பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
பொன் இயல் கிண்கிணி* சுட்டி புறங் கட்டித்*
தன் இயல் ஓசை* சலன்-சலன் என்றிட*
மின் இயல் மேகம்* விரைந்து எதிர் வந்தாற்போல்*
என் இடைக்கு ஓட்டரா அச்சோ* அச்சோ
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ (2)
செங்கமலப் பூவிற்* தேன் உண்ணும் வண்டே போல்*
பங்கிகள் வந்து* உன் பவளவாய் மொய்ப்ப*
சங்கு வில் வாள் தண்டு* சக்கரம் ஏந்திய*
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ*
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கைசெய்து*
நஞ்சு உமிழ் நாகம்* கிடந்த நற் பொய்கை புக்கு*
அஞ்சப் பணத்தின்மேல்* பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சனவண்ணனே! அச்சோ அச்சோ*
ஆயர் பெருமானே! அச்சோ அச்சோ
நாறிய சாந்தம்* நமக்கு இறை நல்கு என்னத்*
தேறி அவளும்* திருவுடம்பிற் பூச*
ஊறிய கூனினை* உள்ளே ஒடுங்க* அன்று_
ஏற உருவினாய்! அச்சோ அச்சோ*
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ
கழல் மன்னர் சூழக்* கதிர் போல் விளங்கி*
எழலுற்று மீண்டே* இருந்து உன்னை நோக்கும்*
சுழலை பெரிது உடைத்* துச்சோதனனை*
அழல விழித்தானே! அச்சோ அச்சோ*
ஆழி அங் கையனே! அச்சோ அச்சோ
போர் ஒக்கப் பண்ணி* இப் பூமிப்பொறை தீர்ப்பான்*
தேர் ஒக்க ஊர்ந்தாய்!* செழுந்தார் விசயற்காய்*
கார் ஒக்கு மேனிக்* கரும் பெருங் கண்ணனே!*
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ*
ஆயர்கள் போரேறே! அச்சோ அச்சோ
மிக்க பெரும்புகழ்* மாவலி வேள்வியிற்*
தக்கது இது அன்று என்று* தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத்* துரும்பாற் கிளறிய*
சக்கரக் கையனே! அச்சோ அச்சோ*
சங்கம் இடத்தானே! அச்சோ அச்சோ
என் இது மாயம்?* என் அப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே* கொண்டு அளவாய் என்ன*
மன்னு நமுசியை* வானிற் சுழற்றிய*
மின்னு முடியனே! அச்சோ அச்சோ*
வேங்கடவாணனே! அச்சோ அச்சோ
கண்ட கடலும்* மலையும் உலகு ஏழும்*
முண்டத்துக்கு ஆற்றா* முகில்வண்ணா ஓ! என்று*
இண்டைச் சடைமுடி* ஈசன் இரக்கொள்ள*
மண்டை நிறைத்தானே! அச்சோ அச்சோ*
மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ
துன்னிய பேரிருள்* சூழ்ந்து உலகை மூட*
மன்னிய நான்மறை* முற்றும் மறைந்திடப்*
பின் இவ் உலகினில்* பேரிருள் நீங்க* அன்று-
அன்னமது ஆனானே! அச்சோ அச்சோ*
அருமறை தந்தானே! அச்சோ அச்சோ
நச்சுவார் முன் நிற்கும்* நாராயணன் தன்னை*
அச்சோ வருக என்று* ஆய்ச்சி உரைத்தன*
மச்சு அணி மாடப்* புதுவைக்கோன் பட்டன் சொல்*
நிச்சலும் பாடுவார்* நீள் விசும்பு ஆள்வரே (2)
தாயே தந்தை என்றும்* தாரமே கிளை மக்கள் என்றும்*
நோயே பட்டொழிந்தேன்* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
வேய் ஏய் பூம் பொழில் சூழ்* விரை ஆர் திருவேங்கடவா!*
நாயேன் வந்து அடைந்தேன்* நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.
மான் ஏய் கண் மடவார்* மயக்கில் பட்டு மா நிலத்து*
நானே நானாவித* நரகம் புகும் பாவம் செய்தேன்*
தேன் ஏய் பூம் பொழில் சூழ்* திருவேங்கட மா மலை*
என் ஆனாய் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
கொன்றேன் பல் உயிரை* குறிக்கோள் ஒன்று இலாமையினால்*
என்றேனும் இரந்தார்க்கு* இனிது ஆக உரைத்து அறியேன்*
குன்று ஏய் மேகம் அதிர்* குளிர் மா மலை வேங்கடவா!*
அன்றே வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
குலம் தான் எத்தனையும்* பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்*
நலம் தான் ஒன்றும் இலேன்* நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்*
நிலம் தோய் நீள் முகில் சேர்* நெறி ஆர் திருவேங்கடவா!*
அலந்தேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
எப் பாவம் பலவும்* இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
துப்பா! நின் அடியே* தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*
செப்பு ஆர் திண் வரை சூழ்* திருவேங்கட மா மலை*
என் அப்பா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
மண் ஆய் நீர் எரி கால்* மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்*
புண் ஆர் ஆக்கை தன்னுள்* புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்*
விண் ஆர் நீள் சிகர* விரைஆர் திருவேங்கடவா!*
அண்ணா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
தெரியேன் பாலகனாய்* பல தீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேன் ஆயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*
கரி சேர் பூம் பொழில் சூழ்* கன மா மலை வேங்கடவா!*
அரியே! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
நோற்றேன் பல் பிறவி* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
ஏற்றேன் இப் பிறப்பே* இடர் உற்றனன்-எம் பெருமான்!*
கோல் தேன் பாய்ந்து ஒழுகும்* குளிர் சோலை சூழ் வேங்கடவா!*
ஆற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
பற்றேல் ஒன்றும் இலேன்* பாவமே செய்து பாவி ஆனேன்*
மற்றேல் ஒன்று அறியேன்* மாயனே எங்கள் மாதவனே!*
கல் தேன் பாய்ந்து ஒழுகும்* கமலச் சுனை வேங்கடவா!
