பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்* திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த*
வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்* வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*
எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்* ஐந்து- வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை*
அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* (2)
முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண* முனிவரொடு தானவர்கள் திசைப்ப* வந்து-
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்* பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்*
செந்நெல் மலிகதிர் கவரி வீச* சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி*
அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு* கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*
நிலத்திகழும் மலர்ச்சுடர்ஏய் சோதீ! என்ன* நெஞ்சுஇடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*
மலைத்திகழ் சந்துஅகில் கனகம்மணியும் கொண்டு* வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள்பாய*
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கல் குன்றம்* திகழ்ந்ததுஎன திருஉருவம் பன்றி ஆகி*
இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி* எயிற்றிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்*
புலம்புசிறை வண்டுஒலிப்ப பூகம் தொக்க* பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்கள் ஆல*
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகுஆர் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
சினம்மேவும் அடல்அரியின் உருவம்ஆகி* திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு*
மனம்மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி- மாள உயிர் வவ்விய எம்மாயோன் காண்மின்*
இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை* ஏய்வாய மரகதம்போல் கிளியின்இன் சொல்*
அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி* மாண்உருஆய் மூவடி மாவலியை வேண்டி*
தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித்* தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*
தேன்அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி* செழுமாட மாளிகைகள் கூடம்தோறும்*
ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
பந்துஅணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகி* பகலவன் மீதுஇயங்காத இலங்கை வேந்தன்*
அந்தம்இல் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ* அடுகணையால் எய்துஉகந்த அம்மான் காண்மின்*
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்* திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க*
அந்தணர்தம் ஆகுதியின் புகைஆர் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு- பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து*
வம்புஅவிழும் மலர்க்குழலாள்ஆய்ச்சி வைத்த- தயிர்வெண்ணெய் உண்டுஉகந்த மாயோன் காண்மின்*
செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்* திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
ஊடுஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்* ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற*
நீடுஏறு பெருவலித் தோள்உடைய வென்றி* நிலவுபுகழ் நேமிஅங்கை நெடியோன் காண்மின்*
சேடுஏறு பொழில்தழுவும் எழில்கொள் வீதி* திருவிழவில் மணிஅணிந்த திண்ணை தோறும்*
ஆடுஏறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*
பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்* பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை*
அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*
கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்* கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்*
ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்* ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)
மாயா! வாமனனே!* மதுசூதா நீ அருளாய்,*
தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்* விசும்பு ஆய் கால் ஆய்,*
தாயாய் தந்தையாய்* மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,*
நீயாய் நீ நின்றவாறு* இவை என்ன நியாயங்களே! (2)
அங்கண் மலர்த் தண் துழாய்முடி* அச்சுதனே! அருளாய்,*
திங்களும் ஞாயிறும் ஆய்* செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்,*
பொங்கு பொழி மழை ஆய்* புகழ் ஆய் பழி ஆய் பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றமும் ஆம்* இவை என்ன விசித்திரமே!
சித்திரத் தேர் வலவா!* திருச் சக்கரத்தாய்! அருளாய்,*
எத்தனை ஓர் உகமும்* அவை ஆய் அவற்றுள் இயலும்,*
ஒத்த ஓண் பல் பொருள்கள்* உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*
வித்தகத்தாய் நிற்றி நீ* இவை என்ன விடமங்களே!
கள் அவிழ் தாமரைக்கண்* கண்ணனே! எனக்கு ஒன்று அருளாய்,*
உள்ளதும் இல்லதும் ஆய்* உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*
வெள்ளத் தடம் கடலுள்* விட நாகு அணைமேல் மருவி,*
உள்ளப் பல் யோகு செய்தி* இவை என்ன உபாயங்களே!
பாசங்கள் நீக்கி* என்னை உனக்கே அறக் கொண்டிட்டு,* நீ
வாச மலர்த் தண் துழாய்முடி* மாயவனே! அருளாய்,*
காயமும் சீவனும் ஆய்* கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும்நீ,*
மாயங்கள் செய்துவைத்தி* இவை என்ன மயக்குக்களே!
மயக்கா! வாமனனே!* மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,*
அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய்* அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்,*
வியப்பு ஆய் வென்றிகள் ஆய்* வினை ஆய் பயன் ஆய் பின்னும்நீ,*
துயக்கு ஆய் நீ நின்றவாறு* இவை என்ன துயரங்களே!
துயரங்கள் செய்யும் கண்ணா!* சுடர் நீள் முடியாய் அருளாய்,*
துயரம் செய் மானங்கள் ஆய்* மதன் ஆகி உகவைகள் ஆய்,*
துயரம் செய் காமங்கள் ஆய்* துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,*
துயரங்கள் செய்துவைத்தி* இவை என்ன சுண்டாயங்களே.
என்ன சுண்டாயங்களால்* நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா,*
இன்னது ஓர் தன்மையை என்று* உன்னை யாவர்க்கும் தேற்றரியை,*
முன்னிய மூவுலகும்* அவை ஆய் அவற்றைப் படைத்து,*
பின்னும் உள்ளாய்! புறத்தாய்*! இவை என்ன இயற்கைகளே!
என்ன இயற்கைகளால்* எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?,*
துன்னு கரசரணம் முதலாக* எல்லா உறுப்பும்,*
உன்னு சுவை ஒளி* ஊறு ஒலி நாற்றம் முற்றும்நீயே,*
உன்னை உணரவுறில்* உலப்பு இல்லை நுணுக்கங்களே.
இல்லை நுணுக்கங்களே* இதனில் பிறிது என்னும் வண்ணம்*
தொல்லை நல் நூலில் சொன்ன* உருவும் அருவும் நீயே:*
அல்லித் துழாய் அலங்கல்* அணி மார்ப என் அச்சுதனே,*
வல்லது ஓர் வண்ணம் சொன்னால்* அதுவே உனக்கு ஆம்வண்ணமே.
ஆம் வண்ணம் இன்னது ஒன்று* என்று அறிவது அரிய அரியை,*
ஆம் வண்ணத்தால்* குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த*
ஆம் வண்ண ஒண் தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்,*
ஆம் வண்ணத்தால் உரைப்பார்* அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)