திரு வெஃகா,

பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரத தலமான காஞ்சிக்கு வந்து, உத்தரவேதி என்னும் யாகசாலையில் யாகம் வளர்த்தார். ஆனால் தனது மனைவியான சரஸ்வதியை விட்டு யாகம் தொடங்கினர். இதனால் வெகுண்ட சரஸ்வதி உலகை இருளாக்க, நாராயணன் விளக்கொளி பெருமாளாக திருதன்காவில் தோன்றினர். யாகத்தை தொடர்ந்த பிரம்மாவை தடுக்க, சரஸ்வதி சரபம் எனும் பறவை மிருக உருவில் அசுரனை ஏவ, நாராயணன் எட்டு கைகளில் திவ்ய ஆயுதங்களுடன் அட்டபுயகரனாய் வந்து சர்பத்தை அழித்தார். பின்னர் பிரம்மா மீண்டும் தொடர்ந்த யாக தீயை அழிக்க, சரஸ்வதி தேவியே வெள்ளப்பெருக்காய் வேகவதி ஆறாய் பெருகிவர, பெருமாள் தானே அணையாய் நதியின் குறுக்கே கிடந்து நதியின் போக்கை மாற்றி யாகத்தின் புனிதத்தீயை காத்த தலமே திருவெக்கா ஆகும். இதனாலே பெருமாள் வெக்கனை கிடந்தான் என அழ்வர்களால் அருளப்படுகிறார்.

அமைவிடம்

பெயர்: திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில். அமைவிடம் ஊர்: திருவெக்கா மாவட்டம்: காஞ்சிபுரம் மாநிலம்: தமிழ்நாடு,

தாயார் : ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ யதோக்தகாரி
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: சொன்னவண்ணம் செய்த பெருமாள் , கோமளவல்லி


திவ்யதேச பாசுரங்கள்

    814.   
    நன்றிருந்து யோகநீதி*  நண்ணுவார்கள் சிந்தையுள்,* 
    சென்றிருந்து தீவினைகள்*  தீர்த்ததேவ தேவனே,*
    குன்றிருந்த மாடநீடு*  பாடகத்து மூரகத்தும்,* 
    நின்றிருந்து வெஃகணைக்*  கிடந்ததென்ன நீர்மையே?

        விளக்கம்  


    • தேவரீர் ஸௌகுமார்யத்தைக் கணிசியாமல் பக்தசிகாமணியாகிய ப்ரஹ்லாதன் திறத்திலுள்ள வாத்ஸல்யமே காரணமாக முரட்டவதாரமெடுத்து இரணியனை அழியச் செய்தது பொருந்தலாம்; ஸர்வப்காரத்தாலும் விமுகரான ஸம்ஸாரிகளுடைய அபிமுக்யத்தை எதிர்பார்த்து உம்முடைய மேன்மையைப் பாராதே கோயில்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாகிற விது அந்தோ! என்ன நீர்மை! என்று ஈடுபடுகிறார். ஊரகம் - ஆதிசேஷனென்னும் பொருளையுடைய ** மென்ற வடசெல் ஊரகமென்று நீண்டு கிடக்கிறது; பெருமாள்கோயிலில் உலகளந்த பெருமாள் ஸந்நிதி ஊரகமென வழங்கும். அங்கே திருவனந்தாழ்வானுடைய ஸரப்ரஸாதித்வம் ப்ரஸித்தம். வெஃகணை- வேகவணை’ என்பது வெஃகணையென்று கிடக்கிறது. ** என்று வடசொல் வழக்கம்; ஸ்ரீயதோக்தகாரி ஸந்நிதி


    815.   
    நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* 
    அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*
    அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* 
    நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.

