பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
மெச்சு ஊது சங்கம் இடத்தான்* நல் வேய் ஊதி*
பொய்ச் சூதிற் தோற்ற* பொறை உடை மன்னர்க்காய்*
பத்து ஊர் பெறாது அன்று* பாரதம் கைசெய்த*
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் (2)
மலை புரை தோள் மன்னவரும்* மாரதரும் மற்றும்*
பலர் குலைய* நூற்றுவரும் பட்டழிய* பார்த்தன்
சிலை வளையத்* திண்தேர்மேல் முன்நின்ற* செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
காயும் நீர் புக்குக்* கடம்பு ஏறி* காளியன்
தீய பணத்திற்* சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி*
வேயின் குழல் ஊதி* வித்தகனாய் நின்ற*
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
இருட்டிற் பிறந்து போய்* ஏழை வல் ஆயர்*
மருட்டைத் தவிர்ப்பித்து* வன் கஞ்சன் மாளப்-
புரட்டி* அந்நாள் எங்கள்* பூம்பட்டுக் கொண்ட*
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
சேப் பூண்ட* சாடு சிதறித்* திருடி நெய்க்கு
ஆப்பூண்டு* நந்தன் மனைவி கடை தாம்பால்*
சோப்பூண்டு துள்ளித்* துடிக்கத் துடிக்க* அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
செப்பு இள மென்முலைத்* தேவகி நங்கைக்குச்*
சொப்படத் தோன்றி* தொறுப்பாடியோம் வைத்த*
துப்பமும் பாலும்* தயிரும் விழுங்கிய*
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
தத்துக் கொண்டாள் கொலோ?* தானே பெற்றாள் கொலோ?*
சித்தம் அனையாள்* அசோதை இளஞ்சிங்கம்*
கொத்து ஆர் கருங்குழற்* கோபால கோளரி*
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
கொங்கை வன்* கூனிசொற் கொண்டு குவலயத்*
துங்கக் கரியும்* பரியும் இராச்சியமும்*
எங்கும் பரதற்கு அருளி* வன்கான் அடை*
அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பதக முதலை* வாய்ப் பட்ட களிறு*
கதறிக் கைகூப்பி* என் கண்ணா! கண்ணா! என்ன*
உதவப் புள் ஊர்ந்து* அங்கு உறுதுயர் தீர்த்த*
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
வல்லாள் இலங்கை மலங்கச்* சரந் துரந்த*
வில்லாளனை* விட்டுசித்தன் விரித்த*
சொல் ஆர்ந்த அப்பூச்சிப்* பாடல் இவை பத்தும்
வல்லார் போய்* வைகுந்தம் மன்னி இருப்பரே (2)
அரவு அணையாய்! ஆயர் ஏறே!* அம்மம் உண்ணத் துயிலெழாயே*
இரவும் உண்ணாது உறங்கி நீ போய்* இன்றும் உச்சி கொண்டதாலோ*
வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்* வன முலைகள் சோர்ந்து பாயத்*
திரு உடைய வாய்மடுத்துத்* திளைத்து உதைத்துப் பருகிடாயே (2)
வைத்த நெய்யும் காய்ந்த பாலும்* வடி தயிரும் நறு வெண்ணெயும்*
இத்தனையும் பெற்றறியேன்* எம்பிரான்! நீ பிறந்த பின்னை*
எத்தனையும் செய்யப் பெற்றாய்;* ஏதும் செய்யேன் கதம் படாதே*
முத்து அனைய முறுவல் செய்து* மூக்கு உறிஞ்சி முலை உணாயே
தந்தம் மக்கள் அழுது சென்றால்* தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்*
வந்து நின்மேற் பூசல் செய்ய* வாழ வல்ல வாசுதேவா!*
உந்தையார் உன்திறத்தர் அல்லர்* உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்*
நந்தகோபன் அணி சிறுவா!* நான் சுரந்த முலை உணாயே
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட* கள்ளச் சகடு கலக்கு அழிய*
பஞ்சி அன்ன மெல்லடியால்* பாய்ந்த போது நொந்திடும் என்று*
அஞ்சினேன் காண் அமரர் கோவே!* ஆயர் கூட்டத்து அளவன்றாலோ*
கஞ்சனை உன் வஞ்சனையால்* வலைப்படுத்தாய்! முலை உணாயே
தீய புந்திக் கஞ்சன் உன்மேல்* சினம் உடையன் சோர்வு பார்த்து*
மாயந்தன்னால் வலைப்படுக்கில்* வாழகில்லேன் வாசுதேவா!*
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்* சாற்றிச் சொன்னேன் போகவேண்டா*
ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!* அமர்ந்து வந்து என் முலை உணாயே
மின் அனைய நுண் இடையார்* விரி குழல்மேல் நுழைந்த வண்டு*
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்* இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*
என்ன நோன்பு நோற்றாள் கொலோ* இவனைப் பெற்ற வயிறு உடையாள்*
என்னும் வார்த்தை எய்துவித்த* இருடிகேசா! முலை உணாயே (2)
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்* பெறுதும் என்னும் ஆசையாலே*
