பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
சிலைஇலங்கு பொன்ஆழி* திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,*
மலைஇலங்கு தோள் நான்கே* மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*
முலைஇலங்கு பூம்பயலை* முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
கலைஇலங்கு மொழியாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! (2)
செருவரை முன்ஆசுஅறுத்த* சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,*
பொருவரைமுன் போர்தொலைத்த* பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*
ஒருவரையும் நின்ஒப்பார்* ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
கருவரைபோல் நின்றானை* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! (2)
துன்னுமா மணிமுடிமேல்* துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,*
மின்னுமா மணிமகர குண்டலங்கள்* வில்வீசும் என்கின்றாளால்*
பொன்னின் மாமணி ஆரம்* அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
கன்னிமா மதிள்புடைசூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
தார்ஆய தண்துளப* வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்*
போர்ஆனைக் கொம்புஒசித்த* புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*
ஆரானும் காண்மின்கள்* அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
கார்வானம் நின்றுஅதிரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
அடித்தலமும் தாமரையே* அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,*
முடித்தலமும் பொன்பூணும்* என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*
வடித்தடங்கண் மலரவளோ* வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்*
கடிக்கமலம் கள்உகுக்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
பேர்ஆயிரம் உடைய பேராளன்* பேராளன் என்கின்றாளால்*
ஏர்ஆர் கனமகர குண்டலத்தன்* எண்தோளன் என்கின்றாளால்*
நீர்ஆர் மழைமுகிலே* நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
கார்ஆர் வயல் மருவும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ!
செவ்அரத்த உடைஆடை* அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்*
அவ்அரத்த அடிஇணையும்* அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
மைவளர்க்கும் மணிஉருவம்* மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்*
கைவளர்க்கும் அழலாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
கொற்றப்புள் ஒன்றுஏறி* மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்*
வெற்றிப்போர் இந்திரற்கும்* இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*
பெற்றக்கால் அவன்ஆகம்* பெண்பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
கற்றநூல் மறையாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
வண்டுஅமரும் வனமாலை* மணிமுடிமேல் மணம்நாறும் என்கின்றாளால்*
உண்டுஇவர் பால் அன்பு எனக்குஎன்று* ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*
பண்டுஇவரைக் கண்டுஅறிவது* எவ்ஊரில் யாம்? என்றே பயில்கின்றாளால்*
கண்டவர்தம் மனம்வழங்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
மாவளரும் மென்நோக்கி* மாதராள் மாயவனைக் கண்டாள் என்று*
காவளரும் கடிபொழில்சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
பாவளரும் தமிழ்மாலை* பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
பூவளரும் கற்பகம்சேர்* பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே. (2)
தெள்ளியீர்! தேவர்க்கும்* தேவர் திருத்தக்கீர்!*
வெள்ளியீர் வெய்ய* விழுநிதி வண்ணர்* ஓ!
துள்ளுநீர்க்* கண்ணபுரம் தொழுதாள் இவள்-
கள்வியோ,* கைவளை கொள்வது தக்கதே? (2)
நீள்நிலா முற்றத்து* நின்றுஇவள் நோக்கினாள்,*
காணுமோ!* கண்ணபுரம் என்று காட்டினாள்,*
பாணனார் திண்ணம் இருக்க* இனிஇவள்-
நாணுமோ,?* நன்று நன்று நறையூரர்க்கே.
அருவிசோர் வேங்கடம்* நீர்மலை என்றுவாய்-
வெருவினாள்* மெய்யம் வினவி இருக்கின்றாள்,*
பெருகுசீர்க்* கண்ணபுரம் என்று பேசினாள்-
உருகினாள்* உள்மெலிந்தாள் இது என்கொலோ! (2)
உண்ணும் நாள்இல்லை* உறக்கமும் தான்இல்லை,*
பெண்மையும் சால* நிறைந்திலள் பேதைதான்,*
கண்ணன்ஊர் கண்ணபுரம்* தொழும் கார்க்கடல்-
வண்ணர்மேல்,* எண்ணம் இவட்கு இது என்கொலோ!
கண்ணன்ஊர்* கண்ணபுரம் தொழும் காரிகை,*
பெண்மைஎன் தன்னுடை* உண்மை உரைக்கின்றாள்,*
வெண்ணெய்உண்டு ஆப்புண்ட* வண்ணம் விளம்பினால்,*
வண்ணமும்* பொன்நிறம் ஆவது ஒழியுமே.
