பிரபந்த தனியன்கள்

கைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து

   பாசுரங்கள்


    வையம் தகளியா*  வார்கடலே நெய்யாக,*  
    வெய்ய கதிரோன் விளக்காக,* - செய்ய-

    சுடராழி யான்அடிக்கே*  சூட்டினென்சொல் மாலை,* 
    இடராழி நீங்குகவே என்று  (2)


    என்று கடல்கடைந்தது*  எவ்உலகம் நீர்ஏற்றது,* 
    ஒன்றும் அதனை உணரேன் நான்,* - அன்றுஅது-

    அடைத்துஉடைத்து*  கண்படுத்த ஆழி,*  இதுநீ- 
    படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்த பார்.   


    பார்அளவும் ஓர்அடிவைத்து*  ஓர்அடியும் பார்உடுத்த,* 
    நீர்அளவும் செல்ல நிமிர்ந்ததே*  -சூர்உருவின்-

    பேய்அளவு கண்ட*  பெருமான்! அறிகிலேன்,*
    நீஅளவு கண்ட நெறி.     


    நெறிவாசல் தானேயாய்*  நின்றானை,*  ஐந்து- 
    பொறிவாசல் போர்க்கதவம் சாத்தி,* - அறிவானாம்

    ஆலமர நீழல்*  அறம் நால்வர்க்கு அன்றுஉரைத்த,* 
    ஆலம்அமர் கண்டத்து அரன். 


    அரன் நாரணன் நாமம்*  ஆன்விடை புள்ஊர்தி,* 
    உரைநூல் மறைஉறையும் கோயில்,* - வரைநீர்-

    கருமம் அழிப்புஅளிப்பு*  கையதுவேல் நேமி,* 
    உருவம்எரி கார்மேனி ஒன்று   


    ஒன்றும் மறந்தறியேன்*  ஓதநீர் வண்ணனைநான்,* 
    இன்று மறப்பனோ ஏழைகாள்* - அன்று-

    கருஅரங்கத்துள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்*
    திருவரங்கம் மேயான் திசை.


    திசையும் திசைஉறு தெய்வமும்,*  தெய்வத்- 
    திசையும்*  கருமங்கள் எல்லாம்* - அசைவில்சீர்க்-

    கண்ணன் நெடுமால்*  கடல்கடைந்த,*  கார்ஓத- 
    வண்ணன் படைத்த மயக்கு. 


    மயங்க வலம்புரி வாய்வைத்து,*  வானத்து- 
    இயங்கும்*  எறிகதிரோன் தன்னை,*  -முயங்குஅமருள்-

    தேர்ஆழியால் மறைத்த*  என்நீ திருமாலே,*
    போர்ஆழிக் கையால் பொருது?   


    பொருகோட்டுஓர் ஏனமாய்ப்*  புக்குஇடந்தாய்க்கு,*  அன்றுஉன- 
    ஒருகோட்டின் மேல் கிடந்ததுஅன்றே,*  -விரிதோட்ட-

    சேவடியை நீட்டி*  திசைநடுங்க விண்துளங்க,* 
    மாவடிவின் நீஅளந்த மண் *


    மண்ணும் மலையும்*  மறிகடலும் மாருதமும்,* 
    விண்ணும் விழுங்கியது மெய்என்பர்,* - எண்ணில்-

    அலகுஅளவு கண்ட*  சீர்ஆழியாய்க்கு,*  அன்றுஇவ்- 
    உலகுஅளவும் உண்டோ உன் வாய்?   


    வாயவனை அல்லது வாழ்த்தாது,*  கையுலகம்-
    தாயவனை அல்லது தாம்தொழா,* - பேய்முலைநஞ்-

    சூணாக உண்டான்*  உருவொடு பேரல்லால்,* 
    காணாகண் கேளா செவி.


    செவிவாய்கண் மூக்கு*  உடல் என்று ஐம்புலனும்,*  செந்தீ- 
    புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும்,* - அவியாத-

    ஞானமும் வேள்வியும்*  நல்லறமும் என்பரே,*
    ஏனமாய் நின்றாற்கு இயல்வு.  


    இயல்வாக ஈன்துழாயான் அடிக்கே செல்ல,* 
    முயல்வார் இயல்அமரர் முன்னம்,*இயல்வாக -

    நீதியால் ஓதி*  நியமங்களால் பரவ,* 
    ஆதியாய் நின்றார் அவர். 


