பிரபந்த தனியன்கள்

நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து

   பாசுரங்கள்


    நான்முகனை*  நாராயணன் படைத்தான்* 
    நான்முகனும் தான்முகமாய்ச்*  சங்கரனைத் தான்படைத்தான்*

    யான்முகமாய் அந்தாதி மேலிட்டு*  அறிவித்தேன் ஆழ்பொருளை* 
    சிந்தாமல் கொள்மின்நீர் தேர்ந்து   (2)


    தேருங்கால் தேவன்*  ஒருவனே என்றுஉரைப்பர்*  
    ஆரும்அறியார் அவன்பெருமை*

    ஓரும் பொருள்முடிவும் இத்தனையே*  எத்தவம் செய்தார்க்கும்* 
    அருள்முடிவது ஆழியான் பால்   


    பாலில் கிடந்ததுவும்*  பண்டுஅரங்கம் மேயதுவும்* 
    ஆலில் துயின்றதுவும் ஆர்அறிவார்*

    ஞாலத்து ஒருபொருளை*  வானவர்தம் மெய்ப்பொருளை* 
    அப்பில் அருபொருளை யான்அறிந்தஆறு?


    ஆறு சடைக்கரந்தான்*  அண்டர்கோன் தன்னோடும்* 
    கூறுஉடையன் என்பதுவும்*  கொள்கைத்தே*  வேறுஒருவர்

    இல்லாமை*  நின்றானை எம்மானை*  எப்பொருட்கும் 
    சொல்லானைச் சொன்னேன்*  தொகுத்து. 


    தொகுத்த வரத்தனாய்த்*  தோலாதான் மார்வம்* 
    வகிர்த்தவளை உகிர்தோள் மாலே*  உகத்தில்

    ஒருநான்று நீஉயர்த்தி*  உள்வாங்கி நீயே* 
    அருநான்கும் ஆனாய் அறி.


    அறியார் சமணர்*  அயர்த்தார் பவுத்தர்* 
    சிறியார் சிவப்பட்டார்செப்பில்* 

    வெறியாய மாயவனை மாலவனை*  மாதவனை ஏத்தாதார்* 
    ஈனவரே ஆதலால் இன்று. 


    இன்றுஆக*  நாளையேஆக*  இனிச்சிறிது 
    நின்றுஆக*  நின்அருள் என் பாலதே*  நன்றாக

    நான் உன்னைஅன்றி*  இலேன்கண்டாய்*  நாரணனே 
    நீஎன்னை அன்றிஇலை.      


    இலைதுணை மற்றுஎன்நெஞ்சே*  ஈசனை வென்ற* 
    சிலைகொண்ட செங்கண்மால் சேரா*  குலைகொண்ட

    ஈர்ஐந்தலையான்*  இலங்கையை ஈடுஅழித்த* 
    கூர்அம்பன் அல்லால் குறை.


    குறைகொண்டு நான்முகன்*  குண்டிகைநீர் பெய்து*  
    மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி*  கறைகொண்ட

    கண்டத்தான்*  சென்னிமேல் ஏறக் கழுவினான்*  
    அண்டத்தான் சேவடியை ஆங்கு. 


    ஆங்குஆரவாரம் அதுகேட்டு*  அழல்உமிழும் 
    பூங்கார் அரவுஅணையான் பொன்மேனி*  யாம்காண

    வல்லமே அல்லமே?*  மாமலரான் வார்சடையான்* 
    வல்லரே அல்லரே? வாழ்த்து


    வாழ்த்துக வாய்*  காண்க கண் கேட்க செவி*  மகுடம் 
    தாழ்த்தி வணங்குமின்கள்*  தண்மலரால்*  சூழ்த்த

    துழாய் மன்னுநீள்முடி*  என் தொல்லைமால் தன்னை*
    வழாவண்கை கூப்பி மதித்து.


    மதித்தாய்போய் நான்கில்*  மதியார்போய் வீழ* 
    மதித்தாய் மதிகோள் விடுத்தாய்*  மதித்தாய்

    மடுக்கிடந்த*  மாமுதலை கோள்விடுப்பான்*  ஆழி 
    விடற்குஇரண்டும் போய் இரண்டின் வீடு.


