பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வாயும் திரை உகளும்*  கானல் மடநாராய்,* 
    ஆயும் அமர் உலகும்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,* 

    நோயும் பயலைமையும்*  மீது ஊர எம்மேபோல்,* 
    நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.  


    கோள் பட்ட சிந்தையையாய்க்*  கூர்வாய அன்றிலே,* 
    சேண் பட்டயாமங்கள்*  சேராது இரங்குதியால்,*

    ஆள் பட்ட எம்மேபோல்,*  நீயும் அரவு அணையான்,* 
    தாள் பட்ட தண் துழாய்த்*  தாமம் காமுற்றாயே.   


    காமுற்ற கையறவோடு*  எல்லே இராப்பகல்,* 
    நீ முற்றக் கண்துயிலாய்*  நெஞ்சு உருகி ஏங்குதியால்,*

    தீ முற்றத் தென் இலங்கை*  ஊட்டினான் தாள் நயந்த,* 
    யாம் உற்றது உற்றாயோ?*  வாழி கனை கடலே


    கடலும் மலையும்*  விசும்பும் துழாய் எம்போல்,* 
    சுடர் கொள் இராப்பகல்*  துஞ்சாயால் தண் வாடாய்,* 

    அடல் கொள் படை ஆழி*  அம்மானைக் காண்பான் நீ,* 
    உடலம் நோய் உற்றாயோ*  ஊழிதோறு ஊழியே.


    ஊழிதோறு ஊழி*  உலகுக்கு நீர்கொண்டு,* 
    தோழியரும் யாமும் போல்*  நீராய் நெகிழ்கின்ற,*

    வாழிய வானமே*  நீயும் மதுசூதன்,* 
    பாழிமையில் பட்டு அவன்கண்*  பாசத்தால் நைவாயே.


    நைவாய எம்மேபோல்*  நாள் மதியே நீ இந் நாள்,* 
    மை வான் இருள் அகற்றாய்*  மாழாந்து தேம்புதியால்,*

    ஐ வாய் அரவு அணைமேல்*  ஆழிப் பெருமானார்,* 
    மெய் வாசகம் கேட்டு*  உன் மெய்ந்நீர்மை தோற்றாயே


    தோற்றோம் மட நெஞ்சம்*  எம் பெருமான் நாரணற்கு*  எம் 
    ஆற்றாமை சொல்லி*  அழுவோமை நீநடுவே,*

    வேற்றோர் வகையில்*  கொடிதாய் எனை ஊழி,* 
    மாற்றாண்மை நிற்றியோ*  வாழி கனை இருளே.


    இருளின் திணி வண்ணம்*  மாநீர்க்கழியே போய்,* 
    மருளுற்று இராப்பகல்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*

    உருளும் சகடம்*  உதைத்த பெருமானார்,* 
    அருளின் பெரு நசையால்*  ஆழாந்து நொந்தாயே.


    நொந்து ஆராக் காதல் நோய்*  மெல் ஆவி உள் உலர்த்த,* 
    நந்தா விளக்கமே,*  நீயும் அளியத்தாய்,*

    செந்தாமரைத் தடங்கண்*  செங்கனி வாய் எம் பெருமான்,* 
    அம் தாமம் தண் துழாய்*  ஆசையால் வேவாயே.  


    வேவு ஆரா வேட்கை நோய்*  மெல் ஆவி உள் உலர்த்த,* 
    ஓவாது இராப்பகல்*  உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*

    மா வாய் பிளந்து*  மருதிடை போய் மண் அளந்த,* 
    மூவா முதல்வா*  இனி எம்மைச் சோரேலே.


    சோராத எப் பொருட்கும்*  ஆதியாம் சோதிக்கே,* 
    ஆராத காதல்*  குருகூர்ச் சடகோபன்,*

    ஓராயிரம் சொன்ன*  அவற்றுள் இவை பத்தும்,* 
    சோரார் விடார் கண்டீர்*  வைகுந்தம் திண்ணனவே.


    திண்ணன் வீடு*  முதல் முழுதும் ஆய்,* 
    எண்ணின் மீதியன்*  எம் பெருமான்,*

    மண்ணும் விண்ணும் எல்லாம்*  உடன் உண்ட,*  நம் 
    கண்ணன் கண் அல்லது*  இல்லை ஓர் கண்ணே.


    ஏ பாவம் பரமே*  ஏழ் உலகும்,* 
    ஈ பாவம் செய்து*  அருளால் அளிப்பார் ஆர்,*

    மா பாவம் விட*  அரற்குப் பிச்சை பெய்,* 
    கோபால கோளரி* ஏறு அன்றியே.


    ஏறனை பூவனை*  பூமகள் தன்னை,* 
    வேறுஇன்றி விண் தொழத்*  தன்னுள் வைத்து,*

    மேல் தன்னை மீதிட*  நிமிர்ந்து மண் கொண்ட.* 
    மால் தனின் மிக்கும் ஓர்*  தேவும் உளதே.  


