பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து* 
    கூடினேன் கூடி இளையவர்தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி 

    ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து 
    நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)


    ஆவியே! அமுதே! என நினைந்து உருகி*  அவர் அவர் பணை முலை துணையாப்* 
    பாவியேன் உணராது எத்தனை பகலும்*  பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்* 

    தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்*  சூழ் புனல் குடந்தையே தொழுது*  
    என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)  


    சேமமே வேண்டி தீவினை பெருக்கி*  தெரிவைமார் உருவமே மருவி* 
    ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்*  ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்* 

    காமனார் தாதை நம்முடை அடிகள்*  தம் அடைந்தார் மனத்து இருப்பார்* 
    நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம்.


    வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி*  வேல்கணார் கலவியே கருதி* 
    நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்*  என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*

    பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட*  பாழியான் ஆழியான் அருளே* 
    நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். 


    கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்*  கண்டவா திரிதந்தேனேலும்* 
    தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்*  சிக்கெனத் திருவருள் பெற்றேன்* 

    உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்*  உடம்பு எலாம் கண்ண நீர் சோர* 
    நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்*  நாராயணா என்னும் நாமம்.       


    எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்*  எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்* 
    அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி*  அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்* 

    வம்பு உலாம் சோலை மா மதிள்*  தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி* 
    நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)      


    இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்*  இன்னது ஓர் தன்மை என்று உணரீர்* 
    கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்*  கண்டவா தொண்டரைப் பாடும்* 

    சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்*  சூழ் புனல் குடந்தையே தொழுமின்* 
    நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்*  நாராயணா என்னும் நாமம். 


    கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்*  கருத்துளே திருத்தினேன் மனத்தை* 
    பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை*  பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*

    செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்*  செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி* 
    நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்*  நாராயணா என்னும் நாமம்.


    குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
    நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 

    வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
    நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)       


    மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்*  மங்கையார் வாள் கலிகன்றி* 
    செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை*  இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*

    துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்*  துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்* 
    நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு*  நாராயணா என்னும் நாமம் (2)          


    வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட*  வரி சிலை வளைவித்து*
    அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற*  இருந்த நல் இமயத்துள்* 

    ஆலி மா முகில் அதிர்தர அரு வரை*  அகடு உற முகடு ஏறி* 
    பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)


    கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய*  அரு வரை அணை கட்டி* 
    இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்*  இருந்த நல் இமயத்து* 

    விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன*  வேழங்கள் துயர்கூர* 
    பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று*  இளங்கொடிதிறத்து ஆயர்* 
    இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்*  இருந்த நல் இமயத்து 

    கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்*  மணி அறைமிசை வேழம்* 
    பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 


    மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர*  ஒருவனது அகல் மார்வம் திறந்து* 
    வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்துள்* 

    இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்*  கிடந்து அருகு எரி வீசும்* 
    பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    கரை செய் மாக் கடல் கிடந்தவன்*  கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த* 
    அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்*  அமர்ந்த நல் இமயத்து* 

    வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை*  அளை மிகு தேன் தோய்த்துப்* 
    பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்*  பரமா என்று* 
    இணங்கி வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்து* 

    மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற*  நிமிர்ந்து அவை முகில் பற்றிப்* 
    பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய*  கறி வளர் கொடி துன்னிப்* 
    போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய*  பூம் பொழில் இமயத்துள்* 

    ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து*  இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்* 
    பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!      


    இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை*  இரும் பசி அது கூர* 
    அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய*  அருவரை இமயத்து*

    பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று*  எண்ணி நின்று இமையோர்கள்* 
    பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!  


    ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு*  உறு துயர் அடையாமல்* 
    ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை*  இருந்த நல் இமயத்து*

    தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற*  தழல் புரை எழில் நோக்கி* 
    பேதை வண்டுகள் எரி என வெருவரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 


    கரிய மா முகில் படலங்கள் கிடந்து*  அவை முழங்கிட*
    களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு*  பிரிதி எம் பெருமானை* 

    வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்*  கலியனது ஒலி மாலை* 
    அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு*  அரு வினை அடையாவே*  (2)


    முற்ற மூத்து கோல் துணையா*  முன் அடி நோக்கி வளைந்து* 
    இற்ற கால் போல் தள்ளி மெள்ள*  இருந்து அங்கு இளையாமுன்* 

    பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை 
    வற்ற வாங்கி உண்ட வாயான்*  வதரி வணங்குதுமே.


