திருப்புலியூர்

தலபுராணம்: திருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது.இறைவன் மாயபிரான் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி: பொற்கொடி நாச்சியார். தீர்த்தம்: பிரஞ்ஞா சரசு எனப்படும் பூண்சுனைத் தீர்த்தம். விமானம் புருசோத்தம விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. இத்தலம் பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமன் திருமாலைக் குறித்து தவம் புரிந்த்தால் இத்தலம் பீமச் சேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கருவறை வட்டவடிவமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

அமைவிடம்

மாநிலம்: கேரளா மாவட்டம்: ஆலப்புழா அமைவு: திருப்புலியூர் ,

தாயார் : ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
மூலவர் : மாயப்பிரான்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : கோட்டயம்
கடவுளர்கள்: மாயப்பிரான்,ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    3651.   
    கருமாணிக்க மலைமேல்*  மணித்தடம் தாமரைக் காடுகள்போல்* 
    திருமார்வு வாய்கண்கை*  உந்திகால்உடை  ஆடைகள் செய்யபிரான்*
    திருமால் எம்மான் செழுநீர்வயல்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்*  அன்னைமீர்!  இதற்கு என்செய்கேனோ.   (2)

        விளக்கம்  


    • திருப்புலியூர்ப் பெருமானுடைய திவ்யாவயவஸௌந்தரியத்தைக் கண்டு, அவ்வடிவழகல்லது மற்றொன்று அறியாதபடி யீடுபட்டாள் இத்தலைவி –என்று தோழியானவள் தாய்மார்க்கு உரைக்கின்றாள். எம்பெருமானது எழில்நிலமேனியிலே திருமார்வு திருவதரம் திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் முதலானவை சிவந்து விளங்கா நின்றபடியைப் பார்த்தால் ஒரு கருமாணிக்கமலையிலே விசாலமான தாமரைக்காடுகள் பூத்தனவோ! என்னலாம்படி யுள்ளதாம். மாணிக்கம் சிவந்ததுயொழியக் கறுதத்தன்று, இங்குக் கருமாணிக்கமென்பது இல்பொருளுவமை (அபூதோபமை) பரியமாணிக்கக் குன்று ஒன்றுண்டாகி அதன்மேலே தாமரைக் காடுகள் பூக்கப்பெற்றால் அதனை உவமை கூறலாமென்றவாறு. * அரைச்சிவந்த வாடையும் தாமரைமலர்ந்ததாக வருணிக்கப்பட்டதிங்கு. பிரான் என்றது –இவையெல்லாம் காட்டிலெறிந்த நிலாவாகாமே பக்தர்களுக்கு அநுபவிக்கக் கொடுக்குமவனென்கை. அப்படி பக்தர்களனுபவிக்கக் கொடுப்பதற்குக் காரணம் பிராட்டியின் உபதேசமே யென்பது தோன்ற உடனே திருமால் என்றது. குட்டநாட்டுத் திருப்புலியாருமாயன் பேரன்றிப் பேச்சிலன் –பரவ்யூஹ விபவங்களுக்குரிய திருநாமங்களைச் சொல்லுஐகயன்றிக்கே அத்தலத்தெம்பெருமானுடைய திருநாமங்களையே வாய்வெருவா நின்றாள். மலைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றனுள் இத்திருப்பதியுமொன்று. சோழநாட்டுச் சிறுபுலியூரிற்காட்டில் வாசி தோன்றக் குட்டநாட்டுத் திருப்புலியூரென்றது. அன்னைமீரிதற்கென் செய்கேனென்றது தோழிதனக்கும் இப்போதே தெரிந்தமை காட்டிற்றாகும்.


    3652.   
    அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?*  அணிமேருவின் மீதுஉலவும்* 
    துன்னுசூழ் சுடர் ஞாயிறும்*  அன்றியும்  பல்சுடர்களும்போல்*
    மின்னு நீள்முடிஆரம் பல்கலன்*  தான்உடை எம்பெருமான்* 
    புன்னைஅம் பொழில்சூழ்*  திருப்புலியூர்  புகழும்இவளே.