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்* கண்ணிணையால் கலக்க நோக்கி*
வண்டு உலாம் பூங்குழலினார்* உன் வாயமுதம் உண்ண வேண்டிக்*
கொண்டு போவான் வந்து நின்றார்* கோவிந்தா நீ முலை உணாயே
இரு மலை போல் எதிர்ந்த மல்லர்* இருவர் அங்கம் எரிசெய்தாய்!* உன்
திரு மலிந்து திகழு மார்வு* தேக்க வந்து என் அல்குல் ஏறி*
ஒரு முலையை வாய்மடுத்து* ஒரு முலையை நெருடிக்கொண்டு*
இரு முலையும் முறை முறையாய்* ஏங்கி ஏங்கி இருந்து உணாயே
அங் கமலப் போதகத்தில்* அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்*
செங் கமல முகம் வியர்ப்ப* தீமை செய்து இம் முற்றத்தூடே*
அங்கம் எல்லாம் புழுதியாக* அளைய வேண்டா அம்ம! விம்ம*
அங்கு அமரர்க்கு அமுது அளித்த* அமரர் கோவே! முலை உணாயே
ஓட ஓடக் கிண்கிணிகள்* ஒலிக்கும் ஓசைப் பாணியாலே*
பாடிப் பாடி வருகின்றாயைப்* பற்பநாபன் என்று இருந்தேன்*
ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு* அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி*
ஓடி ஒடிப் போய்விடாதே* உத்தமா! நீ முலை உணாயே
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி* மாதவா! உண் என்ற மாற்றம்*
நீர் அணிந்த குவளை வாசம்* நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*
பார் அணிந்த தொல் புகழான்* பட்டர்பிரான் பாடல் வல்லார்*
சீர் அணிந்த செங்கண்மால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்* பொரு திறற் கஞ்சன் கடியன்*
காப்பாரும் இல்லை கடல்வண்ணா* உன்னை தனியே போய் எங்கும் திரிதி*
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே!* கேசவ நம்பீ! உன்னைக் காது குத்த*
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்* அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (2)
வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி* மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப*
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத* நாராயணா! இங்கே வாராய்*
எண்ணற்கு அரிய பிரானே* திரியை எரியாமே காதுக்கு இடுவன்*
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய* கனகக் கடிப்பும் இவையாம்!
வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்* மகரக்குழை கொண்டுவைத்தேன்*
வெய்யவே காதில் திரியை இடுவன்* நீ வேண்டிய தெல்லாம் தருவன்*
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய* ஒண்சுடர் ஆயர்கொழுந்தே*
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து* மாதவனே! இங்கே வாராய்
வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு* வார்காது தாழப் பெருக்கிக்*
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்* கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்*
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்* இனிய பலாப்பழம் தந்து*
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்* சோத்தம் பிரான்! இங்கே வாராய்
சோத்தம் பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய்* சுரிகுழலாரொடு நீ போய்க்*
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்* குணங்கொண்டு இடுவனோ? நம்பீ*
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்* பிரானே! திரியிட ஒட்டில்*
வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்* விட்டுவே! நீ இங்கே வாராய்
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்!* உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி*
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி* மதுசூதனே என்று இருந்தேன்*
புண் ஏதும் இல்லை உன்காது மறியும்* பொறுத்து இறைப் போது இரு நம்பீ!
கண்ணா! என் கார்முகிலே! கடல்வண்ணா* காவலனே! முலை உணாயே
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி* நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு*
மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்* பசுநிரை மேய்த்தாய்*
சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!* திரு ஆயர்பாடிப் பிரானே!*
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே* விட்டிட்டேன் குற்றமே அன்றே?