    அவர்அவர் தாம்தாம்*  அறிந்தவாறு ஏத்தி,* 
    இவர்இவர் எம்பெருமான் என்று,* - சுவர்மிசைச்- 
     

    சார்த்தியும்*  வைத்தும் தொழுவர்*  உலகுஅளந்த- 
    மூர்த்தி உருவே முதல். 


    முதல்ஆவார் மூவரே*  அம் மூவருள்ளும்* 
    முதல்ஆவான்*  மூரிநீர் வண்ணன்,* - முதலாய-

    நல்லான் அருள்அல்லால்*  நாமநீர் வையகத்து,* 
    பல்லார் அருளும் பழுது  


    பழுதே பலபகலும்*  போயினஎன்று,*  அஞ்சி- 
    அழுதேன்*  அரணைமேல் கண்டு தொழுதேன்*

    கடல்ஓதம் கால்அலைப்பக்*  கண்வளரும்,*  செங்கண் 
    அடல்ஓத வண்ணர் அடி 


    அடியும் படிகடப்ப*  தோள்திசைமேல் செல்ல 
    முடியும் விசும்புஅளந்தது என்பர்,* - வடிஉகிரால்-

    ஈர்ந்தான்*  இரணியனதுஆகம்,*  இரும்சிறைப்புள்- 
    ஊர்ந்தான்*  உலகுஅளந்த நான்று


    நான்ற முலைத்தலை நஞ்சுஉண்டு,*  உறிவெண்ணெய்- 
    தோன்ற உண்டான்*  வென்றி சூழ்களிற்றை ஊன்றி,*

    பொருதுஉடைவு கண்டானும்*  புள்வாய் கீண்டானும்,* 
    மருதுஇடைபோய் மண்அளந்த மால்   


    மாலும் கருங்கடலே!*  என்நோற்றாய்,*  வையகம்உண்டு- 
    ஆலின் இலைத்துயின்ற ஆழியான்,* - கோலக்-

    கருமேனிச்*  செங்கண்மால் கண்படையுள்,*  என்றும்- 
    திருமேனி நீதீண்டப் பெற்று!  


    பெற்றார் தளைகழலப்*  பேர்ந்துஓர் குறள்உருவாய்,* 
    செற்றார் படிகடந்த செங்கண்மால்,* - நல்தா-

    மரைமலர்ச் சேவடியை*  வானவர்கை கூப்பி,* 
    நிரைமலர்கொண்டு*  ஏத்துவரால் நின்று.   


    நின்று நிலம்அங்கை*  நீர்ஏற்று மூவடியால்,* 
    சென்று திசைஅளந்த செங்கண்மாற்கு,* - என்றும்-

    படைஆழி புள்ஊர்தி*  பாம்புஅணையான் பாதம்,* 
    அடைஆழி நெஞ்சே! அறி  


    அறியும் உலகுஎல்லாம்*  யானேயும் அல்லேன்,* 
    பொறிகொள் சிறைஉவணம் ஊர்ந்தாய்,* - வெறிகமழும்-

    காம்புஏய் மென்தோளி*  கடைவெண்ணெய் உண்டாயைத்,* 
    தாம்பே கொண்டுஆர்த்த தழும்பு.


    தழும்புஇருந்த சார்ங்கநாண்*  தோய்ந்தவாம்அங்கை,* 
    தழும்புஇருந்த தாள்சகடம் சாடி,* - தழும்புஇருந்த-

    பூங்கோதையாள் வெருவ*  பொன்பெயரோன் மார்புஇடந்த,* 
    வீங்குஓத வண்ணர் விரல்.  


    விரலோடுவாய் தோய்ந்த வெண்ணெய்கண்டு,*  ஆய்ச்சி- 
    உரலோடு*  உறப்பிணித்த நான்று* - குரல்ஓவாது-

    ஏங்கி நினைந்து*  அயலார் காண இருந்திலையே?,* 
    ஓங்குஓத வண்ணா! உரை.  


    உரைமேல் கொண்டு*  என்உள்ளம் ஓவாது*  எப்போதும்- 
    வரைமேல்*  மரகதமே போலத்* - திரைமேல்-

    கிடந்தானை*  கீண்டானை,*  கேழலாய்ப் பூமி- 
    இடந்தானை*  ஏத்தி எழும்.


