பிரபந்த தனியன்கள்

முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.

   பாசுரங்கள்


    முயற்றி சுமந்துஎழுந்து*  முந்துற்ற நெஞ்சே,* 
    இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,* -நயப்புஉடைய-

    நாஈன் தொடைக்கிளவி*  உள்பொதிவோம்,*  நல்பூவைப்- 
    பூஈன்ற வண்ணன் புகழ்  (2)


    புகழ்வோம் பழிப்போம்*  புகழோம் பழியோம்* 
    இகழ்வோம் மதிப்போம்*  மதியோம் இகழோம்*  மற்று-

    எங்கள் மால்! செங்கண் மால்!*  சீறல்நீ, தீவினையோம்* 
    எங்கள் மால் கண்டாய் இவை.  


    இவைஅன்றே நல்ல*  இவைஅன்றே தீய,* 
    இவை என்றுஇவை அறிவனேலும்,* -இவைஎல்லாம்

    என்னால் அடைப்பு நீக்கு*  ஒண்ணாது இறையவனே,* 
    என்னால் செயற் பாலது என்?


    என்னின் மிகுபுகழார் யாவரே,*  பின்னையும்மற்று- 
    எண்இல்*  மிகுபுகழேன் யான்அல்லால்,*  -என்ன-

    கருஞ்சோதிக்*  கண்ணன் கடல்புரையும்,*  சீலப்- 
    பெருஞ்சோதிக்கு என்நெஞ்சு ஆட்பெற்று


    பெற்றதாய் நீயே*  பிறப்பித்த தந்தைநீ* 
    மற்றை யார்ஆவாரும் நீபேசில்,*  எற்றேயோ-

    மாய! மாமாயவளை*  மாயமுலை வாய்வைத்த* 
    நீஅம்மா! காட்டும் நெறி.  


    நெறிகாட்டி நீக்குதியோ,*  நின்பால் கருமா- 
    முறிமேனி காட்டுதியோ,*  மேல்நாள் அறியோமை*

    என்செய்வான் எண்ணினாய் கண்ணனே,*  ஈதுஉரையாய்- 
    என்செய்தால் என்படோம் யாம்?


    யாமே அருவினையோம் சேயோம்,'*  என் நெஞ்சினார்- 
    தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,*  -பூமேய-

    செம்மாதை*  நின் மார்வில் சேர்வித்துப்,*  பார்இடந்த- 
    அம்மா! நின் பாதத்து அருகு.


    அருகும் சுவடும் தெரிவுஉணரோம்,*  அன்பே- 
    பெருகும் மிகஇதுஎன்? பேசீர்,*  -பருகலாம்-

    பண்புடையீர்! பார்அளந்தீர்!*  பாவியெம்கண் காண்புஅரிய* 
    நுண்புஉடையீர்! நும்மை நுமக்கு. 


    'நுமக்குஅடியோம்' என்றுஎன்று*  நொந்துஉரைத்துஎன்,*  மாலார்- 
    தமக்கு அவர்தாம்*  சார்வுஅரியர் ஆனால்?*  -எமக்குஇனி-

    யாதானும்*  ஆகிடுகாண் நெஞ்சே,*  அவர்திறத்தே- 
    யாதானும் சிந்தித்து இரு.


    இருநால்வர் ஈரைந்தின் மேல்ஒருவர்,*  எட்டோடு- 
    ஒருநால்வர்*  ஓர்இருவர் அல்லால்,*  திருமாற்கு-

    யாம்ஆர் வணக்கம்ஆர்*  ஏபாவம் நல்நெஞ்சே* 
    நாமா மிகஉடையோம் நாழ்?


    நாழால் அமர்முயன்ற*  வல்அரக்கன், இன்உயிரை,* 
    வாழாவகை வலிதல்நின் வலியே,*  -ஆழாத-

    பாரும்நீ வானும்நீ*  காலும்நீ தீயும்நீ,* 
    நீரும் நீஆய் நின்ற நீ.


