பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்* செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு* என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை* மரம் ஏழ் எய்த மைந்தனை*
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை* நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்*
கனவில் கண்டேன் இன்று கண்டமையால்* என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)
தாய் நினைந்த கன்றே ஒக்க* என்னையும் தன்னையே நினைக்கச் செய்து* தான் எனக்கு
ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை* அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை* மகரக் குழைக் காதனை* மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை* என் அன்பனை அன்றி ஆதரியேனே.
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்* மற்று ஓர் நெஞ்சு அறியான்* அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து* தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்கோவினை* குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை* எம்பிரானை எத்தால் மறக்கேனே?*
உரங்களால் இயன்ற மன்னர் மாள* பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று*
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்* எம்பிரானை* வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி* ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று*
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி* என் மனம் தாழ்ந்து நில்லாதே*.
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது* அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு* தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை* உம்பர்க்கு அணி ஆய் நின்ற*
வேங்கடத்து அரியை பரி கீறியை* வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை* தேனை நன் பாலினை அன்றி* என் மனம் சிந்தை செய்யாதே*.
எள் தனைப்பொழுது ஆகிலும்* என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்*
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்* தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை* கரும்பு ஈன்ற இன் சாற்றை* காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை* பரவைத் துயில் ஏற்றை* என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே*.
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற* பாலை ஆகி இங்கே புகுந்து* என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்* கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*
விண் உளார் பெருமானை எம்மானை* வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன்* மா மணி வண்ணன் எம் அண்ணல்* வண்ணமே அன்றி வாய் உரையாதே*
இனி எப் பாவம் வந்து எய்தும்? சொல்லீர்* எமக்குஇம்மையே அருள்பெற்றமையால்* அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்* தோற்றத் தொல் நெறியை* வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை* பத்தர் தாம் நுகர்கின்றது ஓர்
கனியை* காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே.
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்* தோன்றல் வாள் கலியன்* திரு ஆலி-
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்* நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்* தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்*
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி* தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,*
புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்* என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*
வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த* வேத ஒலியும் விழா ஒலியும்,*
பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும் அறா* திருப்பேரெயில் சேர்வன் நானே! (2)
நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,*
நான்இத் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்* என்வசம் அன்றுஇதுஇராப்பகல்போய்,*
தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ்* தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,*
வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்* செங்கனி வாயின் திறத்ததுவே.
செங்கனி வாயின் திறத்ததாயும்* செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்,*
சங்கொடு சக்கரம் கண்டுஉகந்தும்* தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*
திங்களும் நாளும் விழாஅறாத* தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,*
நங்கள்பிரானுக்குஎன் நெஞ்சம் தோழீ!* நாணும் நிறையும் இழந்ததுவே.
இழந்த எம்மாமைத் திறத்துப் போன* என்நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,*
உழந்து இனியாரைக் கொண்டுஎன்உசாகோ?* ஓதக் கடல்ஒலி போல* எங்கும்
எழுந்தநல் வேதத்துஒலி நின்றுஓங்கு* தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,*
முழங்கு சங்கக்கையன் மாயத்துஆழ்ந்தேன்* அன்னையர்காள் என்னை என்முனிந்தே?
முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலைஉண்டு* மருதுஇடைபோய்,*
கனிந்த விளவுக்குக் கன்றுஎறிந்த* கண்ண பிரானுக்குஎன் பெண்மை தோற்றேன்,*
முனிந்துஇனி என்செய்தீர் அன்னைமீர்காள்!* முன்னிஅவன் வந்து வீற்றிருந்த,*
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே* காலம் பெறஎன்னைக் காட்டுமினே
காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்* காதல் கடலின் மிகப் பெரிதால்,*
நீல முகில்வண்ணத்து எம்பெருமான்* நிற்கும்முன்னே வந்துஎன் கைக்கும் எய்தான்,*
ஞாலத்துஅவன் வந்து வீற்றிருந்த* நான்மறையாளரும் வேள்வி ஓவா,*
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்* கூடுபுனல் திருப்பேரெயிற்கே.
பேர்எயில் சூழ்கடல் தென்இலங்கை* செற்றபிரான் வந்து வீற்றிருந்த,*
பேரெயிற்கே புக்குஎன்நெஞ்சம் நாடி* பேர்த்து வரஎங்கும் காண மாட்டேன்,*
ஆரை இனிஇங்குஉடையம் தோழீ!* என்நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,*
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?* என்நெஞ்சம் கண்டதுவே கண்டேனே
கண்டதுவே கொண்டுஎல்லாரும் கூடி* கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக்
கொண்டு,* அலர் தூற்றிற்றுஅது முதலாக்* கொண்டஎன் காதல் உரைக்கில் தோழீ,*
மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்* நீள்விசும்பும் கழியப் பெரிதால்,*
தெண்திரை சூழ்ந்துஅவன் வீற்றிருந்த* தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே
சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!* அன்னையர்காள்! என்னைத்தேற்ற வேண்டா,*
நீர்கள் உரைக்கின்றது என்இதற்கு?* நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை,*
கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட* கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,*
ஏர்வள ஒண்கழனிப் பழன* தென்திருப்பேரெயில் மாநகரே.
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்* நாண்எனக்கு இல்லைஎன் தோழி மீர்காள்,*
சிகர மணிநெடு மாடம் நீடு* தென்திருப் பேரெயில் வீற்றிருந்த,*
மகர நெடுங்குழைக் காதன் மாயன்* நூற்றுவரை அன்று மங்க நூற்ற,*
நிகர்இல் முகில்வண்ணன் நேமியான்* என் நெஞ்சம் கவர்ந்துஎனை ஊழியானே?
ஊழிதோறுஊழி உருவும் பேரும் செய்கையும்* வேறவன் வையம் காக்கும்,*
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை* அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்* இவை திருப்பேரெயில் மேய பத்தும்,*
ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்* அவர்அடிமைத் திறத்து ஆழியாரே. (2)