    வீடுஆக்கும்*  பெயாதுற்றிஅறி*  மெய்வருத்திக் 
    கூடுஆக்கி*  நின்றுஉண்டு கொன்றுஉழல்வீர்*  வீடுஆக்கும்

    மெய்ப்பொருள்தான்*  வேத முதற்பொருள்தான்*  விண்ணவர்க்கு 
    நற்பொருள்தான்*  நாராயணன.


    நாராயணன்*  என்னைஆளி*  நரகத்துச் 
    சேராமல்*  காக்கும் திருமால்*  தன்பேரான

    பேசப்பெறாத*  பிணச்சமயர் பேசக்கேட்டு* 
    ஆசைப்பட்டு ஆழ்வார் பலர.


    பலதேவர்ஏத்த*  படிகடந்தான் பாதம்*  
    மலர்ஏற இட்டுஇறைஞ்சி*  வாழ்த்த வலர்ஆகில்*

    மார்க்கண்டன் கண்ட வகையே*  வரும்கண்டீர்* 
    நீர்க்கண்டன் கண்ட நிலை.


    நிலைமன்னும் என்நெஞ்சம்*  அந்நான்று*  தேவர் 
    தலைமன்னர்*  தாமே மாற்றாக*  பலமன்னர்

    போர்மாள*  வெம்கதிரோன் மாய பொழில்மறைய* 
    தேர்ஆழியால் மறைத்தாரால். 


    ஆலநிழற்கீழ்*  அறநெறியை*  நால்வர்க்கு 
    மேலையுகத்துஉரைத்தான்*  மெய்த்தவத்தோன்*  ஞாலம்

    அளந்தானை*  ஆழிக் கிடந்தானை*  ஆல்மேல் 
    வளர்ந்தானைத்*  தான்வணங்குமாறு. 


    மாறுஆய தானவனை*  வள்உகிரால்*  மார்வுஇரண்டு 
    கூறாகக்*  கீறிய கோளரியை*  வேறாக

    ஏத்தியிருப்பாரை*  வெல்லுமே*  மற்றுஅவரைச் 
    சாத்தி இருப்பார் தவம்.    


    தவம்செய்து*  நான்முகனால் பெற்ற வரத்தை* 
    அவம்செய்த*  ஆழியாய்அன்றே*  உவந்துஎம்மைக்

    காப்பாய்நீ*  காப்பதனை ஆவாய்நீ*  வைகுந்தம் 
    ஈப்பாயும்*  எவ்உயிர்க்கும் நீ.


    நீயே உலகும்எல்லாம்*  நின்அருளே நிற்பனவும்* 
    நீயே*  தவத்தேவ தேவனும்*  நீயே

    எரிசுடரும் மால்வரையும்*  எண்திசையும்*  அண்டத்து 
    இருசுடரும்ஆய இவை   


    இவையா! பிலவாய்*  திறந்துஎரி கான்ற* 
    இவையா!*  எரிவட்டக் கண்கள்*  இவையா

    எரிபொங்கிக் காட்டும்*  இமையோர் பெருமான்* 
    அரிபொங்கிக் காட்டும் அழகு?   


    அழகியான் தானே*  அரிஉருவன் தானே* 
    பழகியான்*  தாளே பணிமின்*  குழவியாய்த்

    தான் ஏழ்உலகுக்கும்*  தன்மைக்கும் தன்மையனே* 
    மீன்ஆய் உயிர்அளிக்கும் வித்து. 


    வித்தும்இட வேண்டும் கொல்லோ*  விடைஅடர்த்த* 
    பத்தி உழவன்*  பழம்புனத்து*  மொய்த்துஎழுந்த

    கார்மேகம்அன்ன*  கருமால் திருமேனி* 
    நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 


    நிகழ்ந்தாய் பால்பொன்பசுப்புக்*  கார்வண்ணம் நான்கும்* 
    இகழ்ந்தாய்*  இருவரையும் வீய- புகழ்ந்தாய்*

    சினப்போர்ச்சு வேதனைச்*  சேனாபதியாய்* 
    மனப்போர் முடிக்கும் வகை.


