பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப* மருங்கின் மேல்*
ஆணிப் பொன்னாற் செய்த* ஆய்பொன் உடை மணி*
பேணி பவளவாய்* முத்துஇலங்க* பண்டு-
காணி கொண்ட கைகளால் சப்பாணி*
கருங்குழற் குட்டனே! சப்பாணி. (2)
பொன் அரைநாணொடு* மாணிக்கக் கிண்கிணி*
தன் அரை ஆட* தனிச் சுட்டி தாழ்ந்து ஆட*
என் அரை மேல்நின்று இழிந்து* உங்கள் ஆயர்தம்*
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி*
மாயவனே* கொட்டாய் சப்பாணி
பல் மணி முத்து* இன்பவளம் பதித்தன்ன*
என் மணிவண்ணன்* இலங்கு பொற் தோட்டின் மேல்*
நின் மணிவாய் முத்து இலங்க* நின் அம்மைதன்*
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி*
ஆழியங் கையனே சப்பாணி
தூ நிலாமுற்றத்தே* போந்து விளையாட*
வான் நிலா அம்புலீ* சந்திரா! வா என்று*
நீ நிலா நிற் புகழாநின்ற* ஆயர்தம்*
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி*
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.
புட்டியிற் சேறும்* புழுதியும் கொண்டுவந்து*
அட்டி அமுக்கி* அகம் புக்கு அறியாமே*
சட்டித் தயிரும்* தடாவினில் வெண்ணெயும் உண்*
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி*
பற்பநாபா! கொட்டாய் சப்பாணி.
தாரித்து நூற்றுவர்* தந்தை சொற் கொள்ளாது*
போர் உய்த்து வந்து* புகுந்தவர் மண் ஆளப்*
பாரித்த மன்னர் படப்* பஞ்சவர்க்கு* அன்று-
தேர் உய்த்த கைகளால் சப்பாணி*
தேவகி சிங்கமே! சப்பாணி
பரந்திட்டு நின்ற* படுகடல் தன்னை*
இரந்திட்ட கைம்மேல்* எறிதிரை மோதக்*
கரந்திட்டு நின்ற* கடலைக் கலங்கச்*
சரந் தொட்ட கைகளால் சப்பாணி*
சார்ங்க விற்கையனே! சப்பாணி.
குரக்கு இனத்தாலே* குரைகடல் தன்னை*
நெருக்கி அணை கட்டி* நீள் நீர் இலங்கை*
அரக்கர் அவிய* அடு கணையாலே*
நெருக்கிய கைகளால் சப்பாணி*
நேமியங் கையனே! சப்பாணி.
அளந்து இட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே-
வளர்ந்திட்டு* வாள் உகிர்ச் சிங்க உருவாய்*
உளந் தொட்டு இரணியன்* ஒண்மார்வு அகலம்*
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*
பேய் முலை உண்டானே! சப்பாணி.
அடைந்திட்டு அமரர்கள்* ஆழ்கடல் தன்னை*
மிடைந்திட்டு மந்தரம்* மத்தாக நாட்டி*
வடம் சுற்றி* வாசுகி வன்கயிறு ஆகக்*
கடைந்திட்ட கைகளால் சப்பாணி*
கார்முகில் வண்ணனே! சப்பாணி
ஆட்கொள்ளத் தோன்றிய* ஆயர்தம் கோவினை*
நாட்கமழ் பூம்பொழில்* வில்லிபுத்தூர்ப் பட்டன்*
வேட்கையால் சொன்ன* சப்பாணி ஈரைந்தும்*
வேட்கையினால் சொல்லுவார்* வினை போதுமே (2)
ஆனிரை மேய்க்க நீ போதி* அருமருந்து ஆவது அறியாய்*
கானகம் எல்லாம் திரிந்து* உன் கரிய திருமேனி வாட*
பானையிற் பாலைப் பருகிப்* பற்றாதார் எல்லாம் சிரிப்ப*
தேனில் இனிய பிரானே* செண்பகப் பூச் சூட்ட வாராய்* (2)
கரு உடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்*
உரு உடையாய்! உலகு ஏழும்* உண்டாக வந்து பிறந்தாய்!*
திரு உடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!*
மருவி மணம் கமழ்கின்ற* மல்லிகைப் பூச் சூட்ட வாராய்
மச்சொடு மாளிகை ஏறி* மாதர்கள்தம் இடம் புக்கு*
கச்சொடு பட்டைக் கிழித்து* காம்பு துகில் அவை கீறி*
நிச்சலும் தீமைகள் செய்வாய்!* நீள் திருவேங்கடத்து எந்தாய்!*
பச்சைத் தமனகத்தோடு* பாதிரிப் பூச் சூட்ட வாராய்.
தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத்* தீமை செய்யாதே*
மருவும் தமனகமும் சீர்* மாலை மணம் கமழ்கின்ற*
புருவம் கருங்குழல் நெற்றி* பொலிந்த முகிற்-கன்று போலே*
உருவம் அழகிய நம்பீ!* உகந்து இவை சூட்ட நீ வாராய்.
புள்ளினை வாய் பிளந்திட்டாய்!* பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்!*
கள்ள அரக்கியை மூக்கொடு* காவலனைத் தலை கொண்டாய்!*
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க* அஞ்சாது அடியேன் அடித்தேன்*
தெள்ளிய நீரில் எழுந்த* செங்கழுநீர் சூட்ட வாராய்.
எருதுகளோடு பொருதி* ஏதும் உலோபாய் காண் நம்பீ!*
கருதிய தீமைகள் செய்து* கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!*
தெருவின்கண் தீமைகள் செய்து* சிக்கென மல்லர்களோடு*
பொருது வருகின்ற பொன்னே* புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்.
குடங்கள் எடுத்து ஏற விட்டுக்* கூத்தாட வல்ல எம் கோவே!*
மடம் கொள் மதிமுகத்தாரை* மால்செய வல்ல என் மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இரு பிளவு ஆக முன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.
சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்!*
சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால் தலை கொண்டாய்!*
ஆமாறு அறியும் பிரானே!* அணி அரங்கத்தே கிடந்தாய்!*
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.
அண்டத்து அமரர்கள் சூழ* அத்தாணியுள் அங்கு இருந்தாய்!*
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!* தூமலராள் மணவாளா!*
உண்டிட்டு உலகினை ஏழும்* ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்!*
கண்டு நான் உன்னை உகக்கக்* கருமுகைப் பூச் சூட்ட வாராய்.
செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி*
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்* இன்று இவை சூட்ட வா என்று*
மண் பகர் கொண்டானை* ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை*
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்* பட்டர்பிரான் சொன்ன பத்தே. (2)
ஐய புழுதி உடம்பு அளைந்து* இவள் பேச்சும் அலந்தலையாய்ச்*
செய்ய நூலின் சிற்றாடை* செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்*
கையினில் சிறுதூதை யோடு* இவள் முற்றில் பிரிந்தும் இலள்*
பை அரவணைப் பள்ளியானொடு* கைவைத்து இவள்வருமே.* (2)
வாயிற் பல்லும் எழுந்தில* மயிரும் முடி கூடிற்றில*
சாய்வு இலாத குறுந்தலைச்* சில பிள்ளைகளோடு இணங்கி*
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து* இவள் தன் அன்ன செம்மை சொல்லி*
மாயன் மா மணிவண்ணன்மேல்* இவள் மால் உறுகின்றாளே*
பொங்கு வெண்மணல் கொண்டு* சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்*
சங்கு சக்கரம் தண்டு வாள்* வில்லும் அல்லது இழைக்கலுறாள்*
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில* கோவிந்தனோடு இவளைச்*
சங்கை யாகி என் உள்ளம்* நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே.*
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து* என் பெண்மகளை எள்கி*
தோழிமார் பலர் கொண்டுபோய்ச்* செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்?*
ஆழியான் என்னும் ஆழ மோழையில்* பாய்ச்சி அகப்படுத்தி*
மூழை உப்பு அறியாது என்னும்* மூதுரையும் இலளே*
நாடும் ஊரும் அறியவே போய்* நல்ல துழாய் அலங்கல்-
சூடி* நாரணன் போம் இடம் எல்லாம்* சோதித்து உழிதர்கின்றாள்*
கேடு வேண்டுகின்றார் பலர் உளர்* கேசவனோடு இவளைப்*
பாடிகாவல் இடுமின் என்று என்று* பார் தடுமாறினதே.*
பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து* இவள் பாடகமும் சிலம்பும்*
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு* என்னோடு இருக்கலுறாள்*
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று* இவள் பூவைப் பூவண்ணா என்னும்*
வட்ட வார் குழல் மங்கைமீர்!* இவள் மால் உறுகின்றாளே.*
பேசவும் தரியாத பெண்மையின்* பேதையேன் பேதை இவள்*
கூசமின்றி நின்றார்கள்* தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்*
கேசவா என்றும் கேடிலீ என்றும்* கிஞ்சுக வாய் மொழியாள்*
வாச வார்குழல் மங்கைமீர்!* இவள் மால் உறுகின்றாளே.*
காறை பூணும் கண்ணாடி காணும்* தன் கையில் வளை குலுக்கும்*
கூறை உடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்*
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்* தேவன் திறம் பிதற்றும்*
மாறில் மா மணிவண்ணன்மேல்* இவள் மால் உறுகின்றாளே.*
கைத்தலத்து உள்ள மாடு அழியக்* கண்ணாலங்கள் செய்து* இவளை-
