பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
வாயும் திரை உகளும்* கானல் மடநாராய்,*
ஆயும் அமர் உலகும்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
நோயும் பயலைமையும்* மீது ஊர எம்மேபோல்,*
நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.
கோள் பட்ட சிந்தையையாய்க்* கூர்வாய அன்றிலே,*
சேண் பட்டயாமங்கள்* சேராது இரங்குதியால்,*
ஆள் பட்ட எம்மேபோல்,* நீயும் அரவு அணையான்,*
தாள் பட்ட தண் துழாய்த்* தாமம் காமுற்றாயே.
காமுற்ற கையறவோடு* எல்லே இராப்பகல்,*
நீ முற்றக் கண்துயிலாய்* நெஞ்சு உருகி ஏங்குதியால்,*
தீ முற்றத் தென் இலங்கை* ஊட்டினான் தாள் நயந்த,*
யாம் உற்றது உற்றாயோ?* வாழி கனை கடலே
கடலும் மலையும்* விசும்பும் துழாய் எம்போல்,*
சுடர் கொள் இராப்பகல்* துஞ்சாயால் தண் வாடாய்,*
அடல் கொள் படை ஆழி* அம்மானைக் காண்பான் நீ,*
உடலம் நோய் உற்றாயோ* ஊழிதோறு ஊழியே.
ஊழிதோறு ஊழி* உலகுக்கு நீர்கொண்டு,*
தோழியரும் யாமும் போல்* நீராய் நெகிழ்கின்ற,*
வாழிய வானமே* நீயும் மதுசூதன்,*
பாழிமையில் பட்டு அவன்கண்* பாசத்தால் நைவாயே.
நைவாய எம்மேபோல்* நாள் மதியே நீ இந் நாள்,*
மை வான் இருள் அகற்றாய்* மாழாந்து தேம்புதியால்,*
ஐ வாய் அரவு அணைமேல்* ஆழிப் பெருமானார்,*
மெய் வாசகம் கேட்டு* உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
தோற்றோம் மட நெஞ்சம்* எம் பெருமான் நாரணற்கு* எம்
ஆற்றாமை சொல்லி* அழுவோமை நீநடுவே,*
வேற்றோர் வகையில்* கொடிதாய் எனை ஊழி,*
மாற்றாண்மை நிற்றியோ* வாழி கனை இருளே.
இருளின் திணி வண்ணம்* மாநீர்க்கழியே போய்,*
மருளுற்று இராப்பகல்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
உருளும் சகடம்* உதைத்த பெருமானார்,*
அருளின் பெரு நசையால்* ஆழாந்து நொந்தாயே.
நொந்து ஆராக் காதல் நோய்* மெல் ஆவி உள் உலர்த்த,*
நந்தா விளக்கமே,* நீயும் அளியத்தாய்,*
செந்தாமரைத் தடங்கண்* செங்கனி வாய் எம் பெருமான்,*
அம் தாமம் தண் துழாய்* ஆசையால் வேவாயே.
வேவு ஆரா வேட்கை நோய்* மெல் ஆவி உள் உலர்த்த,*
ஓவாது இராப்பகல்* உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*
மா வாய் பிளந்து* மருதிடை போய் மண் அளந்த,*
மூவா முதல்வா* இனி எம்மைச் சோரேலே.
சோராத எப் பொருட்கும்* ஆதியாம் சோதிக்கே,*
ஆராத காதல்* குருகூர்ச் சடகோபன்,*
ஓராயிரம் சொன்ன* அவற்றுள் இவை பத்தும்,*
சோரார் விடார் கண்டீர்* வைகுந்தம் திண்ணனவே.
திண்ணன் வீடு* முதல் முழுதும் ஆய்,*
எண்ணின் மீதியன்* எம் பெருமான்,*
மண்ணும் விண்ணும் எல்லாம்* உடன் உண்ட,* நம்
கண்ணன் கண் அல்லது* இல்லை ஓர் கண்ணே.
ஏ பாவம் பரமே* ஏழ் உலகும்,*
ஈ பாவம் செய்து* அருளால் அளிப்பார் ஆர்,*
மா பாவம் விட* அரற்குப் பிச்சை பெய்,*
கோபால கோளரி* ஏறு அன்றியே.
ஏறனை பூவனை* பூமகள் தன்னை,*
வேறுஇன்றி விண் தொழத்* தன்னுள் வைத்து,*
மேல் தன்னை மீதிட* நிமிர்ந்து மண் கொண்ட.*
மால் தனின் மிக்கும் ஓர்* தேவும் உளதே.
