பிரபந்த தனியன்கள்

வாழிபரகாலன் வாழிகலிகன்றி,
வாழி குறையலூர் வாழ்வேந்தன், - வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்.
சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்,
ஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ்,
ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
சேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    ஒரு பேருந்தி இருமலர்த் தவிசில்,* 
    ஒருமுறை அயனை ஈன்றனை,* ஒருமுறை- 
    இருசுடர் மீதினில் இயங்கா,* மும்மதிள்- 
    இலங்கை இருகால் வளைய,* ஒருசிலை- 
    ஒன்றிய ஈர்எயிற்று அழல்வாய் வாளியில்- 
    அட்டனை,* மூவடி நானிலம் வேண்டி,* 
    முப்புரி நூலொடு மான்உரிஇலங்கு-
    மார்வினில்,* இருபிறப்பு ஒருமாண்ஆகி,* 
    ஒருமுறை ஈரடி மூவுலகு அளந்தனை,* 
    நால்திசை நடுங்க அம்சிறைப் பறவை-
    ஏறி,* நால்வாய் மும்மதத்து இருசெவி- 
    ஒருதனி வேழத்து அரந்தையை,* ஒருநாள்-
    இருநீர் மடுவுள் தீர்த்தனை,* முத்தீ- 
    நான்மறை ஐவகை வேள்வி,* அறுதொழில்-
    அந்தணர் வணங்கும் தன்மையை,* ஐம்புலன்-
    அகத்தினுள் செறித்து,* நான்குஉடன் அடக்கி- 
    முக்குணத்து இரண்டுஅவை அகற்றி,* ஒன்றினில்-
    ஒன்றி நின்று,* ஆங்கு இரு பிறப்புஅறுப்போர்-
    அறியும் தன்மையை,* முக்கண் நால்தோள்- 
    ஐவாய் அரவோடு* ஆறுபொதி சடையோன்- 
    அறிவுஅரும் தன்மைப் பெருமையுள் நின்றனை,* 
    ஏழ்உலகு எயிற்றினில் கொண்டனை,* கூறிய-
    அறுசுவைப் பயனும் ஆயினை,* சுடர்விடும்-

    ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை,* சுந்தர-
    நால்தோள் முந்நீர் வண்ண,* நின் ஈரடி-
    ஒன்றிய மனத்தால்,* ஒருமதி முகத்து-
    மங்கையர் இருவரும் மலரன,* அங்கையில்-
    முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,* 
    நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,* 
    மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,*  
    அறுபதம்முரலும் கூந்தல் காரணம்*
    ஏழ்விடை அடங்கச் செற்றனை,*  அறுவகைச்-
    சமயமும் அறிவரு நிலையினை,* ஐம்பால்-
    ஓதியை ஆகத்து இருத்தினை,* அறம்முதல்-
    நான்கு அவைஆய் மூர்த்தி மூன்றாய்* 
    இருவகைப் பயன்ஆய் ஒன்றுஆய் விரிந்து-
    நின்றனை,* குன்றா மதுமலர்ச் சோலை- 
    வண்கொடிப் படப்பை,* வருபுனல் பொன்னி-
    மாமணி அலைக்கும்,* செந்நெல் ஒண்கழனித்- 
    திகழ்வனம் உடுத்த,* கற்போர் புரிசைக் -
    கனக மாளிகை,* நிமிர்கொடி விசும்பில்- 
    இளம்பிறை துவக்கும்,* செல்வம் மல்கு தென்- 
    திருக்குடந்தை,* அந்தணர் மந்திர மொழியுடன்- 
    வணங்க,* ஆடுஅரவுஅமளியில் அறிதுயில்- 
    அமர்ந்த பரம,*  நின் அடிஇணை பணிவன்- 
    வரும்இடர் அகல மாற்றோ வினையே   (2)