பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய*  வாள்அரவின் அணை மேவி,* 
    சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி*  சாமமா மேனி என் தலைவன்,*

    அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்*  அருங்கலை பயின்று,*  எரி மூன்றும்-
    செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  (2) 


    கவளமா கதத்த கரி உய்ய*  பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-
    துவள*  மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட*  சுடுபடை துரந்தோன்,*

    குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்*  கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
    திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே  


    வாதை வந்து அடர வானமும் நிலனும்*  மலைகளும் அலைகடல் குளிப்ப,* 
    மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி*  விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*

    போதுஅலர் புன்னை மல்லிகை*  மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,* 
    சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி*  வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*
    பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்*  பஞ்சவர் பாகன்*

    ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து*  உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
    சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.


    மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்*  மூவடி நீரொடும் கொண்டு,*
    பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

    அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து*  அலைபுனல் இலைக்குடை நீழல்,*
    செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  


    மழுவினால் அவனி அரசை மூவெழுகால்*  மணிமுடி பொடிபடுத்து*  உதிரக்-
    குழுவுவார் புனலுள் குளித்து*  வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*

    குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்*  குளிர்தரு சூதம்மாதவியும்*
    செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    வான்உளார் அவரை வலிமையால் நலியும்*  மறிகடல் இலங்கையார் கோனை,* 
    பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்*  பருமுடி உதிர வில் வளைத்தோன்,*

    கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட*  கணமுகில் முரசம் நின்றுஅதிர,* 
    தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 


    அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை*  அஞ்சிடாதே இட,*  அதற்கு- 
    பெரியமா மேனி அண்டம் ஊடுருவ*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

    வரையின்மா மணியும் மரகதத் திரளும்*  வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,* 
    திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய*  பாரத மாபெரும் போரில்,*
    மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்*  மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*

    துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்*   சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,* 
    தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்*  திருக்கண்ணங் குடியுள் நின்றானே.


    கலைஉலா அல்குல் காரிகை திறத்து*  கடல்பெரும் படையொடும் சென்று,* 
    சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற*  திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*

    மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
    உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்*  வல்லவர்க்கு இல்லை நல்குரவே.  (2) 


    பொன்இவர் மேனி மரகதத்தின்*  பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
    மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்*  வேதியர் வானவர் ஆவர் தோழீ,*

    என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி*  ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,* 
    அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்*  அச்சோ ஒருவர் அழகியவா!  (2)


    தோடுஅவிழ் நீலம் மணம் கொடுக்கும்*  சூழ்புனல்சூழ் குடந்தைக் கிடந்த,*
    சேடர்கொல் என்று தெரிக்க மாட்டேன்*  செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி,*

    பாடக மெல்அடியார் வணங்க*  பல்மணி முத்தொடு இலங்குசோதி,*
    ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    வேய்இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த*  மெய்ய மணாளர் இவ் வையம்எல்லாம்,*
    தாயின நாயகர் ஆவர் தோழீ!*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*

    சேய்இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்*  செவ்விய ஆகி மலர்ந்தசோதி,*
    ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்*  அச்சோ ஒருவர் அழகியவா!        


    வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்*  கையன ஆழியும் சங்கும் ஏந்தி,* 
    நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்*  நாகரிகர் பெரிதும் இளையர்,*

    செம்பவளம் இவர் வாயின் வண்ணம்*  தேவர் இவரது உருவம் சொலலில்,* 
    அம்பவளத்திரளேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!  


    கோழியும் கூடலும் கோயில் கொண்ட*  கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*
    பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*

    வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்*  மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*
    ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    வெம்சின வேழ மருப்புஒசித்த*  வேந்தர்கொல் ஏந்திழையார் மனத்தைத்,*
    தஞ்சுஉடை ஆளர்கொல் யான் அறியேன்,*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*   

    கஞ்சனை அஞ்சமுன் கால் விசைத்த*  காளையர் ஆவர் கண்டார் வணங்கும்,* 
    அஞ்சன மாமலையேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    பிணிஅவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்*   பேர்அருளாளர் கொல்? யான் அறியேன்,* 
    பணியும் என் நெஞ்சம் இதுஎன்கொல் தோழீ!*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*

    அணிகெழு தாமரை அன்ன கண்ணும்*  அம்கையும் பங்கயம் மேனிவானத்து,*
    அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா! 