தேவும் எப் பொருளும் படைக்கப்,*
பூவில் நான்முகனைப் படைத்த,*
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,*
பூவும் பூசனையும் தகுமே.
தகும் சீர்த்* தன் தனி முதலினுள்ளே,*
மிகும் தேவும்* எப் பொருளும் படைக்கத்,*
தகும் கோலத்* தாமரைக் கண்ணன் எம்மான்,*
மிகும் சோதி* மேல் அறிவார் எவரே.
எவரும் யாவையும்* எல்லாப் பொருளும்,*
கவர்வு இன்றித்* தன்னுள் ஒடுங்க நின்ற,*
பவர் கொள் ஞான* வெள்ளச் சுடர் மூர்த்தி,*
அவர் எம் ஆழி* அம் பள்ளியாரே,
பள்ளி ஆல் இலை* ஏழ் உலகும் கொள்ளும்,*
வள்ளல்* வல் வயிற்றுப் பெருமான்,*
உள் உள் ஆர் அறிவார்* அவன் தன்,*
கள்ள மாய* மனக்கருத்தே.
கருத்தில் தேவும்* எல்லாப் பொருளும்,*
வருத்தித்த* மாயப் பிரான் அன்றி,* யாரே
திருத்தித்* திண் நிலை மூவுலகும்* தம்முள்
இருத்திக்* காக்கும் இயல்வினரே.
காக்கும் இயல்வினன்* கண்ண பெருமான்,*
சேர்க்கை செய்து* தன் உந்தியுள்ளே,*
வாய்த்த திசைமுகன்* இந்திரன் வானவர்,*
ஆக்கினான்* தெய்வ உலகுகளே.
கள்வா எம்மையும்* ஏழ் உலகும்,* நின்
உள்ளே தோற்றிய* இறைவ! என்று,*
வெள் ஏறன் நான்முகன்* இந்திரன் வானவர்,*
புள் ஊர்தி* கழல் பணிந்து ஏத்துவரே.
ஏத்த ஏழ் உலகும் கொண்ட* கோலக்
கூத்தனைக்,* குருகூர்ச் சடகோபன் சொல்,*
வாய்த்த ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
ஏத்த வல்லவர்க்கு* இல்லை ஓர் ஊனமே.
ஊனில் வாழ் உயிரே* நல்லை போ உன்னைப் பெற்று,*
வான் உளார் பெருமான்* மதுசூதன் என் அம்மான்,*
தானும் யானும் எல்லாம்* தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,*
தேனும் பாலும் நெய்யும்* கன்னலும் அமுதும் ஒத்தே.
ஒத்தார் மிக்காரை* இலையாய மாமாய,*
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய்,* என்னைப் பெற்ற-
அத் தாய் ஆய் தந்தை ஆய்* அறியாதன அறிவித்து,*
அத்தா, நீ செய்தன* அடியேன் அறியேனே.
அறியாக் காலத்துள்ளே* அடிமைக்கண் அன்பு செய்வித்து,*
அறியா மா மாயத்து* அடியேனை வைத்தாயால்,*
அறியாமைக் குறள் ஆய்* நிலம் மாவலி மூவடி என்று,*
அறியாமை வஞ்சித்தாய்* எனது ஆவியுள் கலந்தே.
எனது ஆவியுள் கலந்த* பெரு நல் உதவிக் கைம்மாறு,*
எனது ஆவி தந்தொழிந்தேன்,* இனி மீள்வது என்பது உண்டே,*
எனது ஆவி ஆவியும் நீ* பொழில் ஏழும் உண்ட எந்தாய்,*
எனது ஆவி யார்? யான் ஆர்?* தந்த நீ கொண்டாக்கினையே.
இனி யார் ஞானங்களால்* எடுக்கல் எழாத எந்தாய்,*
கனிவார் வீட்டு இன்பமே* என் கடல் படா அமுதே,*
தனியேன் வாழ் முதலே* பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,*
நுனி ஆர் கோட்டில் வைத்தாய்* நுன பாதம் சேர்ந்தேனே.
சேர்ந்தார் தீவினைகட்கு* அரு நஞ்சை திண் மதியை,*
தீர்ந்தார் தம் மனத்துப்* பிரியாது அவர் உயிரைச்,*
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை* அரக்கியை மூக்கு-
ஈர்ந்தாயை,* அடியேன் அடைந்தேன்* முதல் முன்னமே.