        விளக்கம்  


    • தலைவியின் இந்நிகழ்ச்சிக்குத் தோழியானதான் உடன்பட்டவளல்லள் என்பதைத் தாய்மார்க்கு மெய்ப்பிக்கவேண்டி அன்னைமீரிதற்கென் செய்கேனென்று அடிக்கடி சொல்லுகிறாள் (தோழி) உங்களையுமறியாமல் என்னையுமறியாமல் நேர்ந்த இந்நிகழ்ச்சிக்கு நான் என்செய்யேனென்கிறாள். திருப்புலிவியூரெம்பெருமானது திவ்யாபரண சோபையிலே தலைவியீடுபட்டுப் பேசும்படிகளை விரித்துறைக்கின்றாள் அணிமேருவின்மீதுலவுமென்று தொடங்கி. மேருமலையின்மீது கதிராயிரமிரவி உதித்தாற்போலே திருவபிஷேகமும், நக்ஷத்ரதார கணங்கள் மின்னினாற்போலே பல ஹாராவளிகளும் மற்றும் திருவாபரணங்களும் ஜ்வலிக்குமழகை என்னவென்று சொல்லுவேனென்று இதுவே வாய்வெருவுதலா யிருக்கின்றாளிப்பெண் பிள்ளை. இவ்வளவோடும் நில்லாமல் அத்திருப்பதியின் பொழில்வளங்களையும் புகழாநின்றாள். இவற்றால் இவளுக்கு அத்தலத்தெம்பெருமானோடு கல்வி நேர்ந்ததாகவே நினைக்கலாகிறது என்பது உள்ளுறை.


    3653.   
    புகழும் இவள்நின்று இராப்பகல்*  பொருநீர்க்கடல் தீப்பட்டு*  எங்கும் 
    திகழும்எரியொடு செல்வதுஒப்ப*  செழும்கதிர்ஆழிமுதல்*
    புகழும் பொருபடை ஏந்தி*  போர்புக்கு  அசுரரைப் பொன்றுவித்தான்* 
    திகழும் மணிநெடு மாடம்நீடு*   திருப்புலியூர் வளமே.      

        விளக்கம்  


    • ப்ண் கரதூஷண வதத்தில் பிராட்டி பெருமாளுடைய சௌர்யவீர்யபராக்ரமங்களில் தோற்று * தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம், பபூவஹ்ரு ஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே* என்று அனைத்துக் கொண்டாளென்று கேட்டிருந்தோம், அப்படியே இப்பெண்பிள்ளையும் திருப்புலியூர்த்தலைவன் திருவாழி திருச்சங்கு முதலான திவ்யாயுதங்களை யணிந்துகொண்டு போர்க்களத்திலே சென்று அரக்கரசுரர்களைத் தொலைத்தருளும் பேராற்றலை இரவும் பகலுமிடைவீடின்றிப் புகழ்ந்து கூறாநின்றாள், இதனாலும் இவளுக்கு அத்திருப்பதியெம்பெருமானோடே ஸம்பந்தம் நிகழ்ந்ததாகத் தோன்றுகின்றதென்கிறாள் தோழி. “புகழுமிவள்நின்றிராப்பகல்“ என்பதற்கு, பாட்டின் முடிவிலுள்ள திருப்புலியூர் வளமே யென்பதனோடு அந்வயம். கடல்வண்ணானான பெருமான் “ஜ்வாலாஜாஜ்வல்யமாநா“ என்னும்படியான ஜ்வாலைபொருந்திய திருவாழியாழ்வான் முதலான திவ்யாயுதங்களையணிந்து எழுந்தருள்வதானது “ஒருகடல் நெருப்புக்கொளுத்தி நடந்து செல்லா நின்றதோ! என்று உல்லேகிக்கும்படியாகவுள்ளதென்கிறாளாம் தலைவி, அதனை அநுவாதம் செய்கிறாள் தோழி.


    3654.   
    ஊர்வளம்கிளர் சோலையும்*  கரும்பும்   பெரும்செந்நெலும் சூழ்ந்து* 
    ஏர்வளம்கிளர் தண்பணைக்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்*
    சீர்வளம்கிளர் மூவுலகுஉண்டுஉமிழ்*  தேவபிரான்* 
    பேர்வளம்கிளர்ந்தன்றிப் பேச்சுஇலள்*  இன்று இப்புனைஇழையே.   

