பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
ஒருநல் சுற்றம்* எனக்குஉயிர் ஒண்பொருள்*
வரும்நல் தொல்கதி* ஆகிய மைந்தனை*
நெருநல் கண்டது* நீர்மலை இன்றுபோய்*
கருநெல் சூழ்* கண்ண மங்கையுள் காண்டுமே (2)
பொன்னை மாமணியை* அணி ஆர்ந்ததுஓர்-
மின்னை* வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*
என்னை ஆளுடை ஈசனை* எம்பிரான்-
தன்னை* யாம் சென்று காண்டும்* தண்காவிலே. (2)
வேலை ஆல்இலைப்* பள்ளி விரும்பிய*
பாலை ஆர்அமுதத்தினை* பைந்துழாய்*
மாலை ஆலியில்* கண்டு மகிழ்ந்து போய்*
ஞாலம் உன்னியைக் காண்டும்* நாங்கூரிலே
துளக்கம்இல் சுடரை* அவுணன்உடல்-
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப்போய்*
அளப்புஇல் ஆர்அமுதை* அமரர்க்கு அருள்-
விளக்கினைச்* சென்று வெள்ளறைக் காண்டுமே.
சுடலையில்* சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
நடலை தீர்த்தவனை* நறையூர்க் கண்டு,* என்-
உடலையுள் புகுந்து* உள்ளம் உருக்கிஉண்*
விடலையைச் சென்று காண்டும்* மெய்யத்துள்ளே.
வானை ஆர்அமுதம்* தந்த வள்ளலை*
தேனை நீள்வயல்* சேறையில் கண்டுபோய்*
ஆனை வாட்டி அருளும்* அமரர்தம்-
கோனை,* யாம் குடந்தைச்சென்று காண்டுமே.
கூந்தலார் மகிழ்* கோவலன்ஆய்* வெண்ணெய்-
மாந்துஅழுந்தையில்* கண்டு மகிழ்ந்துபோய்*
பாந்தள் பாழியில்* பள்ளி விரும்பிய*
வேந்தனைச் சென்று காண்டும்* வெஃகாவுளே
பத்தர் ஆவியை* பால்மதியை,* அணித்-
தொத்தை* மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*
முத்தினை மணியை* மணி மாணிக்க-
வித்தினைச்,* சென்று விண்ணகர்க் காண்டுமே
கம்ப மாகளிறு* அஞ்சிக் கலங்க,* ஓர்-
கொம்பு கொண்ட* குரைகழல் கூத்தனை*
கொம்புஉலாம் பொழில்* கோட்டியூர்க் கண்டுபோய்*
நம்பனைச் சென்று காண்டும்* நாவாயுளே.
பெற்றமாளிகைப்* பேரில் மணாளனை*
கற்ற நூல்* கலிகன்றி உரைசெய்த*
சொல்திறம்இவை* சொல்லிய தொண்டர்கட்கு*
அற்றம் இல்லை* அண்டம் அவர்க்கு ஆட்சியே (2)
இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை* இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்*
பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன் பட்டனன்* இனி யாவர்க்கு உரைக்கோம்*
குரக்கு நாயகர்காள்! இளங்கோவே* கோல வல்வில் இராம பிரானே*
அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை* நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ. (2)
பத்து நீள்முடியும் அவற்றுஇரட்டிப்* பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,*
சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்* செய்வது ஒன்றுஅறியா அடியோங்கள்*
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்* ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்*
அத்த! எம் பெருமான்! எம்மைக் கொல்லேல்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
தண்ட காரணியம் புகுந்து* அன்று தையலை தகவிலி எம்கோமான்*
கொண்டு போந்து கெட்டான்* எமக்கு இங்குஓர் குற்றம்இல்லை கொல்லேல் குலவேந்தே*
பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்* பேசுகின்றதுஎன்? தாசரதீ,* உன்-
அண்ட வாணர் உகப்பதே செய்தாய்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
எஞ்சல்இல் இலங்கைக்குஇறை* எம்கோன்தன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே*
நஞ்சுதான் அரக்கர் குடிக்குஎன்று* நங்கையை அவன் தம்பியே சொன்னான்*
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்* வேரிவார் பொழில் மாமயில்அன்ன*
அஞ்சுஅல்ஓதியைக் கொண்டு நடமின்* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்* சீதை என்பதுஓர் தெய்வம் கொணர்ந்து*
வம்புஉலாம் கடி காவில் சிறையா வைத்ததே* குற்றம் ஆயிற்றுக் காணீர்*
கும்பனோடு நிகும்பனும் பட்டான்* கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி*
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.