முன் நல் யாழ் பயில் நூல்* நரம்பின் முதிர் சுவையே,*
பல் நலார் பயிலும்* பரனே பவித்திரனே,*
கன்னலே அமுதே* கார் முகிலே என் கண்ணா,*
நின் அலால் இலேன்காண்* என்னை நீ குறிக்கொள்ளே.
குறிக்கொள் ஞானங்களால்* எனை ஊழி செய் தவமும்,*
கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*
உறிக்கொண்ட வெண்ணெய் பால்* ஒளித்து உண்ணும் அம்மான் பின்,*
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்* பிறவித் துயர் கடிந்தே.
கடி வார் தண் அம் துழாய்க்* கண்ணன் விண்ணவர் பெருமான்,*
படி வானம் இறந்த* பரமன் பவித்திரன் சீர்,*
செடி ஆர் நோய்கள் கெட* படிந்து குடைந்து ஆடி,*
அடியேன் வாய்மடுத்துப்* பருகிக் களித்தேனே.
களிப்பும் கவர்வும் அற்று* பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,*
ஒளிக்கொண்ட சோதியுமாய்* உடன்கூடுவது என்று கொலோ,*
துளிக்கின்ற வான் இந்நிலம்* சுடர் ஆழி சங்கு ஏந்தி,*
அளிக்கின்ற மாயப் பிரான்* அடியார்கள் குழாங்களையே.
குழாம் கொள் பேர் அரக்கன்* குலம் வீய முனிந்தவனை,*
குழாம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த,*
குழாம் கொள் ஆயிரத்துள்* இவை பத்தும் உடன் பாடி,*
குழாங்களாய் அடியீர் உடன்* கூடிநின்று ஆடுமினே.
ஆடி ஆடி* அகம் கரைந்து,* இசை
பாடிப் பாடிக்* கண்ணீர் மல்கி,* எங்கும்
நாடி நாடி* நரசிங்கா என்று,*
வாடி வாடும்* இவ் வாள் நுதலே.
வாள் நுதல்* இம் மடவரல்,* உம்மைக்
காணும் ஆசையுள்* நைகின்றாள்,* விறல்
வாணன்* ஆயிரம் தோள் துணித்தீர்,* உம்மைக்
காண* நீர் இரக்கம் இலீரே.
இரக்க மனத்தோடு* எரி அணை,*
அரக்கும் மெழுகும்* ஒக்கும் இவள்,*
இரக்கம் எழீர்* இதற்கு என் செய்கேன்,*
அரக்கன் இலங்கை* செற்றீருக்கே.
இலங்கை செற்றவனே என்னும்,* பின்னும்
வலம் கொள்* புள் உயர்த்தாய் என்னும்,* உள்ளம்
மலங்க* வெவ் உயிர்க்கும்,* கண்ணீர் மிகக்
கலங்கிக்* கைதொழும் நின்று இவளே
இவள் இராப்பகல்* வாய்வெரீ இத்,* தன
குவளை ஒண்* கண்ண நீர் கொண்டாள்,* வண்டு
திவளும்* தண் அம் துழாய் கொடீர்,* என
தவள வண்ணர்* தகவுகளே.
தகவு உடையவனே என்னும்,* பின்னும்
மிக விரும்பும்* பிரான் என்னும்,* எனது
அக உயிர்க்கு* அமுதே என்னும்,* உள்ளம்
உக உருகி* நின்று உள் உளே.
உள் உள் ஆவி* உலர்ந்து உலர்ந்து,* என
வள்ளலே* கண்ணனே என்னும்,* பின்னும்
வெள்ள நீர்க்* கிடந்தாய் என்னும்,* என
கள்விதான்* பட்ட வஞ்சனையே.
வஞ்சனே என்னும்* கைதொழும்,* தன
நெஞ்சம்வேவ* நெடிது உயிர்க்கும்,* விறல்
கஞ்சனை* வஞ்சனை செய்தீர்,* உம்மைத்
தஞ்சம் என்று* இவள் பட்டனவே.
பட்ட போது* எழு போது அறியாள்,* விரை
மட்டு அலர்* தண் துழாய் என்னும்,* சுடர்
வட்ட வாய்* நுதி நேமியீர்,* நுமது
இட்டம் என்கொல்* இவ்ஏழைக்கே.
