பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    உடன் அமர் காதல் மகளிர்*  திருமகள் மண்மகள் ஆயர்- 
    மட மகள் என்று இவர் மூவர் ஆளும்*  உலகமும் மூன்றே,*

    உடன் அவை ஒக்க விழுங்கி*  ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்,* 
    கடல் மலி மாயப் பெருமான்*  கண்ணன் என் ஒக்கலையானே.  


    ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று* தந்திட வாங்கிச், 
    செக்கம் செக அன்று அவள்பால்*  உயிர் செக உண்ட பெருமான்,*

    நக்க பிரானோடு அயனும்*  இந்திரனும் முதலாக,* 
    ஒக்கவும் தோற்றிய ஈசன்*  மாயன் என் நெஞ்சின் உளானே.


    மாயன் என் நெஞ்சின் உள்ளான்*  மற்றும் எவர்க்கும் அதுவே,* 
    காயமும் சீவனும் தானே*  காலும் எரியும் அவனே,*

    சேயன் அணியன் எவர்க்கும்*  சிந்தைக்கும் கோசரம் அல்லன்,* 
    தூயன் துயக்கன் மயக்கன்*  என்னுடைத் தோளிணையானே.  


    தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்*  சுடர் முடி மேலும்,* 
    தாள் இணை மேலும் புனைந்த*  தண் அம் துழாய் உடை அம்மான்*

    கேள் இணை ஒன்றும் இலாதான்*  கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,* 
    நாள் அணைந்து ஒன்றும் அகலான்*  என்னுடை நாவின் உளானே.


    எம்மாவீட்டுத்*  திறமும் செப்பம்,*  நின் 
    செம்மா பாடபற்புத்*  தலைசேர்த்து ஒல்லை,-

    கைம்மா துன்பம்*  கடிந்த பிரானே,* 
    அம்மா அடியேன்*  வேண்டுவது ஈதே.     


    ஈதே யான் உன்னைக்*  கொள்வது எஞ்ஞான்றும்,*  என் 
    மை தோய் சோதி*  மணிவண்ண எந்தாய்,*

    எய்தா நின் கழல்*  யான் எய்த,*  ஞானக் 
    கைதா* காலக் கழிவு செய்யேலே. 


    செய்யேல் தீவினை என்று*  அருள் செய்யும்,*  என் 
    கை ஆர் சக்கரக்*  கண்ண பிரானே,*

    ஐ ஆர் கண்டம் அடைக்கிலும்*  நின் கழல் 
    எய்யாது ஏத்த,*  அருள்செய் எனக்கே.


    எனக்கே ஆட்செய்*  எக்காலத்தும் என்று,*  என் 
    மனக்கே வந்து*  இடைவீடு இன்றி மன்னி,*

    தனக்கே ஆக*  எனைக் கொள்ளும் ஈதே,* 
    எனக்கே கண்ணனை*  யான் கொள் சிறப்பே. 


    சிறப்பில் வீடு*  சுவர்க்கம் நரகம்,* 
    இறப்பில் எய்துக*  எய்தற்க,*  யானும்

    பிறப்பு இல்*  பல் பிறவிப் பெருமானை,* 
    மறப்பு ஒன்று இன்றி*  என்றும் மகிழ்வனே.


    மகிழ் கொள் தெய்வம்*  உலோகம் அலோகம்,* 
    மகிழ் கொள் சோதி*  மலர்ந்த அம்மானே,*

    மகிழ் கொள் சிந்தை*  சொல் செய்கை கொண்டு,*  என்றும் 
    மகிழ்வுற்று*  உன்னை வணங்க வாராயே.      


    வாராய்*  உன் திருப் பாத மலர்க்கீழ்ப்,* 
    பேராதே யான் வந்து*  அடையும்படி

    தாராதாய்,*  உன்னை என்னுள்*  வைப்பில் என்றும் 
    ஆராதாய்,*  எனக்கு என்றும் எக்காலே.   


    எக்காலத்து எந்தையாய்*  என்னுள் மன்னில்,*  மற்று 
    எக் காலத்திலும்*  யாதொன்றும் வேண்டேன்,*

    மிக்கார் வேத*  விமலர் விழுங்கும்,*  என் 
    அக்காரக் கனியே*  உன்னை யானே.       


    யானே என்னை*  அறியகிலாதே,* 
    யானே என் தனதே*  என்று இருந்தேன்,*

    யானே நீ*  என் உடைமையும் நீயே,* 
    வானே ஏத்தும்*  எம் வானவர் ஏறே


    ஏறேல் ஏழும்*  வென்று ஏர் கொள் இலங்கையை,* 
    நீறே செய்த*  நெடுஞ் சுடர்ச் சோதி,*

    தேறேல் என்னை*  உன் பொன் அடி சேர்த்து*  ஒல்லை- 
    வேறே போக*  எஞ்ஞான்றும் விடலே.  


