திருப் பரமேஸ்வர விண்ணகரம்

இத்தலத்தைப் பற்றிக் குறிப்பாக எந்தப் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் புராண காலத்தில் இத்தலம் சர்ப்பச் சேத்திரம் என அழைக்கப்பட்டதாகவும், இறைவன் பரமபதநாதன் என்று ஆராதிக்கப்பட்டதாகவும் தல வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது.[2] ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச் செல்லும் மடமாக இருந்தது. மிகச் சிறிய அளவினதாக இருந்த இத்தலம் பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில்தான் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது. பரமேஸ்வரவர்மன் இத்தலத்தின் இறைவனருளால் பிறந்ததாகவும் இதை நினைவு படுத்தும் முகமாக பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18 யானைகளைக் கொடுத்திருந்ததாகவும் கூறுவர். பரமேஸ்வர வர்மனுக்கு இப்பெருமான் 18 கலைகளை போதித்ததாகவும், அவைகளைச் சொல்வதற்காக எழுந்த நிலையில் நின்ற திருக்கோலத்திலும், சீடனுக்கு உபதேசித்தருள குருவாக அமர்ந்த திருக்கோலத்திலும், அவனுக்கு சேவை சாதிக்க கிடந்த திருக்கோலத்திலும் இருந்ததாகக் கூறுவர். இதனால் தான் பரமேஸ்வரவர்மன் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாகக் கட்டி முதல் அடுக்கில் (கீழ் அடுக்கில்) பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், இரண்டாவது தளத்தில் அரங்கநாதனாக சயன திருக்கோலத்திலும், மூன்றாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் இறைவனை எழுந்தருளச் செய்தார்.[3] மூன்றாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் அமைக்கப்பட்ட சிலை ஒரு சமயம் மழையின் போது உண்டான பேரிடியின் காரணமாகச் சிதலமடைய பிறகு அவ்விடத்தில் சுதையால் செய்யப்பட்ட சிலை வைக்கப்பட்டது. இது தவிர மற்ற இரண்டு தளத்திலும் உள்ள சிலைகள் கற்களில் வடிக்கப்பட்டவையாகும்.

அமைவிடம்

பெயர்: திருப்பரமேச்சுர விண்ணகரம் அமைவிடம் மாவட்டம்: காஞ்சிபுரம்,

தாயார் : ஸ்ரீ வைகுண்ட வல்லி
மூலவர் : ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: வைகுண்ட பெருமாள்,ஸ்ரீ வைகுண்ட தாயார்


திவ்யதேச பாசுரங்கள்

    1128.   
    சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்*  சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்* 
    நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*
    பல்லவன் வில்லவன் என்று உலகில்*  பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
    மல்லையர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)     

        விளக்கம்  


    • உலகத்திலுள்ள ஸகல ஸாநாந்ய சப்தங்களாலும் விசேஷசப்தமாகிய வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனும், ஞானேந்திரியங்கள் ஐந்தாலும் அநுபவிக்கக்கூடியவனும்,படைத்தல் காத்தல் அழித்தலென்னும் முத்தொழில்களையும் முன்றுருக்கொண்டு நிர்வஹிக்குமவனுமான எம்பெருமான் கச்சித்திருப்பதியிலே பல்லவராஜனுடைய கைங்கரியங்களுக்குக் கொள்கலமான பரமேச்சுர விண்ணகரத்திலே எழுந்தருளியுள்ளான்----என்றாராயிற்று. சொல்லு என்றவிடத்து, உசுரம்-சாரியை; சொல் என்றபடி: சொல்லாவது உலகத்தில் வழங்கப்படும் சப்தராசிகள். கல் மண் முதலிய சொற்களெல்லாம் அவ்வப்பொருள்களுள் அந்தராத்மாவாய் உறைபவனான எம்பெருமானளவும் சொல்லிநிற்குமென்பது வேதாந்திகளின் கொள்கை. இது, வடமொழியில் அபர்யவஸாநவ்ருத்தி எனப்படும். இனி வன்சொல்லாவது என்றுமழியாமல் வலிதாயிருக்கக்கூடிய சப்தம்: அதுதான் வேதம்.


    1129.   
    கார் மன்னு நீள் விசும்பும்*  கடலும் சுடரும் நிலனும் மலையும்*
    தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்*  தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
    தேர் மன்னு தென்னவனை முனையில்*  செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,* 
    பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.          

        விளக்கம்  


    • விசும்பு, கடல், சுடர், நிலம், மலை முதலான பொருள்கள் உந்திக்கமலத்திலே மன்னியிருக்கையாவது இவற்றுக்கெல்லாம் பிறப்பிடமா யிருக்கை. இத்தால்---உலகங்களைப்படைப்பவனான நான்முகக் கடவுளைப் பிறப்பித்த உந்திக் கமலத்தை யுடையவன் என்பதாகக் கொள்க. உந்தித்தார்--தார்என்று புஷ்பத்துக்கும் பெயர்.


    1130.   
    உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்*  ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்* 
    வரம் தரு மா மணிவண்ணன் இடம்*  மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
    நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்*  நெடு வாயில் உக செருவில் முன நாள்* 
    பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.   