    வகையால் மதியாது*  மண்கொண்டாய்*  மற்றும் 
    வகையால்*  வருவதுஒன்றுஉண்டே*  வகையால்

    வயிரம் குழைத்துஉண்ணும்*  மாவலிதான் என்னும்* 
    வயிர வழக்குஒழித்தாய் மற்று.


    மற்றுத் தொழுவார்*  ஒருவரையும் யான்இன்மை* 
    கற்றைச் சடையான்*  கரிகண்டாய்*  எற்றைக்கும்

    கண்டுகொள் கண்டாய்*  கடல்வண்ணா*  யான் உன்னைக் 
    கண்டு கொளகிற்குமாறு.  


    மால்தான்*  புகுந்த மடநெஞ்சம் மற்றதுவும்* 
    பேறாகக்*  கொள்வனோ பேதைகாள்*  நீறாடி

    தான்காண மாட்டாத*  தார்அகலச் சேவடியை* 
    யான்காண வல்லேற்கு இது.  


    இதுஇலங்கை ஈடுஅழியக்*  கட்டிய சேது* 
    இதுவிலங்கு வாலியை வீழ்த்தது*  இதுஇலங்கை

    தான்ஒடுங்க வில்நுடங்க*  தண் தார்இராவணனை* 
    ஊன்ஒடுங்க எய்தான் உகப்பு.


    உகப்புஉருவன் தானே*  ஒளிஉருவன் தானே* 
    மகப்புஉருவன் தானே*  மதிக்கில்*  மிகப்புருவம்

    ஒன்றுக்குஒன்று*  ஓசனையான் வீழ*  ஒருகணையால் 
    அன்றிக்கொண்டு எய்தான் அவன்.  


    அவன் என்னைஆளி*  அரங்கத்து அரங்கில்* 
    அவன்என்னை எய்தாமல் காப்பான்*  அவன்என்னது

    உள்ளத்து*  நின்றான் இருந்தான் கிடக்குமே* 
    வெள்ளத்து அரவுஅணையின் மேல்.   


    மேல் நான்முகன்*  அரனைஇட்ட விடுசாபம்* 
    தான் நாரணன் ஒழித்தான்*  தாரகையுள்*  வானோர்

    பெருமானை*  ஏத்தாத பேய்காள்*  பிறக்கும் 
    கருமாயம் பேசில் கதை.


    கதைப்பொருள்தான்*  கண்ணன் திருவயிற்றின் உள்ள* 
    உதைப்பளவு போதுபோக்கு இன்றி*  வதைப் பொருள்தான்

    வாய்ந்த குணத்துப்*  படாதது அடைமினோ* 
    ஆய்ந்த குணத்தான் அடி.   


    அடிச்சகடம் சாடி*  அரவுஆட்டி*  யானை 
    பிடித்துஒசித்து*  பேய்முலை நஞ்சுஉண்டு*  வடிப்பவள

    வாய்ப்பின்னை தோளிக்கா*  வல்ஏற்று எருத்துஇறுத்து* 
    கோபின்னும் ஆனான் குறிப்பு.


    குறிப்பு எனக்குக்*  கோட்டியூர் மேயானைஏத்த* 
    குறிப்பு எனக்கு நன்மை பயக்க*  வெறுப்பனோ

    வேங்கடத்து மேயானை*  மெய்வினைநோய் எய்தாமல்* 
    தான்கடத்தும் தன்மையான் தாள். 


    தாளால் உலகம்*  அளந்த அசைவேகொல்*
    வாளாகிடந்தருளும்*  வாய்திறவான்*  நீள்ஓதம்

    வந்துஅலைக்கும் மாமயிலை*  மாஅல்லிக்கேணியான்* 
    ஐந்தலைவாய் நாகத்துஅணை? (2)


    நாகத்துஅணைக் குடந்தை*  வெஃகா திருஎவ்வுள்* 
    நாகத்துஅணை அரங்கம் பேர்அன்பில்*  நாகத்து

    அணைப் பாற்கடல் கிடக்கும்*  ஆதி நெடுமால்* 
    அணைப்பார் கருத்தன் ஆவான்.  (2)


    வான்உலவு தீவளி*  மாகடல் மாபொருப்பு* 
    தான்உலவு வெம்கதிரும்*  தண்மதியும்*  மேல்நிலவு 

    கொண்டல் பெயரும்*  திசைஎட்டும் சூழ்ச்சியும்* 
    அண்டம் திருமால் அகைப்பு.  