ஏழை பேதை* இராப்பகல்,* தன
கேழ் இல் ஒண்* கண்ண நீர் கொண்டாள்,* கிளர்
வாழ்வை வேவ* இலங்கை செற்றீர்.* இவள்
மாழை நோக்கு ஒன்றும்* வாட்டேன்மினே
வாட்டம் இல் புகழ்* வாமனனை* இசை
கூட்டி* வண் சடகோபன் சொல்,* அமை
பாட்டு* ஓர் ஆயிரத்து இப் பத்தால்,* அடி
சூட்டலாகும்* அம் தாமமே.
அம் தாமத்து அன்பு செய்து* என் ஆவி சேர் அம்மானுக்கு,*
அம் தாமம் வாழ் முடி சங்கு* ஆழி நூல் ஆரம் உள,*
செந்தாமரைத்தடம் கண்* செங்கனி வாய் செங்கமலம்,*
செந்தாமரை அடிகள்* செம்பொன் திரு உடம்பே.
திரு உடம்பு வான் சுடர்* செந்தாமரை கண் கை கமலம்,*
திரு இடமே மார்வம்* அயன் இடமே கொப்பூழ்,*
ஒருவு இடமும்* எந்தை பெருமாற்கு அரனே ஓ,*
ஒருவு இடம் ஒன்று இன்றி* என்னுள் கலந்தானுக்கே.
என்னுள் கலந்தவன்* செங்கனி வாய் செங்கமலம்,*
மின்னும் சுடர் மலைக்குக்* கண் பாதம் கை கமலம்,*
மன்னும் முழு ஏழ் உலகும்* வயிற்றின் உள,*
தன்னுள் கலவாதது* எப் பொருளும் தான் இலையே.
எப் பொருளும் தான் ஆய்* மரகதக் குன்றம் ஒக்கும்.*
அப்பொழுதைத் தாமரைப்பூக்* கண் பாதம் கை கமலம்,*
எப்பொழுதும் நாள் திங்கள்* ஆண்டு ஊழி ஊழிதொறும்,*
அப்பொழுதைக்கு அப்பொழுது* என் ஆரா அமுதமே.
ஆரா அமுதமாய்* அல் ஆவியுள் கலந்த,*
கார் ஆர் கருமுகில் போல்* என் அம்மான் கண்ணனுக்கு,*
நேரா வாய் செம்பவளம்* கண் பாதம் கை கமலம்,*
பேர் ஆரம் நீள் முடி நாண்,* பின்னும் இழை பலவே.
பலபலவே ஆபரணம்* பேரும் பலபலவே,*
பலபலவே சோதி* வடிவு பண்பு எண்ணில்,*
பலபல கண்டு உண்டு* கேட்டு உற்று மோந்து இன்பம்,*
பலபலவே ஞானமும்* பாம்பு அணை மேலாற்கேயோ.
பாம்பு அணைமேல் பாற்கடலுள்* பள்ளி அமர்ந்ததுவும்,*
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்* ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,*
தேம் பணைய சோலை* மராமரம் ஏழ் எய்ததுவும்,*
பூம் பிணைய தண் துழாய்ப்* பொன் முடி அம் போர் ஏறே.
பொன் முடி அம் போர் ஏற்றை* எம்மானை நால் தடம் தோள்,*
தன் முடிவு ஒன்று இல்லாத* தண் துழாய் மாலையனை,*
என் முடிவு காணாதே* என்னுள் கலந்தானை,*
சொல்முடிவு காணேன் நான்* சொல்லுவது என் சொல்லீரே.
சொல்லீர் என் அம்மானை* என் ஆவி ஆவிதனை,*
எல்லை இல் சீ* ர் என் கருமாணிக்கச் சுடரை,*
நல்ல அமுதம்* பெறற்கு அரிய வீடும் ஆய்,*
அல்லி மலர் விரை ஒத்து* ஆண் அல்லன் பெண் அலனே.
ஆண் அல்லன் பெண் அல்லன்* அல்லா அலியும் அல்லன்,*
காணலும் ஆகான்* உளன் அல்லன் இல்லை அல்லன்,*
பேணுங்கால் பேணும்* உரு ஆகும் அல்லனும் ஆம்,*
கோணை பெரிது உடைத்து* எம் பெம்மானைக் கூறுதலே.
கூறுதல் ஒன்று ஆராக்* குடக் கூத்த அம்மானைக்,*
கூறுதலே மேவிக்* குருகூர்ச் சடகோபன்,*
கூறின அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
கூறுதல் வல்லார் உளரேல்* கூடுவர் வைகுந்தமே.
