பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
தாள தாமரைத்* தடம்அணி வயல் திருமோகூர்*
நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று* அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குஉடைச்* சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்*
காள மேகத்தை அன்றி* மற்றொன்றுஇலம் கதியே. (2)
இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்* ஈன்தண் துழாயின்*
அலங்கலங்கண்ணி* ஆயிரம் பேர்உடை அம்மான்*
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்* திருமோகூர்*
நலங்கழல் அவன் அடிநிழல்* தடமன்றி யாமே.
அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றுஎன்று அலற்றி*
நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*
வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்* திருமோகூர்*
நன்று நாம் இனி நணுகுதும்* நமதுஇடர் கெடவே.
இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்* என்றுஎன்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர்! வம்மினே.
தொண்டீர்! வம்மின்* நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்*
அண்டம் மூவுலகு அளந்தவன்* அணி திருமோகூர்*
எண் திசையும் ஈன்கரும்பொடு* பெரும்செந்நெல் விளையக்*
கொண்ட கோயிலை வலஞ்செய்து* இங்கு ஆடுதும் கூத்தே.
கூத்தன் கோவலன்* குதற்று வல்லசுரர்கள் கூற்றம்*
ஏத்தும் நங்கட்கும்* அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*
வாய்த்த தண்பணை வளவயல்சூழ்* திருமோகூர்-
ஆத்தன்* தாமரை அடிஅன்றி* மற்றுஇலம் அரணே.
மற்றிலம் அரண்* வான்பெரும் பாழ்தனி முதலாச்*
சுற்றும் நீர்படைத்து* அதன்வழித் தொல்முனி முதலா*
முற்றும் தேவரோடு* உலகுசெய்வான் திருமோகூர்*
சுற்றிநாம் வலஞ்செய்ய* நம் துயர்கெடும் கடிதே.
துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து* அடியவர் தொழுமின்*
உயர்கொள் சோலை* ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*
பெயர்கள் ஆயிரம்உடைய* வல்லரக்கர் புக்குஅழுந்த*
தயரதன் பெற்ற* மரகத மணித் தடத்தினையே.
மணித் தடத்தடி மலர்க்கண்கள்* பவளச் செவ்வாய்*
அணிக்கொள் நால்தடம்தோள்* தெய்வம் அசுரரை என்றும்*
துணிக்கும் வல்அரட்டன்* உறைபொழில் திருமோகூர்*
நணித்து நம்முடை நல்லரண்* நாம் அடைந்தனமே.
நாம்அடைந்த நல்அரண்* நமக்குஎன்று நல்அமரர்*
தீமை செய்யும் வல்அசுரரை* அஞ்சிச் சென்றுஅடைந்தால்*
காமரூபம் கொண்டு* எழுந்துஅளிப்பான் திருமோகூர்*
நாமமே நவின்று எண்ணுமின்* ஏத்துமின் நமர்காள்!
ஏத்துமின் நமர்காள்* என்றுதான் குடம்ஆடு-
கூத்தனைக்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*
வாய்த்த ஆயிரத்துள் இவை* வண் திருமோகூர்க்கு*
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு* இடர் கெடுமே. (2)
கெடும் இடர்ஆயஎல்லாம்* கேசவா என்ன* நாளும்
கொடுவினை செய்யும்* கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
விடம்உடை அரவில்பள்ளி* விரும்பினான் சுரும்பலற்றும்*
தடம்உடை வயல்* அனந்தபுரநகர் புகுதும்இன்றே (2)
இன்றுபோய்ப் புகுதிராகில்* எழுமையும் ஏதம்சாரா*
குன்றுநேர் மாடம்மாடே* குருந்துசேர் செருந்திபுன்னை*
மன்றலர் பொழில்* அனந்தபுரநகர் மாயன்நாமம்*
ஒன்றும்ஓர் ஆயிரமாம்* உள்ளுவார்க்கு உம்பர்ஊரே
ஊரும்புள் கொடியும் அஃதே* உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தான்*
சேரும் தண்அனந்தபுரம்* சிக்கெனப் புகுதிராகில்*
தீரும்நோய் வினைகள்எல்லாம்* திண்ணம்நாம் அறியச்சொன்னோம்*
பேரும் ஓர்ஆயிரத்துள்* ஒன்றுநீர் பேசுமினே
பேசுமின் கூசம்இன்றி* பெரியநீர் வேலைசூழ்ந்து*
வாசமே கமழும் சோலை* வயலணிஅனந்தபுரம்*
நேசம்செய்து உறைகின்றானை* நெறிமையால் மலர்கள்தூவி*
பூசனை செய்கின்றார்கள்* புண்ணியம் செய்தவாறே.