    தேவும் எப் பொருளும் படைக்கப்,* 
    பூவில் நான்முகனைப் படைத்த,*

    தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,* 
    பூவும் பூசனையும் தகுமே.


    தகும் சீர்த்*  தன் தனி முதலினுள்ளே,* 
    மிகும் தேவும்*  எப் பொருளும் படைக்கத்,*

    தகும் கோலத்*  தாமரைக் கண்ணன் எம்மான்,* 
    மிகும் சோதி*  மேல் அறிவார் எவரே. 


    எவரும் யாவையும்*  எல்லாப் பொருளும்,* 
    கவர்வு இன்றித்*  தன்னுள் ஒடுங்க நின்ற,*

    பவர் கொள் ஞான*  வெள்ளச் சுடர் மூர்த்தி,* 
    அவர் எம் ஆழி*  அம் பள்ளியாரே,  


    பள்ளி ஆல் இலை*  ஏழ் உலகும் கொள்ளும்,* 
    வள்ளல்*  வல் வயிற்றுப் பெருமான்,*

    உள் உள் ஆர் அறிவார்*  அவன் தன்,* 
    கள்ள மாய*  மனக்கருத்தே.


    கருத்தில் தேவும்*  எல்லாப் பொருளும்,* 
    வருத்தித்த*  மாயப் பிரான் அன்றி,*  யாரே

    திருத்தித்*  திண் நிலை மூவுலகும்*  தம்முள் 
    இருத்திக்*  காக்கும் இயல்வினரே. 


    காக்கும் இயல்வினன்*  கண்ண பெருமான்,* 
    சேர்க்கை செய்து*  தன் உந்தியுள்ளே,*

    வாய்த்த திசைமுகன்*  இந்திரன் வானவர்,* 
    ஆக்கினான்*  தெய்வ உலகுகளே.  


    கள்வா எம்மையும்*  ஏழ் உலகும்,*  நின் 
    உள்ளே தோற்றிய*  இறைவ! என்று,*

    வெள் ஏறன் நான்முகன்*  இந்திரன் வானவர்,* 
    புள் ஊர்தி*  கழல் பணிந்து ஏத்துவரே.   


    ஏத்த ஏழ் உலகும் கொண்ட*  கோலக் 
    கூத்தனைக்,*  குருகூர்ச் சடகோபன் சொல்,*

    வாய்த்த ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
    ஏத்த வல்லவர்க்கு*  இல்லை ஓர் ஊனமே.   


    ஊனில் வாழ் உயிரே*  நல்லை போ உன்னைப் பெற்று,* 
    வான் உளார் பெருமான்*  மதுசூதன் என் அம்மான்,*

    தானும் யானும் எல்லாம்*  தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,* 
    தேனும் பாலும் நெய்யும்*  கன்னலும் அமுதும் ஒத்தே.  


    ஒத்தார் மிக்காரை*  இலையாய மாமாய,* 
    ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய்,*  என்னைப் பெற்ற- 

    அத் தாய் ஆய் தந்தை ஆய்*  அறியாதன அறிவித்து,* 
    அத்தா, நீ செய்தன*  அடியேன் அறியேனே.


    அறியாக் காலத்துள்ளே*  அடிமைக்கண் அன்பு செய்வித்து,* 
    அறியா மா மாயத்து*  அடியேனை வைத்தாயால்,*

    அறியாமைக் குறள் ஆய்*  நிலம் மாவலி மூவடி என்று,* 
    அறியாமை வஞ்சித்தாய்*  எனது ஆவியுள் கலந்தே.


    எனது ஆவியுள் கலந்த*  பெரு நல் உதவிக் கைம்மாறு,* 
    எனது ஆவி தந்தொழிந்தேன்,*  இனி மீள்வது என்பது உண்டே,*

    எனது ஆவி ஆவியும் நீ*  பொழில் ஏழும் உண்ட எந்தாய்,* 
    எனது ஆவி யார்? யான் ஆர்?*  தந்த நீ கொண்டாக்கினையே.  


    இனி யார் ஞானங்களால்*  எடுக்கல் எழாத எந்தாய்,* 
    கனிவார் வீட்டு இன்பமே*  என் கடல் படா அமுதே,*

    தனியேன் வாழ் முதலே*  பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,* 
    நுனி ஆர் கோட்டில் வைத்தாய்*  நுன பாதம் சேர்ந்தேனே.


    சேர்ந்தார் தீவினைகட்கு*  அரு நஞ்சை திண் மதியை,* 
    தீர்ந்தார் தம் மனத்துப்*  பிரியாது அவர் உயிரைச்,*

    சோர்ந்தே புகல் கொடாச் சுடரை*  அரக்கியை மூக்கு- 
    ஈர்ந்தாயை,*  அடியேன் அடைந்தேன்*  முதல் முன்னமே.


