பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    தாள தாமரைத்*  தடம்அணி வயல் திருமோகூர்* 
    நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று*  அசுரரைத் தகர்க்கும்*

    தோளும் நான்குஉடைச்*  சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்* 
    காள மேகத்தை அன்றி*  மற்றொன்றுஇலம் கதியே.  (2)


    இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்*  ஈன்தண் துழாயின்* 
    அலங்கலங்கண்ணி*  ஆயிரம் பேர்உடை அம்மான்*

    நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்*  திருமோகூர்* 
    நலங்கழல் அவன் அடிநிழல்*  தடமன்றி யாமே. 


    அன்றியாம் ஒரு புகலிடம்*  இலம் என்றுஎன்று அலற்றி* 
    நின்று நான்முகன் அரனொடு*  தேவர்கள் நாட*

    வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்*  திருமோகூர்* 
    நன்று நாம் இனி நணுகுதும்*  நமதுஇடர் கெடவே.  


    இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்*  என்றுஎன்று ஏத்தி* 
    சுடர்கொள் சோதியைத்*  தேவரும் முனிவரும் தொடர*

    படர்கொள் பாம்பணைப்*  பள்ளிகொள்வான் திருமோகூர்* 
    இடர் கெடவடி பரவுதும்*  தொண்டீர்! வம்மினே.  


    தொண்டீர்! வம்மின்*  நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்* 
    அண்டம் மூவுலகு அளந்தவன்*  அணி திருமோகூர்*

    எண் திசையும் ஈன்கரும்பொடு*  பெரும்செந்நெல் விளையக்* 
    கொண்ட கோயிலை வலஞ்செய்து*  இங்கு ஆடுதும் கூத்தே.


    கூத்தன் கோவலன்*  குதற்று வல்லசுரர்கள் கூற்றம்* 
    ஏத்தும் நங்கட்கும்*  அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*

    வாய்த்த தண்பணை வளவயல்சூழ்*  திருமோகூர்- 
    ஆத்தன்*  தாமரை அடிஅன்றி*  மற்றுஇலம் அரணே.        


    மற்றிலம் அரண்*  வான்பெரும் பாழ்தனி முதலாச்* 
    சுற்றும் நீர்படைத்து*  அதன்வழித் தொல்முனி முதலா*

    முற்றும் தேவரோடு*  உலகுசெய்வான் திருமோகூர்* 
    சுற்றிநாம் வலஞ்செய்ய*  நம் துயர்கெடும் கடிதே.


    துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து*  அடியவர் தொழுமின்* 
    உயர்கொள் சோலை*  ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*

    பெயர்கள் ஆயிரம்உடைய*  வல்லரக்கர் புக்குஅழுந்த* 
    தயரதன் பெற்ற*  மரகத மணித் தடத்தினையே.   


    மணித் தடத்தடி மலர்க்கண்கள்*  பவளச் செவ்வாய்* 
    அணிக்கொள் நால்தடம்தோள்*  தெய்வம் அசுரரை என்றும்*

    துணிக்கும் வல்அரட்டன்*  உறைபொழில் திருமோகூர்* 
    நணித்து நம்முடை நல்லரண்*  நாம் அடைந்தனமே.


    நாம்அடைந்த நல்அரண்*  நமக்குஎன்று நல்அமரர்* 
    தீமை செய்யும் வல்அசுரரை*  அஞ்சிச் சென்றுஅடைந்தால்*

    காமரூபம் கொண்டு*  எழுந்துஅளிப்பான் திருமோகூர்* 
    நாமமே நவின்று எண்ணுமின்*  ஏத்துமின் நமர்காள்! 


    ஏத்துமின் நமர்காள்*  என்றுதான் குடம்ஆடு- 
    கூத்தனைக்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*

    வாய்த்த ஆயிரத்துள் இவை*  வண் திருமோகூர்க்கு* 
    ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு*  இடர் கெடுமே.   (2)


    கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 
    கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*

    விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 
    தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே     (2)


    இன்றுபோய்ப் புகுதிராகில்*  எழுமையும் ஏதம்சாரா* 
    குன்றுநேர் மாடம்மாடே*  குருந்துசேர் செருந்திபுன்னை*

    மன்றலர் பொழில்*  அனந்தபுரநகர் மாயன்நாமம்*
    ஒன்றும்ஓர் ஆயிரமாம்*  உள்ளுவார்க்கு உம்பர்ஊரே


    ஊரும்புள் கொடியும் அஃதே*  உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தான்* 
    சேரும் தண்அனந்தபுரம்*  சிக்கெனப் புகுதிராகில்*

    தீரும்நோய் வினைகள்எல்லாம்*  திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* 
    பேரும் ஓர்ஆயிரத்துள்*  ஒன்றுநீர் பேசுமினே   


    பேசுமின் கூசம்இன்றி*  பெரியநீர் வேலைசூழ்ந்து* 
    வாசமே கமழும் சோலை*  வயலணிஅனந்தபுரம்*

    நேசம்செய்து உறைகின்றானை*  நெறிமையால் மலர்கள்தூவி* 
    பூசனை செய்கின்றார்கள்*  புண்ணியம் செய்தவாறே.   