புண்ணியம் செய்து* நல்ல புனலொடு மலர்கள்தூவி*
எண்ணுமின் எந்தைநாமம்* இப்பிறப்புஅறுக்கும் அப்பால்*
திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* செறிபொழில் அனந்தபுரத்து*
அண்ணலார் கமலபாதம்* அணுகுவார் அமரர்ஆவார்
அமரராய்த் திரிகின்றார்கட்கு* ஆதிசேர் அனந்தபுரத்து*
அமரர்கோன் அர்ச்சிக்கின்று* அங்குஅகப்பணி செய்வர் விண்ணோர்*
நமர்களோ! சொல்லக்கேள்மின்* நாமும்போய் நணுகவேண்டும்*
குமரனார் தாதை* துன்பம் துடைத்த கோவிந்தனாரே
துடைத்த கோவிந்தனாரே* உலகுஉயிர் தேவும்மற்றும்*
படைத்த எம்பரமமூர்த்தி* பாம்பணைப் பள்ளிகொண்டான்*
மடைத்தலை வாளைபாயும்* வயல்அணிஅனந்தபுரம்*
கடைத்தலை சீய்க்கப்பெற்றால்* கடுவினை களையலாமே
கடுவினை களையலாகும்* காமனைப் பயந்தகாளை*
இடவகை கொண்டதுஎன்பர்* எழில்அணிஅனந்தபுரம்*
படம்உடைஅரவில் பள்ளி* பயின்றவன் பாதம்காண*
நடமினோ நமர்கள்உள்ளீர்!* நாம் உமக்குஅறியச் சொன்னோம்.
நாம் உமக்கு அறியச்சொன்ன* நாள்களும் நணியஆன*
சேமம் நன்குஉடைத்துக்கண்டீர்* செறிபொழில்அனந்தபுரம்*
தூமநல் விரைமலர்கள்* துவள்அற ஆய்ந்துகொண்டு*
வாமனன் அடிக்குஎன்று ஏத்த* மாய்ந்துஅறும் வினைகள்தாமே.
மாய்ந்துஅறும் வினைகள்தாமே* மாதவா என்ன நாளும்-
ஏய்ந்தபொன் மதிள்* அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*
சாந்தொடு விளக்கம்தூபம்* தாமரை மலர்கள்நல்ல*
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்* அந்தம்இல் புகழினாரே.
அந்தம்இல் புகழ்* அனந்தபுர நகர் ஆதிதன்னைக்*
கொந்துஅலர் பொழில்* குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*
ஐந்தினோடு ஐந்தும்வல்லார்* அணைவர்போய் அமர்உலகில்*
பைந்தொடி மடந்தையர்தம்* வேய்மரு தோள்இணையே. (2)
வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!* மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்*
காமரு குயில்களும் கூவும் ஆலோ!* கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*
ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு* ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ*
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!* தகவிலை தகவிலையே நீ கண்ணா! (2)
தகவிலை தகவிலையே நீ கண்ணா!* தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்குஆராச்*
சுகவெள்ளம் விசும்புஇறந்து அறிவை மூழ்கச்- சூழ்ந்து அதுகனவுஎன நீங்கி ஆங்கே*
அகஉயிர் அகம்அகம்தோறும் உள்புக்கு* ஆவியின் பரம்அல்ல வேட்கை அந்தோ*
மிகமிக இனி உன்னைப் பிரிவைஆமால்* வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.
வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு* வெவ்வுயிர் கொண்டு எனதுஆவி வேமால்*
யாவரும் துணைஇல்லை யான் இருந்து* உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*
போவதுஅன்று ஒருபகல் நீஅகன்றால்* பொருகயல் கண்இணை நீரும் நில்லா*
சாவது இவ்ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த* இத் தொழுத்தையோம் தனிமை தானே.