        விளக்கம்  


    • திருப்புலியூரின் வளங்களைச் சொல்லத்தொடங்கி “வண்டினமுரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை கொண்டல்மீதணவுஞ்சோலை குயிலினங் கூவுஞ்சோலை அண்டர்கோனமருஞ்சோலை“ என்றாப்போலே சோலைகளின் வளத்தைச் சொல்லுவது, வயலடங்கலும் செல்லுமழகைச் சொல்லுவது, சுற்றிலும் நீர்நிலைகள் சூழ்ந்திருக்குமழகைச் சொல்லுவதாய் இப்பெண்பிள்ளை பேசுமழகுகளை என் சொல்வேன்? இவ்வளவேயோ? அத்தலத்துப் பெருமானுடைய ஆபத்ஸகத்வமென்னுந் திருக்குணத்தலே யீடுபட்டு அவன் ஸகல்லோகங்களையும் தீருவயிற்றிலேவைத்து வெளிநாடு காணவுமிழ்ந்த செயலையும் சொல்லாநின்றாள், இவையொழிய வேறொரு பேச்சுமறியாள். இவை சொல்லும்போது இவளுடைய வடிவு ஆபரணம் பூண்டாற்போலே விளங்குமழகும். அப்ரமேயம், இவற்றாலம் இவளுக்குக் திருப்புலியூர்ப் பெருமானோடு கலவி நேர்ந்திருக்கவேணும்போல் தோன்றுகிறது என்கிறாளாயிற்று தோழி.


    3655.   
    புனைஇழைகள் அணிவும் ஆடைஉடையும்*   புதுக்கணிப்பும்* 
    நினையும் நீர்மையதுஅன்று இவட்குஇது*  நின்று  நினைக்கப்புக்கால்*
    சுனையினுள் தடம்தாமரை மலரும்*  தண் திருப்புலியூர்* 
    முனைவன் மூவுலகுஆளி*  அப்பன்  திருஅருள் மூழ்கினளே.  

        விளக்கம்  


    • ஆறாயிரப்படியருளிச் செயல்காண்மின், “அவன் ஸௌந்தர்ய சீலாதிகுணங்களை உடையனானாலென், வேறேயொருவனை அந்வேஷித்து அவனுக்கும் கொடுக்கக் கடவதாய்ச் சொல்லாநின்றபின்பு இனிச் செய்யலாவதில்லை யென்று தாயர் சொல்ல, தோழியானவள், இயற்கையிற்புணர்ச்சியைச் சொல்லுகை ஈடன்றியேயிருக்கச் செய்தே “இவளயிழக்கிறோம் என்னும் பயத்தாலே முன்னமே திருப்புலியூர் முனைவனான ஸர்வேச்வரனிவளோடே புணர்ந்தருளினானென்கிறாள்“ என்று. தோழியானவள் தலைமகளிடத்து மூன்று விசேஷங்களை யெடுத்துச் சொல்லி, இவளுக்கு திருப்புலியூர்ப் பெருமானோடு கல்வி நேர்ந்திராவிடில் இங்ஙனே காணவொண்ணாது என்று தன்னுடைய அநுமானத்தைத் திடப்படுத்துகின்றாள். புனையிழைகளணிவும் –ஆபரணங்கள் பரம் பூட்டினாப்போலே யிருந்த்தோ? அப்படியில்லையே, கலைத்துப் பூண்டபடி காணா நின்றதே. ஆடையுடையும் –கூறையுடையும் நாமுடுத்தினபடியில்லையே, முகத்தலைபார்த்து உடுத்ததாயோ இருக்கிறது? வேறுபாடு தெரியவில்லையா? புதுக்கணிப்பும் –இவளது வடிவிலே பிறந்த புதுமைகள் தெரியவில்லையோ? இதற்கு முன்பு கோடையோடின வயல்போலே யன்றோ இருந்தது, இப்போது நீர்பாய்ந்த வயல்போலே காண்கிறதில்லையோ? நின்று நினைக்கப்புக்கால் நினையும் நீர்மையதன்று இவட்கிது –எம்பெருமானுடைய படிகளையே நினைக்கமுடியாதபோது அவன் திறத்திலீடுபட்டாருடைய படிகள் நினைக்கப்போமோ? * நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணேயூணென்று மீனச்சொல்லே * என்ற திருவாக்கினாலேயே இப்பாசுரமும் வெளிவந்தபடி பாரீர்.


