பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
உயர்வு அற உயர் நலம்* உடையவன் எவன் அவன்*
மயர்வு அற மதி நலம்* அருளினன் எவன் அவன்*
அயர்வு அறும் அமரர்கள்* அதிபதி எவன் அவன்*
துயர் அறு சுடர் அடி* தொழுது எழு என் மனனே! (2)
மனன்அகம் மலம் அற* மலர்மிசை எழுதரும்*
மனன் உணர்வு அளவு இலன்,* பொறி உணர்வு அவை இலன்*
இனன் உணர், முழு நலம்,* எதிர் நிகழ் கழிவினும்*
இனன் இலன் எனன் உயிர்,* மிகுநரை இலனே.
இலன் அது உடையன் இது* என நினைவு அரியவன்*
நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*
புலனொடு புலன் அலன்,* ஒழிவு இலன் பரந்த* அந்-
நலன் உடை ஒருவனை* நணுகினம் நாமே.*
நாம் அவன் இவன் உவன்,* அவள் இவள் உவள் எவள்*
தாம் அவர் இவர் உவர்,* அது இது உது எது*
வீமவை இவை உவை,* அவை நலம், தீங்கு அவை*
ஆமவை ஆயவை ஆய்* நின்ற அவரே.*
அவரவர் தமதமது* அறிவு அறி வகைவகை*
அவரவர் இறையவர்* என அடி அடைவர்கள்*
அவரவர் இறையவர்* குறைவு இலர் இறையவர்*
அவரவர் விதிவழி* அடைய நின்றனரே.
நின்றனர் இருந்தனர்* கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலர் இருந்திலர்* கிடந்திலர் திரிந்திலர்*
என்றும் ஓர் இயல்வினர்* என நினைவு அரியவர்*
என்றும் ஓர் இயல்வொடு* நின்ற எம் திடரே.
திட விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசைப்*
படர் பொருள் முழுவதும் ஆய்* அவைஅவைதொறும்*
உடல்மிசை உயிர் எனக்* கரந்து எங்கும் பரந்துளன்*
சுடர் மிகு சுருதியுள்* இவை உண்ட சுரனே.
சுரர் அறிவு அரு நிலை* விண் முதல் முழுவதும்*
வரன் முதலாய் அவை* முழுது உண்ட பரபரன்*
புரம் ஒரு மூன்று எரித்து* அமரர்க்கும் அறிவியந்து*
அரன் அயன் என* உலகு அழித்து அமைத்து உளனே.
உளன் எனில் உளன் அவன்* உருவம் இவ் உருவுகள்*
உளன் அலன் எனில், அவன்* அருவம் இவ் அருவுகள்*
உளன் என இலன் என* இவை குணம் உடைமையில்*
உளன் இரு தகைமையொடு* ஒழிவு இலன் பரந்தே.
பரந்த தண் பரவையுள்* நீர்தொறும் பரந்துளன்*
பரந்த அண்டம் இது என:* நிலம் விசும்பு ஒழிவு அறக்*
கரந்த சில் இடந்தொறும்* இடம் திகழ் பொருள்தொறும்*
கரந்து எங்கும் பரந்துளன்:* இவை உண்ட கரனே.
கர விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசை*
வரன் நவில் திறல் வலி* அளி பொறை ஆய்நின்ற*
பரன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிரல் நிறை ஆயிரத்து* இவை பத்தும் வீடே. (2)
வீடுமின் முற்றவும்* வீடு செய்து* உம் உயிர்
வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)
மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்*
என்னும் இடத்து* இறை உன்னுமின் நீரே.
நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து* இறை
சேர்மின் உயிர்க்கு* அதன் நேர் நிறை இல்லே.
இல்லதும் உள்ளதும்* அல்லது அவன் உரு*
எல்லை இல் அந் நலம்* புல்கு பற்று அற்றே.
அற்றது பற்று எனில்* உற்றது வீடு உயிர்*
செற்ற அது மன் உறில்* அற்று இறை பற்றே.
பற்று இலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*
பற்று இலையாய்* அவன் முற்றில் அடங்கே.
அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு* ஈசன்
அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.
உள்ளம் உரை செயல்* உள்ள இம் மூன்றையும்*
உள்ளிக் கெடுத்து* இறை உள்ளில் ஒடுங்கே.
