென்று சேர்வதன்முன்னம்*

    வாயினால் நமோநாரணா என்று*  மத்தகத்திடைக் கைகளைக்கூப்பிப்* 
    போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்*  பிணைக்கொடுக்கிலும் போகஒட்டாரே.


    சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்*  சொல்லு சொல்லு என்றுசுற்றும்இருந்து* 
    ஆர்வினவிலும் வாய் திறவாதே*  அந்தகாலம் அடைவதன்முன்னம்*

    மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து*  மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி* 
    ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு*  அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.


    மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து*  மேல்மிடற்றினை உள்எழவாங்கிக்* 
    காலும் கையும் விதிர்விதிர்த்துஏறிக்*  கண்உறக்கமது ஆவதன்முன்னம்*

    மூலம்ஆகிய ஒற்றைஎழுத்தை*  மூன்றுமாத்திரை உள்ளெழவாங்கி* 
    வேலைவண்ணனை மேவுதிர்ஆகில்*  விண்ணகத்தினில் மேவலும்மாமே.  


    மடிவழி வந்து நீர்புலன்சோர*  வாயில்அட்டிய கஞ்சியும் மீண்டே* 
    கடைவழிவாரக் கண்டம்அடைப்பக்*  கண்உறக்கமது ஆவதன்முன்னம்*

    தொடைவழி உம்மை நாய்கள்கவரா*  சூலத்தால் உம்மைப் பாய்வதும்செய்யார்* 
    இடைவழியில் நீர் கூறையும் இழவீர்*  இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே.  


    அங்கம்விட்டுஅவை ஐந்தும் அகற்றி*  ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை* 
    சங்கம்விட்டுஅவர் கையைமறித்துப்*  பையவே தலை சாய்ப்பதன்முன்னம்*

    வங்கம்விட்டுஉலவும் கடற்பள்ளி மாயனை*  மதுசூதனை மார்பில்- 
    தங்க விட்டு வைத்து*  ஆவதுஓர் கருமம் சாதிப்பார்க்கு*  என்றும் சாதிக்கலாமே.


    தென்னவன் தமர் செப்பம்இலாதார்*  சேவதக்குவார் போலப்புகுந்து* 
    பின்னும் வன்கயிற்றால் பிணித்துஎற்றிப்*  பின்முன்ஆக இழுப்பதன் முன்னம்*

    இன்னவன் இனையான் என்றுசொல்லி*  எண்ணி உள்ளத்து இருள்அறநோக்கி* 
    மன்னவன் மதுசூதனன் என்பார்*  வானகத்துமன்றாடிகள்தாமே. 


    கூடிக்கூடி உற்றார்கள் இருந்து*  குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து* 
    பாடிப்பாடி ஓர் பாடையில்இட்டு*  நரிப்படைக்கு ஒரு பாகுடம்போலே*

    கோடி மூடிஎடுப்பதன் முன்னம்*  கௌத்துவம்உடைக் கோவிந்தனோடு* 
    கூடிஆடிய உள்ளத்தர்ஆனால்*  குறிப்பிடம் கடந்து உய்யலும்ஆமே.


    வாயொரு பக்கம் வாங்கிவலிப்ப*  வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற* 
    தாய்ஒருபக்கம் தந்தைஒருபக்கம்*  தாரமும் ஒருபக்கம் அலற்ற*

    தீஒருபக்கம் சேர்வதன் முன்னம்*  செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற-
    மாய்*  ஒருபக்கம் நிற்கவல்லார்க்கு*  அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.


    செத்துப்போவதோர் போதுநினைந்து*  செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்* 
    பத்தராய்இறந்தார் பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*

    சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்* 
    சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே  (2)


    காசும் கறைஉடைக் கூறைக்கும்*  அங்குஓர் கற்றைக்கும்- 
    ஆசையினால்*  அங்குஅவத்தப் பேர்இடும்*  ஆதர்காள்!*

    கேசவன் பேர்இட்டு*  நீங்கள் தேனித்துஇருமினோ* 
    நாயகன் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்  (2)


    அங்குஒருகூறை*  அரைக்கு உடுப்பதன் ஆசையால்* 
    மங்கிய மானிடசாதியின்*  பேர்இடும் ஆதர்காள்!*

    செங்கண்நெடுமால்!*  சிரீதரா! என்று அழைத்தக்கால்* 
    நங்கைகாள்! நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    உச்சியில் எண்ணெயும்*  சுட்டியும் வளையும் உகந்து* 
    எச்சம் பொலிந்தீர்காள்!*  என் செய்வான் பிறர்பேர்இட்டீர்?*

    பிச்சைபுக்குஆகிலும்*  எம்பிரான் திருநாமமே- 
    நச்சுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.  


