பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
தந்தை காலில் பெரு விலங்கு* தாள் அவிழ நள் இருட்கண்-
வந்த எந்தை பெருமானார்* மருவி நின்ற ஊர்போலும்*
முந்தி வானம் மழை பொழியும்* மூவா உருவின் மறையாளர்*
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
பாரித்து எழுந்த* படை மன்னர் தம்மை மாள பாரதத்து-
தேரில் பாகன் ஆய் ஊர்ந்த* தேவதேவன் ஊர்போலும்*
நீரில் பணைத்த நெடு வாளைக்கு* அஞ்சிப் போன குருகு இனங்கள்*
ஆரல் கவுளோடு அருகு அணையும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்* சிரங்கள் ஐஇரண்டும்*
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக* உதிர்த்த உரவோன் ஊர்போலும்*
கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்* கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
அம்பு அராவும் கண் மடவார்* ஐம்பால் அணையும் அழுந்தூரே*.
வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி* அடியேன் மனம் புகுந்து* என்-
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்* நின்றார் நின்ற ஊர்போலும்*
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்* போன காதல் பெடையோடும்*
அள்ளல் செறுவில் கயல் நாடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
பகலும் இரவும் தானே ஆய்* பாரும் விண்ணும் தானே ஆய்*
நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி* நின்றார் நின்ற ஊர்போலும்*
துகிலின் கொடியும் தேர்த் துகளும்* துன்னி மாதர் கூந்தல்வாய்*
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
ஏடு இலங்கு தாமரைபோல்* செவ்வாய் முறுவல் செய்தருளி*
மாடு வந்து என் மனம் புகுந்து* நின்றார் நின்ற ஊர்போலும்*
நீடு மாடத் தனிச் சூலம்* போழக் கொண்டல் துளி தூவ*
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
மாலைப் புகுந்து மலர்அணைமேல்* வைகி அடியேன் மனம் புகுந்து* என்-
நீலக் கண்கள் பனி மல்க* நின்றார் நின்ற ஊர்போலும்*
வேலைக் கடல்போல் நெடு வீதி* விண் தோய் சுதை வெண் மணி மாடத்து*
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்* வீதி அழுந்தூரே*
வஞ்சி மருங்குல் இடை நோவ* மணந்து நின்ற கனவகத்து* என்-
நெஞ்சு நிறையக் கைகூப்பி* நின்றார் நின்ற ஊர்போலும்*
பஞ்சி அன்ன மெல் அடி* நல் பாவைமார்கள்* ஆடகத்தின்-
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே*.
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு* இங்கே நெருநல் எழுந்தருளி*
பொன் அம் கலைகள் மெலிவு எய்த* போன புனிதர் ஊர்போலும்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்* வரி வண்டு இசை பாட*
அன்னம் பெடையோடு உடன் ஆடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.
நெல்லில் குவளை கண் காட்ட* நீரில் குமுதம் வாய் காட்ட *
அல்லிக் கமலம் முகம் காட்டும்* கழனி அழுந்தூர் நின்றானை*
வல்லிப் பொதும்பில் குயில் கூவும்* மங்கை வேந்தன் பரகாலன்*
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை* சொல்ல பாவம் நில்லாவே*. (2)
கற்பார் இராம பிரானை அல்லால்* மற்றும் கற்பரோ?,*
புல்பா முதலா* புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*
நல்பால் அயோத்தியில் வாழும்* சராசரம் முற்றவும்,*
நல்பாலுக்கு உய்த்தனன்* நான்முக னார்பெற்ற நாட்டுளே? (2)
நாட்டில் பிறந்தவர்* நாரணற்கு ஆள்அன்றி ஆவரோ,*
நாட்டில் பிறந்து படாதன பட்டு* மனிசர்க்காய்,*
நாட்டை நலியும் அரக்கரை* நாடித் தடிந்திட்டு,*
நாட்டை அளித்துஉய்யச் செய்து* நடந்தமை கேட்டுமே?
கேட்பார்கள் கேசவன் கீர்த்திஅல்லால்* மற்றும் கேட்பரோ,*
கேட்பார் செவிசுடு* கீழ்மை வசைவுகளே வையும்,*
சேண்பால் பழம்பகைவன்* சிசு பாலன்,* திருவடி
தாள்பால் அடைந்த* தன்மை அறிவாரை அறிந்துமே?
தன்மை அறிபவர்* தாம் அவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
பன்மைப் படர்பொருள்* ஆதும்இல்பாழ் நெடும்காலத்து,*
நன்மைப் புனல்பண்ணி* நான்முகனைப்பண்ணி தன்னுள்ளே*
தொன்மை மயக்கிய தோற்றிய* சூழல்கள் சிந்தித்தே?
சூழல்கள் சிந்திக்கில்* மாயன் கழல்அன்றி சூழ்வரோ,*
ஆழப் பெரும்புனல்* தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்,*
தாழப் படாமல்* தன் பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட,*
கேழல் திருஉருஆயிற்றுக்* கேட்டும் உணர்ந்துமே?
கேட்டும் உணர்ந்தவர்* கேசவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
வாட்டம்இலா வண்கை* மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*
ஈட்டம்கொள் தேவர்கள்* சென்றுஇரந்தார்க்கு இடர் நீக்கிய,*
கோட்டுஅங்கை வாமனன்ஆய்* செய்த கூத்துக்கள் கண்டுமே?
கண்டும் தெளிந்தும் கற்றார்* கண்ணற்கு ஆளன்றி ஆவரோ,*
வண்டுஉண் மலர்த்தொங்கல்* மார்க்கண்டேயனுக்கு வாழும்நாள்*
இண்டைச் சடைமுடி* ஈசன்உடன்கொண்டு உசாச்செல்ல,*
கொண்டுஅங்கு தன்னொடும் கொண்டு* உடன்சென்றது உணர்ந்துமே?
செல்ல உணர்ந்தவர்* செல்வன்தன் சீர்அன்றி கற்பரோ,*
எல்லை இலாத பெரும்தவத்தால்* பல செய்மிறை,*
அல்லல் அமரரைச் செய்யும்* இரணியன் ஆகத்தை,*
மல்லல் அரிஉருஆய்* செய்த மாயம் அறிந்துமே?
மாயம் அறிபவர்* மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க* ஓர்ஐவர்க்குஆய்,*
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று* சேனையை
நாசம் செய்திட்டு,* நடந்த நல் வார்த்தை அறிந்துமே?
வார்த்தை அறிபவர்* மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு* இறப்புஇவை
பேர்த்து,* பெரும்துன்பம் வேர்அற நீக்கி* தன் தாளின்கீழ்ச்
சேர்த்து,* அவன் செய்யும்* சேமத்தைஎண்ணித் தெளிவுற்றே?
தெளிவுற்று வீவுஇன்றி* நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,*
தெளிவுற்ற கண்ணனைத்* தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*
தெளிவுற்ற ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்,* அவர்
தெளிவுற்ற சிந்தையர்* பாமரு மூவுலகத்துள்ளே (2)