பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
அரவு அணையாய்! ஆயர் ஏறே!* அம்மம் உண்ணத் துயிலெழாயே*
இரவும் உண்ணாது உறங்கி நீ போய்* இன்றும் உச்சி கொண்டதாலோ*
வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்* வன முலைகள் சோர்ந்து பாயத்*
திரு உடைய வாய்மடுத்துத்* திளைத்து உதைத்துப் பருகிடாயே (2)
வைத்த நெய்யும் காய்ந்த பாலும்* வடி தயிரும் நறு வெண்ணெயும்*
இத்தனையும் பெற்றறியேன்* எம்பிரான்! நீ பிறந்த பின்னை*
எத்தனையும் செய்யப் பெற்றாய்;* ஏதும் செய்யேன் கதம் படாதே*
முத்து அனைய முறுவல் செய்து* மூக்கு உறிஞ்சி முலை உணாயே
தந்தம் மக்கள் அழுது சென்றால்* தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்*
வந்து நின்மேற் பூசல் செய்ய* வாழ வல்ல வாசுதேவா!*
உந்தையார் உன்திறத்தர் அல்லர்* உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்*
நந்தகோபன் அணி சிறுவா!* நான் சுரந்த முலை உணாயே
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட* கள்ளச் சகடு கலக்கு அழிய*
பஞ்சி அன்ன மெல்லடியால்* பாய்ந்த போது நொந்திடும் என்று*
அஞ்சினேன் காண் அமரர் கோவே!* ஆயர் கூட்டத்து அளவன்றாலோ*
கஞ்சனை உன் வஞ்சனையால்* வலைப்படுத்தாய்! முலை உணாயே
தீய புந்திக் கஞ்சன் உன்மேல்* சினம் உடையன் சோர்வு பார்த்து*
மாயந்தன்னால் வலைப்படுக்கில்* வாழகில்லேன் வாசுதேவா!*
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்* சாற்றிச் சொன்னேன் போகவேண்டா*
ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!* அமர்ந்து வந்து என் முலை உணாயே
மின் அனைய நுண் இடையார்* விரி குழல்மேல் நுழைந்த வண்டு*
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்* இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*
என்ன நோன்பு நோற்றாள் கொலோ* இவனைப் பெற்ற வயிறு உடையாள்*
என்னும் வார்த்தை எய்துவித்த* இருடிகேசா! முலை உணாயே (2)
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்* பெறுதும் என்னும் ஆசையாலே*
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்* கண்ணிணையால் கலக்க நோக்கி*
வண்டு உலாம் பூங்குழலினார்* உன் வாயமுதம் உண்ண வேண்டிக்*
கொண்டு போவான் வந்து நின்றார்* கோவிந்தா நீ முலை உணாயே
இரு மலை போல் எதிர்ந்த மல்லர்* இருவர் அங்கம் எரிசெய்தாய்!* உன்
திரு மலிந்து திகழு மார்வு* தேக்க வந்து என் அல்குல் ஏறி*
ஒரு முலையை வாய்மடுத்து* ஒரு முலையை நெருடிக்கொண்டு*
இரு முலையும் முறை முறையாய்* ஏங்கி ஏங்கி இருந்து உணாயே
அங் கமலப் போதகத்தில்* அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்*
செங் கமல முகம் வியர்ப்ப* தீமை செய்து இம் முற்றத்தூடே*
அங்கம் எல்லாம் புழுதியாக* அளைய வேண்டா அம்ம! விம்ம*
அங்கு அமரர்க்கு அமுது அளித்த* அமரர் கோவே! முலை உணாயே
ஓட ஓடக் கிண்கிணிகள்* ஒலிக்கும் ஓசைப் பாணியாலே*
பாடிப் பாடி வருகின்றாயைப்* பற்பநாபன் என்று இருந்தேன்*
ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு* அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி*
ஓடி ஒடிப் போய்விடாதே* உத்தமா! நீ முலை உணாயே
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி* மாதவா! உண் என்ற மாற்றம்*
நீர் அணிந்த குவளை வாசம்* நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*
பார் அணிந்த தொல் புகழான்* பட்டர்பிரான் பாடல் வல்லார்*
சீர் அணிந்த செங்கண்மால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)
அஞ்சன வண்ணனை* ஆயர் கோலக் கொழுந்தினை*
மஞ்சனம் ஆட்டி* மனைகள்தோறும் திரியாமே*
கஞ்சனைக் காய்ந்த* கழல் அடி நோவக் கன்றின்பின்*
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லே பாவமே!* (2)
பற்றுமஞ்சள் பூசிப்* பாவைமாரொடு பாடியிற்*
சிற்றில் சிதைத்து எங்கும்* தீமை செய்து திரியாமே*
கற்றுத் தூளியுடை* வேடர் கானிடைக் கன்றின் பின்*