    புண்ணியம் செய்து*  நல்ல புனலொடு மலர்கள்தூவி* 
    எண்ணுமின் எந்தைநாமம்*  இப்பிறப்புஅறுக்கும் அப்பால்*

    திண்ணம்நாம் அறியச்சொன்னோம்*  செறிபொழில் அனந்தபுரத்து* 
    அண்ணலார் கமலபாதம்*  அணுகுவார் அமரர்ஆவார் 


    அமரராய்த் திரிகின்றார்கட்கு*  ஆதிசேர் அனந்தபுரத்து* 
    அமரர்கோன் அர்ச்சிக்கின்று*  அங்குஅகப்பணி செய்வர் விண்ணோர்*

    நமர்களோ! சொல்லக்கேள்மின்*  நாமும்போய் நணுகவேண்டும்* 
    குமரனார் தாதை*  துன்பம் துடைத்த கோவிந்தனாரே


    துடைத்த கோவிந்தனாரே*  உலகுஉயிர் தேவும்மற்றும்* 
    படைத்த எம்பரமமூர்த்தி*  பாம்பணைப் பள்ளிகொண்டான்*

    மடைத்தலை வாளைபாயும்*  வயல்அணிஅனந்தபுரம்* 
    கடைத்தலை சீய்க்கப்பெற்றால்*  கடுவினை களையலாமே  


    கடுவினை களையலாகும்*  காமனைப் பயந்தகாளை* 
    இடவகை கொண்டதுஎன்பர்*  எழில்அணிஅனந்தபுரம்*

    படம்உடைஅரவில் பள்ளி*  பயின்றவன் பாதம்காண* 
    நடமினோ நமர்கள்உள்ளீர்!*  நாம் உமக்குஅறியச் சொன்னோம்.


    நாம் உமக்கு அறியச்சொன்ன*  நாள்களும் நணியஆன* 
    சேமம் நன்குஉடைத்துக்கண்டீர்*  செறிபொழில்அனந்தபுரம்*

    தூமநல் விரைமலர்கள்*  துவள்அற ஆய்ந்துகொண்டு* 
    வாமனன் அடிக்குஎன்று ஏத்த*  மாய்ந்துஅறும் வினைகள்தாமே.  


    மாய்ந்துஅறும் வினைகள்தாமே*  மாதவா என்ன நாளும்- 
    ஏய்ந்தபொன் மதிள்*  அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*

    சாந்தொடு விளக்கம்தூபம்*  தாமரை மலர்கள்நல்ல* 
    ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்*  அந்தம்இல் புகழினாரே. 


    அந்தம்இல் புகழ்*  அனந்தபுர நகர் ஆதிதன்னைக்* 
    கொந்துஅலர் பொழில்*  குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*

    ஐந்தினோடு ஐந்தும்வல்லார்*  அணைவர்போய் அமர்உலகில்* 
    பைந்தொடி மடந்தையர்தம்*  வேய்மரு தோள்இணையே.   (2)


    வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!*   மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்* 
    காமரு குயில்களும் கூவும் ஆலோ!*  கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*

    ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு*  ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ* 
    தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!*   தகவிலை தகவிலையே நீ கண்ணா!    (2)


    தகவிலை தகவிலையே நீ கண்ணா!*   தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்குஆராச்* 
    சுகவெள்ளம் விசும்புஇறந்து அறிவை மூழ்கச்-   சூழ்ந்து அதுகனவுஎன நீங்கி ஆங்கே*

    அகஉயிர் அகம்அகம்தோறும் உள்புக்கு*   ஆவியின் பரம்அல்ல வேட்கை அந்தோ* 
    மிகமிக இனி உன்னைப் பிரிவைஆமால்*   வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.


    வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு*   வெவ்வுயிர் கொண்டு எனதுஆவி வேமால்* 
    யாவரும் துணைஇல்லை யான் இருந்து*  உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*

    போவதுஅன்று ஒருபகல் நீஅகன்றால்*  பொருகயல் கண்இணை நீரும் நில்லா* 
    சாவது இவ்ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த*  இத் தொழுத்தையோம் தனிமை தானே.  


    தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்-  துயரமும் நினைகிலை கோவிந்தா நின்- 
    தொழுத்தனில் பசுக்களையே விரும்பி*   துறந்து எம்மைஇட்டு அவை மேய்க்கப் போதி*

    பழுத்த நல்அமுதின் இன்சாற்று வெள்ளம்*  பாவியேன் மனம்அகம்தோறும் உள்புக்கு- 
    அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*


    பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*  பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!* 
    பிணிஅவிழ் மல்லிகை வாடை தூவ*   பெருமத மாலையும் வந்தின்று ஆலோ!*

    மணிமிகு மார்பினில் முல்லைப் போது*  என்வனமுலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து 
    அணிமிகு தாமரைக் கையை அந்தோ!*  அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்  


    அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்*  ஆழிஅம் கண்ணா! உன் கோலப் பாதம்* 
    பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்  பலர் அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*

    வடித்தடம் கண்இணை நீரும் நில்லா*   மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே* 
    வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு*  வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கே. 


    வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கு*  வெள்வளை மேகலை கழன்று வீழ*
    தூமலர்க் கண்இணை முத்தம் சோர*  துணைமுலை பயந்து என தோள்கள் வாட*

    மாமணி வண்ணா! உன்செங்கமல  வண்ண*  மெல் மலரடி நோவ நீபோய்* 
    ஆமகிழ்ந்து உகந்துஅவை மேய்க்கின்று உன்னோடு*  அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 


    அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்குஎன்று*  ஆழும் என்ஆர்உயிர் ஆன்பின் போகேல்* 
    கசிகையும் வேட்கையும் உள்கலந்து*  கலவியும் நலியும் என்கை கழியேல்*

    வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்*  கைகளும் பீதக உடையும் காட்டி* 
    ஒசிசெய் நுண்இடைஇள ஆய்ச்சியர்நீ*  உகக்கும் நல்லவரொடும் உழிதராயே  


    உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்*  திருவுள்ளம் இடர்கெடும்தோறும்* நாங்கள்- 
    வியக்க இன்புறுதும் எம்பெண்மை ஆற்றோம்*  எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்*

    மிகப்பல அசுரர்கள் வேண்டுஉருவம் கொண்டு*  நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ* 
    அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே*  அவத்தங்கள் விளையும் என்சொல்கொள் அந்தோ!


    அவத்தங்கள் விளையும் என்சொல்கொள்அந்தோ!*  அசுரர்கள் வன்கையர் கஞ்சன்ஏவ* 
    தவத்தவர் மறுக நின்று உழிதருவர்* தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்- 

    உவர்த்தலை உடன்திரி கிலையும் என்றுஎன்று-  ஊடுற என்னுடை ஆவி வேமால்* 
    திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி*  செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவே! 


    செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவு*  அத்திருவடி திருவடிமேல்*  பொருநல்- 
    சங்குஅணி துறைவன் வண்தென் குருகூர்*  வண்சட கோபன் சொல் ஆயிரத்துள்*

    மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை*  அவனொடும் பிரிவதற்கு இரங்கி*  தையல்- 
    அங்குஅவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான்-  உரைத்தன*  இவையும் பத்து அவற்றின் சார்வே.   (2)


    சார்வே தவநெறிக்குத்*  தாமோதரன் தாள்கள்* 
    கார்மேக வண்ணன்*  கமல நயனத்தன்*

    நீர்வானம் மண்எரி கால்ஆய்*  நின்ற நேமியான்* 
    பேர் வானவர்கள்*  பிதற்றும் பெருமையனே.   (2)


    பெருமையனே வானத்து இமையோர்க்கும்*  காண்டற்கு- 
    அருமையனே*  ஆகத்தணை யாதார்க்கு*  என்றும்-

    திருமெய் உறைகின்ற*  செங்கண்மால்*  நாளும்- 
    இருமை வினைகடிந்து*  இங்கு என்னைஆள்கின்றானே.


    ஆள்கின்றான் ஆழியான்*  ஆரால் குறைவுஉடையம்?* 
    மீள்கின்றதுஇல்லை*  பிறவித் துயர்கடிந்தோம்*

    வாள்கெண்டை ஒண்கண்*  மடப்பின்னை தன்கேள்வன்* 
    தாள்கண்டு கொண்டு*  என் தலைமேல் புனைந்தேனே. 


    தலைமேல் புனைந்தேன்*  சரணங்கள்*  ஆலின்- 
    இலைமேல் துயின்றான்*  இமையோர் வணங்க*

    மலைமேல்தான் நின்று*  என்மனத்துள் இருந்தானை* 
    நிலைபேர்க்கல்ஆகாமை*  நிச்சித்துஇருந்தேனே.


    நிச்சித்துஇருந்தேன்*  என்நெஞ்சம் கழியாமை* 
    கைச்சக்கரத்துஅண்ணல்*  கள்வம் பெரிதுஉடையன்*

    மெச்சப்படான் பிறர்க்கு*  மெய்போலும் பொய்வல்லன்* 
    நச்சப்படும் நமக்கு*  நாகத்து அணையானே.  


    நாகத்து அணையானை*  நாள்தோறும் ஞானத்தால்* 
    ஆகத்தணைப் பார்க்கு*  அருள்செய்யும் அம்மானை*

    மாகத்து இளமதியம்*  சேரும் சடையானைப்* 
    பாகத்து வைத்தான் தன்*  பாதம் பணிந்தேனே.