    அகைப்புஇல் மனிசரை*  ஆறு சமயம் 
    புகைத்தான்*  பொருகடல்நீர் வண்ணன்*  உகைக்குமேல்

    எத்தேவர் வாலாட்டும்*  எவ்வாறு செய்கையும்* 
    அப்போது ஒழியும் அழைப்பு.     


    அழைப்பன்*  திருவேங்கடத்தானைக் காண* 
    இழைப்பன்*  திருக்கூடல் கூட*  மழைப்பேர்

    அருவி*  மணிவரன்றி வந்துஇழிய* யானை 
    வெருவி அரவுஒடுங்கும் வெற்பு. 


    வெற்புஎன்று*  வேங்கடம் பாடினேன்*  வீடுஆக்கி 
    நிற்கின்றேன்*  நின்று நினைக்கின்றேன்*  கற்கின்ற

    நூல்வலையில் பட்டிருந்த*  நூலாட்டி கேள்வனார்* 
    கால்வலையில் பட்டிருந்தேன் காண்.  


    காணல்உறுகின்றேன்*  கல்அருவி முத்து உதிர* 
    ஓண விழவில் ஒலிஅதிர*  பேணி

    வருவேங்கடவா!* என்உள்ளம் புகுந்தாய்* 
    திருவேங்கடம் அதனைச் சென்று.  


    சென்று வணங்குமினோ*  சேண்உயர் வேங்கடத்தை* 
    நின்று வினைகெடுக்கும் நீர்மையால்*  என்றும்

    கடிக்கமல நான்முகனும்*  கண் மூன்றத்தானும்* 
    அடிக்கமலம் இட்டுஏத்தும் அங்கு.


    மங்குல்தோய் சென்னி*  வடவேங்கடத்தானை* 
    கங்குல் புகுந்தார்கள்*  காப்புஅணிவான்*  திங்கள்

    சடைஏற வைத்தானும்*  தாமரை மேலானும்* 
    குடைஏற தாம்குவித்துக் கொண்டு.


    கொண்டு குடங்கால்*  மேல்வைத்த குழவியாய்* 
    தண்ட அரக்கன் தலை*  தாளால் பண்டுஎண்ணிப்*

    போம்குமரன் நிற்கும்*  பொழில்வேங்கட மலைக்கே* 
    போம் குமரருள்ளீர்! புரிந்து.  


    புரிந்து மலர்இட்டுப்*  புண்டரிகப் பாதம்* 
    பரிந்து படுகாடு நிற்ப*  தெரிந்துஎங்கும்

    தான்ஓங்கி நிற்கின்றான்*  தண்அருவி வேங்கடமே* 
    வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.    


    வைப்பன் மணிவிளக்கா*  மாமதியை*  மாலுக்குஎன்று 
    எப்பொழுதும்*  கைநீட்டும் யானையை*  எப்பாடும்

    வேடுவளைக்கக்*  குறவர் வில்எடுக்கும் வேங்கடமே* 
    நாடுவளைத்து ஆடுதுமேல் நன்று.


    நன்மணி வண்ணன்ஊர்*  ஆளியும் கோளரியும்* 
    பொன்மணியும்*  முத்தமும் பூமரமும்*  பன்மணி நீ

    ரோடு பொருதுஉருளும்*  கானமும் வானரமும்* 
    வேடும்உடை வேங்கடம். 


    வேங்கடமே*  விண்ணோர் தொழுவதுவும்*  மெய்ம்மையால் 
    வேங்கடமே*  மெய்வினைநோய் தீர்ப்பதுவும்*  வேங்கடமே

    தானவரை வீழத்*  தன்ஆழிப் படைதொட்டு* 
    வானவரைக் காப்பான் மலை.   


    மலைஆமை மேல்வைத்து*  வாசுகியைச் சுற்றி* 
    தலைஆமை தான்ஒருகை பற்றி*  அலையாமல்

    பீறக்கடைந்த*  பெருமான் திருநாமம்* 
    கூறுவதே யாவர்க்கும் கூற்று.


