பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்* பிறர் மக்கள் தம்மை*
ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று* இரப்பன் உரப்ப கில்லேன்*
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்* நங்கைகாள்! நான்என் செய்கேன்?
தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்* தயிர்கடை கின்றான் போலும்! (2)
காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்* கண்டே போனேன்,*
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன்அல்லால்* மற்று வந்தாரும் இல்லை,*
மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்* வெண்ணெயேஅன்று, இருந்த*
பாலும் பதின்குடம் கண்டிலேன்* பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ!
தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள்!* உறி மேலைத் தடாநிறைந்த,*
வெள்ளி மலைஇருந்தால்ஒத்த வெண்ணெயை* வாரி விழுங்கி யிட்டு,*
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்* கைஎல்லாம் நெய்,* வயிறு-
பிள்ளை பரம்அன்று இவ்ஏழ்உலகும் கொள்ளும்* பேதையேன் என்செய்கேனோ!
மைந்நம்பு வேல்கண்நல்லாள்* முன்னம் பெற்ற வளைவண்ண நல்மா மேனி,*
தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது* அவன் இவை செய்தறியான்*
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்* பொதிஅறை போகின்றவா தவழ்ந்திட்டு,*
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வுஇல்லை* என்செய்கேன் என்செய்கேனோ!
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்* தோழிமார் ஆரும்இல்லை,*
சந்த மலர்க்குழலாள்* தனியே விளையாடும்இடம் குறுகி,*
பந்து பறித்து துகில்பற்றிக் கீறி* படிறன் படிறு செய்யும்,*
நந்தன் மதலைக்கு இங்குஎன்கடவோம்? நங்காய்!* என்செய்கேன் என்செய்கேனோ!
மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்* நந்தன் பெற்ற மதலை,*
அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே* அல்லில்தான் வந்த பின்னை,*
கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மி* கமலச் செவ்வாய் வெளுப்ப,*
என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!* என்செய்கேன் என்செய்கேனோ!
ஆயிரம் கண்உடை இந்திரனாருக்கு அன்று* ஆயர் விழவுஎடுப்ப,*
பாசனம் நல்லன பண்டிகளால்* புகப் பெய்த அதனை எல்லாம்,*
போயிருந்து அங்குஒரு பூத வடிவுகொண்டு* உன்மகன் இன்று நங்காய்,*
மாயன் அதனை எல்லாம் முற்ற* வாரி வளைத்து உண்டுஇருந்தான் போலும்!
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்* ஓர்ஓர்குடம் துற்றிடும்என்று,*
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்* நான்இதற்குஎள்கி இவனை நங்காய்*
சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று* இரப்பன் உரப்பகில்லேன்*
பேய்ச்சி முலைஉண்ட பின்னை* இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே!
ஈடும் வலியும் உடைய* இந் நம்பி பிறந்த எழு திங்களில்,*
ஏடுஅலர் கண்ணியினானை வளர்த்தி* யமுனை நீராடப் போனேன்,*
சேடன் திருமறு மார்வன்* கிடந்து திருவடியால்,* மலை போல்-
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை* உரப்புவது அஞ்சுவனே!
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!* ஆயிரம் நாழி நெய்யை,*
பஞ்சிய மெல்அடிப் பிள்ளைகள் உண்கின்று* பாகம்தான் வையார்களே,*
கஞ்சன் கடியன் கறவுஎட்டு நாளில்* என்கை வலத்துஆதும் இல்லை,*
நெஞ்சத்துஇருப்பன செய்து வைத்தாய் நம்பீ!* என்செய்கேன் என்செய்கேனோ!
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!* ஆயர் மடமக்களை,*
பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்* பின்னே சென்றுஒளித்திருந்து,*
அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு* அரவுஏர்இடையார் இரப்ப,*
மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற* மரம் ஏறி இருந்தாய் போலும்
அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு* ஆண்மையும் சேவகமும்,*
உச்சியில் முத்தி வளர்த்துஎடுத்தேனுக்க* உரைத்திலன் தான்இன்று போய்,*
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி* விசைகொண்டு பாய்ந்து புக்கு* ஆயிரவாய்-
நச்சுஅழல் பொய்கையில் நாகத்தினோடு* பிணங்கி நீ வந்தாய் போலும்!
