பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
தன்முகத்துச் சுட்டி* தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்*
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப்* புழுதி அளைகின்றான்*
என்மகன் கோவிந்தன்* கூத்தினை இள மா மதீ!*
நின்முகம் கண்ணுள ஆகில்* நீ இங்கே நோக்கிப் போ (2)
என் சிறுக்குட்டன்* எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்*
தன் சிறுக்கைகளால்* காட்டிக் காட்டி அழைக்கின்றான்*
அஞ்சன வண்ணனோடு* ஆடல் ஆட உறுதியேல்*
மஞ்சில் மறையாதே* மா மதீ! மகிழ்ந்து ஓடி வா
சுற்றும் ஒளிவட்டம்* சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*
எத்தனை செய்யிலும்* என்மகன் முகம் நேரொவ்வாய்*
வித்தகன் வேங்கட வாணன்* உன்னை விளிக்கின்ற*
கைத்தலம் நோவாமே* அம்புலீ! கடிது ஓடி வா
சக்கரக் கையன்* தடங்கண்ணால் மலர விழித்து*
ஒக்கலைமேல் இருந்து* உன்னையே சுட்டிக் காட்டும் காண்*
தக்கது அறிதியேல்* சந்திரா! சலம் செய்யாதே*
மக்கட் பெறாத* மலடன் அல்லையேல் வா கண்டாய்
அழகிய வாயில்* அமுத ஊறல் தெளிவுற*
மழலை முற்றாத இளஞ்சொல்லால்* உன்னைக் கூகின்றான்*
குழகன் சிரீதரன்* கூவக் கூவ நீ போதியேல்*
புழையில ஆகாதே* நின்செவி புகர் மா மதீ!
தண்டொடு சக்கரம்* சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்*
கண் துயில்கொள்ளக் கருதிக்* கொட்டாவி கொள்கின்றான்*
உண்ட முலைப்பால் அறா கண்டாய்* உறங் காவிடில்*
விண்தனில் மன்னிய* மா மதீ! விரைந்து ஓடி வா
பாலகன் என்று* பரிபவம் செய்யேல்* பண்டு ஓர் நாள்
ஆலின் இலை வளர்ந்த* சிறுக்கன் அவன் இவன்*
மேல் எழப் பாய்ந்து* பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்*
மாலை மதியாதே* மா மதீ! மகிழ்ந்து ஓடி வா
சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை* இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை* மாவலியிடைச் சென்று கேள்*
சிறுமைப் பிழை கொள்ளில்* நீயும் உன் தேவைக்கு உரியை காண்*
நிறைமதீ! நெடுமால்* விரைந்து உன்னைக் கூகின்றான்
தாழியில் வெண்ணெய்* தடங்கை ஆர விழுங்கிய*
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய்* உன்னைக் கூகின்றான்*
ஆழிகொண்டு உன்னை எறியும்* ஐயுறவு இல்லை காண்*
வாழ உறுதியேல்* மா மதீ! மகிழ்ந்து ஓடி வா
மைத்தடங் கண்ணி* யசோதை தன்மகனுக்கு* இவை-
ஒத்தன சொல்லி* உரைத்த மாற்றம்* ஒளிபுத்தூர்-
வித்தகன் விட்டுசித்தன்* விரித்த தமிழ் இவை*
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு* இடர் இல்லையே (2)
பின்னை மணாளனை* பேரிற் கிடந்தானை*
முன்னை அமரர்* முதற் தனி வித்தினை*
என்னையும் எங்கள்* குடி முழுது ஆட்கொண்ட*
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்! (2)
பேயின் முலை உண்ட* பிள்ளை இவன் முன்னம்*
மாயச் சகடும்* மருதும் இறுத்தவன்*
காயாமலர் வண்ணன்* கண்ணன் கருங்குழல்*
தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்!
தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!