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்- துயரமும் நினைகிலை கோவிந்தா நின்-
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி* துறந்து எம்மைஇட்டு அவை மேய்க்கப் போதி*
பழுத்த நல்அமுதின் இன்சாற்று வெள்ளம்* பாவியேன் மனம்அகம்தோறும் உள்புக்கு-
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்* பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!*
பிணிஅவிழ் மல்லிகை வாடை தூவ* பெருமத மாலையும் வந்தின்று ஆலோ!*
மணிமிகு மார்பினில் முல்லைப் போது* என்வனமுலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து
அணிமிகு தாமரைக் கையை அந்தோ!* அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்
அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்* ஆழிஅம் கண்ணா! உன் கோலப் பாதம்*
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*
வடித்தடம் கண்இணை நீரும் நில்லா* மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே*
வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு* வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கே.
வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கு* வெள்வளை மேகலை கழன்று வீழ*
தூமலர்க் கண்இணை முத்தம் சோர* துணைமுலை பயந்து என தோள்கள் வாட*
மாமணி வண்ணா! உன்செங்கமல வண்ண* மெல் மலரடி நோவ நீபோய்*
ஆமகிழ்ந்து உகந்துஅவை மேய்க்கின்று உன்னோடு* அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே?
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்குஎன்று* ஆழும் என்ஆர்உயிர் ஆன்பின் போகேல்*
கசிகையும் வேட்கையும் உள்கலந்து* கலவியும் நலியும் என்கை கழியேல்*
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்* கைகளும் பீதக உடையும் காட்டி*
ஒசிசெய் நுண்இடைஇள ஆய்ச்சியர்நீ* உகக்கும் நல்லவரொடும் உழிதராயே
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்* திருவுள்ளம் இடர்கெடும்தோறும்* நாங்கள்-
வியக்க இன்புறுதும் எம்பெண்மை ஆற்றோம்* எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்*
மிகப்பல அசுரர்கள் வேண்டுஉருவம் கொண்டு* நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ*
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே* அவத்தங்கள் விளையும் என்சொல்கொள் அந்தோ!
அவத்தங்கள் விளையும் என்சொல்கொள்அந்தோ!* அசுரர்கள் வன்கையர் கஞ்சன்ஏவ*
தவத்தவர் மறுக நின்று உழிதருவர்* தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்-
உவர்த்தலை உடன்திரி கிலையும் என்றுஎன்று- ஊடுற என்னுடை ஆவி வேமால்*
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி* செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவே!
செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவு* அத்திருவடி திருவடிமேல்* பொருநல்-
சங்குஅணி துறைவன் வண்தென் குருகூர்* வண்சட கோபன் சொல் ஆயிரத்துள்*
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை* அவனொடும் பிரிவதற்கு இரங்கி* தையல்-
அங்குஅவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான்- உரைத்தன* இவையும் பத்து அவற்றின் சார்வே. (2)
சார்வே தவநெறிக்குத்* தாமோதரன் தாள்கள்*
கார்மேக வண்ணன்* கமல நயனத்தன்*
நீர்வானம் மண்எரி கால்ஆய்* நின்ற நேமியான்*
பேர் வானவர்கள்* பிதற்றும் பெருமையனே. (2)
பெருமையனே வானத்து இமையோர்க்கும்* காண்டற்கு-
அருமையனே* ஆகத்தணை யாதார்க்கு* என்றும்-
திருமெய் உறைகின்ற* செங்கண்மால்* நாளும்-
இருமை வினைகடிந்து* இங்கு என்னைஆள்கின்றானே.
ஆள்கின்றான் ஆழியான்* ஆரால் குறைவுஉடையம்?*
மீள்கின்றதுஇல்லை* பிறவித் துயர்கடிந்தோம்*
வாள்கெண்டை ஒண்கண்* மடப்பின்னை தன்கேள்வன்*
தாள்கண்டு கொண்டு* என் தலைமேல் புனைந்தேனே.
தலைமேல் புனைந்தேன்* சரணங்கள்* ஆலின்-
இலைமேல் துயின்றான்* இமையோர் வணங்க*
மலைமேல்தான் நின்று* என்மனத்துள் இருந்தானை*
நிலைபேர்க்கல்ஆகாமை* நிச்சித்துஇருந்தேனே.
நிச்சித்துஇருந்தேன்* என்நெஞ்சம் கழியாமை*
கைச்சக்கரத்துஅண்ணல்* கள்வம் பெரிதுஉடையன்*
மெச்சப்படான் பிறர்க்கு* மெய்போலும் பொய்வல்லன்*
நச்சப்படும் நமக்கு* நாகத்து அணையானே.