    நீஅன்றே ஆழ்துயரில்*  வீழ்விப்பான் நின்றுஉழன்றாய்?*
    போய்ஒன்று சொல்லிஎன்? போநெஞ்சே,* -நீஎன்றும்-

    காழ்த்து உபதேசம் தரினும்*  கைக்கொள்ளாய்,* கண்ணன் தாள்- 
    வாழ்த்துவதே கண்டாய் வழக்கு. 


    வழக்கொடு மாறுகோள் அன்று* அடியார் வேண்ட,* 
    இழக்கவும் காண்டும் இறைவ!-இழப்புஉண்டே,*

    எம்ஆட் கொண்டுஆகிலும்*  யான்வேண்ட, என்கண்கள்* 
    தம்மால் காட்டுஉன் மேனிச் சாய்? 


    சாயால் கரியானை*  உள்அறியாராய் நெஞ்சே,* 
    பேயார் முலைகொடுத்தார் பேயர்ஆய்,*-நீயார்போய்த்-

    தேம்புஊண் சுவைத்து*  ஊன்அறிந்துஅறிந்தும்,*  தீவினைஆம்- 
    பாம்பார்வாய்க் கைந்நீட்டல் பார்த்து.   


    பார்த்துஓர் எதிரிதா நெஞ்சே,*  படுதுயரம்- 
    பேர்த்துஓதப்*  பீடுஅழிவுஆம் பேச்சுஇல்லை,*  -ஆர்த்துஓதம்-

    தம்மேனித்*  தாள்தடவ தாம்கிடந்து,*  தம்முடைய- 
    செம்மேனிக் கண்வளர்வார் சீர்.   


    சீரால் பிறந்து*  சிறப்பால் வளராது,* 
    பேர் வாமன்ஆகாக்கால் பேராளா,*-மார்புஆரப்-

    புல்கி நீ உண்டுஉமிழ்ந்த*  பூமி நீர் ஏற்புஅரிதே?* 
    சொல்லுநீ யாம்அறிய சூழ்ந்து.


    சூழ்ந்து அடியார் வேண்டினக்கால்*  தோன்றாது விட்டாலும்* 
    வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,*  -சூழ்ந்துஎங்கும்-

    வாள்வரைகள் போல்அரக்கன்*  வன்தலைகள் தாம்இடிய,* 
    தாள்வரை வில்ஏந்தினார் தாம்.


    தாம்பால் ஆப்புண்டாலும்*  அத்தழும்பு தான்இளகப்,* 
    பாம்பால் ஆப்புண்டு பாடுஉற்றாலும்,*  -சோம்பாதுஇப்- 

    பல்உருவை எல்லாம்*  படர்வித்த வித்தா,*  உன்- 
    தொல்உருவை யார்அறிவார் சொல்லு?


    சொல்லில் குறைஇல்லை*  சூதுஅறியா நெஞ்சமே,* 
    எல்லி பகல் என்னாது எப்போதும்,*-தொல்லைக் கண்-

    மாத்தானைக்கு எல்லாம்*  ஓர் ஐவரையே மாறுஆகக்,* 
    காத்தானைக் காண்டும்நீ காண்.


    காணப் புகில்அறிவு*  கைக்கொண்ட நல்நெஞ்சம்,* 
    நாணப் படும்அன்றே நாம்பேசில்?* -மாணி-

    உருஆகிக் கொண்டு*  உலகம் நீர்ஏற்ற சீரான்,* 
    திருஆகம் தீண்டிற்றுச் சென்று.   


    சென்றுஅங்கு வெம்நரகில்*  சேராமல் காப்பதற்கு,* 
    இன்றுஇங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட,*-அன்றுஅங்குப்-

    பார்உருவும்*  பார்வளைத்த நீர்உருவும்*  கண்புதையக்,- 
    கார்உருவன் தான் நிமிர்த்த கால்.