திண்ணக் கலத்திற்* திரை உறிமேல் வைத்த*
வெண்ணெய் விழுங்கி* விரைய உறங்கிடும்*
அண்ணல் அமரர்* பெருமானை ஆயர்தம்*
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!
பள்ளத்தில் மேயும்* பறவை உருக் கொண்டு*
கள்ள அசுரன்* வருவானைத் தான் கண்டு*
புள் இது என்று* பொதுக்கோ வாய் கீண்டிட்ட*
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!
கற்றினம் மேய்த்துக்* கனிக்கு ஒரு கன்றினைப்*
பற்றி எறிந்த* பரமன் திருமுடி*
உற்றன பேசி* நீ ஓடித் திரியாதே*
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்!
ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்!
கிழக்கிற் குடி மன்னர்* கேடு இலாதாரை*
அழிப்பான் நினைந்திட்டு* அவ் ஆழிஅதனால்*
விழிக்கும் அளவிலே* வேர் அறுத்தானைக்*
குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்!
கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்!
பிண்டத் திரளையும்* பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்*
உண்டற்கு வேண்டி* நீ ஓடித் திரியாதே*
அண்டத்து அமரர்* பெருமான் அழகு அமர்*
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்!
மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!
உந்தி எழுந்த* உருவ மலர்தன்னில்*
சந்தச் சதுமுகன்* தன்னைப் படைத்தவன்*
கொந்தக் குழலைக்* குறந்து புளி அட்டித்*
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்!
தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்!
மன்னன்தன் தேவிமார்* கண்டு மகிழ்வு எய்த*
முன் இவ் உலகினை* முற்றும் அளந்தவன்*
பொன்னின் முடியினைப்* பூ அணைமேல் வைத்துப்*
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்!
பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!
கண்டார் பழியாமே* அக்காக்காய் கார்வண்ணன்!*
வண்டு ஆர் குழல்வார* வா என்ற ஆய்ச்சி சொல்*
விண் தோய் மதில்* வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்*
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே! (2)
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்* தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்-
பொட்டத் துற்றி* மாரிப் பகை புணர்த்த* பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை*
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை* வலைவாய்ப் பற்றிக் கொண்டு* குறமகளிர்-
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)
வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்* வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட*
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப* மதுசூதன் எடுத்து மறித்த மலை*
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி* இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்*
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்* ஆனாயரும் ஆநிரையும் அலறி*
எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப* இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை*
தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்* புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று*
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்* கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்*
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு* அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை*
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்* கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி* எங்கும்-
குடவாய்ப் பட நின்று மழை பொழியும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
வானத்தில் உள்ளீர்! வலியீர் உள்ளீரேல்* அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்*
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை* இடவன் எழ வாங்கி எடுத்த மலை*
கானக் களி-யானை தன் கொம்பு இழந்து* கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்*
கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
செப்பாடு உடைய திருமால் அவன் தன்* செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*
கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்* காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை*
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி* இலங்கு மணி முத்துவடம் பிறழக்*
குப்பாயம் என நின்று காட்சிதரும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்* படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்*
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்* தாமோதரன் தாங்கு தடவரைதான்*
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த* அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்*
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
சலமா முகில் பல் கணப் போர்க்களத்துச்* சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு*
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்* நாராயணன் முன் முகம் காத்த மலை*
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்* இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்*
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*
வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்* வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை*
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்* தாமோதரன் தாங்கு தடவரை தான்*
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்* முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்*
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்* கோலமும் அழிந்தில வாடிற்று இல*
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல* மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்*
முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்* முன் நெற்றி நரைத்தன போல* எங்கும்-
குடி ஏறி இருந்து மழை பொழியும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*
அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு* அரவப்-பகை ஊர்தி அவனுடைய*
குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*
திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்* பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்*
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்* பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)
ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி* அன்னை அத்தன் என் புத்திரர்பூமி*
வாசவார் குழலாள் என்றுமயங்கி* மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*
கேசவா! புருடோத்தமா! என்றும்* கேழல்ஆகியகேடிலீ! என்றும்*
பேசுவார் அவர் எய்தும் பெருமை* பேசுவான் புகில் நம்பரம்அன்றே (2)
சீயினால் செறிந்துஏறிய புண்மேல்* செற்றல்ஏறிக் குழம்புஇருந்து* எங்கும்-
ஈயினால் அரிப்புஉண்டு மயங்கி* எல்லைவாய்ச்சென்று சேர்வதன்முன்னம்*
வாயினால் நமோநாரணா என்று* மத்தகத்திடைக் கைகளைக்கூப்பிப்*
போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்* பிணைக்கொடுக்கிலும் போகஒட்டாரே.