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?* நம்மை வடுப்படுத்தும்*
செய்த்தலை எழு நாற்றுப் போல்* அவன் செய்வன செய்துகொள்ள*
மைத் தடமுகில் வண்ணன் பக்கல்* வளர விடுமின்களே.*
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து* பேணி நம் இல்லத்துள்ளே*
இருத்துவான் எண்ணி நாம் இருக்க* இவளும் ஒன்று எண்ணுகின்றாள்*
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்* வார்த்தை படுவதன்முன்*
ஒருப்படுத்து இடுமின் இவளை* உலகளந்தான் இடைக்கே.*
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்* நாராயணனுக்கு* இவள்-
மாலதாகி மகிழ்ந்தனள் என்று* தாய் உரை செய்ததனை*
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்* விட்டுசித்தன் சொன்ன*
மாலை பத்தும் வல்லவர்கட்கு* இல்லை வரு துயரே.* (2)
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த* எம் தாசரதிபோய்*
எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட* எம் புருடோத்தமன் இருக்கை*
கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே* கடுவினை களைந்திடுகிற்கும்*
கங்கையின் கரைமேல் கைதொழநின்ற* கண்டம்என்னும் கடிநகரே. (2)
சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்* சந்திரன் வெங்கதிர் அஞ்ச*
மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்* மால் புருடோத்தமன் வாழ்வு*
நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்* நாரணன் பாதத்துழாயும்*
கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்* கண்டம்என்னும் கடிநகரே.
அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி* அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து* அங்கு-
எதிர்முக அசுரர் தலைகளை இடறும்* எம் புருடோத்தமன் இருக்கை*
சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*
கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்* கண்டம்என்னும் கடிநகரே
இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள* ஏற்று வந்துஎதிர் பொருசேனை*
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்* நம் புருடோத்தமன் நகர்தான்*
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்* கண்டம்என்னும் கடிநகரே.
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்* ஒண் சுடர்ஆழியும் சங்கும்*
மழுவொடு வாளும் படைக்கலம்உடைய* மால் புருடோத்தமன் வாழ்வு*
எழுமையும் கூடி ஈண்டிய பாவம்* இறைப்பொழுது அளவினில் எல்லாம்*
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்* கண்டம்என்னும் கடிநகரே.
தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்* சலசல பொழிந்திடக்கண்டு*
மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை* மால் புருடோத்தமன் வாழ்வு*
அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்* அவபிரதம் குடைந்தாட*
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்* கண்டம்என்னும் கடிநகரே.
விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி* மேல்இருந்தவன் தலைசாடி*
மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த* மால் புருடோத்தமன் வாழ்வு*
அற்புதம்உடைய ஐராவதமதமும்* அவர் இளம்படியர் ஒண்சாந்தும்*
கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்* கண்டம்என்னும் கடிநகரே.
திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து* தன்மைத்துனன் மார்க்காய்*
அரசினையவிய அரசினையருளும்* அரிபுருடோத்தமன் அமர்வு*
நிரைநிரையாக நெடியனயூபம்* நிரந்தரம் ஒழுக்குவிட்டு* இரண்டு-
கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை* கண்டமென்னும் கடிநகரே.
வடதிசை மதுரை சாளக்கிராமம்* வைகுந்தம் துவரை அயோத்தி*
இடமுடை வதரி இடவகையுடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
தடவரை அதிரத் தரணி விண்டிடியத்* தலைப்பற்றிக் கரைமரம்சாடி*
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே. (2)
மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்* மூன்றெழுத்தாக்கி* மூன்றெழுத்தை-
ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி* மூன்றினில் மூன்றருவானான்*
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே. (2)
பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து* உறை புருடோத்தமனடிமேல்*
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்* விட்டுசித்தன் விருப்புற்று*
தங்கிய அன்பால் செய்த தமிழ்மாலை* தங்கிய நாவுடையார்க்கு*
கங்கையில் திருமால் கழலிணைக்கீழே* குளித்திருந்த கணக்காமே. (2)