பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    தன்முகத்துச் சுட்டி*  தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்* 
    பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப்*  புழுதி அளைகின்றான்*

    என்மகன் கோவிந்தன்*  கூத்தினை இள மா மதீ!* 
    நின்முகம் கண்ணுள ஆகில்*  நீ இங்கே நோக்கிப் போ (2)


    என் சிறுக்குட்டன்*  எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்*
    தன் சிறுக்கைகளால்*  காட்டிக் காட்டி அழைக்கின்றான்*

    அஞ்சன வண்ணனோடு*  ஆடல் ஆட உறுதியேல்*
    மஞ்சில் மறையாதே*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா 


    சுற்றும் ஒளிவட்டம்*  சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*
    எத்தனை செய்யிலும்*  என்மகன் முகம் நேரொவ்வாய்*

    வித்தகன் வேங்கட வாணன்*  உன்னை விளிக்கின்ற*
    கைத்தலம் நோவாமே*  அம்புலீ! கடிது ஓடி வா      


    சக்கரக் கையன்*  தடங்கண்ணால் மலர விழித்து*
    ஒக்கலைமேல் இருந்து*  உன்னையே சுட்டிக் காட்டும் காண்*

    தக்கது அறிதியேல்*  சந்திரா! சலம் செய்யாதே*
    மக்கட் பெறாத*  மலடன் அல்லையேல் வா கண்டாய்


    அழகிய வாயில்*  அமுத ஊறல் தெளிவுற*
    மழலை முற்றாத இளஞ்சொல்லால்*  உன்னைக் கூகின்றான்*

    குழகன் சிரீதரன்*  கூவக் கூவ நீ போதியேல்*
    புழையில ஆகாதே*  நின்செவி புகர் மா மதீ!


    தண்டொடு சக்கரம்*  சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்*
    கண் துயில்கொள்ளக் கருதிக்*  கொட்டாவி கொள்கின்றான்*

    உண்ட முலைப்பால் அறா கண்டாய்*  உறங் காவிடில்*
    விண்தனில் மன்னிய*  மா மதீ! விரைந்து ஓடி வா


    பாலகன் என்று*  பரிபவம் செய்யேல்*  பண்டு ஓர் நாள்
    ஆலின் இலை வளர்ந்த*  சிறுக்கன் அவன் இவன்*

    மேல் எழப் பாய்ந்து*  பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்*
    மாலை மதியாதே*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா


    சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை*  இகழேல் கண்டாய்*
    சிறுமையின் வார்த்தையை*  மாவலியிடைச் சென்று கேள்*

    சிறுமைப் பிழை கொள்ளில்*  நீயும் உன் தேவைக்கு உரியை காண்*
    நிறைமதீ! நெடுமால்*  விரைந்து உன்னைக் கூகின்றான்


    தாழியில் வெண்ணெய்*  தடங்கை ஆர விழுங்கிய* 
    பேழை வயிற்று எம்பிரான் கண்டாய்*  உன்னைக் கூகின்றான்* 

    ஆழிகொண்டு உன்னை எறியும்*  ஐயுறவு இல்லை காண்* 
    வாழ உறுதியேல்*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா


    மைத்தடங் கண்ணி*  யசோதை தன்மகனுக்கு*  இவை- 
    ஒத்தன சொல்லி*  உரைத்த மாற்றம்*  ஒளிபுத்தூர்-

    வித்தகன் விட்டுசித்தன்*  விரித்த தமிழ் இவை* 
    எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு*  இடர் இல்லையே  (2)      


    பின்னை மணாளனை*  பேரிற் கிடந்தானை* 
    முன்னை அமரர்* முதற் தனி வித்தினை* 

    என்னையும் எங்கள்*  குடி முழுது ஆட்கொண்ட* 
    மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்! (2)  


    பேயின் முலை உண்ட*  பிள்ளை இவன் முன்னம்* 
    மாயச் சகடும்*  மருதும் இறுத்தவன்* 

    காயாமலர் வண்ணன்*  கண்ணன் கருங்குழல்* 
    தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்! 


    திண்ணக் கலத்திற்*  திரை உறிமேல் வைத்த* 
    வெண்ணெய் விழுங்கி*  விரைய உறங்கிடும்*

    அண்ணல் அமரர்*  பெருமானை ஆயர்தம்* 
    கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!