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லே பாவமே!*
நன்மணி மேகலை* நங்கைமாரொடு நாள்தொறும்*
பொன்மணி மேனி* புழுதியாடித் திரியாமே*
கல்மணி நின்று அதிர்* கான்- அதரிடைக் கன்றின்பின்*
என் மணிவண்ணனைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
வண்ணக் கருங்குழல்* மாதர் வந்து அலர் தூற்றிடப்*
பண்ணிப் பல செய்து* இப் பாடி எங்கும் திரியாமே*
கண்ணுக்கு இனியானைக்* கான் -அதரிடைக் கன்றின்பின்*
எண்ணற்கு அரியானைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
அவ்வவ் இடம் புக்கு* அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்*
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்* கூழைமை செய்யாமே*
எவ்வும் சிலை உடை* வேடர் கானிடைக் கன்றின் பின்*
தெய்வத் தலைவனைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
மிடறு மெழுமெழுத்து ஓட* வெண்ணெய் விழுங்கிப் போய்ப்*
படிறு பல செய்து* இப் பாடி எங்கும் திரியாமே*
கடிறு பல திரி* கான் -அதரிடைக் கன்றின் பின்*
இடற என்பிள்ளையைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
வள்ளி நுடங்கு-இடை* மாதர் வந்து அலர் தூற்றிடத்*
துள்ளி விளையாடித்* தோழரோடு திரியாமே*
கள்ளி உணங்கு* வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்*
புள்ளின் தலைவனைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
பன்னிரு திங்கள்* வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்*
என் இளங் கொங்கை* அமுதம் ஊட்டி எடுத்து யான்*
பொன்னடி நோவப்* புலரியே கானிற் கன்றின் பின்*
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன்* எல்லே பாவமே!*
குடையும் செருப்பும் கொடாதே* தாமோதரனை நான்*
உடையும் கடியன ஊன்று* வெம் பரற்கள் உடைக்*
கடிய வெங் கானிடைக்* கால்- அடி நோவக் கன்றின் பின்*
கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்* :எல்லே பாவமே!*
என்றும் எனக்கு இனியானை* என் மணிவண்ணனைக்*
கன்றின் பின் போக்கினேன் என்று* அசோதை கழறிய*
பொன் திகழ் மாடப்* புதுவையர்கோன் பட்டன் சொல்*
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு* இடர் இல்லையே* (2)
அலம்பாவெருட்டாக்* கொன்றுதிரியும் அரக்கரை*
குலம்பாழ்படுத்துக்* குலவிளக்காய் நின்றகோன்மலை*
சிலம்பார்க்கவந்து* தெய்வமகளிர்களாடும்சீர்*
சிலம்பாறுபாயும்* தென்திருமாலிருஞ்சோலையே. (2)
வல்லாளன்தோளும்* வாளரக்கன்முடியும்* தங்கை-
பொல்லாதமூக்கும்* போக்குவித்தான்பொருந்தும்மலை*
எல்லாஇடத்திலும்* எங்கும்பரந்து பல்லாண்டுஒலி-
செல்லாநிற்கும் சீர்த்* தென்திருமாலிருஞ்சோலையே.
தக்கார்மிக்கார்களைச்* சஞ்சலம்செய்யும்சலவரை*
தெக்காநெறியே போக்குவிக்கும்* செல்வன்பொன்மலை*
எக்காலமும்சென்று* சேவித்திருக்கும் அடியரை*
அக்கான்நெறியைமாற்றும்* தண் மாலிருஞ்சோலையே.
ஆனாயர்கூடி* அமைத்தவிழவை* அமரர்தம்-
கோனார்க்கொழியக்* கோவர்த்தனத்துச்செய்தான்மலை*
வான்நாட்டினின்று* மாமலர்க்கற்பகத்தொத்துஇழி*
தேனாறுபாயும்* தென்திருமாலிருஞ்சோலையே.
ஒருவாரணம் பணிகொண்டவன்* பொய்கையில் கஞ்சன்தன்-
ஒருவாரணம் உயிர்உண்டவன்* சென்றுறையும்மலை*
கருவாரணம்* தன்பிடிதுறந்துஓடக்* கடல்வண்ணன்-
திருவாணைகூறத்திரியும்* தண் மாலிருஞ்சோலையே.
ஏவிற்றுச்செய்வான்* ஏன்றுஎதிர்ந்துவந்தமல்லரைச்*
சாவத்தகர்த்த* சாந்தணிதோள்சதுரன்மலை*
ஆவத்தனமென்று* அமரர்களும்நன்முனிவரும்*
சேவித்திருக்கும்* தென்திருமாலிருஞ்சோலையே.
மன்னர்மறுக* மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்*
முன்னங்குநின்று* மோழைஎழுவித்தவன் மலை*
கொன்னவில்கூர்வேற்கோன்* நெடுமாறன்தென்கூடற்கோன்*
தென்னன்கொண்டாடும்* தென்திருமாலிருஞ்சோலையே
குறுகாதமன்னரைக்* கூடுகலக்கி* வெங்கானிடைச்-
சிறுகால்நெறியே போக்குவிக்கும்* செல்வன்பொன்மலை*
அறுகால்வரிவண்டுகள்* ஆயிரநாமம்சொல்லிச்*
சிறுகாலைப்பாடும்* தென்திருமாலிருஞ்சோலையே.