    காலே பொதத்திரிந்து*  கத்துவராம் இனநாள்,* 
    மாலார் குடிபுகுந்தார் என்மனத்தே,*  -மேலால்-

    தருக்கும்இடம் பாட்டினொடும்*  வல்வினையார் தாம்,*  வீற்று- 
    இருக்கும்இடம் காணாது இளைத்து. 


    இளைப்பாய் இளையாப்பாய்*  நெஞ்சமே! சொன்னேன்,* 
    இளைக்க நமன்தமர்கள் பற்றி- இளைப்புஎய்த*

    நாய்தந்து மோதாமல்*  நல்குவான் நல்காப்பான்,* 
    தாய்தந்தை எவ்உயிர்க்கும் தான். 


    தானே தனித்தோன்றல்*  தன்அளப்பு ஒன்றுஇல்லாதான்* 
    தானே பிறர்கட்கும் தன்தோன்றல்,*-தானே-

    இளைக்கில்பார் கீழ்மேல்ஆம்*  மீண்டுஅமைப்பான் ஆனால்,* 
    அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்?  


    ஆரானும் ஆதானும் செய்ய,*  அகலிடத்தை- 
    ஆராய்ந்து*  அது திருத்தல் ஆவதே?,*  -சீர்ஆர்-

    மனத்தலை*  வன் துன்பத்தை மாற்றினேன்,*  வானோர்- 
    இனத்தலைவன் கண்ணனால் யான்.


    யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்,*  வல்வினையைக்- 
    கானும் மலையும் புகக்கடிவான்,*-தான்ஓர்-

    இருள்அன்ன மாமேனி*  எம்இறையார் தந்த,* 
    அருள்என்னும் தண்டால் அடித்து.  


    அடியால்*  படிகடந்த முத்தோ,*  அதுஅன்றேல்- 
    முடியால்*  விசும்புஅளந்த முத்தோ,*  -நெடியாய்!-

    செறிகழல்கொள் தாள்நிமிர்த்துச்*  சென்று உலகம்எல்லாம்,* 
    அறிகிலமால் நீஅளந்த அன்று.  


    அன்றே நம் கண்காணும்*  ஆழியான் கார்உருவம்,* 
    இன்றேநாம் காணாது இருப்பதுவும்,*  -என்றேனும்-

    கட்கண்ணால்*  காணாத அவ்உருவை,*  நெஞ்சுஎன்னும்- 
    உட்கண்ணேல் காணும் உணர்ந்து.


    உணர ஒருவர்க்கு*  எளியேனே? செவ்வே,* 
    இணரும் துழாய்அலங்கல் எந்தை,*  -உணரத்-

    தனக்குஎளியர்*  எவ்அளவர் அவ்அளவன் ஆனால்,* 
    எனக்குஎளியன் எம்பெருமான் இங்கு.


    இங்குஇல்லை பண்டுபோல்*  வீற்றிருத்தல்,*  என்னுடைய- 
    செங்கண்மால் சீர்க்கும் சிறிதுஉள்ளம்,*  -அங்கே-

    மடிஅடக்கி நிற்பதனில்*  வல்வினையார் தாம்,*  ஈண்டு- 
    அடிஎடுப்பது அன்றோ அழகு?


    அழகும் அறிவோமாய்*  வல்வினையைத் தீர்ப்பான்,* 
    நிழலும் அடிதாறும் ஆனோம்,*  -சுழலக்-

    குடங்கள்*  தலை மீதுஎடுத்துக் கொண்டுஆடி,*  அன்றுஅத்- 
    தடங்கடலை மேயார் தமக்கு.


    தமக்குஅடிமை வேண்டுவார்*  தாமோதரனார்,- 
    தமக்கு*  அடிமை செய்என்றால் செய்யாது,*-எமக்குஎன்று-

    தம்செய்யும் தீவினைக்கே*  தாழ்வுறுவர் நெஞ்சினார்,* 
    யாம்செய்வது இவ்விடத்து இங்குயாது?