    முதுகு பற்றிக் கைத்தலத்தால்*  முன் ஒரு கோல் ஊன்றி* 
    விதிர் விதிர்த்து கண் சுழன்று*  மேல் கிளைகொண்டு இருமி* 

    இது என் அப்பர் மூத்த ஆறு என்று*  இளையவர் ஏசாமுன்* 
    மது உண் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.  


    உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து*  ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி* 
    நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று*  நடுங்காமுன்* 

    அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய்*  ஆயிரம் நாமம் சொலி* 
    வெறி கொள் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.    


    பீளை சோரக் கண் இடுங்கி*  பித்து எழ மூத்து இருமி*
    தாள்கள் நோவத் தம்மில் முட்டி*  தள்ளி நடவாமுன்* 

    காளை ஆகி கன்று மேய்த்து*  குன்று எடுத்து அன்று நின்றான* 
    வாளை பாயும் தண் தடம் சூழ்*  வதரி வணங்குதுமே.


    பண்டு காமர் ஆன ஆறும்*  பாவையர் வாய் அமுதம்* 
    உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி* 

    தண்டு காலா ஊன்றி ஊன்றி*  தள்ளி நடவாமுன்* 
    வண்டு பாடும் தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.


    எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி*  இருமி இளைத்து*
    உடலம்  பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்*  பேசி அயராமுன்* 

    அத்தன் எந்தை ஆதி மூர்த்தி*  ஆழ் கடலைக் கடைந்த* 
    மைத்த சோதி எம்பெருமான்*  வதரி வணங்குதுமே.    


    பப்ப அப்பர் மூத்த ஆறு*  பாழ்ப்பது சீத் திரளை* 
    ஒப்ப ஐக்கள் போத உந்த*  உன் தமர் காண்மின் என்று* 

    செப்பு நேர் மென் கொங்கை நல்லார்*  தாம் சிரியாத முன்னம்* 
    வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்*  வதரி வணங்குதுமே.            


    ஈசி போமின் ஈங்கு இரேல்மின்*  இருமி இளைத்தீர்* 
    உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும்*  குவளை அம் கண்ணியர்பால்*

    நாசம் ஆன பாசம் விட்டு*  நல் நெறி நோக்கல் உறில்* 
    வாசம் மல்கு தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.


    புலன்கள் நைய மெய்யில் மூத்து*  போந்து இருந்து உள்ளம் எள்கி* 
    கலங்க ஐக்கள் போத உந்தி*  கண்ட பிதற்றாமுன்* 

    அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு*  ஆயிரம் நாமம் சொலி* 
    வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்*  வதரி வணங்குதுமே


    வண்டு தண் தேன் உண்டு வாழும்*  வதரி நெடு மாலைக்* 
    கண்டல் வேலி மங்கை வேந்தன்*  கலியன் ஒலி மாலை* 

    கொண்டு தொண்டர் பாடி ஆடக்*  கூடிடில் நீள் விசும்பில்* 
    அண்டம் அல்லால் மற்று அவர்க்கு*  ஓர் ஆட்சி அறியோமே. 


    ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து*  அன்று இணை அடி இமையவர் வணங்க* 
    தானவன் ஆகம் தரணியில் புரளத்*  தடஞ் சிலை குனித்த என் தலைவன்*

    தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த*  தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து* 
    வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  (2)   


    கானிடை உருவை சுடு சரம் துரந்து*  கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்* 
    ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப*  உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்* 

    தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்*  சென்று சென்று இறைஞ்சிட*
    பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.   


    இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்*  இரு நிதிக்கு இறைவனும்*
    அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்*  கொழுஞ் சுடர் சுழன்ற* 

    விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்*  வெண் துகில் கொடி என விரிந்து* 
    வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.       


    துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே!*  தொழுது எழு தொண்டர்கள் தமக்குப்* 
    பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்*  பேர் அருளாளன் எம் பெருமான்* 

    அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்*  ஆரமும் வாரி வந்து*
    அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.        


    பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன்*  பெரு முலை சுவைத்திட*
    பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட*  வளர்ந்த என் தலைவன்*

    சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த*  செம்பொன் செய் விலங்கலில் இலங்கு,* 
    வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்,*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே


    தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து*  ஒரு மறத் தொழில் புரிந்து* 
    பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த*  பனி முகில் வண்ணன் எம் பெருமான்

    காரணம் தன்னால் கடும் புனல் கயத்த*  கரு வரை பிளவு எழக் குத்தி* 
    வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.


    வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்*  விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்* 
    இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்*  எந்தை எம் அடிகள் எம் பெருமான்*

    அந்தரத்து அமரர் அடி இணை வணங்க*  ஆயிரம் முகத்தினால் அருளி* 
    மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  


    மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த*  மன்னவன் பொன் நிறத்து உரவோன்* 
    ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா*  உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்* 

    தான் முனிந்து இட்ட*  வெம் திறல் சாபம் தவிர்த்தவன்*
    தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 


    கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்*  குரை கடல் உலகு உடன் அனைத்தும்* 
    உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த*  உம்பரும் ஊழியும் ஆனான்* 

    அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து*  அங்கு அவனியாள் அலமரப்*
    பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 


    வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானை* 
    கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்* 

    வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்*  வானவர் உலகு உடன் மருவி* 
    இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  இமையவர் ஆகுவர் தாமே. (2)


    கலையும் கரியும் பரிமாவும்*  திரியும் கானம் கடந்துபோய்* 
    சிலையும் கணையும் துணையாகச்*  சென்றான் வென்றிச் செருக்களத்து* 

    மலை கொண்டு அலை நீர் அணை கட்டி*  மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்* 
    தலை பத்து அறுத்து உகந்தான்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    கடம் சூழ் கரியும் பரிமாவும்*  ஒலி மாத் தேரும் காலாளும்* 
    உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை*  பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்* 

    இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்*  இமையோர் வணங்க மணம் கமழும்* 
    தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    உலவு திரையும் குல வரையும்*  ஊழி முதலா எண் திக்கும்* 
    நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்*  வென்றி விறல் ஆழி வலவன்* 

    வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்* 
    சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    ஊரான் குடந்தை உத்தமன்*  ஒரு கால் இரு கால் சிலை வளையத்* 
    தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்*  வற்றா வரு புனல் சூழ் பேரான்* 

    பேர் ஆயிரம் உடையான்*  பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்* 
    தாரா வயல் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற*  அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்* 
    விளங்கு சுடர் ஆழி*  விண்ணோர் பெருமான் நண்ணார்முன்* 

    கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்*  கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்*
    தடம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!


    தாய் ஆய் வந்த பேய் உயிரும்*  தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்* 
    தூய வரி உருவின் குறளாய்ச் சென்று*  மாவலியை ஏயான் இரப்ப* 

    மூவடி மண் இன்றே தா என்று*  உலகு ஏழும் தாயான்*
    காயா மலர் வண்ணன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்*  அரி ஆய் பரிய இரணியனை* 
    ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த*  ஒருவன் தானே இரு சுடர் ஆய்* 

    வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்*  மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்* 
    தான் ஆய் தானும் ஆனான் தன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!


    வெந்தார் என்பும் சுடு நீறும்*  மெய்யில் பூசி கையகத்து*
    ஓர் சந்து ஆர் தலைகொண்டு*  உலகு ஏழும் திரியும்*  பெரியோன் தான் சென்று*

    என் எந்தாய்! சாபம் தீர் என்ன*  இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
    சந்து ஆர் பொழில் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    தொண்டு ஆம் இனமும் இமையோரும்*  துணை நூல் மார்வின் அந்தணரும்* 
    அண்டா எமக்கே அருளாய் என்று*  அணையும் கோயில் அருகு எல்லாம்* 

    வண்டு ஆர் பொழிலின் பழனத்து*  வயலின் அயலே கயல் பாயத்* 
    தண் தாமரைகள் முகம் அலர்த்தும்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    தாரா ஆரும் வயல் சூழ்ந்த*  சாளக்கிராமத்து அடிகளை* 
    கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 

    ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்*  அமரர் நல் நாட்டு அரசு ஆளப்* 
    பேர் ஆயிரமும் ஓதுமின்கள்*  அன்றி இவையே பிதற்றுமினே*


    வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்*  மாதரார் வன முலைப் பயனே பேணினேன்* 
    அதனைப் பிழை எனக் கருதி*  பேதையேன் பிறவி நோய் அறுப்பான்* 

    ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி*   இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்! 


    சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்*  திறத்தனாய் அறத்தையே மறந்து* 
    புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி*  போக்கினேன் பொழுதினை வாளா* 

    அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!*  வானவர்க்கு அரசனே!*  
    வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!     


    சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து*  சுரி குழல் மடந்தையர்திறத்துக்* 
    காதலே மிகுத்து கண்டவா*  திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்* 

    வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்*  வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே* 
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!   


    வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து*  பிறர் பொருள் தாரம் என்று இவற்றை* 
    நம்பினார் இறந்தால்*  நமன் தமர் பற்றி எற்றி வைத்து* 

    எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை*  பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி* 
    நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!    


    இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று*  இரந்தவர்க்கு இல்லையே என்று* 
    நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!*  நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை* 

    கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்*  படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி* 
    நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து*  திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு* 
    ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்*  உணர்விலேன் ஆதலால் நமனார்*

    பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்*  பரமனே! பாற்கடல் கிடந்தாய்!* 
    நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்*  நீதி அல்லாதன செய்தும்* 
    துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே*  துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*

    வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா*  வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!* 
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!            


    ஏவினார் கலியார் நலிக என்று*  என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
    ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*

    பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு*  உன் பாதமே பரவி நான் பணிந்து*
    என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி*  உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்*
    தான் உடைக் குரம்பை பிரியும்போது*  உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்* 

    தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!*  திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!* 
    நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!         


    ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி*  எழுமினோ தொழுதும் என்று*
    இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்*  நைமிசாரணியத்து*  எந்தையைச் சிந்தையுள் வைத்து*

    காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்*  மாலைதான் கற்று வல்லார்கள்* 
    ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  உம்பரும் ஆகுவர் தாமே. (2)      


    அம் கண் ஞாலம் அஞ்ச*  அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
    அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*

    பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு*  பத்திமையால்*  
    அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிங்கவேழ்குன்றமே. (2)


    அலைத்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த*  கூர் உகிராளன் இடம்*

    மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்*  வன் துடி வாய் கடுப்ப* 
    சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத*  சிங்கவேழ்குன்றமே.   


    ஏய்ந்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்* 

    ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்*  அன்றியும் நின்று அழலால்* 
    தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்*  சிங்கவேழ்குன்றமே.


    எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்*  ஏதலன் இன் உயிரை வவ்வி* 
    ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்*

    கவ்வும் நாயும் கழுகும்*  உச்சிப்போதொடு கால் சுழன்று* 
    தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.  


    மென்ற பேழ்வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*

    நின்ற செந்தீ மொண்டு சூறை*  நீள் விசும்பூடு இரிய* 
    சென்று காண்டற்கு அரிய கோயில்*  சிங்கவேழ்குன்றமே.


    எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்*  எயிற்றொடு இது எவ் உரு என்று* 
    இரிந்து வானோர் கலங்கி ஓட*  இருந்த அம்மானது இடம்* 

    நெரிந்த வேயின் முழையுள் நின்று*  நீள் நெறிவாய் உழுழை* 
    திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்*  சிங்கவேழ்குன்றமே.


    முனைத்த சீற்றம் விண் சுடப் போய்*  மூவுலகும் பிறவும்* 
    அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்* 

    கனைத்த தீயும் கல்லும் அல்லா*  வில் உடை வேடரும் ஆய்* 
    தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.        


    நாத் தழும்ப நாஅன்முகனும்*  ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
    அங்கு ஓர் ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்*

    காய்த்த வாகை நெற்று ஒலிப்ப*  கல் அதர் வேய்ங்கழை போய்த்* 
    தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.   


    நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்*  நம்முடை நம் பெருமான்* 
    அல்லிமாதர் புல்க நின்ற*  ஆயிரந் தோளன் இடம்,

    நெல்லி மல்கி கல் உடைப்ப*  புல் இலை ஆர்த்து*
    அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத*  சிங்கவேழ்குன்றமே.  


    செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிஙக்வேழ்குன்று உடைய* 
    எங்கள் ஈசன் எம் பிரானை*  இருந் தமிழ் நூல்புலவன்* 

    மங்கை ஆளன் மன்னு தொல் சீர்*  வண்டு அரை தார்க் கலியன்* 
    செங்கையாளன் செஞ்சொல் மாலை*  வல்லவர் தீது இலரே. (2) 


    கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த*  கோவலன் எம் பிரான் 
    சங்கு தங்கு தடங் கடல்*  துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*

    பொங்கு புள்ளினை வாய் பிளந்த*  புராணர் தம் இடம்*
    பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!


    பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்*  இரங்க வன் பேய் முலை* 
    பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*

    வெள்ளியான் கரியான்*  மணி நிற வண்ணன் என்று எண்ணி*
    நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!  (2) 


    நின்ற மா மருது இற்று வீழ*  நடந்த நின்மலன் நேமியான்* 
    என்றும் வானவர் கைதொழும்*  இணைத் தாமரை அடி எம் பிரான்* 

    கன்றி மாரி பொழிந்திட*  கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்* 
    சென்று குன்றம் எடுத்தவன்*  திரு வேங்கடம் அடை நெஞ்சமே!   


    பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு*  வென்ற பரஞ்சுடர்* 
    கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*

    ஏத்துவார் தம் மனத்து உள்ளான்*  இட வெந்தை மேவிய எம் பிரான்* 
    தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!   


    வண் கையான் அவுணர்க்கு நாயகன்*  வேள்வியில் சென்று மாணியாய்* 
    மண் கையால் இரந்தான்*  மராமரம் ஏழும் எய்த வலத்தினான்* 

    எண் கையான் இமயத்து உள்ளான்*  இருஞ்சோலை மேவிய எம் பிரான்* 
    திண் கை மா துயர் தீர்த்தவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!        


    எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி*  பொன் வயிற்றில் பெய்து* 
    பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்*  பால் மதிக்கு இடர் தீர்த்தவன்* 

    ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்*  ஒள் எயிற்றொடு* 
    திண் திறல் அரியாயவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! 


    பாரும் நீர் எரி காற்றினோடு*  ஆகாசமும் இவை ஆயினான்* 
    பேரும் ஆயிரம் பேச நின்ற*  பிறப்பிலி பெருகும் இடம்* 

    காரும் வார் பனி நீள் விசும்பிடைச்*  சோரும் மா முகில் தோய்தர*
    சேரும் வார் பொழில் சூழ்*  எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!


    அம்பரம் அனல் கால் நிலம் சலம்*  ஆகி நின்ற அமரர்கோன்* 
    வம்பு உலாம் மலர்மேல்*  மலி மட மங்கை தன் கொழுநன்அவன்* 

    கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்*  நீள் இதணம்தொறும்* 
    செம் புனம் அவை காவல் கொள்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!


    பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்*  சொலி நின்று பின்னரும்* 
    பேசுவார்தமை உய்ய வாங்கி*  பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*

    வாச மா மலர் நாறு வார் பொழில்*  சூழ் தரும் உலகுக்கு எலாம்* 
    தேசமாய்த் திகழும் மலைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)


    செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடத்து உறை செல்வனை* 
    மங்கையர் தலைவன் கலிகன்றி*  வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்* 

    சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்*  தஞ்சமதாகவே* 
    வங்க மா கடல் வையம் காவலர் ஆகி*  வான்உலகு ஆள்வரே!   


    தாயே தந்தை என்றும்*  தாரமே கிளை மக்கள் என்றும்* 
    நோயே பட்டொழிந்தேன்*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*

    வேய் ஏய் பூம் பொழில் சூழ்*  விரை ஆர் திருவேங்கடவா!*
    நாயேன் வந்து அடைந்தேன்*  நல்கி ஆள் என்னைக் கொண்டருளே. 


    மான் ஏய் கண் மடவார்*  மயக்கில் பட்டு மா நிலத்து* 
    நானே நானாவித*  நரகம் புகும் பாவம் செய்தேன்*

    தேன் ஏய் பூம் பொழில் சூழ்*  திருவேங்கட மா மலை*
    என் ஆனாய் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.    


    கொன்றேன் பல் உயிரை*  குறிக்கோள் ஒன்று இலாமையினால்* 
    என்றேனும் இரந்தார்க்கு*  இனிது ஆக உரைத்து அறியேன்*

    குன்று ஏய் மேகம் அதிர்*  குளிர் மா மலை வேங்கடவா!*
    அன்றே வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    குலம் தான் எத்தனையும்*  பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்* 
    நலம் தான் ஒன்றும் இலேன்*  நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்* 

    நிலம் தோய் நீள் முகில் சேர்*  நெறி ஆர் திருவேங்கடவா!* 
    அலந்தேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    எப் பாவம் பலவும்*  இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
    துப்பா! நின் அடியே*  தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*

    செப்பு ஆர் திண் வரை சூழ்*  திருவேங்கட மா மலை*
    என் அப்பா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    மண் ஆய் நீர் எரி கால்*  மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்* 
    புண் ஆர் ஆக்கை தன்னுள்*  புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்* 

    விண் ஆர் நீள் சிகர*  விரைஆர் திருவேங்கடவா!*
    அண்ணா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.            