வைகுந்தா மணிவண்ணனே* என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,*
வைகும் வைகல் தோறும்* அமுது ஆய வான் ஏறே,
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய் குந்தா* உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..
சிக்கெனச் சிறிது ஓர் இடமும்* புறப்படாத் தன்னுள்ளே,* உலகுகள்
ஒக்கவே விழுங்கிப்* புகுந்தான் புகுந்ததற்பின்,*
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய்* துளக்கு அற்று அமுதம் ஆய்,* எங்கும்
பக்கம் நோக்கு அறியான்* என் பைந்தாமரைக் கண்ணனே.
தாமரைக் கண்ணனை* விண்ணோர் பரவும் தலைமகனை,* துழாய் விரைப்
பூ மருவு கண்ணி* எம் பிரானை பொன்மலையை,*
நாம் மருவி நன்கு ஏத்தி* உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட,* நாவு அலர்
பா மருவி நிற்கத் தந்த* பான்மையே வள்ளலே.
வள்ளலே மதுசூதனா* என் மரகத மலையே,* உனை நினைந்து,
எள்கல் தந்த எந்தாய்* உன்னை எங்ஙனம் விடுகேன்,?*
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடி* களித்து உகந்து உகந்து*
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து* உய்ந்து போந்திருந்தே.
உய்ந்து போந்து என் உலப்பு இலாத* வெம் தீவினைகளை நாசம் செய்து* உனது
அந்தம் இல் அடிமை* அடைந்தேன் விடுவேனோ,?*
ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப்* பாற்கடல் யோக நித்திரை,*
சிந்தை செய்த எந்தாய்* உன்னைச் சிந்தை செய்து செய்தே.
உன்னைச் சிந்தை செய்து செய்து,* உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி* என்
முன்னைத் தீவினைகள்* முழு வேர் அரிந்தனன் யான்,*
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த* இரணியன் அகல் மார்வம் கீண்ட* என்
முன்னைக் கோளரியே* முடியாதது என் எனக்கே.
முடியாதது என் எனக்கேல் இனி?* முழு ஏழ் உலகும் உண்டான்* உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான்* அகல்வானும் அல்லன் இனி,*
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து* எமர் கீழ் மேல் எழு பிறப்பும்,*
விடியா வெம் நரகத்து என்றும்* சேர்தல் மாறினரே.
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து* அடியை அடைந்து உள்ளம் தேறி*
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம்* யான் மூழ்கினன்,*
பாறிப் பாறி அசுரர் தம்* பல் குழாங்கள் நீறு எழ,* பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய்* உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.
எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய்* இலங்கை செற்றாய்,* மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ* ஒரு வாளி கோத்த வில்லா,*
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே* உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா,* வான் ஏறே* இனி எங்குப் போகின்றதே?
போகின்ற காலங்கள் போய காலங்கள்* போகு காலங்கள்* தாய் தந்தை உயிர்-
ஆகின்றாய்* உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்* நாதனே! பரமா,* தண் வேங்கடம்
மேகின்றாய்* தண் துழாய் விரை நாறு கண்ணியனே.
கண்ணித் தண் அம் துழாய் முடிக்* கமலத் தடம் பெருங் கண்ணனைப்,* புகழ்
நண்ணி தென் குருகூர்ச்* சடகோபன் மாறன் சொன்ன,*
எண்ணில் சோர்வு இல் அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,*
பண்ணில் பாட வல்லார்* அவர் கேசவன் தமரே.
கேசவன் தமர்* கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மா சதிர் இது பெற்று* நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்* விண்ணோர்
நாயகன்,* எம் பிரான் எம்மான்* நாராயணனாலே.
நாரணன் முழு ஏழ் உலகுக்கும்* நாதன் வேத மயன்,*
காரணம் கிரிசை கருமம் இவை* முதல்வன் எந்தை,*
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்* தொழுது ஏத்த நின்று,*
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்* என் மாதவனே.
மாதவன் என்றதே கொண்டு* என்னை இனி இப்பால் பட்டது,*
யாது அவங்களும் சேர்கொடேன் என்று* என்னுள் புகுந்து இருந்து,*
தீது அவம் கெடுக்கும் அமுதம்* செந்தாமரைக் கண் குன்றம்,*
கோது அவம் இல் என் கன்னல் கட்டி* எம்மான் என் கோவிந்தனே.