    யாதானும் ஒன்றுஅறியில்*  தன்உகக்கில் என்கொலோ,* 
    யாதானும் நேர்ந்து அணுகாஆறுதான்?,*-யாதானும்-

    தேறுமா*  செய்யா அசுரர்களை,*  நேமியால்- 
    பாறுபாறு ஆக்கினான் பால். 


    பால்ஆழி நீகிடக்கும் பண்பை,*  யாம் கேட்டேயும்- 
    கால்ஆழும்*  நெஞ்சுஅழியும் கண்சுழலும்,*-நீல்ஆழிச்-

    சோதியாய்! ஆதியாய்!*  தொல்வினைஎம் பால்கடியும்,* 
    நீதியாய்! நின்சார்ந்து நின்று.  


    நின்றும் இருந்தும்*  கிடந்தும் திரிதந்தும்,* 
    ஒன்றுமோ ஆவாற்றான் என் நெஞ்சுஅகலான்,*-அன்றுஅம்கை-

    வன்புடையால் பொன்பெயரோன்*  வாய்தகர்த்து மார்வு இடந்தான்,* 
    அன்புடையன் அன்றே அவன்?  


    அவனாம் இவன்ஆம் உவன்ஆம்,*  மற்று உம்பர்- 
    அவனாம்*  அவன் என்று இராதே,*-அவனாம்-

    அவனே எனத்தெளிந்து,*  கண்ணனுக்கே தீர்ந்தால்,* 
    அவனே எவனேலும் ஆம்.


    ஆம்ஆறு அறிவுடையார்*  ஆவது அரிதுஅன்றே?* 
    நாமே அதுஉடையோம் நல்நெஞ்சே,*-பூமேய்-

    மதுகரம்மே*  தண்துழாய் மாலாரை,*  வாழ்த்துஆம்- 
    அதுகரமே அன்பால் அமை.


    அமைக்கும் பொழுதுஉண்டே*  ஆராயில் நெஞ்சே,* 
    இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத்திறங்கள்*

    ஏசியே ஆயினும்*  ஈன்துழாய் மாயனையே,* 
    பேசியே போக்காய் பிழை.  


    பிழைக்க முயன்றோமோ*  நெஞ்சமே! பேசாய்,*
    தழைக்கும் துழாய் மார்வன் தன்னை,*-அழைத்துஒருகால்-

    போய் உபகாரம்*  பொலியக் கொள்ளாது,*  அவன் புகழே- 
    வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு?   


    வாய்ப்போ இதுஒப்ப*  மற்றுஇல்லை வாநெஞ்சே,* 
    போய்ப்போஒய்*  வெம்நரகில் பூவியேல்,*-தீப்பால-

    பேய்த்தாய்*  உயிர்கலாய்ப் பால்உண்டு,*  அவள்உயிரை- 
    மாய்த்தானை வாழ்த்தே வலி   


    'வலியம்' எனநினைந்து*  வந்துஎதிர்ந்த மல்லர்* 
    வலிய முடிஇடிய வாங்கி,*-வலியநின்-

    பொன்ஆழிக் கையால்*  புடைத்திடுதி கீளாதே,* 
    பல்நாளும் நிற்கும்இப் பார்.


    பார்உண்டான் பார்உமிழ்ந்தான்*  பார்இடந்தான் பார்அளந்தான் 
    பார்இடம் முன்படைத்தான் என்பரால்,*  -பார்இடம்-

    ஆவானும்*  தான்ஆனால் ஆர்இடமே?,*  மற்றொருவர்க்கு- 
    ஆவான் புகாவால் அவை.  


    அவையம் எனநினைந்து*  வந்தசுரர் பாலே,* 
    நவையை நளிர்விப்பான் தன்னை,*  -கவைஇல்-

    மனத்துஉயர வைத்திருந்து*  வாழ்த்தாதார்க்கு உண்டோ,* 
    மனத்துயரை மாய்க்கும் வகை?