    மானிட சாதியில் தோன்றிற்று*  ஓர் மானிடசாதியை* 
    மானிட சாதியின் பேர்இட்டால்*  மறுமைக்குஇல்லை*

    வானுடை மாதவா!*  கோவிந்தா! என்று அழைத்தக்கால்* 
    நானுடை நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    மலமுடை ஊத்தையில் தோன்றிற்று*  ஓர் மல ஊத்தையை* 
    மலமுடை ஊத்தையின் பேர்இட்டால்*  மறுமைக்குஇல்லை*

    குலமுடைக் கோவிந்தா!*  கோவிந்தா! என்று அழைத்தக்கால்* 
    நலமுடை நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள். 


    நாடும் நகரும் அறிய*  மானிடப் பேர்இட்டு* 
    கூடிஅழுங்கிக்*  குழியில் வீழ்ந்து வழுக்காதே*

    சாடிறப் பாய்ந்த தலைவா!*  தாமோதரா! என்று- 
    நாடுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர்இட்டு அங்கு- 
    எண்ணம்ஒன்று எண்ணியிருக்கும்*  ஏழை மனிசர்காள்!*

    கண்ணுக்குஇனிய*  கருமுகில் வண்ணன் நாமமே- 
    நண்ணுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்


    நம்பி பிம்பிஎன்று*  நாட்டு மானிடப் பேர்இட்டால்* 
    நம்பும் பிம்பும்எல்லாம்*  நாலுநாளில் அழுங்கிப்போம்*

    செம்பெருந்தாமரைக் கண்ணன்*  பேர்இட்டுஅழைத்தக்கால்* 
    நம்பிகாள் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    ஊத்தைக்குழியில்*  அமுதம் பாய்வதுபோல்*  உங்கள்- 
    மூத்திரப்பிள்ளையை*  என் முகில்வண்ணன் பேர் இட்டு*

    கோத்துக் குழைத்துக்*  குணாலம்ஆடித் திரிமினோ* 
    நாத்தகு நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    சீர்அணி மால்*  திருநாமமே இடத்தேற்றிய* 
    வீர்அணி தொல்புகழ்*  விட்டுசித்தன் விரித்த*

    ஓரணியொண்தமிழ்*  ஒன்பதோடுஒன்றும் வல்லவர்* 
    பேர்அணி வைகுந்தத்து*  என்றும் பேணியிருப்பரே. (2)


    தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த*  எம் தாசரதிபோய்* 
    எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட*  எம் புருடோத்தமன் இருக்கை*

    கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே*  கடுவினை களைந்திடுகிற்கும்* 
    கங்கையின் கரைமேல் கைதொழநின்ற*  கண்டம்என்னும் கடிநகரே.  (2)


    சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்*  சந்திரன் வெங்கதிர் அஞ்ச* 
    மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்*  நாரணன் பாதத்துழாயும்* 
    கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே.  


    அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி*  அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து*  அங்கு- 
    எதிர்முக அசுரர் தலைகளை இடறும்*  எம் புருடோத்தமன் இருக்கை*

    சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*
    கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே 


    இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள*  ஏற்று வந்துஎதிர் பொருசேனை* 
    நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்*  நம் புருடோத்தமன் நகர்தான்*

    இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*
    கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்*  ஒண் சுடர்ஆழியும் சங்கும்* 
    மழுவொடு வாளும் படைக்கலம்உடைய*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    எழுமையும் கூடி ஈண்டிய பாவம்*  இறைப்பொழுது அளவினில் எல்லாம்* 
    கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்*  சலசல பொழிந்திடக்கண்டு* 
    மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்*  அவபிரதம் குடைந்தாட* 
    கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி*   மேல்இருந்தவன் தலைசாடி* 
    மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    அற்புதம்உடைய ஐராவதமதமும்*  அவர் இளம்படியர் ஒண்சாந்தும்* 
    கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே. 


    திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து*  தன்மைத்துனன் மார்க்காய்* 
    அரசினையவிய அரசினையருளும்*  அரிபுருடோத்தமன் அமர்வு*

    நிரைநிரையாக நெடியனயூபம்*  நிரந்தரம் ஒழுக்குவிட்டு*  இரண்டு- 
    கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை*  கண்டமென்னும் கடிநகரே.


