பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
உடன் அமர் காதல் மகளிர்* திருமகள் மண்மகள் ஆயர்-
மட மகள் என்று இவர் மூவர் ஆளும்* உலகமும் மூன்றே,*
உடன் அவை ஒக்க விழுங்கி* ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்,*
கடல் மலி மாயப் பெருமான்* கண்ணன் என் ஒக்கலையானே.
ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று* தந்திட வாங்கிச்,
செக்கம் செக அன்று அவள்பால்* உயிர் செக உண்ட பெருமான்,*
நக்க பிரானோடு அயனும்* இந்திரனும் முதலாக,*
ஒக்கவும் தோற்றிய ஈசன்* மாயன் என் நெஞ்சின் உளானே.
மாயன் என் நெஞ்சின் உள்ளான்* மற்றும் எவர்க்கும் அதுவே,*
காயமும் சீவனும் தானே* காலும் எரியும் அவனே,*
சேயன் அணியன் எவர்க்கும்* சிந்தைக்கும் கோசரம் அல்லன்,*
தூயன் துயக்கன் மயக்கன்* என்னுடைத் தோளிணையானே.
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்* சுடர் முடி மேலும்,*
தாள் இணை மேலும் புனைந்த* தண் அம் துழாய் உடை அம்மான்*
கேள் இணை ஒன்றும் இலாதான்* கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,*
நாள் அணைந்து ஒன்றும் அகலான்* என்னுடை நாவின் உளானே.
எம்மாவீட்டுத்* திறமும் செப்பம்,* நின்
செம்மா பாடபற்புத்* தலைசேர்த்து ஒல்லை,-
கைம்மா துன்பம்* கடிந்த பிரானே,*
அம்மா அடியேன்* வேண்டுவது ஈதே.
ஈதே யான் உன்னைக்* கொள்வது எஞ்ஞான்றும்,* என்
மை தோய் சோதி* மணிவண்ண எந்தாய்,*
எய்தா நின் கழல்* யான் எய்த,* ஞானக்
கைதா* காலக் கழிவு செய்யேலே.
செய்யேல் தீவினை என்று* அருள் செய்யும்,* என்
கை ஆர் சக்கரக்* கண்ண பிரானே,*
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும்* நின் கழல்
எய்யாது ஏத்த,* அருள்செய் எனக்கே.
எனக்கே ஆட்செய்* எக்காலத்தும் என்று,* என்
மனக்கே வந்து* இடைவீடு இன்றி மன்னி,*
தனக்கே ஆக* எனைக் கொள்ளும் ஈதே,*
எனக்கே கண்ணனை* யான் கொள் சிறப்பே.
சிறப்பில் வீடு* சுவர்க்கம் நரகம்,*
இறப்பில் எய்துக* எய்தற்க,* யானும்
பிறப்பு இல்* பல் பிறவிப் பெருமானை,*
மறப்பு ஒன்று இன்றி* என்றும் மகிழ்வனே.
மகிழ் கொள் தெய்வம்* உலோகம் அலோகம்,*
மகிழ் கொள் சோதி* மலர்ந்த அம்மானே,*
மகிழ் கொள் சிந்தை* சொல் செய்கை கொண்டு,* என்றும்
மகிழ்வுற்று* உன்னை வணங்க வாராயே.
வாராய்* உன் திருப் பாத மலர்க்கீழ்ப்,*
பேராதே யான் வந்து* அடையும்படி
தாராதாய்,* உன்னை என்னுள்* வைப்பில் என்றும்
ஆராதாய்,* எனக்கு என்றும் எக்காலே.
எக்காலத்து எந்தையாய்* என்னுள் மன்னில்,* மற்று
எக் காலத்திலும்* யாதொன்றும் வேண்டேன்,*
மிக்கார் வேத* விமலர் விழுங்கும்,* என்
அக்காரக் கனியே* உன்னை யானே.
யானே என்னை* அறியகிலாதே,*
யானே என் தனதே* என்று இருந்தேன்,*
யானே நீ* என் உடைமையும் நீயே,*
வானே ஏத்தும்* எம் வானவர் ஏறே
ஏறேல் ஏழும்* வென்று ஏர் கொள் இலங்கையை,*
நீறே செய்த* நெடுஞ் சுடர்ச் சோதி,*
தேறேல் என்னை* உன் பொன் அடி சேர்த்து* ஒல்லை-
வேறே போக* எஞ்ஞான்றும் விடலே.
