பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    கொண்ட பெண்டிர் மக்கள்உற்றார்*  சுற்றத்தவர் பிறரும்* 
    கண்டதோடு பட்டதுஅல்லால்*  காதல்மற்றுயாதும்இல்லை*

    எண்திசையும் கீழும்மேலும்*  முற்றவும் உண்டபிரான்* 
    தொண்டரோமாய் உய்யலல்லால்*  இல்லைகண்டீர் துணையே  (2)


    துணையும் சார்வும்ஆகுவார்போல்*  சுற்றத்தவர்பிறரும்* 
    அணையவந்த ஆக்கம்உண்டேல்*  அட்டைகள்போல் சுவைப்பர்*

    கணைஒன்றாலே ஏழ்மரமும் எய்த*  எம்கார்முகிலைப்* 
    புணைஎன்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர்பொருளே.  


    பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்*  போற்றிஎன்றுஏற்றுஎழுவர்* 
    இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்*  என்னே என்பாரும்இல்லை*

    மருள்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப் பிறந்தாற்கு* 
    அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர்அரணே.


    அரணம்ஆவர் அற்றகாலைக்கு*  என்றென்று அமைக்கப்பட்டார்* 
    இரணம்கொண்ட தெப்பர்ஆவர்*  இன்றியிட்டாலும் அஃதே*

    வருணித்துஎன்னே?*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
    சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர் சதிரே. 


    சதுரம்என்று தம்மைத்தாமே*  சம்மதித்து இன்மொழியார்* 
    மதுரபோகம் துற்றவரே*  வைகிமற்றுஒன்றுஉறுவர்*

    அதிர்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப்பிறந்தாற்கு* 
    எதிர்கொள்ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர் இன்பமே. 


    இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!*  உள்ளது நினையாதே* 
    தொல்லையார்கள் எத்தனைவர்*  தோன்றிக் கழிந்தொழிந்தார்?*

    மல்லை மூதூர்*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
    சொல்லிஉய்யப் போகல்அல்லால்*  மற்றொன்றுஇல்லைசுருக்கே.


    மற்றொன்றுஇல்லை சுருங்கச்சொன்னோம்*  மாநிலத்துஎவ்உயிர்க்கும்* 
    சிற்றவேண்டா சிந்திப்பேஅமையும்*  கண்டீர்கள்அந்தோ!*

    குற்றம்அன்றுஎங்கள் பெற்றத்தாயன்*  வடமதுரைப்பிறந்தான்* 
    குற்றம்இல்சீர் கற்றுவைகல்*  வாழ்தல்கண்டீர்குணமே. 


    வாழ்தல்கண்டீர் குணம்இது அந்தோ!*  மாயவன் அடிபரவிப்* 
    போழ்துபோக உள்ளகிற்கும்*  புன்மைஇலாதவர்க்கு*

    வாழ்துணையா*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
    வீழ்துணையாப் போம்இதனில்*  யாதும்இல்லைமிக்கதே. 


    யாதும்இல்லை மிக்குஅதனில்*  என்றுஎன்று அதுகருதி* 
    காதுசெய்வான் கூதைசெய்து*  கடைமுறை வாழ்க்கையும்போம்*

    மாதுகிலின் கொடிக்கொள்மாட*  வடமதுரைப்பிறந்த* 
    தாதுசேர்தோள் கண்ணன் அல்லால்*  இல்லை கண்டீர் சரணே.


    கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்*  சரண்அதுநிற்கவந்து* 
    மண்ணின் பாரம் நீக்குதற்கே*  வடமதுரைப்பிறந்தான்*

    திண்ணமாநும் உடைமை உண்டேல்*  அவன்அடி சேர்த்துஉய்ம்மினோ* 
    எண்ணவேண்டா நும்மதுஆதும்*  அவன்அன்றிமற்றுஇல்லையே.


    ஆதும்இல்லை மற்றுஅவனில்*  என்றுஅதுவே துணிந்து* 
    தாதுசேர்தோள் கண்ணனைக்*  குருகூர்ச்சடகோபன்சொன்ன*

    தீதுஇலாத ஒண்தமிழ்கள்*  இவைஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஓதவல்லபிராக்கள்*  நம்மை ஆளுடையார்கள் பண்டே.   (2)


    பண்டைநாளாலே நின்திருஅருளும்*  பங்கயத்தாள் திருஅருளும்
    கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்*  குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்* 

    தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து*  உன்தாமரைக்கண்களால் நோக்காய்* 
    தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த*  திருப்புளிங்குடிக் கிடந்தானே!  (2)  


    குடிக்கிடந்து ஆக்கம்செய்து*  நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*  உன்பொன் 
    அடிக்கடவாதே வழிவருகின்ற*  அடியரோர்க்கு அருளி*  நீஒருநாள்

    படிக்குஅளவாக நிமிர்த்த*  நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்* 
    கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை*  திருப்புளிங் குடிக்கிடந்தானே.  


    கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி*  உன்திருஉடம்புஅசைய*  
    தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்*  தொண்டரோர்க்கு அருளி*

    தடம்கொள் தாமரைக்கண்விழித்து*  நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்* 
    இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்*  திருப்புளிங்குடிக்கிடந்தானே!


    புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து*  வைகுந்தத்துள் நின்று* 
    தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே*  என்னைஆள்வாய் எனக்குஅருளி*

    நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப*  நாங்கள்கூத்துஆடி நின்றுஆர்ப்ப* 
    பளிங்குநீர் முகிலின்பவளம்போல்*  கனிவாய்சிவப்பநீ காணவாராயே   


    பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து*  நின்பல்நிலா முத்தம்* 
    தவழ்கதிர்முறுவல்செய்து*  நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*

    பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்* 
    கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்*  காய்சினப்பறவைஊர்ந்தானே!  


    காய்சினப்பறவைஊர்ந்து*  பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல* 
    மாசினமாலி மாலிமான்என்று*  அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*

    காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்* 
    காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி*  எம்இடர்கடிவானே!  


    எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!*  இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்* 
    செம்மடல்மலருந் தாமரைப்பழனத்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*

    நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து*  நாம்களித்து உளம்நலம்கூர* 
    இம்மடஉலகர்காண நீஒருநாள்*  இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 


    எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்*  இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி* 
    தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்*  தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*

    திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!*  திருவைகுந்தத்துள்ளாய்! தேவா* 
    இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்*  இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.


    வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து*  இதனுளும் இருந்திடாய்*  அடியோம் 
    போற்றி ஓவாதே கண்இணை குளிர*  புதுமலர்ஆகத்தைப்பருக* 

    சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்*  செழும்பனைத் திருப்புளிங்குடியாய்* 
    கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த*  கொடுவினைப்படைகள் வல்லானே! 


    கொடுவினைப்படைகள் வல்லையாய்*  அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்* 
    கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே*   கலிவயல் திருப்புளிங்குடியாய்*

    வடிவுஇணைஇல்லா மலர்மகள்*  மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்* 
    கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்*   கூவுதல்வருதல் செய்யாயே.    


    'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று*  குரைகடல் கடைந்தவன் தன்னை* 
    மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்*  வழுதிநாடன் சடகோபன்*

    நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்*  இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்* 
    ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்*  அடிஇணை உள்ளத்துஓர்வாரே  (2)


    ஓராயிரமாய்*  உலகுஏழ்அளிக்கும்* 
    பேராயிரம்கொண்டதுஓர்*  பீடுஉடையன்*

    காராயின*  காளநல்மேனியினன்* 
    நாரயணன்*  நங்கள்பிரான்அவனே.   (2)


    அவனேஅகல்ஞாலம்*  படைத்துஇடந்தான்* 
    அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான் அளந்தான்*

    அவனேஅவனும்*  அவனும்அவனும்* 
    அவனே மற்றுஎல்லாமும்*  அறிந்தனமே.


    அறிந்தனவேத*  அரும்பொருள்நூல்கள்* 
    அறிந்தனகொள்க*  அரும்பொருள்ஆதல்*

    அறிந்தனர்எல்லாம்*  அரியைவணங்கி* 
    அறிந்தனர்*  நோய்கள்அறுக்கும்மருந்தே.  


    மருந்தேநங்கள்*  போக மகிழ்ச்சிக்குஎன்று* 
    பெரும்தேவர் குழாங்கள்*  பிதற்றும்பிரான்*

    கரும்தேவன்எம்மான்*  கண்ணன்விண்உலகம்* 
    தரும்தேவனைச்*  சோரேல்கண்டாய்மனமே!


    மனமே! உன்னை*  வல்வினையேன்இரந்து* 
    கனமேசொல்லினேன்*  இதுசோரேல்கண்டாய்*

    புனம்மேவிய*  பூந்தண்துழாய் அலங்கல்* 
    இனம்ஏதும்இலானை*  அடைவதுமே.


    அடைவதும்அணியார்*  மலர்மங்கைதோள்* 
    மிடைவதும்*  அசுரர்க்குவெம்போர்களே*

    கடைவதும்*  கடலுள்அமுதம்*  என்மனம் 
    உடைவதும்*  அவற்கேஒருங்காகவே.