    3656.   
    திருஅருள் மூழ்கி வைகலும்*  செழுநீர்நிறக் கண்ணபிரான்* 
    திருஅருள்களும் சேர்ந்தமைக்கு*  அடையாளம் திருந்தஉள*
    திருஅருள் அருளால் அவன்*  சென்று   சேர்தண் திருப்புலியூர்* 
    திருஅருள் கமுகுஒண் பழத்தது*  மெல்லியல் செவ்விதழே

        விளக்கம்  


    • இப்பெண்பிள்ளையின் அதரம் இதற்கு முன்பிருந்தபடியும் இப்போதிருக்கிறபடியும் காணமாட்டீர்களோ? அதரத்தில் பழுப்புக்கு அடியறியீர்களோ? திருப்புலியூர்ச்சோலைகளில் வளரும் கமுகம்பழத்தின் பழுப்புப்போலே யிராநின்றபடி பாரீர், அவ்வூர்ப்பெருமான் தன்னுடைய ஸௌந்தர்ய ஸௌலப்யாதிகளைக் காட்டி இவளையீடுபடுத்திக் கொண்டானென்பதற்கும் இவளுக்கு அவனோடு கலவி ப்ராப்தமாயிற்றென்பதற்கும் அடையாளம் ஒன்றிரண்டல்லவே, நீங்களே நன்கு ஆராய்ந்து பார்க்கலாமே யென்கிறாள் தோழி. வைநலும் திருவருள் மூழ்கி –அப்பெருமானுடைய திருவருட்கடலிலே இவள் அவகாஹிக்கப்பெற்றது இன்று நேற்று என்னலாயிருந்த்தோ? நெடுநாளாகவேயன்றோ இவளுக்கு இத்தொடர்பு நேர்ந்துவருவது அவனுமிவளைத் தன்னுடைய ஸௌந்தர்ய ஸௌலப்யங்களைக் காட்டியன்றோ அகப்படுத்திக் கொண்டது. அவனுடைய விஷயீகாரம் இவள் பக்கலிலே ஒரு மடைசெய்திருக்கைக்கு அடையாளம் செவ்வனேயுள இது நீ எப்படியறிந்தாயென்று கேட்கிறாயோ? சொல்லுகிறேன் கேளாய் (மெல்லியல்செவ்விதழ் கமுகொண்பழத்தது) மெல்லியிலாளான இப்பெண்பிள்ளையினுடைய அதரம் அழகிய கமுகம் பழம்போலேயிராநின்றது, இதுகொண்டு ஐயமற அறியலாயிராநின்றதில்லையோ வென்றாளாயிற்று.


    3657.   
    மெல்இலைச் செல்வவண் கொடிப்புல்க*   வீங்குஇளம்தாள்கமுகின்* 
    மல்இலை மடல்வாழை*  ஈன்கனி சூழ்ந்து  மணம்கமழ்ந்து*
    புல்இலைத் தெங்கினூடு*  கால் உலவும்தண் திருப்புலியூர்* 
    மல்லல்அம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்*   இம் மடவரலே   

        விளக்கம்  


    • திருப்புலியூரிலுள்ள அஃறிணைப் பொருள்களுங்கூட ஒன்றோடொன்று கலந்து பரிமாறி வாழாநிற்கு மியல்வைக்கண்டு இத்தலைவியும் அத்திருப்பதி யெம்பெருமானோடே கலந்துவாழப்பெற்றாளென்கிறாள் தோழி. கமுகமரத்திலே வெற்றிலைக் கொடி படர்ந்திருக்கையாகிற சேர்த்தி முதலடியிலே கூறப்பட்டது. ஸ்ரீ குணரத்நகோசத்தில் (3) * அநுகல த்துகாண்டாலிங்கநேத்யாதிச்லோகத்தில் ஸ்ரீரங்கநாதனைக் கற்பகத்தருவாகவும், ஸ்ரீரங்கநாச்சியாரைக் கற்பக்க் கொடியாகவும் உருவகப்படுத்திக் கூறியிருப்பது இங்கே நினைக்கத்தக்கது. இதற்குமேல், தென்றலானது வாழைத்தோப்பிலே புகுந்து புறப்பட்டுத் தென்னத்தோப்பிலே வீசாநின்றதென்று சொல்லுகிறவிதனால் இதுவுமொரு விலக்ஷணஸம்ச்லேஷமென்று காட்டினபடி. ஆக இப்படிப்பட்ட வாய்ப்பு அமைந்த தலத்தில் இவளும் தானுகந்த விஷயத்தை அணையப்பெற்றது வியப்பன்றே, ப்ராப்தமேயென்றாளாயிற்று.


    3658.   
    மடவரல் அன்னைமீர்கட்கு*  என்சொல்லிச் சொல்லுகேன்?  மல்லைச்செல்வ* 
    வடமொழி மறைவாணர்*  வேள்வியுள் நெய்அழல்வான் புகைபோய்த்*
    திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்*  தண் திருப்புலியூர்* 
    படஅரவுஅணையான் தன்நாமம் அல்லால்*  பரவாள் இவளே.