நாகத்து அணையானை* நாள்தோறும் ஞானத்தால்*
ஆகத்தணைப் பார்க்கு* அருள்செய்யும் அம்மானை*
மாகத்து இளமதியம்* சேரும் சடையானைப்*
பாகத்து வைத்தான் தன்* பாதம் பணிந்தேனே.
பணிநெஞ்சே! நாளும்* பரம பரம்பரனை*
பிணிஒன்றும் சாரா* பிறவி கெடுத்துஆளும்*
மணிநின்ற சோதி* மதுசூதன் என்அம்மான்*
அணிநின்ற செம்பொன்* அடல்ஆழி யானே.
ஆழியான் ஆழி* அமரர்க்கும் அப்பாலான்*
ஊழியான் ஊழி படைத்தான்* நிரைமேய்த்தான்*
பாழிஅம் தோளால்* வரைஎடுத்தான் பாதங்கள்*
வாழி என்நெஞ்சே!* மறவாது வாழ்கண்டாய்.
கண்டேன் கமல மலர்ப்பாதம்* காண்டலுமே*
விண்டே ஒழிந்த* வினையாயின எல்லாம்*
தொண்டேசெய்து என்றும்* தொழுது வழியொழுக*
பண்டே பரமன் பணித்த* பணிவகையே.
வகையால் மனம்ஒன்றி* மாதவனை* நாளும்-
புகையால் விளக்கால்* புதுமலரால் நீரால்*
திசைதோறு அமரர்கள்* சென்று இறைஞ்ச நின்ற*
தகையான் சரணம்* தமர்கட்குஓர் பற்றே.
பற்றுஎன்று பற்றி* பரம பரம்பரனை*
மல் திண்தோள் மாலை* வழுதி வளநாடன்*
சொல் தொடைஅந்தாதி* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
கற்றார்க்கு ஓர்பற்றாகும்* கண்ணன் கழல்இணையே. (2)
கண்ணன் கழல்இணை* நண்ணும் மனம்உடையீர்*
எண்ணும் திருநாமம்* திண்ணம் நாரணமே. (2)
நாரணன் எம்மான்* பாரணங்காளன்*
வாரணம் தொலைத்த* காரணன் தானே.
தானே உலகுஎல்லாம்* தானே படைத்துஇடந்து*
தானே உண்டுஉமிழ்ந்து* தானே ஆள்வானே.
ஆள்வான் ஆழிநீர்க்* கோள்வாய் அரவுஅணையான்*
தாள்வாய் மலர்இட்டு* நாள்வாய் நாடீரே.
நாடீர் நாள்தோறும்* வாடா மலர்கொண்டு*
பாடீர் அவன்நாமம்* வீடே பெறலாமே.
மேயான் வேங்கடம்* காயாமலர் வண்ணன்*
பேயார் முலைஉண்ட* வாயான் மாதவனே. (2)
மாதவன் என்றுஎன்று* ஓத வல்லீரேல்*
தீதுஒன்றும் அடையா* ஏதம் சாராவே.
சாரா ஏதங்கள்* நீரார் முகில்வண்ணன்*
பேர் ஆர் ஓதுவார்* ஆரார் அமரரே.
அமரர்க்கு அரியானை* தமர்கட்கு எளியானை*
அமரத் தொழுவார்கட்கு* அமரா வினைகளே.
வினைவல் இருள்என்னும்* முனைகள் வெருவிப்போம்*
சுனை நல் மலர்இட்டு* நினைமின் நெடியானே.
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்துஇப்பத்து அடியார்க்கு அருள்பேறே (2)
அருள்பெறுவார் அடியார் தம்* அடியனேற்கு* ஆழியான்-
அருள்தருவான் அமைகின்றான்* அதுநமது விதிவகையே*
இருள்தருமா ஞாலத்துள்* இனிப்பிறவி யான்வேண்டேன்*
மருள்ஒழி நீமடநெஞ்சே!* வாட்டாற்றான் அடிவணங்கே. (2)
வாட்டாற்றான் அடிவணங்கி* மாஞாலப் பிறப்புஅறுப்பான்*
கேட்டாயே மடநெஞ்சே!* கேசவன் எம் பெருமானைப்*
பாட்டுஆய பலபாடி* பழவினைகள் பற்றுஅறுத்து*
நாட்டாரோடு இயல்வுஒழிந்து* நாரணனை நண்ணினமே.
