பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    மெச்சு ஊது சங்கம் இடத்தான்*  நல் வேய் ஊதி* 
    பொய்ச் சூதிற் தோற்ற*  பொறை உடை மன்னர்க்காய்*

    பத்து ஊர் பெறாது அன்று*  பாரதம் கைசெய்த* 
    அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
          அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் (2)


    மலை புரை தோள் மன்னவரும்*  மாரதரும் மற்றும்* 
    பலர் குலைய*  நூற்றுவரும் பட்டழிய*  பார்த்தன்

    சிலை வளையத்*  திண்தேர்மேல் முன்நின்ற*  செங்கண் 
    அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
          அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.


    காயும் நீர் புக்குக்*  கடம்பு ஏறி*  காளியன் 
    தீய பணத்திற்*  சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி* 

    வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
    ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    இருட்டிற் பிறந்து போய்*  ஏழை வல் ஆயர்* 
    மருட்டைத் தவிர்ப்பித்து*  வன் கஞ்சன் மாளப்-

    புரட்டி*  அந்நாள் எங்கள்*  பூம்பட்டுக் கொண்ட* 
    அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    சேப் பூண்ட*  சாடு சிதறித்*  திருடி நெய்க்கு 
    ஆப்பூண்டு*  நந்தன் மனைவி கடை தாம்பால்*

    சோப்பூண்டு துள்ளித்*  துடிக்கத் துடிக்க*  அன்று 
    ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.


    செப்பு இள மென்முலைத்*  தேவகி நங்கைக்குச்* 
    சொப்படத் தோன்றி*  தொறுப்பாடியோம் வைத்த* 

    துப்பமும் பாலும்*  தயிரும் விழுங்கிய* 
    அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    தத்துக் கொண்டாள் கொலோ?*  தானே பெற்றாள் கொலோ?* 
    சித்தம் அனையாள்*  அசோதை இளஞ்சிங்கம்*

    கொத்து ஆர் கருங்குழற்*  கோபால கோளரி* 
    அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் 


    கொங்கை வன்*  கூனிசொற் கொண்டு குவலயத்* 
    துங்கக் கரியும்*  பரியும் இராச்சியமும்* 

    எங்கும் பரதற்கு அருளி*  வன்கான் அடை* 
    அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    பதக முதலை*  வாய்ப் பட்ட களிறு* 
    கதறிக் கைகூப்பி*  என் கண்ணா! கண்ணா! என்ன*

    உதவப் புள் ஊர்ந்து*  அங்கு உறுதுயர் தீர்த்த* 
    அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    வல்லாள் இலங்கை மலங்கச்*  சரந் துரந்த* 
    வில்லாளனை*  விட்டுசித்தன் விரித்த*

    சொல் ஆர்ந்த அப்பூச்சிப்*  பாடல் இவை பத்தும் 
    வல்லார் போய்*  வைகுந்தம் மன்னி இருப்பரே (2)


    அரவு அணையாய்! ஆயர் ஏறே!*  அம்மம் உண்ணத் துயிலெழாயே* 
    இரவும் உண்ணாது உறங்கி நீ போய்*  இன்றும் உச்சி கொண்டதாலோ*

    வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்*  வன முலைகள் சோர்ந்து பாயத்* 
    திரு உடைய வாய்மடுத்துத்*  திளைத்து உதைத்துப் பருகிடாயே (2)


    வைத்த நெய்யும் காய்ந்த பாலும்*  வடி தயிரும் நறு வெண்ணெயும்* 
    இத்தனையும் பெற்றறியேன்*  எம்பிரான்! நீ பிறந்த பின்னை*

    எத்தனையும் செய்யப் பெற்றாய்;*  ஏதும் செய்யேன் கதம் படாதே* 
    முத்து அனைய முறுவல் செய்து*  மூக்கு உறிஞ்சி முலை உணாயே


    தந்தம் மக்கள் அழுது சென்றால்*  தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்* 
    வந்து நின்மேற் பூசல் செய்ய*  வாழ வல்ல வாசுதேவா!*

    உந்தையார் உன்திறத்தர் அல்லர்*  உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்* 
    நந்தகோபன் அணி சிறுவா!*  நான் சுரந்த முலை உணாயே


    கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட*  கள்ளச் சகடு கலக்கு அழிய* 
    பஞ்சி அன்ன மெல்லடியால்*  பாய்ந்த போது நொந்திடும் என்று*