ஓத மாகடலைக் கடந்துஏறி* உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து*
காதல் மக்களும் சுற்றமும் கொன்று* கடி இலங்கை மலங்க எரித்து*
தூது வந்த குரங்குக்கே* உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே*
ஆதர் நின்று படுகின்றது அந்தோ!* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
தாழம்இன்றி முந்நீரை அஞ்ஞான்று* தகைந்ததே கண்டு வஞ்சிநுண் மருங்குல்*
மாழை மான்மட நோக்கியை விட்டு* வாழகில்லா மதிஇல் மனத்தானை*
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை* எங்களை ஒழியக் கொலை அவனை*
சூழு மாநினை மாமணி வண்ணா!* சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
மனம்கொண்டுஏறும் மண்டோதரி முதலா* அம்கயல் கண்ணினார்கள் இருப்ப*
தனம்கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து* தஞ்சமே சில தாபதர்என்று*
புனம்கொள் மென்மயிலைச் சிறை வைத்த* புன்மையாளன் நெஞ்சில் புக எய்த*
அனங்கன் அன்னதிண்தோள் எம்இராமற்கு* அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
புரங்கள் மூன்றும்ஓர் மாத்திரைப் போதில்* பொங்குஎரிக்கு இரை கண்டவன் அம்பின்*
சரங்களே கொடிதுஆய் அடுகின்ற* சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்*
இரங்கு நீ எமக்குஎந்தை பிரானே!* இலங்கு வெம்கதிரோன்தன் சிறுவா*
குரங்குகட்குஅரசே! எம்மைக் கொல்லேல்!* கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர* அணி இலங்கை அழித்தவன் தன்னை*
பொங்கு மாவலவன் கலி கன்றி* புகன்ற பொங்கத்தம் கொண்டு,* இவ்உலகினில்-
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!* இம்மையே இடர் இல்லை,* இறந்தால்-
தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்* சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ! (2)
ஏத்துகின்றோம் நாத்தழும்ப* இராமன் திருநாமம்*
சோத்தம் நம்பீ சுக்கிரீவா!* உம்மைத் தொழுகின்றோம்*
வார்த்தை பேசீர் எம்மை* உங்கள் வானரம் கொல்லாமே*
கூத்தர் போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே (2)
எம்பிரானே! என்னை ஆள்வாய்* என்றுஎன்று அலற்றாதே*
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது* இந்திரசித்து அழிந்தான்*
நம்பி அநுமா! சுக்கிரீவா!* அங்கதனே! நளனே*
கும்பகர்ணன் பட்டுப்போனான்* குழமணி தூரமே
ஞாலம் ஆளும் உங்கள் கோமான்* எங்கள் இராவணற்குக்*
காலன்ஆகி வந்தவா* கண்டு அஞ்சி கருமுகில்போல்*
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க* அங்கதன் வாழ்கஎன்று*
கோலம்ஆக ஆடுகின்றோம்* குழமணி தூரமே
மணங்கள் நாறும் வார்குழலார்* மாதர்கள் ஆதரத்தைப்*
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்* பொன்ற வரிசிலையால்*
கணங்கள்உண்ண வாளிஆண்ட* காவலனுக்கு இளையோன்*
குணங்கள் பாடி ஆடுகின்றோம்* குழமணி தூரமே
வென்றி தந்தோம் மானம் வேண்டோம்* தானம் எமக்குஆக*
இன்று தம்மின் எங்கள் வாழ்நாள்* எம்பெருமான் தமர்காள்*
நின்று காணீர் கண்கள்ஆர* நீர் எம்மைக் கொல்லாதே*
குன்று போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே
கல்லின் முந்நீர் மாற்றி வந்து* காவல் கடந்து,* இலங்கை-
அல்லல் செய்தான் உங்கள் கோமான்* எம்மை அமர்க்களத்து*
வெல்ல கில்லாது அஞ்சினோம்காண்* வெம்கதிரோன் சிறுவா,*
கொல்ல வேண்டா ஆடுகின்றோம்* குழமணி தூரமே
மாற்றம்ஆவது இத்தனையே* வம்மின் அரக்கர்உள்ளீர்*
சீற்றம் நும்மேல் தீர வேண்டின்* சேவகம் பேசாதே*
ஆற்றல் சான்ற தொல்பிறப்பின்* அநுமனை வாழ்கஎன்று*
கூற்றம் அன்னார் காண ஆடீர்* குழமணி தூரமே.
