பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    பிறவித்துயர் அற*  ஞானத்துள் நின்று.* 
    துறவிச் சுடர் விளக்கம்*  தலைப்பெய்வார்,*

    அறவனை*  ஆழிப்படை அந்தணனை,* 
    மறவியை இன்றி*  மனத்து வைப்பாரே.


    வைப்பாம் மருந்து ஆம்*  அடியரை வல்வினைத்* 
    துப்பாம் புலன் ஐந்தும்*  துஞ்சக்கொடான் அவன்,*

    எப்பால் எவர்க்கும்*  நலத்தால் உயர்ந்து உயர்ந்து,* 
    அப்பாலவன் எங்கள்*  ஆயர் கொழுந்தே.


    ஆயர் கொழுந்தாய்*  அவரால் புடையுண்ணும்,* 
    மாயப் பிரானை*  என் மாணிக்கச் சோதியை,*

    தூய அமுதைப்*  பருகிப் பருகி,*  என்- 
    மாயப் பிறவி*  மயர்வு அறுத்தேனே.


    மயர்வு அற என் மனத்தே*  மன்னினான் தன்னை,* 
    உயர்வினையே தரும்*  ஒண் சுடர்க் கற்றையை,*

    அயர்வு இல் அமரர்கள்,*  ஆதிக் கொழுந்தை,*  என் 
    இசைவினை*  என் சொல்லி யான் விடுவேனோ?  


    விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,* 
    நடுவே வந்து*  உய்யக் கொள்கின்ற நாதனை,*

    தொடுவே செய்து*  இள ஆய்ச்சியர் கண்ணினுள்,* 
    விடவே செய்து*  விழிக்கும் பிரானையே.


    பிரான்*  பெரு நிலம் கீண்டவன்,*  பின்னும் 
    விராய்*  மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*

    மராமரம் எய்த மாயவன்,*  என்னுள் 
    இரான் எனில்*  பின்னை யான் ஒட்டுவேனோ?   


    யான் ஒட்டி என்னுள்*  இருத்துவன் என்றிலன்,* 
    தான் ஒட்டி வந்து*  என் தனி நெஞ்சை வஞ்சித்து,*

    ஊன் ஒட்டி நின்று*  என் உயிரில் கலந்து,*  இயல் 
    வான் ஒட்டுமோ?*  இனி என்னை நெகிழ்க்கவே.


    என்னை நெகிழ்க்கிலும்*  என்னுடை நன் நெஞ்சம்- 
    தன்னை,*  அகல்விக்கத் தானும்*  கில்லான் இனி,*

    பின்னை நெடும் பணைத் தோள்*  மகிழ் பீடு உடை,* 
    முன்னை அமரர்*  முழுமுதல் தானே. 


    அமரர் முழுமுதல்*  ஆகிய ஆதியை,* 
    அமரர்க்கு அமுது ஈந்த*  ஆயர் கொழுந்தை,*

    அமர அழும்பத்*  துழாவி என் ஆவி,* 
    அமரத் தழுவிற்று*  இனி அகலும்மோ.


    அகலில் அகலும்*  அணுகில் அணுகும்,* 
    புகலும் அரியன்*  பொரு அல்லன் எம்மான்,*

    நிகர் இல் அவன் புகழ்*  பாடி இளைப்பு இலம்,* 
    பகலும் இரவும்*  படிந்து குடைந்தே.


    குடைந்து வண்டு உண்ணும்*  துழாய் முடியானை,* 
    அடைந்த தென் குருகூர்ச்*  சடகோபன்,*

    மிடைந்த சொல் தொடை*  ஆயிரத்து இப்பத்து,* 
    உடைந்து நோய்களை*  ஓடுவிக்குமே.


    கேசவன் தமர்*  கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
    மா சதிர் இது பெற்று*  நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*

    ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்*  விண்ணோர் 
    நாயகன்,*  எம் பிரான் எம்மான்*  நாராயணனாலே.


    நாரணன் முழு ஏழ் உலகுக்கும்*  நாதன் வேத மயன்,* 
    காரணம் கிரிசை கருமம் இவை*  முதல்வன் எந்தை,*

    சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்*  தொழுது ஏத்த நின்று,* 
    வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்*  என் மாதவனே.   