    அஞ்சினேன் காண் அமரர் கோவே!*  ஆயர் கூட்டத்து அளவன்றாலோ* 
    கஞ்சனை உன் வஞ்சனையால்*  வலைப்படுத்தாய்! முலை உணாயே


    தீய புந்திக் கஞ்சன் உன்மேல்*  சினம் உடையன் சோர்வு பார்த்து* 
    மாயந்தன்னால் வலைப்படுக்கில்*  வாழகில்லேன் வாசுதேவா!*

    தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்*  சாற்றிச் சொன்னேன் போகவேண்டா* 
    ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!*  அமர்ந்து வந்து என் முலை உணாயே


    மின் அனைய நுண் இடையார்*  விரி குழல்மேல் நுழைந்த வண்டு* 
    இன் இசைக்கும் வில்லிபுத்தூர்*  இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*

    என்ன நோன்பு நோற்றாள் கொலோ*  இவனைப் பெற்ற வயிறு உடையாள்* 
    என்னும் வார்த்தை எய்துவித்த*  இருடிகேசா! முலை உணாயே (2)


    பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்*  பெறுதும் என்னும் ஆசையாலே* 
    கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்*  கண்ணிணையால் கலக்க நோக்கி*

    வண்டு உலாம் பூங்குழலினார்*  உன் வாயமுதம் உண்ண வேண்டிக்* 
    கொண்டு போவான் வந்து நின்றார்*  கோவிந்தா நீ முலை உணாயே 


    இரு மலை போல் எதிர்ந்த மல்லர்*  இருவர் அங்கம் எரிசெய்தாய்!*  உன் 
    திரு மலிந்து திகழு மார்வு*  தேக்க வந்து என் அல்குல் ஏறி* 

    ஒரு முலையை வாய்மடுத்து*  ஒரு முலையை நெருடிக்கொண்டு* 
    இரு முலையும் முறை முறையாய்*  ஏங்கி ஏங்கி இருந்து உணாயே


    அங் கமலப் போதகத்தில்*  அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்* 
    செங் கமல முகம் வியர்ப்ப*  தீமை செய்து இம் முற்றத்தூடே*

    அங்கம் எல்லாம் புழுதியாக*  அளைய வேண்டா அம்ம! விம்ம* 
    அங்கு அமரர்க்கு அமுது அளித்த*  அமரர் கோவே! முலை உணாயே


    ஓட ஓடக் கிண்கிணிகள்*  ஒலிக்கும் ஓசைப் பாணியாலே* 
    பாடிப் பாடி வருகின்றாயைப்*  பற்பநாபன் என்று இருந்தேன்*

    ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு*  அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி* 
    ஓடி ஒடிப் போய்விடாதே*  உத்தமா! நீ முலை உணாயே


    வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி*  மாதவா! உண் என்ற மாற்றம்* 
    நீர் அணிந்த குவளை வாசம்*  நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*

    பார் அணிந்த தொல் புகழான்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
    சீர் அணிந்த செங்கண்மால் மேல்*  சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)   


    போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்*  பொரு திறற் கஞ்சன் கடியன்* 
    காப்பாரும் இல்லை கடல்வண்ணா*  உன்னை தனியே போய் எங்கும் திரிதி*

    பேய்ப்பால் முலை உண்ட பித்தனே!*  கேசவ நம்பீ! உன்னைக் காது குத்த* 
    ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்*  அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (2)


    வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி*  மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப* 
    நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத*  நாராயணா! இங்கே வாராய்* 

    எண்ணற்கு அரிய பிரானே*  திரியை எரியாமே காதுக்கு இடுவன்* 
    கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய*  கனகக் கடிப்பும் இவையாம்!


    வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்*  மகரக்குழை கொண்டுவைத்தேன்* 
    வெய்யவே காதில் திரியை இடுவன்*  நீ வேண்டிய தெல்லாம் தருவன்*

    உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய*  ஒண்சுடர் ஆயர்கொழுந்தே* 
    மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து*  மாதவனே! இங்கே வாராய்


    வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு*  வார்காது தாழப் பெருக்கிக்* 
    குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்*  கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்*

    இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்*  இனிய பலாப்பழம் தந்து* 
    சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்*  சோத்தம் பிரான்! இங்கே வாராய்


    சோத்தம் பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய்*  சுரிகுழலாரொடு நீ போய்க்* 
    கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்*  குணங்கொண்டு இடுவனோ? நம்பீ*

    பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்*  பிரானே! திரியிட ஒட்டில்* 
    வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்*  விட்டுவே! நீ இங்கே வாராய்


    விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்!*  உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி* 
    மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி*  மதுசூதனே என்று இருந்தேன்*

    புண் ஏதும் இல்லை உன்காது மறியும்*  பொறுத்து இறைப் போது இரு நம்பீ! 
    கண்ணா! என் கார்முகிலே! கடல்வண்ணா*  காவலனே! முலை உணாயே   


    முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி*  நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு* 
    மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*  பசுநிரை மேய்த்தாய்*

    சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*  திரு ஆயர்பாடிப் பிரானே!* 
    தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?


    என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்*  என்னை நான் மண் உண்டேனாக* 
    அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்*  அனைவர்க்கும் காட்டிற்றிலையே?*

    வன் புற்று அரவின் பகைக் கொடி*  வாமன நம்பீ! உன்காதுகள் தூரும்* 
    துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே! திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே


    மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்*  தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று* 
    கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்*  காணவே கட்டிற்றிலையே?*

    செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்*  சிரீதரா! உன்காது தூரும்* 
    கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற*  காரிகையார் சிரியாமே


    காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்*  காதுகள் வீங்கி எரியில்?* 
    தாரியா தாகில் தலை நொந்திடும் என்று*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?*

    சேரியிற் பிள்ளைகள் எல்லாரும்- காது பெருக்கித்*  திரியவும் காண்டி* 
    ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட*  இருடிகேசா! என்தன் கண்ணே!


    கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்*  கடிகமழ் பூங்குழலார்கள்* 
    எண்ணத்துள் என்றும் இருந்து*  தித்திக்கும் பெருமானே! எங்கள் அமுதே* 

    உண்ணக் கனிகள் தருவன்*  கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்* 
    பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட*  பற்பநாபா இங்கே வாராய்    


    வா என்று சொல்லி என்கையைப் பிடித்து*  வலியவே காதிற் கடிப்பை* 
    நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?*  காதுகள் நொந்திடும் கில்லேன்*

    நாவற் பழம் கொண்டுவைத்தேன்*  இவை காணாய் நம்பீ*  முன் வஞ்ச மகளைச் 
    சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட*  தாமோதரா இங்கே வாராய்


    வார் காது தாழப் பெருக்கி அமைத்து*  மகரக்குழை இட வேண்டிச்* 
    சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்*  சிந்தையுள் நின்று திகழப்*

    பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்*  பன்னிரு நாமத்தால் சொன்ன* 
    ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்*  அச்சுதனுக்கு அடியாரே (2)


    வெண்ணெய் அளைந்த குணுங்கும்*  விளையாடு புழுதியும் கொண்டு* 
    திண்ணென இவ் இரா உன்னைத்*  தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*

    எண்ணெய் புளிப்பழம் கொண்டு*  இங்கு எத்தனை போதும் இருந்தேன்* 
    நண்ணல் அரிய பிரானே!*  நாரணா! நீராட வாராய்  (2)


    கன்றுகள் ஓடச் செவியிற்*  கட்டெறும்பு பிடித்து இட்டால்* 
    தென்றிக் கெடும் ஆகில்*  வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்*

    நின்ற மராமரம் சாய்த்தாய்!*  நீ பிறந்த திருவோணம்* 
    இன்று நீ நீராட வேண்டும்*  எம்பிரான்! ஓடாதே வாராய்


    பேய்ச்சி முலை உண்ணக் கண்டு*  பின்னையும் நில்லாது என்நெஞ்சம்* 
    ஆய்ச்சியர் எல்லாரும் கூடி*  அழைக்கவும் நான் முலை தந்தேன்*

    காய்ச்சின நீரொடு நெல்லி* கடாரத்திற் பூரித்து வைத்தேன்* 
    வாய்த்த புகழ் மணிவண்ணா!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கஞ்சன் புணர்ப்பினில் வந்த*  கடிய சகடம் உதைத்து* 
    வஞ்சகப் பேய்மகள் துஞ்ச*  வாய் முலை வைத்த பிரானே!*

    மஞ்சளும் செங்கழுநீரின்*  வாசிகையும் நறுஞ்சாந்தும்* 
    அஞ்சனமும் கொண்டு வைத்தேன்*  அழகனே! நீராட வாராய்