    மஞ்சுஉயர் மாமதி தீண்ட நீண்ட*  மாலிருஞ் சோலை மணாளர் வந்து,*  என்-
    நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்*  நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*

    மஞ்சுஉயர் பொன்மலை மேல் எழுந்த*  மாமுகில் போன்றுஉளர் வந்துகாணீர்,* 
    அம்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    எண்திசையும் எறிநீர்க் கடலும்*  ஏழ்உலகும் உடனே விழுங்கி,* 
    மண்டி ஓர் ஆல்இலைப் பள்ளி கொள்ளும்*  மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*

    கொண்டல் நல் மால்வரை யேயும் ஒப்பர்*  கொங்குஅலர் தாமரை கண்ணும்வாயும்* 
    அண்டத்து அமரர் பணிய நின்றார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    அன்னமும் கேழலும் மீனும்ஆய*  ஆதியை நாகை அழகியாரை,* 
    கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்*  காமரு சீர்க்கலி கன்றி,*  குன்றா-

    இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
    மன்னவர்ஆய் உலகுஆண்டு*  மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே.   (2)


    தன்னை நைவிக்கிலேன்*  வல்வினையேன் தொழுதும்எழு,*
    பொன்னை நைவிக்கும்*  அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*

    என்னை நைவித்து*  எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,* 
    புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து*  அழகுஆய புல்லாணியே.  (2) 


    உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?*  தொழுதும் எழு,*
    முருகுவண்டுஉன் மலர்க் கைதையின்*  நீழலில் முன்ஒருநாள்,*   

    பெருகுகா தன்மை என்உள்ளம்*  எய்தப் பிரிந்தான்இடம்,* 
    பொருதுமுந் நீர்கரைக்கே*  மணிஉந்து புல்லாணியே.     


    ஏது செய்தால் மறக்கேன்*  மனமே! தொழுதும் எழு,*
    தாது மல்கு தடம்சூழ் பொழில்*  தாழ்வர் தொடர்ந்து,*  பின்-

    பேதை நின்னைப் பிரியேன்இனி*  என்று அகன்றான்இடம்,* 
    போது நாளும் கமழும்*  பொழில்சூழ்ந்த புல்லாணியே.


    கொங்குஉண் வண்டே கரியாக வந்தான்*  கொடியேற்கு,*  முன்- 
    நங்கள்ஈசன்*  நமக்கே பணித்த மொழிசெய்திலன்*

    மங்கை நல்லாய்!  தொழுதும் எழு*  போய் அவன் மன்னும்ஊர்,* 
    பொங்கு முந்நீர் கரைக்கே*  மணி உந்து புல்லாணியே


    உணரில் உள்ளம் சுடுமால்*  வினையேன் தொழுதும் எழு,*
    துணரி நாழல் நறும்போது*  நம்சூழ் குழல்பெய்து,*  பின்- 

    தணரில் ஆவி தளரும்என*  அன்பு தந்தான்இடம்,* 
    புணரி ஓதம் பணில*  மணிஉந்து புல்லாணியே.  


    எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?*  தொழுதும் எழு,*
    வள்ளல் மாயன்*  மணிவண்ணன் எம்மான் மருவும்இடம்,*

    கள் அவிழும் மலர்க் காவியும்*  தூமடல் கைதையும்,* 
    புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த*  புல்லாணியே.   