    முன் நல் யாழ் பயில் நூல்*  நரம்பின் முதிர் சுவையே,* 
    பல் நலார் பயிலும்*  பரனே பவித்திரனே,*

    கன்னலே அமுதே*  கார் முகிலே என் கண்ணா,* 
    நின் அலால் இலேன்காண்*  என்னை நீ குறிக்கொள்ளே.


    குறிக்கொள் ஞானங்களால்*  எனை ஊழி செய் தவமும்,* 
    கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*

    உறிக்கொண்ட வெண்ணெய் பால்*  ஒளித்து உண்ணும் அம்மான் பின்,* 
    நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்*  பிறவித் துயர் கடிந்தே.


    கடி வார் தண் அம் துழாய்க்*  கண்ணன் விண்ணவர் பெருமான்,* 
    படி வானம் இறந்த*  பரமன் பவித்திரன் சீர்,*

    செடி ஆர் நோய்கள் கெட*  படிந்து குடைந்து ஆடி,* 
    அடியேன் வாய்மடுத்துப்*  பருகிக் களித்தேனே. 


    களிப்பும் கவர்வும் அற்று*  பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,* 
    ஒளிக்கொண்ட சோதியுமாய்*  உடன்கூடுவது என்று கொலோ,*

    துளிக்கின்ற வான் இந்நிலம்*  சுடர் ஆழி சங்கு ஏந்தி,* 
    அளிக்கின்ற மாயப் பிரான்*  அடியார்கள் குழாங்களையே.


    குழாம் கொள் பேர் அரக்கன்*  குலம் வீய முனிந்தவனை,* 
    குழாம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த,*

    குழாம் கொள் ஆயிரத்துள்*  இவை பத்தும் உடன் பாடி,* 
    குழாங்களாய் அடியீர் உடன்*  கூடிநின்று ஆடுமினே. 


    ஆடி ஆடி*  அகம் கரைந்து,*  இசை 
    பாடிப் பாடிக்*  கண்ணீர் மல்கி,*  எங்கும்

    நாடி நாடி*  நரசிங்கா என்று,* 
    வாடி வாடும்*  இவ் வாள் நுதலே.   


    வாள் நுதல்*  இம் மடவரல்,*  உம்மைக் 
    காணும் ஆசையுள்*  நைகின்றாள்,*  விறல்

    வாணன்*  ஆயிரம் தோள் துணித்தீர்,*  உம்மைக் 
    காண*  நீர் இரக்கம் இலீரே. 


    இரக்க மனத்தோடு*  எரி அணை,* 
    அரக்கும் மெழுகும்*  ஒக்கும் இவள்,*

    இரக்கம் எழீர்*  இதற்கு என் செய்கேன்,* 
    அரக்கன் இலங்கை*  செற்றீருக்கே.   


    இலங்கை செற்றவனே என்னும்,*  பின்னும் 
    வலம் கொள்*  புள் உயர்த்தாய் என்னும்,*  உள்ளம்

    மலங்க*  வெவ் உயிர்க்கும்,*  கண்ணீர் மிகக் 
    கலங்கிக்*  கைதொழும் நின்று இவளே


    இவள் இராப்பகல்*  வாய்வெரீ இத்,*  தன 
    குவளை ஒண்*  கண்ண நீர் கொண்டாள்,*  வண்டு

    திவளும்*  தண் அம் துழாய் கொடீர்,*  என 
    தவள வண்ணர்*  தகவுகளே. 


    தகவு உடையவனே என்னும்,*  பின்னும் 
    மிக விரும்பும்*  பிரான் என்னும்,*  எனது

    அக உயிர்க்கு*  அமுதே என்னும்,*  உள்ளம் 
    உக உருகி*  நின்று உள் உளே.


    உள் உள் ஆவி*  உலர்ந்து உலர்ந்து,*  என 
    வள்ளலே*  கண்ணனே என்னும்,*  பின்னும்

    வெள்ள நீர்க்*  கிடந்தாய் என்னும்,*  என 
    கள்விதான்*  பட்ட வஞ்சனையே.


    வஞ்சனே என்னும்*  கைதொழும்,*  தன 
    நெஞ்சம்வேவ*  நெடிது உயிர்க்கும்,*  விறல்

    கஞ்சனை*  வஞ்சனை செய்தீர்,*  உம்மைத் 
    தஞ்சம் என்று*  இவள் பட்டனவே.     


    பட்ட போது*  எழு போது அறியாள்,*  விரை 
    மட்டு அலர்*  தண் துழாய் என்னும்,*  சுடர்

    வட்ட வாய்*  நுதி நேமியீர்,*  நுமது 
    இட்டம் என்கொல்*  இவ்ஏழைக்கே.