    அப்பம் கலந்த சிற்றுண்டி*  அக்காரம் பாலிற் கலந்து* 
    சொப்பட நான் சுட்டு வைத்தேன்*  தின்னல் உறுதியேல் நம்பி!*

    செப்பு இள மென்முலையார்கள்*  சிறுபுறம் பேசிச் சிரிப்பர்* 
    சொப்பட நீராட வேண்டும்*  சோத்தம் பிரான்! இங்கே வாராய்


    எண்ணெய்க் குடத்தை உருட்டி*  இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்* 
    கண்ணைப் புரட்டி விழித்துக்*  கழகண்டு செய்யும் பிரானே!*

    உண்ணக் கனிகள் தருவன்*  ஒலிகடல் ஓதநீர் போலே* 
    வண்ணம் அழகிய நம்பீ!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கறந்த நற்பாலும் தயிரும்*  கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்* 
    பிறந்ததுவே முதலாகப்*  பெற்றறியேன் எம்பிரானே!*

    சிறந்த நற்றாய் அலர் தூற்றும்*  என்பதனால் பிறர் முன்னே* 
    மறந்தும் உரையாட மாட்டேன்*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கன்றினை வால் ஓலை கட்டி*  கனிகள் உதிர எறிந்து* 
    பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்*  பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்* 

    நின்திறத்தேன் அல்லேன் நம்பீ!*  நீ பிறந்த திரு நன்னாள்* 
    நன்று நீ நீராட வேண்டும்*  நாரணா! ஓடாதே வாராய்


    பூணித் தொழுவினிற் புக்குப்*  புழுதி அளைந்த பொன்-மேனி* 
    காணப் பெரிதும் உகப்பன்*  ஆகிலும் கண்டார் பழிப்பர்*

    நாண் இத்தனையும் இலாதாய்!*  நப்பின்னை காணிற் சிரிக்கும்* 
    மாணிக்கமே! என்மணியே!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கார் மலி மேனி நிறத்துக்*  கண்ணபிரானை உகந்து* 
    வார் மலி கொங்கை யசோதை*  மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*

    பார் மலி தொல் புதுவைக் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
    சீர் மலி செந்தமிழ் வல்லார்*  தீவினை யாதும் இலரே  (2)


    பின்னை மணாளனை*  பேரிற் கிடந்தானை* 
    முன்னை அமரர்* முதற் தனி வித்தினை* 

    என்னையும் எங்கள்*  குடி முழுது ஆட்கொண்ட* 
    மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்! (2)  


    பேயின் முலை உண்ட*  பிள்ளை இவன் முன்னம்* 
    மாயச் சகடும்*  மருதும் இறுத்தவன்* 

    காயாமலர் வண்ணன்*  கண்ணன் கருங்குழல்* 
    தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்! 


    திண்ணக் கலத்திற்*  திரை உறிமேல் வைத்த* 
    வெண்ணெய் விழுங்கி*  விரைய உறங்கிடும்*

    அண்ணல் அமரர்*  பெருமானை ஆயர்தம்* 
    கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!


    பள்ளத்தில் மேயும்*  பறவை உருக் கொண்டு* 
    கள்ள அசுரன்*  வருவானைத் தான் கண்டு* 

    புள் இது என்று*  பொதுக்கோ வாய் கீண்டிட்ட* 
    பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!


    கற்றினம் மேய்த்துக்*  கனிக்கு ஒரு கன்றினைப்* 
    பற்றி எறிந்த*  பரமன் திருமுடி* 

    உற்றன பேசி*  நீ ஓடித் திரியாதே* 
    அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    கிழக்கிற் குடி மன்னர்*  கேடு இலாதாரை* 
    அழிப்பான் நினைந்திட்டு*  அவ் ஆழிஅதனால்* 

    விழிக்கும் அளவிலே*  வேர் அறுத்தானைக்* 
    குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்! 
    கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    பிண்டத் திரளையும்*  பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்* 
    உண்டற்கு வேண்டி*  நீ ஓடித் திரியாதே*

    அண்டத்து அமரர்*  பெருமான் அழகு அமர்* 
    வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்! 
    மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    உந்தி எழுந்த*  உருவ மலர்தன்னில்*  
    சந்தச் சதுமுகன்*  தன்னைப் படைத்தவன்* 

    கொந்தக் குழலைக்*  குறந்து புளி அட்டித்* 
    தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்! 
    தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    மன்னன்தன் தேவிமார்*  கண்டு மகிழ்வு எய்த* 
    முன் இவ் உலகினை*  முற்றும் அளந்தவன்*

    பொன்னின் முடியினைப்* பூ அணைமேல் வைத்துப்* 
    பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!