    கூற்றமும் சாரா*  கொடுவினையும் சாரா*  தீ 
    மாற்றமும்*  சாரா வகைஅறிந்தேன்*  ஆற்றங்

    கரைக் கிடக்கும்*  கண்ணன் கடல்கிடக்கும்*  மாயன் 
    உரைக்கிடக்கும்*  உள்ளத்து எனக்கு.


    எனக்குஆவார்*  ஆர்ஒருவரே*  எம்பெருமான் 
    தனக்குஆவான்*  தானே மற்று அல்லால்*  புனக்காயா

    வண்ணனே உன்னைப் பிறர் அறியார்*  என்மதிக்கு* 
    விண்எல்லாம் உண்டோ விலை?   


    விலைக்கு ஆட்படுவர்*  விசாதிஏற்றுஉண்பர்* 
    தலைக்குஆட்பலி திரிவர் தக்கோர்*  முலைக்கால்

    விடம்உண்ட வேந்தனையே*  வேறாஏத்தாதார்* 
    கடம் உண்டார் கல்லாதவர். 


    கல்லாதவர்*  இலங்கை கட்டழித்த*  காகுத்தன் 
    அல்லால்*  ஒருதெய்வம் யான்இலேன்*  பொல்லாத

    தேவரை*  தேவர் அல்லாரை*  திருஇல்லாத் 
    தேவரைத்*  தேறேல்மின் தேவு. 


    தேவராய் நிற்கும் அத்தேவும்*  அத்தேவரில் 
    மூவராய் நிற்கும்*  முதுபுணர்ப்பும்*  யாவராய்

    நிற்கின்றது எல்லாம்*  நெடுமால் என்றுஓராதார்* 
    கற்கின்றது எல்லாம் கடை.


    கடை நின்று அமரர்*  கழல் தொழுது*  நாளும் 
    இடை நின்ற இன்பத்தர் ஆவர்*  புடைநின்ற

    நீர்ஓத மேனி*  நெடுமாலே*  நின் அடியை 
    யார்ஓத*  வல்லார் அவர்? 


    அவர் இவர் என்று இல்லை*  அனங்கவேள் தாதைக்கு* 
    எவரும் எதிர் இல்லை கண்டீர்*  உவரிக்

    கடல் நஞ்சம் உண்டான்*  கடன் என்று*  வாணற்கு 
    உடன் நின்று தோற்றான் ஒருங்கு.


    ஒருங்குஇருந்த நல்வினையும்*  தீவினையும் ஆவான்* 
    பெரும்குருந்தம் சாய்த்தவனே பேசில்*  மருங்குஇருந்த 

    வானவர்தாம் தானவர்தாம்*  தாரகைதான்*  என் நெஞ்சம் 
    ஆனவர்தாம்*  அல்லாதது என்?  


    என் நெஞ்சம் மேயான்*  இருள் நீக்கி எம்பிரான்*  
    மன்அஞ்ச முன்ஒரு நாள்*  மண் அளந்தான்*  என்நெஞ்சம்

    மேயானை*  இல்லா விடை ஏற்றான்*  வெவ்வினை தீர்த்து 
    ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு.  


    அன்புஆவாய்*  ஆர்அமுதம் ஆவாய்*  அடியேனுக்கு 
    இன்புஆவாய்*  எல்லாமும் நீஆவாய்*  பொன்பாவை

    கேள்வா*  கிளர்ஒளிஎன் கேசவனே*  கேடுஇன்றி 
    ஆள்வாய்க்கு*  அடியேன்நான் ஆள்.   


    ஆள்பார்த்து உழிதருவாய்*  கண்டுகொள் என்றும்*  நின் 
    தாள் பார்த்து உழிதருவேன்*  தன்மையை*  கேட்பார்க்கு

    அரும்பொருளாய் நின்ற*  அரங்கனே*  உன்னை 
    விரும்புவதே*  விள்ளேன் மனம்.  


    மனக்கேதம் சாரா*  மதுசூதன் தன்னைத்* 
    தனக்கேதான்*  தஞ்சமாக் கொள்ளில்*  எனக்கேதான்

    இன்றுஒன்றி நின்று உலகைஏழ்*  ஆணை ஓட்டினான்* 
    சென்று ஒன்றி நின்ற திரு.   