    பள்ளத்தில் மேயும்*  பறவை உருக் கொண்டு* 
    கள்ள அசுரன்*  வருவானைத் தான் கண்டு* 

    புள் இது என்று*  பொதுக்கோ வாய் கீண்டிட்ட* 
    பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!


    கற்றினம் மேய்த்துக்*  கனிக்கு ஒரு கன்றினைப்* 
    பற்றி எறிந்த*  பரமன் திருமுடி* 

    உற்றன பேசி*  நீ ஓடித் திரியாதே* 
    அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    கிழக்கிற் குடி மன்னர்*  கேடு இலாதாரை* 
    அழிப்பான் நினைந்திட்டு*  அவ் ஆழிஅதனால்* 

    விழிக்கும் அளவிலே*  வேர் அறுத்தானைக்* 
    குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்! 
    கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    பிண்டத் திரளையும்*  பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்* 
    உண்டற்கு வேண்டி*  நீ ஓடித் திரியாதே*

    அண்டத்து அமரர்*  பெருமான் அழகு அமர்* 
    வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்! 
    மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    உந்தி எழுந்த*  உருவ மலர்தன்னில்*  
    சந்தச் சதுமுகன்*  தன்னைப் படைத்தவன்* 

    கொந்தக் குழலைக்*  குறந்து புளி அட்டித்* 
    தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்! 
    தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    மன்னன்தன் தேவிமார்*  கண்டு மகிழ்வு எய்த* 
    முன் இவ் உலகினை*  முற்றும் அளந்தவன்*

    பொன்னின் முடியினைப்* பூ அணைமேல் வைத்துப்* 
    பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!


    கண்டார் பழியாமே*  அக்காக்காய் கார்வண்ணன்!* 
    வண்டு ஆர் குழல்வார*  வா என்ற ஆய்ச்சி சொல்*

    விண் தோய் மதில்*  வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்* 
    கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே! (2)


    அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்*  தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்- 
    பொட்டத் துற்றி*  மாரிப் பகை புணர்த்த*  பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை* 

    வட்டத் தடங்கண் மட மான் கன்றினை*  வலைவாய்ப் பற்றிக் கொண்டு*  குறமகளிர்- 
    கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)


    வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்*  வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட* 
    மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப*  மதுசூதன் எடுத்து மறித்த மலை* 

    இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி*  இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்* 
    குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்*  ஆனாயரும் ஆநிரையும் அலறி* 
    எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப*  இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை* 

    தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்*  புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று* 
    கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்*  கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்* 
    அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு*  அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை* 

    கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்*  கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி*  எங்கும்- 
    குடவாய்ப் பட நின்று மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    வானத்தில் உள்ளீர்! வலியீர் உள்ளீரேல்*  அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்* 
    ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை*  இடவன் எழ வாங்கி எடுத்த மலை*

    கானக் களி-யானை தன் கொம்பு இழந்து*  கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்* 
    கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    செப்பாடு உடைய திருமால் அவன் தன்*  செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*  
    கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்*  காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை*

    எப்பாடும் பரந்து இழி தெள் அருவி*  இலங்கு மணி முத்துவடம் பிறழக்* 
    குப்பாயம் என நின்று காட்சிதரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்*  படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்* 
    தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்*  தாமோதரன் தாங்கு தடவரைதான்* 

    அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த*  அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்* 
    குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    சலமா முகில் பல் கணப் போர்க்களத்துச்*  சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு* 
    நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்*  நாராயணன் முன் முகம் காத்த மலை* 

    இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்*  இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்* 
    கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்*  வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை* 
    தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்*  தாமோதரன் தாங்கு தடவரை தான்* 

    முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்*  முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்* 
    கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்*  கோலமும் அழிந்தில வாடிற்று இல* 
    வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல*  மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்*

    முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்*  முன் நெற்றி நரைத்தன போல*  எங்கும்- 
    குடி ஏறி இருந்து மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு*  அரவப்-பகை ஊர்தி அவனுடைய*  
    குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*

    திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்*  பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்* 
    பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)


    ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி*  அன்னை அத்தன் என் புத்திரர்பூமி* 
    வாசவார் குழலாள் என்றுமயங்கி*  மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*