வடவரை நின்றும் வந்து* இன்று கணபுரம்,-
இடவகை கொள்வது* யாம்என்று பேசினாள்,*
மடவரல் மாதர் என் பேதை* இவர்க்குஇவள்-
கடவதுஎன்,?* கண்துயில் இன்று இவர் கொள்ளவே.
தரங்கநீர் பேசினும்* தண்மதி காயினும்,*
இரங்குமோ?* எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை* ஊர்-
அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே.
தொண்டுஎல்லாம் நின்அடியே* தொழுது உய்யுமா-
கண்டு,* தான் கண்ணபுரம்* தொழப் போயினாள்*
வண்டுஉலாம் கோதை என் பேதை* மணிநிறம்-
கொண்டுதான்,* கோயின்மை செய்வது தக்கதே?
முள்எயிறு ஏய்ந்தில,* கூழை முடிகொடா,*
தெள்ளியள் என்பதுஓர்* தேசுஇலள் என்செய்கேன்,*
கள்அவிழ் சோலைக்* கணபுரம் கைதொழும்-
பிள்ளையைப்,* பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?
கார்மலி* கண்ணபுரத்து எம் அடிகளைப்,*
பார்மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்,*
சீர்மலி பாடல்* இவைபத்தும் வல்லவர்,*
நீர்மலி வையத்து* நீடு நிற்பார்களே (2)
கரைஎடுத்த சுரிசங்கும்* கனபவளத்து எழுகொடியும்,*
திரைஎடுத்து வருபுனல்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
விரைஎடுத்த துழாய்அலங்கல்* விறல்வரைத்தோள் புடைபெயர*
வரைஎடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரிவளையே. (2)
அரிவிரவு முகில்கணத்தால்* அகில்புகையால் வரையோடும்*
தெரிவுஅரிய மணிமாடத்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
வரிஅரவின் அணைத்துயின்று* மழைமதத்த சிறுதறுகண்,*
கரிவெருவ மருப்புஒசித்தாற்கு* இழந்தேன்என் கனவளையே.
துங்கமா மணிமாட* நெடுமுகட்டின் சூலிகை, போம்*
திங்கள்மா முகில்துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பைங்கண்மால் விடைஅடர்த்து* பனிமதிகோள் விடுத்துஉகந்த*
செங்கண்மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறிவளையே.
கணம்மருவும் மயில்அகவு* கடிபொழில்சூழ் நெடுமறுகின்,*
திணம்மருவு கனமதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
மணம்மருவு தோள்ஆய்ச்சி* ஆர்க்கபோய், உரலோடும்*
புணர்மருதம் இறநடந்தாற்கு* இழந்தேன் என் பொன்வளையே.
வாய்எடுத்த மந்திரத்தால்* அந்தணர்தம் செய்தொழில்கள்*
தீஎடுத்து மறைவளர்க்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
தாய்எடுத்த சிறுகோலுக்கு* உளைந்துஓடி தயிர்உண்ட,*
வாய்துடைத்த மைந்தனுக்கு* இழந்தேன் என் வரிவளையே.
மடல்எடுத்த நெடுந்தாழை* மருங்குஎல்லாம் வளர்பவளம்,*
திடல்எடுத்து சுடர்இமைக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
அடல்அடர்த்து அன்று இரணியனை* முரண்அழிய அணிஉகிரால்,*
உடல்எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே.
வண்டுஅமரும் மலர்ப்புன்னை* வரிநீழல் அணிமுத்தம்,*
தெண்திரைகள் வரத்திரட்டும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
எண்திசையும் எழுகடலும்* இருநிலனும் பெருவிசும்பும்,*
உண்டுஉமிழ்ந்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே.
கொங்குமலி கருங்குவளை* கண்ஆகத் தெண்கயங்கள்*
செங்கமலம் முகம்அலர்த்தும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
வங்கம்மலி தடங்கடலுள்* வரிஅரவின் அணைத்துயின்ற,*
செங்கமல நாபனுக்கு* இழந்தேன் என் செறிவளையே.