விடல் இல் சக்கரத்து* அண்ணலை மேவல்*
விடல் இல் வண் குருகூர்ச்* சடகோபன்,*
கெடல் இல் ஆயிரத்துள்* இவை பத்தும்,*
கெடல் இல் வீடு செய்யும்* கிளர்வார்க்கே.
சொன்னால் விரோதம் இது* ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,*
என் நாவில் இன்கவி* யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*
தென்னா தெனா என்று* வண்டு முரல் திருவேங்கடத்து,*
என் ஆனை என் அப்பன்* எம் பெருமான் உளனாகவே.
உளனாகவே எண்ணி* தன்னை ஒன்றாக தன் செல்வத்தை*
வளனா மதிக்கும்* இம் மானிடத்தைக் கவி பாடி என்,*
குளன் ஆர் கழனிசூழ்* கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,*
உளனாய எந்தையை* எந்தை பெம்மானை ஒழியவே?
ஒழிவு ஒன்று இல்லாத* பல் ஊழிதோறு ஊழி நிலாவப்,* போம்
வழியைத் தரும் நங்கள்* வானவர் ஈசனை நிற்கப் போய்,*
கழிய மிக நல்லவான்* கவி கொண்டு புலவீர்காள்,*
இழியக் கருதி* ஓர் மானிடம் பாடல் என் ஆவதே.
என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும்* புலவீர்காள்,*
மன்னா மனிசரைப் பாடிப்* படைக்கும் பெரும் பொருள்?,*
மின் ஆர் மணிமுடி* விண்ணவர் தாதையைப் பாடினால்,*
தன்னாகவே கொண்டு* சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.
கொள்ளும் பயன் இல்லை* குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்ந்து* நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,*
கொள்ளக் குறைவு இலன்* வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல்,* என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக்* கவி சொல்ல வம்மினோ.
வம்மின் புலவீர்!* நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,*
இம் மன் உலகினில்* செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்,*
நும் இன் கவி கொண்டு* நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்,*
செம் மின் சுடர் முடி* என் திருமாலுக்குச் சேருமே.
சேரும் கொடை புகழ்* எல்லை இலானை,* ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்* மற்று யான் கிலேன்,*
மாரி அனைய கை* மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,*
பாரில் ஓர் பற்றையைப்* பச்சைப் பசும் பொய்கள் பேசவே.
வேயின் மலிபுரை தோளி* பின்னைக்கு மணாளனை,*
ஆய பெரும்புகழ்* எல்லை இலாதன பாடிப்போய்,*
காயம் கழித்து* அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்,*
மாய மனிசரை* என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே?
வாய்கொண்டு மானிடம் பாடவந்த* கவியேன் அல்லேன்.*
ஆய்கொண்ட சீர்வள்ளல்* ஆழிப் பிரான் எனக்கே உளன்,*
சாய் கொண்ட இம்மையும் சாதித்து* வானவர் நாட்டையும்,*
நீ கண்டுகொள் என்று* வீடும் தரும் நின்றுநின்றே!
நின்றுநின்று பல நாள் உய்க்கும்* இவ் உடல் நீங்கிப்போய்,*
சென்று சென்று ஆகிலும் கண்டு* சன்மம் கழிப்பான் எண்ணி,*
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்* கவி ஆயினேற்கு,*
என்றும் என்றும் இனி* மற்றொருவர் கவி ஏற்குமே?
ஏற்கும் பெரும்புகழ்* வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,*
ஏற்கும் பெரும்புகழ்* வண் குருகூர்ச் சடகோபன் சொல்,*
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,*
ஏற்கும் பெரும்புகழ்* சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.
நண்ணாதார் முறுவலிப்ப* நல் உற்றார் கரைந்து ஏங்க,*
எண் ஆராத் துயர் விளைக்கும்* இவை என்ன உலகு இயற்கை?,*
கண்ணாளா! கடல் கடைந்தாய்!* உன கழற்கே வரும் பரிசு,*
தண்ணாவாது அடியேனைப்* பணி கண்டாய் சாமாறே. (2)
சாம் ஆறும் கெடும் ஆறும்* தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து,*
ஏமாறிக் கிடந்து அலற்றும்* இவை என்ன உலகு இயற்கை?,*
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான்* அரவு அணையாய்! அம்மானே,*
கூமாறே விரைகண்டாய்* அடியேனை குறிக்கொண்டே.
