திருக் கடல் மல்லை

முன்பு காடாக இருந்த இப்பகுதியில் புண்டரீக மகரிஷி தவம் செய்து வந்தார். ஆயிரம் இதழ் கொண்ட அபூர்வ தாமரை மலர் ஒன்றைக் கண்ட மகரிஷி அதனை திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணருக்கு சமர்ப்பிக்க எண்ணினார். அன்பின் மிகுதியால் கடல் நீரை வற்ற இறைத்து விட்டால் திருப்பாற்கடலை அடைந்து தாமரை மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து விடலாம் என்று கருதினார். கடல் நீரை கைகளால் இறைத்து வற்றச் செய்ய முயன்றார். திருமாலும் ஒரு முதியவர் வடிவம் கொண்டு, முடியாத இக்காரியத்தைச் செய்ய முயலுகின்றீரே, பசித்திருக்கும் எனக்கு உணவளியுங்கள் என வினவ, பசித்தோருக்கு உணவிட வேண்டிய கடமையையும் தமது சீரிய காரியத்தில் ஏற்பட்டுள்ள தடையையும் கண்டு திகைத்தார் மகரிஷி. வந்த முதியவர், மகரிஷி சென்று உணவு கொணரும் வரை தாம் அவரது பணியை மேற்கொள்வதாக உறுதி கூறி மகரிஷியை உணவு கொண்டுவர அனுப்பினார். உணவுடன் மகரிஷி திரும்புவதற்குள் தாமரை மலர் சூடி தரையிலேயே சயன கோலத்தில் பள்ளிகொண்டார் திருமால். திரும்பி வந்து தரிசனம் பெற்ற முனிவர் ஆனந்தத்துடன் வழிபட்டு மகிழ்ந்தார். இத்தலத்தில் திருமால் ஆதிசேசனில் பள்ளிகொள்ளாமல் பள்ளிகொண்டுள்ளார்.திருப்பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி அமர்ந்துள்ளார். தாமரை மலரும் அமைந்துள்ளது.

அமைவிடம்

பெயர்: மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் அமைவிடம் ஊர்: மாமல்லபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம் மாவட்டம்,

தாயார் : ஸ்ரீ நில மங்கை நாயகி
மூலவர் : ஸ்தல சயனப் பெருமாள்
உட்சவர்: ஸ்தலசயனதுரைவார்
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : சென்னை
கடவுளர்கள்: ஸ்தல சயனப் பெருமாள்,ஸ்ரீ நில மங்கை நாயகி


திவ்யதேச பாசுரங்கள்

    1088.   
    பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை*  படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
    எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே*  முளைத்து எழுந்த தீம் கரும்பினை* 
    போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை*  புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை* 
    கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே.  (2)

        விளக்கம்  


    • இத்திருமொழியாலும் மேல்திருமொழியாலும் திருக்கடல்மல்லைத் திருப்பதியை மங்களா சாஸநம் செய்தருளுகிறார். அத்திருப்பதியி லெழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு ‘ஸ்தலசாயீ’ என்று வடமொழித் திருநாமம். ஸ்ரீ புண்டரீக மஹர்ஷியின் கைகபினால் பூ விடுவித்துக் கொண்டு இன்னும் இப்படிப்பட்ட பக்தர்கள் கிடைக்கக்கூடுமோ வென்றெதிர் பார்த்துக்கொண்டு தரைக்கிடை கிடக்கிறபடி. அது தோன்ற இத்திருப்பதியின் திருநாமத்தைக் கடன்; மலலைத்; தலசயனம் என்று ஆழ்வார் அநுஸந்திக்கிறார். “பாரையுண்டு” என்னாது “பாராணதுண்டு” என்றது-அமுது செய்யாமல் மிச்சப்பட்ட வுலகம் எதுவுமில்லை என்றதைக் காட்டும். பாரென்று பேர் பெற்றவை எல்லாவற்றையும் உண்டு என்கை. பார் என்னுஞ் சொல் பூமிக்கு மாத்திரம்; வாசகமாயினும் இங்கு இலக்கணையால் உலகமென்று ஸாமாந்யப் பொருள் பெற்றிருக்கும்.