    பணிநெஞ்சே! நாளும்*  பரம பரம்பரனை* 
    பிணிஒன்றும் சாரா*  பிறவி கெடுத்துஆளும்*

    மணிநின்ற சோதி*  மதுசூதன் என்அம்மான்* 
    அணிநின்ற செம்பொன்*  அடல்ஆழி யானே. 


    ஆழியான் ஆழி*  அமரர்க்கும் அப்பாலான்* 
    ஊழியான் ஊழி படைத்தான்*  நிரைமேய்த்தான்*

    பாழிஅம் தோளால்*  வரைஎடுத்தான் பாதங்கள்* 
    வாழி என்நெஞ்சே!*  மறவாது வாழ்கண்டாய்.


    கண்டேன் கமல மலர்ப்பாதம்*  காண்டலுமே* 
    விண்டே ஒழிந்த*  வினையாயின எல்லாம்*

    தொண்டேசெய்து என்றும்*  தொழுது வழியொழுக* 
    பண்டே பரமன் பணித்த*  பணிவகையே.  


    வகையால் மனம்ஒன்றி*  மாதவனை*  நாளும்- 
    புகையால் விளக்கால்*  புதுமலரால் நீரால்*

    திசைதோறு அமரர்கள்*  சென்று இறைஞ்ச நின்ற* 
    தகையான் சரணம்*  தமர்கட்குஓர் பற்றே.


    பற்றுஎன்று பற்றி*  பரம பரம்பரனை* 
    மல் திண்தோள் மாலை*  வழுதி வளநாடன்*

    சொல் தொடைஅந்தாதி*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    கற்றார்க்கு ஓர்பற்றாகும்*  கண்ணன் கழல்இணையே.   (2)


    கண்ணன் கழல்இணை*  நண்ணும் மனம்உடையீர்*

    எண்ணும் திருநாமம்*  திண்ணம் நாரணமே.  (2)


    நாரணன் எம்மான்*  பாரணங்காளன்*

    வாரணம் தொலைத்த*  காரணன் தானே.  


    தானே உலகுஎல்லாம்*  தானே படைத்துஇடந்து*

    தானே உண்டுஉமிழ்ந்து*  தானே ஆள்வானே.


    ஆள்வான் ஆழிநீர்க்*  கோள்வாய் அரவுஅணையான்*

    தாள்வாய் மலர்இட்டு*  நாள்வாய் நாடீரே. 


    நாடீர் நாள்தோறும்*  வாடா மலர்கொண்டு*

    பாடீர் அவன்நாமம்*  வீடே பெறலாமே.   


    மேயான் வேங்கடம்*  காயாமலர் வண்ணன்*

    பேயார் முலைஉண்ட*  வாயான் மாதவனே.   (2)


    மாதவன் என்றுஎன்று*  ஓத வல்லீரேல்*

    தீதுஒன்றும் அடையா*  ஏதம் சாராவே.


    சாரா ஏதங்கள்*  நீரார் முகில்வண்ணன்*

    பேர் ஆர் ஓதுவார்*  ஆரார் அமரரே.


    அமரர்க்கு அரியானை*  தமர்கட்கு எளியானை*

    அமரத் தொழுவார்கட்கு*  அமரா வினைகளே.


    வினைவல் இருள்என்னும்*  முனைகள் வெருவிப்போம்*

    சுனை நல் மலர்இட்டு*  நினைமின் நெடியானே.


    நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

    நொடி ஆயிரத்துஇப்பத்து  அடியார்க்கு அருள்பேறே  (2) 


    அருள்பெறுவார் அடியார் தம்*  அடியனேற்கு*  ஆழியான்- 
    அருள்தருவான் அமைகின்றான்*  அதுநமது விதிவகையே*

    இருள்தருமா ஞாலத்துள்*  இனிப்பிறவி யான்வேண்டேன்* 
    மருள்ஒழி நீமடநெஞ்சே!*  வாட்டாற்றான் அடிவணங்கே.   (2)


    வாட்டாற்றான் அடிவணங்கி*  மாஞாலப் பிறப்புஅறுப்பான்* 
    கேட்டாயே மடநெஞ்சே!*  கேசவன் எம் பெருமானைப்*

    பாட்டுஆய பலபாடி*  பழவினைகள் பற்றுஅறுத்து* 
    நாட்டாரோடு இயல்வுஒழிந்து*  நாரணனை நண்ணினமே.


    நண்ணினம் நாராயணனை*  நாமங்கள் பலசொல்லி* 
    மண்உலகில் வளம்மிக்க*  வாட்டாற்றான் வந்துஇன்று*

    விண்உலகம் தருவானாய்*  விரைகின்றான் விதிவகையே* 
    எண்ணின வாறுகா*  இக்கருமங்கள் என்நெஞ்சே!


    என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு*  இரும்தமிழ்நூல்இவைமொழிந்து* 
    வல்நெஞ்சத்து இரணியனை*  மார்வு இடந்த வாட்டாற்றான்*

    மன்னஞ்ச பாரதத்துப்*  பாண்டவர்க்காப் படை தொட்டான்* 
    நல்நெஞ்சே! நம்பெருமான்*  நமக்கு அருள்தான் செய்வானே.