நண்ணினம் நாராயணனை* நாமங்கள் பலசொல்லி*
மண்உலகில் வளம்மிக்க* வாட்டாற்றான் வந்துஇன்று*
விண்உலகம் தருவானாய்* விரைகின்றான் விதிவகையே*
எண்ணின வாறுகா* இக்கருமங்கள் என்நெஞ்சே!
என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு* இரும்தமிழ்நூல்இவைமொழிந்து*
வல்நெஞ்சத்து இரணியனை* மார்வு இடந்த வாட்டாற்றான்*
மன்னஞ்ச பாரதத்துப்* பாண்டவர்க்காப் படை தொட்டான்*
நல்நெஞ்சே! நம்பெருமான்* நமக்கு அருள்தான் செய்வானே.
வான்ஏற வழிதந்த* வாட்டாற்றான் பணிவகையே*
நான்ஏறப் பெறுகின்றேன்* நரகத்தை நகுநெஞ்சே*
தேன்ஏறு மலர்த்துளவம்* திகழ்பாதன்* செழும்பறவை-
தான்ஏறித் திரிவான* தாள்இணை என்தலைமேலே
தலைமேல தாள்இணைகள்* தாமரைக்கண் என்அம்மான்*
நிலைபேரான் எனநெஞ்சத்து* எப்பொழுதும் எம்பெருமான்*
மலைமாடத்து அரவுஅணைமேல்* வாட்டாற்றான் மதம்மிக்க*
கொலையானை மருப்புஒசித்தான்* குரைகழல்கள் குறுகினமே.
குரைகழல்கள் குறுகினம்* நம் கோவிந்தன் குடிகொண்டான்*
திரைகுழுவு கடல்புடைசூழ்* தென்நாட்டுத் திலதமன்ன*
வரைகுழுவு மணிமாட* வாட்டாற்றான் மலர்அடிமேல்*
விரைகுழுவு நறும்துளவம்* மெய்ந்நின்று கமழுமே.
மெய்ந்நின்று கமழ்துளவ* விரைஏறு திருமுடியன்*
கைந்நின்ற சக்கரத்தன்* கருதும்இடம் பொருதுபுனல்*
மைந்நின்ற வரைபோலும்* திருஉருவ வாட்டாற்றாற்கு*
எந்நன்றி செய்தேனா* என்நெஞ்சில் திகழ்வதுவே?
திகழ்கின்ற திருமார்பில்* திருமங்கை தன்னோடும்*
திகழ்கின்ற திருமாலார்* சேர்விடம்தண் வாட்டாறு*
புகழ்நின்ற புள்ஊர்தி* போர்அரக்கர் குலம்கெடுத்தான்*
இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து* எப்பொழுதும் பிரியானே.
பிரியாதுஆட் செய்என்று* பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்*
அரியாகி இரணியனை* ஆகம்கீண்டான் அன்று*
பெரியார்க்கு ஆட்பட்டக்கால்* பெறாதபயன் பெறுமாறு*
வரிவாள் வாய்அரவுஅணைமேல்* வாட்டாற்றான் காட்டினனே.
காட்டித்தன் கனைகழல்கள்* கடுநரகம் புகல்ஒழித்த*
வாட்டாற்று எம்பெருமானை* வளங்குருகூர்ச் சடகோபன்*
பாட்டாய தமிழ்மாலை* ஆயிரத்துள் இப்பத்தும்-
கேட்டு ஆரார் வானவர்கள்* செவிக்குஇனிய செஞ்சொல்லே. (2)
செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்* திருமாலிருஞ்சோலை*
வஞ்சக் கள்வன் மாமாயன்* மாயக் கவியாய் வந்து* என்-
நெஞ்சும் உயிரும் உள்கலந்து* நின்றார் அறியா வண்ணம்* என்-
நெஞ்சும் உயிரும் அவைஉண்டு* தானே ஆகி நிறைந்தானே. (2)
தானே ஆகி நிறைந்து* எல்லாஉலகும் உயிரும் தானேஆய்*
தானே யான்என்பான்ஆகி* தன்னைத் தானே துதித்து* எனக்குத்-
தேனே பாலே கன்னலே அமுதே* திருமாலிருஞ்சோலைக்*
கோனே ஆகி நின்றொழிந்தான்* என்னை முற்றும் உயிர்உண்டே.