    1089.   
    பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு*  பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி  மாண்டு*
    அவத்தம் போகாதே வம்மின்*  எந்தை என் வணங்கப்படுவானை*
    கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்* 
    காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)       

        விளக்கம்  


    • தலசயனத்துறைவாரைத் தாம் ஸேவிக்கப் பெற்றதுபோல உலகிலுள்ளாரெல்லாரும் ஸேவிக்கப் பெறவேனுமென்கிற ஆசையினால், இங்கே ஸேவிக்க வாருங்களென்று மற்றும் பலரையும் அழைக்கிறார். வயிற்றுப் பிழைப்புக்காகப் பிறர்க்கு அடிமைப்பட்டுக் காலத்தைப் பாழாக்குவாரும், வேதபாஹ்யர்கள் வேதகுத்ருஷ்டிகள் என்று சொல்லப்படுகிற மதாந்தரஸ்களின் திரளிலே புகுந்து ஸ்வரூபநாசம் அடைவாரும் பலருண்டாகையாலே அவர்களையும் விடமாட்டாத காருண்யத்தினால் அவர்களையும் மங்களாசாஸநத்திற்கு ஆளாக்கிக் கொள்ளப் பாரிக்கிறார்.


    1091.   
    பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்* 
    ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை*  அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*
    குடம்ஆடு கூத்தன் தன்னை*  கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

        விளக்கம்  



    1092.   
    பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ*  பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
    இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,* 
    தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று*  அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

        விளக்கம்  



    1093.   
    கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி*  கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
    படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை*  பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*
    வளைமருப்பின் ஏனம்ஆகி*  இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 

        விளக்கம்  


    • கிளர்பொறிய மறி = ‘மறி’ என்று மான்குட்டிக்குப் பெயர். (பிணை என்று பெண்மானுக்குப் பெயர்; “மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை” என்ற திருவாய்மொழியுங் காண்க.) மாரிசன் விசித்திரமான புள்ளிகளையுடைய மானாக வந்தமைபற்றிக் “கிளர் பொறிய” எனப்பட்டது. அதனின் பின்னே “படர்ந்தானை”என்றதில், மாரீசனைக் கொன்றொழித்த்தும் விவக்ஷிதம்.


    1094.   
    பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று*  பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்* 
    பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை*   பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை* 
    ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை*  உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்* 
    காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 

        விளக்கம்  



    1095.   
    பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை*  பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை* 
    தண்ணார்ந்த  வார்புனல்சூழ் மெய்யம்என்னும்*  தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி* 
    எண்ணானை எண்இறந்த புகழினானை*  இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
    கண்ணாரக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.  

        விளக்கம்  


    • உரை:1

      எண்ணானை என்பதற்கு - எண்ணுகிறவன் என்றும், எண்ணப்படுகிறவன் என்றும், எண்ணாதவன் என்றும் மூன்று வகையாகப் பொருள் கொள்ளலாம்;- எண்ணுகிறவன் என்னும் பொருளில், நம்போன்ற ஸம்ஸாரிகளைக் காத்தருளும் வகையை எண்ணிக்கொண்டிருப்பவன் என்றதாகிறது; எண்ணப்படுகிறவன் என்னும் பொருளில், “நலமந்தமில்லதோர் நாட்டிலே நித்யஸூரிகள் பணியுமாறு இருக்கவேண்டிய பெருமான்; இப்படி ஸம்ஸாரிகளின் நடுவே வந்து கிடப்பதே!, இஃது என்ன நீர்மை!” என்று பக்தர்களால் எண்ணப்படுமவன் என்றதாகிறது; எண்ணாதவன் என்னும் பொருளில், நமது குற்றங் குறைகளை ஒரு பொருளாக இட்டெண்ணாதவன் என்றதாகிறது.

      உரை:2

      பெண் வடிவெடுத்து இனிய அமுதத்தை அசுரர்கள் பொறாதவாறு வஞ்சித்தவன்; பிறைமதி போன்ற பற்களுடன், வலிமை கொண்ட நரசிம்மமாக வளர்ந்தவன். நீர்வளம் உள்ள திருமெய்யம் என்னும் மலையில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவன். எல்லோராலும் எண்ணப்படும் அளவற்ற புகழ் உடையவன்; ஒளிமிகுந்த தாமரைப் பூப்போன்ற கண்களை உடைய இப்பெருமாளை நான் கடல்மல்லையில் தலசயனத்தில் கண்டேன். 