    வான்ஏற வழிதந்த*  வாட்டாற்றான் பணிவகையே* 
    நான்ஏறப் பெறுகின்றேன்*  நரகத்தை நகுநெஞ்சே*

    தேன்ஏறு மலர்த்துளவம்*  திகழ்பாதன்*  செழும்பறவை- 
    தான்ஏறித் திரிவான*  தாள்இணை என்தலைமேலே 


    தலைமேல தாள்இணைகள்*  தாமரைக்கண் என்அம்மான்* 
    நிலைபேரான் எனநெஞ்சத்து*  எப்பொழுதும் எம்பெருமான்*

    மலைமாடத்து அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் மதம்மிக்க* 
    கொலையானை மருப்புஒசித்தான்*  குரைகழல்கள் குறுகினமே. 


    குரைகழல்கள் குறுகினம்*  நம் கோவிந்தன் குடிகொண்டான்* 
    திரைகுழுவு கடல்புடைசூழ்*  தென்நாட்டுத் திலதமன்ன*

    வரைகுழுவு மணிமாட*  வாட்டாற்றான் மலர்அடிமேல்* 
    விரைகுழுவு நறும்துளவம்*  மெய்ந்நின்று கமழுமே.


    மெய்ந்நின்று கமழ்துளவ*  விரைஏறு திருமுடியன்* 
    கைந்நின்ற சக்கரத்தன்*  கருதும்இடம் பொருதுபுனல்*

    மைந்நின்ற வரைபோலும்*  திருஉருவ வாட்டாற்றாற்கு* 
    எந்நன்றி செய்தேனா*  என்நெஞ்சில் திகழ்வதுவே? 


    திகழ்கின்ற திருமார்பில்*  திருமங்கை தன்னோடும்* 
    திகழ்கின்ற திருமாலார்*  சேர்விடம்தண் வாட்டாறு*

    புகழ்நின்ற புள்ஊர்தி*  போர்அரக்கர் குலம்கெடுத்தான்* 
    இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து*  எப்பொழுதும் பிரியானே. 


    பிரியாதுஆட் செய்என்று*  பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்* 
    அரியாகி இரணியனை*  ஆகம்கீண்டான் அன்று*

    பெரியார்க்கு ஆட்பட்டக்கால்*  பெறாதபயன் பெறுமாறு* 
    வரிவாள் வாய்அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் காட்டினனே.


    காட்டித்தன் கனைகழல்கள்*  கடுநரகம் புகல்ஒழித்த* 
    வாட்டாற்று எம்பெருமானை*  வளங்குருகூர்ச் சடகோபன்*

    பாட்டாய தமிழ்மாலை*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    கேட்டு ஆரார் வானவர்கள்*  செவிக்குஇனிய செஞ்சொல்லே.   (2)


    செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்*  திருமாலிருஞ்சோலை* 
    வஞ்சக் கள்வன் மாமாயன்*  மாயக் கவியாய் வந்து*  என்-

    நெஞ்சும் உயிரும் உள்கலந்து*  நின்றார் அறியா வண்ணம்*  என்- 
    நெஞ்சும் உயிரும் அவைஉண்டு*  தானே ஆகி நிறைந்தானே.   (2) 


    தானே ஆகி நிறைந்து*  எல்லாஉலகும் உயிரும் தானேஆய்* 
    தானே யான்என்பான்ஆகி*  தன்னைத் தானே துதித்து*  எனக்குத்-

    தேனே பாலே கன்னலே அமுதே*  திருமாலிருஞ்சோலைக்* 
    கோனே ஆகி நின்றொழிந்தான்*  என்னை முற்றும் உயிர்உண்டே.


    என்னை முற்றும் உயிர்உண்டு*  என் மாயஆக்கை இதனுள்புக்கு* 
    என்னை முற்றும் தானேஆய்*  நின்ற மாய அம்மான் சேர்*

    தென்நன் திருமாலிருஞ்சோலைத்*  திசைகை கூப்பிச் சேர்ந்தயான்* 
    இன்னும் போவேனே கொலோ!*  என்கொல் அம்மான் திருஅருளே?


    என்கொல் அம்மான் திருஅருள்கள்?*  உலகும் உயிரும் தானேயாய்*
    நன்கு என் உடலம் கைவிடான்*  ஞாலத்தூடே நடந்து உழக்கி*

    தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற*  திருமாலிருஞ்சோலை* 
    நங்கள் குன்றம் கைவிடான்*  நண்ணா அசுரர் நலியவே.


    நண்ணா அசுரர் நலிவுஎய்த*  நல்ல அமரர் பொலிவுஎய்த* 
    எண்ணாதனகள் எண்ணும்*  நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப*

    பண்ணார் பாடலின் கவிகள்*  யானாய்த் தன்னைத் தான்பாடி* 
    தென்னா என்னும் என்அம்மான்*  திருமாலிருஞ்சோலையானே.