    கண்டார் பழியாமே*  அக்காக்காய் கார்வண்ணன்!* 
    வண்டு ஆர் குழல்வார*  வா என்ற ஆய்ச்சி சொல்*

    விண் தோய் மதில்*  வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்* 
    கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே! (2)


    வேலிக் கோல் வெட்டி*  விளையாடு வில் ஏற்றி* 
    தாலிக் கொழுந்தைத்*  தடங்கழுத்திற் பூண்டு*

    பீலித் தழையைப்*  பிணைத்துப் பிறகிட்டு* 
    காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா! (2)


    கொங்கும் குடந்தையும்*  கோட்டியூரும் பேரும்* 
    எங்கும் திரிந்து*  விளையாடும் என்மகன்* 

    சங்கம் பிடிக்கும்*  தடக்கைக்குத் தக்க*  நல் 
    அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா! 
    அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.


    கறுத்திட்டு எதிர்நின்ற*  கஞ்சனைக் கொன்றான்* 
    பொறுத்திட்டு எதிர்வந்த*  புள்ளின் வாய் கீண்டான்* 

    நெறித்த குழல்களை*  நீங்க முன் ஓடிச்* 
    சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!


    ஒன்றே உரைப்பான்*  ஒரு சொல்லே சொல்லுவான்* 
    துன்று முடியான்*  துரியோதனன் பக்கல்*

    சென்று அங்குப் பாரதம்*  கையெறிந்தானுக்குக்* 
    கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா 
    கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.


    சீர் ஒன்று தூதாய்த்*  திரியோதனன் பக்கல்* 
    ஊர் ஒன்று வேண்டிப்* பெறாத உரோடத்தால்* 

    பார் ஒன்றிப் பாரதம்*  கைசெய்து பார்த்தற்குத்* 
    தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா 
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா 


    ஆலத்து இலையான்*  அரவின் அணை மேலான்* 
    நீலக் கடலுள்*  நெடுங்காலம் கண்வளர்ந்தான்*

    பாலப் பிராயத்தே*  பார்த்தற்கு அருள்செய்த*  
    கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா! 
    குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.


    பொற்றிகழ்*  சித்திரகூடப் பொருப்பினில்* 
    உற்ற வடிவில்*  ஒரு கண்ணும் கொண்ட* அக் 

    கற்றைக் குழலன்*  கடியன் விரைந்து உன்னை* 
    மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா! 
    மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா!


    மின்னிடைச் சீதை பொருட்டா*  இலங்கையர்* 
    மன்னன் மணிமுடி*  பத்தும் உடன் வீழத்* 

    தன் நிகர் ஒன்று இல்லாச்*  சிலை கால் வளைத்து இட்ட* 
    மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.


    தென் இலங்கை மன்னன்*  சிரம் தோள் துணிசெய்து* 
    மின் இலங்கும் பூண்*  விபீடண நம்பிக்கு* 

    என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற* 
    மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.


    அக்காக்காய்! நம்பிக்குக்*  கோல் கொண்டு வா என்று* 
    மிக்காள் உரைத்த சொல்*  வில்லிபுத்தூர்ப் பட்டன்* 

    ஒக்க உரைத்த*  தமிழ் பத்தும் வல்லவர்* 
    மக்களைப் பெற்று*  மகிழ்வர் இவ் வையத்தே.


    ஆனிரை மேய்க்க நீ போதி*  அருமருந்து ஆவது அறியாய்* 
    கானகம் எல்லாம் திரிந்து*  உன் கரிய திருமேனி வாட* 

    பானையிற் பாலைப் பருகிப்*  பற்றாதார் எல்லாம் சிரிப்ப* 
    தேனில் இனிய பிரானே* செண்பகப் பூச் சூட்ட வாராய்* (2) 


    கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
    உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 

    திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
    மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் 


    மச்சொடு மாளிகை ஏறி*  மாதர்கள்தம் இடம் புக்கு* 
    கச்சொடு பட்டைக் கிழித்து*  காம்பு துகில் அவை கீறி* 

    நிச்சலும் தீமைகள் செய்வாய்!*  நீள் திருவேங்கடத்து எந்தாய்!* 
    பச்சைத் தமனகத்தோடு*  பாதிரிப் பூச் சூட்ட வாராய்.


    தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத்*  தீமை செய்யாதே* 
    மருவும் தமனகமும் சீர்*  மாலை மணம் கமழ்கின்ற*

    புருவம் கருங்குழல் நெற்றி*  பொலிந்த முகிற்-கன்று போலே* 
    உருவம் அழகிய நம்பீ!* உகந்து இவை சூட்ட நீ வாராய்.


    புள்ளினை வாய் பிளந்திட்டாய்!*  பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்!* 
    கள்ள அரக்கியை மூக்கொடு*  காவலனைத் தலை கொண்டாய்!* 

    அள்ளி நீ வெண்ணெய் விழுங்க*  அஞ்சாது அடியேன் அடித்தேன்* 
    தெள்ளிய நீரில் எழுந்த*  செங்கழுநீர் சூட்ட வாராய்.


    எருதுகளோடு பொருதி*  ஏதும் உலோபாய் காண் நம்பீ!* 
    கருதிய தீமைகள் செய்து*  கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!* 

    தெருவின்கண் தீமைகள் செய்து*  சிக்கென மல்லர்களோடு* 
    பொருது வருகின்ற பொன்னே*  புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்.


    குடங்கள் எடுத்து ஏற விட்டுக்*  கூத்தாட வல்ல எம் கோவே!* 
    மடம் கொள் மதிமுகத்தாரை*  மால்செய வல்ல என் மைந்தா!* 

    இடந்திட்டு இரணியன் நெஞ்சை*  இரு பிளவு ஆக முன் கீண்டாய்!* 
    குடந்தைக் கிடந்த எம் கோவே!*  குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.


    சீமாலிகன் அவனோடு*  தோழமை கொள்ளவும் வல்லாய்!* 
    சாமாறு அவனை நீ எண்ணிச்*  சக்கரத்தால் தலை கொண்டாய்!* 

    ஆமாறு அறியும் பிரானே!*  அணி அரங்கத்தே கிடந்தாய்!* 
    ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!*  இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.


    அண்டத்து அமரர்கள் சூழ*  அத்தாணியுள் அங்கு இருந்தாய்!* 
    தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!*  தூமலராள் மணவாளா!*

    உண்டிட்டு உலகினை ஏழும்*  ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்!* 
    கண்டு நான் உன்னை உகக்கக்*  கருமுகைப் பூச் சூட்ட வாராய்.


    செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி* 
    எண் பகர் பூவும் கொணர்ந்தேன்*  இன்று இவை சூட்ட வா என்று* 

    மண் பகர் கொண்டானை*  ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை* 
    பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பத்தே. (2)


    இந்திரனோடு பிரமன்*   ஈசன் இமையவர் எல்லாம்* 
    மந்திர மா மலர் கொண்டு*  மறைந்து உவராய் வந்து நின்றார்*

    சந்திரன் மாளிகை சேரும்*  சதுரர்கள் வெள்ளறை நின்றாய்* 
    அந்தியம் போது இது ஆகும்*  அழகனே!  காப்பிட வாராய்  (2)


    கன்றுகள் இல்லம் புகுந்து*  கதறுகின்ற பசு எல்லாம்*
    நின்றொழிந்தேன் உன்னைக் கூவி*  நேசமேல் ஒன்றும் இலாதாய்!*

    மன்றில் நில்லேல் அந்திப் போது*  மதிற் திருவெள்ளறை நின்றாய்!* 
    நன்று கண்டாய் என்தன் சொல்லு*  நான் உன்னைக் காப்பிட வாராய் 


    செப்பு ஓது மென்முலையார்கள்*  சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு* 
    அப்போது நான் உரப்பப் போய்*  அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!* 

    முப் போதும் வானவர் ஏத்தும்*  முனிவர்கள் வெள்ளறை நின்றாய்! 
    இப்போது நான் ஒன்றும் செய்யேன்*  எம்பிரான் காப்பிட வாராய்!


