பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய* வாள்அரவின் அணை மேவி,*
சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி* சாமமா மேனி என் தலைவன்,*
அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்* அருங்கலை பயின்று,* எரி மூன்றும்-
செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே. (2)
கவளமா கதத்த கரி உய்ய* பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-
துவள* மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட* சுடுபடை துரந்தோன்,*
குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்* கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வாதை வந்து அடர வானமும் நிலனும்* மலைகளும் அலைகடல் குளிப்ப,*
மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி* விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*
போதுஅலர் புன்னை மல்லிகை* மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,*
சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி* வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*
பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்* பஞ்சவர் பாகன்*
ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து* உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்* மூவடி நீரொடும் கொண்டு,*
பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து* அலைபுனல் இலைக்குடை நீழல்,*
செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்* மணிமுடி பொடிபடுத்து* உதிரக்-
குழுவுவார் புனலுள் குளித்து* வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*
குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்* குளிர்தரு சூதம்மாதவியும்*
செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வான்உளார் அவரை வலிமையால் நலியும்* மறிகடல் இலங்கையார் கோனை,*
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்* பருமுடி உதிர வில் வளைத்தோன்,*
கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட* கணமுகில் முரசம் நின்றுஅதிர,*
தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை* அஞ்சிடாதே இட,* அதற்கு-
பெரியமா மேனி அண்டம் ஊடுருவ* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
வரையின்மா மணியும் மரகதத் திரளும்* வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,*
திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய* பாரத மாபெரும் போரில்,*
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்* மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்* சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,*
தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்* திருக்கண்ணங் குடியுள் நின்றானே.
கலைஉலா அல்குல் காரிகை திறத்து* கடல்பெரும் படையொடும் சென்று,*
சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற* திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*
மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்* வல்லவர்க்கு இல்லை நல்குரவே. (2)
பொன்இவர் மேனி மரகதத்தின்* பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்* வேதியர் வானவர் ஆவர் தோழீ,*
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி* ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,*
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்* அச்சோ ஒருவர் அழகியவா! (2)
தோடுஅவிழ் நீலம் மணம் கொடுக்கும்* சூழ்புனல்சூழ் குடந்தைக் கிடந்த,*
சேடர்கொல் என்று தெரிக்க மாட்டேன்* செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி,*
பாடக மெல்அடியார் வணங்க* பல்மணி முத்தொடு இலங்குசோதி,*
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்* அச்சோ ஒருவர் அழகியவா!
வேய்இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த* மெய்ய மணாளர் இவ் வையம்எல்லாம்,*
தாயின நாயகர் ஆவர் தோழீ!* தாமரைக் கண்கள் இருந்தஆறு,*
சேய்இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்* செவ்விய ஆகி மலர்ந்தசோதி,*
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்* அச்சோ ஒருவர் அழகியவா!
வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்* கையன ஆழியும் சங்கும் ஏந்தி,*
நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்* நாகரிகர் பெரிதும் இளையர்,*
செம்பவளம் இவர் வாயின் வண்ணம்* தேவர் இவரது உருவம் சொலலில்,*
அம்பவளத்திரளேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*
பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா!
வெம்சின வேழ மருப்புஒசித்த* வேந்தர்கொல் ஏந்திழையார் மனத்தைத்,*
தஞ்சுஉடை ஆளர்கொல் யான் அறியேன்,* தாமரைக் கண்கள் இருந்தஆறு,*
கஞ்சனை அஞ்சமுன் கால் விசைத்த* காளையர் ஆவர் கண்டார் வணங்கும்,*
அஞ்சன மாமலையேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
பிணிஅவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்* பேர்அருளாளர் கொல்? யான் அறியேன்,*
பணியும் என் நெஞ்சம் இதுஎன்கொல் தோழீ!* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
அணிகெழு தாமரை அன்ன கண்ணும்* அம்கையும் பங்கயம் மேனிவானத்து,*
அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
மஞ்சுஉயர் மாமதி தீண்ட நீண்ட* மாலிருஞ் சோலை மணாளர் வந்து,* என்-
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்* நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*
மஞ்சுஉயர் பொன்மலை மேல் எழுந்த* மாமுகில் போன்றுஉளர் வந்துகாணீர்,*
அம்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்* அச்சோ ஒருவர் அழகியவா!