    ஏழை பேதை*  இராப்பகல்,*  தன 
    கேழ் இல் ஒண்*  கண்ண நீர் கொண்டாள்,*  கிளர்

    வாழ்வை வேவ*  இலங்கை செற்றீர்.*  இவள் 
    மாழை நோக்கு ஒன்றும்*  வாட்டேன்மினே      


    வாட்டம் இல் புகழ்*  வாமனனை*  இசை 
    கூட்டி*  வண் சடகோபன் சொல்,*  அமை 

    பாட்டு*  ஓர் ஆயிரத்து இப் பத்தால்,*  அடி 
    சூட்டலாகும்*  அம் தாமமே.      


    அம் தாமத்து அன்பு செய்து*  என் ஆவி சேர் அம்மானுக்கு,* 
    அம் தாமம் வாழ் முடி சங்கு*  ஆழி நூல் ஆரம் உள,*

    செந்தாமரைத்தடம் கண்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
    செந்தாமரை அடிகள்*  செம்பொன் திரு உடம்பே.


    திரு உடம்பு வான் சுடர்*  செந்தாமரை கண் கை கமலம்,* 
    திரு இடமே மார்வம்*  அயன் இடமே கொப்பூழ்,* 

    ஒருவு இடமும்*  எந்தை பெருமாற்கு அரனே ஓ,* 
    ஒருவு இடம் ஒன்று இன்றி*  என்னுள் கலந்தானுக்கே.


    என்னுள் கலந்தவன்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
    மின்னும் சுடர் மலைக்குக்*  கண் பாதம் கை கமலம்,*

    மன்னும் முழு ஏழ் உலகும்*  வயிற்றின் உள,* 
    தன்னுள் கலவாதது*  எப் பொருளும் தான் இலையே.


    எப் பொருளும் தான் ஆய்*  மரகதக் குன்றம் ஒக்கும்.* 
    அப்பொழுதைத் தாமரைப்பூக்*  கண் பாதம் கை கமலம்,*

    எப்பொழுதும் நாள் திங்கள்*  ஆண்டு ஊழி ஊழிதொறும்,* 
    அப்பொழுதைக்கு அப்பொழுது*  என் ஆரா அமுதமே.      


    ஆரா அமுதமாய்*  அல் ஆவியுள் கலந்த,* 
    கார் ஆர் கருமுகில் போல்*  என் அம்மான் கண்ணனுக்கு,*

    நேரா வாய் செம்பவளம்*  கண் பாதம் கை கமலம்,* 
    பேர் ஆரம் நீள் முடி நாண்,*  பின்னும் இழை பலவே.


    பலபலவே ஆபரணம்*  பேரும் பலபலவே,* 
    பலபலவே சோதி*  வடிவு பண்பு எண்ணில்,*

    பலபல கண்டு உண்டு*  கேட்டு உற்று மோந்து இன்பம்,* 
    பலபலவே ஞானமும்*  பாம்பு அணை மேலாற்கேயோ.        


    பாம்பு அணைமேல் பாற்கடலுள்*  பள்ளி அமர்ந்ததுவும்,* 
    காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்*  ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,*

    தேம் பணைய சோலை*  மராமரம் ஏழ் எய்ததுவும்,* 
    பூம் பிணைய தண் துழாய்ப்*  பொன் முடி அம் போர் ஏறே.


    பொன் முடி அம் போர் ஏற்றை*  எம்மானை நால் தடம் தோள்,* 
    தன் முடிவு ஒன்று இல்லாத*  தண் துழாய் மாலையனை,* 

    என் முடிவு காணாதே*  என்னுள் கலந்தானை,* 
    சொல்முடிவு காணேன் நான்*  சொல்லுவது என் சொல்லீரே.   


    சொல்லீர் என் அம்மானை*  என் ஆவி ஆவிதனை,* 
    எல்லை இல் சீ* ர் என் கருமாணிக்கச் சுடரை,*

    நல்ல அமுதம்*  பெறற்கு அரிய வீடும் ஆய்,* 
    அல்லி மலர் விரை ஒத்து*  ஆண் அல்லன் பெண் அலனே.


    ஆண் அல்லன் பெண் அல்லன்*  அல்லா அலியும் அல்லன்,* 
    காணலும் ஆகான்*  உளன் அல்லன் இல்லை அல்லன்,*

    பேணுங்கால் பேணும்*  உரு ஆகும் அல்லனும் ஆம்,* 
    கோணை பெரிது உடைத்து*  எம் பெம்மானைக் கூறுதலே.  


    கூறுதல் ஒன்று ஆராக்*  குடக் கூத்த அம்மானைக்,* 
    கூறுதலே மேவிக்*  குருகூர்ச் சடகோபன்,*

    கூறின அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
    கூறுதல் வல்லார் உளரேல்*  கூடுவர் வைகுந்தமே.     


    வைகுந்தா மணிவண்ணனே*  என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,* 
    வைகும் வைகல் தோறும்*  அமுது ஆய வான் ஏறே,

    செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து*  அசுரர்க்குத் தீமைகள்- 
    செய் குந்தா*  உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..     