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்* என்னை நான் மண் உண்டேனாக*
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்* அனைவர்க்கும் காட்டிற்றிலையே?*
வன் புற்று அரவின் பகைக் கொடி* வாமன நம்பீ! உன்காதுகள் தூரும்*
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே! திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே
மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்* தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று*
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்* காணவே கட்டிற்றிலையே?*
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்* சிரீதரா! உன்காது தூரும்*
கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற* காரிகையார் சிரியாமே
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்* காதுகள் வீங்கி எரியில்?*
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று* விட்டிட்டேன் குற்றமே அன்றே?*
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும்- காது பெருக்கித்* திரியவும் காண்டி*
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட* இருடிகேசா! என்தன் கண்ணே!
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்* கடிகமழ் பூங்குழலார்கள்*
எண்ணத்துள் என்றும் இருந்து* தித்திக்கும் பெருமானே! எங்கள் அமுதே*
உண்ணக் கனிகள் தருவன்* கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்*
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட* பற்பநாபா இங்கே வாராய்
வா என்று சொல்லி என்கையைப் பிடித்து* வலியவே காதிற் கடிப்பை*
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?* காதுகள் நொந்திடும் கில்லேன்*
நாவற் பழம் கொண்டுவைத்தேன்* இவை காணாய் நம்பீ* முன் வஞ்ச மகளைச்
சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட* தாமோதரா இங்கே வாராய்
வார் காது தாழப் பெருக்கி அமைத்து* மகரக்குழை இட வேண்டிச்*
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்* சிந்தையுள் நின்று திகழப்*
பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்* பன்னிரு நாமத்தால் சொன்ன*
ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்* அச்சுதனுக்கு அடியாரே (2)
வெண்ணெய் அளைந்த குணுங்கும்* விளையாடு புழுதியும் கொண்டு*
திண்ணென இவ் இரா உன்னைத்* தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*
எண்ணெய் புளிப்பழம் கொண்டு* இங்கு எத்தனை போதும் இருந்தேன்*
நண்ணல் அரிய பிரானே!* நாரணா! நீராட வாராய் (2)
கன்றுகள் ஓடச் செவியிற்* கட்டெறும்பு பிடித்து இட்டால்*
தென்றிக் கெடும் ஆகில்* வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்*
நின்ற மராமரம் சாய்த்தாய்!* நீ பிறந்த திருவோணம்*
இன்று நீ நீராட வேண்டும்* எம்பிரான்! ஓடாதே வாராய்
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு* பின்னையும் நில்லாது என்நெஞ்சம்*
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி* அழைக்கவும் நான் முலை தந்தேன்*
காய்ச்சின நீரொடு நெல்லி* கடாரத்திற் பூரித்து வைத்தேன்*
வாய்த்த புகழ் மணிவண்ணா!* மஞ்சனம் ஆட நீ வாராய்
கஞ்சன் புணர்ப்பினில் வந்த* கடிய சகடம் உதைத்து*
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச* வாய் முலை வைத்த பிரானே!*
மஞ்சளும் செங்கழுநீரின்* வாசிகையும் நறுஞ்சாந்தும்*
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்* அழகனே! நீராட வாராய்
அப்பம் கலந்த சிற்றுண்டி* அக்காரம் பாலிற் கலந்து*
சொப்பட நான் சுட்டு வைத்தேன்* தின்னல் உறுதியேல் நம்பி!*
செப்பு இள மென்முலையார்கள்* சிறுபுறம் பேசிச் சிரிப்பர்*
சொப்பட நீராட வேண்டும்* சோத்தம் பிரான்! இங்கே வாராய்
எண்ணெய்க் குடத்தை உருட்டி* இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்*
கண்ணைப் புரட்டி விழித்துக்* கழகண்டு செய்யும் பிரானே!*
உண்ணக் கனிகள் தருவன்* ஒலிகடல் ஓதநீர் போலே*
வண்ணம் அழகிய நம்பீ!* மஞ்சனம் ஆட நீ வாராய்
கறந்த நற்பாலும் தயிரும்* கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்*
பிறந்ததுவே முதலாகப்* பெற்றறியேன் எம்பிரானே!*
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்* என்பதனால் பிறர் முன்னே*
மறந்தும் உரையாட மாட்டேன்* மஞ்சனம் ஆட நீ வாராய்
கன்றினை வால் ஓலை கட்டி* கனிகள் உதிர எறிந்து*