    விடல் இல் சக்கரத்து*  அண்ணலை மேவல்* 
    விடல் இல் வண் குருகூர்ச்*  சடகோபன்,*

    கெடல் இல் ஆயிரத்துள்*  இவை பத்தும்,* 
    கெடல் இல் வீடு செய்யும்*  கிளர்வார்க்கே.


    சொன்னால் விரோதம் இது*  ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,* 
    என் நாவில் இன்கவி*  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*

    தென்னா தெனா என்று*  வண்டு முரல் திருவேங்கடத்து,* 
    என் ஆனை என் அப்பன்*  எம் பெருமான் உளனாகவே. 


    உளனாகவே எண்ணி*  தன்னை ஒன்றாக தன் செல்வத்தை* 
    வளனா மதிக்கும்*  இம் மானிடத்தைக் கவி பாடி என்,*

    குளன் ஆர் கழனிசூழ்*  கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,* 
    உளனாய எந்தையை*  எந்தை பெம்மானை ஒழியவே? 


    ஒழிவு ஒன்று இல்லாத*  பல் ஊழிதோறு ஊழி நிலாவப்,*  போம் 
    வழியைத் தரும் நங்கள்*  வானவர் ஈசனை நிற்கப் போய்,*

    கழிய மிக நல்லவான்*  கவி கொண்டு புலவீர்காள்,* 
    இழியக் கருதி*  ஓர் மானிடம் பாடல் என் ஆவதே.


    என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும்*  புலவீர்காள்,* 
    மன்னா மனிசரைப் பாடிப்*  படைக்கும் பெரும் பொருள்?,*

    மின் ஆர் மணிமுடி*  விண்ணவர் தாதையைப் பாடினால்,* 
    தன்னாகவே கொண்டு*  சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.


    கொள்ளும் பயன் இல்லை*  குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,* 
    வள்ளல் புகழ்ந்து*  நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,* 

    கொள்ளக் குறைவு இலன்*  வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல்,*  என் 
    வள்ளல் மணிவண்ணன் தன்னைக்*  கவி சொல்ல வம்மினோ.


    வம்மின் புலவீர்!*  நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,* 
    இம் மன் உலகினில்*  செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்,*

    நும் இன் கவி கொண்டு*  நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்,* 
    செம் மின் சுடர் முடி*  என் திருமாலுக்குச் சேருமே.


    சேரும் கொடை புகழ்*  எல்லை இலானை,*  ஓர் ஆயிரம் 
    பேரும் உடைய பிரானை அல்லால்*  மற்று யான் கிலேன்,* 

    மாரி அனைய கை*  மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,* 
    பாரில் ஓர் பற்றையைப்*  பச்சைப் பசும் பொய்கள் பேசவே.


    வேயின் மலிபுரை தோளி*  பின்னைக்கு மணாளனை,* 
    ஆய பெரும்புகழ்*  எல்லை இலாதன பாடிப்போய்,* 

    காயம் கழித்து*  அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்,* 
    மாய மனிசரை*  என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? 


    வாய்கொண்டு மானிடம் பாடவந்த*  கவியேன் அல்லேன்.* 
    ஆய்கொண்ட சீர்வள்ளல்*  ஆழிப் பிரான் எனக்கே உளன்,*

    சாய் கொண்ட இம்மையும் சாதித்து*  வானவர் நாட்டையும்,* 
    நீ கண்டுகொள் என்று*  வீடும் தரும் நின்றுநின்றே!


    நின்றுநின்று பல நாள் உய்க்கும்*  இவ் உடல் நீங்கிப்போய்,* 
    சென்று சென்று ஆகிலும் கண்டு*  சன்மம் கழிப்பான் எண்ணி,* 

    ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்*  கவி ஆயினேற்கு,* 
    என்றும் என்றும் இனி*  மற்றொருவர் கவி ஏற்குமே? 


    ஏற்கும் பெரும்புகழ்*  வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,* 
    ஏற்கும் பெரும்புகழ்*  வண் குருகூர்ச் சடகோபன் சொல்,* 

    ஏற்கும் பெரும்புகழ்  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,* 
    ஏற்கும் பெரும்புகழ்*  சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.


    நண்ணாதார் முறுவலிப்ப*  நல் உற்றார் கரைந்து ஏங்க,* 
    எண் ஆராத் துயர் விளைக்கும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 

    கண்ணாளா! கடல் கடைந்தாய்!*  உன கழற்கே வரும் பரிசு,* 
    தண்ணாவாது அடியேனைப்*  பணி கண்டாய் சாமாறே. (2)        


    சாம் ஆறும் கெடும் ஆறும்*  தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து,* 
    ஏமாறிக் கிடந்து அலற்றும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 

    ஆம் ஆறு ஒன்று அறியேன் நான்*  அரவு அணையாய்! அம்மானே,* 
    கூமாறே விரைகண்டாய்*  அடியேனை குறிக்கொண்டே.