        விளக்கம்  


    • திருப்புலியூரின் வைதிகஸம்ருத்தியையுங்கண்டு இத்தலைவி அவ்வூர்த்தலைவன் பக்கலிலேயீடுபாடு கொண்டாளென்கிறான் தோழி. தாய்மார் தோழியை நோக்கி “இப்பெண்பிள்ளை நாங்கள் உன்கையில் காட்டிக்கொடுத்திருக்க, இவள் அதிப்ரவ்ருத்தி பண்ணும்படி நீ எங்ஙனே விட்டிருந்தாய்? என்று கேட்க, அதற்குத் தோழி உத்தரங் கூறுகின்றாள் போலும் –அன்னைமீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன்? –இவள் எனக்கு விதேயை என்று சொல்லுவேனோ? இவளுடைய அதிப்ரவ்ருத்திக்கு நானும் கூட்டாயிருந்தேனென்று சொல்லுவேனோ? இவள் என்னைக் கடந்து போனாளென்று சொல்லுவேனோ? என்ன பாசுரமிட்டுச் சொல்லுவேன்? எனக்கொன்றும் தெரிகிறதில்லையேயென்று கையைப் பிசைகிறாள் தோழி. மல்லைச்செல்வ வடமொழி மறைவாணர் –தமிர்வேத்த்தில் ஊன்றியிருக்குமிவள் வடமொழிவேதம் வல்லார் வாழுமிடத்திலே ப்ரணையானாள். தமிழ்வேத்த்திற்கு நோக்கு அர்ச்சாவதார கைங்கரியம், வடமொழி வேத்த்திற்கு நோக்கு தேவதாந்தர்யாமிஸமாராதனம், அதாவது யஜ்ஞயாகாதிகள். அவ்வடமொழி வேதம் வல்லவர்கள் நெருப்பிலே நெய்யைக் கொட்டி ஹோமங்கள் பண்ண, அதினின்று கிளம்பின பவித்திரமான புகையானது விண்ணுலகமளவும் வளர்ந்து அங்குள்ள விமானசாரிகளின் கண்ணை மறைக்கின்றதாம், இவ்வதிசயோக்திகளினால் யஜ்ஞயாகங்களின் சிறப்பு தெரிவிக்கப்பட்டதாகும். இப்படிச் சிறப்பாக வைதிக்க்ரியைகள் நடைபெறுமிடமானது திருநாம்மல்லது வேறொன்று சொல்லவறியாதவிவள் அப்பெருமானையே மணவாளனாகக் கொண்டாளென்னுமிடத்து ஐயமுண்டோ.


    3659.   
    பரவாள் இவள் நின்று இராப்பகல்*  பனிநீர்நிறக் கண்ணபிரான்* 
    விரவார்இசை மறை வேதியர்ஒலி*  வேலையின்  நின்றுஒலிப்ப*
    கரவார் தடம்தொறும் தாமரைக்கயம்*  தீவிகை நின்றுஅலரும்* 
    புரவார் கழனிகள் சூழ்*  திருப்புலியூர்ப்  புகழ்அன்றிமற்றே 

        விளக்கம்  


    • பாட்டினடியிலுள்ள பரவாளிவள் என்பதற்கு, பாட்டின் முடிவிலுள்ள திருப்புலியூர்ப்புகழன்றிமற்றே என்பதோடு அந்வயங்காண்க. திருப்புலியூரின் புகழை வாய்விட்டுச் சொல்லுவதுதவிர வேறொன்றுமறியாளித்தலைவி –என்கிறாள் தோழி. திருப்புலியூரின் புகழைப் பேசுவதாவது, அத்தலத்திலுறையும் பெருமானது வடிவழகைப் பேசுவதும், அங்குள்ள பாகவதர்களின் வேதகோஷம் முதலியவற்றைப் பேசுகையும், ஊரின் நீர்வள நிலவளங்களைப் பேசுவது மேயாதலால் இவை மூன்றையும் பேசுகின்றாளென்பது முறையே மூன்றடிகளாலும் தெரிவிக்கப்பட்டது. பனிநீர்க் கண்ணபிரானென்பதனால் திருப்புலியூர்ப்பெருமானுடைய வடிவழகும் சில குணமும் சொல்லிற்று. வைதிகர்களின் வேதகோஷம் கடல்போல் முழங்கும் பெருமை இரண்டாமடியிற் சொல்லிற்று. முதலைகள் மிக்க பொய்கைகள் தோறும் தாமரைகள் நிலைவிளக்கெரியுமாபோலே மலராநிற்குமழகு மூன்றாமடியிலே சொல்லிற்று. ஆக இவையே இவளுக்கு வாய்வெருவுதலாயிருத்தலால் அத்தலத்தெம்பெருமானோட்டைக் கலவி இவளுக்கு நேர்ந்திருக்கவேணுமென்றாளாயிற்று.