எண்திசையும் எறிநீர்க் கடலும்* ஏழ்உலகும் உடனே விழுங்கி,*
மண்டி ஓர் ஆல்இலைப் பள்ளி கொள்ளும்* மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*
கொண்டல் நல் மால்வரை யேயும் ஒப்பர்* கொங்குஅலர் தாமரை கண்ணும்வாயும்*
அண்டத்து அமரர் பணிய நின்றார்* அச்சோ ஒருவர் அழகியவா!
அன்னமும் கேழலும் மீனும்ஆய* ஆதியை நாகை அழகியாரை,*
கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்* காமரு சீர்க்கலி கன்றி,* குன்றா-
இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை* ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
மன்னவர்ஆய் உலகுஆண்டு* மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே. (2)
தன்னை நைவிக்கிலேன்* வல்வினையேன் தொழுதும்எழு,*
பொன்னை நைவிக்கும்* அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*
என்னை நைவித்து* எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,*
புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து* அழகுஆய புல்லாணியே. (2)
உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?* தொழுதும் எழு,*
முருகுவண்டுஉன் மலர்க் கைதையின்* நீழலில் முன்ஒருநாள்,*
பெருகுகா தன்மை என்உள்ளம்* எய்தப் பிரிந்தான்இடம்,*
பொருதுமுந் நீர்கரைக்கே* மணிஉந்து புல்லாணியே.
ஏது செய்தால் மறக்கேன்* மனமே! தொழுதும் எழு,*
தாது மல்கு தடம்சூழ் பொழில்* தாழ்வர் தொடர்ந்து,* பின்-
பேதை நின்னைப் பிரியேன்இனி* என்று அகன்றான்இடம்,*
போது நாளும் கமழும்* பொழில்சூழ்ந்த புல்லாணியே.
கொங்குஉண் வண்டே கரியாக வந்தான்* கொடியேற்கு,* முன்-
நங்கள்ஈசன்* நமக்கே பணித்த மொழிசெய்திலன்*
மங்கை நல்லாய்! தொழுதும் எழு* போய் அவன் மன்னும்ஊர்,*
பொங்கு முந்நீர் கரைக்கே* மணி உந்து புல்லாணியே
உணரில் உள்ளம் சுடுமால்* வினையேன் தொழுதும் எழு,*
துணரி நாழல் நறும்போது* நம்சூழ் குழல்பெய்து,* பின்-
தணரில் ஆவி தளரும்என* அன்பு தந்தான்இடம்,*
புணரி ஓதம் பணில* மணிஉந்து புல்லாணியே.
எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?* தொழுதும் எழு,*
வள்ளல் மாயன்* மணிவண்ணன் எம்மான் மருவும்இடம்,*
கள் அவிழும் மலர்க் காவியும்* தூமடல் கைதையும்,*
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த* புல்லாணியே.
பரவி நெஞ்சே! தொழுதும்எழு* போய் அவன் பாலம்ஆய்,*
இரவும் நாளும் இனிகண் துயிலாது* இருந்து என்பயன்?*
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,* வெண்திரை*
புரவி என்னப் புதம்செய்து* வந்துஉந்து புல்லாணியே
அலமும் ஆழிப் படையும் உடையார்* நமக்கு அன்பர்ஆய்,*
சலம்அதுஆகி தகவுஒன்று இலர்* நாம் தொழுதும்எழு,*
உலவு கால்நல் கழிஓங்கு* தண்பைம் பொழிலூடு,* இசை-
புலவு கானல்* களிவண்டுஇனம் பாடு புல்லாணியே.