    கொண்டாட்டும் குலம் புனைவும்*  தமர் உற்றார் விழு நிதியும்,* 
    வண்டு ஆர் பூங் குழலாளும்,*  மனை ஒழிய உயிர் மாய்தல்,* 

    கண்டு ஆற்றேன் உலகு இயற்கை*  கடல்வண்ணா! அடியேனைப்* 
    பண்டேபோல் கருதாது*  உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே.


    கொள் என்று கிளர்ந்து எழுந்த*  பெரும் செல்வம் நெருப்பு ஆக,* 
    கொள் என்று தமம் மூடும்*  இவை என்ன உலகு இயற்கை?* 

    வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும்பரிசு,* 
    வள்ளல் செய்து அடியேனை*  உனது அருளால் வாங்காயே. 


    வாங்கு நீர் மலர் உலகில்*  நிற்பனவும் திரிவனவும்,* 
    ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப்*  பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்,* 

    ஈங்கு இதன்மேல் வெம் நரகம்*  இவை என்ன உலகு இயற்கை?* 
    வாங்கு எனை நீ மணிவண்ணா!*  அடியேனை மறுக்கேலே.    


    மறுக்கி வல் வலைப்படுத்தி*  குமைத்திட்டு கொன்று உண்பர்,* 
    அறப்பொருளை அறிந்து ஓரார்*  இவை என்ன உலகு இயற்கை?* 

    வெறித் துளவ முடியானே!*  வினையேனை உனக்கு அடிமை- 
    அறக்கொண்டாய்,*  இனி என் ஆர் அமுதே!*  கூயருளாயே.  


    ஆயே! இவ் உலகத்து*  நிற்பனவும் திரிவனவும்* 
    நீயே மற்று ஒரு பொருளும்*  இன்றி நீ நின்றமையால்,* 

    நோயே மூப்பு இறப்பு பிறப்பு*  பிணியே என்று இவை ஒழிய,* 
    கூயேகொள் அடியேனை*  கொடு உலகம் காட்டேலே.


    காட்டி நீ கரந்து உமிழும்*  நிலம் நீர் தீ விசும்பு கால்,* 
    ஈட்டி நீ வைத்து அமைத்த*  இமையோர் வாழ் தனி முட்டைக்,* 

    கோட்டையினில் கழித்து*  என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,* 
    கூட்டு அரிய திருவடிக்கள்*  எஞ்ஞான்று கூட்டுதியே?   


    கூட்டுதி நின் குரை கழல்கள்*  இமையோரும் தொழாவகைசெய்து,* 
    ஆட்டுதி நீ அரவு அணையாய்!*  அடியேனும் அஃது அறிவன்,* 

    வேட்கை எல்லாம் விடுத்து*  என்னை உன் திருவடியே சுமந்து உழலக்,* 
    கூட்டு அரிய திருவடிக்கள்*  கூட்டினை நான் கண்டேனே.   


    கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்*  ஐங்கருவி 
    கண்ட இன்பம்,*  தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,*

    ஒண் தொடியாள் திருமகளும்*  நீயுமே நிலாநிற்ப,* 
    கண்ட சதிர் கண்டொழிந்தேன்*  அடைந்தேன் உன் திருவடியே. 


    திருவடியை நாரணனை*  கேசவனை பரஞ்சுடரை,* 
    திருவடி சேர்வது கருதி*  செழுங் குருகூர்ச் சடகோபன்,* 

    திருவடிமேல் உரைத்த தமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    திருவடியே அடைவிக்கும்*  திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)      


    மான் ஏய் நோக்கு நல்லீர்!*  வைகலும் வினையேன் மெலிய* 
    வான் ஆர் வண் கமுகும்*  மது மல்லிகை கமழும்*

    தேன் ஆர் சோலைகள் சூழ்*  திருவல்லவாழ் உறையும்- 
    கோனாரை*  அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)   


    என்று கொல்? தோழிமீர்காள்*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பொன்திகழ் புன்னை மகிழ்*  புது மாதவி மீது அணவி* 

    தென்றல் மணம் கமழும்*  திருவல்லவாழ் நகருள்- 
    நின்ற பிரான்*  அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*    


    சூடு மலர்க்குழலீர்!*  துயராட்டியேன் மெலிய* 
    பாடும் நல் வேத ஒலி*  பரவைத் திரை போல் முழங்க* 

    மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்*  தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*      


    நிச்சலும் தோழிமீர்காள்!*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பச்சிலை நீள் கமுகும்*  பலவும் தெங்கும் வாழைகளும்* 

    மச்சு அணி மாடங்கள் மீது அணவும்*  தண் திருவல்லவாழ்* 
    நச்சு அரவின் அணைமேல்*  நம்பிரானது நல் நலமே*.             