    வகைசேர்ந்த நல்நெஞ்சும்*  நாஉடைய வாயும்,* 
    மிகவாய்ந்து வீழா எனிலும்,*  -மிகஆய்ந்து-

    மாலைத்தாம்*  வாழ்த்தாது இருப்பர் இதுஅன்றே,* 
    மேலைத்தாம் செய்யும் வினை?


    வினையார் தரமுயலும்*  வெம்மையை அஞ்சி,* 
    தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது*

    வாசகத்தால் ஏத்தினேன்*  வானோர் தொழுதுஇறைஞ்சும்,* 
    நாயகத்தான் பொன்அடிக்கள் நான்.  


    நான்கூறும்*  கூற்றாவது இத்தனையே,*  நாள்நாளும்- 
    தேங்குஓத நீர்உருவன் செங்கண்மால்,*  -நீங்காத-

    மாகதிஆம்*  வெம்நரகில் சேராமல் காப்பதற்கு,* 
    நீகதிஆம் நெஞ்சே! நினை.


    நினைத்துஇறைஞ்சி மானிடவர்*  ஒன்றுஇரப்பர் என்றே 
    நினைத்திடவும் வேண்டாநீ நேரே,*  -நினைத்துஇறைஞ்ச-

    எவ்அளவர்*  எவ்இடத்தோர் மாலே,*  அதுதானும்- 
    எவ்அளவும் உண்டோ எமக்கு?


    எமக்கு யாம் விண்நாட்டுக்கு*  உச்சமதுஆம் வீட்டை,* 
    அமைத்திருந்தோம் அஃதுஅன்றே ஆம்ஆறு,*-அமைப்பொலிந்த-

    மென்தோளி காரணமா*  வெம்கோட்டுஏறு ஏழ்உடனே,* 
    கொன்றானையே மனத்துக் கொண்டு?   


    கொண்டல்தான் மால்வரைதான்*  மாகடல்தான் கூர்இருள்தான் 
    வண்டுஅறாப் பூவைதான் மற்றுத்தான்,*-கண்டநாள்-

    கார்உருவம்*  காண்தோறும் நெஞ்சுஓடும்,*  கண்ணனார்- 
    பேர்உருஎன்று எம்மைப் பிரிந்து.


    பிரிந்துஒன்று நோக்காது*  தம்முடைய பின்னே,* 
    திரிந்துஉழலும் சிந்தனையார் தம்மை,*  -புரிந்துஒருகால்-

    'ஆவா!' என இரங்கார்*  அந்தோ! வலிதேகொல்,* 
    மாவாய் பிளந்தார் மனம்?  


    மனம்ஆளும் ஓர்ஐவர்*  வன்குறும்பர் தம்மைச்,* 
    சினம்மாள்வித்து ஓர்இடத்தே சேர்த்து,*  -புனம்மேய-

    தண்துழாயான் அடியைத்*  தாம்காணும் அஃதுஅன்றே,* 
    வண்துழாம் சீரார்க்கு மாண்பு? 


    மாண்பாவித்து அஞ்ஞான்று*  மண்இரந்தான்,*  மாயவள்நஞ்சு- 
    ஊண்பாவித்து உண்டான்*  அது ஓர்உருவம்,*  -காண்பான்நம்-

    கண்அவா*  மற்றுஒன்று காண்உறா,*  சீர்பரவாது- 
    உண்ணவாய் தான்உறுமோ ஒன்று?  


    ஒன்றுஉண்டு செங்கண்மால்!*  யான்உரைப்பது,*  உன்அடியார்க்கு- 
    என்செய்வன் என்றே இருத்திநீ,*  -நின்புகழில்-

    வைகும்*  தம் சிந்தையிலும் மற்றுஇனிதோ,*  நீஅவர்க்கு- 
    வைகுந்தம் என்றுஅருளும் வான்?     


    வானோ மறிகடலோ*  மாருதமோ தீயகமோ,* 
    கானோ ஒருங்கிற்று கண்டிலமால்,*  ஆன்ஈன்ற-

    கன்றுஉயர தாம்எறிந்து*  காய்உதிர்த்தார் தாள்பணிந்தோம்,* 
    வன்துயரை ஆஆ! மருங்கு.