    ஆகம்சேர்*  நரசிங்கம்அதுஆகி ஓர்* 
    ஆகம்வள்உகிரால்*  பிளந்தான்உறை*

    மாகவைகுந்தம்*  காண்பதற்கு என்மனம்* 
    ஏகம்எண்ணும்*  இராப்பகல்இன்றியே   (2)  


    இன்றிப்போக*  இருவினையும்கெடுத்து* 
    ஒன்றியாக்கைபுகாமை*  உய்யக்கொள்வான்*

    நின்றவேங்கடம்*  நீள்நிலத்துஉள்ளது, 
    சென்றதேவர்கள்*  கைதொழுவார்களே.


    தொழுதுமாமலர்*  நீர்சுடர்தூபம்கொண்டு* 
    எழுதும்என்னும்இது*  மிகைஆதலின்*

    பழுதுஇல்தொல்புகழ்ப்*  பாம்புஅணைப்பள்ளியாய்* 
    தழுவுமாறுஅறியேன்*  உனதாள்களே 


    தாளதாமரையான்*  உனதுஉந்தியான்* 
    வாள்கொள் நீளமழுஆளி*  உன்ஆகத்தான்*

    ஆளராய்த்தொழுவாரும்*  அமரர்கள்* 
    நாளும் என்புகழ்கோ*  உனசீலமே? 


    சீலம்எல்லைஇலான்*  அடிமேல்*  அணி 
    கோலம்நீள்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்

    மாலைஆயிரத்துள்*  இவை பத்தினின் 
    பாலர்*  வைகுந்தம்ஏறுதல் பான்மையே  (2)


    மையார்கருங்கண்ணி*  கமல மலர்மேல்* 
    செய்யாள் திருமார்வினில்சேர்*  திருமாலே*

    வெய்யார்சுடர்ஆழி*  சுரிசங்கம்ஏந்தும்*  
    கையா உன்னைக்காணக்*  கருதும் என்கண்ணே.    (2)


    கண்ணேஉன்னைக் காணக்கருதி*  என்நெஞ்சம் 
    எண்ணேகொண்ட*  சிந்தையதாய்  நின்றுஇயம்பும்*

    விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்புஅரியாயை* 
    நண்ணாது  ஒழியேன் என்று*  நான் அழைப்பனே


    அழைக்கின்ற அடிநாயேன்*  நாய்கூழை வாலால்* 
    குழைக்கின்றது போல*  என்உள்ளம் குழையும்*

    மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து*  ஆநிரைகாத்தாய். 
    பிழைக்கின்றதுஅருள்என்று*  பேதுறுவனே


    உறுவது இதுஎன்று*  உனக்கு ஆள்பட்டு*  நின்கண் 
    பெறுவது எதுகொல்என்று*  பேதையேன் நெஞ்சம்*

    மறுகல்செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்* 
    அறிவதுஅரிய*  அரியாய அம்மானே!    


    அரியாய அம்மானை*  அமரர் பிரானை* 
    பெரியானை*  பிரமனை முன்படைத்தானை*

    வரிவாள் அரவின்அணைப்*  பள்ளிகொள்கின்ற* 
    கரியான்கழல் காணக்*  கருதும் கருத்தே.


    கருத்தே உன்னைக்*  காணக்கருதி*  என்நெஞ்சத்து 
    இருத்தாக இருத்தினேன்*  தேவர்கட்குஎல்லாம்*

    விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி*  உயரத்து 
    ஒருத்தா*  உன்னைஉள்ளும்*  என்உள்ளம் உகந்தே


    உகந்தேஉன்னை*  உள்ளும் என்உள்ளத்து அகம்பால்* 
    அகம்தான் அமர்ந்தே*  இடம்கொண்ட அமலா*

    மிகும்தானவன் மார்வுஅகலம்*  இருகூறா* 
    நகந்தாய் நரசிங்கம்அதுஆய உருவே!


    உருவாகிய*  ஆறுசமயங்கட்குஎல்லாம்* 
    பொருவாகி நின்றான்*  அவன் எல்லாப்பொருட்கும்*

    அருவாகிய ஆதியை*  தேவர்கட்குஎல்லாம்* 
    கருவாகிய கண்ணனை*  கண்டுகொண்டேனே.


    கண்டுகொண்டு*  என்கண்இணை ஆரக்களித்து* 
    பண்டைவினையாயின*  பற்றோடுஅறுத்து*

    தொண்டர்க்கு அமுதுஉண்ணச்*  சொல்மாலைகள் சொன்னேன்* 
    அண்டத்துஅமரர் பெருமான்!* அடியேனே.       