    திருநின்ற பக்கம்*  திறவிது என்றுஓரார்* 
    கருநின்ற கல்லார்க்கு உரைப்பர்*  திருஇருந்த

    மார்பில்*  சிரீதரன்தன் வண்டுஉலவு தண்துழாய்த்* 
    தார்தன்னைச் சூடித் தரித்து.


    தரித்திருந்தேன் ஆகவே*  தாரா கணப்போர் 
    விரித்துஉரைத்த*  வெம்நாகத்துஉன்னைத்*  தெரித்துஎழுதி 

    வாசித்தும் கேட்டும்*  வணங்கி வழிபட்டும்* 
    பூசித்தும் போக்கினேன் போது. 


    போதான இட்டுஇறைஞ்சி ஏத்துமினோ*  பொன்மகரக் 
    காதானை*  ஆதிப் பெருமானை*  நாதானை

    நல்லானை நாரணனை*  நம்ஏழ் பிறப்புஅறுக்கும் 
    சொல்லானை*  சொல்லுவதே சூது.


    சூதுஆவது*  என்நெஞ்சத்து எண்ணினேன்*  சொல்மாலை 
    மாதுஆய*  மாலவனை மாதவனை*  யாதானும்

    வல்லவா*  சிந்தித்து இருப்பேற்கு*  வைகுந்தத்து 
    இல்லையோ*  சொல்லீர் இடம்?


    இடம்ஆவது*  என்நெஞ்சம் இன்றெல்லாம்*  பண்டு 
    படநாகணை*  நெடியமாற்கு*  திடமாக

    வையேன்*  மதிசூடி தன்னோடு*  அயனைநான் 
    வையேன்*  ஆட்செய்யேன் வலம்.


    வலம்ஆக*  மாட்டாமை தான்ஆக*  வைகல் 
    குலம்ஆக*  குற்றம்தான்ஆக*  நலம்ஆக

    நாரணனை நாபதியை*  ஞானப் பெருமானை* 
    சீரணனை ஏத்தும் திறம்.


    திறம்பேல்மின் கண்டீர்*  திருவடிதன் நாமம்* 
    மறந்தும் புரம்தொழா மாந்தர்*  இறைஞ்சியும்

    சாதுவராய்ப்*  போதுமின்கள் என்றான்*  நமனும்தன் 
    தூதுவரைக் கூவிச் செவிக்கு.


    செவிக்கு இன்பம் ஆவதுவும்*  செங்கண்மால் நாமம்* 
    புவிக்கும் புவிஅதுவே கண்டீர்*  கவிக்கு

    நிறை பொருளாய் நின்றானை*  நேர்பட்டேன்*  பார்க்கில் 
    மறைப்பொருளும்*  அத்தனையே தான்  


    தான் ஒருவன்ஆகி*  தரணி இடந்துஎடுத்து* 
    ஏன் ஒருவனாய்*  எயிற்றில் தாங்கியதும்*  யான் ஒருவன்

    இன்றா*  அறிகின்றேன் அல்லேன்*  இருநிலத்தைச்* 
    சென்றுஆங்கு அடிப்படுத்த சேய். 


    சேயன் அணியன்*  சிறியன் மிகப்பெரியன்* 
    ஆயன் துவரைக்கோனாய்*  நின்ற மாயன்*  அன்று

    ஓதிய*  வாக்குஅதனைக் கல்லார்*  உலகத்தில் 
    ஏதிலர்ஆம்*  மெய்ஞ்ஞானம் இல்.  


    'இல்லறம் அல்லேல்*  துறவறம்இல்' என்னும்* 
    சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல*  நல்லறம்

    ஆவனவும்*  நால்வேத மாத்தவமும்*  நாரணனே 
    ஆவது ஈதுஅன்று என்பார்ஆர்?   


    ஆரே அறிவார்8  அனைத்து உலகும் உண்டுஉமிழ்ந்த* 
    பேர்ஆழியான் தன் பெருமையை*  கார்செறிந்த

    கண்டத்தான்*  எண்கண்ணான் காணான்*  அவன் வைத்த 
    பண்டைத் தானத்தின் பதி. 