    நல் நலத் தோழிமீர்காள்!*  நல்ல அந்தணர் வேள்விப் புகை* 
    மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்*  தண் திருவல்லவாழ்* 

    கன்னல் அம் கட்டி தன்னை*  கனியை இன் அமுதம் தன்னை* 
    என் நலம் கொள் சுடரை*  என்றுகொல் கண்கள் காண்பதுவே?*   


    காண்பது எஞ்ஞான்றுகொலோ?*  வினையேன் கனிவாய் மடவீர்* 
    பாண் குரல் வண்டினொடு*  பசுந் தென்றலும் ஆகி எங்கும்* 

    சேண் சினை ஓங்கு மரச்*  செழுங் கானல் திருவல்லவாழ்* 
    மாண் குறள் கோலப் பிரான்*  மலர்த் தாமரைப் பாதங்களே?*


    பாதங்கள்மேல் அணி*  பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்* 
    ஓத நெடுந் தடத்துள்*  உயர் தாமரை செங்கழுநீர்*

    மாதர்கள் வாள் முகமும்*  கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நாதன் இஞ் ஞாலம் உண்ட*  நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*


    நாள்தொறும் வீடு இன்றியே*  தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்* 
    ஆடு உறு தீங் கரும்பும்*  விளை செந்நெலும் ஆகி எங்கும்*

    மாடு உறு பூந் தடம் சேர்*  வயல் சூழ் தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  நிலம் தாவிய நீள் கழலே?*    


    கழல் வளை பூரிப்ப யாம் கண்டு*  கைதொழக் கூடுங்கொலோ* 
    குழல் என்ன யாழும் என்ன*  குளிர் சோலையுள் தேன் அருந்தி*

    மழலை வரி வண்டுகள் இசை பாடும்*  திருவல்லவாழ்* 
    சுழலின் மலி சக்கரப் பெருமானது*  தொல் அருளே?*  


    தொல் அருள் நல் வினையால்*  சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்* 
    தொல் அருள் மண்ணும் விண்ணும்*  தொழ நின்ற திருநகரம்* 

    நல் அருள் ஆயிரவர்*  நலன் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நல் அருள் நம் பெருமான்*  நாராயணன் நாமங்களே?*   


    நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்* 
    சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த* 

    நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்* 
    சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*    


    நீராய் நிலனாய்*  தீயாய் காலாய் நெடுவானாய்,* 
    சீரார் சுடர்கள் இரண்டாய்*  சிவனாய் அயனானாய்,* 

    கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி*  கொடியேன்பால் 
    வாராய்,*  ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 


    மண்ணும் விண்ணும் மகிழ*  குறள் ஆய் வலம் காட்டி,* 
    மண்ணும் விண்ணும் கொண்ட*  மாய அம்மானே,* 

    நண்ணி உனை நான்*  கண்டு உகந்து கூத்தாட,* 
    நண்ணி ஒருநாள்*  ஞாலத்தூடே நடவாயே.    


    ஞாலத்தூடே நடந்தும் நின்றும்*  கிடந்து இருந்தும்,* 
    சாலப் பலநாள்*  உகம்தோறு உயிர்கள் காப்பானே,* 

    கோலத் திரு மா மகளோடு*  உன்னைக் கூடாதே,* 
    சாலப் பல நாள்*  அடியேன் இன்னும் தளர்வேனோ?   


    தளர்ந்தும் முறிந்தும்*  சகட அசுரர் உடல் வேறாப்,* 
    பிளந்து வீய*  திருக்கால் ஆண்ட பெருமானே,* 

    கிளர்ந்து பிரமன் சிவன்*  இந்திரன் விண்ணவர் சூழ,* 
    விளங்க ஒருநாள்*  காண வாராய் விண்மீதே.      


    விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்!*  கடல் சேர்ப்பாய்,* 
    மண்மீது உழல்வாய்!*  இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,* 

    எண்மீது இயன்ற புற அண்டத்தாய்!*  எனது ஆவி,* 
    உண் மீது ஆடி*  உருக் காட்டாதே ஒளிப்பாயோ?    


    பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப்*  பரவை நிலம் எல்லாம்- 
    தாயோர்,*  ஓர் அடியால்*  எல்லா உலகும் தடவந்த- 

    மாயோன்,*  உன்னைக் காண்பான்*  வருந்தி எனைநாளும்,* 
    தீயோடு உடன்சேர் மெழுகாய்*  உலகில் திரிவேனோ?    