கவள யானை பாய்புரவி* தேரொடு அரக்கர்எல்லாம்-
துவள,* வென்ற வென்றியாளன்* தன்தமர் கொல்லாமே*
தவள மாடம் நீடுஅயோத்தி* காவலன் தன்சிறுவன்*
குவளை வண்ணன் காண ஆடீர்* குழமணி தூரமே.
ஏடுஒத்துஏந்தும் நீள்இலைவேல்* எங்கள் இராவணனார்-
ஓடிப் போனார்,* நாங்கள் எய்த்தோம்* உய்வதுஓர் காரணத்தால்*
சூடிப் போந்தோம் உங்கள் கோமான்* ஆணை தொடரேல்மின்*
கூடிக்கூடி ஆடுகின்றோம்* குழமணி தூரமே.
வென்ற தொல்சீர்த் தென்இலங்கை* வெம்சமத்து* அன்றுஅரக்கர்-
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த* குழமணி தூரத்தைக்*
கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்* கலியன் ஒலிமாலை*
ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்* பாடி நின்று ஆடுமினே (2)
சந்த மலர்க்குழல் தாழ* தான் உகந்துஓடி தனியே-
வந்து,* என் முலைத் தடம்தன்னை வாங்கி* நின் வாயில் மடுத்து,*
நந்தன் பெறப்பெற்ற நம்பீ!* நான் உகந்துஉண்ணும் அமுதே,*
எந்தை பெருமானே! உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே (2)
வங்க மறிகடல் வண்ணா!* மாமுகிலே ஒக்கும் நம்பீ*
செங்கண் நெடிய திருவே* செங்கமலம் புரை வாயா,*
கொங்கை சுரந்திட உன்னைக்* கூவியும் காணாது இருந்தேன்*
எங்குஇருந்து ஆயர்களோடும்* என் விளையாடுகின்றாயே
திருவில் பொலிந்த எழில்ஆர்* ஆயர்தம் பிள்ளைகளோடு*
தெருவில் திளைக்கின்ற நம்பீ* செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,*
உருகிஎன் கொங்கையின் தீம்பால்* ஓட்டந்து பாய்ந்திடுகின்ற,*
மருவிக் குடங்கால் இருந்து* வாய்முலை உண்ண நீ வாராய்
மக்கள் பெறுதவம் போலும்* வையத்து வாழும் மடவார்*
மக்கள் பிறர்கண்ணுக்கு ஒக்கும்* முதல்வா மதக்களிறுஅன்னாய்*
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி* நின் கையில் தருவன்*
ஒக்கலை மேல்இருந்து* அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்
மைத்த கருங்குஞ்சி மைந்தா!* மாமருதுஊடு நடந்தாய்,*
வித்தகனே விரையாதே* வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,*
இத்தனை போதுஅன்றி என்தன்* கொங்கை சுரந்து இருக்ககில்லா,*
உத்தமனே! அம்மம் உண்ணாய்* உலகுஅளந்தாய் அம்மம் உண்ணாய்
பிள்ளைகள் செய்வன செய்யாய்* பேசின் பெரிதும் வலியை*
கள்ளம் மனத்தில் உடையை* காணவே தீமைகள் செய்தி*
உள்ளம் உருகி என் கொங்கை* ஓட்டந்து பாய்ந்திடுகின்ற*
பள்ளிக் குறிப்புச் செய்யாதே* பால்அமுது உண்ணநீ வாராய்
தன்மகன்ஆக வன் பேய்ச்சி* தான்முலை உண்ணக் கொடுக்க*
வன்மகன்ஆய் அவள் ஆவிவாங்கி* முலைஉண்ட நம்பீ*
நன்மகள் ஆய்மகளோடு* நானில மங்கை மணாளா*
என்மகனே! அம்மம் உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே
உந்தம் அடிகள் முனிவர்* உன்னைநான் என்கையில் கோலால்*
நொந்திட மோதவும் கில்லேன்* நுங்கள்தம் ஆ-நிரை எல்லாம்*
வந்து புகுதரும் போது* வானிடைத் தெய்வங்கள் காண*
அந்திஅம் போது அங்கு நில்லேல்* ஆழிஅம் கையனே! வாராய்
பெற்றத் தலைவன் எம்கோமான்* பேர்அருளாளன் மதலாய்,*
சுற்றக் குழாத்து இளங்கோவே!* தோன்றிய தொல்புகழாளா,*
கற்றுஇனம் தோறும் மறித்து* கானம் திரிந்த களிறே*
எற்றுக்குஎன் அம்மம் உண்ணாதே* எம்பெருமான் இருந்தாயே
இம்மை இடர்கெட வேண்டி* ஏந்துஎழில் தோள்கலி அன்றி*
செம்மைப் பனுவல்நூல் கொண்டு* செங்கண் நெடியவன் தன்னை*
அம்மம் உண்என்று உரைக்கின்ற* பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
மெய்ம்மை மனத்து வைத்துஏத்த* விண்ணவர் ஆகலும்ஆமே (2)
பூங்கோதை ஆய்ச்சி* கடைவெண்ணெய் புக்குஉண்ண,*
ஆங்குஅவள் ஆர்த்துப்* புடைக்க புடையுண்டு*
ஏங்கி இருந்து* சிணுங்கி விளையாடும்*
ஓங்குஓத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி (2)
தாயர் மனங்கள் தடிப்ப* தயிர்நெய்உண்டு
ஏய்எம்பிராக்கள்* இருநிலத்து எங்கள்தம்*
ஆயர் அழக* அடிகள்* அரவிந்த-
வாயவனே கொட்டாய் சப்பாணி!* மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
தாம்மோர் உருட்டி* தயிர்நெய் விழுங்கிட்டு*
தாமோ தவழ்வர்என்று* ஆய்ச்சியர் தாம்பினால்*
தாம்மோதரக்கையால்* ஆர்க்க தழும்புஇருந்த*
தாமோதரா! கொட்டாய் சப்பாணி!* தாமரைக் கண்ணனே! சப்பாணி
பெற்றார் தளைகழலப்* பேர்ந்துஅங்கு அயல்இடத்து*
உற்றார் ஒருவரும் இன்றி* உலகினில்,*
மற்றாரும் அஞ்சப்போய்* வஞ்சப்பெண் நஞ்சுஉண்ட*
கற்றாயனே! கொட்டாய் சப்பாணி!* கார்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
சோத்து என நின்னைத்* தொழுவன் வரம் தர,*
பேய்ச்சி முலைஉண்ட பிள்ளாய்,* பெரியன-
ஆய்ச்சியர்* அப்பம் தருவர்* அவர்க்காகச்-
சாற்றிஓர் ஆயிரம் சப்பாணி!* தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி
கேவலம் அன்று* உன்வயிறு வயிற்றுக்கு*
நான் அவல் அப்பம் தருவன்* கருவிளைப்-
பூஅலர் நீள்முடி* நந்தன்தன் போர்ஏறே,*
கோவலனே! கொட்டாய் சப்பாணி!* குடம்ஆடீ! கொட்டாய் சப்பாணி.
புள்ளினை வாய்பிளந்து* பூங்குருந்தம் சாய்த்து,*
துள்ளி விளையாடி* தூங்குஉறி வெண்ணெயை,*
அள்ளிய கையால்* அடியேன் முலைநெருடும்*
பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி!* பேய்முலை உண்டானே! சப்பாணி
யாயும் பிறரும்* அறியாத யாமத்து,*
மாய வலவைப்* பெண் வந்து முலைதர,*
பேய்என்று அவளைப்* பிடித்து உயிர் உண்ட,*
வாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.