    எழுவார் விடைகொள்வார்*  ஈன்துழாயானை,* 
    வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்,*

    வினைச்சுடரை நந்துவிக்கும்*  வேங்கடமே,*  வானோர்- 
    மனச்சுடரைத் தூண்டும் மலை.  


    மலையால் குடைகவித்து*  மாவாய் பிளந்து,* 
    சிலையால் மராமரம்ஏழ் செற்று,* - கொலையானைப்-

    போர்க்கோடு ஒசித்தனவும்*  பூங்குருந்தம் சாய்த்தனவும்* 
    கார்க்கோடு பற்றியான் கை. 


    கைய வலம்புரியும் நேமியும்,*  கார்வண்ணத்து- 
    ஐய! மலர்மகள்*  நின்ஆகத்தாள்,* - செய்ய-

    மறையான் நின் உந்தியான்*  மாமதிள் மூன்றுஎய்த* 
    இறையான் நின் ஆகத்து இறை.


    இறையும் நிலனும்*  இருவிசும்பும் காற்றும்,* 
    அறைபுனலும் செந்தீயும் ஆவான்,* - பிறைமருப்பின்-

    பைங்கண்மால் யானை*  படுதுயரம் காத்துஅளித்த,* 
    செங்கண்மால் கண்டாய் தெளி.  


    தெளிதுஆக*  உள்ளத்தைச் செந்நிறீஇ,*  ஞானத்து- 
    எளிதுஆக*  நன்குஉணர்வார் சிந்தை,* - எளிதுஆகத்-

    தாய்நாடு கன்றேபோல்*  தண்துழாயான் அடிக்கே,* 
    போய்நாடிக் கொள்ளும் புரிந்து.


    புரிஒருகை பற்றி*  ஓர் பொன்ஆழி ஏந்தி,*
    அரிஉருவும் ஆள்உருவும்ஆகி,* - எரிஉருவ-

    வண்ணத்தான் மார்புஇடந்த*  மால்அடியை அல்லால்,*  மற்று- 
    எண்ணத்தான் ஆமோ இமை?  


    இமையாத கண்ணால்*  இருள்அகல நோக்கி,* 
    அமையாப் பொறிபுலன்கள்*  ஐந்தும் நமையாமல்,*

    ஆகத்து அணைப்பார்*  அணைவரே,*  ஆயிரவாய்-
    நாகத்து அணையான் நகர்.   


    நகரம் அருள்புரிந்து*  நான்முகற்குப், பூமேல்* 
    பகர மறைபயந்த பண்பன்* - பெயரினையே-

    புந்தியால் சிந்தியாது*  ஓதி உருஎண்ணும்,* 
    அந்தியால்ஆம் பயன்அங்குஎன்?    


    என்ஒருவர் மெய்என்பர்*  ஏழ்உலகுஉண்டு*  ஆல்இலையில்- 
    முன்ஒருவன் ஆய முகில்வண்ணா,* - நின்உருகிப்-

    பேய்த்தாய் முலைதந்தாள்*  பேர்ந்திலளால்,*  பேர்அமர்க்கண்- 
    ஆய்த்தாய்*  முலைதந்த ஆறு?  


    ஆறிய அன்புஇல்*  அடியார்தம் ஆர்வத்தால்,* 
    கூறிய குற்றமாக் கொள்ளல்நீ - தேறி,*

    நெடியோய்! அடி*  அடைதற்குஅன்றே,*  ஈர்ஐந்து- 
    முடியான் படைத்த முரண்?  


    முரணை வலிதொலைதற்கு ஆம்என்றே,*  முன்னம்- 
    தரணி*  தனதுஆகத் தானே* - இரணியனைப்-

    புண்நிரந்த வள்உகிர்ஆர்*  பொன்ஆழிக் கையால்*  நீ- 
    மண்இரந்து கொண்ட வகை?  


    வகைஅறு நுண்கேள்வி வாய்வார்கள்,*  நாளும்- 
    புகைவிளக்கும்*  பூம்புனலும் ஏந்தி,*  - திசைதிசையின்-

    வேதியர்கள்*  சென்றுஇறைஞ்சும் வேங்கடமே,*  வெண்சங்கம்- 
    ஊதியவாய்*  மால்உகந்த ஊர்       


    ஊரும் வரிஅரவம்*  ஒண்குறவர் மால்யானை,* 
    பேர எறிந்த பெருமணியைக்,* - கார்உடைய-

    மின்என்று*  புற்றுஅடையும் வேங்கடமே,*  மேலசுரர்- 
    எம்என்னும் மாலது இடம்.  