ஓதி நாமம்குளித்து உச்சி தன்னால்,* ஒளிமாமலர்ப்*
பாதம் நாளும் பணிவோம்* நமக்கே நலம்ஆதலின்,*
ஆது தாரான்எனிலும் தரும்,* அன்றியும் அன்பர்ஆய்ப்*
போதும் மாதே! தொழுதும்* அவன்மன்னு புல்லாணியே
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்* எழில்தாமரைப்,*
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த* அழகுஆய புல்லாணிமேல்*
கலங்கல் இல்லாப் புகழான்* கலியன் ஒலிமாலைகள்,*
வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது* பாடுஇல் வைகுந்தமே (2)
காவார் மடல்பெண்ணை* அன்றில்அரி குரலும்,*
ஏவாயின் ஊடுஇயங்கும்* எஃகின் கொடிதாலோ,*
பூஆர் மணம்கமழும்* புல்லாணி கைதொழுதேன்,*
பாவாய்! இதுநமக்குஓர்* பான்மையே ஆகாதே. (2)
முன்னம் குறள்உருஆய்* மூவடிமண் கொண்டுஅளந்த,*
மன்னன் சரிதைக்கே* மால்ஆகி பொன்பயந்தேன்,*
பொன்னம் கழிக்கானல்* புள்இனங்காள்! புல்லாணி*
அன்னம்ஆய் நூல்பயந்தாற்கு* ஆங்குஇதனைச் செப்புமினே
வவ்வி துழாய்அதன்மேல்* சென்ற தனிநெஞ்சம்,*
செவ்வி அறியாது* நிற்கும்கொல் நித்திலங்கள்*
பவ்வத் திரைஉலவு* புல்லாணி கைதொழுதேன்,*
தெய்வச் சிலையாற்கு* என் சிந்தைநோய் செப்புமினே.
பரிய இரணியனது ஆகம்* அணிஉகிரால்,*
அரிஉருஆய்க் கீண்டான் அருள்* தந்தவா! நமக்கு,*
பொருதிரைகள் போந்துஉலவு* புல்லாணி கைதொழுதேன்,*
அரிமலர்க்கண் நீர்ததும்ப* அம்துகிலும் நில்லாவே.
வில்லால் இலங்கை மலங்க* சரம்துரந்த,*
வல்லாளன் பின்போன* நெஞ்சம் வரும் அளவும்,*
எல்லாரும் என்தன்னை* ஏசிலும் பேசிடினும்,*
புல்லாணி எம்பெருமான்* பொய் கேட்டுஇருந்தேனே (2)
சுழன்றுஇலங்கு வெம்கதிரோன்* தேரோடும் போய்மறைந்தான்,*
அழன்று கொடிதுஆகி* அம்சுடரோன் தான்அடுமால்,*
செழுந்தடம் பூஞ்சோலை சூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
இழந்திருந்தேன் என்தன்* எழில்நிறமும் சங்குமே.
கனைஆர் இடிகுரலின்* கார்மணியின் நாஆடல்,*
தினையேனும் நில்லாது* தீயில் கொடிதாலோ,*
புனைஆர் மணிமாடப்* புல்லாணி கைதொழுதேன்,*
வினையேன்மேல் வேலையும்* வெம்தழலே வீசுமே.
தூம்புஉடைக்கை வேழம்* வெருவ மருப்புஒசித்த*
பாம்பின் அணையான்* அருள்தந்தவா நமக்கு,*
பூஞ்செருந்தி பொன்சொரியும்* புல்லாணி கைதொழுதேன்,*
தேம்பல் இளம்பிறையும்* என்தனக்கு ஓர்வெம்தழலே.
வேதமும் வேள்வியும்* விண்ணும் இருசுடரும்,*
ஆதியும் ஆனான்* அருள் தந்தவா நமக்கு,*
போதுஅலரும் புன்னைசூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
ஓதமும் நானும்* உறங்காது இருந்தேனே.