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்* பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்*
நின்திறத்தேன் அல்லேன் நம்பீ!* நீ பிறந்த திரு நன்னாள்*
நன்று நீ நீராட வேண்டும்* நாரணா! ஓடாதே வாராய்
பூணித் தொழுவினிற் புக்குப்* புழுதி அளைந்த பொன்-மேனி*
காணப் பெரிதும் உகப்பன்* ஆகிலும் கண்டார் பழிப்பர்*
நாண் இத்தனையும் இலாதாய்!* நப்பின்னை காணிற் சிரிக்கும்*
மாணிக்கமே! என்மணியே!* மஞ்சனம் ஆட நீ வாராய்
கார் மலி மேனி நிறத்துக்* கண்ணபிரானை உகந்து*
வார் மலி கொங்கை யசோதை* மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*
பார் மலி தொல் புதுவைக் கோன்* பட்டர்பிரான் சொன்ன பாடல்*
சீர் மலி செந்தமிழ் வல்லார்* தீவினை யாதும் இலரே (2)
பின்னை மணாளனை* பேரிற் கிடந்தானை*
முன்னை அமரர்* முதற் தனி வித்தினை*
என்னையும் எங்கள்* குடி முழுது ஆட்கொண்ட*
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்! (2)
பேயின் முலை உண்ட* பிள்ளை இவன் முன்னம்*
மாயச் சகடும்* மருதும் இறுத்தவன்*
காயாமலர் வண்ணன்* கண்ணன் கருங்குழல்*
தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்!
தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!
திண்ணக் கலத்திற்* திரை உறிமேல் வைத்த*
வெண்ணெய் விழுங்கி* விரைய உறங்கிடும்*
அண்ணல் அமரர்* பெருமானை ஆயர்தம்*
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!
பள்ளத்தில் மேயும்* பறவை உருக் கொண்டு*
கள்ள அசுரன்* வருவானைத் தான் கண்டு*
புள் இது என்று* பொதுக்கோ வாய் கீண்டிட்ட*
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!
கற்றினம் மேய்த்துக்* கனிக்கு ஒரு கன்றினைப்*
பற்றி எறிந்த* பரமன் திருமுடி*
உற்றன பேசி* நீ ஓடித் திரியாதே*
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்!
ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்!
கிழக்கிற் குடி மன்னர்* கேடு இலாதாரை*
அழிப்பான் நினைந்திட்டு* அவ் ஆழிஅதனால்*
விழிக்கும் அளவிலே* வேர் அறுத்தானைக்*
குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்!
கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்!
பிண்டத் திரளையும்* பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்*
உண்டற்கு வேண்டி* நீ ஓடித் திரியாதே*
அண்டத்து அமரர்* பெருமான் அழகு அமர்*
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்!
மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!
உந்தி எழுந்த* உருவ மலர்தன்னில்*
சந்தச் சதுமுகன்* தன்னைப் படைத்தவன்*
கொந்தக் குழலைக்* குறந்து புளி அட்டித்*
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்!
தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்!
மன்னன்தன் தேவிமார்* கண்டு மகிழ்வு எய்த*
முன் இவ் உலகினை* முற்றும் அளந்தவன்*
பொன்னின் முடியினைப்* பூ அணைமேல் வைத்துப்*
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்!
பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!
கண்டார் பழியாமே* அக்காக்காய் கார்வண்ணன்!*
வண்டு ஆர் குழல்வார* வா என்ற ஆய்ச்சி சொல்*
விண் தோய் மதில்* வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்*
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே! (2)
வேலிக் கோல் வெட்டி* விளையாடு வில் ஏற்றி*
தாலிக் கொழுந்தைத்* தடங்கழுத்திற் பூண்டு*
பீலித் தழையைப்* பிணைத்துப் பிறகிட்டு*
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா!
கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா! (2)
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து* விளையாடும் என்மகன்*
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க* நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா!
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.
கறுத்திட்டு எதிர்நின்ற* கஞ்சனைக் கொன்றான்*
பொறுத்திட்டு எதிர்வந்த* புள்ளின் வாய் கீண்டான்*
நெறித்த குழல்களை* நீங்க முன் ஓடிச்*
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா!
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!
ஒன்றே உரைப்பான்* ஒரு சொல்லே சொல்லுவான்*
துன்று முடியான்* துரியோதனன் பக்கல்*
சென்று அங்குப் பாரதம்* கையெறிந்தானுக்குக்*
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா
கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.