     வடதிசை மதுரை சாளக்கிராமம்*  வைகுந்தம் துவரை அயோத்தி* 
    இடமுடை வதரி இடவகையுடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

    தடவரை அதிரத் தரணி விண்டிடியத்*  தலைப்பற்றிக் கரைமரம்சாடி* 
    கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்*  கண்டமென்னும் கடிநகரே. (2)


     மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்*  மூன்றெழுத்தாக்கி*  மூன்றெழுத்தை- 
    ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

    மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி*  மூன்றினில் மூன்றருவானான்* 
    கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்*  கண்டமென்னும் கடிநகரே. (2)


    பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து*  உறை புருடோத்தமனடிமேல்* 
    வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்*  விட்டுசித்தன் விருப்புற்று*

    தங்கிய அன்பால் செய்த‌ தமிழ்மாலை*  தங்கிய நாவுடையார்க்கு* 
    கங்கையில் திருமால் கழலிணைக்கீழே*  குளித்திருந்த கணக்காமே. (2)


    மாதவத்தோன் புத்திரன்போய்*  மறிகடல்வாய் மாண்டானை* 
    ஓதுவித்த தக்கணையா*  உருவுருவே கொடுத்தானுர்* 

    தோதவத்தித் தூய்மறையோர்*  துறைபடியத் துளும்பிஎங்கும்* 
    போதில் வைத்த தேன்சொரியும்*  புனலரங்கம் என்பதுவே. (2)


    பிறப்பகத்தே மாண்டொழிந்த*  பிள்ளைகளை நால்வரையும்* 
    இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து*  ஒருப்படித்த உறைப்பனுர்*

    மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்*  வருவிருந்தை அளித்திருப்பார்* 
    சிறப்புடைய மறையவர்வாழ்*  திருவரங்கம் என்பதுவே.


    மருமகன் தன் சந்ததியை*  உயிர்மீட்டு மைத்துனன்மார்* 
    உருமகத்தே வீழாமே*  குருமுகமாய்க் காத்தானுர்* 

    திருமுகமாய்ச் செங்கமலம்*  திருநிறமாய்க் கருங்குவளை* 
    பொருமுகமாய் நின்றலரும்*  புனலரங்கம் என்பதுவே.


    கூன்தொழுத்தை சிதகுரைப்பக்*  கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு 
    ஈன்றெடுத்த தாயரையும்*  இராச்சியமும் ஆங்கொழிய* 

    கான்தொடுத்த நெறிபோகிக்*  கண்டகரைக் களைந்தானுர்* 
    தேன்தொடுத்த மலர்ச்சோலைத்*  திருவரங்கம் என்பதுவே.


    பெருவரங்கள் அவைபற்றிப்*  பிழக்குடைய இராவணனை* 
    உருவரங்கப் பொருதழித்து*  இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர் 

    குரவரும்பக் கோங்கலரக்*  குயில்கூவும் குளிர்பொழில்சூழ்* 
    திருவரங்கம் என்பதுவே*  என் திருமால் சேர்விடமே.


    கீழுலகில் அசுரர்களைக்*  கிழங்கிருந்து கிளராமே* 
    ஆழிவிடுத்து அவருடைய*  கருவழித்த அழிப்பனுர்*

    தாழைமடல் ஊடுரிஞ்சித்*  தவளவண்ணப் பொடியணிந்து* 
    யாழின் இசை வண்டினங்கள்*  ஆளம்வைக்கும் அரங்கமே.


    கொழுப்புடைய செழுங்குருதி*  கொழித்திழிந்து குமிழ்த்தெறிய* 
    பிழக்குடைய அசுரர்களைப்*  பிணம்படுத்த பெருமானுர்* 

    தழுப்பரிய சந்தனங்கள்*  தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு* 
    தெழிப்புடைய காவிரிவந்து*  அடிதொழும் சீரரங்கமே.


    வல்யிற்றுக் கேழலுமாய்*  வாளேயிற்றுச் சீயமுமாய்* 
    எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*

    எல்லியம்போது இருஞ்சிறைவண்டு*  எம்பெருமான் குணம்பாடி* 
    மல்லிகை வெண்சங்கூதும்*  மதிளரங்கம் என்பதுவே.


    குன்றாடு கொழுமுகில்போல்*  குவளைகள்போல் குரைகடல்போல்* 
    நின்றாடு கணமயில்போல்*  நிறமுடைய நெடுமாலூர்* 

    குன்றாடு பொழில்நுழைந்து*  கொடியிடையார் முலையணவி* 
    மன்றாடு தென்றலுமாம்*  மதிளரங்கம் என்பதுவே.