    உலகில் திரியும் கரும கதி ஆய்*  உலகம் ஆய்,* 
    உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்*  புற அண்டத்து,* 

    அலகில் பொலிந்த*  திசை பத்து ஆய அருவேயோ,* 
    அலகில் பொலிந்த*  அறிவிலேனுக்கு அருளாயே.


    அறிவிலேனுக்கு அருளாய்*  அறிவார் உயிர் ஆனாய்,* 
    வெறி கொள் சோதி மூர்த்தி!*  அடியேன் நெடுமாலே,* 

    கிறிசெய்து என்னைப் புறத்திட்டு*  இன்னம் கெடுப்பாயோ,* 
    பிறிது ஒன்று அறியா அடியேன்*  ஆவி திகைக்கவே?


    ஆவி திகைக்க*  ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,* 
    பாவியேனைப்*  பல நீ காட்டிப் படுப்பாயோ,*

    தாவி வையம் கொண்ட*  தடம் தாமரை கட்கே,* 
    கூவிக் கொள்ளும் காலம்*  இன்னம் குறுகாதோ?


    குறுகா நீளா*  இறுதிகூடா எனை ஊழி,* 
    சிறுகா பெருகா*  அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்,* 

    மறு கால் இன்றி மாயோன்*  உனக்கே ஆளாகும்,* 
    சிறு காலத்தை உறுமோ*  அந்தோ தெரியிலே?


    தெரிதல் நினைதல்*  எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,* 
    உரிய தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன்,* 

    தெரியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
    உரிய தொண்டர் ஆக்கும்*  உலகம் உண்டாற்கே.       


    என்றைக்கும் என்னை*  உய்யக்கொண்டு போகிய,* 
    அன்றைக்கு அன்று என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 

    இன் தமிழ் பாடிய ஈசனை*  ஆதியாய்- 
    நின்ற என் சோதியை,*  என் சொல்லி நிற்பனோ? (2)         


    என்சொல்லி நிற்பன்*  என் இன் உயிர் இன்று ஒன்றாய்,* 
    என்சொல்லால் யான்சொன்ன*  இன்கவி என்பித்து,* 

    தன்சொல்லால் தான்தன்னைக்*  கீர்த்தித்த மாயன்,*  என் 
    முன்சொல்லும்*  மூவுருவாம் முதல்வனே.


    ஆம் முதல்வன் இவன் என்று*  தன் தேற்றி,* என் 
    நா முதல் வந்து புகுந்து*  நல் இன் கவி,* 

    தூ முதல் பத்தர்க்குத்*  தான் தன்னைச் சொன்ன,*  என் 
    வாய் முதல் அப்பனை*  என்று மறப்பனோ? 


    அப்பனை என்று மறப்பன்*  என் ஆகியே,* 
    தப்புதல் இன்றி*  தனைக் கவி தான் சொல்லி,* 

    ஒப்பிலாத் தீவினையேனை*  உய்யக்கொண்டு* 
    செப்பமே செய்து*  திரிகின்ற சீர்கண்டே?  


    சீர் கண்டுகொண்டு*  திருந்து நல் இன்கவி,* 
    நேர்பட யான் சொல்லும்*  நீர்மை இலாமையில்,* 

    ஏர்வு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னைப்,* 
    பார் பரவு இன்கவி* பாடும் பரமரே.  


    இன் கவி பாடும்*  பரம் கவிகளால்,* 
    தன் கவி தான் தன்னைப்*  பாடுவியாது இன்று* 

    நன்கு வந்து என்னுடன் ஆக்கி*  என்னால் தன்னை,* 
    வன் கவி பாடும்*  என் வைகுந்த நாதனே.


    வைகுந்த நாதன்*  என வல்வினை மாய்ந்து அறச்,* 
    செய் குந்தன் தன்னை*  என் ஆக்கி என்னால் தன்னை,* 

    வைகுந்தன் ஆகப்*  புகழ வண் தீம்கவி,* 
    செய் குந்தன் தன்னை*  எந்நாள் சிந்தித்து ஆர்வனோ!


    ஆர்வனோ ஆழிஅங்கை*  எம் பிரான் புகழ்,* 
    பார் விண் நீர் முற்றும்*  கலந்து பருகிலும்,* 

    ஏர்வு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னைச்,* 
    சீர்பெற இன்கவி*  சொன்ன திறத்துக்கே?


    திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம்*  திருமாலின் சீர்,* 
    இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வனோ,* 

    மறப்பு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 
    உறப் பல இன்கவி*  சொன்ன உதவிக்கே?