    இடந்தது பூமி*  எடுத்தது குன்றம்,* 
    கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச* - கிடந்ததுவும்-

    நீர்ஓத மாகடலே*  நின்றதுவும் வேங்கடமே,*
    பேர்ஓத வண்ணர் பெரிது.    


    பெருவில் பகழிக்*  குறவர்கைச் செந்தீ* 
    வெருவிப் புனம்துறந்த வேழம்,* - இருவிசும்பில்-

    மீன்வீழக்*  கண்டுஅஞ்சும் வேங்கடமே,*  மேல்அசுரர்- 
    கோன்வீழக் கண்டுஉகந்தான் குன்று  


    குன்றுஅனைய குற்றம் செயினும்*  குணம்கொள்ளும்* 
    இன்று முதலாக என்நெஞ்சே,* - என்றும்-

    புறன்உரையே ஆயினும்*  பொன்ஆழிக் கையான்* 
    திறன்உரையே சிந்தித் திரு


    திருமகளும் மண்மகளும்*  ஆய்மகளும் சேர்ந்தால்* 
    திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்,* - திருமகள்மேல்-

    பால்ஓதம் சிந்தப்*  பட நாகணைக் கிடந்த,* 
    மால்ஓத வண்ணர் மனம்? 


    மனமாசு தீரும்*  அருவினையும் சாரா,* 
    தனம்ஆய தானேகை கூடும்,* - புனம்மேய-

    பூந்துழாயான் அடிக்கே*  போதொடு நீர்ஏந்தி,* 
    தம்தொழா நிற்பார் தமர். 


    தமர்உகந்தது எவ்உருவம்*  அவ்உருவம் தானே,* 
    தமர்உகந்தது எப்பேர் மற்றுஅப்பேர்,* - தமர்உகந்து-

    எவ்வண்ணம் சிந்தித்து*  இமையாது இருப்பரே,* 
    அவ்வண்ணம் ஆழியான்ஆம். 


    ஆமே அமரர்க்கு*  அறிய? அதுநிற்க,* 
    நாமே அறிகிற்போம் நல்நெஞ்சே,* - பூமேய-

    மாதவத்தோன் தாள்பணிந்த*  வாள்அரக்கன் நீள்முடியை,* 
    பாதம்அத்தால் எண்ணினான் பண்பு.  


    பண்புரிந்த நான்மறையோன்*  சென்னிப் பலிஏற்ற,* 
    வெண்புரிநூல் மார்பன் வினைதீர,* - புண்புரிந்த-

    ஆகத்தான்*  தாள்பணிவார் கண்டீர்,*  அமரர்தம்- 
    போகத்தால் பூமி ஆள்வார். 


    வாரி சுருக்கி*  மதக்களிறு ஐந்தினையும்,* 
    சேரி திரியாமல் செந்நிறீஇ,* - கூரிய-

    மெய்ஞ்ஞானத்தால்*  உணர்வார் காண்பரே,*  மேல்ஒருநாள- 
    கைந்நாகம் காத்தான் கழல்.


    கழல்ஒன்று எடுத்து*  ஒருகை சுற்றிஓர் கைமேல்,* 
    சுழலும் சுராசுரர்கள் அஞ்ச,* - அழலும்-

    செருஆழி ஏந்தினான்*  சேவடிக்கே செல்ல,* 
    மருவுஆழி நெஞ்சே! மகிழ்.  


    மகிழ்அலகு ஒன்றேபோல்*  மாறும் பல்யாக்கை,* 
    நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால்,* - முகிழ்விரிந்த-

    சோதிபோல் தோன்றும்*  சுடர்பொன் நெடுமுடி*  எம்- 
    ஆதி காண்பார்க்கும் அரிது  


    அரிய புலன்ஐந்து அடக்கி*  ஆய்மலர்கொண்டு,*  ஆர்வம்- 
    புரிய பரிசினால் புல்கில்,* - பெரியனாய்-

    மாற்றாது*  வீற்றிருந்த மாவலிபால்,*  வண்கைநீர்- 
    ஏற்றானைக் காண்பது எளிது. 