    3660.   
    அன்றி மற்றோர் உபாயம்என்*  இவள்அம்தண் துழாய்கமழ்தல்* 
    குன்றமாமணி மாடமாளிகைக்*  கோலக்  குழாங்கள் மல்கி*
    தென்திசைத் திலதம்புரை*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    நின்ற மாயப்பிரான் திருவருளாம்*  இவள் நேர்பட்டதே.  

        விளக்கம்  


    • இத்தலைவி திருப்புலியூர்ப் பெருமானுடைய கலவியைப் பெற்றாளென்னுமிடத்திற்கு ஒருவிதமான அந்யதாஸித்தியும் சொல்லமுடியாத நல்லடையாளமுண்டென்று மூதலிக்கிறாள் தோழி. இவள் அந்தண்டுழாய்கமழ்தல் அன்றிமற்றோருபாயமேன்? –இவளுடம்பிலே திருத்துழாய்ப்பரிமளம் கமகமவென்று கமழின்றபடியைக் கண்டீர்களில்லையோ? இவளுடம்பிலேயிலாவது உங்களுடம்பிலாவது திருத்துழாய் நாறுகின்றதோ? எம்பெருமானுடைய திருமேனியில் அணைந்தால்ல்லது திருத்துழாய் கமழ ப்ரஸக்தியுண்டோ? “ராஜபுத்ரனை யணையாதார்க்குக் கோயிற்சாந்து நாறுகைக்கு விரகுண்டோ?“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. இவளுடம்பில் திருத்துழாய் கமழ்வரும் நிச்சயிக்கப்படுமது என்னென்ன, மேல் மூன்றடிகளாலும் அது சொல்லப்படுகிறது. மலைபோலே அசைக்கமுடியாத மாடங்களும் மாளிகைகளும் திரள் திரளா மிக்கு, தென்திசைக்குத் திலகம்போல் விளங்காநின்ற குட்டநாட்டுத் திருப்புலியூரிலே நின்ற மாயப்பிரானுடைய திருவருளுக்கே இவள் இலக்காயின ளென்பது நிச்சயிக்கத் தட்டுண்டோ? இது நீங்களும் இசையத்தக்க நல்லடையாளமன்றோ என்று தோழித் சொல்லித் தலைக்கட்டினாளாயிற்று.


    3661.   
    நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்*  நாயகன் தன்அடிமை* 
    நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன் சொல்*
    நேர்பட்ட தமிழ்மாலை*  ஆயிரத்துள் இவை பத்தும் 
    நேர்பட்டார்*  அவர் நேர்பட்டார்*  நெடுமாற்கு அடிமை செய்யவே.   (2)

        விளக்கம்  


    • இப்பதிகம் கற்றவர்கள் இவ்வாத்மாவுக்குச் சிறந்த புருஷார்த்தமான பகவத்கைங்கரியத்தைப் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார். முன்னி ரண்டடிகளில் ஆழ்வாரதம் பெருமை சொல்லுகிறது. அடுத்தபதிகம் * நெடுமாற்கடிமை, அதில் பாகவத கைங்கர்யமே பரமபுருஷார்த்தமென்பது அறுதியிடப்படுவதால் அப்பெருவெள்ளம் இப்பாட்டிலேயே பொசிந்து காட்டுகிறது தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் என்று. ஆக, எம்பெருமானுடைய வடிவழகு முதலான திருக்குணங்களை யனுபவித்து அதனாலுண்டான மகிழ்ச்சியினாலே பகவச்சேஷத்வ காஷ்டையில் நின்ற ஆழ்வார், சொல்வாய்ப்பை யுடைத்தாம்படி யருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தையும் ஓதவல்லவர்கள் தொண்டர்பால் வியாமோஹமே வடிவெடுத்தவனான எம்பெருமானுக்கு அடிமைசெய்ய வாய்த்தவர்களாவர் என்று பயனுரைத்தாராயிற்று.