கள்ளக் குழவிஆய்* காலால் சகடத்தைத்*
தள்ளி உதைத்திட்டு* தாய்ஆய் வருவாளை,*
மெள்ளத் தொடர்ந்து* பிடித்து ஆர்உயிர்உண்ட,*
வள்ளலே! கொட்டாய் சப்பாணி!* மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி
கார்ஆர் புயல்கைக்* கலிகன்றி மங்கையர்கோன்,*
பேராளன் நெஞ்சில்* பிரியாது இடம்கொண்ட*
சீராளா செந்தாமரைக் கண்ணா!* தண்துழாய்த்*
தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!* தடமார்வா கொட்டாய் சப்பாணி. (2)
எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?* நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
சிங்காமை விரித்தவன் எம்பெருமான்* அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*
பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக* பொன்மிடறு அத்தனைபோது,*
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே. (2)
குன்றுஒன்று மத்தா அரவம் அளவி* குரைமாகடலைக் கடைந்திட்டு,* ஒருகால்-
நின்று உண்டை கொண்டுஓட்டி வன்கூன் நிமிர* நினைந்த பெருமான் அது அன்றியும்முன்,*
நன்றுஉண்ட தொல்சீர் மகரக் கடல்ஏழ்* மலைஏழ் உலகுஏழ் ஒழியாமை நம்பி,*
அன்றுஉண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள்* உலப்புஇல் வலியார் அவர்பால்,* வயிரம்-
விளைந்திட்டது என்றுஎண்ணி விண்ணோர் பரவ* அவர் நாள்ஒழித்த பெருமான் முனநாள்,*
வளைந்திட்ட வில்லாளி வல் வாள்எயிற்று* மலைபோல் அவுணன் உடல் வள்உகிரால்,*
அளைந்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
தளர்ந்திட்டு இமையோர் சரண் தாஎன* தான் சரண்ஆய் முரண்ஆயவனை* உகிரால்-
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த* பெருமான் திருமால் விரிநீர் உலகை,*
வளர்ந்திட்ட தொல்சீர் விறல் மாவலியை* மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறள்ஆய்,*
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நீண்டான் குறள்ஆய் நெடுவான்அளவும்* அடியார் படும் ஆழ் துயர்ஆய எல்லாம்,*
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்* செல வைத்த பிரான் அதுஅன்றியும்முன்,*
வேண்டாமை நமன் தமர் என்தமரை* வினவப் பெறுவார் அலர், என்று,* உலகுஏழ்-
ஆண்டான்அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
பழித்திட்ட இன்பப் பயன் பற்றுஅறுத்துப்* பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
ஒழித்திட்டு அவரைத் தனக்குஆக்க வல்ல* பெருமான் திருமால் அதுஅன்றியும்முன்,*
தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்* சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
படைத்திட்டுஅது இவ்வையம் உய்ய முனநாள்* பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
துடைத்திட்டு அவரைத் தனக்குஆக்க என்னத்* தெளியா அரக்கர் திறல்போய் அவிய,*
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா* விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம,* கடலை-
அடைத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நெறித்திட்ட மென்கூழை நல்நேர்இழையோடு* உடன்ஆய வில்என்ன வல்ஏய் அதனை,*
இறுத்திட்டு அவள்இன்பம் அன்போடு அணைந்திட்டு* இளங்கொற்றவன்ஆய் துளங்காத முந்நீர்,*
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்* செழுநீள் முடிதோளொடு தாள் துணிய,*
அறுத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங்கு அரிமா* தொலைய பிரியாது சென்றுஎய்தி, எய்தாது*
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத தன்வாய்* இருகூறுசெய்த பெருமான் முனநாள்*
வரிந்திட்ட வில்லால் மரம்ஏழும் எய்து* மலைபோல் உருவத்து ஓர்இராக்கதி மூக்கு,*
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்* வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி* உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*
நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்* கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி* இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே. (2)
மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்* பிறர் மக்கள் தம்மை*
ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று* இரப்பன் உரப்ப கில்லேன்*
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்* நங்கைகாள்! நான்என் செய்கேன்?
தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்* தயிர்கடை கின்றான் போலும்! (2)
காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்* கண்டே போனேன்,*
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன்அல்லால்* மற்று வந்தாரும் இல்லை,*
மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்* வெண்ணெயேஅன்று, இருந்த*
பாலும் பதின்குடம் கண்டிலேன்* பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ!
தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள்!* உறி மேலைத் தடாநிறைந்த,*
வெள்ளி மலைஇருந்தால்ஒத்த வெண்ணெயை* வாரி விழுங்கி யிட்டு,*
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்* கைஎல்லாம் நெய்,* வயிறு-
பிள்ளை பரம்அன்று இவ்ஏழ்உலகும் கொள்ளும்* பேதையேன் என்செய்கேனோ!
மைந்நம்பு வேல்கண்நல்லாள்* முன்னம் பெற்ற வளைவண்ண நல்மா மேனி,*
தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது* அவன் இவை செய்தறியான்*
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்* பொதிஅறை போகின்றவா தவழ்ந்திட்டு,*
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வுஇல்லை* என்செய்கேன் என்செய்கேனோ!