    எளிதில் இரண்டுஅடியும்*  காண்பதற்கு,*  என்உள்ளம்- 
    தெளிய தெளிந்தொழியும் செவ்வே,* - களியில்-

    பொருந்தாதவனைப்*  பொரல்உற்று,*  அரியாய்- 
    இருந்தான் திருநாமம் எண். 


    எண்மர் பதினொருவர்*  ஈர்அறுவர் ஓர்இருவர்,* 
    வண்ண மலர்ஏந்தி வைகலும்,* - நண்ணி-

    ஒரு மாலையால் பரவி*  ஓவாது,*  எப்போதும்- 
    திருமாலைக் கைதொழுவர் சென்று.   


    சென்றால் குடைஆம்*  இருந்தால் சிங்காசனம்ஆம்,* 
    நின்றால் மரவடிஆம் நீள்கடலுள்,* - என்றும்-

    புணைஆம் மணிவிளக்குஆம்*  பூம்பட்டுஆம் புல்கும்- 
    அணைஆம்,*  திருமாற்கு அரவு.  (2)


    அரவம் அடல்வேழம்*  ஆன்குருந்தம் புள்வாய்* 
    குரவை குடம்முலை மல்குன்றம்,* - கரவுஇன்றி-

    விட்டுஇறுத்து மேய்த்துசித்து*  கீண்டு கோத்துஆடி,*  உண்டு- 
    அட்டுஎடுத்த செங்கண் அவன்  


    அவன் தமர்*  எவ்வினையர் ஆகிலும்,*  எம்கோன்- 
    அவன்தமரே*  என்று ஒழிவது அல்லால்,* - நமன்தமரால்-

    ஆராயப்பட்டு*  அறியார் கண்டீர்,*  அரவுஅணைமேல்-
    பேர்ஆயற்கு ஆட் பட்டார் பேர் 


    பேரே வரப்பிதற்றல்*  அல்லால் என் பெம்மானை,*
    ஆரே அறிவார்? அதுநிற்க,* - நேரே-

    கடிக்கமலத் உள்இருந்தும்*  காண்கிலான்,*  கண்ணன்-
    அடிக்கமலம் தன்னை அயன்.  


    அயல்நின்ற வல்வினையை*  அஞ்சினேன் அஞ்சி,* 
    உயநின் திருவடியே சேர்வான்,* - நயம்நின்ற-

    நல்மாலை கொண்டு*  'நமோநாரணா' என்னும்,*
    சொல்மாலை கற்றேன் தொழுது.   


    தொழுது மலர்கொண்டு*  தூபம்கை ஏந்தி,* 
    எழுதும் எழுவாழி நெஞ்சே,* - பழுதுஇன்றி-

    மந்திரங்கள் கற்பனவும்*  மால்அடியே கைதொழுவான்,* 
    அந்தரம் ஒன்றுஇல்லை அடை.  


    அடைந்த அருவினையோடு*  அல்லல்நோய் பாவம்,*
    மிடைந்தவை மீண்டுஒழிய வேண்டில்,* - நுடங்குஇடையை-

    முன்இலங்கை வைத்தான்*  முரண்அழிய,*  முன்ஒருநாள்- 
    தன்வில் அங்கை வைத்தான் சரண். 


    சரணா மறைபயந்த*  தாமரையானோடு,* 
    மரண்ஆய மன்உயிர்கட்கு எல்லாம்,* - அரண்ஆய-

    பேர்ஆழி கொண்ட*  பிரான்அன்றி மற்றுஅறியாது,* 
    ஓர்ஆழி சூழ்ந்த உலகு. 


    உலகும்*  உலகுஇறந்த ஊழியும்,*  ஒண்கேழ்-
    விலகு கருங்கடலும் வெற்பும்,* - உலகினில்-

    செந்தீயும்*  மாருதமும் வானும்,*  திருமால்தன்-
    புந்தியில்ஆய புணர்ப்பு.


    புணர்மருதின் ஊடுபோய்*  பூங்குருந்தம் சாய்த்து,* 
    மணம்மருவ மால் விடைஏழ் செற்று,* - கணம்வெருவ-

    ஏழ் உலகும் தாயினவும்*  எண்திசையும் போயினவும்,* 
    சூழ்அரவப் பொங்குஅணையான் தோள்.    