    சிக்கெனச் சிறிது ஓர் இடமும்*  புறப்படாத் தன்னுள்ளே,*  உலகுகள் 
    ஒக்கவே விழுங்கிப்*  புகுந்தான் புகுந்ததற்பின்,*

    மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய்*  துளக்கு அற்று அமுதம் ஆய்,*  எங்கும் 
    பக்கம் நோக்கு அறியான்*  என் பைந்தாமரைக் கண்ணனே.         


    தாமரைக் கண்ணனை*  விண்ணோர் பரவும் தலைமகனை,*  துழாய் விரைப் 
    பூ மருவு கண்ணி*  எம் பிரானை பொன்மலையை,* 

    நாம் மருவி நன்கு ஏத்தி*  உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட,*  நாவு அலர் 
    பா மருவி நிற்கத் தந்த*  பான்மையே வள்ளலே.


    வள்ளலே மதுசூதனா*  என் மரகத மலையே,*  உனை நினைந்து, 
    எள்கல் தந்த எந்தாய்*  உன்னை எங்ஙனம் விடுகேன்,?* 

    வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடி*  களித்து உகந்து உகந்து* 
    உள்ள நோய்கள் எல்லாம் துரந்து*  உய்ந்து போந்திருந்தே.


    உய்ந்து போந்து என் உலப்பு இலாத*  வெம் தீவினைகளை நாசம் செய்து*  உனது 
    அந்தம் இல் அடிமை*  அடைந்தேன் விடுவேனோ,?*

    ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப்*  பாற்கடல் யோக நித்திரை,* 
    சிந்தை செய்த எந்தாய்*  உன்னைச் சிந்தை செய்து செய்தே. 


    உன்னைச் சிந்தை செய்து செய்து,*  உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி*  என் 
    முன்னைத் தீவினைகள்*  முழு வேர் அரிந்தனன் யான்,*

    உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த*  இரணியன் அகல் மார்வம் கீண்ட*  என் 
    முன்னைக் கோளரியே*  முடியாதது என் எனக்கே. 


    முடியாதது என் எனக்கேல் இனி?*  முழு ஏழ் உலகும் உண்டான்*  உகந்து வந்து 
    அடியேன் உட்புகுந்தான்*  அகல்வானும் அல்லன் இனி,*

    செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து*  எமர் கீழ் மேல் எழு பிறப்பும்,* 
    விடியா வெம் நரகத்து என்றும்*  சேர்தல் மாறினரே.


    மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து*  அடியை அடைந்து உள்ளம் தேறி* 
    ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம்*  யான் மூழ்கினன்,*

    பாறிப் பாறி அசுரர் தம்*  பல் குழாங்கள் நீறு எழ,*  பாய் பறவை ஒன்று 
    ஏறி வீற்றிருந்தாய்*  உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.   


    எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய்*  இலங்கை செற்றாய்,*  மராமரம்
    பைந்தாள் ஏழ் உருவ*  ஒரு வாளி கோத்த வில்லா,*

    கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே*  உன்னை என்னுள்ளே குழைத்த எம் 
    மைந்தா,*  வான் ஏறே*  இனி எங்குப் போகின்றதே?


    போகின்ற காலங்கள் போய காலங்கள்*  போகு காலங்கள்*  தாய் தந்தை உயிர்- 
    ஆகின்றாய்*  உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?

    பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்*  நாதனே! பரமா,*  தண் வேங்கடம் 
    மேகின்றாய்*  தண் துழாய் விரை நாறு கண்ணியனே.          


    கண்ணித் தண் அம் துழாய் முடிக்*  கமலத் தடம் பெருங் கண்ணனைப்,*  புகழ் 
    நண்ணி தென் குருகூர்ச்*  சடகோபன் மாறன் சொன்ன,* 

    எண்ணில் சோர்வு இல் அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,* 
    பண்ணில் பாட வல்லார்*  அவர் கேசவன் தமரே. 


    கேசவன் தமர்*  கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
    மா சதிர் இது பெற்று*  நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*

    ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்*  விண்ணோர் 
    நாயகன்,*  எம் பிரான் எம்மான்*  நாராயணனாலே.


    நாரணன் முழு ஏழ் உலகுக்கும்*  நாதன் வேத மயன்,* 
    காரணம் கிரிசை கருமம் இவை*  முதல்வன் எந்தை,*

    சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்*  தொழுது ஏத்த நின்று,* 
    வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்*  என் மாதவனே.   


    மாதவன் என்றதே கொண்டு*  என்னை இனி இப்பால் பட்டது,* 
    யாது அவங்களும் சேர்கொடேன் என்று*  என்னுள் புகுந்து இருந்து,* 

    தீது அவம் கெடுக்கும் அமுதம்*  செந்தாமரைக் கண் குன்றம்,* 
    கோது அவம் இல் என் கன்னல் கட்டி*  எம்மான் என் கோவிந்தனே.