    திருமாலிருஞ்சோலை யானேயாகி*  செழு மூவுலகும்*  தன்- 
    ஒருமா வயிற்றின்உள்ளே வைத்து*  ஊழி ஊழி தலையளிக்கும்*

    திருமால்என்னை ஆளும்மால்*  சிவனும் பிரமனும்காணாது* 
    அருமால் எய்தி அடிபரவ*  அருளை ஈந்த அம்மானே. 


    அருளை ஈ என்அம்மானே! என்னும்*  முக்கண் அம்மானும்* 
    தெருள்கொள் பிரமன்அம்மானும்*  தேவர் கோனும் தேவரும்*

    இருள்கள் கடியும் முனிவரும்*  ஏத்தும் அம்மான் திருமலை* 
    மருள்கள் கடியும் மணிமலை*  திருமாலிருஞ்சோலை மலையே.   


    திருமாலிருஞ்சோலை மலையே*  திருப்பாற் கடலே என்தலையே* 
    திருமால்வைகுந்தமே*  தண் திருவேங்கடமே எனதுஉடலே*

    அருமாமாயத்து எனதுஉயிரே*  மனமே வாக்கே கருமமே* 
    ஒருமா நொடியும் பிரியான்*  என் ஊழி முதல்வன் ஒருவனே.  (2)


    ஊழி முதல்வன் ஒருவனேஎன்னும்*  ஒருவன் உலகுஎல்லாம்* 
    ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து*  காத்து கெடுத்துஉழலும்*

    ஆழி வண்ணன் என்அம்மான்*  அம்தண் திருமாலிருஞ்சோலை* 
    வாழி மனமே! கைவிடேல்*  உடலும் உயிரும் மங்கஒட்டே. 


    மங்க ஒட்டு உன் மாமாயை*  திருமாலிருஞ்சோலைமேய* 
    நங்கள் கோனே! யானேநீஆகி*  என்னை அளித்தானே*

    பொங்குஐம் புலனும் பொறிஐந்தும்*  கருமேந்திரியம் ஐம்பூதம்* 
    இங்கு இவ்உயிர்ஏய் பிரகிருதி*  மான்ஆங்காரம் மனங்களே. 


    மான்ஆங்காரம் மனம்கெட*  ஐவர் வன்கையர் மங்க* 
    தான்ஆங்கார மாய்ப்புக்கு*  தானே தானே ஆனானைத்*

    தேனாங் காரப் பொழில்குருகூர்ச்*  சடகோபன் சொல்ஆயிரத்துள்* 
    மான்ஆங்காரத்துஇவை பத்தும்*  திருமாலிருஞ் சோலைமலைக்கே.  (2)


    திருமாலிருஞ்சோலை மலை*  என்றேன் என்ன* 
    திருமால்வந்து*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*

    குருமா மணிஉந்து புனல்*  பொன்னித் தென்பால்* 
    திருமால்சென்று சேர்விடம்*  தென் திருப்பேரே.   (2)


    பேரே உறைகின்ற பிரான்*  இன்று வந்து* 
    பேரேன்என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*

    கார்ஏழ் கடல்ஏழ்*  மலைஏழ் உலகு உண்டும்* 
    ஆராவயிற்றானை*  அடங்கப் பிடித்தேனே.


    பிடித்தேன் பிறவி கெடுத்தேன்*  பிணிசாரேன்* 
    மடித்தேன் மனைவாழ்க்கையுள்*  நிற்பதுஓர் மாயையை*

    கொடிக் கோபுரமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    அடிச்சேர்வது எனக்கு*  எளிதுஆயின வாறே.


    எளிதாயினவாறுஎன்று*  என்கண்கள் களிப்பக்* 
    களிதாகிய சிந்தையனாய்க்*  களிக்கின்றேன்*

    கிளிதாவிய சோலைகள்சூழ்*  திருப்பேரான்* 
    தெளிதாகிய*  சேண்விசும்பு தருவானே.


    வானே தருவான்*  எனக்காய் என்னோடுஒட்டி* 
    ஊன்ஏய் குரம்பை*  இதனுள் புகுந்து*  இன்று-

    தானே தடுமாற்ற*  வினைகள் தவிர்த்தான்* 
    தேனேய் பொழில்*  தென்திருப்பேர் நகரானே.


    திருப்பேர் நகரான்*  திருமாலிருஞ்சோலைப்* 
    பொருப்பே உறைகின்றபிரான்*  இன்றுவந்து*

    இருப்பேன் என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்* 
    விருப்பே பெற்று*  அமுதம்உண்டு களித்தேனே.  


    உண்டு களித்தேற்கு*  உம்பர்என் குறை*  மேலைத்- 
    தொண்டு உகளித்து*  அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*

    வண்டு களிக்கும் பொழில்சூழ்*  திருப்பேரான்* 
    கண்டு களிப்ப*  கண்ணுள்நின்று அகலானே.