    தெரியேன் பாலகனாய்*  பல தீமைகள் செய்துமிட்டேன்* 
    பெரியேன் ஆயினபின்*  பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*

    கரி சேர் பூம் பொழில் சூழ்*  கன மா மலை வேங்கடவா!*
    அரியே! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    நோற்றேன் பல் பிறவி*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்* 
    ஏற்றேன் இப் பிறப்பே*  இடர் உற்றனன்-எம் பெருமான்!* 

    கோல் தேன் பாய்ந்து ஒழுகும்*  குளிர் சோலை சூழ் வேங்கடவா!* 
    ஆற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    பற்றேல் ஒன்றும் இலேன்*  பாவமே செய்து பாவி ஆனேன்* 
    மற்றேல் ஒன்று அறியேன்* மாயனே எங்கள் மாதவனே!* 

    கல் தேன் பாய்ந்து ஒழுகும்*  கமலச் சுனை வேங்கடவா! 
    அற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய*  எம் கார் வண்ணனை* 
    விண்ணோர் தாம் பரவும்*  பொழில் வேங்கட வேதியனை*

    திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்* 
    பண் ஆர் பாடல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2) 


    கண் ஆர் கடல் சூழ்*  இலங்கைக்கு இறைவன்தன்* 
    திண் ஆகம் பிளக்கச்*  சரம் செல உய்த்தாய்!* 

    விண்ணோர் தொழும்*  வேங்கட மா மலை மேய* 
    அண்ணா அடியேன்*  இடரைக் களையாயே.   


    இலங்கைப் பதிக்கு*  அன்று இறை ஆய*
    அரக்கர் குலம் கெட்டு அவர் மாள*  கொடிப் புள் திரித்தாய்!* 

    விலங்கல் குடுமித்*  திருவேங்கடம் மேய*  
    அலங்கல் துளப முடியாய்!*  அருளாயே.     


    நீர் ஆர் கடலும்*  நிலனும் முழுது உண்டு* 
    ஏர் ஆலம் இளந் தளிர்மேல்*  துயில் எந்தாய்!* 

    சீர் ஆர்*  திருவேங்கட மா மலை மேய* 
    ஆரா அமுதே!*  அடியேற்கு அருளாயே.    


    உண்டாய் உறிமேல்*  நறு நெய் அமுது ஆக* 
    கொண்டாய் குறள் ஆய்*  நிலம் ஈர் அடியாலே* 

    விண் தோய் சிகரத்*  திருவேங்கடம் மேய, 
    அண்டா!*  அடியேனுக்கு அருள்புரியாயே.    


    தூண் ஆய் அதனூடு*  அரியாய் வந்து தோன்றி* 
    பேணா அவுணன் உடலம்*  பிளந்திட்டாய்!* 

    சேண் ஆர் திருவேங்கட*  மா மலை மேய,* 
    கோள் நாகணையாய்!*  குறிக்கொள் எனை நீயே.      


    மன்னா*  இம் மனிசப் பிறவியை நீக்கி* 
    தன் ஆக்கி*  தன் இன் அருள் செய்யும் தலைவன்* 

    மின் ஆர் முகில் சேர்*  திருவேங்கடம் மேய* 
    என் ஆனை என் அப்பன்*  என் நெஞ்சில் உளானே.


    மான் ஏய் மட நோக்கி*  திறத்து எதிர் வந்த* 
    ஆன் ஏழ் விடை செற்ற*  அணி வரைத் தோளா!*

    தேனே!*  திருவேங்கட மா மலை மேய* 
    கோனே! என் மனம்*  குடிகொண்டு இருந்தாயே.    


    சேயன் அணியன்*  என சிந்தையுள் நின்ற* 
    மாயன் மணி வாள் ஒளி*  வெண் தரளங்கள்* 

    வேய் விண்டு உதிர்*  வேங்கட மா மலை மேய* 
    ஆயன் அடி அல்லது*  மற்று அறியேனே.            


    வந்தாய் என் மனம் புகுந்தாய்*  மன்னி நின்றாய்* 
    நந்தாத கொழுஞ் சுடரே*  எங்கள் நம்பீ!* 

    சிந்தாமணியே*  திருவேங்கடம் மேய எந்தாய்!*
    இனி யான் உனை*  என்றும் விடேனே.    


    வில்லார் மலி*  வேங்கட மா மலை மேய* 
    ல்லார் திரள்தோள்*  மணி வண்ணன் அம்மானைக்* 

    ல்லார்  திரள்தோள்*  கலியன் சொன்ன மாலை* 
    வல்லார் அவர்*  வானவர் ஆகுவர் தாமே.  


    பிணக்கற அறுவகைச் சமயமும்*  நெறி உள்ளி உரைத்த* 
    கணக்கு அறு நலத்தனன்*  அந்தம் இல் ஆதி அம் பகவன்*

    வணக்கு உடைத் தவநெறி*  வழிநின்று புறநெறி களைகட்டு* 
    உணக்குமின், பசை அற!*  அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே.    


    உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று*  உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை* 
    உணர்ந்து உணர்ந்து உணரிலும்*  இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்!*

    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  அரி அயன் அரன் என்னும் இவரை* 
    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.   