ஒடுங்க அவன்கண்* ஒடுங்கலும் எல்லாம்*
விடும் பின்னும் ஆக்கை* விடும்பொழுது எண்ணே.
எண் பெருக்கு அந் நலத்து* ஒண் பொருள் ஈறு இல*
வண் புகழ் நாரணன்* திண் கழல் சேரே.
சேர்த்தடத்* தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*
சீர்த் தொடை ஆயிரத்து* ஓர்த்த இப்பத்தே. (2)
பத்து உடை அடியவர்க்கு எளியவன்;* பிறர்களுக்கு அரிய
வித்தகன்* மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
மத்து உறு கடை வெண்ணெய்* களவினில் உரவிடை யாப்புண்டு*
எத்திறம், உரலினோடு* இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)
எளிவரும் இயல்வினன்* நிலை வரம்பு இல பல பிறப்பாய்*
ஒளிவரும் முழு நலம்* முதல் இல கேடு இல வீடு ஆம்*
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்* முழுவதும்; இறையோன்*
அளிவரும் அருளினோடு* அகத்தனன் புறத்தனன் அமைந்தே.
அமைவு உடை அறநெறி* முழுவதும் உயர்வு அற உயர்ந்து*
அமைவு உடை முதல் கெடல்* ஒடிவு இடை அற நிலம் அது ஆம்*
அமைவு உடை அமரரும்* யாவையும் யாவரும் தான் ஆம்*
அமைவு உடை நாரணன்* மாயையை அறிபவர் யாரே?
யாரும் ஓர் நிலைமையன் என* அறிவு அரிய எம் பெருமான்*
யாரும் ஓர் நிலைமையன் என* அறிவு எளிய எம் பெருமான்*
பேரும் ஓர் ஆயிரம்* பிறபல உடைய எம் பெருமான்*
பேரும் ஓர் உருவமும்* உளது இல்லை இலது இல்லை பிணக்கே.
வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை* அருவினையேன்-
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட* கள்வா! என்பன்; பின்னையும்*
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்* வல் ஆன் ஆயர் தலைவனாய்*
இள ஏறு ஏழும் தழுவிய* எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி* இமையோர் பலரும் முனிவரும்*
புனைந்த கண்ணி நீர் சாந்தம்* புகையோடு ஏந்தி வணங்கினால்*
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்* வித்துஆய் முதலில் சிதையாமே*
மனம் செய் ஞானத்து உன் பெருமை* மாசூணாதோ? மாயோனே!
மா யோனிகளாய் நடை கற்ற* வானோர் பலரும் முனிவரும்*
நீ யோனிகளைப் படை என்று* நிறை நான்முகனைப் படைத்தவன்*
சேயோன் எல்லா அறிவுக்கும்;* திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன்* எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்* தான் ஓர் உருவனே.
தான் ஓர் உருவே தனிவித்தாய்* தன்னின் மூவர் முதலாய*
வானோர் பலரும் முனிவரும்* மற்றும் மற்றும் முற்றும் ஆய்*
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி* அதனுள் கண்வளரும்*
வானோர் பெருமான் மா மாயன்* வைகுந்தன் எம் பெருமானே.
மானேய் நோக்கி மடவாளை* மார்பில் கொண்டாய்! மாதவா!*
கூனே சிதைய உண்டை வில்* நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*
வான் ஆர் சோதி மணிவண்ணா!* மதுசூதா! நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே.
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!* விண்ணோர் தலைவா! கேசவா!*
மனை சேர் ஆயர் குல முதலே!* மா மாயனே! மாதவா!*
சினை ஏய் தழைய மராமரங்கள்* ஏழும் எய்தாய்! சிரீதரா!*
இனையாய் இனைய பெயரினாய்!* என்று நைவன் அடியேனே.
அடியேன் சிறிய ஞானத்தன்;* அறிதல் ஆர்க்கும் அரியானை*
கடி சேர் தண் அம் துழாய்க்* கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*
செடி ஆர் ஆக்கை அடியாரைச்* சேர்தல் தீர்க்கும் திருமாலை*
அடியேன் காண்பான் அலற்றுவன்;* இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே?