கொண்டாட்டும் குலம் புனைவும்* தமர் உற்றார் விழு நிதியும்,*
வண்டு ஆர் பூங் குழலாளும்,* மனை ஒழிய உயிர் மாய்தல்,*
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை* கடல்வண்ணா! அடியேனைப்*
பண்டேபோல் கருதாது* உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே.
கொள் என்று கிளர்ந்து எழுந்த* பெரும் செல்வம் நெருப்பு ஆக,*
கொள் என்று தமம் மூடும்* இவை என்ன உலகு இயற்கை?*
வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும்பரிசு,*
வள்ளல் செய்து அடியேனை* உனது அருளால் வாங்காயே.
வாங்கு நீர் மலர் உலகில்* நிற்பனவும் திரிவனவும்,*
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப்* பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்,*
ஈங்கு இதன்மேல் வெம் நரகம்* இவை என்ன உலகு இயற்கை?*
வாங்கு எனை நீ மணிவண்ணா!* அடியேனை மறுக்கேலே.
மறுக்கி வல் வலைப்படுத்தி* குமைத்திட்டு கொன்று உண்பர்,*
அறப்பொருளை அறிந்து ஓரார்* இவை என்ன உலகு இயற்கை?*
வெறித் துளவ முடியானே!* வினையேனை உனக்கு அடிமை-
அறக்கொண்டாய்,* இனி என் ஆர் அமுதே!* கூயருளாயே.
ஆயே! இவ் உலகத்து* நிற்பனவும் திரிவனவும்*
நீயே மற்று ஒரு பொருளும்* இன்றி நீ நின்றமையால்,*
நோயே மூப்பு இறப்பு பிறப்பு* பிணியே என்று இவை ஒழிய,*
கூயேகொள் அடியேனை* கொடு உலகம் காட்டேலே.
காட்டி நீ கரந்து உமிழும்* நிலம் நீர் தீ விசும்பு கால்,*
ஈட்டி நீ வைத்து அமைத்த* இமையோர் வாழ் தனி முட்டைக்,*
கோட்டையினில் கழித்து* என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* எஞ்ஞான்று கூட்டுதியே?
கூட்டுதி நின் குரை கழல்கள்* இமையோரும் தொழாவகைசெய்து,*
ஆட்டுதி நீ அரவு அணையாய்!* அடியேனும் அஃது அறிவன்,*
வேட்கை எல்லாம் விடுத்து* என்னை உன் திருவடியே சுமந்து உழலக்,*
கூட்டு அரிய திருவடிக்கள்* கூட்டினை நான் கண்டேனே.
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்* ஐங்கருவி
கண்ட இன்பம்,* தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,*
ஒண் தொடியாள் திருமகளும்* நீயுமே நிலாநிற்ப,*
கண்ட சதிர் கண்டொழிந்தேன்* அடைந்தேன் உன் திருவடியே.
திருவடியை நாரணனை* கேசவனை பரஞ்சுடரை,*
திருவடி சேர்வது கருதி* செழுங் குருகூர்ச் சடகோபன்,*
திருவடிமேல் உரைத்த தமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
திருவடியே அடைவிக்கும்* திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)
மான் ஏய் நோக்கு நல்லீர்!* வைகலும் வினையேன் மெலிய*
வான் ஆர் வண் கமுகும்* மது மல்லிகை கமழும்*
தேன் ஆர் சோலைகள் சூழ்* திருவல்லவாழ் உறையும்-
கோனாரை* அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)
என்று கொல்? தோழிமீர்காள்* எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*
பொன்திகழ் புன்னை மகிழ்* புது மாதவி மீது அணவி*
தென்றல் மணம் கமழும்* திருவல்லவாழ் நகருள்-
நின்ற பிரான்* அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*
சூடு மலர்க்குழலீர்!* துயராட்டியேன் மெலிய*
பாடும் நல் வேத ஒலி* பரவைத் திரை போல் முழங்க*
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்* தண் திருவல்லவாழ்*
நீடு உறைகின்ற பிரான்* கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*
நிச்சலும் தோழிமீர்காள்!* எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?*
பச்சிலை நீள் கமுகும்* பலவும் தெங்கும் வாழைகளும்*
மச்சு அணி மாடங்கள் மீது அணவும்* தண் திருவல்லவாழ்*
நச்சு அரவின் அணைமேல்* நம்பிரானது நல் நலமே*.