சீர் ஒன்று தூதாய்த்* திரியோதனன் பக்கல்*
ஊர் ஒன்று வேண்டிப்* பெறாத உரோடத்தால்*
பார் ஒன்றிப் பாரதம்* கைசெய்து பார்த்தற்குத்*
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
ஆலத்து இலையான்* அரவின் அணை மேலான்*
நீலக் கடலுள்* நெடுங்காலம் கண்வளர்ந்தான்*
பாலப் பிராயத்தே* பார்த்தற்கு அருள்செய்த*
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!
குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.
பொற்றிகழ்* சித்திரகூடப் பொருப்பினில்*
உற்ற வடிவில்* ஒரு கண்ணும் கொண்ட* அக்
கற்றைக் குழலன்* கடியன் விரைந்து உன்னை*
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா!
மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா!
மின்னிடைச் சீதை பொருட்டா* இலங்கையர்*
மன்னன் மணிமுடி* பத்தும் உடன் வீழத்*
தன் நிகர் ஒன்று இல்லாச்* சிலை கால் வளைத்து இட்ட*
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா!
வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.
தென் இலங்கை மன்னன்* சிரம் தோள் துணிசெய்து*
மின் இலங்கும் பூண்* விபீடண நம்பிக்கு*
என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற*
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா!
வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.
அக்காக்காய்! நம்பிக்குக்* கோல் கொண்டு வா என்று*
மிக்காள் உரைத்த சொல்* வில்லிபுத்தூர்ப் பட்டன்*
ஒக்க உரைத்த* தமிழ் பத்தும் வல்லவர்*
மக்களைப் பெற்று* மகிழ்வர் இவ் வையத்தே.
ஆனிரை மேய்க்க நீ போதி* அருமருந்து ஆவது அறியாய்*
கானகம் எல்லாம் திரிந்து* உன் கரிய திருமேனி வாட*
பானையிற் பாலைப் பருகிப்* பற்றாதார் எல்லாம் சிரிப்ப*
தேனில் இனிய பிரானே* செண்பகப் பூச் சூட்ட வாராய்* (2)
கரு உடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்*
உரு உடையாய்! உலகு ஏழும்* உண்டாக வந்து பிறந்தாய்!*
திரு உடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!*
மருவி மணம் கமழ்கின்ற* மல்லிகைப் பூச் சூட்ட வாராய்
மச்சொடு மாளிகை ஏறி* மாதர்கள்தம் இடம் புக்கு*
கச்சொடு பட்டைக் கிழித்து* காம்பு துகில் அவை கீறி*
நிச்சலும் தீமைகள் செய்வாய்!* நீள் திருவேங்கடத்து எந்தாய்!*
பச்சைத் தமனகத்தோடு* பாதிரிப் பூச் சூட்ட வாராய்.
தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத்* தீமை செய்யாதே*
மருவும் தமனகமும் சீர்* மாலை மணம் கமழ்கின்ற*
புருவம் கருங்குழல் நெற்றி* பொலிந்த முகிற்-கன்று போலே*
உருவம் அழகிய நம்பீ!* உகந்து இவை சூட்ட நீ வாராய்.
புள்ளினை வாய் பிளந்திட்டாய்!* பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்!*
கள்ள அரக்கியை மூக்கொடு* காவலனைத் தலை கொண்டாய்!*
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க* அஞ்சாது அடியேன் அடித்தேன்*
தெள்ளிய நீரில் எழுந்த* செங்கழுநீர் சூட்ட வாராய்.
எருதுகளோடு பொருதி* ஏதும் உலோபாய் காண் நம்பீ!*
கருதிய தீமைகள் செய்து* கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!*
தெருவின்கண் தீமைகள் செய்து* சிக்கென மல்லர்களோடு*
பொருது வருகின்ற பொன்னே* புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்.
குடங்கள் எடுத்து ஏற விட்டுக்* கூத்தாட வல்ல எம் கோவே!*
மடம் கொள் மதிமுகத்தாரை* மால்செய வல்ல என் மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இரு பிளவு ஆக முன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.
சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்!*
சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால் தலை கொண்டாய்!*
ஆமாறு அறியும் பிரானே!* அணி அரங்கத்தே கிடந்தாய்!*
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.
அண்டத்து அமரர்கள் சூழ* அத்தாணியுள் அங்கு இருந்தாய்!*
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!* தூமலராள் மணவாளா!*
உண்டிட்டு உலகினை ஏழும்* ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்!*
கண்டு நான் உன்னை உகக்கக்* கருமுகைப் பூச் சூட்ட வாராய்.
செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி*
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்* இன்று இவை சூட்ட வா என்று*
மண் பகர் கொண்டானை* ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை*
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்* பட்டர்பிரான் சொன்ன பத்தே. (2)
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மா மலர் கொண்டு* மறைந்து உவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதுரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போது இது ஆகும்* அழகனே! காப்பிட வாராய் (2)
கன்றுகள் இல்லம் புகுந்து* கதறுகின்ற பசு எல்லாம்*
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி* நேசமேல் ஒன்றும் இலாதாய்!*
மன்றில் நில்லேல் அந்திப் போது* மதிற் திருவெள்ளறை நின்றாய்!*
நன்று கண்டாய் என்தன் சொல்லு* நான் உன்னைக் காப்பிட வாராய்
செப்பு ஓது மென்முலையார்கள்* சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு*
அப்போது நான் உரப்பப் போய்* அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!*
முப் போதும் வானவர் ஏத்தும்* முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்போது நான் ஒன்றும் செய்யேன்* எம்பிரான் காப்பிட வாராய்!
கண்ணில் மணல்கொடு தூவிக்* காலினால் பாய்ந்தனை என்று என்று*
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்*
கண்ணனே! வெள்ளறை நின்றாய்!* கண்டாரொடே தீமை செய்வாய்!
வண்ணமே வேலையது ஒப்பாய்!* வள்ளலே! காப்பிட வாராய்
பல்லாயிரவர் இவ் ஊரில்* பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது* எம்பிரான்! நீ இங்கே வாராய்*
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!* ஞானச் சுடரே! உன்மேனி*
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்* சொப்படக் காப்பிட வாராய்
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்* கரு நிறச் செம் மயிர்ப் பேயை*
வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு*
மஞ்சு தவழ் மணி மாட* மதிற் திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே! காப்பிட வாராய்
கள்ளச் சகடும் மருதும்* கலக்கு அழிய உதைசெய்த*
பிள்ளையரசே!* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை*
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளிகொள் போது இது ஆகும்* பரமனே! காப்பிட வாராய்
இன்பம் அதனை உயர்த்தாய்!* இமையவர்க்கு என்றும் அரியாய்!*
கும்பக் களிறு அட்ட கோவே!* கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!*
செம்பொன் மதில் வெள்ளறையாய்!* செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
கம்பக் கபாலி காண் அங்கு* கடிது ஓடிக் காப்பிட வாராய்
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு* எழில் மறையோர் வந்து நின்றார்*
தருக்கேல் நம்பி! சந்தி நின்று* தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்*
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த* தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
உருக் காட்டும் அந்தி விளக்கு* இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்
போது அமர் செல்வக்கொழுந்து* புணர் திருவெள்ளறையானை*
மாதர்க்கு உயர்ந்த அசோதை* மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்*
வேதப் பயன் கொள்ள வல்ல* விட்டுசித்தன் சொன்ன மாலை*
பாதப் பயன் கொள்ள வல்ல* பத்தர் உள்ளார் வினை போமே (2)
வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை- வெற்பிடை இட்டு* அதன் ஓசை கேட்கும்*
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்* காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை* புரை புரையால் இவை செய்ய வல்ல*
அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற* அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய் (2)
வருக வருக வருக இங்கே* வாமன நம்பீ! வருக இங்கே*
கரிய குழல் செய்ய வாய் முகத்து* எம் காகுத்த நம்பீ! வருக இங்கே*
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்!* அஞ்சனவண்ணா* அசலகத்தார்*
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்* பாவியேனுக்கு இங்கே போதராயே
திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு* தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்*
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்* உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்*
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான்* வழக்கோ? அசோதாய்!*
வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்* வாழ ஒட்டான் மதுசூதனனே
கொண்டல்வண்ணா! இங்கே போதராயே* கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே*
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த* திருநாரணா! இங்கே போதராயே*
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி* ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்*
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்* கண்ணபிரான் கற்ற கல்வி தானே
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்* பல்வளையாள் என்மகள் இருப்ப*