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்* தோழிமார் ஆரும்இல்லை,*
சந்த மலர்க்குழலாள்* தனியே விளையாடும்இடம் குறுகி,*
பந்து பறித்து துகில்பற்றிக் கீறி* படிறன் படிறு செய்யும்,*
நந்தன் மதலைக்கு இங்குஎன்கடவோம்? நங்காய்!* என்செய்கேன் என்செய்கேனோ!
மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்* நந்தன் பெற்ற மதலை,*
அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே* அல்லில்தான் வந்த பின்னை,*
கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மி* கமலச் செவ்வாய் வெளுப்ப,*
என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!* என்செய்கேன் என்செய்கேனோ!
ஆயிரம் கண்உடை இந்திரனாருக்கு அன்று* ஆயர் விழவுஎடுப்ப,*
பாசனம் நல்லன பண்டிகளால்* புகப் பெய்த அதனை எல்லாம்,*
போயிருந்து அங்குஒரு பூத வடிவுகொண்டு* உன்மகன் இன்று நங்காய்,*
மாயன் அதனை எல்லாம் முற்ற* வாரி வளைத்து உண்டுஇருந்தான் போலும்!
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்* ஓர்ஓர்குடம் துற்றிடும்என்று,*
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்* நான்இதற்குஎள்கி இவனை நங்காய்*
சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று* இரப்பன் உரப்பகில்லேன்*
பேய்ச்சி முலைஉண்ட பின்னை* இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே!
ஈடும் வலியும் உடைய* இந் நம்பி பிறந்த எழு திங்களில்,*
ஏடுஅலர் கண்ணியினானை வளர்த்தி* யமுனை நீராடப் போனேன்,*
சேடன் திருமறு மார்வன்* கிடந்து திருவடியால்,* மலை போல்-
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை* உரப்புவது அஞ்சுவனே!
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!* ஆயிரம் நாழி நெய்யை,*
பஞ்சிய மெல்அடிப் பிள்ளைகள் உண்கின்று* பாகம்தான் வையார்களே,*
கஞ்சன் கடியன் கறவுஎட்டு நாளில்* என்கை வலத்துஆதும் இல்லை,*
நெஞ்சத்துஇருப்பன செய்து வைத்தாய் நம்பீ!* என்செய்கேன் என்செய்கேனோ!
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!* ஆயர் மடமக்களை,*
பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்* பின்னே சென்றுஒளித்திருந்து,*
அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு* அரவுஏர்இடையார் இரப்ப,*
மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற* மரம் ஏறி இருந்தாய் போலும்
அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு* ஆண்மையும் சேவகமும்,*
உச்சியில் முத்தி வளர்த்துஎடுத்தேனுக்க* உரைத்திலன் தான்இன்று போய்,*
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி* விசைகொண்டு பாய்ந்து புக்கு* ஆயிரவாய்-
நச்சுஅழல் பொய்கையில் நாகத்தினோடு* பிணங்கி நீ வந்தாய் போலும்!
தம்பரம் அல்லன ஆண்மைகளைத்* தனியேநின்று தாம் செய்வரோ?,
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுஉடையேன்* இனி யான்என் செய்கேன்?,*
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்* அங்குஅனல் செங்கண்உடை,*
வம்புஅவிழ் கானத்து மால்விடையோடு* பிணங்கி நீ வந்தாய் போலும்!
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச* அருவரை போல்,*
மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய* மைந்தனை மாகடல் சூழ்,*
கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்* காமரு சீர்க்கலிகன்றி*
இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு* ஏதும் இடர் இல்லையே. (2)
காதில் கடிப்புஇட்டு* கலிங்கம் உடுத்து,*
தாதுநல்ல* தண்அம் துழாய் கொடுஅணிந்து,*
போது மறுத்து* புறமே வந்து நின்றீர்,*
ஏதுக்கு இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ! (2)
துவர்ஆடை உடுத்து* ஒருசெண்டு சிலுப்பி,*
கவர்ஆக முடித்து* கலிக்கச்சுக் கட்டி,*
சுவர்ஆர் கதவின் புறமே* வந்து நின்றீர்,*
இவர்ஆர்? இதுஎன்? இதுஎன்? இதுஎன்னோ!
