பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்* தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய* நின்று ஊர்வது போல்*
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப* உடை மணி பறை கறங்க*
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி* தளர்நடை நடவானோ
செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்* சிறுபிறை முளைப் போல*
நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே* நளிர் வெண்பல் முளை இலக*
அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட* அனந்தசயனன்*
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடை நடவானோ
மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்* சூழ் பரிவேடமுமாய்ப்*
பின்னற் துலங்கும் அரசிலையும்* பீதகச் சிற்றாடையொடும்*
மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்* கழுத்தினிற் காறையொடும்*
தன்னிற் பொலிந்த இருடிகேசன்* தளர்நடை நடவானோ
கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்* கணகண சிரித்து உவந்து*
முன் வந்து நின்று முத்தம் தரும்* என் முகில்வண்ணன் திருமார்வன்*
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து* என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே* தளர்நடை நடவானோ
முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்* மொடுமொடு விரைந்து ஓடப்*
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்* பெயர்ந்து அடியிடுவது போல்*
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்* பலதேவன் என்னும்*
தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்* தளர்நடை நடவானோ
ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்* உள்ளடி பொறித்து அமைந்த*
இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்* இலச்சினை பட நடந்து*
பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்* பின்னையும் பெய்து பெய்து*
தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை* தளர்நடை நடவானோ
படர் பங்கைய மலர்வாய் நெகிழப்* பனி படு சிறுதுளி போல்*
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி* இற்று இற்று வீழநின்று*
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்* உடை மணி கணகணென*
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி* தளர்நடை நடவானோ
பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே* அருவிகள் பகர்ந்தனைய*
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ* அணி அல்குல் புடை பெயர*
மக்கள் உலகினிற் பெய்து அறியா* மணிக் குழவி உருவின்*
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடை நடவானோ
வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்* வேழத்தின் கருங்கன்று போல்*
தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்* சிறு புகர்பட வியர்த்து*
ஒண் போது அலர்கமலச் சிறுக்கால்* உறைத்து ஒன்றும் நோவாமே*
தண் போது கொண்ட தவிசின் மீதே* தளர்நடை நடவானோ
திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்* செங்கண்மால் கேசவன்* தன்-
திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி* திகழ்ந்து எங்கும் புடைபெயர*
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்* பெரியதோர் தீர்த்த பலம்-
தரு நீர்ச்* சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்* தளர்நடை நடவானோ
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய* அஞ்சனவண்ணன் தன்னைத்*
தாயர் மகிழ ஒன்னார் தளரத்* தளர்நடை நடந்ததனை*
வேயர் புகழ் விட்டுசித்தன்* சீரால் விரித்தன உரைக்கவல்லார்*
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்* மக்களைப் பெறுவர்களே* (2)
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மா மலர் கொண்டு* மறைந்து உவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதுரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போது இது ஆகும்* அழகனே! காப்பிட வாராய் (2)
கன்றுகள் இல்லம் புகுந்து* கதறுகின்ற பசு எல்லாம்*
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி* நேசமேல் ஒன்றும் இலாதாய்!*
மன்றில் நில்லேல் அந்திப் போது* மதிற் திருவெள்ளறை நின்றாய்!*
நன்று கண்டாய் என்தன் சொல்லு* நான் உன்னைக் காப்பிட வாராய்
செப்பு ஓது மென்முலையார்கள்* சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு*
அப்போது நான் உரப்பப் போய்* அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!*
முப் போதும் வானவர் ஏத்தும்* முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்போது நான் ஒன்றும் செய்யேன்* எம்பிரான் காப்பிட வாராய்!
கண்ணில் மணல்கொடு தூவிக்* காலினால் பாய்ந்தனை என்று என்று*
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்*
கண்ணனே! வெள்ளறை நின்றாய்!* கண்டாரொடே தீமை செய்வாய்!