வார்ஆளும் இளங்கொங்கை* நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
சீர்ஆளும் வரைமார்வன்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
பேராளன் ஆயிரம்பேர்* ஆயிரவாய் அரவுஅணைமேல்*
பேராளர் பெருமானுக்கு* இழந்தேன் என் பெய்வளையே.
தேமருவு பொழில்புடைசூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்-
வாமனனை,* மறிகடல்சூழ்* வயல்ஆலி வளநாடன்,*
காமருசீர்க் கலிகன்றி* கண்டுஉரைத்த தமிழ்மாலை,*
நாமருவி இவைபாட* வினைஆய நண்ணாவே. (2)
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்,*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலிபுகழ்சேர்,*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர்முடிமேல்,*
வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.! (2)
வேத முதல்வன்* விளங்கு புரிநூலன்,*
பாதம் பரவிப்* பலரும் பணிந்துஏத்தி,*
காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாது நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
விண்ட மலர்எல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*
அண்ட முதல்வன்* அமரர்கள் எல்லாரும்,*
கண்டு வணங்கும்* கண்ணபுரத்து எம்பெருமான்*
வண்டு நறுந்துழாய்* வந்துஊதாய் கோல்தும்பீ!
நீர் மலிகின்றது ஓர்* மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,*
சீர் மலிகின்றது ஓர்* சிங்க உருஆகி,*
கார்மலி வண்ணன்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தார்மலி தண்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
ஏர்ஆர் மலர்எல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*
பார்ஆர் உலகம்* பரவ பெருங்கடலுள்,*
கார்ஆமை ஆன* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தார்ஆர் நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
மார்வில் திருவன்* வலன்ஏந்து சக்கரத்தன்,*
பாரைப் பிளந்த* பரமன் பரஞ்சோதி,*
காரில் திகழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*
தாரில் நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
வாமனன் கற்கி* மதுசூதன் மாதவன்*
தார்மன்னு* தாசரதிஆய தடமார்வன்,*
காமன்தன் தாதை* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாம நறுந்துழாய்* தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!
நீல மலர்கள்* நெடுநீர் வயல் மருங்கில்,*
சால மலர்எல்லாம்* ஊதாதே,* வாள்அரக்கர்-
காலன்* கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,*
கோல நறுந்துழாய்* கொண்டுஊதாய் கோல்தும்பீ!
நந்தன் மதலை* நிலமங்கை நல்துணைவன்,*
அந்தம் முதல்வன்* அமரர்கள் தம்பெருமான்,*
கந்தம் கமழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*
கொந்து நறுந்துழாய்* கொண்டுஊதாய் கோல்தும்பீ!
வண்டு அமரும் சோலை* வயல்ஆலி நல்நாடன்,*
கண்டசீர் வென்றிக்* கலியன் ஒலிமாலை,*
கொண்டல் நிறவண்ணன்* கண்ண புரத்தானைத்,*
தொண்டரோம் பாட* நினைந்துஊதாய் கோல்தும்பீ! (2)
தந்தை காலில் விலங்குஅற* வந்து தோன்றிய தோன்றல்பின்,* தமியேன் தன்-
சிந்தை போயிற்று* திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*
அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்* அவைசுட அதனோடும்,*
மந்த மாருதம் வனமுலை தடவந்து* வலிசெய்வது ஒழியாதே! (2)
மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்* வரைபுரை திருமார்வில்,*
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்* தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது* ஒளியவன் விசும்புஇயங்கும்,*
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன* செய்வது ஒன்று அறியேனே!
ஆயன் மாயமே அன்றி மற்றுஎன்கையில்* வளைகளும் இறைநில்லா,*
பேயின் ஆர்உயிர் உண்டிடும் பிள்ளை* நம் பெண்உயிர்க்கு இரங்குமோ,*
தூய மாமதிக் கதிர்சுடதுணைஇல்லை* இணைமுலை வேகின்றதால்,*
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்* அஞ்சேல் என்பார் இலையே!
கயம்கொள் புண்தலைக் களிறுஉந்து வெம்திறல்* கழல்மன்னர் பெரும்போரில்,*
மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்* வந்திலன், மறிகடல்நீர்*
தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனிஎனும்* தழல் முகந்து இளமுலைமேல்,*
இயங்கும் மாருதம் விலங்கில்என் ஆவியை* எனக்குஎனப் பெறலாமே!