    அடியான் இவன்என்று*  எனக்குஆர்அருள்செய்யும் 
    நெடியானை*  நிறைபுகழ் அம்சிறைப்*  புள்ளின்

    கொடியானை*  குன்றாமல்*  உலகம்அளந்த 
    அடியானை*  அடைந்து அடியேன்*  உய்ந்தவாறே


    ஆறாமதயானை*  அடர்த்தவன்தன்னை* 
    சேறுஆர்வயல்*  தென்குருகூர்ச் சடகோபன்*

    நூறேசொன்ன*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஏறேதரும்*  வானவர்தம் இன்உயிர்க்கே   (2)


    இன்னுயிர்சேவலும் நீரும் கூவிக்கொண்டு*  இங்கு எத்தனை* 
    என்னுயிர் நோவ மிழற்றேல்மின்*  குயில் பேடைகாள்*

    என்னுயிர்க் கண்ணபிரானை*  நீர் வரக்கூவுகிலீர்* 
    என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்*  இத்தனை வேண்டுமோ?   (2)


    இத்தனை வேண்டுவதுஅன்றுஅந்தோ!*  அன்றில் பேடைகாள்* 
    எத்தனை நீரும் நும்சேவலும்*  கரைந்துஏங்குதிர்*

    வித்தகன் கோவிந்தன்*  மெய்யன்அல்லன் ஒருவர்க்கும்* 
    அத்தனைஆம் இனி*  என்உயிர் அவன்கையதே.


    அவன்கையதே எனதுஆர்உயிர்*  அன்றில் பேடைகாள்* 
    எவன்சொல்லி நீர்குடைந்துஆடுதிர்*  புடைசூழவே*

    தவம்செய்தில்லா*  வினையாட்டியேன் உயிர் இங்குஉண்டோ* 
    எவன்சொல்லி நிற்றும்*  நும்ஏங்கு கூக்குரல் கேட்டுமே. 


    கூக்குரல்கேட்டும்*  நம்கண்ணன் மாயன் வெளிப்படான்* 
    மேல்கிளை கொள்ளேல்மின்*  நீரும் சேவலும் கோழிகாள்*

    வாக்கும்மனமும்*  கருமமும் நமக்குஆங்கதே* 
    ஆக்கையும் ஆவியும்*  அந்தரம் நின்றுஉழலுமே


    அந்தரம் நின்றுஉழல்கின்ற*  யானுடைப் பூவைகாள்* 
    நும்திறத்துஏதும் இடைஇல்லை*  குழறேல்மினோ*

    இந்திரஞாலங்கள் காட்டி*  இவ்ஏழ்உலகும் கொண்ட* 
    நம் திருமார்பன்*  நம்ஆவி உண்ண நன்குஎண்ணினான். 


    நன்குஎண்ணி நான்வளர்த்த*  சிறுகிளிப்பைதலே* 
    இன்குரல் நீ மிழற்றேல்*  என்ஆர்உயிர்க் காகுத்தன்*

    நின்செய்ய வாய்ஒக்கும் வாயன்*  கண்ணன்கை காலினன்* 
    நின்பசும்சாம நிறத்தன்*  கூட்டுண்டு நீங்கினான். 


    கூட்டுண்டு நீங்கிய*  கோலத்தாமரைக் கண்செவ்வாய்* 
    வாட்டம்இல்என் கருமாணிக்கம்*  கண்ணன் மாயன்போல்*

    கோட்டிய வில்லொடு*  மின்னும் மேகக்குழாங்கள்காள்* 
    காட்டேல்மின் நும்உரு*  என்உயிர்க்கு அதுகாலனே.


    உயிர்க்குஅது காலன்என்று*  உம்மை யான்இரந்தேற்குநீர்* 
    குயில் பைதல்காள்*  கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*

    தயிர்ப்பழஞ்சோற்றொடு*  பால்அடிசிலும் தந்து*  சொல் 
    பயிற்றிய நல்வளம்ஊட்டினீர்*  பண்புஉடையீரே!      


    பண்புடை வண்டொடு தும்பிகாள்*  பண்மிழற்றேல்மின்* 
    புண்புரை வேல்கொடு*  குத்தால்ஒக்கும் நும்இன்குரல்

    தண்பெருநீர்த் தடம்தாமரை*  மலர்ந்தால்ஒக்கும் 
    கண்பெரும்கண்ணன்*  நம்ஆவிஉண்டுஎழ நண்ணினான் 


    எழநண்ணி நாமும்*  நம்வானநாடனோடு ஒன்றினோம்* 
    பழன நல்நாரைக் குழாங்கள்காள்*  பயின்றுஎன்இனி*

    இழைநல்லஆக்கையும்*  பையவே புயக்குஅற்றது* 
    தழைநல்ல இன்பம் தலைப்பெய்து*  எங்கும் தழைக்கவே.   


    இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த*  பல்ஊழிக்குத்* 
    தன்புகழ்ஏத்தத்*  தனக்குஅருள் செய்தமாயனைத்*

    தென்குருகூர்ச் சடகோபன்*  சொல்ஆயிரத்துள் இவை* 
    ஒன்பதோடு ஒன்றுக்கும்*  மூவுலகும் உருகுமே   (2)   


    உருகுமால் நெஞ்சம்*  உயிரின் பரமன்றி* 
    பெருகுமால் வேட்கையும்*  என்செய்கேன் தொண்டனேன்*

    தெருவுஎல்லாம் காவிகமழ்*  திருக்காட்கரை*  
    மருவிய மாயன்தன்*  மாயம் நினைதொறே.   (2)


    நினைதொறும் சொல்லும்தொறும்*  நெஞ்சு இடிந்துஉகும்* 
    வினைகொள்சீர் பாடிலும்*  வேம்எனதுஆர்உயிர்*

    சுனைகொள் பூஞ்சோலைத்*  தென்காட்கரைஎன்அப்பா* 
    நினைகிலேன் நான்உனக்கு*  ஆட்செய்யும் நீர்மையே.   


    நீர்மையால் நெஞ்சம்*  வஞ்சித்துப் புகுந்து*  என்னை 
    ஈர்மைசெய்து*  என்உயிர்ஆய் என்உயிர் உண்டான்* 

    சீர்மல்குசோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
    கார்முகில் வண்ணன்தன்*  கள்வம் அறிகிலேன்.


    அறிகிலேன் தன்னுள்*  அனைத்துஉலகும் நிற்க* 
    நெறிமையால் தானும்*  அவற்றுள் நிற்கும் பிரான்*

    வெறிகமழ்சோலைத்*  தென்காட்கரை என்அப்பன்* 
    சிறியவென்னாயிருண்ட திருஅருளே.


    திருவருள் செய்பவன்போல*  என்னுள்புகுந்து* 
    உருவமும் ஆருயிரும்*  உடனே உண்டான்*

    திருவளர்சோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
    கருவளர்மேனி*  என்கண்ணன் கள்வங்களே.


    என்கண்ணன் கள்வம்*  எனக்குச் செம்மாய்நிற்கும்* 
    அம்கண்ணன் உண்ட*  என்ஆர்உயிர்க்கோதுஇது*

    புன்கண்மை எய்தி*  புலம்பி இராப்பகல்* 
    என்கண்ணன் என்று*  அவன்காட்கரைஏத்துமே 


    காட்கரைஏத்தும்*  அதனுள் கண்ணாஎன்னும்* 
    வேட்கை நோய்கூர*  நினைந்து கரைந்துகும்*

    ஆட்கொள் வான்ஒத்து*  என்னுயிருண்ட மாயனால்* 
    கோள்குறைபட்டது*  என்னாருயிர் கோள்உண்டே.


    கோள்உண்டான் அன்றிவந்து*  என்உயிர் தான்உண்டான்* 
    நாளும்நாள்வந்து*  என்னை முற்றவும் தான்உண்டான்*

    காளநீர்மேகத்*  தென்காட்கரை என்அப்பற்கு* 
    ஆள்அன்றேபட்டது*  என்ஆர்உயிர் பட்டதே. 


    ஆருயிர் பட்டது*  எனதுஉயிர் பட்டது* 
    பேர்இதழ்த் தாமரைக்கண்*  கனிவாயதுஓர்*

    கார்எழில் மேகத்*  தென்காட்கரை கோயில்கொள், 
    சீர்எழில் நால்தடம்தோள்*  தெய்வ வாரிக்கே.


    வாரிக்கொண்டு*  உன்னைவிழுங்குவன் காணில்' என்று* 
    ஆர்வுஉற்ற என்னை ஒழிய*  என்னில் முன்னம்

    பாரித்துத்*  தான்என்னை*  முற்றப் பருகினான்* 
    கார்ஒக்கும்*  காட்கரைஅப்பன் கடியனே.  


    கடியனாய்க் கஞ்சனைக்*  கொன்றபிரான் தன்னை* 
    கொடிமதிள் தென்குருகூர்ச்*  சடகோபன்சொல்*

    வடிவுஅமைஆயிரத்து*  இப்பத்தினால் சன்மம்- 
    முடிவுஎய்தி*  நாசம்கண்டீர்கள் எம்கானலே   (2)


    எம்கானல் அகம்கழிவாய்*  இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்* 
    செங்கால மடநாராய்!*  திருமூழிக்களத்து உறையும்*

    கொங்குஆர் பூந்துழாய்முடி*  எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்* 
    நும்கால்கள் என்தலைமேல்*  கெழுமீரோ நுமரோடே.  (2)


    நுமரோடும் பிரியாதே*  நீரும் நும் சேவலுமாய்* 
    அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*

    எமராலும் பழிப்புண்டு*  இங்கு என்தம்மால் இழிப்புண்டு* 
    தமரோடுஅங்கு உறைவார்க்குத்*  தக்கிலமே! கேளீரே.