    பதிப்பகைஞற்கு ஆற்றாது*  பாய்திரை நீர்ப் பாழி* 
    மதித்துஅடைந்த வாள்அரவம் தன்னை*  மதித்துஅவன்தன்

    வல்ஆகத்து ஏற்றிய*  மாமேனி மாயவனை* 
    அல்லாது ஒன்று ஏத்தாது என் நா.


    நாக்கொண்டு*  மானிடம் பாடேன்*  நலம்ஆக 
    தீக்கொண்ட*  செஞ்சடையான் சென்று*  என்றும் பூக்கொண்டு

    வல்லவாறு*  ஏத்த மகிழாத*  வைகுந்தச் 
    செல்வனார்*  சேவடிமேல் பாட்டு. 


    பாட்டும் முறையும்*  படுகதையும் பல்பொருளும்* 
    ஈட்டிய தீயும் இருவிசும்பும்*  கேட்ட

    மனுவும்*  சுருதி மறை நான்கும்*  மாயன் 
    தனமாயையில் பட்டதற்பு.


    தற்புஎன்னைத்*  தான் அறியானேலும்*  தடங்கடலைக் 
    கல்கொண்டு*  தூர்த்த கடல்வண்ணன்*  என்கொண்ட

    வெவ்வினையும் நீங்க*  விலங்கா மனம் வைத்தான்* 
    எவ்வினையும் மாயுமால் கண்டு.


    கண்டு வணங்கினார்க்கு*  என்னாம்கொல்*  காமன் உடல் 
    கொண்ட*  தவத்தாற்கு உமைஉணர்த்த*  வண்டுஅலம்பும்

    தார்அலங்கல் நீள்முடியான்*  தன் பெயரே கேட்டிருந்து*  அங்கு 
    ஆர்அலங்கல் ஆனமையால் ஆய்ந்து. 


    ஆய்ந்துகொண்டு*  ஆதிப் பெருமானை*  அன்பினால் 
    வாய்ந்த*  மனத்து இருத்த வல்லார்கள்*  ஏய்ந்த தம்

    மெய்குந்தம்ஆக*  விரும்புவரே*  தாமும் தம் 
    வைகுந்தம் காண்பார் விரைந்து. 


    விரைந்துஅடைமின் மேல் ஒருநாள்*  வெள்ளம் பரக்க* 
    கரந்துஉலகம்*  காத்து அளித்த கண்ணன் பரந்துஉலகம்*

    பாடின ஆடின கேட்டு*  படுநரகம் 
    வீடின வாசற் கதவு.    


    கதவு மனம் என்றும்*  காணலாம் என்றும்* 
    குதையும் வினைஆவி தீர்ந்தேன்*  விதைஆக

    நல்தமிழை வித்தி*  என் உள்ளத்தை நீவிளைத்தாய்* 
    கற்றமொழி ஆகிக் கலந்து.


    கலந்தான் என் உள்ளத்து*  காமவேள் தாதை* 
    நலம்தானும்*  ஈதுஒப்பது உண்டே*  அலர்ந்தலர்கள்

    இட்டுஏத்தும்*  ஈசனும் நான்முகனும்*  என்றிவர்கள் 
    விட்டுஏத்த*  மாட்டாத வேந்து.  


    வேந்தர்ஆய் விண்ணவர்ஆய்*  விண்ஆகி தண்ணளிஆய்* 
    மாந்தர்ஆய் மாதுஆய்*  மற்று எல்லாம்ஆய்*  சார்ந்தவர்க்குத்

    தன்ஆற்றான் நேமியான்*  மால்வண்ணன் தான் கொடுக்கும்* 
    பின்னால்தான் செய்யும் பிதிர்.  


    பிதிரும் மனம் இலேன்*  பிஞ்ஞகன் தன்னோடு,* 
    எதிர்வன்; அவன் எனக்கு நேரான்*  அதிரும்

    கழற்கால மன்னனையே*  கண்ணனையே*  நாளும் 
    தொழக் காதல் பூண்டேன் தொழில். 