பொன்அலரும் புன்னைசூழ்* புல்லாணி அம்மானை*
மின்இடையார் வேட்கைநோய் கூர* இருந்ததனை,*
கல்நவிலும் திண்தோள்* கலியன் ஒலிவல்லார்,*
மன்னவர்ஆய் மண்ஆண்டு* வான்நாடும் முன்னுவரே (2)
தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்* தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி-
துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்* சூழ்பனி நாள் துயிலாது இருப்பேன்,*
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்* என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
குவளை மலர்நிற வண்ணர்மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த* தண்மதியின் இளவாடை இன்னே,*
ஊதை திரிதந்து உழறிஉண்ண* ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*
பேதையர் பேதைமையால் இருந்து* பேசிலும் பேசுக பெய்வளையார்,*
கோதை நறுமலர் மங்கைமார்வன்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
காலையும் மாலை ஒத்துண்டு* கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*
போல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்* பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*
மாலவன் மாமணி வண்ணன் மாயம்* மற்றும் உள அவை வந்திடாமுன்,*
கோலமயில் பயிலும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
கருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து* கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*
ஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள* ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*
பெருமணி வானவர் உச்சிவைத்த* பேர்அருளாளன் பெருமைபேசி,*
குருமணி நீர்கொழிக்கும் புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
திண்திமில் ஏற்றின் மணியும்* ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*
கொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற* கோல இளம்பிறையோடு கூடி,*
பண்டைய அல்ல இவை நமக்கு* பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,*
கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
எல்லியும் நன்பகலும் இருந்தே* ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,*
நல்லர் அவர் திறம் நாம்அறியோம்,* நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*
வல்லன சொல்லி மகிழ்வரேலும்* மாமணி வண்ணரை நாம்மறவோம்,*
கொல்லை வளர் இளமுல்லை புல்கு* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
செங்கண் நெடிய கரியமேனித்* தேவர் ஒருவர் இங்கே புகுந்து,* என்-
அங்கம் மெலிய வளைகழல* ஆதுகொலோ? என்று சொன்னபின்னை,*
ஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு* ஆடும் அதனை அறியமாட்டேன்,*
கொங்குஅலர் தண்பணை சூழ்புறவின்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
கேவலம் அன்று கடலின் ஓசை* கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,* என்-
ஆவி அளவும் அணைந்து நிற்கும்* அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,*
ஏவலம் காட்டி இவன்ஒருவன்* இப்படியே புகுந்து எய்திடாமுன்,*
கோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
சோத்துஎன நின்று தொழ இரங்கான்* தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்*
போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்* போயின ஊர்அறியேன்,* என்கொங்கை-
மூத்திடுகின்றன* மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,*
கூத்தன் இமையவர்கோன் விரும்பும்* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
செற்றவன் தென்இலங்கை மலங்க* தேவர்பிரான் திருமாமகளைப்,*
பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட* பேர்அருளாளன் பெருமைபேசக்-
கற்றவன்* காமரு சீர்க் கலியன்* கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
கொற்றவன்,* முற்று உலகுஆளி நின்ற* குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
அக்கும் புலியின்* அதளும் உடையார்* அவர்ஒருவர்
பக்கம் நிற்க நின்ற* பண்பர்ஊர் போலும்*
தக்க மரத்தின் தாழ்சினைஏறி,* தாய்வாயில்-
கொக்கின் பிள்ளை* வெள்இறவு உண்ணும் குறுங்குடியே. (2)
துங்கஆர் அரவத் திரைவந்து உலவ* தொடுகடலுள்,-
பொங்குஆர் அரவில் துயிலும்* புனிதர்ஊர் போலும்,*
செங்கால் அன்னம்* திகழ்தண் பணையில் பெடையோடும்,*
கொங்குஆர் கமலத்து* அலரில் சேரும் குறுங்குடியே.
வாழக் கண்டோம்* வந்து காண்மின் தொண்டீர்காள்,*
கேழல் செங்கண்* மாமுகில் வண்ணர் மருவும் ஊர்,*
ஏழைச் செங்கால்* இன்துணை நாரைக்கு இரை தேடி,*
கூழைப் பார்வைக்* கார்வயல் மேயும் குறுங்குடியே.
சிரம்முன் ஐந்தும் ஐந்தும்* சிந்தச் சென்று,* அரக்கன்-
உரமும் கரமும் துணித்த* உரவோன்ஊர் போலும்,*
இரவும் பகலும்* ஈன்தேன் முரல,* மன்றுஎல்லாம்-
குரவின் பூவே தான்* மணம் நாறும் குறுங்குடியே.
கவ்வைக் களிற்று மன்னர் மாள* கலிமாத்தேர்-
ஐவர்க்குஆய்,* அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*
மைவைத்து இலங்கு* கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,*
கொவ்வைக் கனிவாய்க்* கிள்ளை பேசும் குறுங்குடியே.
தீநீர் வண்ண* மாமலர் கொண்டு விரை ஏந்தி,*
தூநீர் பரவித்* தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*
மாநீர் வண்ணர்* மருவி உறையும்இடம்,* வானில்-
கூன்நீர் மதியை* மாடம் தீண்டும் குறுங்குடியே..
வல்லிச்சிறு நுண்இடையாரிடை* நீர்வைக்கின்ற,*
அல்லல் சிந்தை தவிர* அடைமின் அடியீர்காள்!,*
சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,*
கொல்லை முல்லை* மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே.