    1096.   
    தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை*  படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
    தென்இலங்கை அரக்கர்வேந்தை*  விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு* 
    பண்டுஆய வேதங்கள் நான்கும்*  ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
    தொண்டனேன் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 

        விளக்கம்  


    • ‘ஆயார்’ என்றது ஆனார் என்றபடி; தொண்டராக ஆனவர்கள்-“ஒழிவில் காலமெல்லா மூடனாய் மன்னி, வழுவிலா வடிமை செய்யவேண்டும் நாம்”; என்றிருப்பவர்கள்; அப்படிப்பட்டவர்களால் போற்றப்படும் திருவடிகளை யுடையவன்; நம் உடைமையை நாம் இழக்கலாகாது’ என்று தானே தன் திருவடிகளைக் கொண்டுவந்து எல்லார் தலையிலும் வைத்து ஸத்தை பெறுவித்த சிறந்த குணத்தில் ஈடுபட்டு ஆட்படாமல் மார்பு நெறித்திருந்த இராவணனுடைய உடலை நாயும் நரியும் கழுகும் முதலிய மிருகங்கள் தின்னும்படி அம்புகளைச் செலுத்தி முடித்தவன்; ஆத்துமாக்கள் தன்னைப் பணிந்து உய்ந்துபோவதற்காகப் பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களையும் அநுஷ்டாநங்களையும் ஏற்படுத்தினவன்; இப்படிப்பட்ட பெருமானை அடியேன் இன்று திருக்கடல் மல்லையிலே ஸேவிக்கப்பெற்றேன்.


    1097.   
    படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்*  படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்* 
    தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்*  தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்* 
    கடம் ஆரும் கருங் களிறு வல்லான்*  வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்* 
    திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்*  தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.  

        விளக்கம்  


    • “திடமாக” என்பதனை “ஐந்து மைந்தும் வல்லார்” என்பதிலும் அந்வயிக்கலாம்’ “தீவினையை முதலரிய வல்லார்” என்பதிலும் அந்வயிக்கலாம்; பிந்தின அந்வயத்தில்; நிச்சயமாகப் பாவத்தைப் போக்கிக்கொள்ளுவர்கள் என்றபடி.


    1098.   
    நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
    வானவரை பெண் ஆகி*  அமுது ஊட்டும் பெருமானார்*
    மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரை,* 
    எண்ணாதே இருப்பாரை*  இறைப் பொழுதும் எண்ணோமே. (2)

        விளக்கம்  


    • திருக்கடல்மல்லைத் தலசயனத்துறைவாரைச் சிந்தை செய்யாதவர்கள் பதார்த்தகோடியிலேயே சேராதவாகளாகையால் அபதார்த்தங்களான அவர்களை நான் ஒரு பொருளாகவே மதிக்கமாட்டேனென்கிறார். தலசயனத்துறைவாரைச் சிந்திக்கும் மஹான்களையே நான் அநவரதம் சிந்திப்பேன் என்பது தேறும். நண்ணாத = பகவத்விஷயத்தில் பகையை இயற்கையாகவுடைய என்றபடி. ஸாதுக்களைக் கண்டவுடனே கொல்வற்காக வாட்படையைக் கையோடே வைத்துக்கொண்டிருப்பவர்களாதலால் “வாளவுணர்” என்றார்;.


    1099.   
    பார் வண்ண மட மங்கை*  பனி நல் மா மலர்க் கிழத்தி* 
    நீர் வண்ணன் மார்வத்தில்*  இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*
    கார்வண்ண முது முந்நீர்க்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்*  அவர் எம்மை ஆள்வாரே.   

        விளக்கம்  


    • இரண்டாமடியில் “நீர்வண்ணன் மார்வத்தில்” என்பது சிலருடைய பாடம்; “மார்வகத்தில்” என்பதே வியாக்கியானத்திற் கிணங்கிய பாடம்; மார்வகத்தில் என்றது - மார்விலும் அகத்திலும் எனப்பொருள்படும். பனிநன்மா மலர்க்கிழத்தியான பெரியபிராட்டியார் மார்வில் இருக்கையையும், பார்வண்ண மடமங்கையாகிய பூமிப்பிராட்டியார் அகத்தில் (- அருகில்) இருக்கையையும் தெரிந்துகொண்டு ‘இனி நாம் நமது குற்றங்கட்காக அஞ்சவேண்டிய காரணமில்லை’ என்று தைரிய முடையராய் அப்பெருமானது ஊராகிய திருக்கடல்மல்லையைத் தியானிப்பவர்கள் எமக்குத் தலைவர் என்றாயிற்று.