    பரவி நெஞ்சே! தொழுதும்எழு*  போய் அவன் பாலம்ஆய்,*
    இரவும் நாளும் இனிகண் துயிலாது*  இருந்து என்பயன்?*

    விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,*  வெண்திரை*
    புரவி என்னப் புதம்செய்து*  வந்துஉந்து புல்லாணியே 


    அலமும் ஆழிப் படையும் உடையார்*  நமக்கு அன்பர்ஆய்,* 
    சலம்அதுஆகி தகவுஒன்று இலர்*  நாம் தொழுதும்எழு,*

    உலவு கால்நல் கழிஓங்கு*  தண்பைம் பொழிலூடு,*  இசை-
    புலவு கானல்*  களிவண்டுஇனம் பாடு புல்லாணியே. 


    ஓதி நாமம்குளித்து உச்சி தன்னால்,*  ஒளிமாமலர்ப்*
    பாதம் நாளும் பணிவோம்*  நமக்கே நலம்ஆதலின்,*

    ஆது தாரான்எனிலும் தரும்,*  அன்றியும் அன்பர்ஆய்ப்*
    போதும் மாதே! தொழுதும்*  அவன்மன்னு புல்லாணியே   


    இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்*  எழில்தாமரைப்,*
    புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த*  அழகுஆய புல்லாணிமேல்*

    கலங்கல் இல்லாப் புகழான்*  கலியன் ஒலிமாலைகள்,*
    வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது*  பாடுஇல் வைகுந்தமே  (2)


    காவார் மடல்பெண்ணை*  அன்றில்அரி குரலும்,*
    ஏவாயின் ஊடுஇயங்கும்*  எஃகின் கொடிதாலோ,*

    பூஆர் மணம்கமழும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    பாவாய்! இதுநமக்குஓர்*  பான்மையே ஆகாதே.   (2)


    முன்னம் குறள்உருஆய்*  மூவடிமண் கொண்டுஅளந்த,*
    மன்னன் சரிதைக்கே*  மால்ஆகி பொன்பயந்தேன்,*

    பொன்னம் கழிக்கானல்*  புள்இனங்காள்! புல்லாணி* 
    அன்னம்ஆய் நூல்பயந்தாற்கு*  ஆங்குஇதனைச் செப்புமினே


    வவ்வி துழாய்அதன்மேல்*  சென்ற தனிநெஞ்சம்,*
    செவ்வி அறியாது*  நிற்கும்கொல் நித்திலங்கள்*

    பவ்வத் திரைஉலவு*  புல்லாணி கைதொழுதேன்,* 
    தெய்வச் சிலையாற்கு*  என் சிந்தைநோய் செப்புமினே. 


    பரிய இரணியனது ஆகம்*  அணிஉகிரால்,*
    அரிஉருஆய்க் கீண்டான் அருள்*  தந்தவா!  நமக்கு,*

    பொருதிரைகள் போந்துஉலவு*  புல்லாணி கைதொழுதேன்,* 
    அரிமலர்க்கண் நீர்ததும்ப*  அம்துகிலும் நில்லாவே.   


    வில்லால் இலங்கை மலங்க*  சரம்துரந்த,*
    வல்லாளன் பின்போன*  நெஞ்சம் வரும் அளவும்,*

    எல்லாரும் என்தன்னை*  ஏசிலும் பேசிடினும்,* 
    புல்லாணி எம்பெருமான்*  பொய் கேட்டுஇருந்தேனே   (2)


    சுழன்றுஇலங்கு வெம்கதிரோன்*  தேரோடும் போய்மறைந்தான்,* 
    அழன்று கொடிதுஆகி*  அம்சுடரோன் தான்அடுமால்,* 

    செழுந்தடம் பூஞ்சோலை சூழ்*  புல்லாணி கைதொழுதேன்,*  
    இழந்திருந்தேன் என்தன்*  எழில்நிறமும் சங்குமே.       


    கனைஆர் இடிகுரலின்*  கார்மணியின் நாஆடல்,*
    தினையேனும் நில்லாது*  தீயில் கொடிதாலோ,*

    புனைஆர் மணிமாடப்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    வினையேன்மேல் வேலையும்*  வெம்தழலே வீசுமே.


    தூம்புஉடைக்கை வேழம்*  வெருவ மருப்புஒசித்த*
    பாம்பின் அணையான்*  அருள்தந்தவா நமக்கு,*

    பூஞ்செருந்தி பொன்சொரியும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    தேம்பல் இளம்பிறையும்*  என்தனக்கு ஓர்வெம்தழலே. 