    மருங்குஓதம் மோதும்*  மணி நாகணையார்,* 
    மருங்கே வரஅரியரேலும்,*  -ஒருங்கே-

    எமக்குஅவரைக் காணலாம்*  எப்பொழுதும் உள்ளால்,* 
    மனக்கவலை தீர்ப்பார் வரவு.


    வரவுஆறு ஒன்றுஇல்லையால்*  வாழ்வுஇனிதால்,*  எல்லே! 
    ஒருஆறு ஒருவன் புகாவாறு,*  -உருமாறும்-

    ஆயவர்தாம் சேயவர்தாம்*  அன்றுஉலகம் தாயவர்தாம்,* 
    மாயவர்தாம் காட்டும் வழி. 


    வழித்தங்கு வல்வினையை*  மாற்றானோ? நெஞ்சே,* 
    தழீஇக்கொண்டு போர்அவுணன் தன்னை,*  -சுழித்துஎங்கும்-

    தாழ்வுஇடங்கள் பற்றி*  புலால்வெள்ளம் தான்உகள,* 
    வாழ்வுஅடங்க மார்வுஇடந்த மால்?   


    மாலே! படிச்சோதி மாற்றேல்,*  இனிஉனத 
    பாலேபோல்*  சீரில் பழுத்தொழிந்தேன்,*  -மேலால்-

    பிறப்புஇன்மை பெற்று*  அடிக்கீழ்க் குற்றேவல் அன்று,* 
    மறப்புஇன்மை யான்வேண்டும் மாடு?


    மாடே வரப்பெறுவராம் என்றே,*  வல்வினையார் 
    காடானும் ஆதானும் கைக்கொள்ளார்,*  -ஊடேபோய்ப்-

    பேர்ஓதம் சிந்து*  திரைக் கண்வளரும்,*  பேராளன்- 
    பேர்ஓத சிந்திக்க பேர்ந்து.


    பேர்ந்துஒன்று நோக்காது*  பின்நிற்பாய் நில்லாப்பாய்* 
    ஈர்ந்துழாய் மாயனையே என்நெஞ்சே,*  -பேர்ந்துஎங்கும்-

    தொல்லைமா வெம்நரகில்*  சேராமல் காப்பதற்கு* 
    இல்லைகாண் மற்றோர் இறை.


    இறைமுறையான் சேவடிமேல்*  மண்அளந்த அந்நாள்,* 
    மறைமுறையால் வான்நாடர் கூடி,*  -முறைமுறையின்-

    தாதுஇலகு*  பூத்தெளித்தால் ஒவ்வாதே,*  தாழ்விசும்பின்- 
    மீதுஇலகித் தான்கிடக்கும் மீன்.


    மீன்என்னும் கம்பில்*  வெறிஎன்னும் வெள்ளிவேய்* 
    வான்என்னும் கேடுஇலா வான்குடைக்குத்,*  -தான்ஓர்-

    மணிக்காம்பு போல்*  நிமிர்ந்து மண்அளந்தான்,*  நங்கள்- 
    பிணிக்குஆம் பெருமருந்து பின்.


    பின்துரக்கும் காற்றுஇழந்த*  சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,* 
    வன்திரைக்கண் வந்துஅணைந்த வாய்மைத்தே,*   -அன்று-

    திருச்செய்ய நேமியான்*  தீஅரக்கி மூக்கும்,* 
    பருச்செவியும் ஈர்ந்த பரன்.


    பரன்ஆம் அவன்ஆதல்*  பாவிப்பர் ஆகில்,* 
    உரனால் ஒருமூன்று போதும்,*  -மரம்ஏழ்அன்று-

    எய்தானை*  புள்ளின்வாய் கீண்டானையே,*  அமரர்- 
    கைதான் தொழாவே கலந்து? 