கோவிந்தன் குடக் கூத்தன்* கோவலன் என்று என்றே குனித்துத்*
தேவும் தன்னையும்* பாடி ஆடத் திருத்தி* என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும்* பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மேவும் தன்மையம் ஆக்கினான்* வல்லன் எம்பிரான் விட்டுவே.
விட்டு இலங்கு செஞ்சோதித்* தாமரை பாதம் கைகள் கண்கள,*
விட்டு இலங்கு கருஞ்சுடர்* மலையே திரு உடம்பு,*
விட்டு இலங்கு மதியம் சீர்* சங்கு சக்கரம் பரிதி,*
விட்டு இலங்கு முடி அம்மான்* மதுசூதனன் தனக்கே.
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று* எத்தாலும் கருமம் இன்றி,*
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட* நின்று ஊழி ஊழிதொறும்,*
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்* எனக்கே அருள்கள் செய்ய,*
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்* திரிவிக்கிரமனையே.
திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண்* எம்மான் என் செங்கனி வாய்*
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு* நிறத்தனன் என்று என்று,* உள்ளி
பரவிப் பணிந்து* பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,*
மருவித் தொழும் மனமே தந்தாய்* வல்லைகாண் என் வாமனனே
வாமனன் என் மரகத வண்ணன்* தாமரைக் கண்ணினன்-
காமனைப் பயந்தாய்,* என்று என்று உன் கழல்* பாடியே பணிந்து,*
தூ மனத்தனனாய்ப்* பிறவித் துழதி நீங்க,* என்னைத்
தீ மனம் கெடுத்தாய்* உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.
சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்* என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ,* அலமந்து கண்கள் நீர் மல்கி* வெவ்வுயிர்த்து உயிர்த்து,*
மரீஇய தீவினை மாள இன்பம் வளர* வைகல் வைகல்
இரீஇ* உன்னை என்னுள் வைத்தனை* என் இருடீகேசனே.
இருடீகேசன் எம் பிரான்* இலங்கை அரக்கர் குலம்,*
முருடு தீர்த்த பிரான் எம்மான்* அமரர் பெம்மான் என்று என்று,*
தெருடியாகில் நெஞ்சே வணங்கு* திண்ணம் அறி அறிந்து,*
மருடியேலும் விடேல் கண்டாய்* நம்பி பற்பநாபனையே.
பற்பநாபன் உயர்வு அற உயரும்* பெரும் திறலோன்,*
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு* எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்,* என் அமுதம் கார் முகில் போலும்* வேங்கட நல்
வெற்பன்,* விசும்போர் பிரான்* எந்தை தாமோதரனே.
தாமோதரனை தனி முதல்வனை* ஞாலம் உண்டவனை,*
ஆமோ தரம் அறிய* ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*
தாமோதரன் உரு ஆகிய* சிவற்கும் திசைமுகற்கும்,*
ஆமோ தரம் அறிய* எம்மானை என் ஆழி வண்ணனையே.
வண்ண மா மணிச் சோதியை* அமரர் தலைமகனை,*
கண்ணனை நெடுமாலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
பண்ணிய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,*
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு* அண்ணல் தாள் அணைவிக்குமே.
அணைவது அரவு அணைமேல்* பூம்பாவை ஆகம்
புணர்வது,* இருவர் அவர் முதலும் தானே,*
இணைவன்* ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,*
புணைவன்* பிறவிக்கடல் நீந்துவார்க்கே.
நீந்தும் துயர்ப் பிறவி* உட்பட மற்று எவ் எவையும்,*
நீந்தும் துயர் இல்லா* வீடு முதல் ஆம்,*
பூந் தண் புனல் பொய்கை* யானை இடர் கடிந்த,*
பூந் தண் துழாய்* என் தனி நாயகன் புணர்ப்பே.
புணர்க்கும் அயன் ஆம்* அழிக்கும் அரன் ஆம்,*
புணர்த்த தன் உந்தியொடு* ஆகத்து மன்னி,*
புணர்த்த திருஆகித்* தன் மார்வில் தான்சேர்,*
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு* எங்கும் புலனே.
புலன் ஐந்து மேயும்* பொறி ஐந்தும் நீங்கி,*
நலம் அந்தம் இல்லது ஓர்* நாடு புகுவீர்,*
அலமந்து வீய* அசுரரைச் செற்றான்,*
பலம் முந்து சீரில்* படிமின் ஒவாதே.