என்னை முற்றும் உயிர்உண்டு* என் மாயஆக்கை இதனுள்புக்கு*
என்னை முற்றும் தானேஆய்* நின்ற மாய அம்மான் சேர்*
தென்நன் திருமாலிருஞ்சோலைத்* திசைகை கூப்பிச் சேர்ந்தயான்*
இன்னும் போவேனே கொலோ!* என்கொல் அம்மான் திருஅருளே?
என்கொல் அம்மான் திருஅருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கு என் உடலம் கைவிடான்* ஞாலத்தூடே நடந்து உழக்கி*
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே.
நண்ணா அசுரர் நலிவுஎய்த* நல்ல அமரர் பொலிவுஎய்த*
எண்ணாதனகள் எண்ணும்* நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப*
பண்ணார் பாடலின் கவிகள்* யானாய்த் தன்னைத் தான்பாடி*
தென்னா என்னும் என்அம்மான்* திருமாலிருஞ்சோலையானே.
திருமாலிருஞ்சோலை யானேயாகி* செழு மூவுலகும்* தன்-
ஒருமா வயிற்றின்உள்ளே வைத்து* ஊழி ஊழி தலையளிக்கும்*
திருமால்என்னை ஆளும்மால்* சிவனும் பிரமனும்காணாது*
அருமால் எய்தி அடிபரவ* அருளை ஈந்த அம்மானே.
அருளை ஈ என்அம்மானே! என்னும்* முக்கண் அம்மானும்*
தெருள்கொள் பிரமன்அம்மானும்* தேவர் கோனும் தேவரும்*
இருள்கள் கடியும் முனிவரும்* ஏத்தும் அம்மான் திருமலை*
மருள்கள் கடியும் மணிமலை* திருமாலிருஞ்சோலை மலையே.
திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனதுஉடலே*
அருமாமாயத்து எனதுஉயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒருமா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2)
ஊழி முதல்வன் ஒருவனேஎன்னும்* ஒருவன் உலகுஎல்லாம்*
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து* காத்து கெடுத்துஉழலும்*
ஆழி வண்ணன் என்அம்மான்* அம்தண் திருமாலிருஞ்சோலை*
வாழி மனமே! கைவிடேல்* உடலும் உயிரும் மங்கஒட்டே.
மங்க ஒட்டு உன் மாமாயை* திருமாலிருஞ்சோலைமேய*
நங்கள் கோனே! யானேநீஆகி* என்னை அளித்தானே*
பொங்குஐம் புலனும் பொறிஐந்தும்* கருமேந்திரியம் ஐம்பூதம்*
இங்கு இவ்உயிர்ஏய் பிரகிருதி* மான்ஆங்காரம் மனங்களே.
மான்ஆங்காரம் மனம்கெட* ஐவர் வன்கையர் மங்க*
தான்ஆங்கார மாய்ப்புக்கு* தானே தானே ஆனானைத்*
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்* சடகோபன் சொல்ஆயிரத்துள்*
மான்ஆங்காரத்துஇவை பத்தும்* திருமாலிருஞ் சோலைமலைக்கே. (2)
திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால்வந்து* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
குருமா மணிஉந்து புனல்* பொன்னித் தென்பால்*
திருமால்சென்று சேர்விடம்* தென் திருப்பேரே. (2)
பேரே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
பேரேன்என்று* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
கார்ஏழ் கடல்ஏழ்* மலைஏழ் உலகு உண்டும்*
ஆராவயிற்றானை* அடங்கப் பிடித்தேனே.
பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பிணிசாரேன்*
மடித்தேன் மனைவாழ்க்கையுள்* நிற்பதுஓர் மாயையை*
கொடிக் கோபுரமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
அடிச்சேர்வது எனக்கு* எளிதுஆயின வாறே.
எளிதாயினவாறுஎன்று* என்கண்கள் களிப்பக்*
களிதாகிய சிந்தையனாய்க்* களிக்கின்றேன்*
கிளிதாவிய சோலைகள்சூழ்* திருப்பேரான்*
தெளிதாகிய* சேண்விசும்பு தருவானே.
வானே தருவான்* எனக்காய் என்னோடுஒட்டி*
ஊன்ஏய் குரம்பை* இதனுள் புகுந்து* இன்று-
தானே தடுமாற்ற* வினைகள் தவிர்த்தான்*
தேனேய் பொழில்* தென்திருப்பேர் நகரானே.
திருப்பேர் நகரான்* திருமாலிருஞ்சோலைப்*
பொருப்பே உறைகின்றபிரான்* இன்றுவந்து*
இருப்பேன் என்று* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
விருப்பே பெற்று* அமுதம்உண்டு களித்தேனே.