ஏழு மாமரம் துளைபட சிலைவளைத்து* இலங்கையை மலங்குவித்த-
ஆழியான்,* நமக்கு அருளிய அருளொடும்* பகல்எல்லை கழிகின்றதால்,*
தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணைஇல்லை* சுடர்படு முதுநீரில்,*
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவதுஓர்* அந்தி வந்து அடைகின்றதே!
முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட* முழங்குஅழல் எரிஅம்பின்,*
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்* வந்திலன் என்செய்கேன்,*
எரியும் வெம்கதிர் துயின்றது* பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
கரிய நாழிகை ஊழியின் பெரியன* கழியும்ஆறு அறியேனே!
கலங்க மாக்கடல் கடைந்துஅடைத்து* இலங்கையர் கோனது வரைஆகம்,-
மலங்க வெம்சமத்து அடுசரம் துரந்த* எம் அடிகளும் வாரானால்,*
இலங்கு வெம்கதிர் இளமதி அதனொடும்* விடைமணி அடும்,* ஆயன்-
விலங்கல் வேயினது ஓசையும்ஆய்* இனி விளைவது ஒன்றுஅறியேனே!
முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்* முனிவனும் முனிவுஎய்த,*
மழுவினால் மன்னர் ஆர்உயிர் வவ்விய* மைந்தனும் வாரானால்,*
ஒழுகு நுண்பனிக்கு ஒடுங்கிய பேடையை* அடங்க அம்சிறைகோலித்,*
தழுவும் நள்இருள் தனிமையின் கடியதுஓர்* கொடுவினை அறியேனே!
கனம்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்* கனவினில் அவன்தந்த,*
மனம்செய் இன்பம்வந்து உள்புக வெள்கி* என் வளைநெக இருந்தேனை,*
சினம்செய் மால்விடைச் சிறுமணி ஓசை* என் சிந்தையைச் சிந்துவிக்கும்,*
அனந்தல் அன்றிலின் அரிகுரல்* பாவியேன் ஆவியை அடுகின்றதே!
வார்கொள் மென்முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்துமுன் உரைசெய்த,*
கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி ஒலிவல்லார்,*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையவரொடும் கூடுவரே! (2)
தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்* துளங்கா அரக்கர் துளங்க,* முன்-
திண்தோள் நிமிர சிலைவளைய* சிறிதே முனிந்த திருமார்வன்,*
வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை* வடிக்கண் மடந்தை மாநோக்கம்-
கண்டான்,* கண்டு கொண்டுஉகந்த* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்* பொன்ற அன்று புள்ஊர்ந்து*
பெருந்தோள் மாலி தலைபுரள* பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*
இருந்தார் தம்மைஉடன் கொண்டு* அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப*
கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
வல்லி இடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*
அல்லல் செய்து வெம்சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியைக்*
கல்விச் சிலையால் காத்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
மல்லை முந்நீர் அதர்பட* வரிவெம் சிலைகால் வளைவித்து*
கொல்லை விலங்கு பணிசெய்ய* கொடியோன் இலங்கை புகல்உற்று*
தொல்லை மரங்கள் புகப்பெய்து* துவலை நிமிர்ந்து வான்அணவ*
கல்லால் கடலை அடைத்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
ஆமைஆகி அரிஆகி* அன்னம்ஆகி,* அந்தணர்தம்-
ஓமம்ஆகி ஊழிஆகி* உவரி சூழ்ந்த நெடும்புணரி*
சேமமதிள் சூழ்இலங்கைக்கோன்* சிரமும் கரமும் துணித்து,* முன்-
காமன் பயந்தான் கருதும்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
வருந்தாது இரு நீ மடநெஞ்சே* நம்மேல் வினைகள் வாரா,* முன்-
திருந்தா அரக்கர் தென்இலங்கை* செந்தீ உண்ண சிவந்து ஒருநாள்*
பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து* பின்னை மணாளன்ஆகி* முன்-
கருந்தாள் களிறுஒன்று ஒசித்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்* முதலை-தன்னால் அடர்ப்புண்டு*
கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய* அதனுக்கு அருள்புரிந்தான்*
அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு* இளையோற்கு அரசை அருளி* முன்-
கலைமாச் சிலையால் எய்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
மால்ஆய் மனமே! அருந்துயரில்* வருந்தாது இரு நீ, வலிமிக்க*
கால்ஆர் மருதும் காய்சினத்த கழுதும்* கதமா கழுதையும்*
மால்ஆர் விடையும் மதகரியும்* மல்லர் உயிரும் மடிவித்து*
காலால் சகடம் பாய்ந்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
குன்றால் மாரி பழுதுஆக்கி* கொடிஏர் இடையாள் பொருட்டாக*
வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த* வானோர் பெருமான் மாமாயன்*
சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்* திரிகால் சகடம் சினம்அழித்து*
கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை*
திருமா மகளால் அருள்மாரி* செழு நீர்ஆலி வளநாடன்*
மருவுஆர் புயல்கைக் கலிகன்றி* மங்கை வேந்தன் ஒலிவல்லார்*
இருமா நிலத்துக்கு அரசுஆகி* இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.