    கலந்து நலியும்*  கடுந்துயரை நெஞ்சே,* 
    மலங்க அடித்து மடிப்பான்,*  -விலங்கல்போல்-

    தொல்மாலை கேசவனை*  நாரணனை மாதவனை,* 
    சொல்மாலை எப்பொழுதும் சூட்டு.


    சூட்டாய நேமியான்*  தொல்அரக்கன் இன்உயிரை,* 
    மாட்டே துயர்இழைத்த மாயவனை,*  -ஈட்ட-

    வெறிகொண்ட*  தண்துழாய் வேதியனை,*  நெஞ்சே!- 
    அறிகண்டாய் சொன்னேன் அது.  


    அதுவோ நன்றுஎன்று*  அங்கு அமர்உலகோ வேண்டில்,* 
    அதுவோ பொருள்இல்லை அன்றே?,*  -அதுஒழிந்து-

    மண் நின்று*  ஆள்வேன் எனிலும் கூடும் மடநெஞ்சே,* 
    கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.


    கல்லும் கனைகடலும்*  வைகுந்த வான்நாடும்,* 
    புல்என்று ஒழிந்தனகொல்? ஏபாவம்,*  -வெல்ல-

    நெடியான் நிறம்கரியான்*  உள்புகுந்து நீங்கான்,* 
    அடியேனது உள்ளத்து அகம். 


    அகம்சிவந்த கண்ணினர்ஆய்*  வல்வினையர் ஆவார்,* 
    முகம்சிதைவராம் அன்றே முக்கி,*  -மிகும்திருமால்-

    சீர்க்கடலை உள்பொதிந்த*  சிந்தனையேன் தன்னை,* 
    ஆர்க்குஅடல்ஆம் செவ்வே அடர்த்து?


    அடர்பொன் முடியானை*  ஆயிரம் பேரானை 
    சுடர்கொள் சுடர்ஆழி யானை,*  -இடர்கடியும்-

    மாதா பிதாவாக*  வைத்தேன் எனதுஉள்ளே* 
    யாதுஆகில் யாதே இனி?


    இனிநின்று நின்பெருமை*  யான்உரைப்பது என்னே,* 
    தனிநின்ற சார்வுஇலா மூர்த்தி,*  -பனிநீர்-

    அகத்துஉலவு*  செஞ்சடையான் ஆகத்தான்,*  நான்கு- 
    முகத்தான் நின்உந்தி முதல்.  


    முதல்ஆம் திருஉருவம் மூன்றுஅன்பர்,*  ஒன்றே- 
    முதல்ஆகும்*  மூன்றுக்கும் என்பர்*- முதல்வா,-

    நிகர்இலகு கார்உருவா!*  நின்அகத்தது அன்றே,* 
    புகர்இலகு தாமரையின் பூ? 


    பூவையும் காயாவும்*  நீலமும் பூக்கின்ற,* 
    காவி மலர்என்றும் காண்தோறும்,*  -பாவியேன்-

    மெல்ஆவி*  மெய்மிகவே பூரிக்கும்,*  அவ்வவை- 
    எல்லாம் பிரான்உருவே என்று.


    என்றும் ஒருநாள்*  ஒழியாமை யான்இரந்தால்,* 
    ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,*-குன்று-

    குடைஆக*  ஆகாத்த கோவலனார்,*  நெஞ்சே!- 
    புடைதான் பெரிதே புவி.  


    புவியும் இருவிசும்பும் நின்அகத்த,*  நீஎன்- 
    செவியின் வழிபுகுந்து*  என்உள்ளாய்,*-அவிவுஇன்றி-

    யான்பெரியன் நீபெரியை*  என்பதனை யார்அறிவார்,* 
    ஊன்பருகு நேமியாய்! உள்ளு.


    உள்ளிலும் உள்ளம் தடிக்கும்*  வினைப்படலம்,* 
    விள்ள விழித்துஉன்னை மெய்உற்றால்,*  -உள்ள-

    உலகுஅளவும் யானும்*  உளன்ஆவன் என்கொல்* 
    உலகுஅளந்த மூர்த்தி! உரை. 