    தோள்அவனை அல்லால் தொழா,*  என் செவிஇரண்டும்-
    கேள்அவனது இன்மொழியே*  கேட்டிருக்கும்,* - நாநாளும்-

    கோணா கணையான்*  குரைகழலே கூறுவதே,* 
    நாணாமை நள்ளேன் நயம் 


    நயவேன் பிறர்பொருளை*  நள்ளேன் கீழாரோடு,* 
    உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்* - வியவேன்-

    திருமாலை அல்லது*  தெய்வம் என்றுஏத்தேன்,* 
    வரும்ஆறு என் என்மேல் வினை?    


    வினையால் அடர்ப்படார்*  வெம்நரகில் சேரார்,* 
    தினையேனும் தீக்கதிக்கண் செல்லார்,* - நினைதற்கு-

    அரியானை*  சேயானை,*  ஆயிரம்பேர்ச் செங்கண்-
    கரியானைக்*  கைதொழுதக் கால்  


    காலை எழுந்து*  உலகம் கற்பனவும்,*  கற்றுஉணர்ந்த-
    மேலைத் தலைமறையோர்*  வேட்பனவும்,* - வேலைக்கண்-

    ஓர்ஆழி யான்அடியே*  ஓதுவதும் ஓர்ப்பனவும்,* 
    பேர்ஆழி கொண்டான் பெயர்.


    பெயரும் கருங்கடலே நோக்கும்ஆறு,*  ஒண்பூ-
    உயரும்*  கதிரவனே நோக்கும்,*  உயிரும்-

    தருமனையே நோக்கும்*  ஒண்தாமரையாள் கேள்வன்,*
    ஒருவனையே நோக்கும் உணர்வு   


    உணர்வார் ஆர் உன்பெருமை?* ஊழி தோறுஊழி,*
    உணர்வார் ஆர் உன்உருவம் தன்னை?,*  உணர்வார்ஆர்-

    விண்ணகத்தாய்!*  மண்ணகத்தாய்!*  வேங்கடத்தாய்!*  நால்வேதப்-
    பண்ணகத்தாய்!*  நீகிடந்த பால்?


    பாலன் தனதுஉருவாய்*  ஏழ்உலகுஉண்டு,*  ஆல்இலையின்- 
    மேல்அன்று நீவளர்ந்த மெய்என்பர்,* - ஆல்அன்று-

    வேலை நீர்உள்ளதோ*  விண்ணதோ? மண்ணதோ?*
    சோலைசூழ் குன்றுஎடுத்தாய் சொல்லு     


    சொல்லும் தனையும்*  தொழுமின் விழும்உடம்பு,*
    செல்லும் தனையும் திருமாலை,* - நல்இதழ்த்-

    தாமத்தால் வேள்வியால்*  தந்திரத்தால் மந்திரத்தால்,* 
    நாமத்தால் ஏத்துதிரேல் நன்று.      


    நன்று பிணிமூப்புக்*  கையகற்றி நான்குஊழி,*
    நின்று நிலம்முழுதும் ஆண்டாலும்,*  என்றும்-

    விடல்ஆழி நெஞ்சமே!*  வேண்டினேன் கண்டாய்,* 
    அடல்ஆழி கொண்டான் மாட்டுஅன்பு.


    அன்புஆழியானை*  அணுகுஎன்னும், நா அவன்தன்*
    பண்புஆழித் தோள்பரவி ஏத்துஎன்னும்,*  முன்புஊழி-

    காணானைக்*  காண்என்னும் கண்செவி கேள்என்னும்* 
    பூண்ஆரம் பூண்டான் புகழ்.  


    புகழ்வாய் பழிப்பாய்*  நீ பூந்துழாயானை,* 
    இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே,* - திகழ்நீர்க்-

    கடலும் மலையும்*  இருவிசும்பும் காற்றும்,* 
    உடலும் உயிரும் ஏற்றான்.


    ஏற்றான் புள்ஊர்ந்தான்*  எயில்எரித்தான் மார்வுஇடந்தான்* 
    நீற்றான் நிழல்மணி வண்ணத்தான்,* - கூற்றுஒருபால்-

    மங்கையான்*  பூமகளான் வார்சடையான்,*  நீள்முடியான்- 
    கங்கையான்*  நீள்கழலான் காப்பு. 


    காப்பு உன்னைஉன்னக்*  கழியும் அருவினைகள்,* 
    ஆப்பு உன்னைஉன்ன அவிழ்ந்தொழியும்* - மூப்புஉன்னைச்-

    சிந்திப்பார்க்கு*  இல்லை திருமாலே,*  நின்அடியை-
    வந்திப்பார்*  காண்பர் வழி. 


