பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிகழல் தொழுவீர்*
வெள்ளம் முதுபரவைத்* திரை விரிய கரை எங்கும்-
தெள்ளும் மணிதிகழும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-
உள்ளும்* எனது உள்ளத்துளும்* உறைவாரை உள்ளீரே* (2)
தெருவில் திரிசிறு நோன்பியர்* செஞ்சோற்றொடு கஞ்சி-
மருவிப்* பிரிந்தவர் வாய்மொழி* மதியாது வந்துஅடைவீர்*
திருவில் பொலிமறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
உருவக் குறள்அடிகள் அடி* உணர்மின் உணர்வீரே
பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்* பணியும் சிறு தொண்டீர்!*
அறையும் புனல் ஒருபால்* வயல் ஒருபால் பொழில் ஒருபால்*
சிறைவண்டுஇனம் அறையும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-
உறையும் இறைஅடிஅல்லது* ஒன்று இறையும் அறியேனே*
வான்ஆர் மதி பொதியும் சடை* மழுவாளியொடு ஒருபால்*
தான்ஆகிய தலைவன் அவன்* அமரர்க்குஅதிபதிஆம்*
தேன்ஆர்பொழில் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன்ஆயனது* அடிஅல்லது* ஒன்று அறியேன் அடியேனே*
நந்தா நெடுநரகத்திடை* நணுகாவகை* நாளும்-
எந்தாய்! என* இமையோர் தொழுதுஏத்தும் இடம்* எறிநீர்ச்-
செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அம்தாமரை அடியாய்!* உனதுஅடியேற்கு அருள் புரியே*
முழுநீலமும் மலர்ஆம்பலும்* அரவிந்தமும் விரவிக்*
கழுநீரொடு மடவார்அவர்* கண்வாய் முகம் மலரும்*
செழுநீர்வயல் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனம்*
தொழும்நீர் மைஅதுஉடையார்* அடி தொழுவார் துயர்இலரே*
சேய்ஓங்கு* தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்-
மாயா* எனக்குஉரையாய் இது* மறை நான்கின்உளாயோ?*
தீஓம் புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்-
தாயோ?* உனதுஅடியார் மனத்தாயோ?* அறியேனே* (2)
மைஆர் வரிநீல* மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு*
உய்வான் உனகழலே* தொழுது எழுவேன்* கிளிமடவார்-
செவ்வாய் மொழி பயிலும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஐவாய் அரவுஅணைமேல்* உறை அமலா! அருளாயே*
கருமாமுகில் உருவா!* கனல் உருவா! புனல் உருவா*
பெருமால் வரை உருவா!* பிறஉருவா! நினதுஉருவா!*
திருமாமகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அருமா கடல்அமுதே!* உனது அடியே சரண்ஆமே* (2)
சீர்ஆர் நெடுமறுகின்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஏர்ஆர்முகில் வண்ணன்தனை* இமையோர் பெருமானை*
கார்ஆர் வயல் மங்கைக்குஇறை* கலியன்ஒலி மாலை*
பாரார் இவை பரவித்தொழப்* பாவம் பயிலாவே* (2)
என்றைக்கும் என்னை* உய்யக்கொண்டு போகிய,*
அன்றைக்கு அன்று என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
இன் தமிழ் பாடிய ஈசனை* ஆதியாய்-
நின்ற என் சோதியை,* என் சொல்லி நிற்பனோ? (2)
என்சொல்லி நிற்பன்* என் இன் உயிர் இன்று ஒன்றாய்,*
என்சொல்லால் யான்சொன்ன* இன்கவி என்பித்து,*
தன்சொல்லால் தான்தன்னைக்* கீர்த்தித்த மாயன்,* என்
முன்சொல்லும்* மூவுருவாம் முதல்வனே.
ஆம் முதல்வன் இவன் என்று* தன் தேற்றி,* என்
நா முதல் வந்து புகுந்து* நல் இன் கவி,*
தூ முதல் பத்தர்க்குத்* தான் தன்னைச் சொன்ன,* என்
வாய் முதல் அப்பனை* என்று மறப்பனோ?
அப்பனை என்று மறப்பன்* என் ஆகியே,*
தப்புதல் இன்றி* தனைக் கவி தான் சொல்லி,*
ஒப்பிலாத் தீவினையேனை* உய்யக்கொண்டு*
செப்பமே செய்து* திரிகின்ற சீர்கண்டே?
சீர் கண்டுகொண்டு* திருந்து நல் இன்கவி,*
நேர்பட யான் சொல்லும்* நீர்மை இலாமையில்,*
ஏர்வு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னைப்,*
பார் பரவு இன்கவி* பாடும் பரமரே.
இன் கவி பாடும்* பரம் கவிகளால்,*
தன் கவி தான் தன்னைப்* பாடுவியாது இன்று*
நன்கு வந்து என்னுடன் ஆக்கி* என்னால் தன்னை,*
வன் கவி பாடும்* என் வைகுந்த நாதனே.
வைகுந்த நாதன்* என வல்வினை மாய்ந்து அறச்,*
செய் குந்தன் தன்னை* என் ஆக்கி என்னால் தன்னை,*
வைகுந்தன் ஆகப்* புகழ வண் தீம்கவி,*
செய் குந்தன் தன்னை* எந்நாள் சிந்தித்து ஆர்வனோ!
ஆர்வனோ ஆழிஅங்கை* எம் பிரான் புகழ்,*
பார் விண் நீர் முற்றும்* கலந்து பருகிலும்,*
ஏர்வு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னைச்,*
சீர்பெற இன்கவி* சொன்ன திறத்துக்கே?
திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம்* திருமாலின் சீர்,*
இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வனோ,*
மறப்பு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
உறப் பல இன்கவி* சொன்ன உதவிக்கே?
உதவிக் கைம்மாறு* என் உயிர் என்ன உற்று எண்ணில்,*
அதுவும் மற்று ஆங்கவன்* தன்னது என்னால் தன்னைப்,*
பதவிய இன்கவி* பாடிய அப்பனுக்கு,*
எதுவும் ஒன்றும் இல்லை* செய்வது இங்கும் அங்கே.
இங்கும் அங்கும்* திருமால் அன்றி இன்மை கண்டு,*
அங்ஙனே வண் குருகூர்ச்* சடகோபன்,*
இங்ஙனே சொன்ன* ஓர் ஆயிரத்து இப்பத்தும்,*
எங்ஙனே சொல்லினும்* இன்பம் பயக்குமே. (2)