நார்ஆர்இண்டை* நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,*
ஆரா அன்போடு* எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*
தாரா ஆரும்* வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
கூர்வாய் நாரை* பேடையொடு ஆடும் குறுங்குடியே.
நின்ற வினையும் துயரும் கெட* மாமலர்ஏந்தி,*
சென்று பணிமின் எழுமின்* தொழுமின் தொண்டீர்காள்,*
என்றும் இரவும் பகலும்* வரிவண்டு இசைபாட,*
குன்றின் முல்லை* மன்றிடை நாறும் குறுங்குடியே..
சிலையால் இலங்கை செற்றான்* மற்றுஓர் சினவேழம்,*
கொலைஆர் கொம்பு கொண்டான் மேய* குறுங்குடிமேல்,*
கலைஆர் பனுவல் வல்லான்* கலியன் ஒலிமாலை*
நிலைஆர் பாடல் பாடப்* பாவம் நில்லாவே (2)
தந்தை தாய் மக்களே* சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
பந்தம்ஆர் வாழ்க்கையை* நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*
அந்தம்ஆய் ஆதிஆய்* ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
மைந்தனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!. (2)
மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற* நுண்இடை நுடங்கும்,*
அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி* முன் தூது சென்ற*
மன்னனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
பூண்உலாம் மென்முலைப் பாவைமார்* பொய்யினை 'மெய் இது' என்று,*
பேணுவார் பேசும் அப்பேச்சை* நீ பிழை எனக் கருதினாயேல்,*
நீள்நிலா வெண்குடை வாணனார்* வேள்வியில் மண் இரந்த,*
மாணியார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
பண்உலாம் மென்மொழிப் பாவைமார்* பணைமுலை அணைதும் நாம்என்று*
எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து* நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*
விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற* வேங்கடத்துஉளார்,* வளங்கொள் முந்நீர்-
வண்ணனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்* வாரணம் சூழ வாழ்ந்தார்,*
துஞ்சினார் என்பதுஓர் சொல்லை* நீ துயர்எனக் கருதினாயேல்,*
நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து* அவள் நாளை உண்ட,-
மஞ்சனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
உருவின்ஆர் பிறவிசேர்* ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு*
அருவிநோய் செய்துநின்று* ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*
திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ* வேள்வியோடு அங்கம் ஆறும்,*
மருவினார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை* மெய்எனக் கொண்டு,* வாளா-
பேயர்தாம் பேசும் அப்பேச்சை* நீ பிழைஎனக் கருதினாயேல்,*
தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்* மங்குல் வான்ஆகி நின்ற,*
மாயனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மஞ்சுசேர் வான்எரி* நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
அஞ்சுசேர் ஆக்கையை* அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
சந்துசேர் மென்முலைப்* பொன்மலர்ப் பாவையும் தாமும்,* நாளும்-
வந்துசேர் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
வெள்ளியார் பிண்டியார் போதியார்* என்றுஇவர் ஓது கின்ற,*
கள்ளநூல் தன்னையும்* கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
தெள்ளியார் கைதொழும் தேவனார்* மாமுநீர் அமுது தந்த,*
வள்ளலார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்* வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்* கோலநீள்ஆலி நாடன்,*
கறைஉலாம் வேல்வல* கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு* இன்பம் நன்கு எய்துவாரே. (2)
முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்* கலவியை விடுதடு மாறல்,*
அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய* எம் அடிகள்தம் கோயில்,*
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்* தழுவி வந்து அருவிகள் நிரந்து,*
வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! (2)
இண்டையும் புனலும் கொண்டுஇடை இன்றி* எழுமினோ தொழுதும்என்று,* இமையோர்-
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற* சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*
விண்டுஅலர் தூளி வேய்வளர் புறவில்* விரைமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே
பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த* பெருநிலம் அருளின் முன்அருளி,*
அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும்* அளந்த எம் அடிகள்தம் கோயில்,*
கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்* குறவர்தம் கவணிடைத் துரந்த,*