ஓவாத் துயர்ப் பிறவி* உட்பட மற்று எவ் எவையும்,*
மூவாத் தனி முதலாய்* மூவுலகும் காவலோன்,*
மா ஆகி ஆமை ஆய்* மீன் ஆகி மானிடம் ஆம்,*
தேவாதி தேவ பெருமான்* என் தீர்த்தனே.
தீர்த்தன் உலகு அளந்த* சேவடிமேல் பூந்தாமம்,*
சேர்த்தி அவையே* சிவன் முடிமேல் தான் கண்டு,*
பார்த்தன் தெளிந்தொழிந்த* பைந்துழாயான் பெருமை,*
பேர்த்தும் ஒருவரால்* பேசக் கிடந்ததே?
கிடந்து இருந்து நின்று அளந்து* கேழல் ஆய் கீழ்ப் புக்கு
இடந்திடும்,* தன்னுள் கரக்கும் உமிழும்,*
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும்* பார் என்னும்
மடந்தையை,* மால் செய்கின்ற,* மால் ஆர் காண்பாரே?
காண்பார் ஆர்? எம் ஈசன்* கண்ணனை என்காணுமாறு,?*
ஊண் பேசில் எல்லா* உலகும் ஓர் துற்று ஆற்றா,*
சேணபாலவீடோ* உயிரோ மற்று எப் பொருட்கும்,*
ஏண் பாலும் சோரான்* பரந்து உளன் ஆம் எங்குமே.
எங்கும் உளன் கண்ணன் என்ற* மகனைக் காய்ந்து,*
இங்கு இல்லையால் என்று* இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்
சிங்கப் பிரான் பெருமை* ஆராயும் சீர்மைத்தே?
சீர்மை கொள் வீடு* சுவர்க்கம் நரகு ஈறா,*
ஈர்மை கொள் தேவர்* நடுவா மற்று எப் பொருட்கும்,*
வேர் முதல் ஆய் வித்து ஆய்* பரந்து தனி நின்ற,*
கார் முகில் போல் வண்ணன்* என் கண்ணனை நான் கண்டேனே.
கண் தலங்கள் செய்ய* கரு மேனி அம்மானை,*
வண்டு அலம்பும் சோலை* வழுதி வள நாடன்,*
பண் தலையில் சொன்ன தமிழ்* ஆயிரத்து இப் பத்தும் வலார்,*
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்* எம் மா வீடே.
எம்மாவீட்டுத்* திறமும் செப்பம்,* நின்
செம்மா பாடபற்புத்* தலைசேர்த்து ஒல்லை,-
கைம்மா துன்பம்* கடிந்த பிரானே,*
அம்மா அடியேன்* வேண்டுவது ஈதே.
ஈதே யான் உன்னைக்* கொள்வது எஞ்ஞான்றும்,* என்
மை தோய் சோதி* மணிவண்ண எந்தாய்,*
எய்தா நின் கழல்* யான் எய்த,* ஞானக்
கைதா* காலக் கழிவு செய்யேலே.
செய்யேல் தீவினை என்று* அருள் செய்யும்,* என்
கை ஆர் சக்கரக்* கண்ண பிரானே,*
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும்* நின் கழல்
எய்யாது ஏத்த,* அருள்செய் எனக்கே.
எனக்கே ஆட்செய்* எக்காலத்தும் என்று,* என்
மனக்கே வந்து* இடைவீடு இன்றி மன்னி,*
தனக்கே ஆக* எனைக் கொள்ளும் ஈதே,*
எனக்கே கண்ணனை* யான் கொள் சிறப்பே.
சிறப்பில் வீடு* சுவர்க்கம் நரகம்,*
இறப்பில் எய்துக* எய்தற்க,* யானும்
பிறப்பு இல்* பல் பிறவிப் பெருமானை,*
மறப்பு ஒன்று இன்றி* என்றும் மகிழ்வனே.
மகிழ் கொள் தெய்வம்* உலோகம் அலோகம்,*
மகிழ் கொள் சோதி* மலர்ந்த அம்மானே,*
மகிழ் கொள் சிந்தை* சொல் செய்கை கொண்டு,* என்றும்
மகிழ்வுற்று* உன்னை வணங்க வாராயே.
வாராய்* உன் திருப் பாத மலர்க்கீழ்ப்,*
பேராதே யான் வந்து* அடையும்படி
தாராதாய்,* உன்னை என்னுள்* வைப்பில் என்றும்
ஆராதாய்,* எனக்கு என்றும் எக்காலே.