    பருவரங்கள் அவைபற்றிப்*  படையாலித் தெழுந்தானை* 
    செருவரங்கப் பொருதழித்த*  திருவாளன் திருப்பதிமேல்*

    திருவரங்கத் தமிழ்மாலை*  விட்டுசித்தன் விரித்தனகொண்டு* 
    இருவரங்கம் எரித்தானை*  ஏத்தவல்லார் அடியோமே. (2)


    மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்*  வானோர்வாழ* 
    செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட*  திருமால்கோயில்*

    திருவடிதன் திருவுருவும்*  திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று* 
    உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட*  ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)


    தன்னடியார் திறத்தகத்துத்*  தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* 
    என்னடியார் அதுசெய்யார்*  செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்* 

    மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த* 
    என்னுடைய திருவரங்கற்கன்றியும்*  மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)


    கருளுடைய பொழில்மருதும்*  கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்* 
    உருளுடைய சகடரையும் மல்லரையும்*  உடையவிட்டு ஓசைகேட்டான்* 

    இருளகற்றும் எறிகதிரோன்*  மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி* 
    அருள்கொடுத்திட்டு அடியவரை*  ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.


    பதினாறாம் ஆயிரவர்*  தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்* 
    அதில் நாயகராகி வீற்றிருந்த*  மணவாளர் மன்னுகோயில்* 

    புதுநான் மலர்க்கமலம்*  எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்* 
    பொதுநாயகம் பாவித்து*  இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.


    ஆமையாய்க் கங்கையாய்*  ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்* 
    நான்முகனாய் நான்மறையாய்*  வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்* 

    சேமமுடை நாரதனார்*  சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்* 
    பூமருவிப் புள்ளினங்கள்*  புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.


    மைத்துனன்மார் காதலியை*  மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி* 
    உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட*  உயிராளன் உறையும்கோயில்* 

    பத்தர்களும் பகவர்களும்*  பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்* 
    சித்தர்களும் தொழுதிறைஞ்சத்*  திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.


    குறட்பிரமசாரியாய்*  மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி* 
    இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை*  கொடுத்துகந்த எம்மான்கோயில்* 

    எறிப்புடைய மணிவரைமேல்*  இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்* 
    சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.


    உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி* 
    சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க*  வாயலறத் தெழித்தான்கோயில்*

    உரம்பெற்ற மலர்க்கமலம்*  உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட* 
    வரம்புற்ற கதிர்ச்செந்நெல்*  தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே.


    தேவுடைய மீனமாய் ஆமையாய்*  ஏனமாய் அறியாய்க்  குறளாய்* 
    மூவுருவில் இராமனாய்க்*  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்* 

    சேவலொடு பெடையன்னம்*  செங்கமல மலரேறி ஊசடிலாப்* 
    பூவணைமேல் துதைந்தெழு*  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.


    செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்*  செருச்செய்யும் நாந்தகமென்னும்* 
    ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்*  விழுக்கையாளன்* 

    இரவாளன் பகலாளன் எனையாளன்*  ஏழுலகப் பெரும்  புரவாளன்* 
    திருவாளன் இனிதாகத்*  திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.


    கைந்நாகத்திடர் கடிந்த*  கனலாழிப் படையுயான் கருதும்கோயில்* 
    தென்நாடும் வடநாடும் தொழநின்ற*  திருவரங்கம் திருப்பதியின்மேல்* 

    மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்*  விரித்ததமிழ் உரைக்கவல்லார்* 
    எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்*  இணைபிரியாது இருப்பர் தாமே.(2)


    துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
    ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 

    எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
    அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)


    சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்*  சங்கொடு சக்கரம் ஏந்தினானே!* 
    நாமடித்து என்னை அனேக தண்டம்*  செய்வதா நிற்பர் நமன்தமர்கள்* 

    போமிடத்து உன்திறத்து எத்தனையும்*  புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை* 
    ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    எல்லையில் வாசல் குறுகச்சென்றால்*  எற்றிநமன்தமர் பற்றும்போது* 
    நில்லுமின் என்னும் உபாயமில்லை*  நேமியும் சங்கமும் ஏந்தினானே!

    சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்*  சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்* 
    அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே!