    வேதமும் வேள்வியும்*  விண்ணும் இருசுடரும்,* 
    ஆதியும் ஆனான்*  அருள் தந்தவா நமக்கு,*

    போதுஅலரும் புன்னைசூழ்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    ஓதமும் நானும்*  உறங்காது இருந்தேனே. 


    பொன்அலரும் புன்னைசூழ்*  புல்லாணி அம்மானை*
    மின்இடையார் வேட்கைநோய் கூர*  இருந்ததனை,*

    கல்நவிலும் திண்தோள்*  கலியன் ஒலிவல்லார்,*
    மன்னவர்ஆய் மண்ஆண்டு*  வான்நாடும் முன்னுவரே   (2)


    தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்*  தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி- 
    துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்*  சூழ்பனி நாள் துயிலாது  இருப்பேன்,*

    இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்*  என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
    குவளை மலர்நிற வண்ணர்மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்   (2)


    தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த*  தண்மதியின் இளவாடை இன்னே,* 
    ஊதை திரிதந்து உழறிஉண்ண*  ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*  

    பேதையர் பேதைமையால் இருந்து*  பேசிலும் பேசுக பெய்வளையார்,*
    கோதை நறுமலர் மங்கைமார்வன்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 


    காலையும் மாலை ஒத்துண்டு*  கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*
    போல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்*  பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*

    மாலவன் மாமணி வண்ணன் மாயம்*  மற்றும் உள அவை வந்திடாமுன்,* 
    கோலமயில் பயிலும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.


    கருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து*  கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*
    ஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள*  ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*

    பெருமணி வானவர் உச்சிவைத்த*  பேர்அருளாளன் பெருமைபேசி,* 
    குருமணி நீர்கொழிக்கும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  


    திண்திமில் ஏற்றின் மணியும்*  ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*
    கொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற*  கோல இளம்பிறையோடு கூடி,*

    பண்டைய அல்ல இவை நமக்கு*  பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,* 
    கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.


    எல்லியும் நன்பகலும் இருந்தே*  ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,* 
    நல்லர் அவர் திறம் நாம்அறியோம்,*  நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*

    வல்லன சொல்லி மகிழ்வரேலும்*   மாமணி வண்ணரை நாம்மறவோம்,* 
    கொல்லை வளர் இளமுல்லை புல்கு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 


    செங்கண் நெடிய கரியமேனித்*  தேவர் ஒருவர் இங்கே புகுந்து,*  என்-
    அங்கம் மெலிய வளைகழல*  ஆதுகொலோ? என்று சொன்னபின்னை,*

    ஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு*  ஆடும் அதனை அறியமாட்டேன்,* 
    கொங்குஅலர் தண்பணை சூழ்புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   


    கேவலம் அன்று கடலின் ஓசை*  கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,*  என்-
    ஆவி அளவும் அணைந்து நிற்கும்*  அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,* 

    ஏவலம் காட்டி இவன்ஒருவன்*  இப்படியே புகுந்து எய்திடாமுன்,* 
    கோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 


    சோத்துஎன நின்று தொழ இரங்கான்*  தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்* 
    போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்*  போயின ஊர்அறியேன்,*  என்கொங்கை-

    மூத்திடுகின்றன*  மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,* 
    கூத்தன் இமையவர்கோன் விரும்பும்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)


    செற்றவன் தென்இலங்கை மலங்க*  தேவர்பிரான் திருமாமகளைப்,*
    பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட*  பேர்அருளாளன் பெருமைபேசக்-

    கற்றவன்*  காமரு சீர்க் கலியன்*  கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
    கொற்றவன்,*  முற்று உலகுஆளி நின்ற*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)


    அக்கும் புலியின்*  அதளும் உடையார்*  அவர்ஒருவர்
    பக்கம் நிற்க நின்ற*  பண்பர்ஊர் போலும்*

    தக்க மரத்தின் தாழ்சினைஏறி,*  தாய்வாயில்-
    கொக்கின் பிள்ளை*  வெள்இறவு உண்ணும் குறுங்குடியே.  (2)


    துங்கஆர் அரவத் திரைவந்து உலவ*  தொடுகடலுள்,-
    பொங்குஆர் அரவில் துயிலும்*  புனிதர்ஊர் போலும்,*

    செங்கால் அன்னம்*  திகழ்தண் பணையில் பெடையோடும்,*
    கொங்குஆர் கமலத்து*  அலரில் சேரும் குறுங்குடியே.