உண்டு களித்தேற்கு* உம்பர்என் குறை* மேலைத்-
தொண்டு உகளித்து* அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*
வண்டு களிக்கும் பொழில்சூழ்* திருப்பேரான்*
கண்டு களிப்ப* கண்ணுள்நின்று அகலானே.
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின்கண் பெரியன்*
எண்ணில்நுண் பொருள்* ஏழ்இசையின் சுவைதானே*
வண்ணநல் மணிமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என்மனத்துப்* புகுந்தான் செறிந்துஇன்றே.
இன்று என்னைப் பொருளாக்கி* தன்னை என்னுள் வைத்தான்*
அன்று என்னைப் புறம்போகப்* புணர்த்தது என் செய்வான்?*
குன்றுஎன்னத் திகழ்மாடங்கள்சூழ்* திருப்பேரான்*
ஒன்று எனக்குஅருள்செய்ய* உணர்த்தல்உற்றேனே.
உற்றேன் உகந்து பணிசெய்து* உன்பாதம்-
பெற்றேன்* ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்சூழ்* திருப்பேராற்கு*
அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே. (2)
நில்லா அல்லல்* நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்*
நல்லார் பலர்வாழ்* குருகூர்ச் சடகோபன்*
சொல்லார் தமிழ்* ஆயிரத்துள் இவைபத்தும்-
வல்லார்* தொண்டர்ஆள்வது* சூழ்பொன் விசும்பே. (2)
சூழ்விசும் பணிமுகில்* தூரியம் முழக்கின*
ஆழ்கடல் அலைதிரைக்* கைஎடுத்து ஆடின*
ஏழ்பொழிலும்* வளம்ஏந்திய என்அப்பன்*
வாழ்புகழ் நாரணன்* தமரைக் கண்டுஉகந்தே. (2)
நாரணன் தமரைக் கண்டுஉகந்து* நல்நீர்முகில்*
பூரண பொன்குடம்* பூரித்தது உயர்விண்ணில்*
நீரணி கடல்கள்* நின்றுஆர்த்தன* நெடுவரைத்-
தோரணம் நிரைத்து* எங்கும் தொழுதனர்உலகே.
தொழுதனர் உலகர்கள்* தூபநல் மலர்மழை-
பொழிவனர்* பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே*
எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்* முனிவர்கள்*
வழிஇது வைகுந்தர்க்கு என்று* வந்து எதிரே.
எதிர்எதிர் இமையவர்* இருப்பிடம் வகுத்தனர்*
கதிரவர்அவரவர்* கைந்நிரை காட்டினர்*
அதிர்குரல் முரசங்கள்* அலைகடல் முழக்குஒத்த*
மதுவிரி துழாய்முடி* மாதவன் தமர்க்கே.
மாதவன் தமர்என்று* வாசலில் வானவர்*
போதுமின் எமதுஇடம்* புகுதுக என்றலும்*
கீதங்கள் பாடினர்* கின்னரர் கெருடர்கள்*
வேதநல் வாயவர்* வேள்விஉள் மடுத்தே.
வேள்விஉள் மடுத்தலும்* விரைகமழ் நறும்புகை*
காளங்கள் வலம்புரி* கலந்துஎங்கும் இசைத்தனர்*
ஆள்மின்கள் வானகம்* ஆழியான் தமர் என்று*
வாள்ஒண் கண்மடந்தையர்* வாழ்த்தினர் மகிழ்ந்தே.
மடந்தையர் வாழ்த்தலும்* மருதரும் வசுக்களும்*
தொடர்ந்து எங்கும்* தோத்திரம் சொல்லினர்* தொடுகடல்-
கிடந்த எம்கேசவன்* கிளர்ஒளி மணிமுடி*
குடந்தை எம்கோவலன்* குடிஅடி யார்க்கே
குடிஅடியார் இவர்* கோவிந்தன் தனக்குஎன்று*
முடிஉடை வானவர்* முறைமுறை எதிர்கொள்ள*
கொடிஅணி நெடுமதிள்* கோபுரம் குறுகினர்*
வடிவுஉடை மாதவன்* வைகுந்தம் புகவே.
வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதுஇடம் புகுதஎன்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே.