    உதவிக் கைம்மாறு*  என் உயிர் என்ன உற்று எண்ணில்,* 
    அதுவும் மற்று ஆங்கவன்*  தன்னது என்னால் தன்னைப்,* 

    பதவிய இன்கவி*  பாடிய அப்பனுக்கு,* 
    எதுவும் ஒன்றும் இல்லை*  செய்வது இங்கும் அங்கே.


    இங்கும் அங்கும்*  திருமால் அன்றி இன்மை கண்டு,* 
    அங்ஙனே வண் குருகூர்ச்*  சடகோபன்,* 

    இங்ஙனே சொன்ன*  ஓர் ஆயிரத்து இப்பத்தும்,* 
    எங்ஙனே சொல்லினும்*  இன்பம் பயக்குமே. (2)


    கருமாணிக்க மலைமேல்*  மணித்தடம் தாமரைக் காடுகள்போல்* 
    திருமார்வு வாய்கண்கை*  உந்திகால்உடை  ஆடைகள் செய்யபிரான்*

    திருமால் எம்மான் செழுநீர்வயல்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்*  அன்னைமீர்!  இதற்கு என்செய்கேனோ.   (2)


    அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?*  அணிமேருவின் மீதுஉலவும்* 
    துன்னுசூழ் சுடர் ஞாயிறும்*  அன்றியும்  பல்சுடர்களும்போல்*

    மின்னு நீள்முடிஆரம் பல்கலன்*  தான்உடை எம்பெருமான்* 
    புன்னைஅம் பொழில்சூழ்*  திருப்புலியூர்  புகழும்இவளே.


    புகழும் இவள்நின்று இராப்பகல்*  பொருநீர்க்கடல் தீப்பட்டு*  எங்கும் 
    திகழும்எரியொடு செல்வதுஒப்ப*  செழும்கதிர்ஆழிமுதல்*

    புகழும் பொருபடை ஏந்தி*  போர்புக்கு  அசுரரைப் பொன்றுவித்தான்* 
    திகழும் மணிநெடு மாடம்நீடு*   திருப்புலியூர் வளமே.      


    ஊர்வளம்கிளர் சோலையும்*  கரும்பும்   பெரும்செந்நெலும் சூழ்ந்து* 
    ஏர்வளம்கிளர் தண்பணைக்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்*

    சீர்வளம்கிளர் மூவுலகுஉண்டுஉமிழ்*  தேவபிரான்* 
    பேர்வளம்கிளர்ந்தன்றிப் பேச்சுஇலள்*  இன்று இப்புனைஇழையே.   


    புனைஇழைகள் அணிவும் ஆடைஉடையும்*   புதுக்கணிப்பும்* 
    நினையும் நீர்மையதுஅன்று இவட்குஇது*  நின்று  நினைக்கப்புக்கால்*

    சுனையினுள் தடம்தாமரை மலரும்*  தண் திருப்புலியூர்* 
    முனைவன் மூவுலகுஆளி*  அப்பன்  திருஅருள் மூழ்கினளே.  


    திருஅருள் மூழ்கி வைகலும்*  செழுநீர்நிறக் கண்ணபிரான்* 
    திருஅருள்களும் சேர்ந்தமைக்கு*  அடையாளம் திருந்தஉள*

    திருஅருள் அருளால் அவன்*  சென்று   சேர்தண் திருப்புலியூர்* 
    திருஅருள் கமுகுஒண் பழத்தது*  மெல்லியல் செவ்விதழே


    மெல்இலைச் செல்வவண் கொடிப்புல்க*   வீங்குஇளம்தாள்கமுகின்* 
    மல்இலை மடல்வாழை*  ஈன்கனி சூழ்ந்து  மணம்கமழ்ந்து*

    புல்இலைத் தெங்கினூடு*  கால் உலவும்தண் திருப்புலியூர்* 
    மல்லல்அம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்*   இம் மடவரலே   


    மடவரல் அன்னைமீர்கட்கு*  என்சொல்லிச் சொல்லுகேன்?  மல்லைச்செல்வ* 
    வடமொழி மறைவாணர்*  வேள்வியுள் நெய்அழல்வான் புகைபோய்த்*

    திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்*  தண் திருப்புலியூர்* 
    படஅரவுஅணையான் தன்நாமம் அல்லால்*  பரவாள் இவளே.


    பரவாள் இவள் நின்று இராப்பகல்*  பனிநீர்நிறக் கண்ணபிரான்* 
    விரவார்இசை மறை வேதியர்ஒலி*  வேலையின்  நின்றுஒலிப்ப*

    கரவார் தடம்தொறும் தாமரைக்கயம்*  தீவிகை நின்றுஅலரும்* 
    புரவார் கழனிகள் சூழ்*  திருப்புலியூர்ப்  புகழ்அன்றிமற்றே 


    அன்றி மற்றோர் உபாயம்என்*  இவள்அம்தண் துழாய்கமழ்தல்* 
    குன்றமாமணி மாடமாளிகைக்*  கோலக்  குழாங்கள் மல்கி*

    தென்திசைத் திலதம்புரை*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    நின்ற மாயப்பிரான் திருவருளாம்*  இவள் நேர்பட்டதே.  


    நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்*  நாயகன் தன்அடிமை* 
    நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன் சொல்*

    நேர்பட்ட தமிழ்மாலை*  ஆயிரத்துள் இவை பத்தும் 
    நேர்பட்டார்*  அவர் நேர்பட்டார்*  நெடுமாற்கு அடிமை செய்யவே.   (2)


    மல்லிகைகமழ் தென்றல் ஈரும்ஆலோ!*  வண்குறிஞ்சி இசைதவரும்ஆலோ* 
    செல்கதிர் மாலையும் மயக்கும்ஆலோ!*   செக்கர்நல் மேகங்கள் சிதைக்கும்ஆலோ*

    அல்லிஅம் தாமரைக் கண்ணன் எம்மான்*  ஆயர்கள்ஏறு அரிஏறு எம்மாயோன்* 
    புல்லிய முலைகளும் தோளும் கொண்டு*  புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!   (2)


    புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!  புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ* 
    பகலடுமாலைவண் சாந்தமாலோ!*  பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*

    அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து-  அளந்து*  எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்* 
    இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்*  இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?


    இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்*  இணைமுலை நமுக நுண்இடை நுடங்க* 
    துனிஇரும்கலவி செய்து ஆகம்தோய்ந்து*   துறந்துஎம்மை இட்டுஅகல் கண்ணன்கள்வன்*  

    தனிஇளம்சிங்கம் எம்மாயன்வாரான்*   தாமரைக் ண்ணும் செவ்வாயும் நீலப்* 
    பனிஇரும்குழல்களும் நான்கு தோளும்*  பாவியேன் மனத்தே நின்றுஈரும்ஆலோ!  


    பாவியேன் மனத்தே நின்றுஈருமாலோ!*  வாடை தண்வாடை வெவ்வாயாலோ* 
    மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!*  மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*

    தூவிஅம் புள்உடைத் தெய்வ வண்டுதுதைந்த*  எம்பெண்மைஅம் பூஇதுதாலோ* 
    ஆவியின் பரம்அல்ல வகைகள்ஆலோ!*  யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*


    யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*  ஆ புகுமாலையும் ஆகின்றுஆலோ,* 
    யாமுடை ஆயன்தன் மனம் கல்ஆலோ!*  அவனுடைத் தீம்குழல் ஈரும்ஆலோ*

    யாமுடைத் துணைஎன்னும் தோழிமாரும்*   எம்மில் முன்அவனுக்கு மாய்வர்ஆலோ* 
    யாமுடை ஆர்உயிர் காக்குமாறுஎன்?  அவனுடை அருள் பெறும்போது அரிதே.


    அவனுடைஅருள் பெறும்போது அரிதால்*  அவ்அருள்அல்லன அருளும் அல்ல* 
    அவன்அருள் பெறுமளவு ஆவிநில்லாது*  அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்*

    சிவனொடு பிரமன் வண் திருமடந்தை*  சேர்திருஆகம் எம்ஆவிஈரும்* 
    எவன் இனிப்புகும்இடம்? எவன் செய்கேனோ?  ஆருக்குஎன் சொல்லுகேன் அன்னைமீர்காள்!   


    ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னைமீர்காள்!*  ஆர்உயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை* 
    கார்ஒக்கும்மேனி நம்கண்ணன் கள்வம்*   கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கண் அஃதே*

    சீர்உற்றஅகில் புகையாழ்நரம்பு*  பஞ்சமம்தண் பசும்சாந்துஅணைந்து* 
    போர்உற்றவாடைதண் மல்லிகைப்பூப்*   புதுமணம்முகந்துகொண்டு எறியும்ஆலோ!


    புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ!*  பொங்குஇளவாடை புன்செக்கர்ஆலோ* 
    அதுமணந்துஅகன்றநம் கண்ணன்கள்வம்*   கண்ணனில் கொடிது இனிஅதனில்உம்பர்*  

    மதுமண மல்லிகை மந்தக்கோவை*  வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து* 
    அதுமணந்து இன்அருள் ஆய்ச்சியர்க்கே*  ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!     


    ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!*  அதுமொழிந்துஇடை இடைதன் செய்கோலத்* 
    தூதுசெய் கண்கள் கொண்டுஒன்று பேசி*  தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*

    பேதுறு முகம்செய்து நொந்துநொந்து*  பேதைநெஞ்சுஅறவுஅறப் பாடும்பாட்டை* 
    யாதும்ஒன்று அறிகிலம் அம்மஅம்ம!*  மாலையும்வந்தது மாயன்வாரான். 


