திருதண்கால்

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தலவரலாறு பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம்புரிந்தருளிய திருத்தலம். மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம்.

அமைவிடம்

பெயர்: திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைவிடம் ஊர்: திருத்தங்கல் ,
(திருத்தண்கால்) மாவட்டம்: விருதுநகர் மாநிலம்: தமிழ்நாடு,

தாயார் : ஸ்ரீ செங்கமல தாயார்
மூலவர் : ஸ்ரீ நின்ற நாராயணன்
உட்சவர்: --
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : விருதுநகர்
கடவுளர்கள்: ஸ்ரீ நின்ற நாராயணன்,ஸ்ரீ செங்கமல தாயார்


திவ்யதேச பாசுரங்கள்

    1399.   
    பேரானை*  குறுங்குடி எம் பெருமானை*  திருத்தண்கால் 
    ஊரானை*  கரம்பனூர் உத்தமனை*  முத்து இலங்கு
    கார் ஆர் திண் கடல் ஏழும்*  மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு* 
    ஆராது என்று இருந்தானைக்*  கண்டது தென் அரங்கத்தே.  

        விளக்கம்  


    • “கரம்பனூருத்தமனை” என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் காண்மின்:- “வழிக்கரையிலே திருவாசலுக்கு ஒரு கதவிடாதே வந்து கிடக்கிறவனை.” இதற்கு அரும்பதவுரை இட்ட ஒருவர் – “எல்லாரும் நடக்கும் வழியாகையாலே ஸேவிப்பர்ர் மிகுகையால் கதவிட அவஸாமில்லை யென்று கருத்து” என்றெழுதி வைத்தார்; அது பொருளன்று; அவ்விடத்துக் கோபுர வாசலுக்குக் கதவு இல்லாதிருந்தமை சொன்னபடி. அதனை ஸௌலப்ய பரம காஷ்டைக்கு அநுகுணமாகத் திருவுள்ளம்பற்றி சாடுக்தியாகப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்தபடி. இப்படிப்பட்ட ஸௌலப்யத்தைக் கணிசித்தே உத்தமன் என்று திருநாமமிடப் பெற்றான்போலும் என்பதும் தொனிக்கும். ஆராதென்றிருந்தானை – ஜகத்ரக்ஷணம் எவ்வளவு பண்ணினாலும் ஒன்றும் செய்திலனாக நினைத்திருக்குமிருப்பைச் சொன்னபடி.


    2068.   
    பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப*  பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று* 
    செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்* சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து* ஆங்கே-
    தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்* தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு* 
    நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன* நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!   