    மாதவன் என்றதே கொண்டு*  என்னை இனி இப்பால் பட்டது,* 
    யாது அவங்களும் சேர்கொடேன் என்று*  என்னுள் புகுந்து இருந்து,* 

    தீது அவம் கெடுக்கும் அமுதம்*  செந்தாமரைக் கண் குன்றம்,* 
    கோது அவம் இல் என் கன்னல் கட்டி*  எம்மான் என் கோவிந்தனே.


    கோவிந்தன் குடக் கூத்தன்*  கோவலன் என்று என்றே குனித்துத்* 
    தேவும் தன்னையும்*  பாடி ஆடத் திருத்தி*  என்னைக் கொண்டு என்

    பாவம் தன்னையும்*  பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
    மேவும் தன்மையம் ஆக்கினான்*  வல்லன் எம்பிரான் விட்டுவே.


    விட்டு இலங்கு செஞ்சோதித்*  தாமரை பாதம் கைகள் கண்கள,* 
    விட்டு இலங்கு கருஞ்சுடர்*  மலையே திரு உடம்பு,*

    விட்டு இலங்கு மதியம் சீர்*  சங்கு சக்கரம் பரிதி,* 
    விட்டு இலங்கு முடி அம்மான்*  மதுசூதனன் தனக்கே.


    மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று*  எத்தாலும் கருமம் இன்றி,* 
    துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட*  நின்று ஊழி ஊழிதொறும்,*

    எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்*  எனக்கே அருள்கள் செய்ய,* 
    விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்*  திரிவிக்கிரமனையே.  


    திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண்*  எம்மான் என் செங்கனி வாய்* 
    உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு*  நிறத்தனன் என்று என்று,*  உள்ளி

    பரவிப் பணிந்து*  பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,* 
    மருவித் தொழும் மனமே தந்தாய்*  வல்லைகாண் என் வாமனனே


    வாமனன் என் மரகத வண்ணன்*  தாமரைக் கண்ணினன்- 
    காமனைப் பயந்தாய்,*  என்று என்று உன் கழல்*  பாடியே பணிந்து,*

    தூ மனத்தனனாய்ப்*  பிறவித் துழதி நீங்க,*  என்னைத் 
    தீ மனம் கெடுத்தாய்*  உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.    


    சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்*  என்று என்று இராப்பகல் வாய் 
    வெரீஇ,*  அலமந்து கண்கள் நீர் மல்கி*  வெவ்வுயிர்த்து உயிர்த்து,*

    மரீஇய தீவினை மாள இன்பம் வளர*  வைகல் வைகல் 
    இரீஇ*  உன்னை என்னுள் வைத்தனை*  என் இருடீகேசனே. 


    இருடீகேசன் எம் பிரான்*  இலங்கை அரக்கர் குலம்,* 
    முருடு தீர்த்த பிரான் எம்மான்*  அமரர் பெம்மான் என்று என்று,*

    தெருடியாகில் நெஞ்சே வணங்கு*  திண்ணம் அறி அறிந்து,* 
    மருடியேலும் விடேல் கண்டாய்*  நம்பி பற்பநாபனையே.   


    பற்பநாபன் உயர்வு அற உயரும்*  பெரும் திறலோன்,* 
    எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு*  எனக்கே தன்னைத் தந்த

    கற்பகம்,*  என் அமுதம் கார் முகில் போலும்*  வேங்கட நல் 
    வெற்பன்,*  விசும்போர் பிரான்*  எந்தை தாமோதரனே.     


    தாமோதரனை தனி முதல்வனை*  ஞாலம் உண்டவனை,* 
    ஆமோ தரம் அறிய*  ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*

    தாமோதரன் உரு ஆகிய*  சிவற்கும் திசைமுகற்கும்,* 
    ஆமோ தரம் அறிய*  எம்மானை என் ஆழி வண்ணனையே.       


    வண்ண மா மணிச் சோதியை*  அமரர் தலைமகனை,* 
    கண்ணனை நெடுமாலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*

    பண்ணிய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,* 
    பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு*  அண்ணல் தாள் அணைவிக்குமே. 


    பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை*  பங்கயக் கண்ணனை,* 
    பயில இனிய*  நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,* 

    பயிலும் திரு உடையார்*  எவரேலும் அவர் கண்டீர்,* 
    பயிலும் பிறப்பிடை தோறு*  எம்மை ஆளும் பரமரே. (2)


    ஆளும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான் தன்னை,* 
    தோளும் ஓர் நான்கு உடைத்*  தூமணி வண்ணன் எம்மான்தன்னை*

    தாளும் தடக் கையும் கூப்பிப்*  பணியும் அவர் கண்டீர்,* 
    நாளும் பிறப்பிடைதோறு*  எம்மை ஆளுடை நாதரே.


    நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்*  நறும் துழாய்ப் 
    போதனை*  பொன் நெடும் சக்கரத்து*  எந்தை பிரான் தன்னை*

    பாதம் பணிய வல்லாரைப்*  பணியும் அவர் கண்டீர்,* 
    ஓதும் பிறப்பிடைதோறு*  எம்மை ஆளுடையார்களே.


    உடை ஆர்ந்த ஆடையன்*  கண்டிகையன் உடை நாணினன்* 
    புடை ஆர் பொன் நூலினன்*  பொன் முடியன் மற்றும் பல்கலன்,* 

    நடையா உடைத் திருநாரணன்*  தொண்டர் தொண்டர் கண்டீர்,* 
    இடை ஆர் பிறப்பிடைதோறு*  எமக்கு எம் பெருமக்களே.


    பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,*  அமரர்கட்கு* 
    அருமை ஒழிய*  அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை,*

    பெருமை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,* 
    வருமையும் இம்மையும்*  நம்மை அளிக்கும் பிராக்களே.


    அளிக்கும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான் தன்னை,* 
    துளிக்கும் நறும் கண்ணித்*  தூமணி வண்ணன் எம்மான்தன்னை,* 

    ஒளிக் கொண்ட சோதியை*  உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்,* 
    சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச்*  சன்ம சன்மாந்தரம் காப்பரே.


    சன்ம சன்மாந்தரம் காத்து*  அடியார்களைக் கொண்டுபோய்,* 
    தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்*  கொள்ளும் அப்பனை,* 

    தொன்மை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,* 
    நன்மை பெறுத்து எம்மை*  நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே.


    நம்பனை ஞாலம் படைத்தவனை*  திரு மார்பனை,* 
    உம்பர் உலகினில் யார்க்கும்*  உணர்வு அரியான் தன்னை,* 

    கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்*  அவர் கண்டீர்,* 
    எம் பல் பிறப்பிடைதோறு*  எம் தொழுகுலம் தாங்களே.


    குலம் தாங்கு சாதிகள்*  நாலிலும் கீழ் இழிந்து,*  எத்தனை 
    நலம் தான் இலாத*  சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,* 

    வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்*  மணிவண்ணற்கு ஆள் என்று உள் 
    கலந்தார்,*  அடியார் தம் அடியார் எம் அடிகளே.


    அடி ஆர்ந்த வையம் உண்டு*  ஆல் இலை அன்னவசம் செய்யும,* 
    படி யாதும் இல் குழவிப்படி*  எந்தை பிரான் தனக்கு,* 

    அடியார் அடியார் தம்*  அடியார் அடியார் தமக்கு* 
    அடியார் அடியார் தம்*  அடியார் அடியோங்களே.


    அடி ஓங்கு நூற்றுவர் வீய*  அன்று ஐவர்க்கு அருள்செய்த- 
    நெடியோனைத்,*  தென் குருகூர்ச் சடகோபன்*  குற்றேவல்கள்,* 

    அடி ஆர்ந்த ஆயிரத்துள்*  இவை பத்து அவன் தொண்டர்மேல் 
    முடிவு,*  ஆரக் கற்கிற்கில்*  சன்மம் செய்யாமை முடியுமே. (2) 


    சீலம் இல்லாச் சிறியனேலும்*  செய்வினையோ பெரிதால்,* 
    ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி*  'நாராயணா! என்று என்று,*

    காலந்தோறும் யான் இருந்து*  கைதலைபூசல் இட்டால்* 
    கோல மேனி காண வாராய்*  கூவியும் கொள்ளாயே.


    கொள்ள மாளா இன்ப வெள்ளம்*  கோது இல தந்திடும்,*  என் 
    வள்ளலேயோ! வையம் கொண்ட*  வாமனாவோ! என்று என்று,* 

    நள் இராவும் நன் பகலும்*  நான் இருந்து ஓலம் இட்டால்,* 
    கள்ள மாயா! உன்னை*  என் கண் காண வந்து ஈயாயே.


