பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்* என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய* கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க* எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்* புள்ளம்பூதங்குடி தானே.(2)
கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து* உலகம் கைப்படுத்து*
பொள்ளைக் கரத்த போதகத்தின்* துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*
பள்ளச் செறுவில் கயல் உகள* பழனக் கழனி-அதனுள் போய*
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்* புள்ளம்பூதங்குடி தானே.
மேவா அரக்கர் தென் இலங்கை* வேந்தன் வீயச் சரம் துரந்து*
மாவாய் பிளந்து மல் அடர்த்து* மருதம் சாய்த்த மாலது இடம்*
காஆர் தெங்கின் பழம் வீழ* கயல்கள் பாய குருகு இரியும்*
பூஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
வெற்பால் மாரி பழுது ஆக்கி* விறல் வாள் அரக்கர் தலைவன் தன்*
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்* துணித்த வல் வில் இராமன் இடம்*
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்* கவின் ஆர் கூடம் மாளிகைகள்*
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
மையார் தடங் கண் கருங் கூந்தல்* ஆய்ச்சி மறைய வைத்த தயிர்*
நெய்யார் பாலோடு அமுது செய்த* நேமி அங் கை மாயன் இடம்*
செய்யார் ஆரல் இரை கருதிச்* செங் கால் நாரை சென்று அணையும்*
பொய்யா நாவின் மறையாளர்* புள்ளம்பூதங்குடிதானே.
மின்னின் அன்ன நுண் மருங்குல்* வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா*
மன்னு சினத்த மழ விடைகள்* ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்* வரி வண்டு இசை பாட*
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி* மாரி பழுதா நிரை காத்து*
சடையான் ஓட அடல் வாணன்* தடந் தோள் துணித்த தலைவன் இடம்*
குடியா வண்டு கள் உண்ண* கோல நீலம் மட்டு உகுக்கும*
புடை ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
இறையான் கையில் நிறையாத* முண்டம் நிறைத்த எந்தை இடம்*
மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்*
பொறையால் மிக்க அந்தணர் வாழ்* புள்ளம்பூதங்குடி தானே.
துன்னி மண்ணும் விண் நாடும்* தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்*
அன்னம் ஆகி அரு மறைகள்* அருளிச்செய்த அமலன் இடம்*
மின்னு சோதி நவமணியும்* வேயின் முத்தும் சாமரையும்*
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்* புள்ளம்பூதங்குடி தானே.
கற்றா மறித்து காளியன்தன்* சென்னி நடுங்க நடம்பயின்ற*
பொன் தாமரையாள் தன் கேள்வன்* புள்ளம்பூதங்குடி தன்மேல*
கற்றார் பரவும் மங்கையர் கோன்* கார் ஆர் புயல்கைக் கலிகன்றி*
சொல்தான் ஈர் ஐந்து இவை பாட* சோர நில்லா துயர் தாமே.
தாம்* தம் பெருமை அறியார்*
தூது வேந்தர்க்கு ஆய* வேந்தர் ஊர்போல்*
காந்தள் விரல்* மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும்* கூடலூரே.
செறும் திண்* திமில் ஏறு உடைய* பின்னை
பெறும் தண் கோலம்* பெற்றார் ஊர்போல்*
நறும் தண் தீம்* தேன் உண்ட வண்டு*
குறிஞ்சி பாடும்* கூடலூரே.
பிள்ளை உருவாய்த்* தயிர் உண்டு* அடியேன்
உள்ளம் புகுந்த* ஒருவர் ஊர்போல்*
கள்ள நாரை* வயலுள்* கயல்மீன்
கொள்ளை கொள்ளும்* கூடலூரே.
கூற்று ஏர் உருவின்* குறள் ஆய்* நிலம் நீர்
ஏற்றான் எந்தை* பெருமான் ஊர்போல்*
சேற்று ஏர் உழவர்* கோதைப் போது ஊண்*
கோல் தேன் முரலும்* கூடலூரே.
தொண்டர் பரவ* சுடர் சென்று அணவ*
அண்டத்து அமரும்* அடிகள் ஊர்போல்*
வண்டல் அலையுள்* கெண்டை மிளிர*
கொண்டல் அதிரும்* கூடலூரே.