        விளக்கம்  


    • உலகத்திலே ஒருவனுக்கு ஒருவன் கடன்கொடுத்திருந்தால் அந்தக் கடனைத் திருப்பிவாங்கிக் கொள்வதற்காகக் கடனாளி வீட்டிலேவந்து கேட்கும்போது முதலில் சிலநாள் நின்றுகொண்டே கேட்டுவிட்டுப் போய்விடுவன்: அவ்வளவில் காரியம் ஆகாதே; மறுபடியும் வந்து சிலநாள்வரையில் திண்ணைமீது உட்கார்ந்து கொண்டு கடனை நிர்பந்தித்துப்போவன்; அவ்வளவிலும் கைபுகாவிடில் ‘கடனைத் தீர்த்தாலொழியப்போல தில்லை’ என்று படுக்கைபடுத்து நிர்ப்பந்திப்பன்; இப்படியாகவே எம்பெருமானும் அஸ்மதாதிகள் செலுத்தவேண்டிய கைங்கரியக் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக ஓரிடத்தில் நின்று பார்க்கிறான். மற்றோரிடத்தில் வீற்றிருந்து பார்க்கிறான்; இன்னுமோரிடத்தில் சாய்ந்து பார்க்கிறான்- திருவூரகத்திலே நீற்கிறான், திருப்பாடகத்திலே இருக்கிறான்; திருவெஃகாவிலே கிடக்கிறான்; இப்படி நிற்பது இருப்பது கிடைப்பதாகிறவிவை எப்போதென்னில்; நான் ஆபிமுக்யம் பண்ணப்பெறாத காலத்திலேயாய்த்து, உபயவிபூதிநாதனான தான் ஸம்ஸாரியான வெனக்கு ருசிபிறவாதகாலமெல்லாம் ருசிபிறக்கைக்காக நின்றா னிருந்தான் கிடந்தான்; எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அளவுக்கு ருசிபிறக்கைக்காக நின்றானிருந்தான் கிடந்தான்; எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அவனுக்கு ஸாத்யம் (பலன்): அதற்கு ஸாதகம்- நிற்றவிருத்தல் கிடத்தல்கள், பலன் கைபுகுந்தவாறே திவ்ய தேசங்களிலே நிற்றலிருத்தல் கிடத்தல்களைத் தவிர்த்து (“அரவத்தமணியினோடு மழகிய பாற்கடலோடும். அரவிந்தப்பாவையுந்தானு மகம்படி வந்து புகுந்து” என்னுமாபோலே) அவ்விருப்புகளையெல்லாம் எனது நெஞ்சிலே செய்தருளினானென்கிறார். இரண்டாமடியில், நானிலாத என்ன வேண்டுமிடத்து என்னிலாத என்றதை வடமொழியில் ஆர்ஷப்ரயோகங்களைப் போலவும் சாந்தஸப்ரயோகங்களைப்போலவும் கொள்க: ‘அப்பனையென்று மறப்பன் என்னாகியே” என்ற திருவாய்மொழிப் பிரயோகமும் நோக்கத்தக்கது.


    1854.   
    கூந்தலார் மகிழ்*  கோவலன்ஆய்*  வெண்ணெய்-
    மாந்துஅழுந்தையில்*  கண்டு மகிழ்ந்துபோய்*
    பாந்தள் பாழியில்*  பள்ளி விரும்பிய*
    வேந்தனைச் சென்று காண்டும்*  வெஃகாவுளே

        விளக்கம்  


    • கண்ணபிரானாய்த் திருவவதரித்து வெண்ணெய் விழுங்கின திருமாலைத் திருவழுந்தூரிலே கண்டோம், இனிப்போய்த் திருவெஃகாவிலே காணக்கடவோ மென்கிறார். திருவழுந்தூரிலெழுந்தருளியுள்ள பெருமானுடைய திருநாமம் ;ஆமருவியப்பன்; ஆதலால் கூந்தலார்மகிழ்கோவலனாய் என்றது. கூந்தலார் என்பது பெண்டிர்க்கு இயற்கைபற்றிய பெயர். அவர்கள் மிகழும்படியான கோவலன், “பெண்டிர்வாழ்வார் நின்னொப்பாரைப் பெறுதுமென்று மாசையாலே, கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்கநோக்கி, வண்டுலாம் பூங்குழலினார் உன்வாயமுத முண்ணவேண்டிக் கொண்டு போவான் வந்துநின்றார்“ “முந்தைநன்முறை அன்புடைமகளிர் முறைமுறை தந்தங் குறங்கிடை யிருத்தி, எந்தையே! என்றன் குலப்பெருஞ்சுடரே! எழுமுகிற்கணத் தெழில் கவரேறே!, உந்தையாவனென்றுரைப்ப.“ என்றிவைமுதலான பாசுரங்களில் கூந்தலார் மகிழ்ச்சி விளங்கக் காண்க. மாந்த + அழுந்தையில், மாந்தழுந்தையில், தொகுத்தல் விகாரம். பாந்தள் பாம்பு. பாழி - படுக்கை. திருவெஃகாவில் ஸ்ரீயதோக்தகாரி யெம்பெருமான் சேஷசாயிபிறே.