    'ஈவு இலாத தீவினைகள்*  எத்தனை செய்தனன்கொல்?* 
    தாவி வையம் கொண்ட எந்தாய்!*  தாமோதரா! என்று என்று* 

    கூவிக் கூவி நெஞ்சு உருகி*  கண்பனி சோர நின்றால்,* 
    பாவி நீ என்று ஒன்று சொல்லாய்*  பாவியேன் காண வந்தே.   


    'காண வந்து என் கண்முகப்பே*  தாமரைக்கண் பிறழ,* 
    ஆணி செம்பொன் மேனி எந்தாய்!*  நின்று அருளாய் என்று என்று,* 

    நாணம் இல்லாச் சிறு தகையேன்*  நான் இங்கு அலற்றுவது என்,* 
    பேணி வானோர் காணமாட்டாப்*  பீடு உடை அப்பனையே? 


    அப்பனே! அடல் ஆழியானே,*  ஆழ் கடலைக் கடைந்த 
    துப்பனே,*  உன் தோள்கள் நான்கும்*  கண்டிடக்கூடுங்கொல்? என்று*

    எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு*  ஆவி துவர்ந்து துவர்ந்து,* 
    இப்பொழுதே வந்திடாய் என்று*  ஏழையேன் நோக்குவனே.    


    நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்*  யான் எனது ஆவியுள்ளே,* 
    நாக்கு நீள்வன் ஞானம் இல்லை*  நாள்தோறும் என்னுடைய,* 

    ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்*  அல்ல புறத்தினுள்ளும்,* 
    நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்!*  நின்னை அறிந்து அறிந்தே.


    அறிந்து அறிந்து தேறித் தேறி*  யான் எனது ஆவியுள்ளே,* 
    நிறைந்த ஞான மூர்த்தியாயை*  நின்மலமாக வைத்து,* 

    பிறந்தும் செத்தும் நின்று இடறும்*  பேதைமை தீர்ந்தொழிந்தேன்* 
    நறுந் துழாயின் கண்ணி அம்மா!*  நான் உன்னைக் கண்டுகொண்டே!


    கண்டுகொண்டு என் கைகள் ஆர*  நின் திருப்பாதங்கள்மேல்,* 
    எண் திசையும் உள்ள பூக்கொண்டு*  ஏத்தி உகந்து உகந்து,* 

    தொண்டரோங்கள் பாடி ஆட*  சூழ் கடல் ஞாலத்துள்ளே,* 
    வண் துழாயின் கண்ணி வேந்தே!*  வந்திடகில்லாயே.   


    இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன்*  ஐம்புலன் வெல்ல கில்லேன்,* 
    கடவன் ஆகி காலந்தோறும்*  பூப்பறித்து ஏத்த கில்லேன்,*

    மட வல் நெஞ்சம் காதல் கூர*  வல்வினையேன் அயர்ப்பாய்த்,* 
    தடவுகின்றேன் எங்குக் காண்பன்*  சக்கரத்து அண்ணலையே?  


    சக்கரத்து அண்ணலே என்று*  தாழ்ந்து கண்ணீர் ததும்ப,* 
    பக்கம் நோக்கி நின்று அலந்தேன்*  பாவியேன் காண்கின்றிலேன்,* 

    மிக்க ஞான மூர்த்தி ஆய*  வேத விளக்கினை*  என் 
    தக்க ஞானக் கண்களாலே*  கண்டு தழுவுவனே.          


    தழுவிநின்ற காதல் தன்னால்*  தாமரைக் கண்ணன் தன்னை,* 
    குழுவு மாடத் தென் குருகூர்*  மாறன் சடகோபன்,*  சொல் 

    வழுவு இலாத ஒண் தமிழ்கள்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    தழுவப் பாடி ஆட வல்லார்*  வைகுந்தம் ஏறுவரே.


    நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்*  ஆகிலும் இனி உன்னை விட்டு* 
    ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்*  அரவின் அணை அம்மானே* 

    சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்*  சிரீவரமங்கல நகர்* 
    வீற்றிருந்த எந்தாய்!*  உனக்கு மிகை அல்லேன் அங்கே*.    


    அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்*  உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து*  நான் 
    எங்குற்றேனும் அல்லேன்*  இலங்கை செற்ற அம்மானே* 

    திங்கள் சேர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கலநகர் உறை* 
    சங்கு சக்கரத்தாய்!*  தமியேனுக்கு அருளாயே*.         