தம்பரம் அல்லன ஆண்மைகளைத்* தனியேநின்று தாம் செய்வரோ?,
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுஉடையேன்* இனி யான்என் செய்கேன்?,*
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்* அங்குஅனல் செங்கண்உடை,*
வம்புஅவிழ் கானத்து மால்விடையோடு* பிணங்கி நீ வந்தாய் போலும்!
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச* அருவரை போல்,*
மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய* மைந்தனை மாகடல் சூழ்,*
கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்* காமரு சீர்க்கலிகன்றி*
இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு* ஏதும் இடர் இல்லையே. (2)
செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்* திருமாலிருஞ்சோலை*
வஞ்சக் கள்வன் மாமாயன்* மாயக் கவியாய் வந்து* என்-
நெஞ்சும் உயிரும் உள்கலந்து* நின்றார் அறியா வண்ணம்* என்-
நெஞ்சும் உயிரும் அவைஉண்டு* தானே ஆகி நிறைந்தானே. (2)
தானே ஆகி நிறைந்து* எல்லாஉலகும் உயிரும் தானேஆய்*
தானே யான்என்பான்ஆகி* தன்னைத் தானே துதித்து* எனக்குத்-
தேனே பாலே கன்னலே அமுதே* திருமாலிருஞ்சோலைக்*
கோனே ஆகி நின்றொழிந்தான்* என்னை முற்றும் உயிர்உண்டே.
என்னை முற்றும் உயிர்உண்டு* என் மாயஆக்கை இதனுள்புக்கு*
என்னை முற்றும் தானேஆய்* நின்ற மாய அம்மான் சேர்*
தென்நன் திருமாலிருஞ்சோலைத்* திசைகை கூப்பிச் சேர்ந்தயான்*
இன்னும் போவேனே கொலோ!* என்கொல் அம்மான் திருஅருளே?
என்கொல் அம்மான் திருஅருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கு என் உடலம் கைவிடான்* ஞாலத்தூடே நடந்து உழக்கி*
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே.
நண்ணா அசுரர் நலிவுஎய்த* நல்ல அமரர் பொலிவுஎய்த*
எண்ணாதனகள் எண்ணும்* நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப*
பண்ணார் பாடலின் கவிகள்* யானாய்த் தன்னைத் தான்பாடி*
தென்னா என்னும் என்அம்மான்* திருமாலிருஞ்சோலையானே.
திருமாலிருஞ்சோலை யானேயாகி* செழு மூவுலகும்* தன்-
ஒருமா வயிற்றின்உள்ளே வைத்து* ஊழி ஊழி தலையளிக்கும்*
திருமால்என்னை ஆளும்மால்* சிவனும் பிரமனும்காணாது*
அருமால் எய்தி அடிபரவ* அருளை ஈந்த அம்மானே.
அருளை ஈ என்அம்மானே! என்னும்* முக்கண் அம்மானும்*
தெருள்கொள் பிரமன்அம்மானும்* தேவர் கோனும் தேவரும்*
இருள்கள் கடியும் முனிவரும்* ஏத்தும் அம்மான் திருமலை*
மருள்கள் கடியும் மணிமலை* திருமாலிருஞ்சோலை மலையே.
திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனதுஉடலே*
அருமாமாயத்து எனதுஉயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒருமா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2)
ஊழி முதல்வன் ஒருவனேஎன்னும்* ஒருவன் உலகுஎல்லாம்*
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து* காத்து கெடுத்துஉழலும்*
ஆழி வண்ணன் என்அம்மான்* அம்தண் திருமாலிருஞ்சோலை*
வாழி மனமே! கைவிடேல்* உடலும் உயிரும் மங்கஒட்டே.
மங்க ஒட்டு உன் மாமாயை* திருமாலிருஞ்சோலைமேய*
நங்கள் கோனே! யானேநீஆகி* என்னை அளித்தானே*
பொங்குஐம் புலனும் பொறிஐந்தும்* கருமேந்திரியம் ஐம்பூதம்*
இங்கு இவ்உயிர்ஏய் பிரகிருதி* மான்ஆங்காரம் மனங்களே.
மான்ஆங்காரம் மனம்கெட* ஐவர் வன்கையர் மங்க*
தான்ஆங்கார மாய்ப்புக்கு* தானே தானே ஆனானைத்*
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்* சடகோபன் சொல்ஆயிரத்துள்*
மான்ஆங்காரத்துஇவை பத்தும்* திருமாலிருஞ் சோலைமலைக்கே. (2)