    ஒற்றைவிடையனும் நான்முகனும்*  உன்னையறியாப் பெருமையோனே!* 
    முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*

    அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி*   அஞ்சநமன்தமர் பற்றலுற்ற* 
    அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    பையரவினனைப் பாற்கடலுள்*  பள்ளிகொள்கின்ற பரமமுர்த்தி!* 
    உய்யஉலகு படைக்கவேண்டி*  உந்தியிற் தோற்றினாய் நான்முகனை* 

    வையமனிசரைப் பொய்யென்றெண்ணிக்*  காலனையும் உடனே படைத்தாய்* 
    ஐய!இனி என்னைக் காக்க வேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    தண்ணெனவில்லை நமன்தமர்கள்*  சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்* 
    மண்ணொடு நீரும் எரியும் காலும்*  மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*

    எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்* 
    அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற*  தேவர்கள்நாயகனே! எம்மானே!* 
    எஞ்சலில் என்னுடை இன்னமுதே!*  ஏழலகுமுடையாய்! என்னப்பா!*

    வஞ்சவுருவின் நமன்தமர்கள்*  வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது* 
    அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்*  நமன்தமர்பற்றி நலிந்திட்டு* 
    இந்த ஊனேபுகேயென்று மோதும்போது*  அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 

    வானேய் வானவர் தங்கள் ஈசா!*  மதுரைப் பிறந்த மாமாயனே!*  என்- 
    ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!*  கோநிரை மேய்த்தவனே! எம்மானே!* 
    அன்றுமுதல் இன்றறுதியாக*  ஆதியஞ்சோதி மறந்தறியேன்* 

    நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது* 
    அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    மாயவனை மதுசூதனனை*  மாதவனை மறையோர்கள் ஏத்தும்* 
    ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*

    வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்*  விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்* 
    தூய மனத்தனாகி வல்லார்*  தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)


    வாக்குத் தூய்மை இலாமையினாலே*  மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்* 
    நாக்கு நின்னைஅல்லால் அறியாது*  நான் அதஞ்சுவன் என் வசமன்று*

    மூர்க்குப் பேசுகின்றான் இவன்என்று*  முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்* 
    காக்கை வாயிலும் கட்டுரைகொள்வர்*  காரணா! கருளக் கொடியானே!  (2)


    சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்*   சங்கு சக்கரம் ஏந்துகையானே!* 
    பிழைப்பர் ஆகிலும் தம்அடியார் சொல்*  பொறுப்பது பெரியோர் கடன்அன்றே*

    விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்*  வேறுஒருவரோடு என் மனம் பற்றாது* 
    உழைக்குஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய்*  ஊழியேழுலகு உண்டுமிழ்ந்தானே!


    நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்*  நாரணா! என்னும் இத்தனைஅல்லால்* 
    புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்*  புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*

    உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்*  ஓவாதே நமோநாரணா! என்பன்* 
    வன்மைஆவது உன் கோயிலில்வாழும்*  வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே.


    நெடுமையால் உலகேழும் அளந்தாய்!*  நின்மலா! நெடியாய்! அடியேனைக்* 
    குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா*  கூறைசோறு இவை வேண்டுவதில்லை*

    அடிமைஎன்னும் அக்கோயின்மையாலே*  அங்கங்கே அவைபோதரும் கண்டாய்* 
    கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை*  கோத்தவன் தளைகோள் விடுத்தானே!


    தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை*  துடவையும் கிணறும் இவைஎல்லாம்* 
    வாட்டம்இன்றி உன்பொன்னடிக் கீழே*  வளைப்புஅகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*

    நாட்டு மானிடத்தோடு எனக்குஅரிது*  நச்சுவார் பலர் கேழலொன்றாகி* 
    கோட்டுமண்கொண்ட கொள்கையினானே!*  குஞ்சரம் விழக் கொம்புஒசித்தானே!


    கண்ணா! நான்முகனைப் படைத்தானே!*  காரணா! கரியாய்! அடியேன் நான்* 
    உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை*  ஓவாதே நமோ நாரணா என்று*

    எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம*  வேத நாள்மலர் கொண்டு உன பாதம்- 
    நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்*  அன்று எனக்கு அவை பட்டினி நாளே.


    வெள்ளை வெள்ளத்தின்மேல் ஒருபாம்பை*  மெத்தையாக விரித்து*  அதன்மேலே- 
    கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்*  காணலாங்கொல் என்றுஆசையினாலே*

    உள்ளம்சோர உகந்துஎதிர்விம்மி*  உரோமகூபங்களாய்க்*  கண்ணநீர்கள்- 
    துள்ளம்சோரத் துயில்அணை கொள்ளேன்*  சொல்லாய்யான் உன்னைத் தத்துறுமாறே.


