பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
காதில் கடிப்புஇட்டு* கலிங்கம் உடுத்து,*
தாதுநல்ல* தண்அம் துழாய் கொடுஅணிந்து,*
போது மறுத்து* புறமே வந்து நின்றீர்,*
ஏதுக்கு இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ! (2)
துவர்ஆடை உடுத்து* ஒருசெண்டு சிலுப்பி,*
கவர்ஆக முடித்து* கலிக்கச்சுக் கட்டி,*
சுவர்ஆர் கதவின் புறமே* வந்து நின்றீர்,*
இவர்ஆர்? இதுஎன்? இதுஎன்? இதுஎன்னோ!
கருளக் கொடி ஒன்றுஉடையீர்!* தனிப்பாகீர்,*
உருளச் சகடம் அது* உறுக்கி நிமிர்த்தீர்,*
மருளைக் கொடுபாடி வந்து* இல்லம் புகுந்தீர்,*
இருளத்து இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
நாமம் பலவும் உடை* நாரண நம்பீ,*
தாமத் துளவம்* மிக நாறிடுகின்றீர்,*
காமன்எனப்பாடி வந்து* இல்லம் புகுந்தீர்,*
ஏமத்து இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
சுற்றும் குழல்தாழ* சுரிகை அணைத்து,*
மற்று பல* மாமணி பொன்கொடுஅணிந்து,*
முற்றம் புகுந்து* முறுவல்செய்து நின்றீர்,*
எற்றுக்கு இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
ஆன்ஆயரும்* ஆநிரையும் அங்குஒழிய,*
கூன்ஆயதுஓர்* கொற்ற வில்ஒன்று கைஏந்தி,*
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்,*
ஏனோர்கள் முன்என்?* இதுஎன்? இதுஎன்னோ!
மல்லே பொருத திரள்தோள்* மணவாளீர்,*
அல்லே அறிந்தோம்* நும் மனத்தின் கருத்தை,*
சொல்லாது ஒழியீர்* சொன்ன போதினால் வாரீர்*
எல்லே இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
புக்குஆடுஅரவம்* பிடித்துஆட்டும் புனிதீர்,*
இக்காலங்கள்* யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்,*
தக்கார் பலர்* தேவிமார் சாலஉடையீர்,*
எக்கே! இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
ஆடி அசைந்து* ஆய்மடவாரொடு நீபோய்க்*
கூடிக் குரவை* பிணை கோமளப் பிள்ளாய்,*
தேடி திருமாமகள்* மண்மகள் நிற்ப,*
ஏடி! இதுஎன்?* இதுஎன்? இதுஎன்னோ!
அல்லிக் கமலக் கண்ணனை* அங்கு ஓர்ஆய்ச்சி*
எல்லிப் பொழுதுஊடிய* ஊடல் திறத்தைக்,*
கல்லின் மலிதோள்* கலியன் சொன்ன மாலை,*
சொல்லித் துதிப்பார் அவர்* துக்கம் இலரே. (2)
திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால்வந்து* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
குருமா மணிஉந்து புனல்* பொன்னித் தென்பால்*
திருமால்சென்று சேர்விடம்* தென் திருப்பேரே. (2)
பேரே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
பேரேன்என்று* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
கார்ஏழ் கடல்ஏழ்* மலைஏழ் உலகு உண்டும்*
ஆராவயிற்றானை* அடங்கப் பிடித்தேனே.
பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பிணிசாரேன்*
மடித்தேன் மனைவாழ்க்கையுள்* நிற்பதுஓர் மாயையை*
கொடிக் கோபுரமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
அடிச்சேர்வது எனக்கு* எளிதுஆயின வாறே.
எளிதாயினவாறுஎன்று* என்கண்கள் களிப்பக்*
களிதாகிய சிந்தையனாய்க்* களிக்கின்றேன்*
கிளிதாவிய சோலைகள்சூழ்* திருப்பேரான்*
தெளிதாகிய* சேண்விசும்பு தருவானே.
வானே தருவான்* எனக்காய் என்னோடுஒட்டி*
ஊன்ஏய் குரம்பை* இதனுள் புகுந்து* இன்று-
தானே தடுமாற்ற* வினைகள் தவிர்த்தான்*
தேனேய் பொழில்* தென்திருப்பேர் நகரானே.
திருப்பேர் நகரான்* திருமாலிருஞ்சோலைப்*
பொருப்பே உறைகின்றபிரான்* இன்றுவந்து*
இருப்பேன் என்று* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
விருப்பே பெற்று* அமுதம்உண்டு களித்தேனே.
உண்டு களித்தேற்கு* உம்பர்என் குறை* மேலைத்-
தொண்டு உகளித்து* அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*
வண்டு களிக்கும் பொழில்சூழ்* திருப்பேரான்*
கண்டு களிப்ப* கண்ணுள்நின்று அகலானே.
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின்கண் பெரியன்*
எண்ணில்நுண் பொருள்* ஏழ்இசையின் சுவைதானே*
வண்ணநல் மணிமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என்மனத்துப்* புகுந்தான் செறிந்துஇன்றே.
இன்று என்னைப் பொருளாக்கி* தன்னை என்னுள் வைத்தான்*
அன்று என்னைப் புறம்போகப்* புணர்த்தது என் செய்வான்?*
குன்றுஎன்னத் திகழ்மாடங்கள்சூழ்* திருப்பேரான்*
ஒன்று எனக்குஅருள்செய்ய* உணர்த்தல்உற்றேனே.
உற்றேன் உகந்து பணிசெய்து* உன்பாதம்-
பெற்றேன்* ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்சூழ்* திருப்பேராற்கு*
அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே. (2)
நில்லா அல்லல்* நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்*
நல்லார் பலர்வாழ்* குருகூர்ச் சடகோபன்*
சொல்லார் தமிழ்* ஆயிரத்துள் இவைபத்தும்-
வல்லார்* தொண்டர்ஆள்வது* சூழ்பொன் விசும்பே. (2)