விதிவகை புகுந்தனர்என்று* நல்வேதியர்*
பதியினில் பாங்கினில்* பாதங்கள் கழுவினர்*
நிதியும் நல்சுண்ணமும்* நிறைகுட விளக்கமும்*
மதிமுக மடந்தையர்* ஏந்தினர் வந்தே.
வந்துஅவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம்இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்துஅலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-
சந்தங்கள்ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே. (2)
முனியே! நான்முகனே!* முக்கண்ணப்பா* என்பொல்லாக்-
கனிவாய்த்* தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*
தனியேன்ஆர்உயிரே!* என்தலை மிசையாய் வந்திட்டு*
இனிநான் போகல்ஒட்டேன்* ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே. (2)
மாயம்செய்யேல் என்னை* உன்திருமார்வத்து மாலைநங்கை*
வாசம்செய் பூங்குழலாள்* திருஆணை நின்ஆணை கண்டாய்*
நேசம்செய்து உன்னோடு என்னை* உயிர் வேறுஇன்றி ஒன்றாகவே*
கூசம்செய்யாது கொண்டாய்* என்னைக்கூவிக் கொள்ளாய் வந்துஅந்தோ!
கூவிக்கொள்ளாய் வந்துஅந்தோ!* என்பொல்லாக் கருமாணிக்கமே!*
ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு* நின்அலால் அறிகின்றி லேன்யான்*
மேவித்தொழும் பிரமன் சிவன்* இந்திரன் ஆதிக்குஎல்லாம்*
நாவிக் கமல முதல்கிழங்கே!* உம்பர் அந்ததுவே.
உம்பர்அம்தண் பாழேஓ!* அதனுள்மிசை நீயேஓ*
அம்பரம் நல்சோதி!* அதனுள் பிரமன் அரன் நீ*
உம்பரும் யாதவரும் படைத்த* முனிவன் அவன்நீ*
எம்பரம் சாதிக்கலுற்று* என்னைப்போர விட்டிட்டாயே.
போரவிட்டிட்டு என்னை* நீபுறம்போக்கலுற்றால்* பின்னையான்-
ஆரைக்கொண்டு எத்தைஅந்தோ!* எனதுஎன்பதுஎன்? யான்என்பதுஎன்?*
தீர இரும்புஉண்ட நீரதுபோல* என்ஆர்உயிரை-
ஆரப்பருக* எனக்கு ஆராஅமுதுஆனாயே.
எனக்கு ஆராஅமுதாய்* எனதுஆவியை இன்உயிரை*
மனக்குஆராமை மன்னி உண்டிட்டாய்* இனிஉண்டொழியாய்*
புனக்காயாநிறத்த* புண்டரீகக்கண் செங்கனிவாய்*
உனக்குஏற்கும் கோலமலர்ப்பாவைக்கு* அன்பா! என்அன்பேயோ!
கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய* என் அன்பேயோ*
நீலவரை இரண்டு பிறைகவ்வி* நிமிர்ந்தது ஒப்ப*
கோல வராகம்ஒன்றாய்* நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்*
நீலக் கடல்கடைந்தாய்!* உன்னைபெற்று இனிப் போக்குவனோ? (2)
பெற்றுஇனிப் போக்குவனோ* உன்னை என் தனிப்பேருயிரை*
உற்ற இருவினையாய்* உயிராய்ப் பயன் ஆவையாய்*
முற்றஇம் மூவுலகும்* பெரும்தூறுஆய் தூற்றில்புக்கு*
முற்றக் கரந்துஒளித்தாய்!* என்முதல் தனிவித்தேயோ!
முதல்தனி வித்தேயோ!* முழுமூவுலகுஆதிக்கு எல்லாம்*
முதல்தனி உன்னைஉன்னை* எனைநாள் வந்து கூடுவன்நான்?*
முதல்தனி அங்கும்இங்கும்* முழுமுற்றுறுவாழ் பாழாய்*
முதல்தனி சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவிலீஓ!
சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவில் பெரும் பாழேயோ*
சூழ்ந்ததனில் பெரிய* பரநல் மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில் பெரிய* சுடர்ஞான இன்பமேயோ!*
சூழ்ந்ததனில் பெரிய* என் அவாஅறச் சூழ்ந்தாயே! (2)
அவாஅறச் சூழ்* அரியை அயனை அரனை அலற்றி*
அவாஅற்று வீடுபெற்ற* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
அவாஇல் அந்தாதிகளால்* இவைஆயிரமும்* முடிந்த-
அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்* பிறந்தார் உயர்ந்தே. (2)