    2064.   
    கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்* காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்* 
    வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்னும்* வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்*
    மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்னும்* மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்* 
    சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!     

        விளக்கம்  


    • உலகிற் பெண்மணிகளெல்லாம் ஒரு பைங்கிளியை வளர்த்துப் போதுபோக்குதல் இயல்பு. அப்படியே இப்பரகால நாயகியும் ஒரு கிளியை வளர்த்திருந்தாள்; அதற்கு எம்பெருமான் திருநாமங்களைக் கற்பித்திருந்தாள். இவள் உல்லாஸமாயிருக்குங் காலங்களிலே அக்கிளி அருகிருந்து இன்சொல் மிழற்றும்; இப்போது இவள் தளர்ந்திருப்பது கண்டு கிளி தானும் தளர்ந்திருந்தமையால் ஒரு மூலையிலே பதுங்கிக் கிடந்தது. தாயானவள் அக்கிளியை மகளின் முன்னே கொணர்ந்து விட்டு இவள் உகக்கும்படியான சில திருநாமங்களைச் சொல்லி மகிழ்விக்குமாறு ஏவினாள்; ஏவினவிடத்தும் அது பரகாலநாயகியின் முகத்திலு பயிர்ப்பைக்கண்டு ஒன்றும் வாய்திறக்க மாட்டிற்றில்லை; அவள் தானே கிளியை நோக்கி ‘நான் கற்பித்த திருநாமங்களைச் சொல்லாய், சொல்லாய்‘ என்ற விடத்தும் அது வாய்திறவாதிருக்க, முன்புதான் கற்பித்த திருநாமங்களின் தலைப்பை எடுத்தெடுத்துக் கொடுத்து ‘இதைச்சொல், இதைச்சொல்‘ என்ன அதுவும் அப்படியே சொல்ல. அதுசொன்ன திருநாமங்களைக் கேட்டுக் கண்ணுங் கண்ணீருமாய் நின்றபடியை எடுத்துறைக்கிறாள் திருத்தாய். கண்ணபிரான் * சோலைசூழ்ந்த பெரியகுன்றை யெடுத்து ரக்ஷித்திருக்க இவள் “கல் எடுத்து“ என்று ஒரு சிறிய கல்லையெடுத்தானாகச் சொல்லுவது எங்ஙனேயெனின்; அவ்வளவு அநாயஸமாக எடுத்தமை சொன்னபடி. “கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுழிந்தில வாடிற்றில, வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க. வீரபத்நியாகை யாலே “பொல்லாவாக்கனைக் கிள்ளிக்களைந்தானை“ என்றாற்போலே சொல்லுகிறாளென்க. “நல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்“ என்ற சொல்நயத்தை நோக்கி பட்டர் அருளிச்செய்வாராம்- ‘கல்மழையாகையாலே