தக்கன் வேள்வி* தகர்த்த தலைவன்*
துக்கம் துடைத்த* துணைவர் ஊர்போல்*
எக்கல் இடு* நுண் மணல்மேல்* எங்கும்
கொக்கின் பழம் வீழ்* கூடலூரே.
கருந் தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும் ஊர்போல*
பெருந் தண் முல்லைப்* பிள்ளை ஓடிக்*
குருந்தம் தழுவும்* கூடலூரே.
கலை வாழ்* பிணையோடு அணையும்* திருநீர்
மலை வாழ் எந்தை* மருவும் ஊர்போல்*
இலை தாழ் தெங்கின்* மேல்நின்று* இளநீர்க்
குலை தாழ் கிடங்கின்* கூடலூரே.
பெருகு காதல் அடியேன்* உள்ளம்-
உருகப் புகுந்த* ஒருவர் ஊர் போல்*
அருகு கைதை மலர* கெண்டை
குருகு என்று அஞ்சும்* கூடலூரே.
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்
மேவித் திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாட* பாவம் போமே.
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை* மூவெழுகால்
கொன்ற தேவ* நின் குரை கழல் தொழுவது ஓர் வகை* எனக்கு அருள்புரியே*
மன்றில் மாம் பொழில் நுழைதந்து* மல்லிகை மௌவலின் போது அலர்த்தி*
தென்றல் மா மணம் கமழ்தர வரு* திருவெள்ளறை நின்றானே.
வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி* முன்பரிமுகமாய்*
இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய* மாருதம் வீதியின்வாய*
திசை எலாம் கமழும் பொழில் சூழ்* திருவெள்ளறை நின்றானே.
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்* உடலகம் இரு பிளவாக்*
கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!* எனக்கு அருள்புரியே,
மையின் ஆர்தரு வரால் இனம் பாய* வண்தடத்திடைக் கமலங்கள்*
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்* திருவெள்ளறை நின்றானே.
வாம் பரி உக மன்னர்தம் உயிர் செக* ஐவர்கட்கு அரசு அளித்த*
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!* நின் காதலை அருள் எனக்கு*
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்* வாய்அது துவர்ப்பு எய்த*
தீம் பலங்கனித் தேன் அது நுகர்* திருவெள்ளறை நின்றானே.
மான வேல் ஒண் கண் மடவரல்* மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்*
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!* எனக்கு அருள்புரியே*
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி* வெண்முறுவல் செய்து அலர்கின்ற*
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்* திருவெள்ளறை நின்றானே.
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ* அமுதினைக் கொடுத்தளிப்பான்*
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!* நின் அடிமையை அருள் எனக்கு*
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்* தையலார் குழல் அணைவான்*
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை* திருவெள்ளறை நின்றானே.
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி* அரக்கன் தன் சிரம் எல்லாம்*
வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!* எனக்கு அருள்புரியே*
மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்* தாமரை மலர் வார்ந்த*
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்* திருவெள்ளறை நின்றானே.
முன் இவ் ஏழ் உலகு உணர்வுஇன்றி* இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த*
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே,
மன்னு கேதகை சூதகம் என்று இவை* வனத்திடைச் சுரும்பு இனங்கள்*
தென்ன என்ன வண்டு இன் இசை முரல்* திருவெள்ளறை நின்றானே.
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல்இடம் முழுதினையும்*
பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து எழுவேன்* எனக்கு அருள்புரியே,*
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி* வண்டு உழிதர* மாஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத்* திருவெள்ளறை நின்றானே.
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்* திருவெள்ளறை அதன்மேய*
அஞ்சனம் புரையும் திரு உருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சு உலாவிய வேல் வலவன்* கலிகன்றி சொல் ஐஇரண்டும்*
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே.
உந்திமேல் நான்முகனைப் படைத்தான்* உலகு உண்டவன்
எந்தை பெம்மான்* இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்* புனல் காவிரி*
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்* தென் அரங்கமே.