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் “துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்ற படியே தன் பெண்பிள்ளை சோர்வுற்றபடியைக் கண்ட திருத்தாயார் ‘இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாகிலும் வழிப்படக்கூடுமோ‘ என்றெண்ணி ‘நங்காய்! நீ இங்ஙனே வாய்விட்டுக் கூப்பிடுகையும் மோஹிக்கையுமாகிற இவை உன்னுடைய பெண்மைக்குத் தகாது, இக்குடிக்கும் இழுக்கு‘ என்று சொல்ல; அப்படி அவள் ஹிதஞ் சொன்னதுவே ஹேதுவாக மேன்மேலும் அதிப்ரவருத்தியிலே பணைத்தபடியைச் சொல்லுகிற பாசுரம் இது. பொங்கார் மெல்லிளங்கொங்கை பொன்னே பூப்ப – விரஹ வேதனையால் உடலில் தோன்றும் நிறவேறுபாடு பொன்பூத்தலாகச் சொல்லப்படும்; பசலை நிறம் என்பதும் அதுவே. இதைப்பற்றிக் குறுந்தொகையில் ஒரு செய்யுளுண்டு; அதாவது-“ஊருண்கேணியுண்டுறைத் தொக்க பாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பாத்தலானே“ (399) என்பதாம். ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்துகிடக்கும் பாசிபோன்றது பசலை நிறம்; தண்ணீரில் நாம் கைவைத்தோமாகில் கைபட்டவிடங்களில் பாசி நீங்கும்; கையை எடுத்து விட்டோமாகில் மறுபடி அவ்விடமெல்லாம் பாசி மூடிக்கொள்ளும்; அதுபோல, கலவியில் கணவனுடைய கைபடுமிடங்களில் பசலை நிறம் நீங்கும்; அணைத்த கை நெகிழ்த்த வாறே அப்பசலைநிறம் படரும்; ஆதலால் பாசிபோன்றது பசலைநிறம் என்றபடி. (தொடுவுழித் தொடுவுழி – தொட்ட விடங்கள் தோறும். விடுவுழி விடுவுழி- விட்ட விடங்கள் தோறும். பரத்தலான் – பரவுகிறபடியினாலே.) பொருகயல் கண்ணீரரும்ப – சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்றனவாகக் கண்கள் வருணிக்கப்படும். அப்படிப்பட்ட கண்கள் நீர்பெருக நின்றபடி. காதலிகளின் கண்களில் நீர்பெருகுதல் எப்போதுமுள்ள தொன்று; கலவி நிகழுங்காலத்தில் ஆனந்தக் கண்ணீர் பெருகும்; பிரிந்து வருந்துங் காலங்களில் சோகக் கண்ணீர் பெருகும். அதுவாயிற்று இங்குச் சொல்லுகிறது. முலையிலே பசலை நிறம் குடியிருந்தாற்போலே கண்ணிலே சோக பாஷ்பம் குடியிருந்தது. கீழ்பாட்டில் “துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாள்“ என்றது; இங்கு “கண்ணீர் அரும்ப“ என்கிறது; விரஹத்தீயாலே உள்ளுலர்ந்து உழக்குப் பாலைக்காய்ச்சினால் வாயாலே பொங்கி வழியாநிற்கச் செய்தேயும் கீழே நீர் அற்றிருக்குமாபோலே கொள்க. போந்து நின்று – ‘நாயகன் தானே வந்து மேல்விழ வேண்டும்படியான முலையழகை யும் கண்ணழகையுமுடைய நீ மேலவிழுகை பெண்மைக்குப் போராது காண்‘ என்று தாய்சொன்ன ஹிதம் தனக்குச் செவிசுட விருக்கையாலே, நெருப்புட்பட்ட வீட்டில் நின்றும் பதறிப் புறப்படுமாபோலே அத்தாய் இருந்த அகத்தில் நின்றும் சடக்கெனப் புறப்பட்டாள். ஸ்ரீவிபீஷணாழ்வான் தன் உபதேசத்திற்குடன்படாத ராவணன் சொன்ன திரஸ்கார வார்த்தையைக் கேட்டபின் ஒரு கணப்பொழுதும் அங்குத் தங்கியிருக்கமாட்டாமல் விரைந்து புறப்பட்டாற்போல. நின்று – தரிப்புப் பெற்று நின்று என்றபடி. ஹிதஞ்சொன்ன தாயினிருப்பிடத்தை விட்டு அப்புறப்பட்டவாறே கால்பாவி நின்றாளாயிற்று. நாயகன் பக்கலில் முகம் பெறாத வளவில் ஓரிடத்தில் கால்பாவிநிற்கக் கூடுமோவென்னில்; தன்னுடைய பதற்றத்திற்குத் தான்வந்ததே காரணமாகத் தரிப்புப்பெற்று நின்றாளென்க. இலங்கையைவிட்டு ஆகாசத்திற்கிளம்பின விபீஷணாழ்வான் ஸ்ரீராமகோஷ்டியில் முகம் பெறாதிருக்கச் செய்தேயும் ராவண பவனத்தைவிட்டு நீங்கின வளவையே கொண்டு ஆகாசத்திலே கால்பாவி நின்றாற்போல. “உத்தரம் தீரமாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டத“ என்றார் வால்மீகி பகவான். (வ்யதிஷ்டத – நன்றாகத் தரித்து நின்றார் என்றபடி.) செங்காலமடப்புறவம் பெடைக்குப் பேசுஞ் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்தாங்கே – பாம்புக்கு அஞ்சியோடினவன் புலியின் வாயிலே விழுந்தாற்போலேயாயிற்று. தாயின் வாய்ச்சொல் பாதகமாயிருக்கிறதென்று வெளியிலே வந்தவளுக்கு அதனிலுங் கொடிய சொல் செவியிலே விழுந்தது; அதாவது, புறா ஆணும் பெண்ணுங்கூடிக் கொஞ்சும் பேச்சுக்கள் செவிப்பட்டன! அந்தோ! இவையுங்கூடத் தம் தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழாநி்ற்க நம் நிலைமை இங்ஙனேயாயிற்றே! என்று உடலுருகினாள்; பண்டு அவனும் தானும் இங்ஙனே கலந்து பரிமாறினபடிகளை நினைத்துக்கொண்டான்; பின்னையும் உடலுருகினாள். (செங்காலமடப்புறவம்) ஆண் புறாவின் சிவந்த கால்கள் நாயகனுடைய செந்தாமரையடிகளை நினைப்பூட்டி வருத்தினபோலும். இது கண்ணுக்கு விஷமானபடி. (பெடைக்குப் பேசும் சிறுகுரல்) இது காதுக்கு விஷமானபடி. இங்ஙனே அவன் ரஹஸ்யமாக நம் காதிலே பேசும் பேச்சுக்கள் கேட்கப் பெறுவது என்றோ வென்று உடலுருகினாளென்க. (ஆங்கே தண்காலும் இத்யாதி) இவற்றாலே ஆற்றாமை மீதூர்ந்தவாறே நாயகனோடு பரிமாறுதற்கான ஸங்கேத ஸ்தலங்களைப்பற்றி வாய்விட்டுக் கூப்பிடத் தொடங்கினாள். திருத்தண்கால், திருக்குடந்தை, திருக்கோவலூர் முதலான திருப்பதிகளைச் சொல்லிப் பாடத் தொடங்கினாள். தண்கால் – குளிர்ந்த காற்று என்றபடி. அங்குள்ள எம்பெருமான் குளிர்ந்த தென்றல் போலவே ச்ரமஹமான வடிவை யுடையன யிருக்கையாலே அத்தலத்திற்கே தண்காலென்று திருநாமமாயிற்றென்ப. பண்டு அப்பெருமான் தன்னை அணைக்கிறபோது சிரமமெல்லாந் தீர்ந்த மிக இனிமையாயிருக்கையாலே மீண்டும் அங்ஙனேயாக வேணுமென்று தண்காலைப் பாடினாள். (தண்குடந்தை நகரும்பாடி) எம்பெருமான் அமுது செய்த போனகம் சேஷபூதர்க்கு ஸ்வீகரிக்கவுரியது‘ என்று முறையிருக்க, திருக்குடந்தை யாராவமுதாழ்வார், தமக்கு ஆக்கின திருப்போனகத்தை முற்படத் திருமழிசைப்பிரானை அமுதுசெய்யப் பண்ணுவித்துப் பி்ன்னைத் தாம் அமுது செய்தாரென்று ஒரு ப்ரஸித்துயுண்டு. இப்படியாக அன்பரோடு புரையறக்கலந்து பரிமாறுகிறவனென்று ஸாபிப்ராயமாகத் திருக்குடந்தையைப் பாடினாள். (தண்கோவலூர்பாடி) ‘பாவருந்தழிழாற் பேர்பெறு பனு வற் பாவலர் பாதிநாளிரவின், மூவரு நெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் (பொய்கையார் பூதத்தார் பேயார்) மூவரும் பகவத் ஸ்வரூபத்தை நன்கறிந்து அநுபவித்து ஆனந்தப் பெருவெள்ளமெய்தின வரலாற்றை நெஞ்சிற்கொண்டு திருக்கோவலுரைப் பாடினா ளென்க. இவ்விடத்து வியாக்கியான வாக்கியங் காண்மின்;- ‘ஆத்ரிதர்வந்து கிட்டினால் பின்னை அவர்களோடு முறையழியப் பரிமாறுகையன்றியே தானே மேல்விழுந்து ஸம்ச்லேஷித்த விடமாயிற்று, திருக்கோவலூராகிறது. அவர்கள் மழைகண்டு ஒதுங்க அவர்களிருந்தவிடத்திலே தானே சென்று தன்னை அவர்கள் நெருக்கத் தான் அவர்களை நெருக்க இப்படி பரிமாறி, அவர்கள் போனவிடத்திலும் அவ்விடத்திலே நிற்கிறானிறே * வாசல் கடைகழியாவுள் புகா என்று“.- ஆட – திருத்தண்காலையும் திருக்குடந்தையையும் திருக்கோவலூரையும் வாயாரப் பாடினவிடத்திலும் த்ருப்தி பிறவமையாலே ஆடவும் தொடங்கினாள்; இப்படி இவள் ஆடுகிறபடியைக் கண்டும் பாடுகிறபடியைக் கேட்டும் தாயானவள் ‘நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை?“ என்றாள்; (அதாவது சேதநலாபம் ஈச்வரனுக்குப் புருஷார்த்தமே யன்றி ஈச்வரலாபம் சேதநனுக்குப் புருஷார்த்தமன்றே; அவன்றன்னுடைய பேற்றுக்கு அவன்றானேயன்றோ பதறவேணும்; நீ இங்ஙனே பதறக்கடவையோ? என்றாள். இவள் இது சொன்னதுவே ஹேதுவாகப் பரகாலநாயகி நறையூரும் பாடுவாள் நவில்கின்றாள். * பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமல மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறை யூரிலே சென்று சேரப்பெறுவது எந்நாளோ! என்னாநின்றாளென்க. ‘பாடுவான்‘ என்ற பாடமுமுண்டு; வான் விகுதிபெற்ற வினையெச்சம்.