கல்லையெடுத்து ரக்ஷித்தான், நீர் மழையாகில் கடலை யெடுத்து ரக்ஷிக்குங்காணும்“ என்று. இதனால், இன்னதைக் கொண்டு இன்னகாரியஞ் செய்வதென்கிற நியதி எம்பெருமானுக்கில்லை யென்பதும் ஸர்வசக்தனென்பதும் விளக்கப் பட்டதாம். “பிறரால் வந்த ஆபத்திலோ ரக்ஷிக்கலாவது? உன்னால்வந்த ஆபத்தில் ரக்ஷிக்க லாகாதோ? கல்வர்ஷத்திலகப்பட்டாரையோ ரக்ஷிக்கலாவது? அவ்வூராகப் பட்ட நோவை ஒருத்திபட்டால் ரக்ஷிக்கலாகாதோ? என்னுடைய ரக்ஷணத்துக்கும் ஏதேனும் மலையை யெடுக்கவேணுமோ? மலையை யெடுத்த தோளைக் காட்டவமையாதோ?“ என்ற பரமபோக்யமான வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத்தக்கன. காமருபூங்கச்சியூரகத்தாயென்றும்=கல்லெடுத்துக் கல்மாரிகாத்த காலத்தை இழந்து பிற்பட்டவர்களுக்கும் ஸர்வஸ்வதானம் பண்ணுகைக்காகவன்றோ திருவூரகத்திலேவந்து அந்த க்ருஷ்ணாவதாரத்திற்குத் தோள்தீண்டியான த்ரிவிக்ரம் வேஷத்தோடே நி்ன்றருளிற்று; இதுவும் பாவியேனுக்குப் பயன்படாதொழிவதே! என வருத்தந் தோற்றக் கூறுகிறபடி. இப்பாட்டில், விபவாவதார சேஷ்டிதங்களைக் கூறுவன சில அடிகளும் அர்ச்சாவதார நிலையைக் கூறுவன சில அடிகளுமுள்ளன; இவை மாறி மாறிக் கோக்கப்பட்டிருக்கின்றன; அவதாரங்களை ஒரு கோர்வையாகவும் திருப்பதிகளை ஒரு கோர்வையாகவும் அநுபவிக்கலாமே, அப்படி அநுபவியாமல் கலசிக்கலசி அநுபவிக்கிறார்; ஏனென்னில் ; பிடிதோறும் நெய்வார்த்து உண்பாரைப்போலே திருப்பதிகளையொழியத் தமக்குச் செல்லாதபடியாலே திருப்பதிகளைப்பேசுகிறார். திருப்பதிகளின் அடிப்பாடு சொல்லவேண்டுகையாலே அவதாரத்திலிழிகிறார். மற்றையாழ்வார்களுக்கும் இவர்க்குமுண்டான வாசி இது காண்மின்; அவர்கள், மேன்மையை அநுபவிக்கவேண்டில் அவதாரங்களைப் பேசுவர்கள்; அந்த நீர்மையை ஸாக்ஷாத்கரிக்கைக்காகத் திருப்பதிகளிலே இழிவர்கள். இவ்வாழ்வார், மேன்மையை யநுபவிப்பதும் திருப்பதிகிறே நீர்மையை திருப்பதிகளிலே, அதை ஸாக்ஷாத்கரிப்பதும் திருப்பதிகளிலே. வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாயென்றும்=‘இவ்விலை முறித்தார்க்கு இவளை விவாஹம்பண்ணிக் கொடுக்கக்கடவேன்‘ என்று ஜநகன் சொல்லி வைத்திருக்கையாலே இராமபிரான் வில்லை யெடுத்து நாணேற்றி வளைக்கப் புக்கவளவிலே வில் முறிந்தது; அவ்வளவிலே நெடுநாளைய குறைதீரப் பெற்ற ஜநக மஹாராஜன் பொற்கிண்டியைக் கொணர்ந்து