    வழிநின்று*  நின்னைத் தொழுவார்,*  வழுவா-
    மொழிநின்ற மூர்த்தியரே ஆவர்,* - பழுதுஒன்றும்-

    வாராத வண்ணமே*  விண்கொடுக்கும்,*  மண்அளந்த-
    சீரான் திருவேங்கடம். 


    வேங்கடமும்*  விண்ணகரும் வெஃகாவும்,*  அஃகாத-
    பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்நகரும்,* - நான்குஇடத்தும்-

    நின்றான் இருந்தான்*  கிடந்தான் நடந்தானே,* 
    என்றால் கெடுமாம் இடர்   


    இடர் ஆர் படுவார்?*  எழுநெஞ்சே,*  வேழம்-
    தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த,* - படம்உடைய-

    பைந்நாகப் பள்ளியான்*  பாதமே கைதொழுதும்,* 
    கொய்ந்நாகப் பூம்போது கொண்டு        


    கொண்டானை அல்லால்*  கொடுத்தாரை யார்பழிப்பார்,*
    'மண்தா' எனஇரந்து மாவலியை,*  ஒண்தாரை-

    நீர்அங்கை தோய*  நிமிர்ந்திலையே,*  நீள்விசும்பில்-
    ஆரம்கை தோய அடுத்து? 


    அடுத்த கடும்பகைஞற்கு*  ஆற்றேன் என்றுஓடி,* 
    படுத்த பெரும்பாழி சூழ்ந்த - விடத்துஅரவை,*

    வல்லாளன் கைக்கொடுத்த*  மாமேனி மாயவனுக்கு,*
    அல்லாதும் ஆவரோ ஆள்?      


    ஆள்அமர் வென்றி*  அடுகளத்துள் அந்நான்று,* 
    வாள்அமர் வேண்டி வரைநட்டு,* - நீள்அரவைச்-

    சுற்றிக் கடைந்தான்*  பெயர்அன்றே,*  தொல் நரகைப்-
    பற்றிக் கடத்தும் படை?


    படைஆரும் வாள்கண்ணார்*  பாரசிநாள்,*  பைம்பூந்-
    தொடையலோடு ஏந்திய தூபம்,* - இடைஇடையில்-

    மீன்மாய*  மாசூணும் வேங்கடமே,*  மேல்ஒருநாள்- 
    மான்மாய*  எய்தான் வரை    


    வரைகுடைதோள் காம்புஆக*  ஆநிரைகாத்து,*  ஆயர்-
    நிரைவிடைஏழ்*  செற்றஆறு என்னே,* - உரவுஉடைய-

    நீர்ஆழி உள்கிடந்து*  நேர்ஆம் நிசாசரர்மேல்,*
    பேர்ஆழி கொண்ட பிரான்?   


    பிரான்! உன் பெருமை*  பிறர் ஆர்அறிவார்?,*
    உராஅய் உலகுஅளந்த நான்று,* - வராகத்து-

    எயிற்றுஅளவு*  போதாஆறு என்கொலோ,*  எந்தை-
    அடிக்குஅளவு போந்த படி?   


    படிகண்டு அறிதியே*  பாம்புஅணையினான்,*  புள்- 
    கொடி கண்டுஅறிதியே? கூறாய்,* - வடிவில்-

    பொறிஐந்தும் உள்அடக்கி*  போதொடு நீர்ஏந்தி,* 
    நெறிநின்ற நெஞ்சமே! நீ  


    நீயும் திருமகளும் நின்றாயால்,*  குன்றுஎடுத்துப்-
    பாயும்*  பனிமறுத்த பண்பாளா,* - வாசல்-

    கடைகழியா உள்புகா*  காமர்பூங் கோவல்*
    இடைகழியே பற்றி இனி.   


    இனியார் புகுவார்*  எழுநரக வாசல்?*
    முனியாது மூரித்தாள் கோமின்,* - கனிசாயக்-

    கன்றுஎறிந்த தோளான்*  கனைகழலே காண்பதற்கு,*
    நன்குஅறிந்த நாவலம்சூழ் நாடு.   


    நாடிலும்*  நின்அடியே நாடுவன்,*  நாள்தோறும்-
    பாடிலும்*  நின்புகழே பாடுவன்,*  சூடிலும்-

    பொன்ஆழி ஏந்தினான்*  பொன்அடியே சூடுவேற்கு,* 
    என்ஆகில் என்னே எனக்கு? 