வியம்உடை விடைஇனம்* உடைதர மடமகள்*
குயம்மிடை தடவரை* அகலம்அது உடையவர்*
நயம்உடை நடைஅனம்* இளையவர் நடைபயில்*
கயம்மிடை கணபுரம்* அடிகள்தம் இடமே. (2)
இணைமலி மருதுஇற* எருதினொடு இகல்செய்து*
துணைமலி முலையவள்* மணம்மிகு கலவியுள்*
மணம்மலி விழவினொடு* அடியவர் அளவிய*
கணம்மலி கணபுரம்* அடிகள்தம் இடமே.
புயல்உறு வரைமழை* பொழிதர மணிநிரை*
மயல்உற வரைகுடை* எடுவிய நெடியவர்*
முயல்துளர் மிளைமுயல் துள* வள விளைவயல்*
கயல்துளு கணபுரம்* அடிகள்தம் இடமே.
ஏதலர் நகைசெய* இளையவர் அளைவெணெய்*
போதுசெய்து அமரிய* புனிதர்நல் விரை* மலர்-
கோதிய மதுகரம்* குலவிய மலர்மகள்*
காதல்செய் கணபுரம்* அடிகள்தம் இடமே. (2)
தொண்டரும் அமரரும்* முனிவரும் தொழுதுஎழ*
அண்டமொடு அகல்இடம்* அளந்தவர் அமர்செய்து*
விண்டவர் பட* மதிள்இலங்கை முன்எரிஎழக்*
கண்டவர் கணபுரம்* அடிகள்தம் இடமே.
மழுவுஇயல் படைஉடை* அவன்இடம் மழைமுகில்*
தழுவிய உருவினர்* திருமகள் மருவிய,*
கொழுவிய செழுமலர்* முழுசிய பறவைபண்*
எழுவிய கணபுரம்* அடிகள்தம் இடமே.
பரிதியொடு அணிமதி* பனிவரை திசைநிலம்*
எரிதியொடு எனஇன* இயல்வினர் செலவினர்*
சுருதியொடு அருமறை* முறைசொலும் அடியவர்*
கருதிய கணபுரம்* அடிகள்தம் இடமே.
படிபுல்கும் அடிஇணை* பலர்தொழ மலர்வைகு*
கொடிபுல்கு தடவரை* அகலம்அது உடையவர்*
முடிபுல்கு நெடுவயல்* படைசெல அடிமலர்*
கடிபுல்கு கணபுரம்* அடிகள்தம் இடமே
புலம்மனும் மலர்மிசை* மலர்மகள் புணரிய*
நிலமகள்என இன* மகளிர்கள் இவரொடும்*
வலம்மனு படையுடை* மணிவணர் நிதிகுவைக்*
கலம்மனு கணபுரம்* அடிகள்தம் இடமே.