நல் நலத் தோழிமீர்காள்!* நல்ல அந்தணர் வேள்விப் புகை*
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்* தண் திருவல்லவாழ்*
கன்னல் அம் கட்டி தன்னை* கனியை இன் அமுதம் தன்னை*
என் நலம் கொள் சுடரை* என்றுகொல் கண்கள் காண்பதுவே?*
காண்பது எஞ்ஞான்றுகொலோ?* வினையேன் கனிவாய் மடவீர்*
பாண் குரல் வண்டினொடு* பசுந் தென்றலும் ஆகி எங்கும்*
சேண் சினை ஓங்கு மரச்* செழுங் கானல் திருவல்லவாழ்*
மாண் குறள் கோலப் பிரான்* மலர்த் தாமரைப் பாதங்களே?*
பாதங்கள்மேல் அணி* பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்*
ஓத நெடுந் தடத்துள்* உயர் தாமரை செங்கழுநீர்*
மாதர்கள் வாள் முகமும்* கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்*
நாதன் இஞ் ஞாலம் உண்ட* நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*
நாள்தொறும் வீடு இன்றியே* தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்*
ஆடு உறு தீங் கரும்பும்* விளை செந்நெலும் ஆகி எங்கும்*
மாடு உறு பூந் தடம் சேர்* வயல் சூழ் தண் திருவல்லவாழ்*
நீடு உறைகின்ற பிரான்* நிலம் தாவிய நீள் கழலே?*
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு* கைதொழக் கூடுங்கொலோ*
குழல் என்ன யாழும் என்ன* குளிர் சோலையுள் தேன் அருந்தி*
மழலை வரி வண்டுகள் இசை பாடும்* திருவல்லவாழ்*
சுழலின் மலி சக்கரப் பெருமானது* தொல் அருளே?*
தொல் அருள் நல் வினையால்* சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்*
தொல் அருள் மண்ணும் விண்ணும்* தொழ நின்ற திருநகரம்*
நல் அருள் ஆயிரவர்* நலன் ஏந்தும் திருவல்லவாழ்*
நல் அருள் நம் பெருமான்* நாராயணன் நாமங்களே?*
நாமங்கள் ஆயிரம் உடைய* நம் பெருமான் அடிமேல்*
சேமம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த*
நாமங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் திருவல்லவாழ்*
சேமம் கொள் தென் நகர்மேல்* செப்புவார் சிறந்தார் பிறந்தே*
நீராய் நிலனாய்* தீயாய் காலாய் நெடுவானாய்,*
சீரார் சுடர்கள் இரண்டாய்* சிவனாய் அயனானாய்,*
கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி* கொடியேன்பால்
வாராய்,* ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
மண்ணும் விண்ணும் மகிழ* குறள் ஆய் வலம் காட்டி,*
மண்ணும் விண்ணும் கொண்ட* மாய அம்மானே,*
நண்ணி உனை நான்* கண்டு உகந்து கூத்தாட,*
நண்ணி ஒருநாள்* ஞாலத்தூடே நடவாயே.
ஞாலத்தூடே நடந்தும் நின்றும்* கிடந்து இருந்தும்,*
சாலப் பலநாள்* உகம்தோறு உயிர்கள் காப்பானே,*
கோலத் திரு மா மகளோடு* உன்னைக் கூடாதே,*
சாலப் பல நாள்* அடியேன் இன்னும் தளர்வேனோ?
தளர்ந்தும் முறிந்தும்* சகட அசுரர் உடல் வேறாப்,*
பிளந்து வீய* திருக்கால் ஆண்ட பெருமானே,*
கிளர்ந்து பிரமன் சிவன்* இந்திரன் விண்ணவர் சூழ,*
விளங்க ஒருநாள்* காண வாராய் விண்மீதே.
விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்!* கடல் சேர்ப்பாய்,*
மண்மீது உழல்வாய்!* இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,*
எண்மீது இயன்ற புற அண்டத்தாய்!* எனது ஆவி,*
உண் மீது ஆடி* உருக் காட்டாதே ஒளிப்பாயோ?
பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்* பரவை நிலம் எல்லாம்-
தாயோர்,* ஓர் அடியால்* எல்லா உலகும் தடவந்த-
மாயோன்,* உன்னைக் காண்பான்* வருந்தி எனைநாளும்,*
தீயோடு உடன்சேர் மெழுகாய்* உலகில் திரிவேனோ?
உலகில் திரியும் கரும கதி ஆய்* உலகம் ஆய்,*
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்* புற அண்டத்து,*
அலகில் பொலிந்த* திசை பத்து ஆய அருவேயோ,*
அலகில் பொலிந்த* அறிவிலேனுக்கு அருளாயே.
அறிவிலேனுக்கு அருளாய்* அறிவார் உயிர் ஆனாய்,*
வெறி கொள் சோதி மூர்த்தி!* அடியேன் நெடுமாலே,*
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு* இன்னம் கெடுப்பாயோ,*
பிறிது ஒன்று அறியா அடியேன்* ஆவி திகைக்கவே?
ஆவி திகைக்க* ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,*
பாவியேனைப்* பல நீ காட்டிப் படுப்பாயோ,*
தாவி வையம் கொண்ட* தடம் தாமரை கட்கே,*
கூவிக் கொள்ளும் காலம்* இன்னம் குறுகாதோ?
குறுகா நீளா* இறுதிகூடா எனை ஊழி,*
சிறுகா பெருகா* அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்,*
மறு கால் இன்றி மாயோன்* உனக்கே ஆளாகும்,*
சிறு காலத்தை உறுமோ* அந்தோ தெரியிலே?
தெரிதல் நினைதல்* எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,*
உரிய தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன்,*
தெரியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரிய தொண்டர் ஆக்கும்* உலகம் உண்டாற்கே.
என்றைக்கும் என்னை* உய்யக்கொண்டு போகிய,*
அன்றைக்கு அன்று என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
இன் தமிழ் பாடிய ஈசனை* ஆதியாய்-
நின்ற என் சோதியை,* என் சொல்லி நிற்பனோ? (2)
என்சொல்லி நிற்பன்* என் இன் உயிர் இன்று ஒன்றாய்,*
என்சொல்லால் யான்சொன்ன* இன்கவி என்பித்து,*
தன்சொல்லால் தான்தன்னைக்* கீர்த்தித்த மாயன்,* என்
முன்சொல்லும்* மூவுருவாம் முதல்வனே.
ஆம் முதல்வன் இவன் என்று* தன் தேற்றி,* என்
நா முதல் வந்து புகுந்து* நல் இன் கவி,*
தூ முதல் பத்தர்க்குத்* தான் தன்னைச் சொன்ன,* என்
வாய் முதல் அப்பனை* என்று மறப்பனோ?
அப்பனை என்று மறப்பன்* என் ஆகியே,*
தப்புதல் இன்றி* தனைக் கவி தான் சொல்லி,*
ஒப்பிலாத் தீவினையேனை* உய்யக்கொண்டு*
செப்பமே செய்து* திரிகின்ற சீர்கண்டே?
சீர் கண்டுகொண்டு* திருந்து நல் இன்கவி,*
நேர்பட யான் சொல்லும்* நீர்மை இலாமையில்,*
ஏர்வு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னைப்,*
பார் பரவு இன்கவி* பாடும் பரமரே.
இன் கவி பாடும்* பரம் கவிகளால்,*
தன் கவி தான் தன்னைப்* பாடுவியாது இன்று*
நன்கு வந்து என்னுடன் ஆக்கி* என்னால் தன்னை,*
வன் கவி பாடும்* என் வைகுந்த நாதனே.
வைகுந்த நாதன்* என வல்வினை மாய்ந்து அறச்,*
செய் குந்தன் தன்னை* என் ஆக்கி என்னால் தன்னை,*
வைகுந்தன் ஆகப்* புகழ வண் தீம்கவி,*
செய் குந்தன் தன்னை* எந்நாள் சிந்தித்து ஆர்வனோ!