    தொழில் எனக்குத்*  தொல்லை மால்தன் நாமம் ஏத்த* 
    பொழுது எனக்கு மற்றுஅதுவே போதும்*  கழிசினத்த

    வல்லாளன்*  வானரக்கோன் வாலி மதன் அழித்த* 
    வில்லாளன் நெஞ்சத்து உளன்.   


    உளன்கண்டாய் நல்நெஞ்சே*  உத்தமன் என்றும் 
    உளன்கண்டாய்*  உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்*

    தன் ஒப்பான் தான்ஆய்*  உளன்காண் தமியேற்கும்* 
    என் ஒப்பார்க்கு ஈசன் இமை.


    இமயப் பெருமலை போல்*  இந்திரனார்க்கு இட்ட* 
    சமய விருந்துஉண்டுஆர் காப்பார்*  சமயங்கள்

    கண்டான் அவை காப்பான்*  கார்க்கண்டன் நான்முகனோடு* 
    உண்டான் உலகோடுஉயிர்.


    உயிர்கொண்டு உடல் ஒழிய*  ஓதும் போதுஓடி* 
    அயர்வுஎன்ற தீர்ப்பான்*  பேர் பாடி*  செயல்தீரச்

    சிந்தித்து*  வாழ்வாரே வாழ்வார்*  சிறுசமயப் 
    பந்தனையார் வாழ்வேல் பழுது.


    பழுதுஆகாது ஒன்று அறிந்தேன்*  பாற்கடலான் பாதம்* 
    வழுவா வகை நினைந்து*  வைகல் தொழுவாரைக்*

    கண்டு இறைஞ்சி வாழ்வார்*  கலந்த வினைகெடுத்து* 
    விண்திறந்து வீற்றி இருப்பார் மிக்கு. 


    வீற்றிருந்து*  விண்ஆள வேண்டுவார்*  வேங்கடத்தான் 
    பால்திருந்த*  வைத்தாரே பல்மலர்கள்*  மேல்திருந்தி

    வாழ்வார்*  வரும்மதி பார்த்து அன்பினராய்*  மற்றுஅவற்கே 
    தாழ்வாய் இருப்பார் தமர்* 


    தமர்ஆவார் யாவர்க்கும்*  தாமரை மேலாற்கும்* 
    அமரர்க்கும் ஆடுஅரவுஆர்த் தாற்கும்*  அமரர்கள்

    தாள் தாமரை*  மலர்கள் இட்டு இறைஞ்சி*  மால்வண்ணன் 
    தாள் தாமரை அடைவோம் என்று*.


    என்றும் மறந்து அறியேன்*  என் நெஞ்சத்தே வைத்து* 
    நின்றும் இருந்தும் நெடுமாலை*  என்றும்

    திருஇருந்த மார்பன்*  சிரீதரனுக்கு ஆளாய்* 
    கருஇருந்த நாள்முதலாக் காப்பு.


    காப்பு மறந்தறியேன்*  கண்ணனே என்று இருப்பன்* 
    ஆப்பு அங்குஒழியவும் பல்உயிர்க்கும்*  ஆக்கை

    கொடுத்து அளித்த*  கோனே குணப்பரனே*  உன்னை 
    விடத்துணியார்*  மெய்தெளிந்தார் தாம். 


    மெய்தெளிந்தார் என் செய்யார்*  வேறுஆனார் நீறுஆக* 
    கைதெளிந்து காட்டிக் களப்படுத்து*  பைதெளிந்த

    பாம்பின் அணையாய்*  அருளாய் அடியேற்கு* 
    வேம்பும் கறிஆகும்என்று. 


    ஏன்றேன் அடிமை*  இழிந்தேன் பிறப்பு இடும்பை* 
    ஆன்றேன் அமரர்க்கு அமராமை*  ஆன்றேன்

    கடன்நாடும் மண்நாடும்*  கைவிட்டு*  மேலை 
    இடம்நாடு காண இனி.  (2)


    இனி அறிந்தேன்*  ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்* 
    இனி அறிந்தேன்*  எம்பெருமான் உன்னை*  இனி அறிந்தேன்*

    காரணன்நீ கற்றவைநீ*  கற்பவைநீ*  நல்கிரிசை
    நாரணன்நீ*  நன்கு அறிந்தேன் நான்.  (2)