பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?* நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
சிங்காமை விரித்தவன் எம்பெருமான்* அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*
பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக* பொன்மிடறு அத்தனைபோது,*
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே. (2)
குன்றுஒன்று மத்தா அரவம் அளவி* குரைமாகடலைக் கடைந்திட்டு,* ஒருகால்-
நின்று உண்டை கொண்டுஓட்டி வன்கூன் நிமிர* நினைந்த பெருமான் அது அன்றியும்முன்,*
நன்றுஉண்ட தொல்சீர் மகரக் கடல்ஏழ்* மலைஏழ் உலகுஏழ் ஒழியாமை நம்பி,*
அன்றுஉண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள்* உலப்புஇல் வலியார் அவர்பால்,* வயிரம்-
விளைந்திட்டது என்றுஎண்ணி விண்ணோர் பரவ* அவர் நாள்ஒழித்த பெருமான் முனநாள்,*
வளைந்திட்ட வில்லாளி வல் வாள்எயிற்று* மலைபோல் அவுணன் உடல் வள்உகிரால்,*
அளைந்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
தளர்ந்திட்டு இமையோர் சரண் தாஎன* தான் சரண்ஆய் முரண்ஆயவனை* உகிரால்-
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த* பெருமான் திருமால் விரிநீர் உலகை,*
வளர்ந்திட்ட தொல்சீர் விறல் மாவலியை* மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறள்ஆய்,*
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நீண்டான் குறள்ஆய் நெடுவான்அளவும்* அடியார் படும் ஆழ் துயர்ஆய எல்லாம்,*
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்* செல வைத்த பிரான் அதுஅன்றியும்முன்,*
வேண்டாமை நமன் தமர் என்தமரை* வினவப் பெறுவார் அலர், என்று,* உலகுஏழ்-
ஆண்டான்அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
பழித்திட்ட இன்பப் பயன் பற்றுஅறுத்துப்* பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
ஒழித்திட்டு அவரைத் தனக்குஆக்க வல்ல* பெருமான் திருமால் அதுஅன்றியும்முன்,*
தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்* சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
படைத்திட்டுஅது இவ்வையம் உய்ய முனநாள்* பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
துடைத்திட்டு அவரைத் தனக்குஆக்க என்னத்* தெளியா அரக்கர் திறல்போய் அவிய,*
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா* விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம,* கடலை-
அடைத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நெறித்திட்ட மென்கூழை நல்நேர்இழையோடு* உடன்ஆய வில்என்ன வல்ஏய் அதனை,*
இறுத்திட்டு அவள்இன்பம் அன்போடு அணைந்திட்டு* இளங்கொற்றவன்ஆய் துளங்காத முந்நீர்,*
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்* செழுநீள் முடிதோளொடு தாள் துணிய,*
அறுத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங்கு அரிமா* தொலைய பிரியாது சென்றுஎய்தி, எய்தாது*
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத தன்வாய்* இருகூறுசெய்த பெருமான் முனநாள்*
வரிந்திட்ட வில்லால் மரம்ஏழும் எய்து* மலைபோல் உருவத்து ஓர்இராக்கதி மூக்கு,*
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்* அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்* வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி* உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*
நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்* கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி* இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே. (2)
அருள்பெறுவார் அடியார் தம்* அடியனேற்கு* ஆழியான்-
அருள்தருவான் அமைகின்றான்* அதுநமது விதிவகையே*
இருள்தருமா ஞாலத்துள்* இனிப்பிறவி யான்வேண்டேன்*
மருள்ஒழி நீமடநெஞ்சே!* வாட்டாற்றான் அடிவணங்கே. (2)
வாட்டாற்றான் அடிவணங்கி* மாஞாலப் பிறப்புஅறுப்பான்*
கேட்டாயே மடநெஞ்சே!* கேசவன் எம் பெருமானைப்*
பாட்டுஆய பலபாடி* பழவினைகள் பற்றுஅறுத்து*
நாட்டாரோடு இயல்வுஒழிந்து* நாரணனை நண்ணினமே.
நண்ணினம் நாராயணனை* நாமங்கள் பலசொல்லி*
மண்உலகில் வளம்மிக்க* வாட்டாற்றான் வந்துஇன்று*
விண்உலகம் தருவானாய்* விரைகின்றான் விதிவகையே*
எண்ணின வாறுகா* இக்கருமங்கள் என்நெஞ்சே!
என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு* இரும்தமிழ்நூல்இவைமொழிந்து*
வல்நெஞ்சத்து இரணியனை* மார்வு இடந்த வாட்டாற்றான்*
மன்னஞ்ச பாரதத்துப்* பாண்டவர்க்காப் படை தொட்டான்*
நல்நெஞ்சே! நம்பெருமான்* நமக்கு அருள்தான் செய்வானே.
வான்ஏற வழிதந்த* வாட்டாற்றான் பணிவகையே*
நான்ஏறப் பெறுகின்றேன்* நரகத்தை நகுநெஞ்சே*
தேன்ஏறு மலர்த்துளவம்* திகழ்பாதன்* செழும்பறவை-
தான்ஏறித் திரிவான* தாள்இணை என்தலைமேலே
தலைமேல தாள்இணைகள்* தாமரைக்கண் என்அம்மான்*
நிலைபேரான் எனநெஞ்சத்து* எப்பொழுதும் எம்பெருமான்*
மலைமாடத்து அரவுஅணைமேல்* வாட்டாற்றான் மதம்மிக்க*
கொலையானை மருப்புஒசித்தான்* குரைகழல்கள் குறுகினமே.
குரைகழல்கள் குறுகினம்* நம் கோவிந்தன் குடிகொண்டான்*
திரைகுழுவு கடல்புடைசூழ்* தென்நாட்டுத் திலதமன்ன*
வரைகுழுவு மணிமாட* வாட்டாற்றான் மலர்அடிமேல்*
விரைகுழுவு நறும்துளவம்* மெய்ந்நின்று கமழுமே.
மெய்ந்நின்று கமழ்துளவ* விரைஏறு திருமுடியன்*
கைந்நின்ற சக்கரத்தன்* கருதும்இடம் பொருதுபுனல்*
மைந்நின்ற வரைபோலும்* திருஉருவ வாட்டாற்றாற்கு*
எந்நன்றி செய்தேனா* என்நெஞ்சில் திகழ்வதுவே?
திகழ்கின்ற திருமார்பில்* திருமங்கை தன்னோடும்*
திகழ்கின்ற திருமாலார்* சேர்விடம்தண் வாட்டாறு*
புகழ்நின்ற புள்ஊர்தி* போர்அரக்கர் குலம்கெடுத்தான்*
இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து* எப்பொழுதும் பிரியானே.
பிரியாதுஆட் செய்என்று* பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்*
அரியாகி இரணியனை* ஆகம்கீண்டான் அன்று*
பெரியார்க்கு ஆட்பட்டக்கால்* பெறாதபயன் பெறுமாறு*
வரிவாள் வாய்அரவுஅணைமேல்* வாட்டாற்றான் காட்டினனே.
காட்டித்தன் கனைகழல்கள்* கடுநரகம் புகல்ஒழித்த*
வாட்டாற்று எம்பெருமானை* வளங்குருகூர்ச் சடகோபன்*
பாட்டாய தமிழ்மாலை* ஆயிரத்துள் இப்பத்தும்-
கேட்டு ஆரார் வானவர்கள்* செவிக்குஇனிய செஞ்சொல்லே. (2)