ஆர்வனோ ஆழிஅங்கை* எம் பிரான் புகழ்,*
பார் விண் நீர் முற்றும்* கலந்து பருகிலும்,*
ஏர்வு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னைச்,*
சீர்பெற இன்கவி* சொன்ன திறத்துக்கே?
திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம்* திருமாலின் சீர்,*
இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வனோ,*
மறப்பு இலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
உறப் பல இன்கவி* சொன்ன உதவிக்கே?
உதவிக் கைம்மாறு* என் உயிர் என்ன உற்று எண்ணில்,*
அதுவும் மற்று ஆங்கவன்* தன்னது என்னால் தன்னைப்,*
பதவிய இன்கவி* பாடிய அப்பனுக்கு,*
எதுவும் ஒன்றும் இல்லை* செய்வது இங்கும் அங்கே.
இங்கும் அங்கும்* திருமால் அன்றி இன்மை கண்டு,*
அங்ஙனே வண் குருகூர்ச்* சடகோபன்,*
இங்ஙனே சொன்ன* ஓர் ஆயிரத்து இப்பத்தும்,*
எங்ஙனே சொல்லினும்* இன்பம் பயக்குமே. (2)
கருமாணிக்க மலைமேல்* மணித்தடம் தாமரைக் காடுகள்போல்*
திருமார்வு வாய்கண்கை* உந்திகால்உடை ஆடைகள் செய்யபிரான்*
திருமால் எம்மான் செழுநீர்வயல்* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்* அன்னைமீர்! இதற்கு என்செய்கேனோ. (2)
அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?* அணிமேருவின் மீதுஉலவும்*
துன்னுசூழ் சுடர் ஞாயிறும்* அன்றியும் பல்சுடர்களும்போல்*
மின்னு நீள்முடிஆரம் பல்கலன்* தான்உடை எம்பெருமான்*
புன்னைஅம் பொழில்சூழ்* திருப்புலியூர் புகழும்இவளே.
புகழும் இவள்நின்று இராப்பகல்* பொருநீர்க்கடல் தீப்பட்டு* எங்கும்
திகழும்எரியொடு செல்வதுஒப்ப* செழும்கதிர்ஆழிமுதல்*
புகழும் பொருபடை ஏந்தி* போர்புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்*
திகழும் மணிநெடு மாடம்நீடு* திருப்புலியூர் வளமே.
ஊர்வளம்கிளர் சோலையும்* கரும்பும் பெரும்செந்நெலும் சூழ்ந்து*
ஏர்வளம்கிளர் தண்பணைக்* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
சீர்வளம்கிளர் மூவுலகுஉண்டுஉமிழ்* தேவபிரான்*
பேர்வளம்கிளர்ந்தன்றிப் பேச்சுஇலள்* இன்று இப்புனைஇழையே.
புனைஇழைகள் அணிவும் ஆடைஉடையும்* புதுக்கணிப்பும்*
நினையும் நீர்மையதுஅன்று இவட்குஇது* நின்று நினைக்கப்புக்கால்*
சுனையினுள் தடம்தாமரை மலரும்* தண் திருப்புலியூர்*
முனைவன் மூவுலகுஆளி* அப்பன் திருஅருள் மூழ்கினளே.
திருஅருள் மூழ்கி வைகலும்* செழுநீர்நிறக் கண்ணபிரான்*
திருஅருள்களும் சேர்ந்தமைக்கு* அடையாளம் திருந்தஉள*
திருஅருள் அருளால் அவன்* சென்று சேர்தண் திருப்புலியூர்*
திருஅருள் கமுகுஒண் பழத்தது* மெல்லியல் செவ்விதழே
மெல்இலைச் செல்வவண் கொடிப்புல்க* வீங்குஇளம்தாள்கமுகின்*
மல்இலை மடல்வாழை* ஈன்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து*
புல்இலைத் தெங்கினூடு* கால் உலவும்தண் திருப்புலியூர்*
மல்லல்அம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்* இம் மடவரலே
மடவரல் அன்னைமீர்கட்கு* என்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ*
வடமொழி மறைவாணர்* வேள்வியுள் நெய்அழல்வான் புகைபோய்த்*
திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்* தண் திருப்புலியூர்*
படஅரவுஅணையான் தன்நாமம் அல்லால்* பரவாள் இவளே.