    வாழக் கண்டோம்*  வந்து காண்மின் தொண்டீர்காள்,*
    கேழல் செங்கண்*  மாமுகில் வண்ணர் மருவும் ஊர்,*

    ஏழைச் செங்கால்*  இன்துணை நாரைக்கு இரை தேடி,* 
    கூழைப் பார்வைக்*  கார்வயல் மேயும் குறுங்குடியே. 


    சிரம்முன் ஐந்தும் ஐந்தும்*  சிந்தச் சென்று,*  அரக்கன்- 
    உரமும் கரமும் துணித்த*  உரவோன்ஊர் போலும்,*

    இரவும் பகலும்*  ஈன்தேன் முரல,*  மன்றுஎல்லாம்-
    குரவின் பூவே தான்*  மணம் நாறும் குறுங்குடியே.


    கவ்வைக் களிற்று மன்னர் மாள*  கலிமாத்தேர்-
    ஐவர்க்குஆய்,*  அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*

    மைவைத்து இலங்கு*  கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,* 
    கொவ்வைக் கனிவாய்க்*  கிள்ளை பேசும் குறுங்குடியே.


    தீநீர் வண்ண*  மாமலர் கொண்டு விரை ஏந்தி,* 
    தூநீர் பரவித்*  தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*

    மாநீர் வண்ணர்*  மருவி உறையும்இடம்,*  வானில்-
    கூன்நீர் மதியை*  மாடம் தீண்டும் குறுங்குடியே..


    வல்லிச்சிறு நுண்இடையாரிடை*  நீர்வைக்கின்ற,*
    அல்லல் சிந்தை தவிர*  அடைமின் அடியீர்காள்!,*

    சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,* 
    கொல்லை முல்லை*  மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே. 


    நார்ஆர்இண்டை*  நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,* 
    ஆரா அன்போடு*  எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*

    தாரா ஆரும்*  வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
    கூர்வாய் நாரை*  பேடையொடு ஆடும் குறுங்குடியே.


    நின்ற வினையும் துயரும் கெட*  மாமலர்ஏந்தி,* 
    சென்று பணிமின் எழுமின்*  தொழுமின் தொண்டீர்காள்,*

    என்றும் இரவும் பகலும்*  வரிவண்டு இசைபாட,* 
    குன்றின் முல்லை*  மன்றிடை நாறும் குறுங்குடியே..


    சிலையால் இலங்கை செற்றான்*  மற்றுஓர் சினவேழம்,*
    கொலைஆர் கொம்பு கொண்டான் மேய*  குறுங்குடிமேல்,*

    கலைஆர் பனுவல் வல்லான்*  கலியன் ஒலிமாலை*
    நிலைஆர் பாடல் பாடப்*  பாவம் நில்லாவே  (2)


    தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
    பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*

    அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
    மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)


    மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற*  நுண்இடை நுடங்கும்,*
    அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*

    துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி*  முன் தூது சென்ற*
    மன்னனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    பூண்உலாம் மென்முலைப் பாவைமார்*  பொய்யினை 'மெய் இது' என்று,* 
    பேணுவார் பேசும் அப்பேச்சை*  நீ பிழை எனக் கருதினாயேல்,*

    நீள்நிலா வெண்குடை வாணனார்*  வேள்வியில் மண் இரந்த,*
    மாணியார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    பண்உலாம் மென்மொழிப் பாவைமார்*  பணைமுலை அணைதும் நாம்என்று* 
    எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து*  நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*

    விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற*  வேங்கடத்துஉளார்,*  வளங்கொள் முந்நீர்-
    வண்ணனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே! 


    மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்*  வாரணம் சூழ வாழ்ந்தார்,*
    துஞ்சினார் என்பதுஓர் சொல்லை*  நீ துயர்எனக் கருதினாயேல்,*

    நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து*  அவள் நாளை உண்ட,-
    மஞ்சனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    உருவின்ஆர் பிறவிசேர்*  ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு* 
    அருவிநோய் செய்துநின்று*  ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*

    திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ*  வேள்வியோடு அங்கம் ஆறும்,*
    மருவினார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை*  மெய்எனக் கொண்டு,*  வாளா- 
    பேயர்தாம் பேசும் அப்பேச்சை*  நீ பிழைஎனக் கருதினாயேல்,*

    தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்*  மங்குல் வான்ஆகி நின்ற,*
    மாயனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    மஞ்சுசேர் வான்எரி*  நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
    அஞ்சுசேர் ஆக்கையை*  அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

    சந்துசேர் மென்முலைப்*  பொன்மலர்ப் பாவையும் தாமும்,*  நாளும்-
    வந்துசேர் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    வெள்ளியார் பிண்டியார் போதியார்*  என்றுஇவர் ஓது கின்ற,*
    கள்ளநூல் தன்னையும்*  கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

    தெள்ளியார் கைதொழும் தேவனார்*  மாமுநீர் அமுது தந்த,*
    வள்ளலார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்*  வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
    சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்*  கோலநீள்ஆலி நாடன்,*

    கறைஉலாம் வேல்வல*  கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
    இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு*  இன்பம் நன்கு எய்துவாரே.   (2)


    முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்*  கலவியை விடுதடு மாறல்,* 
    அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய*  எம் அடிகள்தம் கோயில்,*

    சந்தொடு மணியும் அணிமயில் தழையும்*  தழுவி வந்து அருவிகள் நிரந்து,* 
    வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!   (2)


    இண்டையும் புனலும் கொண்டுஇடை இன்றி*  எழுமினோ தொழுதும்என்று,*  இமையோர்- 
    அண்டரும் பரவ அரவணைத் துயின்ற*  சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*

    விண்டுஅலர் தூளி வேய்வளர் புறவில்*   விரைமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
    வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே


    பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த*  பெருநிலம் அருளின் முன்அருளி,* 
    அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும்*  அளந்த எம் அடிகள்தம் கோயில்,*

    கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்*  குறவர்தம் கவணிடைத் துரந்த,*
    மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    சூர்மையில்ஆய பேய்முலை சுவைத்து*  சுடுசரம் அடுசிலைத் துரந்து,* 
    நீர்மை இலாத தாடகை மாள*  நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*

    கார்மலி வேங்கை கோங்குஅலர் புறவில்*  கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
    வார்புனல்சூழ் தண் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    வணங்கல்இல் அரக்கன் செருக்களத்து அவிய*  மணிமுடி ஒருபதும் புரள,* 
    அணங்குஎழுந்துஅவன் தன் கவந்தம் நின்றுஆட*  அமர்செய்த அடிகள்தம் கோயில்,*

    பிணங்கலின் நெடுவேய் நுதிமுகம் கிழிப்ப*   பிரசம் வந்துஇழிதர பெருந்தேன்,*
    மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!    


    விடம்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று*  விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
    குடம்கலந்துஆடி குரவைமுன் கோத்த*  கூத்த எம் அடிகள்தம் கோயில்,*

    தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிற*  தடவரைக் களிறுஎன்று முனிந்து,*
    மடங்கல் நின்றுஅதிரும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    தேனுகன் ஆவி போய்உக*  அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,* 
    தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*

    வானகச் சோலை மரகதச் சாயல்*  மாமணிக் கல்அதர் நுழைந்து,* 
    மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    புதம்மிகு விசும்பில் புணரி சென்று அணவ*  பொருகடல் அரவணைத் துயின்று,* 
    பதம்மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த*  பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*

    கதம்மிகு சினத்த கடதடக் களிற்றின்*  கவுள்வழி களிவண்டு பருக,* 
    மதம்மிகு சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    புந்திஇல் சமணர் புத்தர் என்றுஇவர்கள்*  ஒத்தன பேசவும் உவந்திட்டு,* 
    எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*

    சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்*  தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
    மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே! 


    வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  மாமணி வண்ணரை வணங்கும்,*
    தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்*  சூழ் வயல்ஆலி நல்நாடன்*

    கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
    கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்*  ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)


    மூவரில் முன்முதல்வன்*  முழங்குஆர் கடலுள்கிடந்து,* 
    பூவளர்உந்தி தன்னுள்*  புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*

    தேவர்கள் நாயகனை*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கோவலர் கோவிந்தனை*  கொடிஏர்இடை கூடும்கொலோ!  (2)


    புனைவளர் பூம்பொழில் ஆர்*  பொன்னி சூழ் அரங்க நகருள்-
    முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*

    சினைவளர் பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்றான்*
    கனைகழல் காணும்கொலோ?*  கயல் கண்ணி எம்காரிகையே!  (2)  


    உண்டு உலகுஏழினையும்*  ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
    கண்துயில் கொண்டுஉகந்த*  கருமாணிக்க மாமலையை,* 

    திண்திறல் மாகரிசேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    அண்டரதம் கோவினை இன்று*  அணுகும் கொல்? என்ஆய்இழையே!   


    சிங்கம்அதுஆய் அவுணன்*  திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,*
    பங்கய மாமலர்க் கண்*  பரனை எம் பரம்சுடரை,*

    திங்கள்நல் மாமுகில் சேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நங்கள் பிரானை இன்று*  நணுகும்கொல் என்நல்நுதலே!   


    தானவன் வேள்வி தன்னில்*  தனியே குறள்ஆய் நிமிர்ந்து,* 
    வானமும் மண்ணகமும்*  அளந்த திரி விக்கிரமன்,*

    தேன்அமர் பூம்பொழில் சூழ்*  திரமாலிருஞ் சோலைநின்ற,*
    வானவர் கோனை இன்று*  வணங்கித் தொழவல்லள் கொலோ!


    நேசம்இலாதவர்க்கும்*  நினையாதவர்க்கும் அரியான்,* 
    வாசமலர்ப் பொழில்சூழ்*  வடமா மதுரைப் பிறந்தான்,*

    தேசம்எல்லாம் வணங்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கேசவ நம்பி தன்னைக்*  கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ!  (2)


    புள்ளினை வாய்பிளந்து*  பொருமா கரி கொம்புஒசித்து,* 
    கள்ளச் சகடுஉதைத்த*  கருமாணிக்க ம மலையை,*

    தெள்அருவி கொழிக்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    வள்ளலை வாள்நுதலாள்*  வணங்கித் தொழவல்லள் கொலோ! 


    பார்த்தனுக்கு அன்றுஅருளி*  பாரதத்து ஒருதேர்முன்நின்று,* 
    காத்தவன் தன்னை*  விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*

    தீர்த்தனை பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    மூர்த்தியைக் கைதொழவும்*  முடியும்கொல்? என்மொய்குழற்கே!


    வலம்புரி ஆழியனை*  வரைஆர் திரள்தோளன் தன்னை,* 
    புலம்புரி நூலவனை*  பொழில் வேங்கட வேதியனை,*

    சிலம்புஇயல் ஆறுஉடைய*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நலம்திகழ் நாரணனை*  நணுகும்கொல்?  என்நல்நுதலே!  (2)


    தேடற்கு அரியவனை*  திருமாலிருஞ் சோலை நின்ற,*
    ஆடல் பறவையனை*  அணிஆய்இழை காணும்என்று,*

    மாடக் கொடிமதிள் சூழ்*  மங்கையார் கலிகன்றிசொன்ன,*
    பாடல் பனுவல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே!   (2)  


    எங்கள் எம்இறை எம்பிரான்*  இமையோர்க்கு நாயகன்,*  ஏத்து அடியவர்-
    தங்கள் தம்மனத்துப்*  பிரியாது அருள்புரிவான்,*