    கண்ணில் மணல்கொடு தூவிக்*  காலினால் பாய்ந்தனை என்று என்று* 
    எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்* 

    கண்ணனே!  வெள்ளறை நின்றாய்!*  கண்டாரொடே தீமை செய்வாய்! 
    வண்ணமே வேலையது ஒப்பாய்!*  வள்ளலே! காப்பிட வாராய்        


    பல்லாயிரவர் இவ் ஊரில்*  பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
    எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது*  எம்பிரான்!  நீ இங்கே வாராய்* 

    நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!*  ஞானச் சுடரே!  உன்மேனி*
    சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்*  சொப்படக் காப்பிட வாராய்  


    கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்*  கரு நிறச் செம் மயிர்ப் பேயை* 
    வஞ்சிப்பதற்கு விடுத்தான்*  என்பது ஓர் வார்த்தையும் உண்டு* 

    மஞ்சு தவழ் மணி மாட*  மதிற் திருவெள்ளறை நின்றாய்! 
    அஞ்சுவன் நீ அங்கு நிற்க*  அழகனே!  காப்பிட வாராய்


    கள்ளச் சகடும் மருதும்*  கலக்கு அழிய உதைசெய்த* 
    பிள்ளையரசே!*  நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை* 

    உள்ளவாறு ஒன்றும் அறியேன்*  ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
    பள்ளிகொள் போது இது ஆகும்*  பரமனே!  காப்பிட வாராய்   


    இன்பம் அதனை உயர்த்தாய்!*  இமையவர்க்கு என்றும் அரியாய்!* 
    கும்பக் களிறு அட்ட கோவே!*  கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!* 

    செம்பொன் மதில் வெள்ளறையாய்!*  செல்வத்தினால் வளர் பிள்ளாய்! 
    கம்பக் கபாலி காண் அங்கு*  கடிது ஓடிக் காப்பிட வாராய்     


    இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு*  எழில் மறையோர் வந்து நின்றார்* 
    தருக்கேல் நம்பி!  சந்தி நின்று*  தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்* 

    திருக்காப்பு நான் உன்னைச் சாத்த*  தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
    உருக் காட்டும் அந்தி விளக்கு*  இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் 


    போது அமர் செல்வக்கொழுந்து*  புணர் திருவெள்ளறையானை* 
    மாதர்க்கு உயர்ந்த அசோதை*  மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்* 

    வேதப் பயன் கொள்ள வல்ல*  விட்டுசித்தன் சொன்ன மாலை* 
    பாதப் பயன் கொள்ள வல்ல*  பத்தர் உள்ளார் வினை போமே  (2)


    வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை- வெற்பிடை இட்டு*  அதன் ஓசை கேட்கும்* 
    கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்*  காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*

    புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை*  புரை புரையால் இவை செய்ய வல்ல* 
    அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  (2)  


    வருக வருக வருக இங்கே*  வாமன நம்பீ!  வருக இங்கே* 
    கரிய குழல் செய்ய வாய் முகத்து*  எம்  காகுத்த நம்பீ!  வருக இங்கே*

    அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்!*  அஞ்சனவண்ணா*  அசலகத்தார்* 
    பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்*  பாவியேனுக்கு இங்கே போதராயே  


    திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு*  தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்* 
    உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்*  உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்* 

    அருகு இருந்தார் தம்மை அநியாயம்  செய்வதுதான்*  வழக்கோ? அசோதாய்!* 
    வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்*  வாழ ஒட்டான் மதுசூதனனே


    கொண்டல்வண்ணா!  இங்கே போதராயே*  கோயிற் பிள்ளாய்!  இங்கே போதராயே* 
    தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த*  திருநாரணா!  இங்கே போதராயே* 

    உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி*  ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்*
    கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்*  கண்ணபிரான் கற்ற கல்வி தானே


    பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்*  பல்வளையாள் என்மகள் இருப்ப*
    மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று*  இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்* 

    சாளக்கிராமம் உடைய நம்பி*  சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்* 
    ஆலைக் கரும்பின் மொழி அனைய*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  


    போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்*  போதரேன் என்னாதே போதர் கண்டாய்* 
    ஏதேனும் சொல்லி அசலகத்தார்*  ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்* 

    கோதுகலம் உடைக்குட்டனேயோ!*  குன்று எடுத்தாய்!  குடம் ஆடு கூத்தா!* 
    வேதப் பொருளே!  என் வேங்கடவா!*  வித்தகனே!  இங்கே போதராயே


    செந்நெல் அரிசி சிறு பருப்புச்*  செய்த அக்காரம் நறுநெய் பாலால்* 
    பன்னிரண்டு திருவோணம் அட்டேன்*  பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்* 

    இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி*  எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்* 
    உன்மகன் தன்னை அசோதை நங்காய்!*  கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே 