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்* மணி நீள் முடி*
பைகொள் நாகத்து அணையான்* பயிலும் இடம் என்பரால்*
தையல் நல்லார் குழல் மாலையும்* மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்* தென் அரங்கமே.
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று* மாவலி கையில் நீர
கொண்ட* ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்*
வண்டு பாடும் மது வார் புனல்* வந்து இழி காவிரி*
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்* நகர் பாழ்பட*
வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு* இடம் என்பரால்*
துளைக் கை யானை மருப்பும் அகிலும்* கொணர்ந்து உந்தி* முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே.
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்* வான் புக*
அம்பு தன்னால் முனிந்த* அழகன் இடம் என்பரால்*
உம்பர் கோனும் உலகு ஏழும்* வந்து ஈண்டி வணங்கும்* நல
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
கலை உடுத்த அகல் அல்குல்* வன் பேய் மகள் தாய் என*
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்* வாழ் இடம் என்பரால்*
குலை எடுத்த கதலிப்* பொழிலூடும் வந்து உந்தி* முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே.
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்* சகடமும் காலினால்*
துஞ்ச வென்ற சுடர் ஆழியான்* வாழ் இடம் என்பரால்*
மஞ்சு சேர் மாளிகை* நீடு அகில் புகையும் மா மறையோர்*
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்* தென் அரங்கமே
ஏனம் மீன் ஆமையோடு* அரியும் சிறு குறளும் ஆய*
தானும்ஆய* தரணித் தலைவன் இடம் என்பரால்*
வானும் மண்ணும் நிறையப்* புகுந்து ஈண்டி வணங்கும்* நல்
தேனும் பாலும் கலந்தன்னவர்* சேர் தென் அரங்கமே
சேயன் என்றும் மிகப் பெரியன்* நுண் நேர்மையன் ஆய* இம்
மாயை ஆரும் அறியா* வகையான் இடம் என்பரால்*
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து* ஆர் புனல் காவிர*
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே.
அல்லி மாதர் அமரும்* திரு மார்வன் அரங்கத்தைக்*
கல்லின் மன்னு மதிள்* மங்கையர்-கோன் கலிகன்றி சொல்*
நல்லிசை மாலைகள்* நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர் தாம் உலகு ஆண்டு* பின் வான் உலகு ஆள்வரே.
வெருவாதாள் வாய்வெருவி* வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்*
மருவாளால் என் குடங்கால்* வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்* வண்டு ஆர் கொண்டல்-
உருவாளன் வானவர்தம் உயிராளன்* ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட-
திருவாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே!
கலை ஆளா அகல் அல்குல்* கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்*
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?' என்னும்* மெய்ய
மலையாளன் வானவர்தம் தலையாளன்* மராமரம் ஏழ்எய்த வென்றிச்
சிலையாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே!
மான் ஆய மென் நோக்கி* வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்*
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்* திறம் பேசி உறங்காள் காண்மின்*
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக* நந்தன் பெற்ற
ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
தாய் வாயில் சொல் கேளாள்* தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்* பேசில் நங்காய்*
மா மாயன் என் மகளைச் செய்தனகள்* மங்கைமீர்! மதிக்கிலேனே!
பூண் முலைமேல் சாந்து அணியாள்* பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள*
ஏண் அறியாள் எத்தனையும்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நாள் மலராள் நாயகன் ஆய்* நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
'தாது ஆடு வன மாலை தாரானோ?' என்று என்றே தளர்ந்தாள் காண்மின்*
யாதானும் ஒன்று உரைக்கில்* எம் பெருமான் திருவரங்கம்' என்னும்* பூமேல்-
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்* மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற-
தூதாளன் என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சொல்லுகேனே?
வார் ஆளும் இளங் கொங்கை* வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்* எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள்* இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*
தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்* ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த-
தேராளன் என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் செப்புகேனே?