    தக்கிலமே கேளீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேரும்* 
    கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!*  குளிர் மூழிக்களத்து உறையும்*

    செக்கமலத்துஅலர் போலும்*  கண்கைகால் செங்கனிவாய்* 
    அக்கமலத்துஇலைப்போலும்*  திருமேனி அடிகளுக்கே.


    திருமேனி அடிகளுக்குத்*  தீவினையேன் விடுதூதாய்* 
    திருமூழிக்களம் என்னும்*  செழுநகர்வாய் அணிமுகில்காள்*

    திருமேனி அவட்குஅருளீர்*  என்றக்கால் உம்மைத்தன்* 
    திருமேனி ஒளிஅகற்றி*  தெளிவிசும்பு கடியுமே?   


    தெளிவிசும்பு கடிதுஓடி*  தீவளைத்து மின்இலகும்* 
    ஒளிமுகில்காள்!*  திருமூழிக்களத்துஉறையும் ஒண்சுடர்க்கு*

    தெளிவிசும்பு திருநாடாத்*  தீவினையேன் மனத்துஉறையும்* 
    துளிவார்கள்குழலார்க்கு*  என்தூதுஉரைத்தல் செப்புமினே.


    தூதுஉரைத்தல் செப்புமின்கள்*  தூமொழிவாய் வண்டுஇனங்காள்*  
    போதுஇரைத்து மதுநுகரும்*  பொழில் மூழிக்களத்துஉறையும்* 

    மாதரைத்தம் மார்வகத்தே*  வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*  
    தூதுஉரைத்தல் செப்புதிரேல்*  சுடர்வளையும் கலையுமே.


    சுடர்வளையும் கலையும்கொண்டு*  அருவினையேன் தோள்துறந்த*  
    படர்புகழான்*  திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்* 

    சுடர்பவள வாயனைக்கண்டு*  ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*  
    படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!*  எனக்கு ஒன்று பணியீரே. 


    எனக்குஒன்று பணியீர்கள்*  இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*  
    மனக்குஇன்பம் படமேவும்*  வண்டுஇனங்காள்! தும்பிகாள்* 

    கனக்கொள் திண்மதிள்புடைசூழ்*  திருமூழிக் களத்துஉறையும்*  
    புனக்கொள் காயாமேனிப்*  பூந்துழாய் முடியார்க்கே.


    பூந்துழாய் முடியார்க்கு*  பொன்ஆழிக் கையாருக்கு* 
    ஏந்துநீர் இளம்குருகே!*  திருமூழிக்களத்தாருக்கு*

    ஏந்துபூண் முலைபயந்து*  என்இணைமலர்க்கண் நீர்ததும்ப* 
    தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்*  தகவுஅன்றுஎன்று உரையீரே   


    தகவுஅன்றுஎன்று உரையீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேர்ந்து* 
    மிகஇன்பம் படமேவும்*  மேல்நடைய அன்னங்காள்*

    மிகமேனி மெலிவுஎய்தி*  மேகலையும் ஈடுஅழிந்து*  என் 
    அகமேனி ஒழியாமே*  திருமூழிக் களத்தார்க்கே.


    ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்*  ஒண்சுடரை* 
    ஒழிவுஇல்லா அணிமழலைக்*  கிளிமொழியாள் அலற்றியசொல்* 

    வழுஇல்லா வண்குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்துஉரைத்த*  
    அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்*  நோய் அறுக்குமே   (2) 


    அறுக்கும் வினையாயின*  ஆகத்து அவனை* 
    நிறுத்தும் மனத்துஒன்றிய*  சிந்தையினார்க்கு*

    வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    குறுக்கும்வகை உண்டுகொலோ*  கொடியேற்கே?  (2)


    கொடிஏர்இடைக்*  கோகனகத்தவள் கேள்வன்* 
    வடிவேல் தடம்கண்*  மடப்பின்னை மணாளன்*

    நெடியான்உறை சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    அடியேன் அணுகப்பெறும்நாள்*  எவைகொலோ!


    எவைகொல் அணுகப் பெறும்நாள்?'*  என்று எப்போதும்* 
    கவையில் மனம்இன்றி*  கண்ணீர்கள் கலுழ்வன்* 

    நவைஇல் திருநாரணன்சேர்*  திருநாவாய்*  
    அவையுள் புகலாவதுஓர்*  நாள் அறியேனே


    நாளேல் அறியேன்*  எனக்குஉள்ளன*  நானும் 
    மீளா அடிமைப்*  பணி செய்யப் புகுந்தேன்*

    நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வாள்ஏய் தடம்கண்*  மடப்பின்னை மணாளா!