    கேசவனே!  இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே*
    நேசம் இலாதார் அகத்து இருந்து*  நீ விளையாடாதே போதராயே*

    தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்*  தொண்டரும் நின்ற இடத்தில் நின்று*
    தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்*  தாமோதரா!  இங்கே போதராயே 


    கன்னல் இலட்டுவத்தோடு சீடை*  காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு* 
    என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்*  இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்* 

    பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்*  பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்* 
    உன்மகன் தன்னை அசோதை நங்காய்!*  கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே 


    சொல்லில் அரசிப் படுதி நங்காய்!*  சூழல் உடையன் உன்பிள்ளை தானே*
    இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்*  கையில் வளையைக் கழற்றிக்கொண்டு* 

    கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற*  அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து* 
    நல்லன நாவற் பழங்கள் கொண்டு*  நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே 


    வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்*  வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
    பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்*  பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்* 

    கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்*  கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* 
    எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்*  இணையடி என்தலை மேலனவே (2) 


    ஆற்றில் இருந்து*  விளையாடுவோங்களைச்*
    சேற்றால் எறிந்து*  வளை துகிற் கைக்கொண்டு*

    காற்றிற் கடியனாய்*  ஓடி அகம் புக்கு* 
    மாற்றமும் தாரானால் இன்று முற்றும்* 
     வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (2)


    குண்டலம் தாழ*  குழல் தாழ நாண் தாழ*
    எண் திசையோரும்*  இறைஞ்சித் தொழுது ஏத்த* 

    வண்டு அமர் பூங்குழலார்*  துகிற் கைக்கொண்டு* 
    விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்* 
     வேண்டவும் தாரானால் இன்று முற்றும் 


    தடம் படு தாமரைப்*  பொய்கை கலக்கி* 
    விடம் படு நாகத்தை*  வால் பற்றி ஈர்த்து* 

    படம் படு பைந்தலை*  மேல் எழப் பாய்ந்திட்டு* 
    உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்* 
     உச்சியில் நின்றானால் இன்று முற்றும்


    தேனுகன் ஆவி செகுத்துப்* 
    பனங்கனி தான் எறிந்திட்ட*  தடம் பெருந்தோளினால்* 

    வானவர் கோன் விட*  வந்த மழை தடுத்து* 
    ஆனிரை காத்தானால் இன்று முற்றும்*
    அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்


    ஆய்ச்சியர் சேரி*  அளை தயிர் பால் உண்டு*
    பேர்த்து அவர் கண்டு பிடிக்கப்*  பிடியுண்டு* 

    வேய்த் தடந்தோளினார்*  வெண்ணெய் கோள் மாட்டாது*
    அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்* 
     அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் 


    தள்ளித் தளர் நடை யிட்டு*  இளம் பிள்ளையாய்*
    உள்ளத்தின் உள்ளே*  அவளை உற நோக்கிக* 

    கள்ளத்தினால் வந்த*  பேய்ச்சி முலை உயிர்* 
    துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்* 
     துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்


    மாவலி வேள்வியில்*  மாண் உருவாய்ச் சென்று*  
    மூவடி தா என்று*  இரந்த இம் மண்ணினை* 

    ஒரடி இட்டு*  இரண்டாம் அடிதன்னிலே* 
    தாவடி இட்டானால் இன்று முற்றும்* 
     தரணி அளந்தானால் இன்று முற்றும்   


    தாழை தண்-ஆம்பற்*  தடம் பெரும் பொய்கைவாய்* 
    வாழும் முதலை*  வலைப்பட்டு வாதிப்பு உண்*

    வேழம் துயர் கெட*  விண்ணோர் பெருமானாய்* 
    ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்* 
     அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் 


    வானத்து எழுந்த*  மழை முகில் போல்*
    எங்கும் கானத்து மேய்ந்து*  களித்து விளையாடி* 

    ஏனத்து உருவாய்*  இடந்த இம் மண்ணினைத்* 
    தானத்தே வைத்தானால் இன்று முற்றும் 
     தரணி இடந்தானால் இன்று முற்றும் 


    அங் கமலக் கண்ணன்தன்னை*  அசோதைக்கு* 
    மங்கை நல்லார்கள்*  தாம் வந்து முறைப்பட்ட* 

    அங்கு அவர் சொல்லைப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
     இங்கு இவை வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே* (2)