    2251.   
    தமர் உள்ளம் தஞ்சை*  தலை அரங்கம் தண்கால்,* 
    தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,*  - தமர் உள்ளும்-
    மாமல்லை கோவல்*  மதிள் குடந்தை என்பரே,* 
    ஏ வல்ல எந்தைக்கு இடம். 

        விளக்கம்  


    • எம்பெருமான் திருவுற்ற முவந்து எழுந்தருளியிருக்குமிடங்களிற் சிலவற்றை யெடுத்துக் கூறுகின்றாரிதில். அன்பருடைய நெஞ்சகம். தஞ்சைமாமணிக்கோயில், திருப்பதிகளெல்லாவற்றினும் தலையான திருவரங்கம், திருத்தண்கால், திருமலை, திருப்பாற்கடல், திருக்கடன்மல்லை, திருக்கோவலூர், திருக்குடந்தை – என்னு மிவ்விடங்களை இங்கெடுத்தது மற்றுமுள்ள திருப்பதிகட்கும் உபலக்ஷணமென்க அன்பருடைய நெஞ்சகமே மிகவும் ஆதரணீயமா யிருத்தலால் ‘தமருள்ளம்‘ என்று முற்படக் கூறப்பட்டது. ஏவல்ல – ஏ-அம்பு, பாகவத விரோதிகளின் மீது அம்புகளைச் செலுத்த வல்ல ஸ்வாமி என்கை.


