பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    போது அலர்ந்த பொழில் சோலைப்*  புறம் எங்கும் பொரு திரைகள்* 
    தாது உதிர வந்து அலைக்கும்*  தட மண்ணித் தென் கரைமேல்*

    மாதவன் தான் உறையும் இடம்*  வயல் நாங்கை*  வரி வண்டு 
    தேதென என்று இசை பாடும்*  திருத்தேவனார்தொகையே. 


    யாவரும் ஆய் யாவையும் ஆய்*  எழில் வேதப் பொருள்களும் ஆய்* 
    மூவரும் ஆய் முதல் ஆய*  மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*

    மாவரும்திண் படைமன்னை*  வென்றிகொள்வார் மன்னுநாங்கை* 
    தேவரும் சென்றுஇறைஞ்சுபொழில்*  திருத்தேவனார்தொகையே.         


    வான்நாடும் மண்நாடும்*  மற்றுஉள்ள பல்உயிரும்*    
    தான்ஆய எம்பெருமான்*  தலைவன் அமர்ந்து உறையும்இடம்*

    ஆனாத பெருஞ்செல்வத்து*  அருமறையோர் நாங்கைதன்னுள்*
    தேன்ஆரும் மலர்ப்பொழில்சூழ்*  திருத்தேவனார்தொகையே. 


    இந்திரனும் இமையவரும்*  முனிவர்களும் எழில் அமைந்த* 
    சந்த மலர்ச் சதுமுகனும்*  கதிரவனும் சந்திரனும்*

    எந்தை! எமக்கு அருள் என நின்ரு*  அருளூமிடம் எழில்நாங்கை* 
    சுந்தரநல் பொழில்புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.     


    அண்டமும் இவ் அலை கடலும்*  அவனிகளும் குல வரையும்* 
    உண்ட பிரான் உறையும் இடம்*  ஒளி மணி சந்து அகில் கனகம்*

    தெண் திரைகள் வரத் திரட்டும்*  திகழ் மண்ணித் தென் கரைமேல்* 
    திண் திறலார் பயில்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.  


    ஞாலம் எல்லாம் அமுது செய்து*  நான்மறையும் தொடராத*    
    பாலகன் ஆய் ஆல் இலையில்*  பள்ளிகொள்ளும் பரமன் இடம்*

    சாலி வளம் பெருகி வரும்*  தட மண்ணித் தென் கரைமேல்* 
    சேல் உகளும் வயல்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.   


    ஓடாத ஆளரியின்*  உரு ஆகி இரணியனை*      
    வாடாத வள் உகிரால்*  பிளந்து அளைந்த மாலது இடம்*

    ஏடு ஏறு பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
    சேடு ஏறு பொழில் தழுவு*  திருத்தேவனார்தொகையே.


    வார் ஆரும் இளங் கொங்கை*  மைதிலியை மணம் புணர்வான்* 
    கார் ஆர் திண் சிலை இறுத்த*  தனிக் காளை கருதும் இடம்*

    ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
    சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்*  திருத்தேவனார்தொகையே.


    கும்பம் மிகு மத யானை*  பாகனொடும் குலைந்து வீழ*     
    கொம்பு-அதனைப் பறித்து எறிந்த*  கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*

    வம்பு அவிழும் செண்பகத்து*  மணம் கமழும் நாங்கைதன்னுள்* 
    செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.   


    கார் ஆர்ந்த திருமேனிக்*  கண்ணன் அமர்ந்து உறையும் இடம்* 
    சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்*  திருத்தேவனார்தொகைமேல்*

    கூர் ஆர்ந்த வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
    ஏர் ஆர்ந்த வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே.    


    கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்*  கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
    அரசு அவன் தம்பிக்கு*  அளித்தவன் உறைகோயில்*

    செம்பலாநிரை செண்பகம்மாதவி*  சூதகம் வாழைகள்சூழ்* 
    வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர*  வண்புருடோத்தமமே.       


    பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி*  அக்காளியன் பண அரங்கில்* 
    ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த*  உம்பர்கோன் உறைகோயில்*

    நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்* 
    வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.


    அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று*  அமைத்த சோறு அது எல்லாம் உண்டு* 
    கோநிரை மேய்த்து அவை காத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்*

    கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்*  குல மயில் நடம் ஆட* 
    வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     


    பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து*  அதன் பாகனைச் சாடிப் புக்கு*  
    ஒருங்க மல்லரைக் கொன்று*  பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*

    கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு*  கழனியில் மலி வாவி* 
    மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     


    சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து*  ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட* 
    வாணனை ஆயிரம் தோள்களும்*  துணித்தவன் உறை கோயில்*

    ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்*  பகலவன் ஒளி மறைக்கும்* 
    மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    


    அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று*  அயன் அலர் கொடு தொழுது ஏத்த* 
    கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய*   கண்ணன் வந்து உறை கோயில்* 

    கொங்கை கோங்குஅவை காட்ட*  வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்* 
    மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.  


    உளைய ஒண் திறல் பொன்பெயரோன்*  தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
    வெம் சினத்து அரி பரி கீறிய*  அப்பன் வந்து உறை கோயில்*

    இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு*  எழில் கொள் பந்து அடிப்போர்*
    கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.       


    வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்*  வன்சாபம் மற்றுஅதுநீங்க* 
    மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த*  எம்முகில் வண்ணன் உறைகோயில்*

    பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்*  வண்பழம் விழ வெருவிப் போய்* 
    வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    


    இந்து வார் சடை ஈசனைப் பயந்த*  நான் முகனைத் தன் எழில் ஆரும்* 
    உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்* 

    குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து*  தன் குருளையைத் தழுவிப் போய்* 
    மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.


    மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்*  வண்புருடோத்தமத்துள்* 
    அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்*  ஆலி மன் அருள் மாரி* 

    பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்*  இப்பத்தும் வல்லார் உலகில்* 
    எண் இலாத பேர் இன்பம் உற்று*  இமையவரோடும் கூடுவரே. (2)   


    பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்*  பேர் அருளாளன் எம் பிரானை*
    வார் அணி முலையாள் மலர்மகளோடு*  மண்மகளும் உடன் நிற்ப* 

    சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    கார் அணி மேகம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.    


    பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை*  பேதியா இன்ப வெள்ளத்தை* 
    இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை*  ஏழ் இசையின் சுவைதன்னை* 

    சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    மறைப் பெரும் பொருளை வானவர்கோனை*  கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.


    திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்*  செழு நிலத்து உயிர்களும் மற்றும்* 
    படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை*  பங்கயத்து அயன் அவன் அனைய*

    திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.


    வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி*  மண் அளவிட்டவன் தன்னை* 
    அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க*  அலை கடல் துயின்ற அம்மானை* 

    திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    உயர் மணி மகுடம் சூடி நின்றானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.  


    'தீமனத்து அரக்கர் திறலழித்தவனே!' என்று சென்று அடைந்தவர் தமக்குத்* 
    தாய்மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்*  தயரதன் மதலையை சயமே*

    தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.


    மல்லை மா முந்நீர் அதர்பட*  மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை* 
    கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க*  ஓர் வாளி தொட்டானை* 

    செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.


    வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்*  வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை* 
    கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை*  கரு முகில் திரு நிறத்தவனை*

    செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே. 


    அன்றிய வாணன் ஆயிரம்*  தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை* 
    மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்*  மேவிய வேத நல் விளக்கை*

    தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.


    'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்*  கார் முகிலே! என நினைந்திட்டு* 
    உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்*  உள்ளத்துள் ஊறிய தேனை*

    தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.


    தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    வானவர் கோனைக் கண்டமை சொல்லும்*  மங்கையார் வாள் கலிகன்றி* 

    ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்*  ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்* 
    மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு*  வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.


    மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்*  மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
    தந்தை  கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி*  கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*

    நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*  இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்* 
    சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)


    பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட*  பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி* 
    பெற்று எடுத்த தாய்போல மடுப்ப*  ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*

    நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்*  இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங்கணார்தம்* 
    சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே.


    படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு*  பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்* 
    அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி*  அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*

    மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ*  மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி* 
    திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே* 


    வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி*  வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த* 
    கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட*  கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*

    ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்*  எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்* 
    சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை*  கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி* 
    முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப*  மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்* 

    மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி*  ஆடவரை மட மொழியார் முகத்து*  இரண்டு 
    சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.   


    தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்*  அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*    
    கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன*  இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*

    மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்*  மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு* 
    தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்*  பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்* 
    மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு*  மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*

    கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த*  குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்தன்னால்* 
    செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு*  திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
    நிலமடந்தைதனை இடந்து புல்கிக்*  கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்* 

    இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்*  ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்* 
    சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.


    ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி*  எண் திசையும் மண்டலமும் மண்டி*
    அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்*  முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*

    ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து*  ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்* 
    சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.


    சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை* 
    கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்*  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*

    பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன*  பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி*  சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*


    தூம்பு உடைப் பனைக் கை வேழம்*  துயர் கெடுத்தருளி*  மன்னும் 
    காம்பு உடைக் குன்றம் ஏந்திக்*  கடு மழை காத்த எந்தை*

    பூம் புனல் பொன்னி முற்றும்*  புகுந்து பொன் வரன்ற*  எங்கும் 
    தேம் பொழில் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து*   இலங்கை
    வவ்விய இடும்பை தீரக்*  கடுங் கணை துரந்த எந்தை* 

    கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்*  குங்குமம் கழுவிப் போந்த* 
    தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    மாத்தொழில் மடங்கச் செற்று*  மருது இற நடந்து* வன் தாள் 
    சேத்தொழில் சிதைத்துப்*  பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*

    நாத்தொழில் மறை வல்லார்கள்*  நயந்து அறம் பயந்த வண் கைத்* 
    தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.  


    தாங்கு அரும் சினத்து வன் தாள்*  தடக் கை மா மருப்பு வாங்கி* 
    பூங்குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து*  எருது அடர்த்த எந்தை*

    மாங்கனி நுகர்ந்த மந்தி*  வந்து வண்டு இரிய*  வாழைத் 
    தீங்கனி நுகரும் நாங்கூர்த்*   திருமணிக்கூடத்தானே.  


    கருமகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து*  தன்மேல் 
    வரும்அவள் செவியும் மூக்கும்*  வாளினால் தடிந்த எந்தை*

    பெருமகள் பேதை மங்கை*  தன்னொடும் பிரிவு இலாத* 
    திருமகள் மருவும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.    


    கெண்டையும் குறளும் புள்ளும்*  கேழலும் அரியும் மாவும்* 
    அண்டமும் சுடரும் அல்லா*  ஆற்றலும் ஆய எந்தை* 

    ஒண் திறல் தென்னன் ஓட*  வட அரசு ஓட்டம் கண்ட* 
    திண் திறலாளர் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.         


    குன்றமும் வானும் மண்ணும்*  குளிர் புனல் திங்களோடு* 
    நின்றவெம் சுடரும் அல்லா*  நிலைகளும் ஆய எந்தை*

    மன்றமும் வயலும் காவும்*  மாடமும் மணங் கொண்டு*  எங்கும் 
    தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.          