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
சூர்மையில்ஆய பேய்முலை சுவைத்து* சுடுசரம் அடுசிலைத் துரந்து,*
நீர்மை இலாத தாடகை மாள* நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*
கார்மலி வேங்கை கோங்குஅலர் புறவில்* கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
வார்புனல்சூழ் தண் மாலிருஞ்சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
வணங்கல்இல் அரக்கன் செருக்களத்து அவிய* மணிமுடி ஒருபதும் புரள,*
அணங்குஎழுந்துஅவன் தன் கவந்தம் நின்றுஆட* அமர்செய்த அடிகள்தம் கோயில்,*
பிணங்கலின் நெடுவேய் நுதிமுகம் கிழிப்ப* பிரசம் வந்துஇழிதர பெருந்தேன்,*
மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
விடம்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று* விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
குடம்கலந்துஆடி குரவைமுன் கோத்த* கூத்த எம் அடிகள்தம் கோயில்,*
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிற* தடவரைக் களிறுஎன்று முனிந்து,*
மடங்கல் நின்றுஅதிரும் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
தேனுகன் ஆவி போய்உக* அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,*
தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்* எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
வானகச் சோலை மரகதச் சாயல்* மாமணிக் கல்அதர் நுழைந்து,*
மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
புதம்மிகு விசும்பில் புணரி சென்று அணவ* பொருகடல் அரவணைத் துயின்று,*
பதம்மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த* பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*
கதம்மிகு சினத்த கடதடக் களிற்றின்* கவுள்வழி களிவண்டு பருக,*
மதம்மிகு சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
புந்திஇல் சமணர் புத்தர் என்றுஇவர்கள்* ஒத்தன பேசவும் உவந்திட்டு,*
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்* எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்* தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை* மாமணி வண்ணரை வணங்கும்,*
தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்* சூழ் வயல்ஆலி நல்நாடன்*
கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்* ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)
மூவரில் முன்முதல்வன்* முழங்குஆர் கடலுள்கிடந்து,*
பூவளர்உந்தி தன்னுள்* புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*
தேவர்கள் நாயகனை* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கோவலர் கோவிந்தனை* கொடிஏர்இடை கூடும்கொலோ! (2)
புனைவளர் பூம்பொழில் ஆர்* பொன்னி சூழ் அரங்க நகருள்-
முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*
சினைவளர் பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்றான்*
கனைகழல் காணும்கொலோ?* கயல் கண்ணி எம்காரிகையே! (2)
உண்டு உலகுஏழினையும்* ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
கண்துயில் கொண்டுஉகந்த* கருமாணிக்க மாமலையை,*
திண்திறல் மாகரிசேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
அண்டரதம் கோவினை இன்று* அணுகும் கொல்? என்ஆய்இழையே!
சிங்கம்அதுஆய் அவுணன்* திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,*
பங்கய மாமலர்க் கண்* பரனை எம் பரம்சுடரை,*
திங்கள்நல் மாமுகில் சேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நங்கள் பிரானை இன்று* நணுகும்கொல் என்நல்நுதலே!
தானவன் வேள்வி தன்னில்* தனியே குறள்ஆய் நிமிர்ந்து,*
வானமும் மண்ணகமும்* அளந்த திரி விக்கிரமன்,*
தேன்அமர் பூம்பொழில் சூழ்* திரமாலிருஞ் சோலைநின்ற,*
வானவர் கோனை இன்று* வணங்கித் தொழவல்லள் கொலோ!
நேசம்இலாதவர்க்கும்* நினையாதவர்க்கும் அரியான்,*
வாசமலர்ப் பொழில்சூழ்* வடமா மதுரைப் பிறந்தான்,*
தேசம்எல்லாம் வணங்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கேசவ நம்பி தன்னைக்* கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ! (2)
புள்ளினை வாய்பிளந்து* பொருமா கரி கொம்புஒசித்து,*
கள்ளச் சகடுஉதைத்த* கருமாணிக்க ம மலையை,*
தெள்அருவி கொழிக்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
வள்ளலை வாள்நுதலாள்* வணங்கித் தொழவல்லள் கொலோ!
பார்த்தனுக்கு அன்றுஅருளி* பாரதத்து ஒருதேர்முன்நின்று,*
காத்தவன் தன்னை* விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*
தீர்த்தனை பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
மூர்த்தியைக் கைதொழவும்* முடியும்கொல்? என்மொய்குழற்கே!