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று* இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்*
சாளக்கிராமம் உடைய நம்பி* சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்*
ஆலைக் கரும்பின் மொழி அனைய* அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய்
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்* போதரேன் என்னாதே போதர் கண்டாய்*
ஏதேனும் சொல்லி அசலகத்தார்* ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்*
கோதுகலம் உடைக்குட்டனேயோ!* குன்று எடுத்தாய்! குடம் ஆடு கூத்தா!*
வேதப் பொருளே! என் வேங்கடவா!* வித்தகனே! இங்கே போதராயே
செந்நெல் அரிசி சிறு பருப்புச்* செய்த அக்காரம் நறுநெய் பாலால்*
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்* பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்*
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி* எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்*
உன்மகன் தன்னை அசோதை நங்காய்!* கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே
கேசவனே! இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே*
நேசம் இலாதார் அகத்து இருந்து* நீ விளையாடாதே போதராயே*
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்* தொண்டரும் நின்ற இடத்தில் நின்று*
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்* தாமோதரா! இங்கே போதராயே
கன்னல் இலட்டுவத்தோடு சீடை* காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு*
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்* இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்*
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்* பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்*
உன்மகன் தன்னை அசோதை நங்காய்!* கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே
சொல்லில் அரசிப் படுதி நங்காய்!* சூழல் உடையன் உன்பிள்ளை தானே*
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்* கையில் வளையைக் கழற்றிக்கொண்டு*
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற* அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து*
நல்லன நாவற் பழங்கள் கொண்டு* நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்* வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்* பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்*
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்* கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி*
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்* இணையடி என்தலை மேலனவே (2)
ஆற்றில் இருந்து* விளையாடுவோங்களைச்*
சேற்றால் எறிந்து* வளை துகிற் கைக்கொண்டு*
காற்றிற் கடியனாய்* ஓடி அகம் புக்கு*
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்*
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (2)
குண்டலம் தாழ* குழல் தாழ நாண் தாழ*
எண் திசையோரும்* இறைஞ்சித் தொழுது ஏத்த*
வண்டு அமர் பூங்குழலார்* துகிற் கைக்கொண்டு*
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்*
வேண்டவும் தாரானால் இன்று முற்றும்
தடம் படு தாமரைப்* பொய்கை கலக்கி*
விடம் படு நாகத்தை* வால் பற்றி ஈர்த்து*
படம் படு பைந்தலை* மேல் எழப் பாய்ந்திட்டு*
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்*
உச்சியில் நின்றானால் இன்று முற்றும்
தேனுகன் ஆவி செகுத்துப்*
பனங்கனி தான் எறிந்திட்ட* தடம் பெருந்தோளினால்*
வானவர் கோன் விட* வந்த மழை தடுத்து*
ஆனிரை காத்தானால் இன்று முற்றும்*
அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்
ஆய்ச்சியர் சேரி* அளை தயிர் பால் உண்டு*
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப்* பிடியுண்டு*
வேய்த் தடந்தோளினார்* வெண்ணெய் கோள் மாட்டாது*
அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்*
அடியுண்டு அழுதானால் இன்று முற்றும்
தள்ளித் தளர் நடை யிட்டு* இளம் பிள்ளையாய்*
உள்ளத்தின் உள்ளே* அவளை உற நோக்கிக*
கள்ளத்தினால் வந்த* பேய்ச்சி முலை உயிர்*
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்*
துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்
மாவலி வேள்வியில்* மாண் உருவாய்ச் சென்று*
மூவடி தா என்று* இரந்த இம் மண்ணினை*
ஒரடி இட்டு* இரண்டாம் அடிதன்னிலே*
தாவடி இட்டானால் இன்று முற்றும்*
தரணி அளந்தானால் இன்று முற்றும்
தாழை தண்-ஆம்பற்* தடம் பெரும் பொய்கைவாய்*
வாழும் முதலை* வலைப்பட்டு வாதிப்பு உண்*
வேழம் துயர் கெட* விண்ணோர் பெருமானாய்*
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்*
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்
வானத்து எழுந்த* மழை முகில் போல்*
எங்கும் கானத்து மேய்ந்து* களித்து விளையாடி*
ஏனத்து உருவாய்* இடந்த இம் மண்ணினைத்*
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும்
அங் கமலக் கண்ணன்தன்னை* அசோதைக்கு*
மங்கை நல்லார்கள்* தாம் வந்து முறைப்பட்ட*
அங்கு அவர் சொல்லைப்* புதுவைக்கோன் பட்டன் சொல்*
இங்கு இவை வல்லவர்க்கு* ஏதம் ஒன்று இல்லையே* (2)