    கருளப் புள் கொடி சக்கரப் படை*  வான நாட! என் கார்முகில் வண்ணா* 
    பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி*  அடிமைகொண்டாய்*

    தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்*  சிரீவரமங்கலநகர்க்கு* 
    அருள்செய்து அங்கு இருந்தாய்!*  அறியேன் ஒரு கைம்மாறே*


    மாறு சேர் படை நூற்றுவர் மங்க*  ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி* 
    நீறு செய்த எந்தாய்!*  நிலம் கீண்ட அம்மானே* 

    தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    ஏறி வீற்றிருந்தாய்!*  உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*    


    எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?*  எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று* 
    கைதவங்கள் செய்யும்*  கரு மேனி அம்மானே*

    செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    கைதொழ இருந்தாய்*  அது நானும் கண்டேனே*.


    ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!*  என்றும் என்னை ஆளுடை* 
    வான நாயகனே!*  மணி மாணிக்கச்சுடரே*

    தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்*  கைதொழ உறை* 
    வானமாமலையே!*  அடியேன் தொழ வந்தருளே*. (2)    


    வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட*  வானவர் கொழுந்தே!*  உலகுக்கு ஓர்- 
    முந்தைத் தாய் தந்தையே!*  முழு ஏழ் உலகும் உண்டாய்!* 

    செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    அந்தம் இல் புகழாய்!*  அடியேனை அகற்றேலே*.       


    அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை*  நன்கு அறிந்தனன்* 
    அகற்றி என்னையும் நீ*  அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்* 

    பகல் கதிர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கை வாணனே*  என்றும்- 
    புகற்கு அரிய எந்தாய்!*  புள்ளின் வாய் பிளந்தானே!*    


    புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!*  எருது ஏழ் அடர்த்த*  என்- 
    கள்ள மாயவனே!*  கருமாணிக்கச் சுடரே*

    தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்*  மலி தண் சிரீவரமங்கை* 
    யுள் இருந்த எந்தாய்!*  அருளாய் உய்யுமாறு எனக்கே*.  


    ஆறு எனக்கு நின் பாதமே*  சரண் ஆகத் தந்தொழிந்தாய்*  உனக்கு ஓர்கைம் 
    மாறு நான் ஒன்று இலேன்*  எனது ஆவியும் உனதே*

    சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்*  மலி தண் சிரீவரமங்கை* 
    நாறு பூந் தண் துழாய் முடியாய்!*  தெய்வ நாயகனே!*.


    தெய்வ நாயகன் நாரணன்*  திரிவிக்கிரமன் அடி இணைமிசை* 
    கொய் கொள் பூம் பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன்*

    செய்த ஆயிரத்துள் இவை*  தண் சிரீவரமங்கை மேய பத்துடன்* 
    வைகல் பாட வல்லார்*  வானோர்க்கு ஆரா அமுதே*. (2)   


    உண்ணும் சோறு பருகும்நீர்*  தின்னும் வெற்றிலையும் எல்லாம் 
    கண்ணன்,*  எம்பெருமான் என்று என்றே*  கண்கள் நீர்மல்கி,* 

    மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,* 
    திண்ணம் என் இளமான் புகும் ஊர்*  திருக்கோளூரே.  


    ஊரும் நாடும் உலகமும்*  தன்னைப்போல் அவனுடைய* 
    பேரும் தார்களுமே பிதற்ற*  கற்பு வான் இடறி,* 

    சேரும் நல் வளம்சேர்*  பழனத் திருக்கோளூர்க்கே,* 
    போரும் கொல் உரையீர்*  கொடியேன் கொடி பூவைகளே!    


    பூவை பைங்கிளிகள்*  பந்து தூதை பூம் புட்டில்கள்,* 
    யாவையும் திருமால்*  திருநாமங்களே கூவி எழும்,*  என் 

    பாவை போய் இனித்*  தண் பழனத் திருக்கோளூர்க்கே,* 
    கோவை வாய் துடிப்ப*  மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ?  


    கொல்லை என்பர்கொலோ*  குணம் மிக்கனள் என்பர்கொலோ,* 
    சில்லை வாய்ப் பெண்டுகள்*  அயல் சேரி உள்ளாரும் எல்லே,*

    செல்வம் மல்கி அவன்கிடந்த*  திருக்கோளூர்க்கே,* 
    மேல் இடை நுடங்க*  இளமான் செல்ல மேவினளே.    


    மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்*  என் சிறுத்- 
    தேவிபோய்,*  இனித்தன் திருமால்*  திருக்கோளூரில்,*

    பூ இயல் பொழிலும்*  தடமும் அவன் கோயிலும் கண்டு,* 
    ஆவி உள் குளிர*  எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?   


    இன்று எனக்கு உதவாது அகன்ற*  இளமான் இனிப்போய்,* 
    தென் திசைத் திலதம் அனைய*  திருக்கோளூர்க்கே 

    சென்று,*  தன் திருமால் திருக்கண்ணும்*  செவ்வாயும் கண்டு,* 
    நின்று நின்று நையும்*  நெடும் கண்கள் பனி மல்கவே.


    மல்கு நீர்க் கண்ணொடு*  மையல் உற்ற மனத்தினளாய்,* 
    அல்லும் நன் பகலும்*  நெடுமால் என்று அழைத்து இனிப்போய்,* 

    செல்வம் மல்கி அவன் கிடந்த*  திருக்கோளுர்க்கே,* 
    ஒல்கி ஒல்கி நடந்து*  எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே?


    ஒசிந்த நுண் இடைமேல்*  கையை வைத்து நொந்து நொந்து,* 
    கசிந்த நெஞ்சினளாய்*  கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்,* 

    ஒசிந்த ஒண் மலராள்*  கொழுநன் திருக்கோளூர்க்கே,* 
    கசிந்த நெஞ்சினளாய்*  எம்மை நீத்த எம் காரிகையே?         


    காரியம் நல்லனகள்*  அவை காணில் என் கண்ணனுக்கு என்று,* 
    ஈரியாய் இருப்பாள் இது எல்லாம்*  கிடக்க இனிப் போய்,* 

    சேரி பல் பழி தூஉய் இரைப்ப*  திருக்கோளூர்க்கே,* 
    நேரிழை நடந்தாள்*  எம்மை ஒன்றும் நினைந்திலளே.       


    நினைக்கிலேன் தெய்வங்காள்*  நெடும் கண் இளமான் இனிப்போய்* 
    அனைத்து உலகும் உடைய*  அரவிந்தலோசனனைத்,* 

    தினைத்தனையும் விடாள்*  அவன் சேர் திருக்கோளூர்க்கே,* 
    மனைக்கு வான் பழியும் நினையாள்*  செல்ல வைத்தனளே.


    வைத்த மா நிதியாம்*  மதுசூதனையே அலற்றி,* 
    கொத்து அலர் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    பத்து நூற்றுள் இப்பத்து*  அவன்சேர் திருக்கோளூர்க்கே,* 
    சித்தம் வைத்து உரைப்பார்*  திகழ் பொன் உலகு ஆள்வாரே.    


    ஏழையர் ஆவிஉண்ணும்*  இணைக் கூற்றம்கொலோ அறியேன்,* 
    ஆழிஅம் கண்ணபிரான்*  திருக்கண்கள் கொலோ அறியேன்,*

    சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,* 
    தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே?  (2)


    ஆட்டியும் தூற்றியும் நின்று*  அன்னைமீர் என்னை நீர்நலிந்துஎன்?* 
    மாட்டு உயர் கற்பகத்தின்* வல்லியோ? கொழுந்தோ? அறியேன்,*

    ஈட்டிய வெண்ணெய்உண்டான்* திருமூக்கு எனதுஆவியுள்ளே,* 
    மாட்டிய வல்விளக்கின்* சுடராய்நிற்கும் வாலியதே.


    வாலியதுஓர் கனிகொல்*  வினையாட்டியேன் வல்வினைகொல்,* 
    கோலம் திரள்பவளக்*  கொழும்துண்டம்கொலோ? அறியேன்,*

    நீல நெடுமுகில்போல்*  திருமேனி அம்மான் தொண்டைவாய்,* 
    ஏலும் திசையுள்எல்லாம்*  வந்து தோன்றும் என்இன்உயிர்க்கே. 