வலம்புரி ஆழியனை* வரைஆர் திரள்தோளன் தன்னை,*
புலம்புரி நூலவனை* பொழில் வேங்கட வேதியனை,*
சிலம்புஇயல் ஆறுஉடைய* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நலம்திகழ் நாரணனை* நணுகும்கொல்? என்நல்நுதலே! (2)
தேடற்கு அரியவனை* திருமாலிருஞ் சோலை நின்ற,*
ஆடல் பறவையனை* அணிஆய்இழை காணும்என்று,*
மாடக் கொடிமதிள் சூழ்* மங்கையார் கலிகன்றிசொன்ன,*
பாடல் பனுவல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே! (2)
எங்கள் எம்இறை எம்பிரான்* இமையோர்க்கு நாயகன்,* ஏத்து அடியவர்-
தங்கள் தம்மனத்துப்* பிரியாது அருள்புரிவான்,*
பொங்கு தண்அருவி புதம்செய்ய* பொன்களே சிதற இலங்குஒளி,*
செங்கமலம் மலரும்* திருக்கோட்டியூரானே. ,
எவ்வநோய் தவிர்ப்பான்* எமக்குஇறை இன்நகைத் துவர்வாய்,* நிலமகள்--
செவ்வி தோய வல்லான்* திருமா மகட்குஇனியான்,*
மௌவல் மாலை வண்டுஆடும்* மல்லிகை மாலையொடும் அணைந்த,* மாருதம்-
தெய்வம் நாறவரும்* திருக்கோட்டியூரானே.
வெள்ளியான் கரியான்* மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,* எமக்கு-
ஒள்ளியான் உயர்ந்தான்* உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*
துள்ளுநீர் மொண்டு கொண்டு* சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,*
தெள்ளுநீர்ப் புறவில்* திருக்கோட்டியூரானே.
ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்* ஈசற்கு இசைந்து,* உடம்பில் ஓர்-
கூறுதான் கொடுத்தான்* குலமாமகட்கு இனியான்,*
நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி* இன்இள வண்டு,* நல்நறும்-
தேறல்வாய் மடுக்கும்* திருக்கோட்டியூரானே.
வங்க மாகடல் வண்ணன்* மாமணி வண்ணன் விண்ணவர் கோன்* மதுமலர்த்
தொங்கல் நீள்முடியான்* நெடியான் படிகடந்தான்,*
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி* மாகம்மீது உயர்ந்துஏறி,* வான்உயர்-
திங்கள் தான்அணவும்* திருக்கோட்டியூரானே.
காவலன் இலங்கைக்கு இறைகலங்க* சரம் செல உய்த்து,* மற்றுஅவன்-
ஏவலம் தவிர்த்தான்* என்னை ஆளுடை எம்பிரான்,*
நாவலம் புவிமன்னர் வந்து வணங்க* மால் உறைகின்றது இங்குஎன,*
தேவர் வந்துஇறைஞ்சும்* திருக்கோட்டியூரானே.
கன்று கொண்டு விளங்கனி எறிந்து* ஆநிரைக்கு அழிவுஎன்று,* மாமழை-
நின்று காத்துஉகந்தான்* நிலமாமகட்கு இனியான்,*
குன்றின் முல்லையின் வாசமும்* குளிர்மல்லிகை மணமும் அளைந்து,* இளம்-
தென்றல் வந்துஉலவும்* திருக்கோட்டியூரானே.
பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து* அரிமாச் செகுத்து,* அடியேனை ஆள்உகந்து-
ஈங்கு என்னுள் புகுந்தான்* இமையோர்கள் தம் பெருமான்,*
தூங்கு தண்பலவின்கனி* தொகுவாழையின் கனியொடு மாங்கனி*
தேங்கு தண்புனல் சூழ்* திருக்கோட்டியூரானே.
கோவைஇன் தமிழ் பாடுவார்* குடம்ஆடுவார் தட மாமலர்மிசை,*
மேவும் நான்முகனில்* விளங்கு புரிநூலர்,*
மேவும் நான்மறை வாணர்* ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*
தேவ தேவபிரான்* திருக்கோட்டியூரானே.
ஆலும்மா வலவன் கலிகன்றி* மங்கையர் தலைவன்* அணிபொழில்-
சேல்கள் பாய்கழனித்* திருக்கோட்டியூரானை,*
நீல மாமுகில் வண்ணனை* நெடுமாலை இன்தமிழால் நினைந்த,* இந்-
நாலும் ஆறும் வல்லார்க்கு* இடம்ஆகும் வான்உலகே. (2)