    கேசவா! புருடோத்தமா! என்றும்*  கேழல்ஆகியகேடிலீ! என்றும்* 
    பேசுவார் அவர் எய்தும் பெருமை*  பேசுவான் புகில் நம்பரம்அன்றே (2) 


    சீயினால் செறிந்துஏறிய புண்மேல்*  செற்றல்ஏறிக் குழம்புஇருந்து*  எங்கும்- 
    ஈயினால் அரிப்புஉண்டு மயங்கி*  எல்லைவாய்ச்சென்று சேர்வதன்முன்னம்*

    வாயினால் நமோநாரணா என்று*  மத்தகத்திடைக் கைகளைக்கூப்பிப்* 
    போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்*  பிணைக்கொடுக்கிலும் போகஒட்டாரே.


    சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்*  சொல்லு சொல்லு என்றுசுற்றும்இருந்து* 
    ஆர்வினவிலும் வாய் திறவாதே*  அந்தகாலம் அடைவதன்முன்னம்*

    மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து*  மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி* 
    ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு*  அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.


    மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து*  மேல்மிடற்றினை உள்எழவாங்கிக்* 
    காலும் கையும் விதிர்விதிர்த்துஏறிக்*  கண்உறக்கமது ஆவதன்முன்னம்*

    மூலம்ஆகிய ஒற்றைஎழுத்தை*  மூன்றுமாத்திரை உள்ளெழவாங்கி* 
    வேலைவண்ணனை மேவுதிர்ஆகில்*  விண்ணகத்தினில் மேவலும்மாமே.  


    மடிவழி வந்து நீர்புலன்சோர*  வாயில்அட்டிய கஞ்சியும் மீண்டே* 
    கடைவழிவாரக் கண்டம்அடைப்பக்*  கண்உறக்கமது ஆவதன்முன்னம்*

    தொடைவழி உம்மை நாய்கள்கவரா*  சூலத்தால் உம்மைப் பாய்வதும்செய்யார்* 
    இடைவழியில் நீர் கூறையும் இழவீர்*  இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே.  


    அங்கம்விட்டுஅவை ஐந்தும் அகற்றி*  ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை* 
    சங்கம்விட்டுஅவர் கையைமறித்துப்*  பையவே தலை சாய்ப்பதன்முன்னம்*

    வங்கம்விட்டுஉலவும் கடற்பள்ளி மாயனை*  மதுசூதனை மார்பில்- 
    தங்க விட்டு வைத்து*  ஆவதுஓர் கருமம் சாதிப்பார்க்கு*  என்றும் சாதிக்கலாமே.


    தென்னவன் தமர் செப்பம்இலாதார்*  சேவதக்குவார் போலப்புகுந்து* 
    பின்னும் வன்கயிற்றால் பிணித்துஎற்றிப்*  பின்முன்ஆக இழுப்பதன் முன்னம்*

    இன்னவன் இனையான் என்றுசொல்லி*  எண்ணி உள்ளத்து இருள்அறநோக்கி* 
    மன்னவன் மதுசூதனன் என்பார்*  வானகத்துமன்றாடிகள்தாமே. 


    கூடிக்கூடி உற்றார்கள் இருந்து*  குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து* 
    பாடிப்பாடி ஓர் பாடையில்இட்டு*  நரிப்படைக்கு ஒரு பாகுடம்போலே*

    கோடி மூடிஎடுப்பதன் முன்னம்*  கௌத்துவம்உடைக் கோவிந்தனோடு* 
    கூடிஆடிய உள்ளத்தர்ஆனால்*  குறிப்பிடம் கடந்து உய்யலும்ஆமே.


    வாயொரு பக்கம் வாங்கிவலிப்ப*  வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற* 
    தாய்ஒருபக்கம் தந்தைஒருபக்கம்*  தாரமும் ஒருபக்கம் அலற்ற*

    தீஒருபக்கம் சேர்வதன் முன்னம்*  செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற-
    மாய்*  ஒருபக்கம் நிற்கவல்லார்க்கு*  அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.


    செத்துப்போவதோர் போதுநினைந்து*  செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்* 
    பத்தராய்இறந்தார் பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*

    சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்* 
    சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே  (2)