    உரைக்கில்ஓர் சுற்றத்தார்*  உற்றார் என்றுஆரே? 
    இரைக்கும் கடல்கிடந்த எந்தாய்,*  -உரைப்புஎல்லாம்-

    நின்அன்றி*  மற்றுஇலேன் கண்டாய்,*  எனதுஉயிர்க்குஓர்- 
    சொல்நன்றி ஆகும் துணை.


    துணைநாள் பெருங்கிளையும்*  தொல்குலமும்,*  சுற்றத்து- 
    இணைநாளும் இன்புஉடைத்தா மேலும்,*  கணைநாணில்-

    ஓவாத் தொழில்சார்ங்கன்*  தொல்சீரை நல்நெஞ்சே,* 
    ஓவாத ஊணாக உண். 


    உள்நாட்டுத் தேசுஅன்றே!*  ஊழ்வினையை அஞ்சுமே,* 
    விண்நாட்டை ஒன்றுஆக மெச்சுமே,*-மண்நாட்டில்-

    ஆர்ஆகி*  எவ்இழிவிற்று ஆனாலும்,*  ஆழிஅங்கைப்- 
    பேர்ஆயற்கு ஆள்ஆம் பிறப்பு?


    பிறப்பு இறப்பு மூப்புப்*  பிணிதுறந்து,*  பின்னும்- 
    இறக்கவும் இன்புஉடைத்தா மேலும்,*-மறப்புஎல்லாம்-

    ஏதமே*  என்றுஅல்லால் எண்ணுவனே,*  மண்அளந்தான்- 
    பாதமே ஏத்தாப் பகல்? 


    பகல்இரா என்பதுவும்*  பாவியாது,*  எம்மை- 
    இகல்செய்து இருபொழுதும் ஆள்வர்,*-தகவாத்-

    தொழும்பர் இவர்  சீர்க்கும்*  துணைஇலர் என்றுஓரார்,* 
    செழும்பரவை மேயார் தெரிந்து.


    தெரிந்துணர்வு ஒன்றுஇன்மையால்*  தீவினையேன்,*  வாளா- 
    இருந்தொழிந்தேன்*  கீழ்நாள்கள் எல்லாம்,*-கரந்துருவின்-

    அம்மானை*  அந்நான்று பின்தொடர்ந்த*  ஆழிஅங்கை- 
    அம்மானை ஏத்தாது அயர்த்து.


    அயர்ப்பாய் அயராப்பாய்*  நெஞ்சமே! சொன்னேன்* 
    உயப்போம் நெறிஇதுவே கண்டாய்,*-செயற்பால-

    அல்லவே செய்கிறுதி*  நெஞ்சமே! அஞ்சினேன்* 
    மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.


    வாழ்த்தி அவன்அடியைப்*  பூப்புனைந்து,*  நின்தலையைத்- 
    தாழ்த்து*  இருகை கூப்புஎன்றால் கூப்பாத பாழ்த்தவிதி*

    எங்குஉற்றாய் என்றுஅவனை*  ஏத்தாதுஎன் நெஞ்சமே,* 
    தங்கத்தான்ஆ மேலும் தங்கு.


    தங்கா முயற்றியஆய்*  தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,* 
    எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல்,*-பொங்குஓதத்-

    தண்அம்பால்*  வேலைவாய்க் கண்வளரும்,*  என்னுடைய- 
    கண்ணன்பால் நல்நிறம்கொள் கார்?  


    கார்கலந்த மேனியான்*  கைகலந்த ஆழியான்,* 
    பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-

    சொல்நினைந்து போக்காரேல்*  சூழ்வினையின் ஆழ்துயரை,* 
    என்நினைந்து போக்குவர் இப்போது?   (2) 


    இப்போதும் இன்னும்*  இனிச்சிறிது நின்றாலும்* 
    எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே*-எப்போதும்-

    கைகழலா நேமியான்*  நம்மேல் வினைகடிவான்* 
    மொய்கழலே ஏத்த முயல் (2)