மலிபுகழ் கணபுரம்உடைய* எம் அடிகளை*
வலிகெழு மதிள்அயல்* வயல்அணி மங்கையர்*
கலியன தமிழ்இவை* விழுமிய இசையினொடு*
ஒலிசொலும் அடியவர்* உறுதுயர் இலரே. (2)
வானோர் அளவும் முது முந்நீர்* வளர்ந்த காலம்,* வலிஉருவின்-
மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட* தண்தாமரைக் கண்ணன்*
ஆனா உருவில் ஆன்ஆயன்* அவனை அம்மா விளைவயலுள்*
கான்ஆர் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. (2)
மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக* அங்கு ஓர் வரைநட்டு*
இலங்கு சோதிஆர் அமுதம்* எய்தும் அளவு ஓர்ஆமைஆய்*
விலங்கல் திரியத் தடங்கடலுள்* சுமந்து கிடந்த வித்தகனை*
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
பாரஆர் அளவும் முதுமுந்நீர்* பரந்த காலம்,* வளைமருப்பின்-
ஏர்ஆர் உருவத்து ஏனம்ஆய்* எடுத்த ஆற்றல் அம்மானை*
கூர்ஆர் ஆரல்இரை கருதி* குருகு பாய கயல் இரியும்*
கார்ஆர் புறவன் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
உளைந்த அரியும் மானிடமும்* உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*
விளைந்த சீற்றம் விண்வெதும்ப* வேற்றோன் அகலம் வெம்சமத்துப்*
பிளந்து வளைந்த உகிரானை* பெருந்தண் செந்நெல் குலைதடிந்து*
களம்செய் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே*
தொழும்நீர் வடிவின் குறள்உருவுஆய்* வந்து தோன்றி மாவலிபால்*
முழுநீர் வையம் முன்கொண்ட* மூவா உருவின் அம்மானை*
உழும்நீர் வயலுள் பொன்கிளைப்ப* ஒருபால் முல்லை முகையோடும்*
கழுநீர் மலரும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
வடிவாய் மழுவே படைஆக* வந்து தோன்றி மூவெழுகால்*
படிஆர் அரசு களைகட்ட* பாழி யானை அம்மானை*
குடியா வண்டு கொண்டுஉண்ண8 கோல நீலம் மட்டு உகுக்கும்*
கடிஆர் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
வையம் எல்லாம் உடன்வணங்க* வணங்கா மன்னனாய்த் தோன்றி*
வெய்ய சீற்றக் கடிஇலங்கை* குடிகொண்டு ஓட வெம்சமத்துச்*
செய்த வெம்போர் நம்பரனை* செழுந்தண் கானல் மணம்நாறும்*
கைதை வேலிக் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்* ஒருபால் தோன்ற தான்தோன்றி*
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்* விண்பால் செல்ல வெம்சமத்துச்*
செற்ற கொற்றத் தொழிலானை* செந்தீ மூன்றும் இல்இருப்ப*
கற்ற மறையோர் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
துவரிக் கனிவாய் நிலமங்கை* துயர்தீர்ந்து உய்ய பாரதத்துள்*
இவரித்து அரசர் தடுமாற* இருள்நாள் பிறந்த அம்மானை*
உவரி ஓதம் முத்துஉந்த* ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
கவரி வீசும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்* முன்னும் இராமன்ஆய்
தான்ஆய்* பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்* கற்கியும்
ஆனான் தன்னைக்* கண்ணபுரத்து அடியன்* கலியன் ஒலிசெய்த*
தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை* செப்ப பாவம் நில்லாவே. (2)
கைம்மான மதயானை* இடர்தீர்த்த கருமுகிலை*
மைம்மான மணியை* அணிகொள் மரகதத்தை*
எம்மானை எம்பிரானை ஈசனை* என்மனத்துள்-
அம்மானை* அடியேன் அடைந்து உய்ந்து போனேனே. (2)
தருமான மழைமுகிலை* பிரியாது தன்அடைந்தார்*
வரும்மானம் தவிர்க்கும்* மணியை அணிஉருவின்*
திருமாலை அம்மானை* அமுதத்தை கடல்கிடந்த-
பெருமானை* அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே.
விடைஏழ் அன்றுஅடர்த்து* வெகுண்டு விலங்கல்உறப்*
படையால்ஆழி தட்ட* பரமன் பரஞ்சோதி*
மடைஆர் நீலம்மல்கும் வயல்சூழ்* கண்ணபுரம்ஒன்று-
உடையானுக்கு* அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?
மிக்கானை* மறைஆய் விரிந்த விளக்கை,* என்னுள்-
புக்கானை* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானை கடிகைத்* தடங்குன்றின் மிசைஇருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே. (2)
வந்தாய் என்மனத்தே* வந்துநீ புகுந்தபின்னை,*
எந்தாய்! போய்அறியாய்* இதுவே அமையாதோ*
கொந்துஆர் பைம்பொழில்சூழ்* குடந்தைக் கிடந்துஉகந்த-
மைந்தா,* உன்னைஎன்றும்* மறவாமை பெற்றேனே.