கருளக் கொடி ஒன்றுஉடையீர்!* தனிப்பாகீர்,*
உருளச் சகடம் அது* உறுக்கி நிமிர்த்தீர்,*
மருளைக் கொடுபாடி வந்து* இல்லம் புகுந்தீர்,*
இருளத்து இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
நாமம் பலவும் உடை* நாரண நம்பீ,*
தாமத் துளவம்* மிக நாறிடுகின்றீர்,*
காமன்எனப்பாடி வந்து* இல்லம் புகுந்தீர்,*
ஏமத்து இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
சுற்றும் குழல்தாழ* சுரிகை அணைத்து,*
மற்று பல* மாமணி பொன்கொடுஅணிந்து,*
முற்றம் புகுந்து* முறுவல்செய்து நின்றீர்,*
எற்றுக்கு இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
ஆன்ஆயரும்* ஆநிரையும் அங்குஒழிய,*
கூன்ஆயதுஓர்* கொற்ற வில்ஒன்று கைஏந்தி,*
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்,*
ஏனோர்கள் முன்என்?* இதுஎன்? இதுஎன்னோ!
மல்லே பொருத திரள்தோள்* மணவாளீர்,*
அல்லே அறிந்தோம்* நும் மனத்தின் கருத்தை,*
சொல்லாது ஒழியீர்* சொன்ன போதினால் வாரீர்*
எல்லே இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
புக்குஆடுஅரவம்* பிடித்துஆட்டும் புனிதீர்,*
இக்காலங்கள்* யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்,*
தக்கார் பலர்* தேவிமார் சாலஉடையீர்,*
எக்கே! இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
ஆடி அசைந்து* ஆய்மடவாரொடு நீபோய்க்*
கூடிக் குரவை* பிணை கோமளப் பிள்ளாய்,*
தேடி திருமாமகள்* மண்மகள் நிற்ப,*
ஏடி! இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
அல்லிக் கமலக் கண்ணனை* அங்கு ஓர்ஆய்ச்சி*
எல்லிப் பொழுதுஊடிய* ஊடல் திறத்தைக்,*
கல்லின் மலிதோள்* கலியன் சொன்ன மாலை,*
சொல்லித் துதிப்பார் அவர்* துக்கம் இலரே. (2)
புள்உருஆகி நள்இருள் வந்த* பூதனை மாள,* இலங்கை-
ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த* ஊக்கம் அதனை நினைந்தோ,?*
கள்அவிழ் கோதை காதலும்* எங்கள் காரிகை மாதர் கருத்தும்,*
பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்* பேசுவது எந்தை பிரானே! (2)
மன்றில் மலிந்து கூத்து உவந்துஆடி* மால்விடை ஏழும் அடர்த்து,* ஆயர்-
அன்று நடுங்க ஆநிரை காத்த* ஆண்மை கொலோ அறியேன் நான்,*
நின்ற பிரானே! நீள்கடல் வண்ணா!* நீஇவள் தன்னை நின் கோயில்,*
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா* முன் கைவளை கவர்ந்தாயே.
ஆர்மலி ஆழி சங்கொடு பற்றி* ஆற்றலை ஆற்றல் மிகுத்து,*
கார்முகில் வண்ணா! கஞ்சனை முன்னம்* கடந்தநின் கடுந்திறல் தானோ,*
நேர்இழை மாதை நித்திலத் தொத்தை* நெடுங் கடல் அமுதுஅனை யாளை,*
ஆர்எழில் வண்ணா! அம்கையில் வட்டுஆம்* இவள்எனக் கருதுகின்றாயே.
மல்கிய தோளும் மான்உரி அதளும்* உடையவர் தமக்கும்ஓர் பாகம்,*
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த* கரதலத்து அமைதியின் கருத்தோ?*
அல்லிஅம் கோதை அணிநிறம் கொண்டு வந்து* முன்னே நின்று போகாய்,*
சொல்லிஎன் நம்பி இவளை நீ உங்கள்* தொண்டர் கைத் தண்டுஎன்றஆறே.
செருஅழியாத மன்னர்கள் மாள* தேர்வலம் கொண்டு அவர் செல்லும்,*
அருவழி வானம் அதர்படக் கண்ட* ஆண்மைகொலோ? அறியேன் நான்,*
திருமொழி எங்கள் தேமலர்க் கோதை* சீர்மையை நினைந்திலை அந்தோ,*
பெருவழி நாவல் கனியினும் எளியள்* இவள்எனப் பேசுகின்றாயே
அரக்கியர் ஆகம் புல்என வில்லால்* அணிமதிள் இலங்கையார் கோனைச்,*
செருக்குஅழித்து அமரர் பணிய முன்நின்ற* சேவகமோ? செய்ததுஇன்று*
முருக்குஇதழ் வாய்ச்சி முன்கை வெண்சங்கம்* கொண்டு முன்னே நின்று போகாய்,*
எருக்குஇலைக்குஆக எறிமழுஓச்சல்* என்செய்வது? எந்தை பிரானே!