    வண்ணமால் வரையே குடையாக*  மாரிகாத்தவனே! மதுசூதா!* 
    கண்ணனே! கரிகோள்விடுத்தானே!*  காரணா! களிறுஅட்டபிரானே!*

    எண்ணுவார் இடரைக் களைவானே!*  ஏத்தரும் பெருங்கீர்த்தியினானே!* 
    நண்ணிநான் உன்னை நாள்தொறும் ஏத்தும்*  நன்மையே அருள்செய் எம்பிரானே!  


    நம்பனே! நவின்றுஏத்த வல்லார்கள்*  நாதனே! நரசிங்கமது ஆனாய்!* 
    உம்பர்கோன் உலகுஏழும் அளந்தாய்*  ஊழிஆயினாய்! ஆழிமுன்ஏந்திக்*

    கம்பமா கரிகோள் விடுத்தானே!*  காரணா! கடலைக்கடைந்தானே!* 
    எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!*  ஏழையேன் இடரைக் களையாயே.


    காமர் தாதை கருதலர்சிங்கம்*  காண இனிய கருங்குழற் குட்டன்* 
    வாமனன் என்மரகத வண்ணன்*  மாதவன் மதுசூதனன் தன்னைச்*

    சேமநன்குஅமரும் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்* 
    நாமம்என்று நவின்றுஉரைப்பார்கள்*  நண்ணுவார் ஒல்லை நாரணன்உலகே.


    நெய்க்குடத்தைப்பற்றி*  ஏறும்எறும்புகள்போல் நிரந்து*  எங்கும்- 
    கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!*  காலம்பெற உய்யப்போமின்*

    மெய்க்கொண்டு வந்துபுகுந்து*  வேதப்பிரானார் கிடந்தார்* 
    பைக்கொண்ட பாம்புஅணையோடும்*  பண்டுஅன்று பட்டினம்காப்பே.  (2)


    சித்திரகுத்தன் எழுத்தால்*  தென்புலக்கோன் பொறிஒற்றி* 
    வைத்த இலச்சினை மாற்றித்*  தூதுவர் ஓடிஒளித்தார்*

    முத்துத் திரைக்கடற்சேர்ப்பன்*  மூதறிவாளர் முதல்வன்* 
    பத்தர்க்கு அமுதன்அடியேன்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே.


    வயிற்றில் தொழுவைப்பிரித்து*   வன்புலச் சேவைஅதக்கிக்* 
    கயிற்றும் அக்குஆணி கழித்துக்*   காலிடைப் பாசம்கழற்றி*

    எயிற்றிடை மண்கொண்ட எந்தை*   இராப்பகல் ஓதுவித்து*  என்னைப்- 
    பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்*   பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    மங்கிய வல்வினை நோய்காள்!*  உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்* 
    இங்குப் புகேன்மின் புகேன்மின்*  எளிது அன்று கண்டீர் புகேன்மின்*

    சிங்கப் பிரான் அவன் எம்மான்*  சேரும் திருக்கோயில் கண்டீர்* 
    பங்கப்படாது உய்யப் போமின்*  பண்டு அன்று பட்டினம் காப்பே.


    மாணிக் குறளுருவாய்*  மாயனை என்மனத்துள்ளே* 
    பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்*  பிறிதுஇன்றி*

    மாணிக்கப் பண்டாரம்கண்டீர்*  வலிவன்குறும்பர்கள்உள்ளீர்!* 
    பாணிக்க வேண்டாநடமின்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    உற்றஉறு  பிணிநோய்காள்!*  உமக்கு ஒன்றுசொல்லுகேன் கேண்மின்* 
    பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்*  பேணும் திருக்கோயில்கண்டீர்*

    அற்றம்உரைக்கின்றேன்*  இன்னம் ஆழ்வினைகாள்!*  உமக்குஇங்குஓர்-
    பற்றில்லை கண்டீர்நடமின்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    கொங்கைச் சிறுவரைஎன்னும்*  பொதும்பினில் வீழ்ந்துவழுக்கி* 
    அங்குஓர் முழையினில்புக்கிட்டு*  அழுந்திக் கிடந்துஉழல்வேனை*

    வங்கக் கடல்வண்ணன் அம்மான்*  வல்வினைஆயின மாற்றி* 
    பங்கப்படாவண்ணம் செய்தான்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே.