    இன்உயிர்க்கு ஏழையர்மேல்* வளையும் இணை நீலவிற்கொல்,* 
    மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,*  மதனன்

    தன்உயிர்த் தாதை* கண்ணபெருமான் புருவம்அவையே,* 
    என்உயிர் மேலனவாய்* அடுகின்றன என்றும் நின்றே  


    என்றும் நின்றேதிகழும்*  செய்ய ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்,* 
    அன்றி என்ஆவிஅடும்*  அணி முத்தம்கொலோ? அறியேன்,*

    குன்றம் எடுத்தபிரான்*  முறுவல் எனதுஆவிஅடும்* 
    ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்வுஇடமே       


    உய்விடம் ஏழையர்க்கும்*  அசுரர்க்கும் அரக்கர்கட்கும்* 
    எவ்விடம் என்றுஇலங்கி* மகரம் தழைக்கும் தளிர்கொல்,*

    பைவிடப் பாம்புஅணையான்*  திருக்குண்டலக் காதுகளே?* 
    கைவிடல் ஒன்றும்இன்றி*  அடுகின்றன காண்மின்களே 


    காண்மின்கள் அன்னையர்காள்*! என்று காட்டும் வகைஅறியேன்,* 
    நாள்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு நச்சுஇலைகொல்,*

    சேண்மன்னு நால்தடம்தோள்*  பெருமான்தன் திருநுதலே?,* 
    கோள்மன்னி ஆவிஅடும்* கொடியேன் உயிர் கோள்இழைத்தே


    கோள்இழைத் தாமரையும்*  கொடியும் பவளமும் வில்லும்,.* 
    கோள்இழைத் தண் முத்தமும்*  தளிரும் குளிர்வான் பிறையும்,*

    கோள்இழையாஉடைய*  கொழும்சோதி வட்டம்கொல் கண்ணன், 
    கோள்இழை வாள் முகமாய்*  கொடியேன் உயிர் கொள்கின்றதே? 


    கொள்கின்ற கோள் இருளைச்*  சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்,* 
    உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்?*  அன்று மாயன் குழல்,*

    விள்கின்ற பூந்தண்துழாய்*  விரை நாற வந்து என் உயிரைக்,* 
    கள்கின்றவாறு அறியீர்*  அன்னைமீர்! கழறாநிற்றிரே.


    நிற்றி முற்றத்துள் என்று*  நெரித்த கையர் ஆய்*  
    என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும்*  வைதிர் சுடர்ச் சோதி மணிநிறம்ஆய்,*

    முற்ற இம்மூவுலகும்*  விரிகின்ற சுடர்முடிக்கே,* 
    ஒற்றுமை கொண்டது உள்ளம்*  அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?  


    கட்கு அரிய பிரமன் சிவன்*  இந்திரன் என்று இவர்க்கும்,* 
    கட்கு அரிய கண்ணனைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    உட்கு உடை ஆயிரத்துள்*  இவையும் ஒரு பத்தும் வல்லார்,* 
    உட்கு உடை வானவரோடு*  உடனாய் என்றும் மாயாரே. (2)        


    இருத்தும் வியந்து என்னைத்*  தன் பொன்அடிக்கீழ் என்று* 
    அருத்தித்து எனைத்துஓர்*  பலநாள் அழைத்தேற்கு*

    பொருத்தம்உடை*  வாமனன்தான் புகுந்து*  என்தன் 
    கருத்தைஉற*  வீற்றிருந்தான் கண்டுகொண்டே.       (2)


    இருந்தான் கண்டுகொண்டு*  எனதுஏழை நெஞ்சுஆளும்* 
    திருந்தாத ஓர்ஐவரைத்*  தேய்ந்துஅறமன்னி*

    பெரும்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த பெருமான்* 
    தரும்தான் அருள்தான்*  இனியான் அறியேனே.   (2)


    அருள்தான் இனியான் அறியேன்*  அவன்என்உள்* 
    இருள்தான்அற*  வீற்றிருந்தான் இதுஅல்லால்*

    பொருள் தான்எனில்*  மூவுலகும் பொருளல்ல* 
    மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே.


    மாயமயக்கு மயக்கான்*  என்னை வஞ்சித்து* 
    ஆயன் அமரர்க்கு*  அரிஏறு எனதுஅம்மான்*     

    தூய சுடர்ச்சோதி*  தனதுஎன்னுள் வைத்தான்* 
    தேசம் திகழும்*  தன்திருவருள் செய்தே.      


    திகழும்தன் திருவருள் செய்து*  உலகத்தார்- 
    புகழும் புகழ்*  தானதுகாட்டித் தந்து என்உள்-

    திகழும்*  மணிக்குன்றம்ஒன்றே ஒத்துநின்றான்* 
    புகழும் புகழ்*  மற்றுஎனக்கும் ஓர்பொருளே? 