ஆழிஅம் திண்தேர் அரசர் வந்துஇறைஞ்ச* அலைகடல் உலகம்முன் ஆண்ட,*
பாழிஅம் தோள்ஓர் ஆயிரம் வீழ* படைமழுப் பற்றிய வலியோ?*
மாழைமென் நோக்கி மணிநிறம் கொண்டு வந்து* முன்னே நின்று போகாய்,*
கோழிவெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய்!* குறுந்தடி? நெடுங்கடல் வண்ணா!
பொருந்தலன் ஆகம்புள் உவந்துஏற* வள்உகிரால் பிளந்து,* அன்று-
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த* பெருமைகொலோ செய்தது இன்று,*
பெருந்தடங் கண்ணி சுரும்புஉறு கோதை* பெருமையை நினைந்திலை பேசில்,*
கருங்கடல் வண்ணா! கவுள்கொண்ட நீர்ஆம்* இவள்எனக் கருதுகின்றாயே
நீர்அழல் வான்ஆய் நெடுநிலம் கால்ஆய்* நின்றநின் நீர்மையை நினைந்தோ?*
சீர்கெழு கோதை என்அலதுஇலள் என்று* அன்னதுஓர் தேற்றன்மை தானோ?*
பார்கெழு பவ்வத்துஆர் அமுதுஅனை* பாவையைப் பாவம் செய்தேனுக்கு,*
ஆர்அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்ஆக* நின் மனத்து வைத்தாயே
வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி* மெய்ம்மையே நின்று எம்பெருமானை,*
வாள்திறல் தானை மங்கையர் தலைவன்* மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*
தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்* பழமொழியால் பணிந்து உரைத்த,*
பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்* சித்தமும் திருவொடு மிகுமே (2)
திருத்தாய் செம்போத்தே,!*
திருமாமகள் தன்கணவன்,*
மருத்தார் தொல்புகழ்* மாதவனை வர*
திருத்தாய் செம்போத்தே! (2)
கரையாய் காக்கைப்பிள்ளாய்,*
கருமாமுகில் போல்நிறத்தன்,*
உரைஆர் தொல்புகழ்* உத்தமனை வர*
கரையாய் காக்கைப்பிள்ளாய்!
கூவாய் பூங்குயிலே,*
குளிர்மாரி தடுத்துஉகந்த*
மாவாய் கீண்ட* மணிவண்ணனை வர,*
கூவாய் பூங்குயிலே!
கொட்டாய் பல்லிக்குட்டி,*
குடம்ஆடி உலகுஅளந்த,*
மட்டுஆர் பூங்குழல்* மாதவனை வர,*
கொட்டாய் பல்லிக்குட்டி!
சொல்லாய் பைங்கிளியே,*
சுடர்ஆழி வலன்உயர்த்த,*
மல்ஆர் தோள்* வட வேங்கடவனைவர,*
சொல்லாய் பைங்கிளியே! (2)
கோழி கூஎன்னுமால்,*
தோழி! நான்என்செய்கேன்,*
ஆழி வண்ணர்* வரும்பொழுது ஆயிற்று*
கோழி கூஎன்னுமால்.
காமற்கு என்கடவேன்,*
கருமாமுகில் வண்ணற்குஅல்லால்,*
பூமேல் ஐங்கணை* கோத்துப் புகுந்துஎய்ய,*
காமற்கு என்கடவேன்!
இங்கே போதும்கொலோ,*
இனவேல்நெடுங் கண்களிப்ப,*
கொங்குஆர் சோலைக்* குடந்தைக் கிடந்தமால்,*
இங்கே போதும்கொலோ! (2)
இன்னார் என்றுஅறியேன்,*
அன்னே! ஆழியொடும்,*
பொன்ஆர் சார்ங்கம் உடைய அடிகளை,*
இன்னார் என்றுஅறியேன். (2)
தொண்டீர் பாடுமினோ,*
சுரும்புஆர்பொழில் மங்கையர்கோன்,*
ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,*
தொண்டீர்! பாடுமினோ (2)