வண்ணமே வேலையது ஒப்பாய்!* வள்ளலே! காப்பிட வாராய்
பல்லாயிரவர் இவ் ஊரில்* பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது* எம்பிரான்! நீ இங்கே வாராய்*
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!* ஞானச் சுடரே! உன்மேனி*
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்* சொப்படக் காப்பிட வாராய்
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்* கரு நிறச் செம் மயிர்ப் பேயை*
வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு*
மஞ்சு தவழ் மணி மாட* மதிற் திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே! காப்பிட வாராய்
கள்ளச் சகடும் மருதும்* கலக்கு அழிய உதைசெய்த*
பிள்ளையரசே!* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை*
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளிகொள் போது இது ஆகும்* பரமனே! காப்பிட வாராய்
இன்பம் அதனை உயர்த்தாய்!* இமையவர்க்கு என்றும் அரியாய்!*
கும்பக் களிறு அட்ட கோவே!* கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!*
செம்பொன் மதில் வெள்ளறையாய்!* செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
கம்பக் கபாலி காண் அங்கு* கடிது ஓடிக் காப்பிட வாராய்
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு* எழில் மறையோர் வந்து நின்றார்*
தருக்கேல் நம்பி! சந்தி நின்று* தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்*
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த* தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
உருக் காட்டும் அந்தி விளக்கு* இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்
போது அமர் செல்வக்கொழுந்து* புணர் திருவெள்ளறையானை*
மாதர்க்கு உயர்ந்த அசோதை* மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்*
வேதப் பயன் கொள்ள வல்ல* விட்டுசித்தன் சொன்ன மாலை*
பாதப் பயன் கொள்ள வல்ல* பத்தர் உள்ளார் வினை போமே (2)
நல்லது ஓர் தாமரைப் பொய்கை* நாண்மலர் மேல் பனி சோர*
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு* அழகழிந்தால் ஒத்ததாலோ*
இல்லம் வெறியோடிற்றாலோ* என்மகளை எங்கும் காணேன்*
மல்லரை அட்டவன் பின்போய்* மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?* (2)
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத* உருவறைக் கோபாலர் தங்கள்*
கன்று கால் மாறுமா போலே* கன்னி இருந்தாளைக் கொண்டு*
நன்றும் கிறி செய்து போனான்* நாராயணன் செய்த தீமை*
என்றும் எமர்கள் குடிக்கு* ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ?*
குமரி மணம் செய்து கொண்டு* கோலம் செய்து இல்லத்து இருத்தி*
தமரும் பிறரும் அறியத்* தாமோதரற்கு என்று சாற்றி*
அமரர் பதியுடைத் தேவி* அரசாணியை வழிபட்டு*
துமிலம் எழப் பறை கொட்டித்* தோரணம் நாட்டிடுங் கொல்லோ?*
ஒரு மகள் தன்னை உடையேன்* உலகம் நிறைந்த புகழால்*
திருமகள் போல வளர்த்தேன்* செங்கண் மால் தான் கொண்டு போனான்*
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து* பெரும்பிள்ளை பெற்ற அசோதை*
மருமகளைக் கண்டு உகந்து* மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?*
தம் மாமன் நந்தகோபாலன்* தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்*
செம்மாந்திரே என்று சொல்லி* செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்*
கொம்மை முலையும் இடையும்* கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு*
இம் மகளைப் பெற்ற தாயர்* இனித் தரியார் என்னுங் கொல்லோ?*
வேடர் மறக்குலம் போலே* வேண்டிற்றுச் செய்து என்மகளைக்*
கூடிய கூட்டமே யாகக்* கொண்டு குடி வாழுங் கொல்லோ?*
நாடும் நகரும் அறிய* நல்லது ஓர் கண்ணாலம் செய்து*
சாடு இறப் பாய்ந்த பெருமான்* தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?*