    சங்கையும் துணிவும் பொய்யும்*  மெய்யும் இத் தரணி ஓம்பும்* 
    பொங்கிய முகிலும் அல்லாப்*  பொருள்களும் ஆய எந்தை*

    பங்கயம் உகுத்த தேறல்*  பருகிய வாளை பாய*   
    செங்கயல் உகளும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    பாவமும் அறமும் வீடும்*  இன்பமும் துன்பம் தானும்* 
    கோவமும் அருளும் அல்லாக்*  குணங்களும் ஆய எந்தை*

    'மூவரில் எங்கள் மூர்த்தி*  இவன், என முனிவரோடு* 
    தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே. 


    திங்கள் தோய் மாட நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானை*    
    மங்கையர் தலைவன் வண் தார்க்*  கலியன் வாய் ஒலிகள் வல்லார்*

    பொங்கு நீர் உலகம் ஆண்டு*  பொன்உலகு ஆண்டு*  பின்னும் 
    வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்*  விளங்குவாரே.    


    தாஅளந்து உலகம் முற்றும்*  தட மலர்ப் பொய்கை புக்கு* 
    நாவளம் நவின்று அங்கு ஏத்த*  நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்* 

    மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும் நாங்கைக்* 
    காவளம் பாடிமேய*  கண்ணனே! களைகண்நீயே.    


    மண் இடந்து ஏனம் ஆகி*  மாவலி வலி தொலைப்பான்* 
    விண்ணவர் வேண்டச் சென்று*  வேள்வியில் குறை இரந்தாய்!*

    துண் என மாற்றார்தம்மைத்*  தொலைத்தவர் நாங்கை மேய* 
    கண்ணனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 


    உருத்து எழு வாலி மார்வில்*  ஒரு கணை உருவ ஓட்டி*    
    கருத்து உடைத் தம்பிக்கு*  இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*

    பருத்து எழு பலவும் மாவும்*  பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்* 
    கருத்தனே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.    


    முனைமுகத்து அரக்கன் மாள*  முடிகள் பத்து அறுத்து வீழ்த்து*  ஆங்கு 
    அனையவற்கு இளையவற்கே*  அரசு அளித்து அருளினானே*

    சுனைகளில் கயல்கள் பாயச்*  சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்* 
    கனை கழல் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே. 


    பட அரவு உச்சிதன்மேல்*  பாய்ந்து பல் நடங்கள்செய்து* 
    மடவரல் மங்கைதன்னை*  மார்வகத்து இருத்தினானே!*

    தடவரை தங்கு மாடத்*  தகு புகழ் நாங்கை மேய* 
    கடவுளே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.   


    மல்லரை அட்டு மாள*  கஞ்சனை மலைந்து கொன்று* 
    பல் அரசு அவிந்து வீழப்*  பாரதப் போர் முடித்தாய்*

    நல் அரண் காவின் நீழல்*  நறை கமழ் நாங்கை மேய* 
    கல் அரண் காவளம் தண்  பாடியாய்!* களைகண் நீயே.            


    மூத்தவற்கு அரசு வேண்டி*  முன்பு தூது எழுந்தருளி* 
    மாத்தமர் பாகன் வீழ*  மத கரி மருப்பு ஒசித்தாய்*

    பூத்தமர் சோலை ஓங்கி*  புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்* 
    காத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 


    ஏவிளங் கன்னிக்கு ஆகி*  இமையவர் கோனைச் செற்று* 
    காவளம் கடிது இறுத்துக்*  கற்பகம் கொண்டு போந்தாய்*

    பூவளம் பொழில்கள் சூழ்ந்த*  புரந்தரன் செய்த நாங்கைக் 
    காவளம்பாடி மேய*  கண்ணனே!  களைகண் நீயே.   


    சந்தம் ஆய் சமயம் ஆகி*  சமய ஐம் பூதம் ஆகி* 
    அந்தம் ஆய் ஆதி ஆகி*  அரு மறை அவையும் ஆனாய்*

    மந்தம் ஆர் பொழில்கள்தோறும்*  மட மயில் ஆலும் நாங்கைக்* 
    கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.


    மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும்*  நாங்கைக் 
    காவளம் பாடிமேய*  கண்ணனைக் கலியன் சொன்ன* 

    பாவளம் பத்தும் வல்லார்*  பார்மிசை அரசர் ஆகிக்* 
    கோ இள மன்னர் தாழக்*  குடைநிழல் பொலிவர்தாமே.    


    கண்ணார் கடல்போல்*  திருமேனி கரியாய்* 
    நண்ணார் முனை*  வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*

    திண்ணார் மதிள் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    அண்ணா அடியேன் இடரைக் களையாயே.


    கொந்து ஆர் துளவ*  மலர் கொண்டு அணிவானே* 
    நந்தாத பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*

    செந்தாமரை நீர்த்*  திருவெள்ளக்குளத்துள்* 
    எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.


    குன்றால் குளிர் மாரி*  தடுத்து உகந்தானே* 
    நின்றாய  பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*

    சென்றார் வணங்கும்*  திருவெள்ளக்குளத்துள்* 
    நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே 


    கான் ஆர் கரிக் கொம்பு*  அது ஒசித்த களிறே!* 
    நானாவகை*  நல்லவர் மன்னிய நாங்கூர்த்*

    தேன் ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.


    வேடு ஆர்*  திருவேங்கடம் மேய விளக்கே* 
    நாடு ஆர் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    சேடு ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்தாய்* 
    பாடாவருவேன்*  வினை ஆயின பாற்றே.


    கல்லால் கடலை*  அணை கட்டி உகந்தாய்* 
    நல்லார் பலர்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    செல்வா*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    எல்லா இடரும்*  கெடுமாறு அருளாயே.


    கோலால் நிரை மேய்த்த*  எம் கோவலர்கோவே*
    நால் ஆகிய*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    சேல் ஆர் வயல் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    மாலே என வல் வினை*  தீர்த்தருளாயே. 


    வாராகம் அது ஆகி*  இம் மண்ணை இடந்தாய்* 
    நாராயணனே!*  நல்ல வேதியர் நாங்கூர்ச்*

    சீரார் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.


    பூவார் திருமாமகள்*  புல்கிய மார்பா!* 
    நாவார் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்த்*

    தேவா!*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    'ஆவா!  அடியான்*  இவன் என்று அருளாயே. 


    நல்லன்பு உடை*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்* 
    செல்வன்*  திருவெள்ளக்குளத்து உறைவானை*

    கல்லின் மலி தோள்*  கலியன் சொன்ன மாலை* 
    வல்லர் என வல்லவர்*  வானவர் தாமே.  (2)


    கவள யானைக் கொம்புஒசித்த*  கண்ணன் என்றும் காமருசீர்* 
    குவளை மேகம் அன்ன மேனி*  கொண்ட கோன் என் ஆனை என்றும்*

    தவள மாடம் நீடு நாங்கைத்*  தாமரையாள் கேள்வன் என்றும்* 
    பவள வாயாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


    கஞ்சன் விட்ட வெம் சினத்த*  களிறு அடர்த்த காளை என்றும்* 
    வஞ்சம் மேவி வந்த பேயின்*  உயிரை உண்ட மாயன் என்றும்*

    செஞ்சொலாளர் நீடு நாங்கைத்*  தேவ-தேவன் என்று என்று ஓதி* 
    பஞ்சி அன்ன மெல் அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


    அண்டர் கோன் என் ஆனை என்றும்*  ஆயர் மாதர் கொங்கை புல்கு 
    செண்டன் என்றும்*  நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்*

    வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை*  மன்னும் மாயன் என்று என்று ஓதி* 
    பண்டுபோல் அன்று என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.      


    கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்*  கோல் வளையார் தம்முகப்பே* 
    மல்லை முந்நீர் தட்டு இலங்கை*  கட்டு அழித்த மாயன் என்றும்*

    செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி*
    பல் வளையாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


    அரக்கர் ஆவி மாள அன்று*  ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற* 
    குரக்கரசன் என்றும்*  கோல வில்லி என்றும் மா மதியை*

    நெருக்கும் மாடம் நீடு நாங்கை*  நின்மலன்தான் என்று என்று ஓதி* 
    பரக்கழிந்தாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே. 


    ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாதன் என்றும் நானிலம் சூழ்* 
    வேலை அன்ன கோல மேனி*  வண்ணன் என்றும்*

    மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்*  தேவ தேவன் என்று என்று ஓதி* 
    பாலின் நல்ல மென் மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.            


    நாடி என்தன் உள்ளம் கொண்ட*  நாதன் என்றும்*  நான்மறைகள்-
    தேடி என்றும் காண மாட்டாச்*  செல்வன் என்றும்*

    சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பாடகம் சேர் மெல்அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.


    உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்*  ஒண் சுடரோடு உம்பர் எய்தா* 
    நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்*  தென் திசைக்குத்

    திலதம் அன்ன மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பலரும் ஏச என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.


    கண்ணன் என்றும் வானவர்கள்*  காதலித்து மலர்கள் தூவும்* 
    எண்ணன் என்றும் இன்பன் என்றும்*  ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*

    திண்ண மாடம் நீடு நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பண்ணின் அன்ன மென்மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.    


    பாருள் நல்ல மறையோர் நாங்கைப்*  பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை* 
    வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்*  தாய் மொழிந்த மாற்றம்*

    கூர் கொள் நல்ல வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
    ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்*  இன்பம் நாளும் எய்துவாரே.(2)


    நும்மைத் தொழுதோம்*  நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்* 
    இம்மைக்கு இன்பம் பெற்றோம்*  எந்தாய் இந்தளூரீரே* 

    எம்மைக் கடிதாக் கருமம் அருளி*  ஆவா! என்று இரங்கி* 
    நம்மை ஒருகால் காட்டி நடந்தால்*  நாங்கள் உய்யோமே?       


    சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!*  மருவினிய 
    மைந்தா*  அம் தண் ஆலி மாலே!*  சோலை மழ களிறே!*

    நந்தா விளக்கின் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ*  என் 
    எந்தாய்! இந்தளூராய்!*  அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்


    பேசுகின்றது இதுவே*  வையம் ஈர் அடியால் அளந்த*    
    மூசி வண்டு முரலும்*  கண்ணி முடியீர்*

    உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து*  இங்கு அயர்த்தோம்*
    அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்*  இந்தளூரீரே!


    ஆசை வழுவாது ஏத்தும்*  எமக்கு இங்கு இழுக்காய்த்து* அடியோர்க்கு 
    தேசம் அறிய*  உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*

    காசின் ஒளியில் திகழும் வண்ணம்*  காட்டீர் எம் பெருமான்* 
    வாசி வல்லீர்! இந்தளூரீர்!*  வாழ்ந்தே போம் நீரே!             


    தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்*  திசையும் இரு நிலனும்* 
    ஆய் எம் பெருமான் ஆகி நின்றால்*  அடியோம் காணோமால்*

    தாய் எம் பெருமான்*  தந்தை தந்தை ஆவீர்*  அடியோமுக் 
    கே எம் பெருமான் அல்லீரோ நீர்*  இந்தளூரீரே!


    சொல்லாது ஒழியகில்லேன்*  அறிந்த சொல்லில்*  நும் அடியார் 
    எல்லாரோடும் ஒக்க*  எண்ணியிருந்தீர் அடியேனை*

    நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்*  நமக்கு இவ் உலகத்தில்* 
    எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்*  இந்தளூரீரே!


    மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள*  எம்மைப் பணி அறியா* 
    வீட்டீர் இதனை வேறே சொன்னோம்*  இந்தளூரீரே*

    காட்டீர் ஆனீர்*  நும்தம் அடிக்கள் காட்டில்*  உமக்கு இந்த 
    நாட்டே வந்து தொண்டர் ஆன*  நாங்கள் உய்யோமே.  