பரவாள் இவள் நின்று இராப்பகல்* பனிநீர்நிறக் கண்ணபிரான்*
விரவார்இசை மறை வேதியர்ஒலி* வேலையின் நின்றுஒலிப்ப*
கரவார் தடம்தொறும் தாமரைக்கயம்* தீவிகை நின்றுஅலரும்*
புரவார் கழனிகள் சூழ்* திருப்புலியூர்ப் புகழ்அன்றிமற்றே
அன்றி மற்றோர் உபாயம்என்* இவள்அம்தண் துழாய்கமழ்தல்*
குன்றமாமணி மாடமாளிகைக்* கோலக் குழாங்கள் மல்கி*
தென்திசைத் திலதம்புரை* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
நின்ற மாயப்பிரான் திருவருளாம்* இவள் நேர்பட்டதே.
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்* நாயகன் தன்அடிமை*
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன் சொல்*
நேர்பட்ட தமிழ்மாலை* ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார்* அவர் நேர்பட்டார்* நெடுமாற்கு அடிமை செய்யவே. (2)
மல்லிகைகமழ் தென்றல் ஈரும்ஆலோ!* வண்குறிஞ்சி இசைதவரும்ஆலோ*
செல்கதிர் மாலையும் மயக்கும்ஆலோ!* செக்கர்நல் மேகங்கள் சிதைக்கும்ஆலோ*
அல்லிஅம் தாமரைக் கண்ணன் எம்மான்* ஆயர்கள்ஏறு அரிஏறு எம்மாயோன்*
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு* புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ! (2)
புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ! புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ*
பகலடுமாலைவண் சாந்தமாலோ!* பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*
அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து- அளந்து* எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்*
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்* இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?
இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்* இணைமுலை நமுக நுண்இடை நுடங்க*
துனிஇரும்கலவி செய்து ஆகம்தோய்ந்து* துறந்துஎம்மை இட்டுஅகல் கண்ணன்கள்வன்*
தனிஇளம்சிங்கம் எம்மாயன்வாரான்* தாமரைக் ண்ணும் செவ்வாயும் நீலப்*
பனிஇரும்குழல்களும் நான்கு தோளும்* பாவியேன் மனத்தே நின்றுஈரும்ஆலோ!
பாவியேன் மனத்தே நின்றுஈருமாலோ!* வாடை தண்வாடை வெவ்வாயாலோ*
மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!* மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*
தூவிஅம் புள்உடைத் தெய்வ வண்டுதுதைந்த* எம்பெண்மைஅம் பூஇதுதாலோ*
ஆவியின் பரம்அல்ல வகைகள்ஆலோ!* யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*
யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!* ஆ புகுமாலையும் ஆகின்றுஆலோ,*
யாமுடை ஆயன்தன் மனம் கல்ஆலோ!* அவனுடைத் தீம்குழல் ஈரும்ஆலோ*
யாமுடைத் துணைஎன்னும் தோழிமாரும்* எம்மில் முன்அவனுக்கு மாய்வர்ஆலோ*
யாமுடை ஆர்உயிர் காக்குமாறுஎன்? அவனுடை அருள் பெறும்போது அரிதே.
அவனுடைஅருள் பெறும்போது அரிதால்* அவ்அருள்அல்லன அருளும் அல்ல*
அவன்அருள் பெறுமளவு ஆவிநில்லாது* அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்*
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை* சேர்திருஆகம் எம்ஆவிஈரும்*
எவன் இனிப்புகும்இடம்? எவன் செய்கேனோ? ஆருக்குஎன் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னைமீர்காள்!* ஆர்உயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை*
கார்ஒக்கும்மேனி நம்கண்ணன் கள்வம்* கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கண் அஃதே*
சீர்உற்றஅகில் புகையாழ்நரம்பு* பஞ்சமம்தண் பசும்சாந்துஅணைந்து*
போர்உற்றவாடைதண் மல்லிகைப்பூப்* புதுமணம்முகந்துகொண்டு எறியும்ஆலோ!
புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ!* பொங்குஇளவாடை புன்செக்கர்ஆலோ*
அதுமணந்துஅகன்றநம் கண்ணன்கள்வம்* கண்ணனில் கொடிது இனிஅதனில்உம்பர்*
மதுமண மல்லிகை மந்தக்கோவை* வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து*
அதுமணந்து இன்அருள் ஆய்ச்சியர்க்கே* ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!
ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!* அதுமொழிந்துஇடை இடைதன் செய்கோலத்*
தூதுசெய் கண்கள் கொண்டுஒன்று பேசி* தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து* பேதைநெஞ்சுஅறவுஅறப் பாடும்பாட்டை*
யாதும்ஒன்று அறிகிலம் அம்மஅம்ம!* மாலையும்வந்தது மாயன்வாரான்.
மாலையும்வந்தது மாயன்வாரான்* மாமணிபுலம்ப வல்ஏறுஅணைந்த*
கோல நல்நாகுகள் உகளும்ஆலோ! கொடியன குழல்களும் குழறும்ஆலோ*
வால்ஒளி வளர்முல்லை கருமுகைகள்* மல்லிகை அலம்பி வண்டுஆலும்ஆலோ*
வேலையும் விசும்பில் விண்டுஅலறும்ஆலோ!* என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே?
அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா* அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்*
அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி* அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*
அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த* ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு*
அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்! அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே! (2)
சூழ்விசும் பணிமுகில்* தூரியம் முழக்கின*
ஆழ்கடல் அலைதிரைக்* கைஎடுத்து ஆடின*
ஏழ்பொழிலும்* வளம்ஏந்திய என்அப்பன்*
வாழ்புகழ் நாரணன்* தமரைக் கண்டுஉகந்தே. (2)
நாரணன் தமரைக் கண்டுஉகந்து* நல்நீர்முகில்*
பூரண பொன்குடம்* பூரித்தது உயர்விண்ணில்*
நீரணி கடல்கள்* நின்றுஆர்த்தன* நெடுவரைத்-
தோரணம் நிரைத்து* எங்கும் தொழுதனர்உலகே.
தொழுதனர் உலகர்கள்* தூபநல் மலர்மழை-
பொழிவனர்* பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே*
எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்* முனிவர்கள்*
வழிஇது வைகுந்தர்க்கு என்று* வந்து எதிரே.
எதிர்எதிர் இமையவர்* இருப்பிடம் வகுத்தனர்*
கதிரவர்அவரவர்* கைந்நிரை காட்டினர்*
அதிர்குரல் முரசங்கள்* அலைகடல் முழக்குஒத்த*
மதுவிரி துழாய்முடி* மாதவன் தமர்க்கே.
மாதவன் தமர்என்று* வாசலில் வானவர்*
போதுமின் எமதுஇடம்* புகுதுக என்றலும்*
கீதங்கள் பாடினர்* கின்னரர் கெருடர்கள்*
வேதநல் வாயவர்* வேள்விஉள் மடுத்தே.
வேள்விஉள் மடுத்தலும்* விரைகமழ் நறும்புகை*
காளங்கள் வலம்புரி* கலந்துஎங்கும் இசைத்தனர்*
ஆள்மின்கள் வானகம்* ஆழியான் தமர் என்று*
வாள்ஒண் கண்மடந்தையர்* வாழ்த்தினர் மகிழ்ந்தே.
மடந்தையர் வாழ்த்தலும்* மருதரும் வசுக்களும்*
தொடர்ந்து எங்கும்* தோத்திரம் சொல்லினர்* தொடுகடல்-
கிடந்த எம்கேசவன்* கிளர்ஒளி மணிமுடி*
குடந்தை எம்கோவலன்* குடிஅடி யார்க்கே
குடிஅடியார் இவர்* கோவிந்தன் தனக்குஎன்று*
முடிஉடை வானவர்* முறைமுறை எதிர்கொள்ள*
கொடிஅணி நெடுமதிள்* கோபுரம் குறுகினர்*
வடிவுஉடை மாதவன்* வைகுந்தம் புகவே.
வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதுஇடம் புகுதஎன்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே.
விதிவகை புகுந்தனர்என்று* நல்வேதியர்*
பதியினில் பாங்கினில்* பாதங்கள் கழுவினர்*
நிதியும் நல்சுண்ணமும்* நிறைகுட விளக்கமும்*
மதிமுக மடந்தையர்* ஏந்தினர் வந்தே.
வந்துஅவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம்இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்துஅலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-
சந்தங்கள்ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே. (2)