உறவு ஆதும் இலள் என்று என்று* ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால*
மறவாதே எப்பொழுதும்* மாயவனே! மாதவனே!' என்கின்றாளால்*
பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்* விண்ணோர்தங்கள
அறவாளன்* என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
பந்தோடு கழல் மருவாள்* பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்*
வந்தானோ திருவரங்கன்* வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*
சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி*
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
சேல் உகளும் வயல் புடை சூழ்* திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த*
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்* தாய் மொழிந்த அதனை* நேரார்
காலவேல் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்*
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்* பொன்உலகில் வாழ்வர்தாமே.
கைம்மான மழ களிற்றை* கடல் கிடந்த கருமணியை*
மைம்மான மரகதத்தை* மறை உரைத்த திருமாலை*
எம்மானை எனக்கு என்றும் இனியானை* பனி காத்த
அம்மானை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
பேரானை* குறுங்குடி எம் பெருமானை* திருத்தண்கால்
ஊரானை* கரம்பனூர் உத்தமனை* முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும்* மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது தென் அரங்கத்தே.
ஏன் ஆகி உலகு இடந்து* அன்று இரு நிலனும் பெரு விசும்பும*
தான் ஆய பெருமானை* தன் அடியார் மனத்து என்றும்*
தேன் ஆகி அமுது ஆகித்* திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்*
ஆன்-ஆயன் ஆனானைக்* கண்டது தென் அரங்கத்தே.
வளர்ந்தவனைத் தடங் கடலுள்* வலி உருவில் திரி சகடம்*
தளர்ந்து உதிர உதைத்தவனை* தரியாது அன்று இரணியனைப்-
பிளந்தவனை* பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்* பண்டு ஒருநாள்
அளந்தவனை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
நீர் அழல் ஆய்* நெடு நிலன் ஆய் நின்றானை* அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானை* கண்டார் பின் காணாமே*
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்* பின் மறையோர் மந்திரத்தின்*
ஆர் அழலால் உண்டானைக்* கண்டது தென் அரங்கத்தே.
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்* தவ நெறியை* தரியாது
கஞ் சனைக் கொன்று* அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை*
வெம் சினத்த கொடுந் தொழிலோன்* விசை உருவை அசைவித்த*
அம் சிறைப் புள் பாகனை* யான் கண்டது தென் அரங்கத்தே.
சிந்தனையை தவநெறியை* திருமாலை* பிரியாது-
வந்து எனது மனத்து இருந்த* வடமலையை வரி வண்டு ஆர்-
கொந்து அணைந்த பொழில் கோவல்* உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
அந்தணனை* யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே.
துவரித்த உடையவர்க்கும்* தூய்மை இல்லாச் சமணர்க்கும்*
அவர்கட்கு அங்கு அருள் இல்லா* அருளானை* தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும்* எம்மாற்கும் எம் அனைக்கும்*
அமரர்க்கும் பிரானாரைக்* கண்டது தென் அரங்கத்தே.
பொய் வண்ணம் மனத்து அகற்றி* புலன் ஐந்தும் செல வைத்து*
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு* மெய்ந் நின்ற வித்தகனை*
மை வண்ணம் கரு முகில்போல்* திகழ் வண்ணம் மரகதத்தின்*
அவ் வண்ண வண்ணனை* யான் கண்டது தென் அரங்கத்தே.
ஆ மருவி நிரை மேய்த்த* அணி அரங்கத்து அம்மானைக்*
காமரு சீர்க் கலிகன்றி* ஒலிசெய்த மலி புகழ் சேர்*
நா மருவு தமிழ்மாலை* நால் இரண்டோடு இரண்டினையும்*
தாம் மருவி வல்லார்மேல்* சாரா தீவினை தாமே.