    கோவிந்தன் குடக் கூத்தன்*  கோவலன் என்று என்றே குனித்துத்* 
    தேவும் தன்னையும்*  பாடி ஆடத் திருத்தி*  என்னைக் கொண்டு என்

    பாவம் தன்னையும்*  பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
    மேவும் தன்மையம் ஆக்கினான்*  வல்லன் எம்பிரான் விட்டுவே.


    விட்டு இலங்கு செஞ்சோதித்*  தாமரை பாதம் கைகள் கண்கள,* 
    விட்டு இலங்கு கருஞ்சுடர்*  மலையே திரு உடம்பு,*

    விட்டு இலங்கு மதியம் சீர்*  சங்கு சக்கரம் பரிதி,* 
    விட்டு இலங்கு முடி அம்மான்*  மதுசூதனன் தனக்கே.


    மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று*  எத்தாலும் கருமம் இன்றி,* 
    துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட*  நின்று ஊழி ஊழிதொறும்,*

    எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்*  எனக்கே அருள்கள் செய்ய,* 
    விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்*  திரிவிக்கிரமனையே.  


    திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண்*  எம்மான் என் செங்கனி வாய்* 
    உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு*  நிறத்தனன் என்று என்று,*  உள்ளி

    பரவிப் பணிந்து*  பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,* 
    மருவித் தொழும் மனமே தந்தாய்*  வல்லைகாண் என் வாமனனே


    வாமனன் என் மரகத வண்ணன்*  தாமரைக் கண்ணினன்- 
    காமனைப் பயந்தாய்,*  என்று என்று உன் கழல்*  பாடியே பணிந்து,*

    தூ மனத்தனனாய்ப்*  பிறவித் துழதி நீங்க,*  என்னைத் 
    தீ மனம் கெடுத்தாய்*  உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.    


    சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்*  என்று என்று இராப்பகல் வாய் 
    வெரீஇ,*  அலமந்து கண்கள் நீர் மல்கி*  வெவ்வுயிர்த்து உயிர்த்து,*

    மரீஇய தீவினை மாள இன்பம் வளர*  வைகல் வைகல் 
    இரீஇ*  உன்னை என்னுள் வைத்தனை*  என் இருடீகேசனே. 


    இருடீகேசன் எம் பிரான்*  இலங்கை அரக்கர் குலம்,* 
    முருடு தீர்த்த பிரான் எம்மான்*  அமரர் பெம்மான் என்று என்று,*

    தெருடியாகில் நெஞ்சே வணங்கு*  திண்ணம் அறி அறிந்து,* 
    மருடியேலும் விடேல் கண்டாய்*  நம்பி பற்பநாபனையே.   


    பற்பநாபன் உயர்வு அற உயரும்*  பெரும் திறலோன்,* 
    எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு*  எனக்கே தன்னைத் தந்த

    கற்பகம்,*  என் அமுதம் கார் முகில் போலும்*  வேங்கட நல் 
    வெற்பன்,*  விசும்போர் பிரான்*  எந்தை தாமோதரனே.     


    தாமோதரனை தனி முதல்வனை*  ஞாலம் உண்டவனை,* 
    ஆமோ தரம் அறிய*  ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*

    தாமோதரன் உரு ஆகிய*  சிவற்கும் திசைமுகற்கும்,* 
    ஆமோ தரம் அறிய*  எம்மானை என் ஆழி வண்ணனையே.       


    வண்ண மா மணிச் சோதியை*  அமரர் தலைமகனை,* 
    கண்ணனை நெடுமாலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*

    பண்ணிய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,* 
    பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு*  அண்ணல் தாள் அணைவிக்குமே. 


    அணைவது அரவு அணைமேல்*  பூம்பாவை ஆகம் 
    புணர்வது,*  இருவர் அவர் முதலும் தானே,*

    இணைவன்*  ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,* 
    புணைவன்*  பிறவிக்கடல் நீந்துவார்க்கே.


    நீந்தும் துயர்ப் பிறவி*  உட்பட மற்று எவ் எவையும்,* 
    நீந்தும் துயர் இல்லா*  வீடு முதல் ஆம்,*

    பூந் தண் புனல் பொய்கை*  யானை இடர் கடிந்த,* 
    பூந் தண் துழாய்*  என் தனி நாயகன் புணர்ப்பே.


    புணர்க்கும் அயன் ஆம்*  அழிக்கும் அரன் ஆம்,* 
    புணர்த்த தன் உந்தியொடு*  ஆகத்து மன்னி,* 

    புணர்த்த திருஆகித்*  தன் மார்வில் தான்சேர்,* 
    புணர்ப்பன் பெரும் புணர்ப்பு*  எங்கும் புலனே.


    புலன் ஐந்து மேயும்*  பொறி ஐந்தும் நீங்கி,* 
    நலம் அந்தம் இல்லது ஓர்*  நாடு புகுவீர்,*

    அலமந்து வீய*  அசுரரைச் செற்றான்,* 
    பலம் முந்து சீரில்*  படிமின் ஒவாதே. 