    முன்னை வண்ணம் பாலின் வண்ணம்*  முழுதும் நிலைநின்ற* 
    பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்*  வண்ணம் எண்ணுங்கால்* 

    பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்*  புரையும் திருமேனி* 
    இன்ன வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே!


    எந்தை தந்தை தம்மான் என்று என்று*  எமர் ஏழ் அளவும்* 
    வந்து நின்ற தொண்டரோர்க்கே*  வாசி வல்லீரால்*

    சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்*  சிறிதும் திருமேனி* 
    இந்த வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே.     


    ஏர் ஆர் பொழில் சூழ்*  இந்தளூரில் எந்தை பெருமானைக்* 
    கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய்த*

    சீர் ஆர் இன் சொல் மாலை*  கற்றுத் திரிவார் உலகத்தில்* 
    ஆர் ஆர் அவரே*  அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)


    ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்*  ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்* 
    பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து*  பெரு நிலம் அளந்தவன் கோயில்*

    காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்*  எங்கும் ஆம் பொழில்களின் நடுவே* 
    வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்*  திருவெள்ளியங்குடி அதுவே. (2)  


    ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு*  அரக்கர் தம் சிரங்களை உருட்டி* 
    கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்*  கண்ணனார் கருதிய கோயில்*

    பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி*  பொதும்பிடை வரி வண்டு மிண்டி* 
    தேன்இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்*  திருவெள்ளியங்குடி அதுவே.


    கடு விடம் உடைய காளியன் தடத்தைக்*  கலக்கி முன் அலக்கழித்து* 
    அவன்தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்*

    பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்* 
    அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்*  திருவெள்ளியங்குடிஅதுவே. 


    கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த*  காளமேகத் திரு உருவன்* 
    பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற*  பரமனார் பள்ளிகொள் கோயில்*

    துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்*  தொகு திரை மண்ணியின் தென்பால்* 
    செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்*  திருவெள்ளியங்குடி அதுவே.           


    பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து*  பாரதம் கையெறிந்து*  ஒருகால் 
    தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த*  செங்கண்மால் சென்று உறை கோயில்*

    ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி*  எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி* 
    சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற*  திருவெள்ளியங்குடி அதுவே.    


    காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற*  கடல் அரக்கர் தம் சேனை* 
    கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த*  கோல வில் இராமன் தன் கோயில்*

    ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்*  ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி* 
    சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்*  திருவெள்ளியங்குடி அதுவே.


    ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த*  மாவலி வேள்வியில் புக்கு* 
    தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு*  திக்கு உற வளர்ந்தவன் கோயில்*

    அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்*  அரி அரி என்று அவை அழைப்ப* 
    வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்*  திருவெள்ளியங்குடி அதுவே.  


    முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்*  அசுரர் தம் பெருமானை*  அன்று அரி ஆய் 
    மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட* மாயனார் மன்னிய கோயில்*

    படியிடை மாடத்து அடியிடைத் தூணில்*  பதித்த பல் மணிகளின் ஒளியால்* 
    விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய*  திருவெள்ளியங்குடி அதுவே.    


    குடிகுடி ஆகக் கூடி நின்று அமரர்*  குணங்களே பிதற்றி நின்று ஏத்த* 
    அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற*  ஆழியான் அமர்ந்து உறை கோயில்*

    கடிஉடைக் கமலம் அடியிடை மலர*  கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய* 
    வடிவுஉடை அன்னம் பெடையொடும் சேரும்*  வயல் வெள்ளியங்குடி அதுவே.


    பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்*  பார் இடந்து எயிற்றினில் கொண்டு* 
    தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற*  திருவெள்ளியங்குடியானை*

    வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
    கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்*  ஆள்வர் இக்குரை கடல் உலகே. (2)