விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாடும் ஊரும் அறியவே போய்*  நல்ல துழாய் அலங்கல்- 
    சூடி*  நாரணன் போம் இடம் எல்லாம்*  சோதித்து உழிதர்கின்றாள்* 
    கேடு வேண்டுகின்றார் பலர் உளர்*  கேசவனோடு இவளைப்* 
    பாடிகாவல் இடுமின் என்று என்று*  பார் தடுமாறினதே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாடும் - விசேஷ ஜ்ஞாநிகளும்;
ஊரும் - ஸாமான்ய ஜ்ஞாநிகளும்;
அறிய - அறியும்படியாக [பஹிரங்கமாக];
போய் - வீட்டை விட்டுப் புறம்பேபோய்;
நல்ல - பசுமை மாறாத;

விளக்க உரை

உரை:1

இம்மகள் ஏகாந்தமாகக் காரியங்கள் நட்த்திக்கொண்டால் பாதகமில்லை; உலகத்தாரனைவரு மறியுமாறு எம்பெருமானுடைய துழாய் மாலையைச் சூட்டிக்கொண்டது மல்லாமல், அவன் எங்கிருக்கிறான்? என்று அவன் போகக்கூடிய இடங்களிற்போய்த் தேடித்திரிதலும் செய்யாநின்றாள்; இனி இவள் நமக்கு அடங்காள் என்று நான் கையொழிந்தபோது, இவ்விடத்துள்ள அநுகூலர்கள் எனக்குச் சொல்லியது யாதெனில்; இவ்வாறு பஹிரங்கமாக ப்ரவர்த்திக்கின்ற இவளை நாம் நோக்காதொழிலில் இக்குடிக்குப் பெருங்கேடு விளையும்; எந்த வேளையில் என்ன கேடு விளையப்போகிறதென்று எதிர்பார்க்கும் பாவிகள் இங்கு ஒருவரிருவரல்லர்; ஆகையால் நாம் இவளை இப்படி ஸ்வந்திரையாக விடலாகாது; பின்னை என்செய்வதென்னில் இவள் தானே அவனிடம் போய்ச் சேர்ந்தாளாகாமல் இவளை நீங்கள் கொண்டுபோய் அவனுக்கு ஆஸந்நமான அந்தப்புரத்தில் விட்டு, அங்கிருந்தும் இவள் பதறி ஓடவொண்ணாதபடி பாதுகாவலிடுங்கள் என்று இதனையே திருப்பித்திருப்பிச் சொல்லா நின்றார்களேயொழிய, இவளை வீட்டினுள் நிறுத்தி அடக்குங்கள் என்று சொல்லவல்லார் யாருமில்லையே! யென்கிறாள். கேடு- முதனிலை திரிந்த தொழிற்பெயர். பாடு-பக்கம். பார்-ஆகுபெயர். (தடுமாறினதே.) வரனுடைய வேண்டுகோளின்படி வதுவைக் கொடுத்தல் பலகவியற்கையாயிருக்க. இவளை நாமாக வருந்திக்கொடுக்க வேண்டிவந்த்தே என்று அனுகூலர் மனங்குழம்புவரென்க. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்தம் பணிந்து” என்றபடி பாகவதர்களின் புருஷகாரத்தை முன்னிட்டு எம்பெருமானைப் பற்றுதல் முறைமையாயிருக்க, தனது அவாவின் மிகுதியாலே பதறி அம்முறையை மீறி எம்பெருமானைப் பற்ற நினைத்த ஆழ்வாருடைய ப்ரவ்ருத்தி சைலிகளைக்கண்ட அன்பர் ‘ப்ரபந்ந ஸந்தாநத்திற்கு இது ஸ்வரூப விருத்தம்’ என்ற்றுதியிட்டு, பாகவத புருஷகார புரஸ்ஸரமாக இவரை அங்குச் சேர்க்கலுற்றபடியைக் கூறுதல் இதற்கு உள்ளுறைபொருள்.

உரை:2

நாட்டில் உள்ளவர்களும் ஊரார்களும் நன்கு அறியும் படி இவள் துழாய் மாலை அணிந்து கொண்டு, நாரணன் போகும் இடமெல்லாம் விசாரித்து விசாரித்து அங்கெல்லாம் செல்கின்றாள். நமக்கு கேடு நினைக்கின்றவர் பலர் இருக்கின்றார்கள். கேசவனோடு இவள் சேர முடியுமா என்று எள்ளுகிறார்கள். இவள் இவ்வாறு திரியாத படி காவலில் இடும் என்று பாரில் உள்ளோர் சொல்கிறார்கள். அதனைக் கேட்டு என் மனம் தடுமாறுகிறதே.

English Translation

Wearing a Tulasi garland. She roams everywhere searching for Narayana wherever he went, letting the town and country know. “Keep a close watch over her and Kesava, many would wish to see her ruin”. This is the talk of the town everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்