        விளக்கம்  


    • திருப்பாற்கடலிலே திருவனந்தாழ்வான்மீது சயனித் தருள்பவனும் திருலத்திமாலையில் பேரருளாளப் பெருமாளாய் வரதராஜன் என்று திருநாமம்புண்டு ஸேவை ஸாகிப்பவனுமான எம்பெருமானே பரமேச்சுரவிண்ணகரத்தில் ஸ்ரீகைகுண்ட நாதனாகக் காட்சி தந்தருள்கிறானென்கிறார்;. மண்ணையிலிருந்த சத்துருக்கள் இவ்வரசனது வேற்படையின் வாயிலே மாண்டொழிந்தனராம். உக---உகுதலாவது பொடியாய்ப் போதல்.


    1131.   
    அண்டமும் எண் திசையும் நிலனும்*  அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
    எந்தை பிரானது இடம்*  ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
    விண்டவர் இண்டைக் குழாமுடனே*  விரைந்தார் இரிய செருவில் முனிந்து* 
    பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே. 

        விளக்கம்  


    • “செருவில் வளைத்தான்” என்று கூட்டி அந்வயித்து, செரு---போர்செய்கின்றவில் வில்லை, வளைத்தான் என்றுரைப்பாருமுண்டு. வளைத்தான் என்பதற்கு, சூழ்ந்துகொண்டானென்றும் பொருளுண்டாகையால், சிதறியோட வேண்டும்படி பகைவரை ஆக்ரமித்துக் கொண்டானென்றும் உரைக்கலாம்


    1132.   
    தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்*  துயர் தீர்த்து அரவம் வெருவ*
    முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
    தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்*  திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற* 
    பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுர விண்ணகரம்அதுவே.

        விளக்கம்  


    • “தென்னவனை” என்றவிடத்து- ஐகாரம் அசை. பாம்புடை-ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொன்று த்வஜமாயிருக்கும்: பல்லவராஜன் நாகலோகத்தளவுஞ் சென்று வந்தவனென்பதற்கு அறிகுறியாக நாகத்தைக் கொடியாகவுடையனாயிருப்பவனாம். (குருவம்சத்து அரசர்களில் துரியோதனன் அரவுநீள்கொடியோன் எனப்படுவன்.)


    1133.   
    திண் படைக் கோளரியின் உரு ஆய்*  திறலோன் அகலம் செருவில் முன நாள்* 
    புண் படப் போழ்ந்த பிரானது இடம்*  பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
    வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப*  விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த* 
    பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.   

        விளக்கம்  


    • பல்லவராஜனுடைய பெருமேன்மையைப் பேசுகிற மூன்றாமடியின் பிற்பகுதியில்“விடவெல் கொடி” என்றும், “விடை வெல்கொடி” என்றும், “விறல் வெல்கொடி” என்றும்மூன்று வகையான பாடங்கள் உள்ளனவாக வியாக்கியானம் காண்கிறது. முந்தின பாடத்தில்விடம் என்றது விஷமுடைத்தான நாகத்தைச் சொன்னபடியாய் நாகக்கொடியோன் என்றதாகிறது. இரண்டாவது பாடமே பெரும்பான்மையாக வழங்குகின்றது: விடை என்று இளம் பாம்புக்கும் பெயருண்டென்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார். எருது என்னும் பொருளையேகொண்டாலும் குறையில்லை: பல்லவனுக்கு ஆதிகாலமாக விருஷபக்கொடி இருந்ததென்றும், பின்பு நாகலோகத்தளவுஞ் சென்று வென்றுவந்தது காரணமாக நாகக்கொடி உண்டாயிற்றென்றும் வரலாறு உள்ளதாகச் சொல்லக் கேள்வியுண்டு, திண்படை - நரஸிம்ஹமூர்த்திக்கு நகங்கள் தவிர வேறு ஆயதமொன்று மில்லாமையினால் அந்த நகங்களையே இங்குத் திண்படை யென்கிறார்.


    1134.   
    இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்*  மாண் உரு ஆய் முன நாள்* 
    சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
    உலகு உடை மன்னவன் தென்னவனைக்*  கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ, 
    பல படை சாய வென்றான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.            

        விளக்கம்  


    • சலமொடு-‘ஜலம்’ என்ற வடசொல் சலமெனத் திரிந்ததென்று கொண்டால். மாவலியானவன் தத்தம் பண்ணுதற்காக விட்ட நீர்த்தாரையுடனே என்று பொருளாம்: ‘‘ரு’ என்ற வடசொல் சலமெனத் திரிந்ததென்று கொண்டால் க்ருத்ரிமவகையினால் என்றதாகிறது. சிறிய வடிவைக் காட்டிப் பெரிய வடிவாலே அளந்துகொண்ட க்ருத்ரிமம். பாண்டியராஜனுடைய நகரங்களுள் ஒன்றான கருவுடையும் பல்லவராஜன் வென்று கைக்கொண்டபடியைப் பின்னடிகளில் பேசினாராயிற்று.


    1135.   
    குடைத் திறல் மன்னவன் ஆய்*  ஒருகால் குரங்கைப் படையா*
    மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்*  அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
    விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்*  வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த* 
    படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.     

        விளக்கம்  



    1136.   
    பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து*  முன்னே ஒருகால் செருவில் உருமின்* 
    மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
    கறை உடை வாள் மற மன்னர் கெட*  கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்* 
    பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. 

        விளக்கம்  


    • நப்பின்னையை அடைய விரும்பிய பெருமான் ஏழுகாளைகளை நெற்றியை உடையவளாதலால் பெருமான் அவளை அடைய விரும்பினான்.


    1137.   
    பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகர்மேல்* 
    கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்*  கலிகன்றி குன்றாது உரைத்த* 
    சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்*  திரு மா மகள் தன் அருளால்*
    உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்*  செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)        

        விளக்கம்