    ஏதங்கள் ஆயினஎல்லாம்*  இறங்கல்இடுவித்து*  என்னுள்ளே- 
    பீதகவாடைப்பிரனார்*  பிரமகுருவாகிவந்து*

    போதில்கமல வன்நெஞ்சம்*  புகுந்து என்சென்னித்திடரில்* 
    பாத இலச்சினை வைத்தார்*  பண்டன்றுபட்டினம்காப்பே. 


    உறகல் உறகல் உறகல்*  ஒண்சுடராழியே! சங்கே!* 
    அறவெறி நாந்தகவாளே!*  அழகியசார்ங்கமே! தண்டே!*

    இறவுபடாமல்இருந்த*  எண்மர் உலோகபாலீர்காள்!* 
    பறவைஅரையா! உறகல்*  பள்ளியறைக்குறிக் கொண்மின் (2)


    அரவத்து அமளியினோடும்*  அழகிய பாற்கடலோடும்* 
    அரவிந்தப் பாவையும்தானும்*  அகம்படி வந்துபுகுந்து*

    பரவைத் திரைபலமோதப்*  பள்ளி கொள்கின்றபிரானைப்* 
    பரவுகின்றான் விட்டுசித்தன்*  பட்டினம்காவற்பொருட்டே. (2) 


    துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த*  வலையை அறப்பறித்துப்* 
    புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்*  இனிப்போக விடுவதுண்டே?* 

    மக்கள் அறுவரைக் கல்லிடைமோத*  இழந்தவள் தன்வயிற்றில்* 
    சிக்கென வந்து பிறந்து நின்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)


    வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்*  உன்தன் இந்திரஞாலங்களால்* 
    ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்*  நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*

    அளித்தெங்கும் நாடும்நகரமும்*  தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று* 
    தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்,*  இனிப்போய்ஒருவன்- 
    தனக்குப்பணிந்து*  கடைத்தலைநிற்கை*  நின்சாயையழிவுகண்டாய்*

    புனத்தினைக் கிள்ளிப்புதுவவி காட்டி*  உன்பொன்னடிவாழ்கவென்று* 
    இனத்துக்குறவர் புதியதுண்ணும்*  எழில்மாலிருஞ்சோலை எந்தாய்! (2)


    காதம்பலவும் திரிந்து உழன்றேற்கு*  அங்கோர்நிழலில்லை நீருமில்லை*  உன்- 
    பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம்*  நான்எங்கும்காண்கின்றிலேன்* 

    தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய்*  அங்கோர்பொய்ச்சுற்றம்பேசிச்சென்று* 
    பேதஞ்செய்து எங்கும் பிணம்படைத்தாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    காலுமெழா கண்ணநீரும் நில்லா*  உடல்சோர்ந்து நடுங்கி*  குரல்- 
    மேலுமெழா மயிர்க்கூச்சுமறா*  எனதோள்களும் வீழ்வொழியா*

    மாலுகளாநிற்கும் என்மனனே!*  உன்னை வாழத்தலைப்பெய்திட்டேன்* 
    சேலுகளாநிற்கும் நீள்சுனைசூழ்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    எருத்துக் கொடியுடையானும்*  பிரமனும் இந்திரனும்*  மற்றும்- 
    ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு*  மருந்து அறிவாருமில்லை*

    மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்- 
    திருத்தி*  உன்கோயில் கடைப்புகப்பெய்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி*  உன்பேரருளால்* 
    இக்கரையேறி இளைத்திருந்தேனை*  அஞ்சேலென்று கைகவியாய்*

    சக்கரமும் தடக்கைகளும்*  கண்களும் பீதகவாடையொடும்* 
    செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    எத்தனைகாலமும் எத்தனையூழியும்*  இன்றொடுநாளையென்றே* 
    இத்தனைகாலமும் போய்க்கிறிப்பட்டேன்*  இனிஉன்னைப்போகலொட்டேன்* 

    மைத்துனன்மார்களைவாழ்வித்து*  மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்!* 
    சித்தம் நின்பாலதறிதியன்றே*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    அன்று வயிற்றில் கிடந்திருந்தே*  அடிமைசெய்யலுற்றிருப்பன்* 
    இன்றுவந்துஇங்கு உன்னைக்கண்டுகொண்டேன்*  இனிப்போகவிடுவதுண்டே?* 