தாரை வார்த்துத் தத்தம் பண்ணப்புக, அதுகண்ட இராமபிரான் ‘நான் ஏதேனும் நெடுநாளைய ப்ரஹமசாரியாயிருந்து பெண் கொடுப்பாராருமில்லையே யென்று தடுமாறிப் பெண்தேடி வந்தேனோ; ராஜகுமாரனாகையாலே வீரவாசி கொண்டாட வந்தேனத்தனை; உமக்குப் பெண் விவாஹஞ்செய்ய வேண்டியிருந்தால் அதுவிஷயம் நமக்குத் தெரியாது; வஸிஷ்டாதிகளையும் நமதுஐயரையும் கேட்டுக்கொள்வது‘ என்று கம்பீரமாகச் சீர்மையுங் கண்டு பிராட்டி நீராயுருகினாள்; வில்முறித்த ஆயாஸந்தீர அவளது தோளிலே தோய்ந்தானிராமபிரான்; அதைப் பேசுகிறாள் வில்லிறத்து மெல்லயல்தோள் தோய்ந்தாய்! என்று. இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “.........வில்லைமுறித்த ஆண்பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையுங் கண்டு நீராடினாள் பிராட்டி“ எனத் திருக்திக்கொள்க. தோய்தல் நீரிலேயாகையாலே இங்குத் ‘தோய்ந்தாய்‘ என்ற சொல் நயத்துக்கு ஏற்ப ‘நீரானாள்‘ என்றது. வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும் = பிராட்டியைப் பாணிக்ரஹணம் பண்ணி வந்து அந்த இளைப்புத்தீரவும் அந்த மணக்கோலம் விளங்கவும் துயிலமர்ந்தவிடத் திருவெஃகா வென்கிறாள். ஒரு ராஜகுமாரன்வந்து கிடக்கிறான் என்னலாம்படி யிருக்கிறதாயிற்று. (மல்லடர்த்து இத்யாதி.) மஹாபாபிகளான மல்லர்கள் ஏதேனுமொரு வியாஜத்தாலே உன்னுடைய தோளோடே அணையப் பெற்றார்கள், அவ்வளவு பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே! என்கிற கிலாய்ப்புத்தோற்றச் சொல்லுகிறபடி. நானும் இத்தன்மை நீங்கிப் பிரதிகூலர் வடிவெடுத்து வந்தேனாகில் உன் தோளோடே அணையப் பெறலாம் போலும் என்கிறாளென்றுங் கொள்க. மாகீண்ட கைத்தலத்து என்மைந்தா! என்றும் = திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகளுக்கு முற்றூட்டான திருமேனியைப் பாதுகாத்துக் கொண்டாய்; அதை எனக்கு ஒருநாள் காட்டினால் போதுமே, இதுவும் அரிதாயிற்றே! என்று நொந்து பேசுகிறபடி. சொல்லெடுத்து = ஆக இப்படிப்பட்ட திருநாமங்களின் ஆதியை யெடுத்துக் கொடுத்துக் கிளியைச் சொல்லுவிக்க, அவற்றின் பொருள் நெஞ்சில் உறைக்கவே இப்படி ஆபத்துக்களுக்கு உதவுமவனாகப் புகழ்பெற்றவன் இன்று நம்மளவிலே உதவாதொழிவதே! என்று கண்ணுங் கண்ணீருமாயிருந்து கரைகிறபடியைத் திருத்தாயார் கூறினாளாயிற்று.