    1100.   
    ஏனத்தின்உருவுஆகி*  நிலமங்கை எழில் கொண்டான்* 
    வானத்தில்அவர் முறையால்*  மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள* 
    கானத்தின் கடல்மல்லைத்*  தலசயனத்து உறைகின்ற* 
    ஞானத்தின் ஒளிஉருவை*  நினைவார் என் நாயகரே. (2)  

        விளக்கம்  


    • திருக்கடல்மல்லையில் ஞானப்பிரான் என்ற திருநாமத்துடனே திருக்கோயில் கொண்டிராநின்ற எம்பெருமானை மங்களாசாஸநம் செய்தருளுகிறார் இதில். நிலைமைமாறி அழகு அழிந்திருந்த பூமிப்பிராட்டியின் அழகை மறுபடியும் பழையபடியே நிலை நிறுத்தினான் என்பார் நிலமங்கை யெழில் கொண்டான் என்றார். இரண்டாமடியினிறுதியில் “வரங்கொள்ள” என்று பாடமாகில், தங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு என்று பொருளாகுக. ஞானத்தினொளியுரு= ஞானப்ரகாசமே உருவெடுத்து நிற்பவன்; ஞானவொளிமயமான திவ்யமங்கள விக்ரஹமுடையவன்


    1101.   
    விண்டாரை வென்று ஆவி*  விலங்கு உண்ண மெல் இயலார்* 
    கொண்டாடும் மல் அகலம்*  அழல் ஏற வெம் சமத்துக்*
    கண்டாரை கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரைக், 
    கொண்டாடும் நெஞ்சு உடையார்*  அவர் எங்கள் குலதெய்வமே.

        விளக்கம்  


    • அஹங்காரிகளான ஆஸூரப்ரக்ருதிகளின் உடலை நாயும் நரியும் பிடுங்கி தின்னும்படியாகவும், மாதர்களேறியநுபவித்த அவர்களது மார்பை அக்நிபகவானேறி அநுபவிக்கும்படியாகவும் போர்க்களத்திற் செய்த பகவான் நம்முடைய அஹங்காரத்தையும் தொலைத்து நம்மை ஆட்கொள்ளுதற்காகத் திருக்கடன்மல்லையிலே வந்து தரைக்கிடை கிடக்கிறார்; எனக்கு அவர் உத்தேச்யரல்லர்; அவரைக் கொண்டாடிக்கொண்டு போதுபோக்குகின்ற பாகவதர்களே எனக்கும் எனது குலத்துக்கும் உத்தேச்யர்-என்றாராயிற்று.


    1102.   
    பிச்சச் சிறு பீலிச்*  சமண் குண்டர் முதலாயோர்* 
    விச்சைக்கு இறை என்னும்*  அவ் இறையைப் பணியாதே*
    கச்சிக் கிடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நச்சித் தொழுவாரை*  நச்சு என் தன் நல் நெஞ்சே!  

        விளக்கம்  


    • இவ்வுலகில் அவைதிகங்களான மதங்கள் பலவுண்டு; அவற்றில் போய்ச்சேருகிற ஜனங்கள் அதிகமேயன்றி, வைதிகஸம்ப்ரதாயத்திற் புகுமவர் குறைவாகவே யிருப்பர்; அப்படி அவைதிகமதங்களிற்சேர்ந்து தேவதாந்திரங்களைப் பணியாமல் திருக்கடன்மல்லைத் தலசயனத்துறைவாரைப் பணியுமவர்கள் எவரோ, அந்தப் பாகவதர்களையே தமது நெஞ்சு பணியக் கடவதென்கிறார். அவைதிகமதங்களில் ஒன்றான ஜைந மதத்தையெடுத்துப் பேசுகிறார்-பிச்சச்சிறுபீலி இத்யாதியால். சமண்குண்டர் என்றது-குண்டரான சமணர் என்றபடி; குண்டர்-நீசர்; சமணராவார்-அருகனை வழிபடுஞ்சமயத்தோராகிய ஆரகதரெனப்படும் ஜைநராவர்; இவர்கள் மிக்க தர்மிஷ்டர்களென்று தோற்றும்படியாக மயிற்பிச்சங்களைக் கட்டிக் கையிலேகொண்டு, எறும்பு முதலிய சிற்றுயிர்கட்குத் கொஞ்சமும் ஹிம்ஸை உண்டாகாதபடி அப்பீலிப்பிச்சங்களால் தரையை விளக்கிக்கொண்டு நடந்து செல்வதுபற்றிப் பிச்சச்சிறு பீலிச்சமண்குண்டர் என்றார்.


    1103.   
    புலன் கொள் நிதிக் குவையோடு*  புழைக் கை மா களிற்று இனமும்* 
    நலம் கொள் நவமணிக் குவையும்*  சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,* 
    கலங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வலங்கொள் மனத்தார்அவரை*  வலங்கொள் என் மட நெஞ்சே!