உண்டாய் உலகு ஏழ் முன்னமே;* உமிழ்ந்து மாயையால் புக்கு*
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்* உவலை ஆக்கை நிலை எய்தி*
மண் தான் சோர்ந்தது உண்டேலும்* மனிசர்க்கு ஆகும் பீர்* சிறிதும்-
அண்டாவண்ணம் மண் கரைய* நெய் ஊண் மருந்தோ? மாயோனே!
மாயோம் தீய அலவலைப்* பெரு மா வஞ்சப் பேய் வீயத்*
தூய குழவியாய் விடப் பால் அமுதா* அமுது செய்திட்ட-
மாயன் வானோர் தனித் தலைவன்* மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்-
தாயோன் தம்மான் என் அம்மான்* அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து* மாயப் பற்று அறுத்து*
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்* திருத்தி வீடு திருத்துவான்*
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி* அகலம் கீழ் மேல் அளவு இறந்து*
நேர்ந்த உருவாய் அருவாகும்* இவற்றின் உயிராம் நெடுமாலே!
மாலே மாயப் பெருமானே!* மா மாயவனே! என்று என்று*
மாலே ஏறி மால் அருளால்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
பால் ஏய் தமிழர் இசைகாரர்* பத்தர் பரவும் ஆயிரத்தின்-
பாலே பட்ட இவை பத்தும்* வல்லார்க்கு இல்லை பரிவதே.
பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*
பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)
மதுவார் தண் அம் துழாயான்* முது வேத முதலவனுக்கு*
எதுவே? என்பணி? என்னாது* அதுவே ஆள் செய்யும் ஈடே
ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*
பாடும் என் நா அவன் பாடல்* ஆடும் என் அங்கம் அணங்கே.
அணங்கு என ஆடும் என் அங்கம்* வணங்கி வழிபடும் ஈசன்*
பிணங்கி அமரர் பிதற்றும்* குணங்கெழு கொள்கையினானே*
கொள்கை கொளாமை இலாதான்* எள்கல் இராகம் இலாதான்*
விள்கை விள்ளாமை விரும்பி* உள் கலந்தார்க்கு ஓர் அமுதே.
அமுதம் அமரர்கட்கு ஈந்த* நிமிர் சுடர் ஆழி நெடுமால்*
அமுதிலும் ஆற்ற இனியன்* நிமிர் திரை நீள் கடலானே.
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்* தோள்கள் தலை துணிசெய்தான்*
தாள்கள் தலையில் வணங்கி* நாள்கள் தலைக்கழிமின்னே.
கழிமின் தொண்டீர்கள் கழித்துத்* தொழுமின் அவனை தொழுதால்*
வழி நின்ற வல்வினை மாள்வித்து* அழிவின்றி ஆக்கம் தருமே.
தரும அரும் பயன் ஆய* திருமகளார் தனிக் கேள்வன்*
பெருமை உடைய பிரானார்* இருமை வினை கடிவாரே.
கடிவார் தீய வினைகள்* நொடியாரும் அளவைக்கண்*
கொடியா அடு புள் உயர்த்த* வடிவு ஆர் மாதவனாரே.
மாதவன்பால் சடகோபன்* தீது அவம் இன்றி உரைத்த*
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து* ஓத வல்லார் பிறவாரே.
பிறவித்துயர் அற* ஞானத்துள் நின்று.*
துறவிச் சுடர் விளக்கம்* தலைப்பெய்வார்,*
அறவனை* ஆழிப்படை அந்தணனை,*
மறவியை இன்றி* மனத்து வைப்பாரே.
வைப்பாம் மருந்து ஆம்* அடியரை வல்வினைத்*
துப்பாம் புலன் ஐந்தும்* துஞ்சக்கொடான் அவன்,*
எப்பால் எவர்க்கும்* நலத்தால் உயர்ந்து உயர்ந்து,*
அப்பாலவன் எங்கள்* ஆயர் கொழுந்தே.
ஆயர் கொழுந்தாய்* அவரால் புடையுண்ணும்,*
மாயப் பிரானை* என் மாணிக்கச் சோதியை,*
தூய அமுதைப்* பருகிப் பருகி,* என்-
மாயப் பிறவி* மயர்வு அறுத்தேனே.
மயர்வு அற என் மனத்தே* மன்னினான் தன்னை,*
உயர்வினையே தரும்* ஒண் சுடர்க் கற்றையை,*
அயர்வு இல் அமரர்கள்,* ஆதிக் கொழுந்தை,* என்
இசைவினை* என் சொல்லி யான் விடுவேனோ?
விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,*
நடுவே வந்து* உய்யக் கொள்கின்ற நாதனை,*
தொடுவே செய்து* இள ஆய்ச்சியர் கண்ணினுள்,*
விடவே செய்து* விழிக்கும் பிரானையே.
பிரான்* பெரு நிலம் கீண்டவன்,* பின்னும்
விராய்* மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*
மராமரம் எய்த மாயவன்,* என்னுள்
இரான் எனில்* பின்னை யான் ஒட்டுவேனோ?
யான் ஒட்டி என்னுள்* இருத்துவன் என்றிலன்,*
தான் ஒட்டி வந்து* என் தனி நெஞ்சை வஞ்சித்து,*
ஊன் ஒட்டி நின்று* என் உயிரில் கலந்து,* இயல்
வான் ஒட்டுமோ?* இனி என்னை நெகிழ்க்கவே.
என்னை நெகிழ்க்கிலும்* என்னுடை நன் நெஞ்சம்-
தன்னை,* அகல்விக்கத் தானும்* கில்லான் இனி,*
பின்னை நெடும் பணைத் தோள்* மகிழ் பீடு உடை,*
முன்னை அமரர்* முழுமுதல் தானே.
அமரர் முழுமுதல்* ஆகிய ஆதியை,*
அமரர்க்கு அமுது ஈந்த* ஆயர் கொழுந்தை,*
அமர அழும்பத்* துழாவி என் ஆவி,*
அமரத் தழுவிற்று* இனி அகலும்மோ.
அகலில் அகலும்* அணுகில் அணுகும்,*
புகலும் அரியன்* பொரு அல்லன் எம்மான்,*
நிகர் இல் அவன் புகழ்* பாடி இளைப்பு இலம்,*
பகலும் இரவும்* படிந்து குடைந்தே.
குடைந்து வண்டு உண்ணும்* துழாய் முடியானை,*
அடைந்த தென் குருகூர்ச்* சடகோபன்,*
மிடைந்த சொல் தொடை* ஆயிரத்து இப்பத்து,*
உடைந்து நோய்களை* ஓடுவிக்குமே.
ஓடும் புள் ஏறி,* சூடும் தண் துழாய்,*
நீடு நின்றவை,* ஆடும் அம்மானே.
அம்மானாய்ப் பின்னும்,* எம்மாண்பும் ஆனான்,*
வெம் மா வாய் கீண்ட,* செம்மா கண்ணனே.
கண் ஆவான் என்றும்,* மண்ணோர் விண்ணோர்க்கு,*
தண் ஆர் வேங்கட,* விண்ணோர் வெற்பனே.
வெற்பை ஒன்று எடுத்து,* ஒற்கம் இன்றியே,*
நிற்கும் அம்மான் சீர்,* கற்பன் வைகலே.
வைகலும் வெண்ணெய்,* கைகலந்து உண்டான்,*
பொய் கலவாது,* என் மெய்கலந்தானே.
கலந்து என் ஆவி,* நலம்கொள்நாதன்,*
புலன் கொள் மாணாய்,* நிலம்கொண்டானே.
கொண்டான் ஏழ் விடை,* உண்டான் ஏழ்வையம்,*
தண் தாமம் செய்து,* என் எண்தானானானே.
ஆனான் ஆன் ஆயன்,* மீனோடேனமும்;*
தான் ஆனான் என்னில்,* தானாயசங்கே.
சங்கு சக்கரம்,* அங்கையில் கொண்டான்,*
எங்கும் தானாய,* நங்கள் நாதனே.
நாதன்ஞாலம்கொள்* பாதன், என்னம்மான்,*
ஓதம்போல்கிளர்,* வேதநீரனே.
நீர்புரைவண்ணன்,* சீர்சடகோபன்,*
நேர்தல் ஆயிரத்து,* ஓர்தல்இவையே.
உடன் அமர் காதல் மகளிர்* திருமகள் மண்மகள் ஆயர்-
மட மகள் என்று இவர் மூவர் ஆளும்* உலகமும் மூன்றே,*
உடன் அவை ஒக்க விழுங்கி* ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்,*
கடல் மலி மாயப் பெருமான்* கண்ணன் என் ஒக்கலையானே.
ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று* தந்திட வாங்கிச்,
செக்கம் செக அன்று அவள்பால்* உயிர் செக உண்ட பெருமான்,*
நக்க பிரானோடு அயனும்* இந்திரனும் முதலாக,*
ஒக்கவும் தோற்றிய ஈசன்* மாயன் என் நெஞ்சின் உளானே.
மாயன் என் நெஞ்சின் உள்ளான்* மற்றும் எவர்க்கும் அதுவே,*
காயமும் சீவனும் தானே* காலும் எரியும் அவனே,*
சேயன் அணியன் எவர்க்கும்* சிந்தைக்கும் கோசரம் அல்லன்,*
தூயன் துயக்கன் மயக்கன்* என்னுடைத் தோளிணையானே.
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்* சுடர் முடி மேலும்,*
தாள் இணை மேலும் புனைந்த* தண் அம் துழாய் உடை அம்மான்*
கேள் இணை ஒன்றும் இலாதான்* கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,*
நாள் அணைந்து ஒன்றும் அகலான்* என்னுடை நாவின் உளானே.
பொருமா நீள் படை* ஆழி சங்கத்தொடு,*
திருமா நீள் கழல்* ஏழ் உலகும் தொழ,*
ஒரு மாணிக் குறள் ஆகி,* நிமிர்ந்த,* அக்
கரு மாணிக்கம்* என் கண்ணுளது ஆகுமே.
கண்ணுள்ளே நிற்கும்* காதன்மையால் தொழில்,*
எண்ணிலும் வரும்* என் இனி வேண்டுவம்?*
மண்ணும் நீரும்* எரியும் நல் வாயுவும்*
விண்ணும் ஆய் விரியும்* எம் பிரானையே.
எம்பிரானை* எந்தை தந்தை தந்தைக்கும்-
தம்பிரானை,* தண் தாமரைக் கண்ணனை,*
கொம்பு அராவு* நுண் நேர் இடை மார்பனை,*
எம்பிரானைத் தொழாய்* மட நெஞ்சமே.
நெஞ்சமே நல்லை நல்லை* உன்னைப் பெற்றால்-
என் செய்யோம்?* இனி என்ன குறைவினம்?*
மைந்தனை மலராள்* மணவாளனைத்,*
துஞ்சும்போதும்* விடாது தொடர்கண்டாய்.
கண்டாயே நெஞ்சே* கருமங்கள் வாய்க்கின்று,* ஓர்
எண் தானும் இன்றியே* வந்து இயலுமாறு,*
உண்டானை* உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக்,* கண்டுகொண்டனை நீயுமே.
நீயும் நானும்* இந் நேர்நிற்கில்,* மேல்மற்றோர்.
நோயும் சார்கொடான்* நெஞ்சமே சொன்னேன்,*
தாயும் தந்தையும் ஆய்* இவ் உலகினில்,*
வாயும் ஈசன்* மணிவண்ணன் எந்தையே.
எந்தையே என்றும்* எம் பெருமான் என்றும்,*
சிந்தையுள் வைப்பன்* சொல்லுவன் பாவியேன்,*
எந்தை எம் பெருமான் என்று* வானவர்,*
சிந்தையுள் வைத்துச்* சொல்லும் செல்வனையே.
செல்வ நாரணன் என்ற* சொல் கேட்டலும்,*
மல்கும் கண்பனி* நாடுவன் மாயமே,*
அல்லும் நன்பகலும்* இடைவீடு இன்றி,*
நல்கி என்னை விடான்* நம்பி நம்பியே.
நம்பியை* தென் குறுங்குடி நின்ற,* அச்
செம்பொனே திகழும்* திரு மூர்த்தியை,*
உம்பர் வானவர்* ஆதி அம் சோதியை,*
எம் பிரானை* என் சொல்லி மறப்பனோ?
மறப்பும் ஞானமும்* நான் ஒன்று உணர்ந்திலன்,*
மறக்கும் என்று* செந்தாமரைக் கண்ணொடு,*
மறப்பு அற என் உள்ளே* மன்னினான் தன்னை,*
மறப்பனோ? இனி* யான் என் மணியையே.
மணியை வானவர் கண்ணனை* தன்னது ஓர்-
அணியை,* தென் குருகூர்ச் சடகோபன்,* சொல்
பணிசெய் ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
தணிவிலர் கற்பரேல்,* கல்வி வாயுமே.