    2345.   
    இசைந்த அரவமும்*  வெற்பும் கடலும்,* 
    பசைந்துஅங்கு அமுது படுப்ப,* - அசைந்து
    கடைந்த வருத்தமோ*  கச்சி வெஃகாவில்,* 
    கிடந்துஇருந்து நின்றதுவும் அங்கு?

        விளக்கம்  


    • தன்னை விரும்பாதே உபயோகமற்ற க்ஷுத்ரபலன்களை விரும்புமவர்கட்கும் எம்பெருமான் உடம்புநோவக் காரியஞ்செய்து பயனளிப்பவன் என்பதை, தேவர்கட்குக் கடல்கடைந்து அமுதமளித்த வரலாறுகொண்டு அநுஸந்தித்து உள்குழைகின்றார். பிரானே! இடமும் வலமுமாக அசைந்தசைந்து கடல்கடைந்த கனுலுண்டான ஆயாஸத்தினால்தானோ கச்சித் திருப்பதிகளிலே கிடப்பதும் இருப்பதும் நிற்பதுமாகப் படுகிறாய்? என்கிறார். கச்சிவெஃகாவில் சயளிப்பது மாத்திர முண்டேயன்றி நிற்பதுமிருப்பதும் அங்கில்லையே, அப்படியிருக்க “கச்சிவெஃகாவில் கிடந்திருந்து நின்றதுவுமங்கு“ என்று கிடத்தலிருத்தல் நிற்றல் மூன்றும் வெஃகாவிலே நிகழ்வனவாக அருளிச்செய்தது எங்ஙனே? என்று சங்கை பிறக்கும், பிரகரணத்திற்குப் பொருத்தமாக, கச்சி என்ற சொல்லால் பாடகத்தையுமூரகத்தையும் சேர்த்து அநுஸந்தித்துக்கொள்ள வேணுமென்பதே ஆழ்வார் திருவுள்ளமாதலின் ஒரு குறையுமில்லை. (“நின்றதெந்தையூரகத்து இருந்ததெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக்கிடந்தது“ என்பது திருச்சந்த விருத்தம். இப்பாட்டில் மற்றுமோர் சங்கை பிறக்கலாம், உலகத்தில் சிரமமுண்டானால் அதற்குப் பரிஹாரமாகச் சயனித்துக் கொள்வதுண்டு, ‘இங்ஙனே சயனித்தருள்வது இன்ன ஆயாஸந்தீரவோ? என்று கேட்பது பொருந்தும், திருமழிசைப்பிரான் திருச்சந்தவிருதத்தில் “நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கஞால மேனமாய், இடந்த மெய்குலுங்கவோ விலங்குமால்வரைச் சுரம், கடந்தகால பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு“ என்றும், நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கொடியார்மாடக் கோளூரகத்தும புளிங்குடியும், மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்ததுதான் அடியாரல்லல் தவிர்த்தவசவோ அன்றேலிப்படிதான் நீண்டு தாவிய அசவோபணியாயே?“ என்றும் அருளிச் செய்தவை போல இவ்வாழ்வாரும் “அசைந்து கடைந்த வருத்தமோ கச்சிவெஃகாவில் கிடப்பது?“ என்றருளிச் செய்வதன்றோ பொருந்தும், “இருந்து நின்றதுவுமங்கு“ என்றது எதுக்கு? சிரமத்தினால் கிடத்தலுண்டேயன்றி இருத்தலும் நிற்றலும் ச்ரமகார்யமன்றே என்று சிலர் சங்கிப்பர்கள், கேண்மின், இங்கு “அசைந்து கடைந்த வருத்தமோ?“ என்றிருந்தலால் ஆடியாடி அசைந்தசைந்து கடைந்ததனாலுண்டான ஆயாஸம் தீர்வதற்காக நிற்கவுமாம் இருக்கவுமாம் கிடக்கவுமாம்.


    2357.   
    பொருப்பிடையே நின்றும்*  புனல்குளித்தும்,*  ஐந்து
    நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* - விருப்புஉடைய
    வெஃகாவே சேர்ந்தானை*  மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,* 
    அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

        விளக்கம்  


    • இப்பாட்டில் விளிவருவித்துக்கொள்க. அருமையான தவங்கள் செய்து உடம்பை வருத்துகின்றவர்களே! நீங்கள் மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும், வேனிற்காலத்திலே பஞ்சாக்நி மத்யத்தில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட காயக்லேசங்களுடன் தவம்புரிவதெல்லாம் எதுக்காக? பாவங்கள் தொலைந்து நற்கதி நண்ணவேணுமென்றுதானே இங்ஙனம் தவம்புரிகின்றீர்கள், இனி அங்ஙனம் வருந்தவேண்டா, திருவெஃகா நாயனார் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராயப் புஷ்பங்களைப் பணிமாறி ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே. நமக்காக எம்பெருமான் காயக்லேசங்கள் படாநிற்க நாமும் படாவேணுமோ? என்கிறார். பிள்ளைப்பெருமாளையங்கார் இப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி திருவரங்கக் கலபகத்தில் “காயிலைதின்றுங் கானிலுறைந்துங் கதிதேடித், தீயிடைநின்றும் பூவலம்வந்துந் திரிவீர்காள்! தாயிலுமன்பன் பூமகள்நண்பன் தடநாகப் பாயன் மூகுந்தன் கோயிலரங்கம் பணிவீரே“ என்றருளிய பாசுரம் நோக்கத்தக்கது.