    2708.   
    ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான்அவனைக்
    காரார் திருமேனி காணும் அளவும்போய் 
    சீரார் திருவேங்கடமே திருக்கோவ 
    லூரே*(2)--மதிள்கச்சி ஊரகமே பேரகமே
    பேரா மருதுஇறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே 
    பேர்ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் 
    ஆராமம் சூழ்ந்த அரங்கம்*--கணமங்கை  (2)

        விளக்கம்  


    • பந்தடிக்கத் தொடங்கிக் குடக்கூத்திலேயகப்பட்டு மெலிந்த நான், என்னை இப்பாடு படுத்தினவனுடைய காரார்ந்த திருமேனியைக்கண்டு களிக்கப் பெறுமளவும் அவன் குணங்கள் கொண்டாடி யிருக்கும் தேசமெங்கும் நுழைந்து, விரஹம் தின்ற என்வடிவைக் காட்டி அவன் குணங்களை யழித்து வழியில்லா வழியினாலாயினும் அவனைப் பெறக்கடவேனென்று தன் துணிவை வெளியிடுகிறாள். கச்சியூரகம் – காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஸ்ந்நிதி, பேரகம் – அப்பக்குடத்தான் ஸந்நிதி. பேரா மறுதிறுத்தான் – ‘பேரா‘ என்பதை மருதுக்கு விசேஷணமாக யோஜிப்பது, பேராத (அஸுராவேதத்தாலே) ஸ்திரமாக நின்ற யமளார்ஜுநங்களை என்றபடி. அன்றியே, பேரா என்பதை செய்யாவென்னும் வாய்பாட்டிறந்தகால் வினையெச்சமாகக் கொண்டு (பேர்ந்து என்றபடியாய்) தளர் நடையிட்டுக் கொண்டு சென்று மருதுகளை முறித்தானென்றுமாம். எண்ணருஞ்சீர்ப் பேராயிரமும் பிதற்றி என்றவிடத்துப் பெரிய வாச்சான்பிள்ளையின் ஸ்ரீஸூக்தி காண்மின் – “குணகதநம் பண்ணுகைக்கு ஒரு ஸ்ரீ ஸஹஸ்ர நாம்முண்டிறே, அப்படி குணஹாநிக்கும் ஒரு ஸஹரநாமம் பண்ணுகிறேன்“


    2776.   
    பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,*
    தொல்நீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,*
    என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,*
    மன்னும் கடல்மல்லை மாயவனை,*  -வானவர்தம்-

        விளக்கம்  


    • வல்லவாழ் – மலைகாட்டுத் திருப்பதிகள் பதின்முன்றனுள் ஒன்று, நம்மாழ்வாராலும் மங்களாசாஸனஞ் செய்யப்பெற்ற தலம். இதனைத் திருவல்லாய் என்று மலையாளர் வழங்குகின்றனர். வல்லவாழ்ப் பின்னை மணாளனை – நப்பின்னைப் பிராட்டியை மணம்புரிவதற்குக் கொண்ட கோலத்துடன் திருவல்லவாழில் இவ்வாழ்வார்க்கு ஸேவைஸாதித்தன்ன் போலும். பேர் –திருப்பேர்நகர், அப்பக்குடத்தான் ஸந்நிதி. பேரில் பிறப்பிலியே – அடியவர்களுக்காகப் பலபல பிறவிகள் பிறந்திருந்தும் இதுவரை ஒரு பிறப்பும் பிறவாதவன்போலும் இனிமேல்தான் பிறந்து காரியஞ் செய்யப் பாரிப்பவன்போலும் ஸேவைஸாதிக்கிறபடி. தோளாமணிச்சுடரை – தோளுதலாவது துளைத்தல், துளைத்தல் செய்யாத மணி யென்றது – அநுபவித்து பழகிப் போகாமல் புதிதான ரத்னம் என்றபடி. (துளைவிட்டிருந்தால் நூல்கோத்து அணிந்து கொள்ளுவர்கள்) “அநாலித்தம் ரத்நம்“ என்று வடநூலாரும் சொல்லுவர்கள்.