    ஒன்று எனப் பல என*  அறிவு அரும்வடிவினுள் நின்ற* 
    நன்று எழில் நாரணன்*  நான்முகன் அரன் என்னும் இவரை*

    ஒன்ற நும் மனத்து வைத்து*  உள்ளி நும் இரு பசை அறுத்து* 
    நன்று என நலம் செய்வது*  அவனிடை நம்முடை நாளே.


    நாளும் நின்று அடு நம பழமை*  அம் கொடுவினை உடனே 
    மாளும்*  ஓர் குறைவு இல்லை;*  மனன் அகம் மலம் அறக் கழுவி*

    நாளும் நம் திரு உடை அடிகள் தம்*  நலம் கழல் வணங்கி* 
    மாளும் ஓர் இடத்திலும்*  வணக்கொடு மாள்வது வலமே.


    வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,*  இடம்பெறத் துந்தித் 
    தலத்து எழு திசைமுகன் படைத்த*  நல் உலகமும் தானும்

    புலப்பட*  பின்னும் தன் உலகத்தில்*  அகத்தனன் தானே 
    சொலப் புகில்*  இவை பின்னும் வயிற்று உள;*  இவை அவன் துயக்கே.


    துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்*  அமரரைத் துயக்கும்* 
    மயக்கு உடை மாயைகள்*  வானிலும் பெரியன வல்லன்*

    புயல் கரு நிறத்தனன்;*  பெரு நிலங் கடந்த நல் அடிப் போது* 
    அயர்ப்பிலன் அலற்றுவன்*  தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.


    அமரர்கள் தொழுது எழ*  அலை கடல் கடைந்தவன் தன்னை* 
    அமர் பொழில் வளங் குருகூர்ச்*  சடகோபன் குற்றேவல்கள்*

    அமர் சுவை ஆயிரத்து*  அவற்றினுள் இவை பத்தும் வல்லார்* 
    அமரரோடு உயர்வில் சென்று*  அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)


    அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!*  நீயும் நின் 
    அம்சிறைய சேவலுமாய்*  ஆஆ என்று எனக்கு அருளி*

    வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு*  என் விடு தூதாய்ச் சென்றக்கால்* 
    வன்சிறையில் அவன் வைக்கில்*  வைப்புண்டால் என் செயுமோ? (2)


    என் செய்ய தாமரைக்கண்*  பெருமானார்க்கு என் தூதாய்* 
    என் செய்யும் உரைத்தக்கால்?*  இனக் குயில்காள் நீர் அலிரே?*

    முன் செய்த முழுவினையால்*  திருவடிக்கீழ்க் குற்றேவல்* 
    முன் செய்ய முயலாதேன்*  அகல்வதுவோ? விதியினமே.


    விதியினால் பெடை மணக்கும்*  மென்நடைய அன்னங்காள்!* 
    மதியினால் குறள் மாணாய்*  உலகு இரந்த கள்வர்க்கு*

    மதியிலேன் வல் வினையே*  மாளாதோ? என்று ஒருத்தி* 
    மதி எல்லாம் உள் கலங்கி*  மயங்குமால் என்னீரே!


    என் நீர்மை கண்டு இரங்கி*  இது தகாது என்னாத* 
    என் நீல முகில் வண்ணற்கு*  என் சொல்லி யான் சொல்லுகேனோ?*

    நன் நீர்மை இனி அவர்கண்*  தங்காது என்று ஒரு வாய்ச்சொல்* 
    நன் நீல மகன்றில்காள்!*  நல்குதிரோ? நல்கீரோ?


    நல்கித் தான் காத்து அளிக்கும்*  பொழில் ஏழும்; வினையேற்கே* 
    நல்கத் தான் ஆகாதோ?*  நாரணனைக் கண்டக்கால்*

    மல்கு நீர்ப் புனல் படப்பை*  இரை தேர் வண் சிறு குருகே!* 
    மல்கு நீர்க் கண்ணேற்கு*  ஓர் வாசகம் கொண்டு அருளாயே. 


    அருளாத நீர் அருளி*  அவர் ஆவி துவராமுன்* 
    அருள் ஆழிப் புட்கடவீர்*  அவர் வீதி ஒருநாள் என்று*

    அருள் ஆழி அம்மானைக்*  கண்டக்கால் இது சொல்லி* 
    அருள் ஆழி வரி வண்டே!*  யாமும் என் பிழைத்தோமே?     