    கண்ணுள் நின்று அகலான்*  கருத்தின்கண் பெரியன்* 
    எண்ணில்நுண் பொருள்*  ஏழ்இசையின் சுவைதானே*

    வண்ணநல் மணிமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    திண்ணம் என்மனத்துப்*  புகுந்தான் செறிந்துஇன்றே. 


    இன்று என்னைப் பொருளாக்கி*  தன்னை என்னுள் வைத்தான்* 
    அன்று என்னைப் புறம்போகப்*  புணர்த்தது என் செய்வான்?*

    குன்றுஎன்னத் திகழ்மாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    ஒன்று எனக்குஅருள்செய்ய*  உணர்த்தல்உற்றேனே. 


    உற்றேன் உகந்து பணிசெய்து*  உன்பாதம்- 
    பெற்றேன்*  ஈதே இன்னம்*  வேண்டுவது எந்தாய்*

    கற்றார் மறைவாணர்கள்சூழ்*  திருப்பேராற்கு* 
    அற்றார் அடியார் தமக்கு*  அல்லல் நில்லாவே.  (2)


    நில்லா அல்லல்*  நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்* 
    நல்லார் பலர்வாழ்*  குருகூர்ச் சடகோபன்*

    சொல்லார் தமிழ்*  ஆயிரத்துள் இவைபத்தும்- 
    வல்லார்*  தொண்டர்ஆள்வது*  சூழ்பொன் விசும்பே.  (2)


    சூழ்விசும் பணிமுகில்*  தூரியம் முழக்கின*  
    ஆழ்கடல் அலைதிரைக்*  கைஎடுத்து ஆடின*

    ஏழ்பொழிலும்*  வளம்ஏந்திய என்அப்பன்* 
    வாழ்புகழ் நாரணன்*  தமரைக் கண்டுஉகந்தே.  (2)


    நாரணன் தமரைக் கண்டுஉகந்து*  நல்நீர்முகில்* 
    பூரண பொன்குடம்*  பூரித்தது உயர்விண்ணில்*

    நீரணி கடல்கள்*  நின்றுஆர்த்தன*  நெடுவரைத்- 
    தோரணம் நிரைத்து*  எங்கும் தொழுதனர்உலகே.


    தொழுதனர் உலகர்கள்*  தூபநல் மலர்மழை- 
    பொழிவனர்*  பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே*

    எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்*  முனிவர்கள்* 
    வழிஇது வைகுந்தர்க்கு என்று*  வந்து எதிரே. 


    எதிர்எதிர் இமையவர்*  இருப்பிடம் வகுத்தனர்* 
    கதிரவர்அவரவர்*  கைந்நிரை காட்டினர்*

    அதிர்குரல் முரசங்கள்*  அலைகடல் முழக்குஒத்த* 
    மதுவிரி துழாய்முடி*  மாதவன் தமர்க்கே.


    மாதவன் தமர்என்று*  வாசலில் வானவர்* 
    போதுமின் எமதுஇடம்*  புகுதுக என்றலும்*

    கீதங்கள் பாடினர்*  கின்னரர் கெருடர்கள்* 
    வேதநல் வாயவர்*  வேள்விஉள் மடுத்தே.  


    வேள்விஉள் மடுத்தலும்*  விரைகமழ் நறும்புகை* 
    காளங்கள் வலம்புரி*  கலந்துஎங்கும் இசைத்தனர்*

    ஆள்மின்கள் வானகம்*  ஆழியான் தமர் என்று* 
    வாள்ஒண் கண்மடந்தையர்*  வாழ்த்தினர் மகிழ்ந்தே.


    மடந்தையர் வாழ்த்தலும்*  மருதரும் வசுக்களும்* 
    தொடர்ந்து எங்கும்*  தோத்திரம் சொல்லினர்*  தொடுகடல்-

    கிடந்த எம்கேசவன்*  கிளர்ஒளி மணிமுடி* 
    குடந்தை எம்கோவலன்*  குடிஅடி யார்க்கே


    குடிஅடியார் இவர்*  கோவிந்தன் தனக்குஎன்று* 
    முடிஉடை வானவர்*  முறைமுறை எதிர்கொள்ள*

    கொடிஅணி நெடுமதிள்*  கோபுரம் குறுகினர்* 
    வடிவுஉடை மாதவன்*  வைகுந்தம் புகவே.     


    வைகுந்தம் புகுதலும்*  வாசலில் வானவர்*  
    வைகுந்தன் தமர்எமர்*  எமதுஇடம் புகுதஎன்று*

    வைகுந்தத்து அமரரும்*  முனிவரும் வியந்தனர்* 
    வைகுந்தம் புகுவது*  மண்ணவர் விதியே.


    விதிவகை புகுந்தனர்என்று*  நல்வேதியர்* 
    பதியினில் பாங்கினில்*  பாதங்கள் கழுவினர்*

    நிதியும் நல்சுண்ணமும்*  நிறைகுட விளக்கமும்* 
    மதிமுக மடந்தையர்*  ஏந்தினர் வந்தே.