அற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய* எம் கார் வண்ணனை*
விண்ணோர் தாம் பரவும்* பொழில் வேங்கட வேதியனை*
திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்*
பண் ஆர் பாடல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2)
இவையும் அவையும் உவையும்* இவரும் அவரும் உவரும்,*
எவையும் எவரும் தன்னுளே* ஆகியும் ஆக்கியும் காக்கும்,*
அவையுள் தனிமுதல் எம்மான்* கண்ண பிரான் என் அமுதம்,*
சுவையன் திருவின் மணாளன்* என்னுடைச் சூழல் உளானே.
சூழல் பலபல வல்லான்* தொல்லை அம் காலத்து உலகைக்*
கேழல் ஒன்று ஆகி இடந்த* கேசவன் என்னுடை அம்மான்,*
வேழ மருப்பை ஒசித்தான்* விண்ணவர்க்கு எண்ணல் அரியான்*
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்* அவன் என் அருகவிலானே.
அருகல் இலாய பெரும் சீர்* அமரர்கள் ஆதி முதல்வன்,*
கருகிய நீல நன் மேனி வண்ணன்* செந்தாமரைக் கண்ணன்,*
பொரு சிறைப் புள் உவந்து ஏறும்* பூமகளார் தனிக் கேள்வன்,*
ஒருகதியின் சுவை தந்திட்டு* ஒழிவு இலன் என்னோடு உடனே
உடன் அமர் காதல் மகளிர்* திருமகள் மண்மகள் ஆயர்-
மட மகள் என்று இவர் மூவர் ஆளும்* உலகமும் மூன்றே,*
உடன் அவை ஒக்க விழுங்கி* ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்,*
கடல் மலி மாயப் பெருமான்* கண்ணன் என் ஒக்கலையானே.
ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று* தந்திட வாங்கிச்,
செக்கம் செக அன்று அவள்பால்* உயிர் செக உண்ட பெருமான்,*
நக்க பிரானோடு அயனும்* இந்திரனும் முதலாக,*
ஒக்கவும் தோற்றிய ஈசன்* மாயன் என் நெஞ்சின் உளானே.
மாயன் என் நெஞ்சின் உள்ளான்* மற்றும் எவர்க்கும் அதுவே,*
காயமும் சீவனும் தானே* காலும் எரியும் அவனே,*
சேயன் அணியன் எவர்க்கும்* சிந்தைக்கும் கோசரம் அல்லன்,*
தூயன் துயக்கன் மயக்கன்* என்னுடைத் தோளிணையானே.
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்* சுடர் முடி மேலும்,*
தாள் இணை மேலும் புனைந்த* தண் அம் துழாய் உடை அம்மான்*
கேள் இணை ஒன்றும் இலாதான்* கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,*
நாள் அணைந்து ஒன்றும் அகலான்* என்னுடை நாவின் உளானே.
நாவினுள் நின்று மலரும்* ஞானக் கலைகளுக்கு எல்லாம்,*
ஆவியும் ஆக்கையும் தானே* அழிப்போடு அளிப்பவன் தானே,*
பூ இயல் நால் தடம் தோளன்* பொரு படை ஆழி சங்கு ஏந்தும்,*
காவி நன் மேனிக் கமலக்* கண்ணன் என் கண்ணின் உளானே.
கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்* காண்பன் அவன் கண்களாலே,*
அமலங்கள் ஆக விழிக்கும்* ஐம்புலனும் அவன் மூர்த்தி,*
கமலத்து அயன் நம்பி தன்னைக்* கண்ணுதலானொடும் தோற்றி*
அமலத் தெய்வத்தொடு உலகம்* ஆக்கி என் நெற்றி உளானே.
நெற்றியுள் நின்று என்னை ஆளும்* நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்,*
கற்றைத் துழாய் முடிக் கோலக்* கண்ண பிரானைத் தொழுவார்,*
ஒற்றைப் பிறை அணிந்தானும்* நான்முகனும் இந்திரனும்,*
மற்றை அமரரும் எல்லாம் வந்து* எனது உச்சியுளானே.
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்* கண்ண பிரானுக்கு,*
இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*
இச் சொன்ன ஆயிரத்துள்ளே* இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,*
நிச்சலும் விண்ணப்பம் செய்ய* நீள் கழல் சென்னி பொருமே.