    சென்றங்குவாணனை ஆயிரந்தோளும்*  திருச்சக்கரமதனால்* 
    தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்*  திருமாலிருஞ்சோலை தன்னுள்- 
    நின்றபிரான்*  அடிமேல் அடிமைத்திறம்*  நேர்படவிண்ணப்பஞ்செய்* 

    பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்*  புதுவைக்கோன்விட்டுசித்தன்* 
    ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்*  உலகமளந்தான்தமரே. (2)


    சென்னியோங்கு*  தண்திருவேங்கடமுடையாய்!*  உலகு- 
    தன்னை வாழநின்ற நம்பீ!*  தாமோதரா! சதிரா!* 

    என்னையும் என்னுடைமையையும்*  உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு* 
    நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)


    பறவையேறு பரமபுருடா!*  நீஎன்னைக் கைக்கொண்டபின்* 
    பிறவியென்னும் கடலும்வற்றிப்*  பெரும்பதம் ஆகின்றதால்* 

    இறவு செய்யும் பாவக்காடு*  தீக்கொளீஇவேகின்றதால்* 
    அறிவையென்னும் அமுதவாறு*  தலைப்பற்றி வாய்க்கொண்டதே.


    எம்மனா! என்குலதெய்வமே!*  என்னுடைய நாயகனே!* 
    நின்னுளேனாய்ப் பெற்றநன்மை*  இவ்வுலகினில் ஆர்பெறுவார்? 

    நம்மன்போலே வீழ்த்தமுக்கும்*  நாட்டிலுள்ளபாவமெல்லாம் 
    சும்மெனாதே கைவிட்டோடித்*  தூறுகள்பாய்ந்தனவே.


    கடல்கடைந்து அமுதம்கொண்டு *  கலசத்தைநிறைத்தாற்போல்* 
    உடலுருகிவாய்திறந்து*  மடுத்து உன்னைநிறைத்துக்கொண்டேன்* 

    கொடுமை செய்யும்கூற்றமும்*  என்கோலாடிகுறுகப்பெறா* 
    தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே!


    பொன்னைக்கொண்டு உரைகல்மீதே*  நிறமெழவுரைத்தாற்போல்* 
    உன்னைக்கொண்டு என்நாவகம்பால்*  மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்*

    உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்*  என்னையும்உன்னிலிட்டேன்* 
    என்னப்பா! என்னிருடீகேசா!*  என்னுயிர்க்காவலனே!


    உன்னுடைய விக்கிரமம்*  ஒன்றோழியாமல் எல்லாம்* 
    என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்* 

    மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட*  இராமநம்பீ!* 
    என்னிடைவந்து எம்பெருமான்!*  இனியெங்குப்போகின்றதே? 


    பருப்பதத்துக் கயல்பொறித்த*  பாண்டியர்குலபதிபோல்* 
    திருப்பொலிந்தசேவடி*  என் சென்னியின் மேல் பொறித்தாய்* 

    மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே* 
    உருப்பொலிந்தநாவினேனை*  உனக்கு உரித்தாக்கினையே. (2)


    அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து*  என்- 
    மனந்தனுள்ளே வந்துவைகி*  வாழச்செய்தாய்எம்பிரான்!* 

    நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்*  கண்கள் அசும்பொழுக* 
    நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்*  நேமி நெடியவனே!


    பனிக்கடலில் பள்ளிகோளைப்*  பழகவிட்டு ஓடிவந்துஎன்- 
    மனக்கடலில் வாழவல்ல*  மாயமணாளநம்பீ!*

    தனிக்கடலே!  தனிச்சுடரே!*  தனியுலகே என்றென்று* 
    உனக்கிடமாய்யிருக்க*  என்னை உனக்கு உரித்தாக்கினையே. 


    தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்*  தவள நெடுங்கொடிபோல்* 
    சுடரொளியாய் நெஞ்சினுள்ளே*  தோன்றும்என்சோதிநம்பீ!*

    வடதடமும் வைகுந்தமும்*  மதிள்துவராபதியும்* 
    இடவகைகள் இகழ்ந்திட்டு*  என்பால் இடவகைகொண்டனையே. (2)


    வேயர் தங்கள் குலத்துதித்த*  விட்டுசித்தன் மனத்தே* 
    கோயில்கொண்ட கோவலனைக்*  கொழுங்குளிர் முகில்வண்ணனை* 

    ஆயரேற்றை அமரர்கோவை*  அந்தணர்தம் அமுதத்தினை* 
    சாயைபோலப் பாடவல்லார்*  தாமும் அணுக்கர்களே. (2)