        விளக்கம்  


    • திருக்கடல்மல்லை கடற்கரையிலே உள்ளதாகையாலும், அக்கடலில் த்வீபாந்தரங்களிலிருந்து சிறந்த வஸ்துக்களை ஏற்றிக்கொண்டுவரும் கப்பல்கள் பெரும்பான்மையாகக் காணப்படுதலாலும் இந்த நிலைமையைப் பேசுகிறார் இப்பாசுரத்தில். நிதி என்னும் பல பொருளொருசொல் இங்கு, பொன் என்ற பொருளில் வந்தது. சிறந்த பொற்குவியல்களையும் யானைக் கூட்டங்களையும் நவமணித்திரள்களையும் அளவு மீறித் தாங்கிக் கொண்டு வருகையாலே பாரம் கனத்துத் துவண்டிரா நின்றனவாம் மரக்கலங்கள். அப்படிப்பட்ட நற்சரக்குக்களமைந்த பல கப்பல்கள் உலாவப்பெற்ற கடலின் கரையிலேயுள்ள மல்லாபுரியை வழிபட நினைக்கும் பாகவதர்களையே அடியேன் வழிபடக்கடவேன் என்றாராயிற்று. “நான்றொசிந்த” என்ற பாடமும் பொருந்தும். நான்று = ‘நால்’ என்னும் வினையடியாப் பிறந்த இறந்தகால வினையெச்சம்; தொங்கலாடி என்றபடி. ஒசிதல்-தளர்தல். ஏறின சரக்கின் கனத்தாலுண்டான நிலையைச் சொன்னபடி. கலம் = மரக்கலம்; அதாவது-கப்பல்.


    1104.   
    பஞ்சிச் சிறு கூழை*  உரு ஆகி மருவாத* 
    வஞ்சப் பெண் நஞ்சு உண்ட*  அண்ணல் முன் நண்ணா*
    கஞ்சைக் கடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நெஞ்சில் தொழுவாரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே!

        விளக்கம்  


    • “பஞ்சிச்சிறு கூழையுருவாகி” என்றது பூனையிடத்து அந்வயிக்கவுமாம், கண்ணபிரானிடத்தில் அந்வயிக்கவுமாம். பூதனையிடத்து அந்வயிக்கும்போது “பஞ்சச்சிறுகூழை” என்னுமளவும் அன்மொழித் தொகையாய், பஞ்சுபொல் மெல்லிய சிறிய கடலையுடையவள் என்று பொருள்பட்டு யசோதைப்பிராட்டிக்கு வாசகமாகி, அவளுடைய வேஷத்தை ஏறிட்டுக்கொண்டு வந்தாளென்றதாகிறது. ‘நம்முடைய தாயான யசோதைகள் நமக்கு முலைகொடுக்க வருகிறாள்’ என்று கண்ணபிரான் கருதவேணுமென்று தாய்வேடம் பூண்டு வந்தாளிறே பூதனை. இனி, “பஞ்சிச் சிறுகூழை யுரவாகி” என்றதைக் கண்ணபிரானிடத்து அந்வயிக்கில், பிடித்துக் கட்ட வொண்ணாதபடியான மயிர்முடியையுடைய இளம்பிள்ளையான பருவத்திலேயே வஞ்சப் பெண்ணின் விஷத்தையுண்டவன் என்பதாம். ‘கம்ஸ’ என்ற வடசொல் ‘கஞ்சு’ எனச் சிதைந்தது. “கஞ்சைக் காய்ந்த கருவில்லி” என்றாள் சூடிக்கொடுத்த நாச்சியாகும்.


    1105.   
    செழு நீர் மலர்க் கமலம்*  திரை உந்து வன் பகட்டால்* 
    உழும் நீர் வயல் உழவர் உழ*  பின் முன் பிழைத்து எழுந்த* 
    கழு நீர் கடி கமழும்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    தொழும் நீர் மனத்தவரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே . 