    2503.   
    நானிலம் வாய்க் கொண்டு*  நல் நீர் அற மென்று கோது கொண்ட,*
    வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை,*  கடந்த பொன்னே!- 
    கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது* அம் பூந்-
    தேன் இளஞ் சோலை அப்பாலது,*  எப்பாலைக்கும் சேமத்ததே. 

        விளக்கம்  


    • நகர் காட்டல் என்பது இப்பாட்டுக்குத் துறை. நாயகன் நாயகியை உடன் கொண்டு இடைவழிப் பாலை கடந்து தன் ஊர்க்குப் போகும்போது அவளுக்கு வழி நடைவிளைப்புத் துன்பம் தோன்றாதிருக்கும் பொருட்டு அவளை நோக்கி ‘அதோ தெரிகின்ற அப்பெரிய நகர் காண் நம்முடைய நகராவது’ என்று தனது நகரைக் காட்டி ஸாமீப்பம் தோன்றக் கூறுதல் நகர் காட்டலாம். “புணர்ந்து உடன் போன தலைமகன், நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப்பெய்தமை சொன்ன பாசுரம்” என்பது அழகிய மணவாள சீயருரை வாக்கியம். நாயகனும் நாயகியும் தாம் ஒருவர்க்கொருவர் தனி நிழலாயிருக்கையாலே இவர்களுக்கு இந்நிலத்தின் கொடுமையாலுண்டாகு மிளைப்பு இல்லையேயாகிலும் பொழுது போக்குக்காக நாயகன் நாயகியை நோக்கி இங்ஙனங் கூறினதென்றதுமுண்டு. நாயகீ! நம்முடைய வழி நடையிலல் தைவாதீனமாய்ப் பாலை நிலம் தாண்டியாயிற்று; அது இனித்தாண்ட வேண்டியதாயிருந்தால் வெகு கஷ்டப்பட வேண்டியதாகும்; நல்ல காலமாய் அதைத் தாண்டிவிட்டோம்; இனி நமது நகர் சமீபத்திலுள்ளதே காண் என்கிறான். ஸூரியனானவன் நால்வகை நிலங்களையும் தன் கிரண முகத்தாலே வாயிற் பெய்துகொண்டு ஸாரமான நீர்ப்பசை அறும்படி நன்றாக மென்று அஸாரத்தை உமிழ்ந்த பாகமே பாலை நிலமாகும்; அதனைத் தாண்டியாயிற்று.


    2781.   
    மன்னு மதிள்கச்சி வேளுக்கை ஆள்அரியை,*

    மன்னிய பாடகத்து எம் மைந்தனை* -வெஃகாவில்-


        விளக்கம்  


    • கண்ணன் பாண்டவதூதனாய்த் துரியோதனைனிடஞ் சென்றபொழுது துர்யோதன்ன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நீலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அநேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேமூடி அதன் மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல அங்ஙனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன்மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற் பிளப்புகள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கி பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துப் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத் திருக்கோலத்திற்கு ஸ்மாரகமாகப் பெரிய திருமேனியோடே ஸேவை ஸாதிக்குமிடம் பாடகம். பாடு-பெருமை. (“அரவுநின் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரியமேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தேன்“ என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தில் அநுஸந்திக்கப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவை ஸாதிக்குமாறு காண்க. வெஃகா – கச்சியில் ஸ்ரீ யதோத்தகாரி ஸந்நிதி. இவ்வெம்பெருமான் பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுக்கும்பொருட்டு அதற்கு அணையாகக் குறுக்கில் பள்ளிக்கொண்டருளினவனாதலால், அப்பிரானுக்கு, வடமொழியில் “வேகாஸேது“ என்று பெயர். அது தமிழில் “வேகவணை“ என்று மொழிபெயர்ந்து, அது பின் (நாகவணை யென்பது நாகணையென விகாரப்படுதல் போல) வேகணை என விகாரப்பட்டு, அது பின்னர் வெஃகணை“ எனத்திரிந்து, தானியாகுபெராய்த் தலத்தைக் குறித்து, அதுபின்பு வெஃகா என மருவி வழங்கிற்றென நுண்ணிதின் உணர்க.