எஞ்சா வெம்நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேல்என்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே! நீநினையாது* இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
மஞ்சுஆர் மாளிகைசூழ்* வயல்ஆலி மைந்தனையே.
பெற்றார் பெற்றுஒழிந்தார்* பின்னும்நின்று அடியேனுக்கு*
உற்றான்ஆய் வளர்த்து* என்உயிர்ஆகி நின்றானை*
முற்றா மாமதிகோள் விடுத்தானை* எம்மானை*
எத்தால் யான்மறக்கேன்* இதுசொல்என் ஏழைநெஞ்சே!
கற்றார் பற்றுஅறுக்கும்* பிறவிப் பெருங்கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்தபின்னை*
வற்றா நீர்வயல்சூழ்* வயல்ஆலி அம்மானைப்-
பெற்றேன்* பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே.
கண்ணார் கண்ணபுரம்* கடிகை கடிகமழும்*
தண்ணார் தாமரைசூழ்* தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாள்மதியை* விரிகின்ற வெம்சுடரை*
கண்ஆரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
செருநீர வேல்வலவன்* கலிகன்றி மங்கையர்கோன்*
கருநீர் முகில்வண்ணன்* கண்ண புரத்தானை*
இருநீர்இன் தமிழ்* இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்*
வரும்நீர் வையம்உய்ய* இவைபாடி ஆடுமினே. (2)
வண்டுஆர்பூ மாமலர் மங்கை* மணநோக்கம்
உண்டானே* உன்னை உகந்துஉகந்து* உன்தனக்கே
தொண்டுஆனேற்கு* என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
கண்டானே* கண்ணபுரத்து உறை அம்மானே! (2)
பெருநீரும் விண்ணும்* மலையும் உலகுஏழும்*
ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய* நின்னை அல்லால்*
வருதேவர் மற்றுஉளர் என்று* என்மனத்து இறையும்-
கருதேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே!
மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று* இருப்பாரோடு-
உற்றிலேன்* உற்றதும்* உன்அடியார்க்கு அடிமை*
மற்றுஎல்லாம் பேசிலும்* நின்திரு எட்டுஎழுத்தும்-
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே! (2)
பெண்ஆனாள்* பேர்இளங் கொங்கையின்ஆர் அழல்போல்,*
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை* உகந்தேன்நான்*
மண்ஆளா! வாள்நெடுங் கண்ணி* மதுமலராள்-
கண்ணாளா* கண்ணபுரத்து உறை அம்மானே!
பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன்நான்*
மற்றுஆரும் பற்றுஇலேன்* ஆதலால் நின்அடைந்தேன்*
உற்றான்என்று உள்ளத்து வைத்து* அருள் செய்கண்டாய்,*
கற்றார்சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே!
ஏத்திஉன் சேவடி* எண்ணி இருப்பாரைப்*
பார்த்திருந்து அங்கு* நமன்தமர் பற்றாது*
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று* தொடாமைநீ,-
காத்திபோல்* கண்ணபுரத்து உறை அம்மானே!
வெள்ளைநீர் வெள்ளத்து* அணைந்த அரவுஅணைமேல்*
துள்ளுநீர் மெள்ளத்* துயின்ற பெருமானே*
வள்ளலே! உன்தமர்க்கு என்றும்* நமன்தமர்-
கள்ளர்போல்* கண்ணபுரத்து உறை அம்மானே!
மாண்ஆகி* வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*
பூண்ஆகம் கீண்டதுவும்* ஈண்டு நினைந்துஇருந்தேன்*
பேணாத வல்வினையேன்* இடர் எத்தனையும்-
காணேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே!
நாட்டினாய் என்னை* உனக்குமுன் தொண்டுஆக*
மாட்டினேன் அத்தனையே கொண்டு* என் வல்வினையை*
பாட்டினால் உன்னை* என் நெஞ்சத்து இருந்தமை-
காட்டினாய்* கண்ணபுரத்து உறை அம்மானே!
கண்டசீர்க்* கண்ணபுரத்து உறை அம்மானை*
கொண்டசீர்த் தொண்டன்* கலியன் ஒலிமாலை*
பண்டமாய்ப் பாடும்* அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
அண்டம்போய் ஆட்சி* அவர்க்கு அது அறிந்தோமே. (2)