பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்*  விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*
    பின்னுருவாய் முன்னுருவில் பிணி  மூப் பில்லாப்*  பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,*  எண்ணும்-

    பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்*  புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி*
    தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை*  தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே. (2)


    பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி* பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற 
    ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற* இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்போது*

    ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ* ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற*
    மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி* முகில் உருவம் எம் அடிகள் உருவம்-தானே     


    திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்* திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும்* 
    பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்* பெருமானைக் கரு நீல வண்ணன்-தன்னை*

    ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது* ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்*
    கரு வடிவில் செங் கண்ண வண்ணன்-தன்னை* கட்டுரையே-யார் ஒருவர் காண்கிற்பாரே? 


    இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை* இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்* 
    செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி* திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி* 

    அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா- அந்தணனை* அந்தணர்மாட்டு அந்தி வைத்த-
    மந்திரத்தை* மந்திரத்தால் மறவாது என்றும்- வாழுதியே*  வாழலாம் மட நெஞ்சமே


    ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப* ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து*
    எண் மதியும் கடந்து அண்டம்மீது போகி* இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்-

    தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி* தாரகையின் புறந் தடவி அப்பால் மிக்கு*
    மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை* மலர் புரையும் திருவடியே வணங்கினேனே   


    அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்*  அம்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்,* 
    சலம் புரிந்துஅங்கு அருள்இல்லாத் தன்மை யாளன்*  தான்உகந்த ஊர்எல்லாம் தன்தாள் பாடி,*

    நிலம்பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த*  நெடுவேய்கள் படுமுத்தம் உந்த உந்தி,* 
    புலம்பரந்து பொன்விளைக்கும் பொய்கை வேலிப்*  பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே! 


    வற்புஉடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள*  வடிவாய மழுஏந்தி உலகம் ஆண்டு,* 
    வெற்புஉடைய நெடுங்கடலுள் தனிவேல்உய்த்த*  வேள்முதலா வென்றான்ஊர் விந்தம் மேய,*

    கற்புஉடைய மடக்கன்னி காவல் பூண்ட*  கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,* 
    பொற்புஉடைய மலைஅரையன் பணிய நின்ற*  பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!  


    நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!*  நிலாத்திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி- 
    ஊரகத்தாய்,* ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்!*  உள்ளுவார் உள்ளத்தாய்,*  உலகம் ஏத்தும்- 
     

    காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய்! கள்வா!*  காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு- 
    பேரகத்தாய்,* பேராது என் நெஞ்சின் உள்ளாய்!*  பெருமான் உன் திருவடியே பேணினேனே.  (2)


    வங்கத்தால் மாமணிவந்து உந்து முந்நீர்-  மல்லையாய்!*  மதிள்கச்சி ஊராய்! பேராய்,* 
    கொங்குத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்*  குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்,*

    பங்கத்தாய் பாற்கடலாய்! பாரின் மேலாய்!*  பனிவரையின் உச்சியாய்! பவள வண்ணா,* 
    எங்குஉற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி*  ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே!    


    பொன்ஆனாய்! பொழில்ஏழும் காவல் பூண்ட-  புகழ்ஆனாய்!*  இகழ்வாய தொண்டனேன் நான்,* 
    என்ஆனாய்? என்ஆனாய்? என்னல் அல்லால்*  என்அறிவன் ஏழையேன்,*  உலகம் ஏத்தும்- 
     

    தென்ஆனாய் வடஆனாய் குடபால் ஆனாய்*  குணபாலமதயானாய் இமையோர்க்கு என்றும்- 
    முன்ஆனாய்*  பின்ஆனார் வணங்கும் சோதி!*  திருமூழிக் களத்துஆனாய் முதல்ஆனாயே!


    பட்டுஉடுக்கும் அயர்த்துஇரங்கும் பாவை பேணாள்*  பனிநெடுங் கண்நீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,* 
    எள்துணைப்போது என்குடங்கால் இருக்க கில்லாள்*  எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்* 
     

    மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்*  மடமானை இதுசெய்தார் தம்மை,*  மெய்யே- 
    கட்டுவிச்சி சொல்', என்னச் சொன்னாள் 'நங்காய்!- கடல்வண்ணர் இதுசெய்தார் காப்பார் ஆரே?'


    நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்*  நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* 
    நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ!  என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்* 

    அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்*  அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* 
    என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்*  இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே!     


    கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்* காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்* 
    வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்னும்* வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்*

    மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்னும்* மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்* 
    சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!     


    முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை* மூவா- மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற* 
    அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய- அந்தணனை* அந்தணர்-தம் சிந்தையானை* 

    விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்* வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு* 
    வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக! என்று* மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே


    கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய- களிறு என்றும்* கடல் கிடந்த கனியே! என்றும்*
    அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி* அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்* 

    சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி* தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு* 
    மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே* மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே    


    கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்* 
    மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்* 

    வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்* 
    துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! (2)  


    பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப*  பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று* 
    செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்* சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து* ஆங்கே-

    தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்* தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு* 
    நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன* நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!   


    கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்* கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்*
    பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்* பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்* 

    ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்* 
    நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்* இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?


    முற்று ஆரா வன முலையாள் பாவை* மாயன்- மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்- 
    அற்றாள்* தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்* அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்* 

    பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்* பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி* 
    பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்* பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே       


    தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள* தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி* 
    போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாள* பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க-     

    பார் ஆளன்* பார் இடந்து பாரை உண்டு- பார் உமிழ்ந்து பார் அளந்து* பாரை ஆண்ட- 
    பேர் ஆளன்* பேர் ஓதும் பெண்ணை மண்மேல்* பெருந் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே?     


    மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ* மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட* 
    எய் வண்ண வெம் சிலையே துணையா* இங்கே- இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்* 

    கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்* கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே* 
    அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ!* அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே! (2)      


    நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்* 
    செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்- 

    கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்* 
    எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே   


    உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* என்- ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
    தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்* சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன* 

    கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக்* கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது* 
    புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்* என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே? 


    இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!* இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட* 
    பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*

    ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்- 
    பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!


    மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்* கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்* 
    தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே* தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி* 

    என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்* என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு* 
    பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!   


    தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்* தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்* 
    பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த* அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை* 

    ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்* அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று* 
    நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது* நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே 


    செங் கால மட நாராய் இன்றே சென்று* திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு* 
    என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்* இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை* நாளும்- 

    பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்* பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்* தந்தால்- 
    இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்* இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே (2)  


    தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச்* சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால்* 
    மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த* வரை உருவின் மா களிற்றை தோழீ* என்-தன்- 

    பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு* போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி* 
    என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த* எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே


    அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை* அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை* 
    குன்றாத வலி அரக்கர் கோனை மாள* கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து -

    வென்றானை* குன்று எடுத்த தோளினானை* விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்- 
    நின்றானை* தண் குடந்தைக் கிடந்த மாலை* நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே (2)


    மின்னு மா மழை தவழும் மேக வண்ணா!* விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று* 
    அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த* அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை* 

    மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்* மான வேல் பரகாலன் கலியன் சொன்ன* 
    பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார்* தொல்லைப்- பழவினையை முதல் அரிய வல்லார் தாமே (2)