        விளக்கம்  


    • முதலடியில் “திரையுந்து” என்ற பாடத்திற் காட்டிலும் “திரையுந்து” என்ற பாடம் வியாக்கியானத்திற்கு மிகவும் மிணங்கும். உழவர்கள் கழனிகளை உழும்போது அங்குள்ள தாமரை மலர்களையும் நீர் வெள்ளங்களையும் காலாலே தள்ளிக்கொண்டே வலிய எருதுகளைக் கொண்டு உழுவர்களாம்; அப்படி அவர்கள் உழச் செய்தேயும் முன்னிலும் பின்னிலும் பல மலர்கள் தப்பிப் பிழைத்தெழுந்து பரிமளம் வீசிகின்றனவாம்; அப்படிப்பட்ட வயல்கள் சூழ்ந்த திருக்கடன்மல்லைத் திருப்பதியைத் தொழுவதையே இயல்பாகவுடைய பாகவதர்கள் யாவரோ, அவரையே என்நெஞ்சு தொழக்கடவது என்றாராயிற்று. “உழுநீர்” என்ற அடைமொழி - வயலுக்குமாகலாம், உழவர்க்குமாகலாம். எப்போதும் உழுவதையே இயற்கையாக வுடையராயிருப்பர் உழவர்; வயலும் எப்போதும் உழப்பட்டுக்கொண்டே யிருக்கும். பகடு = எருது. (இது யானைக்கும் பெயராம்.)


    1106.   
    பிணங்கள் இடு காடு அதனுள்*  நடம் ஆடு பிஞ்ஞகனோடு* 
    இணங்கு திருச் சக்கரத்து*  எம் பெருமானார்க்கு இடம்*
    விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வணங்கும் மனத்தார் அவரை*  வணங்கு என்தன் மட நெஞ்சே!

        விளக்கம்  


    • எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்தை அநுபவிக்கிறார் முன்னடிகளில், தாமஸ தெய்வமான ருத்ரனுக்கும் தனது திருமேனியின் வலப்பக்கத்தில் இடங்கொடுத்து ஆதரிக்குமவனாம் எம் பெருமான். “ஏறாளுமிறையோனும் திசைமுகனுந் திருமகளும், கூறாளுந்தனியுடம்பன்” என்றும், “அக்கும்புலியின்களு முடையாரவரொருவர், பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றும் ஆழ்வார்கள் அடிக்கடி அருளிச் செய்வர்கள். “பிணங்களிடுகாடு” “பிணங்களடுகாடு” என்பன பாடபேதங்கள். ச்மசான பூமியில் நடமாடுகிறவன் ருத்ரன். (பிஞ்ஞகன் என்று ருத்ரனுக்குப் பெயர்.) அவனோடு இணங்குதலாவது-அவனுக்கும் தனது திருமேனியிலே இடங்கொடுத்துப் பொருந்தவிட்டுக் கொள்ளுதல். “திருச்சக்கரத்தெம் பெருமானார்” என்றது - திருவாழியாழ்வான் முதலிய நித்யஸூரிகட்குத் தன் திருமேனியிலே இடம்; கொடுத்தருளியிருப்பதுபோலவே அஹங்காரியான ருத்ரனுக்கும் இடம்கொடுப்பவன் என்ற கருத்தை வெளிப்படுத்தும்.


    1107.   
    கடி கமழும் நெடு மறுகின்*  கடல்மல்லைத் தலசயனத்து* 
    அடிகள் அடியே நினையும்*  அடியவர்கள் தம் அடியான்* 
    வடி கொள் நெடு வேல் வலவன்*  கலிகன்றி ஒலி வல்லார்* 
    முடி கொள் நெடு மன்னவர்தம்*  முதல்வர் ஆவாரே. (2)       

        விளக்கம்  


    • பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தமென்று பரமயோக்யமாக அருளிச்செய்து வந்த ஆழ்வார் பலன் சொல்லுமிடத்து அஹங்காரத்திற்கு மூலகாரணமும் பாகவதசேஷத்திற்குப் பிரதி நந்தகமுமான இஹலோக ஐச்வரியத்தைப் பலனாகச்சொல்வதேன்; என்று நஞ்சீயர்பட்டரைக் கேட்டார்; அதற்கு அவர் ரஸோத்தியாக ஒரு உத்தரம அருளிச் செய்தாராம்; அதாவது -“திருமங்கையாழ்வார் உருவவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐச்வர்யமும் பரம புருஷார்த்தமாய் விட்டதுகாணும்; பணமுள்ள இடங்களிற்சென்று கொள்ளையடித்து பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணுகிறவராகையாலே ஹயமான ஐச்வரியமும் இவ்வாழ்வார் திருவுள்ளத்தால் உத்தேச்யமாய் விட்டதிறே” என்றாராம்; அவர் எந்த எந்த பலனை விரும்பினாலும் அந்த அந்த பலன் இவ்வருளிச்செயல் மூலமாகக் கிடைக்குமென்பது உண்மைப்பொருள்.