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்* பதங்களின் பொருளும்*
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்* பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்* ஏழு மா மலைகளும் விசும்பும்*
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்* எண் இல் பல் குணங்களே இயற்ற*
தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்* சுற்றி நின்று அகலாப் பந்தமும்*
பந்தம் அறுப்பது ஓர்* மருந்தும்பான்மையும்* பல் உயிர்க்கு எல்லாம்*
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்* வானமும் தானவர் உலகும்*
துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி* தொல்லை நான்மறைகளும் மறைய*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி* பிறங்கு இருள் நிறம் கெட* ஒருநாள்-
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக* மாசுணம் அதனொடும் அளவி*
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற* படுதிரை விசும்பிடைப் படர*
சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்* தேவரும் தாம் உடன் திசைப்ப*
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்* இரணியன் இலங்கு பூண் அகலம்*
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து* பொழிதரும் அருவி ஒத்து இழிய*
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்* விண் உறக் கனல் விழித்து எழுந்தது*
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய* அடல் புரை எழில் திகழ் திரள் தோள்*
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி* மற்று அவன் அகல் விசும்பு அணைய*
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச* அறிதுயில் அலை கடல் நடுவே*
ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து* இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரிசிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட மலையால்*
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்* ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்* உலகில்-
சூழி மால் யானைத் துயர் கெடுத்து* இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி* பகலவன் ஒளி கெடப்* பகலே-
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்* ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
மால் ஆய் ஆல் இலை வளர்ந்து* மணி முடி வானவர் தமக்குச
சேயன் ஆய்* அடியோர்க்கு அணியன் ஆய் வந்து* என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்*
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே.
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து* பொரு திரை மா நதி புடை சூழ்ந்து*
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த* அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்று அறுப்பாரே.
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி* மற்று அவற்கு இன் அருள் சுரந்து*
மாழை மான் மட நோக்கி உன் தோழி* உம்பி எம்பி என்று ஒழிந்திலை* உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து* அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு* மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை* உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்* செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*
கோது இல் வாய்மையினாயொடும் உடனே* உண்பன் நான் என்ற ஒண் பொருள்* எனக்கும
ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை* வைகு தாமரை வாங்கிய வேழம்*
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற* மற்று அது நின் சரண் நினைப்ப*
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்* கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து* உன
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்* வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்*
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு* அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்* கொடிய செய்வன உள* அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்* மலர் அடி கண்ட மா மறையாளன்*
தோகை மா மயில் அன்னவர் இன்பம்* துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே* போதுவாய் என்ற பொன் அருள்* எனக்கும
ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை* மதியாத வெம் கூற்றம்-
தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்* தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்* எண்ணிய பேர் அருள்* எனக்கும்-
அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்* உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்*
காதல் என் மகன் புகல் இடம் காணேன்* கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய* குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்* எந்தை! நின் சரண் என்னுடை மனைவி*
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்* கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து* உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்* தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு*
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து* அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு* அடியேன் அறிந்து* உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.
மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்* ஒன்னலர்தங்களை வெல்லும்*
ஆடல்மா வலவன் கலிகன்றி* அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை* எந்தையை நெடுமாலை நினைந்த*
பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே.
கை இலங்கு ஆழி சங்கன்* கரு முகில் திரு நிறத்தன்*
பொய் இலன் மெய்யன்தன் தாள்* அடைவரேல் அடிமை ஆக்கும*
செய் அலர் கமலம் ஓங்கு* செறி பொழில் தென் திருப்பேர்*
பை அரவுஅணையான் நாமம்* பரவி நான் உய்ந்த ஆறே. (2)
வங்கம் ஆர் கடல்கள் ஏழும்* மலையும் வானகமும் மற்றும்*
அம் கண் மா ஞாலம் எல்லாம்* அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*
திங்கள் மா முகில் அணவு* செறி பொழில் தென் திருப்பேர்*
எங்கள் மால் இறைவன் நாமம்* ஏத்தி நான் உய்ந்த ஆறே.
ஒருவனை உந்திப் பூமேல்* ஓங்குவித்து ஆகம்தன்னால்*
ஒருவனைச் சாபம் நீக்கி* உம்பர் ஆள் என்று விட்டான்*
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த* பெரு நகர் அரவு அணைமேல்*
கரு வரை வண்ணன்தன் பேர்* கருதி நான் உய்ந்த ஆறே.
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி* உலகு எலாம் திரியும் ஈசன்*
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன* ஒண் புனலை ஈந்தான்*
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த* செறி வயல் தென் திருப்பேர்*
வானவர்தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே.