    ஓவாத் துயர்ப் பிறவி*  உட்பட மற்று எவ் எவையும்,* 
    மூவாத் தனி முதலாய்*  மூவுலகும் காவலோன்,*

    மா ஆகி ஆமை ஆய்*  மீன் ஆகி மானிடம் ஆம்,* 
    தேவாதி தேவ பெருமான்*  என் தீர்த்தனே.         


    தீர்த்தன் உலகு அளந்த*  சேவடிமேல் பூந்தாமம்,* 
    சேர்த்தி அவையே*  சிவன் முடிமேல் தான் கண்டு,*

    பார்த்தன் தெளிந்தொழிந்த*  பைந்துழாயான் பெருமை,* 
    பேர்த்தும் ஒருவரால்*  பேசக் கிடந்ததே?        


    கிடந்து இருந்து நின்று அளந்து*  கேழல் ஆய் கீழ்ப் புக்கு 
    இடந்திடும்,*  தன்னுள் கரக்கும் உமிழும்,*

    தடம் பெருந் தோள் ஆரத் தழுவும்*  பார் என்னும் 
    மடந்தையை,*  மால் செய்கின்ற,*  மால் ஆர் காண்பாரே?    


    காண்பார் ஆர்? எம் ஈசன்*  கண்ணனை என்காணுமாறு,?* 
    ஊண் பேசில் எல்லா*  உலகும் ஓர் துற்று ஆற்றா,*

    சேணபாலவீடோ*  உயிரோ மற்று எப் பொருட்கும்,* 
    ஏண் பாலும் சோரான்*  பரந்து உளன் ஆம் எங்குமே.


    எங்கும் உளன் கண்ணன் என்ற*  மகனைக் காய்ந்து,* 
    இங்கு இல்லையால் என்று*  இரணியன் தூண் புடைப்ப,*

    அங்கு அப்பொழுதே*  அவன் வீயத் தோன்றிய,*  என் 
    சிங்கப் பிரான் பெருமை*  ஆராயும் சீர்மைத்தே? 


    சீர்மை கொள் வீடு*  சுவர்க்கம் நரகு ஈறா,* 
    ஈர்மை கொள் தேவர்*  நடுவா மற்று எப் பொருட்கும்,*

    வேர் முதல் ஆய் வித்து ஆய்*  பரந்து தனி நின்ற,* 
    கார் முகில் போல் வண்ணன்*  என் கண்ணனை நான் கண்டேனே.        


    கண் தலங்கள் செய்ய*  கரு மேனி அம்மானை,* 
    வண்டு அலம்பும் சோலை*  வழுதி வள நாடன்,*

    பண் தலையில் சொன்ன தமிழ்*  ஆயிரத்து இப் பத்தும் வலார்,* 
    விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்*  எம் மா வீடே.     


    எம்மாவீட்டுத்*  திறமும் செப்பம்,*  நின் 
    செம்மா பாடபற்புத்*  தலைசேர்த்து ஒல்லை,-

    கைம்மா துன்பம்*  கடிந்த பிரானே,* 
    அம்மா அடியேன்*  வேண்டுவது ஈதே.     


    ஈதே யான் உன்னைக்*  கொள்வது எஞ்ஞான்றும்,*  என் 
    மை தோய் சோதி*  மணிவண்ண எந்தாய்,*

    எய்தா நின் கழல்*  யான் எய்த,*  ஞானக் 
    கைதா* காலக் கழிவு செய்யேலே. 


    செய்யேல் தீவினை என்று*  அருள் செய்யும்,*  என் 
    கை ஆர் சக்கரக்*  கண்ண பிரானே,*

    ஐ ஆர் கண்டம் அடைக்கிலும்*  நின் கழல் 
    எய்யாது ஏத்த,*  அருள்செய் எனக்கே.


    எனக்கே ஆட்செய்*  எக்காலத்தும் என்று,*  என் 
    மனக்கே வந்து*  இடைவீடு இன்றி மன்னி,*

    தனக்கே ஆக*  எனைக் கொள்ளும் ஈதே,* 
    எனக்கே கண்ணனை*  யான் கொள் சிறப்பே. 


    சிறப்பில் வீடு*  சுவர்க்கம் நரகம்,* 
    இறப்பில் எய்துக*  எய்தற்க,*  யானும்

    பிறப்பு இல்*  பல் பிறவிப் பெருமானை,* 
    மறப்பு ஒன்று இன்றி*  என்றும் மகிழ்வனே.


    மகிழ் கொள் தெய்வம்*  உலோகம் அலோகம்,* 
    மகிழ் கொள் சோதி*  மலர்ந்த அம்மானே,*

    மகிழ் கொள் சிந்தை*  சொல் செய்கை கொண்டு,*  என்றும் 
    மகிழ்வுற்று*  உன்னை வணங்க வாராயே.      