    மாலையும்வந்தது மாயன்வாரான்*  மாமணிபுலம்ப வல்ஏறுஅணைந்த*
    கோல நல்நாகுகள் உகளும்ஆலோ!  கொடியன குழல்களும் குழறும்ஆலோ*

    வால்ஒளி வளர்முல்லை கருமுகைகள்*   மல்லிகை அலம்பி வண்டுஆலும்ஆலோ*
    வேலையும் விசும்பில் விண்டுஅலறும்ஆலோ!*  என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே?  


    அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா*  அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்* 
    அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி*  அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*

    அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த*   ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு* 
    அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்!   அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே!    (2)


    சூழ்விசும் பணிமுகில்*  தூரியம் முழக்கின*  
    ஆழ்கடல் அலைதிரைக்*  கைஎடுத்து ஆடின*

    ஏழ்பொழிலும்*  வளம்ஏந்திய என்அப்பன்* 
    வாழ்புகழ் நாரணன்*  தமரைக் கண்டுஉகந்தே.  (2)


    நாரணன் தமரைக் கண்டுஉகந்து*  நல்நீர்முகில்* 
    பூரண பொன்குடம்*  பூரித்தது உயர்விண்ணில்*

    நீரணி கடல்கள்*  நின்றுஆர்த்தன*  நெடுவரைத்- 
    தோரணம் நிரைத்து*  எங்கும் தொழுதனர்உலகே.


    தொழுதனர் உலகர்கள்*  தூபநல் மலர்மழை- 
    பொழிவனர்*  பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே*

    எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்*  முனிவர்கள்* 
    வழிஇது வைகுந்தர்க்கு என்று*  வந்து எதிரே. 


    எதிர்எதிர் இமையவர்*  இருப்பிடம் வகுத்தனர்* 
    கதிரவர்அவரவர்*  கைந்நிரை காட்டினர்*

    அதிர்குரல் முரசங்கள்*  அலைகடல் முழக்குஒத்த* 
    மதுவிரி துழாய்முடி*  மாதவன் தமர்க்கே.


    மாதவன் தமர்என்று*  வாசலில் வானவர்* 
    போதுமின் எமதுஇடம்*  புகுதுக என்றலும்*

    கீதங்கள் பாடினர்*  கின்னரர் கெருடர்கள்* 
    வேதநல் வாயவர்*  வேள்விஉள் மடுத்தே.  


    வேள்விஉள் மடுத்தலும்*  விரைகமழ் நறும்புகை* 
    காளங்கள் வலம்புரி*  கலந்துஎங்கும் இசைத்தனர்*

    ஆள்மின்கள் வானகம்*  ஆழியான் தமர் என்று* 
    வாள்ஒண் கண்மடந்தையர்*  வாழ்த்தினர் மகிழ்ந்தே.


    மடந்தையர் வாழ்த்தலும்*  மருதரும் வசுக்களும்* 
    தொடர்ந்து எங்கும்*  தோத்திரம் சொல்லினர்*  தொடுகடல்-

    கிடந்த எம்கேசவன்*  கிளர்ஒளி மணிமுடி* 
    குடந்தை எம்கோவலன்*  குடிஅடி யார்க்கே


    குடிஅடியார் இவர்*  கோவிந்தன் தனக்குஎன்று* 
    முடிஉடை வானவர்*  முறைமுறை எதிர்கொள்ள*

    கொடிஅணி நெடுமதிள்*  கோபுரம் குறுகினர்* 
    வடிவுஉடை மாதவன்*  வைகுந்தம் புகவே.     


    வைகுந்தம் புகுதலும்*  வாசலில் வானவர்*  
    வைகுந்தன் தமர்எமர்*  எமதுஇடம் புகுதஎன்று*

    வைகுந்தத்து அமரரும்*  முனிவரும் வியந்தனர்* 
    வைகுந்தம் புகுவது*  மண்ணவர் விதியே.


    விதிவகை புகுந்தனர்என்று*  நல்வேதியர்* 
    பதியினில் பாங்கினில்*  பாதங்கள் கழுவினர்*

    நிதியும் நல்சுண்ணமும்*  நிறைகுட விளக்கமும்* 
    மதிமுக மடந்தையர்*  ஏந்தினர் வந்தே.


    வந்துஅவர் எதிர்கொள்ள*  மாமணி மண்டபத்து* 
    அந்தம்இல் பேரின்பத்து*  அடியரோடு இருந்தமை*

    கொந்துஅலர் பொழில்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்- 
    சந்தங்கள்ஆயிரத்து*  இவைவல்லார் முனிவரே.   (2)