அண்டத்து அமரர் பெருமான்* ஆழியான் இன்று என்மகளைப்*
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்* பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*
கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து* கோவலப் பட்டம் கவித்துப்*
பண்டை மணாட்டிமார் முன்னே* பாதுகாவல் வைக்குங் கொல்லோ?*
குடியிற் பிறந்தவர் செய்யும்* குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ!*
நடை ஒன்றும் செய்திலன் நங்காய்!* நந்தகோபன் மகன் கண்ணன்*
இடை இருபாலும் வணங்க* இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்*
கடைகயிறே பற்றி வாங்கிக்* கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?*
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை* வெள்வரைப்பின் முன் எழுந்து*
கண் உறங்காதே இருந்து* கடையவும் தான்வல்லள் கொல்லோ?*
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்* உலகளந்தான் என்மகளைப்*
பண் அறையாப் பணிகொண்டு* பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*
மாயவன் பின்வழி சென்று* வழியிடை மாற்றங்கள் கேட்டு*
ஆயர்கள் சேரியிலும் புக்கு* அங்குத்தை மாற்றமும் எல்லாம்*
தாயவள் சொல்லிய சொல்லைப்* தண் புதுவைப் பட்டன் சொன்ன*
தூய தமிழ் பத்தும் வல்லார்* தூ மணிவண்ணனுக்கு ஆளரே* (2)
மாதவத்தோன் புத்திரன்போய்* மறிகடல்வாய் மாண்டானை*
ஓதுவித்த தக்கணையா* உருவுருவே கொடுத்தானுர்*
தோதவத்தித் தூய்மறையோர்* துறைபடியத் துளும்பிஎங்கும்*
போதில் வைத்த தேன்சொரியும்* புனலரங்கம் என்பதுவே. (2)
பிறப்பகத்தே மாண்டொழிந்த* பிள்ளைகளை நால்வரையும்*
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து* ஒருப்படித்த உறைப்பனுர்*
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்* வருவிருந்தை அளித்திருப்பார்*
சிறப்புடைய மறையவர்வாழ்* திருவரங்கம் என்பதுவே.
மருமகன் தன் சந்ததியை* உயிர்மீட்டு மைத்துனன்மார்*
உருமகத்தே வீழாமே* குருமுகமாய்க் காத்தானுர்*
திருமுகமாய்ச் செங்கமலம்* திருநிறமாய்க் கருங்குவளை*
பொருமுகமாய் நின்றலரும்* புனலரங்கம் என்பதுவே.
கூன்தொழுத்தை சிதகுரைப்பக்* கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்றெடுத்த தாயரையும்* இராச்சியமும் ஆங்கொழிய*
கான்தொடுத்த நெறிபோகிக்* கண்டகரைக் களைந்தானுர்*
தேன்தொடுத்த மலர்ச்சோலைத்* திருவரங்கம் என்பதுவே.
பெருவரங்கள் அவைபற்றிப்* பிழக்குடைய இராவணனை*
உருவரங்கப் பொருதழித்து* இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர்
குரவரும்பக் கோங்கலரக்* குயில்கூவும் குளிர்பொழில்சூழ்*
திருவரங்கம் என்பதுவே* என் திருமால் சேர்விடமே.
கீழுலகில் அசுரர்களைக்* கிழங்கிருந்து கிளராமே*
ஆழிவிடுத்து அவருடைய* கருவழித்த அழிப்பனுர்*
தாழைமடல் ஊடுரிஞ்சித்* தவளவண்ணப் பொடியணிந்து*
யாழின் இசை வண்டினங்கள்* ஆளம்வைக்கும் அரங்கமே.
கொழுப்புடைய செழுங்குருதி* கொழித்திழிந்து குமிழ்த்தெறிய*
பிழக்குடைய அசுரர்களைப்* பிணம்படுத்த பெருமானுர்*
தழுப்பரிய சந்தனங்கள்* தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு*
தெழிப்புடைய காவிரிவந்து* அடிதொழும் சீரரங்கமே.
வல்யிற்றுக் கேழலுமாய்* வாளேயிற்றுச் சீயமுமாய்*
எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு* எம்பெருமான் குணம்பாடி*
மல்லிகை வெண்சங்கூதும்* மதிளரங்கம் என்பதுவே.
குன்றாடு கொழுமுகில்போல்* குவளைகள்போல் குரைகடல்போல்*
நின்றாடு கணமயில்போல்* நிறமுடைய நெடுமாலூர்*
குன்றாடு பொழில்நுழைந்து* கொடியிடையார் முலையணவி*
மன்றாடு தென்றலுமாம்* மதிளரங்கம் என்பதுவே.
பருவரங்கள் அவைபற்றிப்* படையாலித் தெழுந்தானை*
செருவரங்கப் பொருதழித்த* திருவாளன் திருப்பதிமேல்*
திருவரங்கத் தமிழ்மாலை* விட்டுசித்தன் விரித்தனகொண்டு*
இருவரங்கம் எரித்தானை* ஏத்தவல்லார் அடியோமே. (2)