    வாராய்*  உன் திருப் பாத மலர்க்கீழ்ப்,* 
    பேராதே யான் வந்து*  அடையும்படி

    தாராதாய்,*  உன்னை என்னுள்*  வைப்பில் என்றும் 
    ஆராதாய்,*  எனக்கு என்றும் எக்காலே.   


    எக்காலத்து எந்தையாய்*  என்னுள் மன்னில்,*  மற்று 
    எக் காலத்திலும்*  யாதொன்றும் வேண்டேன்,*

    மிக்கார் வேத*  விமலர் விழுங்கும்,*  என் 
    அக்காரக் கனியே*  உன்னை யானே.       


    யானே என்னை*  அறியகிலாதே,* 
    யானே என் தனதே*  என்று இருந்தேன்,*

    யானே நீ*  என் உடைமையும் நீயே,* 
    வானே ஏத்தும்*  எம் வானவர் ஏறே


    ஏறேல் ஏழும்*  வென்று ஏர் கொள் இலங்கையை,* 
    நீறே செய்த*  நெடுஞ் சுடர்ச் சோதி,*

    தேறேல் என்னை*  உன் பொன் அடி சேர்த்து*  ஒல்லை- 
    வேறே போக*  எஞ்ஞான்றும் விடலே.  


    விடல் இல் சக்கரத்து*  அண்ணலை மேவல்* 
    விடல் இல் வண் குருகூர்ச்*  சடகோபன்,*

    கெடல் இல் ஆயிரத்துள்*  இவை பத்தும்,* 
    கெடல் இல் வீடு செய்யும்*  கிளர்வார்க்கே.


    கிளர் ஒளி இளமை*  கெடுவதன் முன்னம்,* 
    வளர் ஒளி மாயோன்*  மருவிய கோயில்,*

    வளர் இளம் பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
    தளர்வு இலர் ஆகிச்*  சார்வது சதிரே.  


    சதிர் இள மடவார்*  தாழ்ச்சியை மதியாது,* 
    அதிர் குரல் சங்கத்து*  அழகர் தம் கோயில்,*

    மதி தவழ் குடுமி*  மாலிருஞ்சோலைப்,* 
    பதியது ஏத்தி*  எழுவது பயனே.    


    பயன் அல்ல செய்து*  பயன் இல்லை நெஞ்சே,* 
    புயல் மழை வண்ணர்*  புரிந்து உறை கோயில்,*

    மயல் மிகு பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
    அயல்மலை அடைவது*  அது கருமமே.


    கரும வன் பாசம்*  கழித்து உழன்று உய்யவே,* 
    பெருமலை எடுத்தான்*  பீடு உறை கோயில்,*

    வரு மழை தவழும்*  மாலிருஞ்சோலைத்,* 
    திருமலை அதுவே*  அடைவது திறமே.   


    திறம் உடை வலத்தால்*  தீவினை பெருக்காது,* 
    அறம் முயல் ஆழிப்*  படையவன் கோயில்,*

    மறு இல் வண் சுனை சூழ்*  மாலிருஞ்சோலைப்,* 
    புறமலை சாரப்*  போவது கிறியே.


    கிறி என நினைமின்*  கீழ்மை செய்யாதே,* 
    உறி அமர் வெண்ணெய்*  உண்டவன் கோயில்,*

    மறியொடு பிணை சேர்*  மாலிருஞ்சோலை,* 
    நெறி பட அதுவே*  நினைவது நலமே.


    நலம் என நினைமின்*  நரகு அழுந்தாதே,* 
    நிலம் முனம் இடந்தான்*  நீடு உறை கோயில்,*

    மலம் அறு மதி சேர்*  மாலிருஞ்சோலை,* 
    வலம் முறை எய்தி,*  மருவுதல் வலமே.


    வலஞ்செய்து வைகல்*  வலம் கழியாதே,* 
    வலஞ்செய்யும் ஆய*  மாயவன் கோயில்,*

    வலஞ்செய்யும் வானோர்*  மாலிருஞ்சோலை,,* 
    வலஞ்செய்து நாளும்*  மருவுதல் வழக்கே.


    வழக்கு என நினைமின்*  வல்வினை மூழ்காது,* 
    அழக்கொடி அட்டான்*  அமர் பெருங்கோயில்,*

    மழக் களிற்று இனம் சேர்*  மாலிருஞ்சோலை,* 
    தொழக் கருதுவதே*  துணிவது சூதே.


    சூது என்று களவும்*  சூதும் செய்யாதே,* 
    வேதம் முன் விரித்தான்*  விரும்பிய கோயில்,*

    மாது உறு மயில் சேர்*  மாலிருஞ்சோலைப்,* 
    போது அவிழ் மலையே*  புகுவது பொருளே.     


    பொருள் என்று இவ் உலகம்*  படைத்தவன் புகழ்மேல்,* 
    மருள் இல் வண் குருகூர்*  வண் சடகோபன்,*

    தெருள் கொள்ளச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்து,* 
    அருளுடையவன் தாள்*  அணைவிக்கும் முடித்தே.