    என்பு இழை கோப்பது போலப்*  பனி வாடை ஈர்கின்றது* 
    என் பிழையே நினைந்தருளி*  அருளாத திருமாலார்க்கு*

    என் பிழைத்தாள் திருவடியின்*  தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்* 
    என்பிழைக்கும்? இளங் கிளியே!*  யான் வளர்த்த நீ அலையே?   


    நீயலையே ? சிறு பூவாய்!*  நெடுமாலார்க்கு என் தூதாய்* 
    நோய் எனது நுவல் என்ன,*  நுவலாதே இருந்தொழிந்தாய்*

    சாயலொடு மணி மாமை*  தளர்ந்தேன் நான்*  இனி உனது- 
    வாய் அலகில் இன் அடிசில்*  வைப்பாரை நாடாயே.  


    நாடாத மலர் நாடி*  நாள்தோறும் நாரணன் தன்* 
    வாடாத மலர் அடிக்கீழ்*  வைக்கவே வகுக்கின்று*

    வீடாடி வீற்றிருத்தல்*  வினை அற்றது என் செய்வதோ?* 
    ஊடாடு பனி வாடாய்!*  உரைத்து ஈராய் எனது உடலே.


    உடல் ஆழிப் பிறப்பு வீடு*  உயிர் முதலா முற்றுமாய்க்* 
    கடல் ஆழி நீர் தோற்றி*  அதனுள்ளே கண்வளரும்*

    அடல் ஆழி அம்மானைக்*  கண்டக்கால் இது சொல்லி* 
    விடல் ஆழி மட நெஞ்சே!*  வினையோம் ஒன்றாம் அளவே.


    அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்*  பெருமான் கண்ணனை* 
    வள வயல் சூழ் வண் குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்து உரைத்த*

    அளவு இயன்ற அந்தாதி*  ஆயிரத்துள் இப் பத்தின்* 
    வள உரையால் பெறலாகும்*  வான் ஓங்கு பெரு வளமே. (2) 


    இவையும் அவையும் உவையும்*  இவரும் அவரும் உவரும்,* 
    எவையும் எவரும் தன்னுளே*  ஆகியும் ஆக்கியும் காக்கும்,*

    அவையுள் தனிமுதல் எம்மான்*  கண்ண பிரான் என் அமுதம்,* 
    சுவையன் திருவின் மணாளன்*  என்னுடைச் சூழல் உளானே.


    சூழல் பலபல வல்லான்*  தொல்லை அம் காலத்து உலகைக்* 
    கேழல் ஒன்று ஆகி இடந்த*  கேசவன் என்னுடை அம்மான்,*

    வேழ மருப்பை ஒசித்தான்*  விண்ணவர்க்கு எண்ணல் அரியான்* 
    ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்*  அவன் என் அருகவிலானே.


    அருகல் இலாய பெரும் சீர்*  அமரர்கள் ஆதி முதல்வன்,* 
    கருகிய நீல நன் மேனி வண்ணன்*  செந்தாமரைக் கண்ணன்,* 

    பொரு சிறைப் புள் உவந்து ஏறும்*  பூமகளார் தனிக் கேள்வன்,* 
    ஒருகதியின் சுவை தந்திட்டு*  ஒழிவு இலன் என்னோடு உடனே


    நாவினுள் நின்று மலரும்*  ஞானக் கலைகளுக்கு எல்லாம்,* 
    ஆவியும் ஆக்கையும் தானே*  அழிப்போடு அளிப்பவன் தானே,*

    பூ இயல் நால் தடம் தோளன்*  பொரு படை ஆழி சங்கு ஏந்தும்,* 
    காவி நன் மேனிக் கமலக்*  கண்ணன் என் கண்ணின் உளானே.


    கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்*  காண்பன் அவன் கண்களாலே,* 
    அமலங்கள் ஆக விழிக்கும்*  ஐம்புலனும் அவன் மூர்த்தி,*

    கமலத்து அயன் நம்பி தன்னைக்*  கண்ணுதலானொடும் தோற்றி* 
    அமலத் தெய்வத்தொடு உலகம்*  ஆக்கி என் நெற்றி உளானே.


    நெற்றியுள் நின்று என்னை ஆளும்*  நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்,* 
    கற்றைத் துழாய் முடிக் கோலக்*  கண்ண பிரானைத் தொழுவார்,* 

    ஒற்றைப் பிறை அணிந்தானும்*  நான்முகனும் இந்திரனும்,* 
    மற்றை அமரரும் எல்லாம் வந்து*  எனது உச்சியுளானே.


    உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்*  கண்ண பிரானுக்கு,* 
    இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*

    இச் சொன்ன ஆயிரத்துள்ளே*  இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,* 
    நிச்சலும் விண்ணப்பம் செய்ய*  நீள் கழல் சென்னி பொருமே.