சிந்தப்புடைத்துச்* செங்குருதிகொண்டு* பூதங்கள்-
அந்திப்பலிகொடுத்து* ஆவத்தனம்செய் அப்பன்மலை*
இந்திரகோபங்கள்* எம்பெருமான் கனிவாய்ஒப்பான்*
சிந்தும்புறவிற்* தென்திருமாலிருஞ்சோலையே
எட்டுத் திசையும்* எண்- இறந்த பெருந் தேவிமார்*
விட்டு விளங்க* வீற்றிருந்த விமலன் மலை*
பட்டிப்பிடிகள்* பகடுறிஞ்சிச் சென்று* மாலைவாய்த்-
தெட்டித்திளைக்கும்* தென்திருமாலிருஞ் சோலையே.
மருதப்பொழிலணி* மாலிருஞ்சோலைமலைதன்னைக்*
கருதி உறைகின்ற* கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை*
விரதம்கொண்டேத்தும்* வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்*
கருதியுரைப்பவர்* கண்ணன்கழலிணை காண்பர்களே (2)
நெய்க்குடத்தைப்பற்றி* ஏறும்எறும்புகள்போல் நிரந்து* எங்கும்-
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!* காலம்பெற உய்யப்போமின்*
மெய்க்கொண்டு வந்துபுகுந்து* வேதப்பிரானார் கிடந்தார்*
பைக்கொண்ட பாம்புஅணையோடும்* பண்டுஅன்று பட்டினம்காப்பே. (2)
சித்திரகுத்தன் எழுத்தால்* தென்புலக்கோன் பொறிஒற்றி*
வைத்த இலச்சினை மாற்றித்* தூதுவர் ஓடிஒளித்தார்*
முத்துத் திரைக்கடற்சேர்ப்பன்* மூதறிவாளர் முதல்வன்*
பத்தர்க்கு அமுதன்அடியேன்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
வயிற்றில் தொழுவைப்பிரித்து* வன்புலச் சேவைஅதக்கிக்*
கயிற்றும் அக்குஆணி கழித்துக்* காலிடைப் பாசம்கழற்றி*
எயிற்றிடை மண்கொண்ட எந்தை* இராப்பகல் ஓதுவித்து* என்னைப்-
பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
மங்கிய வல்வினை நோய்காள்!* உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்*
இங்குப் புகேன்மின் புகேன்மின்* எளிது அன்று கண்டீர் புகேன்மின்*
சிங்கப் பிரான் அவன் எம்மான்* சேரும் திருக்கோயில் கண்டீர்*
பங்கப்படாது உய்யப் போமின்* பண்டு அன்று பட்டினம் காப்பே.
மாணிக் குறளுருவாய்* மாயனை என்மனத்துள்ளே*
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்* பிறிதுஇன்றி*
மாணிக்கப் பண்டாரம்கண்டீர்* வலிவன்குறும்பர்கள்உள்ளீர்!*
பாணிக்க வேண்டாநடமின்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
உற்றஉறு பிணிநோய்காள்!* உமக்கு ஒன்றுசொல்லுகேன் கேண்மின்*
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்* பேணும் திருக்கோயில்கண்டீர்*
அற்றம்உரைக்கின்றேன்* இன்னம் ஆழ்வினைகாள்!* உமக்குஇங்குஓர்-
பற்றில்லை கண்டீர்நடமின்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
கொங்கைச் சிறுவரைஎன்னும்* பொதும்பினில் வீழ்ந்துவழுக்கி*
அங்குஓர் முழையினில்புக்கிட்டு* அழுந்திக் கிடந்துஉழல்வேனை*
வங்கக் கடல்வண்ணன் அம்மான்* வல்வினைஆயின மாற்றி*
பங்கப்படாவண்ணம் செய்தான்* பண்டுஅன்றுபட்டினம்காப்பே.
ஏதங்கள் ஆயினஎல்லாம்* இறங்கல்இடுவித்து* என்னுள்ளே-
பீதகவாடைப்பிரனார்* பிரமகுருவாகிவந்து*
போதில்கமல வன்நெஞ்சம்* புகுந்து என்சென்னித்திடரில்*
பாத இலச்சினை வைத்தார்* பண்டன்றுபட்டினம்காப்பே.
உறகல் உறகல் உறகல்* ஒண்சுடராழியே! சங்கே!*
அறவெறி நாந்தகவாளே!* அழகியசார்ங்கமே! தண்டே!*
இறவுபடாமல்இருந்த* எண்மர் உலோகபாலீர்காள்!*
பறவைஅரையா! உறகல்* பள்ளியறைக்குறிக் கொண்மின் (2)
அரவத்து அமளியினோடும்* அழகிய பாற்கடலோடும்*
அரவிந்தப் பாவையும்தானும்* அகம்படி வந்துபுகுந்து*
பரவைத் திரைபலமோதப்* பள்ளி கொள்கின்றபிரானைப்*
பரவுகின்றான் விட்டுசித்தன்* பட்டினம்காவற்பொருட்டே. (2)