    எனக்குஆவார்*  ஆர்ஒருவரே,*  எம்பெருமான்-
    தனக்குஆவான்*  தானே மற்றுஅல்லால்,* - புனக்காயாம்-

    பூமேனி காணப்*  பொதிஅவிழும் பூவைப்பூ,* 
    மாமேனி காட்டும் வரம்     


    வரத்தால் வலிநினைந்து*  மாதவ! நின் பாதம்,*
    சிரத்தால் வணங்கானாம் என்றே,* - உரத்தினால்-

    ஈர்அரியாய்*  நேர்வலியோன்ஆய இரணியனை,* 
    ஓர்அரியாய் நீஇடந்தது ஊன்?  


    ஊனக் குரம்பையின்*  உள்புக்கு இருள்நீக்கி,* 
    ஞானச் சுடர்கொளீஇ நாள்தோறும்,* - ஏனத்து-

    உருவாய் உலகுஇடந்த*  ஊழியான் பாதம்,*
    மருவாதார்க்கு உண்டாமோ வான்?      


    வான்ஆகி தீஆய்*  மறிகடல்ஆய் மாருதம்ஆய்* 
    தேன்ஆகி பால்ஆம் திருமாலே,* - ஆன்ஆய்ச்சி-

    வெண்ணெய் விழுங்க*  நிறையுமே,*  முன்ஒருநாள்-
    மண்ணை உமிழ்ந்த வயிறு?  


    வயிறுஅழல வாள்உருவி*  வந்தானை அஞ்ச* 
    எயிறுஇலக வாய்மடுத்தது என்நீ,* - பொறிஉகிரால்-

    பூவடிவை ஈடுஅழித்த*  பொன்ஆழிக் கையா நின்-
    சேவடிமேல் ஈடுஅழிய செற்று?  


    செற்றுஎழுந்து தீவிழித்து*  சென்ற இந்த ஏழுலகும்,* 
    மற்றுஇவை ஆஎன்று வாய்அங்காந்து,*  முற்றும்-

    மறையவற்குக் காட்டிய*  மாயவனை அல்லால்,* 
    இறையேனும் ஏத்தாதுஎன் நா.


    நாவாயில் உண்டே*  'நமோ நாரணா' என்று,*
    ஓவாது உரைக்கும் உரைஉண்டே,* - மூவாத-

    மாக்கதிக்கண் செல்லும்*  வகைஉண்டே,*  என்ஒருவர்-
    தீக்கதிக்கண் செல்லும் திறம்? 


    திறம்பாது என்நெஞ்சமே!*  செங்கண்மால் கண்டாய்,*
    அறம்பாவம் என்றுஇரண்டும் ஆவான்,*  புறம்தான்இம்-

    மண்தான்*  மறிகடல்தான் மாருதம்தான்,*  வான்தானே,-
    கண்டாய்*  கடைக்கண் பிடி.  


    பிடிசேர் களிறுஅளித்த பேராளா,*  உன்தன்-
    அடிசேர்ந்து அருள்பெற்றாள் அன்றே,* - பொடிசேர்-

    அனற்குஅங்கை ஏற்றான்*  அவிர்சடைமேல் பாய்ந்த,*
    புனல்கங்கை என்னும்பேர்ப் பொன்? 


    பொன்திகழும் மேனிப்*  புரிசடைஅம் புண்ணியனும்,* 
    நின்றுஉலகம் தாய நெடுமாலும்,* - என்றும்-

    இருவர்அங்கத்தால் திரிவரேலும்,*  ஒருவன்-
    ஒருவன் அங்கத்து என்றும் உளன்.  


    உளன்கண்டாய் நல்நெஞ்சே!*  உத்தமன் என்றும்-
    உளன்கண்டாய்,*  உள்ளுவார் உள்ளத்து- உளன்கண்டாய்,*

    வெள்ளத்தின் உள்ளானும்*  வேங்கடத்து மேயானும்,* 
    உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்  (2)


    ஓர்அடியும் சாடுஉதைத்த*  ஒண்மலர்ச் சேவடியும்,* 
    ஈர்அடியும் காணலாம் என்நெஞ்சே!* - ஓர்அடியில்-

    தாயவனை கேசவனை*  தண்துழாய் மாலைசேர்,*
    மாயவனையே மனத்து வை (2)