    பொங்கு தண்அருவி புதம்செய்ய*  பொன்களே சிதற இலங்குஒளி,*
    செங்கமலம் மலரும்*  திருக்கோட்டியூரானே.   ,


    எவ்வநோய் தவிர்ப்பான்*  எமக்குஇறை இன்நகைத் துவர்வாய்,*  நிலமகள்--
    செவ்வி தோய வல்லான்*  திருமா மகட்குஇனியான்,*

    மௌவல் மாலை வண்டுஆடும்*  மல்லிகை மாலையொடும் அணைந்த,*  மாருதம்-
    தெய்வம் நாறவரும்*  திருக்கோட்டியூரானே. 


    வெள்ளியான் கரியான்*  மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,*  எமக்கு-
    ஒள்ளியான் உயர்ந்தான்*  உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*

    துள்ளுநீர் மொண்டு கொண்டு*  சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,* 
    தெள்ளுநீர்ப் புறவில்*  திருக்கோட்டியூரானே.


    ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்*  ஈசற்கு இசைந்து,*  உடம்பில் ஓர்-
    கூறுதான் கொடுத்தான்*  குலமாமகட்கு இனியான்,*

    நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி*  இன்இள வண்டு,*  நல்நறும்-
    தேறல்வாய் மடுக்கும்*  திருக்கோட்டியூரானே. 


    வங்க மாகடல் வண்ணன்*  மாமணி வண்ணன் விண்ணவர் கோன்*  மதுமலர்த்
    தொங்கல் நீள்முடியான்*  நெடியான் படிகடந்தான்,*

    மங்குல் தோய்மணி மாட வெண்கொடி*  மாகம்மீது உயர்ந்துஏறி,*  வான்உயர்-
    திங்கள் தான்அணவும்*  திருக்கோட்டியூரானே.  


    காவலன் இலங்கைக்கு இறைகலங்க*  சரம் செல உய்த்து,*  மற்றுஅவன்-
    ஏவலம் தவிர்த்தான்*  என்னை ஆளுடை எம்பிரான்,*

    நாவலம் புவிமன்னர் வந்து வணங்க*  மால் உறைகின்றது இங்குஎன,* 
    தேவர் வந்துஇறைஞ்சும்*  திருக்கோட்டியூரானே. 


    கன்று கொண்டு விளங்கனி எறிந்து*  ஆநிரைக்கு அழிவுஎன்று,*  மாமழை-
    நின்று காத்துஉகந்தான்*  நிலமாமகட்கு இனியான்,*

    குன்றின் முல்லையின் வாசமும்*  குளிர்மல்லிகை மணமும் அளைந்து,*  இளம்-
    தென்றல் வந்துஉலவும்*  திருக்கோட்டியூரானே.  


    பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து*  அரிமாச் செகுத்து,*  அடியேனை ஆள்உகந்து- 
    ஈங்கு என்னுள் புகுந்தான்*  இமையோர்கள் தம் பெருமான்,*

    தூங்கு தண்பலவின்கனி*  தொகுவாழையின் கனியொடு மாங்கனி*
    தேங்கு தண்புனல் சூழ்*  திருக்கோட்டியூரானே.


    கோவைஇன் தமிழ் பாடுவார்*  குடம்ஆடுவார் தட மாமலர்மிசை,*
    மேவும் நான்முகனில்*  விளங்கு புரிநூலர்,* 

    மேவும் நான்மறை வாணர்*  ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*
    தேவ தேவபிரான்*  திருக்கோட்டியூரானே.    


    ஆலும்மா வலவன் கலிகன்றி*  மங்கையர் தலைவன்*  அணிபொழில்- 
    சேல்கள் பாய்கழனித்*  திருக்கோட்டியூரானை,*

    நீல மாமுகில் வண்ணனை*  நெடுமாலை இன்தமிழால் நினைந்த,*  இந்-
    நாலும் ஆறும் வல்லார்க்கு*  இடம்ஆகும் வான்உலகே.    (2)