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்* சொல்லு சொல்லு என்றுசுற்றும்இருந்து*
ஆர்வினவிலும் வாய் திறவாதே* அந்தகாலம் அடைவதன்முன்னம்*
மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து* மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி*
ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு* அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.
மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து* மேல்மிடற்றினை உள்எழவாங்கிக்*
காலும் கையும் விதிர்விதிர்த்துஏறிக்* கண்உறக்கமது ஆவதன்முன்னம்*
மூலம்ஆகிய ஒற்றைஎழுத்தை* மூன்றுமாத்திரை உள்ளெழவாங்கி*
வேலைவண்ணனை மேவுதிர்ஆகில்* விண்ணகத்தினில் மேவலும்மாமே.
மடிவழி வந்து நீர்புலன்சோர* வாயில்அட்டிய கஞ்சியும் மீண்டே*
கடைவழிவாரக் கண்டம்அடைப்பக்* கண்உறக்கமது ஆவதன்முன்னம்*
தொடைவழி உம்மை நாய்கள்கவரா* சூலத்தால் உம்மைப் பாய்வதும்செய்யார்*
இடைவழியில் நீர் கூறையும் இழவீர்* இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே.
அங்கம்விட்டுஅவை ஐந்தும் அகற்றி* ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை*
சங்கம்விட்டுஅவர் கையைமறித்துப்* பையவே தலை சாய்ப்பதன்முன்னம்*
வங்கம்விட்டுஉலவும் கடற்பள்ளி மாயனை* மதுசூதனை மார்பில்-
தங்க விட்டு வைத்து* ஆவதுஓர் கருமம் சாதிப்பார்க்கு* என்றும் சாதிக்கலாமே.
தென்னவன் தமர் செப்பம்இலாதார்* சேவதக்குவார் போலப்புகுந்து*
பின்னும் வன்கயிற்றால் பிணித்துஎற்றிப்* பின்முன்ஆக இழுப்பதன் முன்னம்*
இன்னவன் இனையான் என்றுசொல்லி* எண்ணி உள்ளத்து இருள்அறநோக்கி*
மன்னவன் மதுசூதனன் என்பார்* வானகத்துமன்றாடிகள்தாமே.
கூடிக்கூடி உற்றார்கள் இருந்து* குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து*
பாடிப்பாடி ஓர் பாடையில்இட்டு* நரிப்படைக்கு ஒரு பாகுடம்போலே*
கோடி மூடிஎடுப்பதன் முன்னம்* கௌத்துவம்உடைக் கோவிந்தனோடு*
கூடிஆடிய உள்ளத்தர்ஆனால்* குறிப்பிடம் கடந்து உய்யலும்ஆமே.
வாயொரு பக்கம் வாங்கிவலிப்ப* வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற*
தாய்ஒருபக்கம் தந்தைஒருபக்கம்* தாரமும் ஒருபக்கம் அலற்ற*
தீஒருபக்கம் சேர்வதன் முன்னம்* செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற-
மாய்* ஒருபக்கம் நிற்கவல்லார்க்கு* அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.
செத்துப்போவதோர் போதுநினைந்து* செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்*
பத்தராய்இறந்தார் பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*
சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்*
சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)