எக்காலத்து எந்தையாய்* என்னுள் மன்னில்,* மற்று
எக் காலத்திலும்* யாதொன்றும் வேண்டேன்,*
மிக்கார் வேத* விமலர் விழுங்கும்,* என்
அக்காரக் கனியே* உன்னை யானே.
யானே என்னை* அறியகிலாதே,*
யானே என் தனதே* என்று இருந்தேன்,*
யானே நீ* என் உடைமையும் நீயே,*
வானே ஏத்தும்* எம் வானவர் ஏறே
ஏறேல் ஏழும்* வென்று ஏர் கொள் இலங்கையை,*
நீறே செய்த* நெடுஞ் சுடர்ச் சோதி,*
தேறேல் என்னை* உன் பொன் அடி சேர்த்து* ஒல்லை-
வேறே போக* எஞ்ஞான்றும் விடலே.
விடல் இல் சக்கரத்து* அண்ணலை மேவல்*
விடல் இல் வண் குருகூர்ச்* சடகோபன்,*
கெடல் இல் ஆயிரத்துள்* இவை பத்தும்,*
கெடல் இல் வீடு செய்யும்* கிளர்வார்க்கே.
கிளர் ஒளி இளமை* கெடுவதன் முன்னம்,*
வளர் ஒளி மாயோன்* மருவிய கோயில்,*
வளர் இளம் பொழில் சூழ்* மாலிருஞ்சோலை,*
தளர்வு இலர் ஆகிச்* சார்வது சதிரே.
சதிர் இள மடவார்* தாழ்ச்சியை மதியாது,*
அதிர் குரல் சங்கத்து* அழகர் தம் கோயில்,*
மதி தவழ் குடுமி* மாலிருஞ்சோலைப்,*
பதியது ஏத்தி* எழுவது பயனே.
பயன் அல்ல செய்து* பயன் இல்லை நெஞ்சே,*
புயல் மழை வண்ணர்* புரிந்து உறை கோயில்,*
மயல் மிகு பொழில் சூழ்* மாலிருஞ்சோலை,*
அயல்மலை அடைவது* அது கருமமே.
கரும வன் பாசம்* கழித்து உழன்று உய்யவே,*
பெருமலை எடுத்தான்* பீடு உறை கோயில்,*
வரு மழை தவழும்* மாலிருஞ்சோலைத்,*
திருமலை அதுவே* அடைவது திறமே.
திறம் உடை வலத்தால்* தீவினை பெருக்காது,*
அறம் முயல் ஆழிப்* படையவன் கோயில்,*
மறு இல் வண் சுனை சூழ்* மாலிருஞ்சோலைப்,*
புறமலை சாரப்* போவது கிறியே.
கிறி என நினைமின்* கீழ்மை செய்யாதே,*
உறி அமர் வெண்ணெய்* உண்டவன் கோயில்,*
மறியொடு பிணை சேர்* மாலிருஞ்சோலை,*
நெறி பட அதுவே* நினைவது நலமே.
நலம் என நினைமின்* நரகு அழுந்தாதே,*
நிலம் முனம் இடந்தான்* நீடு உறை கோயில்,*
மலம் அறு மதி சேர்* மாலிருஞ்சோலை,*
வலம் முறை எய்தி,* மருவுதல் வலமே.
வலஞ்செய்து வைகல்* வலம் கழியாதே,*
வலஞ்செய்யும் ஆய* மாயவன் கோயில்,*
வலஞ்செய்யும் வானோர்* மாலிருஞ்சோலை,,*
வலஞ்செய்து நாளும்* மருவுதல் வழக்கே.
வழக்கு என நினைமின்* வல்வினை மூழ்காது,*
அழக்கொடி அட்டான்* அமர் பெருங்கோயில்,*
மழக் களிற்று இனம் சேர்* மாலிருஞ்சோலை,*
தொழக் கருதுவதே* துணிவது சூதே.
சூது என்று களவும்* சூதும் செய்யாதே,*
வேதம் முன் விரித்தான்* விரும்பிய கோயில்,*
மாது உறு மயில் சேர்* மாலிருஞ்சோலைப்,*
போது அவிழ் மலையே* புகுவது பொருளே.
பொருள் என்று இவ் உலகம்* படைத்தவன் புகழ்மேல்,*
மருள் இல் வண் குருகூர்* வண் சடகோபன்,*
தெருள் கொள்ளச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்து,*
அருளுடையவன் தாள்* அணைவிக்கும் முடித்தே.