    மணாளன் மலர்மங்கைக்கும்*  மண் மடந்தைக்கும்* 
    கண்ணாளன் உலகத்துஉயிர்*  தேவர்கட்குஎல்லாம்*

    விண்ணாளன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    கண்ஆரக் களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்டே?  


    கண்டே களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்கள்* 
    தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்*  துரிசுஇன்றி*

    வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    கொண்டே உறைகின்ற*  எம்கோவலர்கோவே!


    கோவாகிய*  மாவலியை நிலம்கொண்டாய்* 
    தேவாசுரம் செற்றவனே!*  திருமாலே*

    நாவாய்உறைகின்ற*  என்நாரணநம்பீ* 
    'ஆஆ அடியான்*  இவன் என்று அருளாயே. 


    அருளாது ஒழிவாய்*  அருள்செய்து*  அடியேனைப் 
    பொருளாக்கி*  உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*

    மருளேஇன்றி*  உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்* 
    தெருளேதரு*  தென்திருநாவாய் என்தேவே!  


    தேவர் முனிவர்க்குஎன்றும்*  காண்டற்குஅரியன்* 
    மூவர் முதல்வன்*  ஒருமூவுலகுஆளி*

    தேவன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    யாவர் அணுகப்பெறுவார்*  இனிஅந்தோ!


    அந்தோ! அணுகப்பெறும்நாள்*  என்றுஎப்போதும்*  
    சிந்தை கலங்கித்*  திருமால் என்றுஅழைப்பன்*

    கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வந்தே உறைகின்ற*  எம்மா மணிவண்ணா!.


    வண்ணம் மணிமாட*  நல்நாவாய் உள்ளானைத்*  
    திண்ணம் மதிள்*  தென்குருகூர்ச் சடகோபன்* 

    பண்ணார் தமிழ்*  ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*  
    மண்ணாண்டு*  மணம்கமழ்வர் மல்லிகையே.   (2)


    மல்லிகைகமழ் தென்றல் ஈரும்ஆலோ!*  வண்குறிஞ்சி இசைதவரும்ஆலோ* 
    செல்கதிர் மாலையும் மயக்கும்ஆலோ!*   செக்கர்நல் மேகங்கள் சிதைக்கும்ஆலோ*

    அல்லிஅம் தாமரைக் கண்ணன் எம்மான்*  ஆயர்கள்ஏறு அரிஏறு எம்மாயோன்* 
    புல்லிய முலைகளும் தோளும் கொண்டு*  புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!   (2)


    புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!  புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ* 
    பகலடுமாலைவண் சாந்தமாலோ!*  பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*

    அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து-  அளந்து*  எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்* 
    இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்*  இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?


    இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்*  இணைமுலை நமுக நுண்இடை நுடங்க* 
    துனிஇரும்கலவி செய்து ஆகம்தோய்ந்து*   துறந்துஎம்மை இட்டுஅகல் கண்ணன்கள்வன்*  

    தனிஇளம்சிங்கம் எம்மாயன்வாரான்*   தாமரைக் ண்ணும் செவ்வாயும் நீலப்* 
    பனிஇரும்குழல்களும் நான்கு தோளும்*  பாவியேன் மனத்தே நின்றுஈரும்ஆலோ!  


    பாவியேன் மனத்தே நின்றுஈருமாலோ!*  வாடை தண்வாடை வெவ்வாயாலோ* 
    மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!*  மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*

    தூவிஅம் புள்உடைத் தெய்வ வண்டுதுதைந்த*  எம்பெண்மைஅம் பூஇதுதாலோ* 
    ஆவியின் பரம்அல்ல வகைகள்ஆலோ!*  யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*


    யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*  ஆ புகுமாலையும் ஆகின்றுஆலோ,* 
    யாமுடை ஆயன்தன் மனம் கல்ஆலோ!*  அவனுடைத் தீம்குழல் ஈரும்ஆலோ*

    யாமுடைத் துணைஎன்னும் தோழிமாரும்*   எம்மில் முன்அவனுக்கு மாய்வர்ஆலோ* 
    யாமுடை ஆர்உயிர் காக்குமாறுஎன்?  அவனுடை அருள் பெறும்போது அரிதே.


    அவனுடைஅருள் பெறும்போது அரிதால்*  அவ்அருள்அல்லன அருளும் அல்ல* 
    அவன்அருள் பெறுமளவு ஆவிநில்லாது*  அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்*

    சிவனொடு பிரமன் வண் திருமடந்தை*  சேர்திருஆகம் எம்ஆவிஈரும்* 
    எவன் இனிப்புகும்இடம்? எவன் செய்கேனோ?  ஆருக்குஎன் சொல்லுகேன் அன்னைமீர்காள்!   


    ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னைமீர்காள்!*  ஆர்உயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை* 
    கார்ஒக்கும்மேனி நம்கண்ணன் கள்வம்*   கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கண் அஃதே*

    சீர்உற்றஅகில் புகையாழ்நரம்பு*  பஞ்சமம்தண் பசும்சாந்துஅணைந்து* 
    போர்உற்றவாடைதண் மல்லிகைப்பூப்*   புதுமணம்முகந்துகொண்டு எறியும்ஆலோ!


    புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ!*  பொங்குஇளவாடை புன்செக்கர்ஆலோ* 
    அதுமணந்துஅகன்றநம் கண்ணன்கள்வம்*   கண்ணனில் கொடிது இனிஅதனில்உம்பர்*  

    மதுமண மல்லிகை மந்தக்கோவை*  வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து* 
    அதுமணந்து இன்அருள் ஆய்ச்சியர்க்கே*  ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!     


    ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!*  அதுமொழிந்துஇடை இடைதன் செய்கோலத்* 
    தூதுசெய் கண்கள் கொண்டுஒன்று பேசி*  தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*

    பேதுறு முகம்செய்து நொந்துநொந்து*  பேதைநெஞ்சுஅறவுஅறப் பாடும்பாட்டை* 
    யாதும்ஒன்று அறிகிலம் அம்மஅம்ம!*  மாலையும்வந்தது மாயன்வாரான். 


    மாலையும்வந்தது மாயன்வாரான்*  மாமணிபுலம்ப வல்ஏறுஅணைந்த*
    கோல நல்நாகுகள் உகளும்ஆலோ!  கொடியன குழல்களும் குழறும்ஆலோ*

    வால்ஒளி வளர்முல்லை கருமுகைகள்*   மல்லிகை அலம்பி வண்டுஆலும்ஆலோ*
    வேலையும் விசும்பில் விண்டுஅலறும்ஆலோ!*  என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே?  


    அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா*  அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்* 
    அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி*  அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*

    அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த*   ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு* 
    அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்!   அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே!    (2)


    மாலைநண்ணித்*  தொழுதுஎழுமினோ வினைகெட* 
    காலைமாலை*  கமலமலர் இட்டு நீர்*

    வேலைமோதும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து* 
    ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்*  அடிஇணைகளே.   (2)


    கள்அவிழும் மலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்* 
    நள்ளிசேரும் வயல்சூழ்*  கிடங்கின்புடை*

    வெள்ளிஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    உள்ளி*  நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!   


    தொண்டர் நும்தம்*  துயர்போகநீர் கமாய்* 
    விண்டுவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*

    வண்டுபாடும் பொழில்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அண்டவாணன்*  அமரர்பெருமானையே       


    மானைநோக்கி*  மடப்பின்னைதன் கேள்வனை* 
    தேனைவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*

    வானைஉந்தும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம்* 
    தான்நயந்த பெருமான்*  சரண்ஆகுமே.


    சரணம்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    மரணம்ஆனால்*  வைகுந்தம் கொடுக்கும்பிரான்*

    அரண்அமைந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத் 
    தரணியாளன்*  தனதுஅன்பர்க்கு அன்புஆகுமே. 


    அன்பன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    செம்பொன்ஆகத்து*  அவுணன்உடல் கீண்டவன்,  

    நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அன்பன்*  நாளும் தன*  மெய்யர்க்கு மெய்யனே  


    மெய்யன்ஆகும்*  விரும்பித் தொழுவார்க்குஎல்லாம்* 
    பொய்யன்ஆகும்*  புறமே தொழுவார்க்குஎல்லாம்*

    செய்யில்வாளைஉகளும்*  திருக்கண்ணபுரத்து 
    ஐயன்*  ஆகத்துஅணைப்பார்கட்கு அணியனே.


    அணியன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    பிணியும்சாரா*  பிறவிகெடுத்துஆளும்*

    மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்*  திருக்கண்ணரம் 
    பணிமின்*  நாளும் பரமேட்டிதன் பாதமே


    பாதம்நாளும்*  பணிய தணியும்பிணி* 
    ஏதம்சாரா*  எனக்கேல் இனிஎன்குறை?*

    வேதநாவர் விரும்பும்*  திருக்கண்ணபுரத்து 
    ஆதியானை*  அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.  


    இல்லை அல்லல்*  எனக்கேல்இனி என்குறை? 
    அல்லிமாதர் அமரும்*  திருமார்பினன்*

    கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    சொல்ல*  நாளும் துயர் பாடுசாராவே.   


    பாடுசாரா*  வினைபற்றுஅற வேண்டுவீர்* 
    மாடம்நீடு*  குருகூர்ச்சடகோபன்*  சொல்

    பாடலானதமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    பாடிஆடிப்*  பணிமின் அவன் தாள்களே   (2)