விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்டுஅமரும் வனமாலை*  மணிமுடிமேல் மணம்நாறும் என்கின்றாளால்* 
    உண்டுஇவர் பால் அன்பு எனக்குஎன்று*  ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*
    பண்டுஇவரைக் கண்டுஅறிவது*  எவ்ஊரில் யாம்? என்றே பயில்கின்றாளால்*
    கண்டவர்தம் மனம்வழங்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு அமரும் - வண்டுகள் படிந்த
வனமாலை - திருத்துழாய் மாலை
மணிமுடிமேல் - ரத்ன கிரீடத்தின் மீது
மணம் நாறும் என்கின்றாள் - பரிமளம் கமழ நிற்கிறது என்கிறாள்;
எனக்கு இவர் பால் அன்பு உண்டு என்று - ‘எனக்கு இவரிடத்திலே அன்பு உண்டு’ என்று சொல்லி

விளக்க உரை

“பண்டிவரைக் கண்டறிவது எவ்வூரில் யாமென்றே பயில்கின்றாளால்” என்ற மூன்றாமடியின் விசேஷப்பொருள் குறிக்கொள்ளத் தக்கது; - இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியக்கியான வாக்கியங் காண்மின் – முதல் நாள் கண்டால் ஸவாபாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளியாலுமாக ‘முன்பே கண்டறியும் முகமாயிருந்ததீ! எவ்வூரில்தான் கண்டது?’ என்னும்படி யிருக்கும்; பிறந்தால் பின்பு’ முன் போரிடத்திலும் இவரைக் கண்டறியோம்’ என்னும்படியாயிருக்கும்; நித்யாபூர்வமான விஷயமென்றபடி. சொன்ன இரண்டர்த்தத்தையும் அது காட்டுமோவென்ன, பயில்கின்றளால் என்றது கண்டாயே; எற்றைக்கும் வார்த்தை இதுவேயன்றோ : இப்படியாக வேண்டாவோ?’ என்று ஜீயர்.” என்று. இதனை விவரிப்போமிங்கு; - பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில்’ என்பதற்கு இரண்டு வகையான பொருள் சொல்ல இடமுண்டு; ‘முன்பு இவரை எவ்விடத்திலோ பார்த்திருக்கிறோம் போல இருக்கின்றதே, எவ்விடத்தில் பார்த்திருப்போம்!’ என்று விமர்சிப்பதாக ஒரு பொருள் : பண்டு இவரை எவ்வூரில் கண்டறிவது – எவ்வூரிலும் கண்டறிந்ததில்லை; இப்போதுதான் முதன்முதலாகக் காண்கிறொம் என்பதாக மற்றொரு பொருள். ஒரு தடவை பிரயோகிக்கப்பட்டிருக்கின்ற வாக்கியம் இவ்விரண்டு பொருளையும் ஏககாலத்தில் எங்ஙனே தருமென்னில்; மூலத்தில் “என்றே பயில்கின்றாளால்” என்றிருப்பதால் ‘பண்டிவரைக் கண்டறிவதெவ்வூரில் யாம்’ என்னும் வார்த்தையைப் பலகாலும் உருப்போடுகிறாள் என விளங்குதலால், அந்த வார்த்தையை முதல் தடவை சொல்லும்போது முதற்பொருளும் அடுத்த தடவைகளிலெல்லாம் இரண்டாவது பொருளும் சொல்லப்படக் குறையில்லையென்க. இவ்விரண்டு பொருள்களின் ஸ்வாரஸ்ய மென்னவெனில் :– எம்பெருமானை முதன் முதலாகக் காணும்போது திருமுகமண்டலத்தில் தண்ணளி முதலியவற்றைக்கொண்டு ‘இவரை முன்பு எங்கோ கண்டாற்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்; அதன்பிறகு எவ்வளவு நெருங்கிப்பழகினாலும் தெகுட்டுதலின்றியே “எப்பொழுதும் நாள் திங்களாண்டூழி யூழிதொறும், அப்பொழுதைக் கப்பொழுதென்னாராவமுதமே” என்னும்படியான விஷயமாகையாலே முன்பு எங்குங்கண்டறியாதது போலவும் அப்பொழுதே புதிதாகக் கண்டு அநுபவிப்பதுபோலவுந் தோன்றிக்கொண்டே யிருக்கும்.

English Translation

"The fragrance of the bee-humming Tulasi wreath on his golden crown wafts everywhere", she says, then "I love him, I can never part from him!", "I remember having seen him earlier, where was it?", she keeps asking. I wonder if she has seen the Lord of kannapuram where those who see him lose their hearts to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்