    வந்துஅவர் எதிர்கொள்ள*  மாமணி மண்டபத்து* 
    அந்தம்இல் பேரின்பத்து*  அடியரோடு இருந்தமை*

    கொந்துஅலர் பொழில்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்- 
    சந்தங்கள்ஆயிரத்து*  இவைவல்லார் முனிவரே.   (2)


    முனியே! நான்முகனே!*  முக்கண்ணப்பா*  என்பொல்லாக்- 
    கனிவாய்த்*  தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*

    தனியேன்ஆர்உயிரே!*  என்தலை மிசையாய் வந்திட்டு* 
    இனிநான் போகல்ஒட்டேன்*  ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே.   (2)


    மாயம்செய்யேல் என்னை*  உன்திருமார்வத்து மாலைநங்கை* 
    வாசம்செய் பூங்குழலாள்*  திருஆணை நின்ஆணை கண்டாய்*

    நேசம்செய்து உன்னோடு என்னை*  உயிர் வேறுஇன்றி ஒன்றாகவே* 
    கூசம்செய்யாது கொண்டாய்*  என்னைக்கூவிக் கொள்ளாய் வந்துஅந்தோ!


    கூவிக்கொள்ளாய் வந்துஅந்தோ!*  என்பொல்லாக் கருமாணிக்கமே!* 
    ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு*  நின்அலால் அறிகின்றி லேன்யான்*

    மேவித்தொழும் பிரமன் சிவன்*  இந்திரன் ஆதிக்குஎல்லாம்* 
    நாவிக் கமல முதல்கிழங்கே!*  உம்பர் அந்ததுவே.


    உம்பர்அம்தண் பாழேஓ!*  அதனுள்மிசை நீயேஓ* 
    அம்பரம் நல்சோதி!*  அதனுள் பிரமன் அரன் நீ*

    உம்பரும் யாதவரும் படைத்த*  முனிவன் அவன்நீ* 
    எம்பரம் சாதிக்கலுற்று*  என்னைப்போர விட்டிட்டாயே.  


    போரவிட்டிட்டு என்னை*  நீபுறம்போக்கலுற்றால்*  பின்னையான்- 
    ஆரைக்கொண்டு எத்தைஅந்தோ!*  எனதுஎன்பதுஎன்? யான்என்பதுஎன்?*

    தீர இரும்புஉண்ட நீரதுபோல*  என்ஆர்உயிரை- 
    ஆரப்பருக*  எனக்கு ஆராஅமுதுஆனாயே. 


    எனக்கு ஆராஅமுதாய்*  எனதுஆவியை இன்உயிரை* 
    மனக்குஆராமை மன்னி உண்டிட்டாய்*  இனிஉண்டொழியாய்*

    புனக்காயாநிறத்த*  புண்டரீகக்கண் செங்கனிவாய்* 
    உனக்குஏற்கும் கோலமலர்ப்பாவைக்கு*  அன்பா! என்அன்பேயோ!


    கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய*  என் அன்பேயோ* 
    நீலவரை இரண்டு பிறைகவ்வி*  நிமிர்ந்தது ஒப்ப*

    கோல வராகம்ஒன்றாய்*  நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்* 
    நீலக் கடல்கடைந்தாய்!*  உன்னைபெற்று இனிப் போக்குவனோ?  (2)


    பெற்றுஇனிப் போக்குவனோ*  உன்னை என் தனிப்பேருயிரை* 
    உற்ற இருவினையாய்*  உயிராய்ப் பயன் ஆவையாய்*

    முற்றஇம் மூவுலகும்*  பெரும்தூறுஆய் தூற்றில்புக்கு* 
    முற்றக் கரந்துஒளித்தாய்!*  என்முதல் தனிவித்தேயோ!


    முதல்தனி வித்தேயோ!*  முழுமூவுலகுஆதிக்கு எல்லாம்* 
    முதல்தனி உன்னைஉன்னை*  எனைநாள் வந்து கூடுவன்நான்?*

    முதல்தனி அங்கும்இங்கும்*  முழுமுற்றுறுவாழ் பாழாய்* 
    முதல்தனி சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவிலீஓ!   


    சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவில் பெரும் பாழேயோ* 
    சூழ்ந்ததனில் பெரிய*  பரநல் மலர்ச்சோதீயோ*

    சூழ்ந்ததனில் பெரிய*  சுடர்ஞான இன்பமேயோ!*
    சூழ்ந்ததனில் பெரிய*  என் அவாஅறச் சூழ்ந்தாயே!   (2)


    அவாஅறச் சூழ்*  அரியை அயனை அரனை அலற்றி* 
    அவாஅற்று வீடுபெற்ற*  குருகூர்ச் சடகோபன் சொன்ன*

    அவாஇல் அந்தாதிகளால்*  இவைஆயிரமும்*  முடிந்த- 
    அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்*  பிறந்தார் உயர்ந்தே.  (2)