வக்கரன் வாய் முன் கீண்ட* மாயனே என்று வானோர்
புக்கு* அரண் தந்தருளாய் என்ன* பொன் ஆகத்தானை*
நக்கு அரி உருவம் ஆகி* நகம் கிளர்ந்து இடந்து உகந்த*
சக்கரச் செல்வன் தென்பேர்த்* தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே.
விலங்கலால் கடல் அடைத்து* விளங்கிழை பொருட்டு* வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன்* இருபது புயம் துணித்தான்*
நலம் கொள் நான்மறை வல்லார்கள்* ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு*
மலங்கு பாய் வயல் திருப்பேர்* மருவி நான் வாழ்ந்த ஆறே.
வெண்ணெய் தான் அமுதுசெய்ய* வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி*
கண்ணி ஆர் குறுங் கயிற்றால்* கட்ட வெட்டொன்று இருந்தான்*
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* வேலை
வண்ணனார் நாமம் நாளும்* வாய் மொழிந்து உய்ந்த ஆறே.
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய* ஆய்ப்பாடி தன்னுள்*
கொம்பு அனார் பின்னை கோலம்* கூடுதற்கு ஏறு கொன்றான்*
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* மேவும்-
எம்பிரான் நாமம் நாளும்* ஏத்தி நான் உய்ந்த ஆறே.
நால் வகை வேதம் ஐந்து வேள்வி* ஆறு அங்கம் வல்லார்*
மேலை வானவரின் மிக்க* வேதியர் ஆதி காலம்*
சேல் உகள் வயல் திருப்பேர்ச்* செங் கண் மாலோடும் வாழ்வார்*
சீல மா தவத்தர் சிந்தை ஆளி* என் சிந்தையானே.
வண்டு அறை பொழில் திருப்பேர்* வரி அரவுஅணையில் பள்ளி-
கொண்டு உறைகின்ற மாலைக்* கொடி மதிள் மாட மங்கைத்*
திண் திறல் தோள் கலியன்* செஞ்சொலால் மொழிந்த மாலை*
கொண்டு இவை பாடி ஆடக்* கூடுவர் நீள் விசும்பே. (2)
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு* நீர் கெழு விசும்பும் அவை ஆய்*
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை* அவை ஆய பெருமான்*
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு* தட மார்வர் தகைசேர்*
நாதன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே. (2)
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும்* ஒழியாமை முன நாள்*
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல* ஐயன்அவன் மேவும் நகர்தான்*
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு* மலர் கிண்டி அதன்மேல்*
நைவளம் நவிற்று பொழில்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்* ஒழியாமை முன நாள்*
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த* தட மார்வர் தகை சேர்*
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி* கங்குல் வயல் சூழ்*
நம்பன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என* வந்த அசுரர்*
இறைகள் அவைநெறுநெறு என வெறியஅவர் வயிறு அழல* நின்ற பெருமான்*
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல* அடிகொள் நெடு மா*
நறைசெய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என* வந்த அசுரர்*
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக* நொடி ஆம் அளவு எய்தான்*
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்* இவை அம்கை உடையான்*
நாளும் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்* துணை ஆக முன நாள்*
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்* இனிது மேவும் நகர்தான்*
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்* எழில் ஆர் புறவு சேர்*
நம்பி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்* நந்தன் மதலை*
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ* நின்ற நகர்தான்*
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்* மயில்கள் ஆடு பொழில் சூழ்*
நந்தி பணிசெய்த நகர்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று* முனியாளர் திரு ஆர்*
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு* கூட எழில் ஆர்*
மண்ணில் இதுபோல நகர் இல்லை என* வானவர்கள் தாம் மலர்கள் தூய்*
நண்ணி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
வங்கம் மலி பௌவம்அது மா முகடின் உச்சி புக* மிக்க பெருநீர்*
அங்கம் அழியார் அவனது ஆணை* தலை சூடும் அடியார் அறிதியேல்*
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி* எங்கும் உளதால்*
நங்கள் பெருமான் உறையும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
நறை செய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்*
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்* அவை அம் கை உடையானை* ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல* கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்*
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்* முழுது அகலுமே.