    பொருள்மற்றுஎனக்கும் ஓர்பொருள்தன்னில்*  சீர்க்கத் 
    தருமேல்*  பின்னையார்க்குஅவன் தன்னைக் கொடுக்கும்?*

    கருமாணிக்கக் குன்றத்துத்*  தாமரைபோல்* 
    திருமார்பு கால்கண்கை*  செவ்வாய் உந்தியானே.   


    செவ்வாய்உந்தி*  வெண்பல் சுடர்க்குழை தம்மோடு* 
    எவ்வாய்ச் சுடரும்*  தம்மில்முன்வளாய்க் கொள்ள*

    செவ்வாய் முறுவலோடு*  எனதுஉள்ளத்துஇருந்த* 
    அவ்வாயன்றி*  யான் அறியேன் மற்றுஅருளே.


    அறியேன் மற்றருள்*  என்னைஆளும் பிரானார்* 
    வெறிதே அருள்செய்வர்*  செய்வார்கட்கு உகந்து*

    சிறியேனுடைச்*  சிந்தையுள் மூவுலகும்*  தன் 
    நெறியா வயிற்றில்கொண்டு*  நின்றொழிந்தாரே. 


    வயிற்றில் கொண்டு*  நின்றொழிந்தாரும் எவரும்* 
    வயிற்றில் கொண்டு*  நின்று ஒருமூவுலகும்* தம்

    வயிற்றில் கொண்டு*  நின்றவண்ணம் நின்றமாலை* 
    வயிற்றில் கொண்டு*  மன்னவைத்தேன் மதியாலே.  


    வைத்தேன் மதியால்*  எனதுஉள்ளத்துஅகத்தே* 
    எய்த்தே ஒழிவேன்அல்லேன்*  என்றும் எப்போதும்*

    மொய்த்துஏய்திரை*  மோது தண்பாற் கடலுளால்* 
    பைத்துஏய் சுடர்ப்பாம்பணை*  நம்பரனையே  


    சுடர்ப்பாம்பணை நம்பரனை*  திருமாலை* 
    அடிச்சேர்வகை*  வண்குருகூர்ச் சடகோபன்*

    முடிப்பான் சொன்னஆயிரத்து*  இப்பத்தும் சன்மம் 
    விடத்*  தேய்ந்தற நோக்கும்*  தன்கண்கள் சிவந்தே  (2)


    எம்கானல் அகம்கழிவாய்*  இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்* 
    செங்கால மடநாராய்!*  திருமூழிக்களத்து உறையும்*

    கொங்குஆர் பூந்துழாய்முடி*  எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்* 
    நும்கால்கள் என்தலைமேல்*  கெழுமீரோ நுமரோடே.  (2)


    நுமரோடும் பிரியாதே*  நீரும் நும் சேவலுமாய்* 
    அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*

    எமராலும் பழிப்புண்டு*  இங்கு என்தம்மால் இழிப்புண்டு* 
    தமரோடுஅங்கு உறைவார்க்குத்*  தக்கிலமே! கேளீரே.


    தக்கிலமே கேளீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேரும்* 
    கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!*  குளிர் மூழிக்களத்து உறையும்*

    செக்கமலத்துஅலர் போலும்*  கண்கைகால் செங்கனிவாய்* 
    அக்கமலத்துஇலைப்போலும்*  திருமேனி அடிகளுக்கே.


    திருமேனி அடிகளுக்குத்*  தீவினையேன் விடுதூதாய்* 
    திருமூழிக்களம் என்னும்*  செழுநகர்வாய் அணிமுகில்காள்*

    திருமேனி அவட்குஅருளீர்*  என்றக்கால் உம்மைத்தன்* 
    திருமேனி ஒளிஅகற்றி*  தெளிவிசும்பு கடியுமே?   


    தெளிவிசும்பு கடிதுஓடி*  தீவளைத்து மின்இலகும்* 
    ஒளிமுகில்காள்!*  திருமூழிக்களத்துஉறையும் ஒண்சுடர்க்கு*

    தெளிவிசும்பு திருநாடாத்*  தீவினையேன் மனத்துஉறையும்* 
    துளிவார்கள்குழலார்க்கு*  என்தூதுஉரைத்தல் செப்புமினே.


    தூதுஉரைத்தல் செப்புமின்கள்*  தூமொழிவாய் வண்டுஇனங்காள்*  
    போதுஇரைத்து மதுநுகரும்*  பொழில் மூழிக்களத்துஉறையும்* 

    மாதரைத்தம் மார்வகத்தே*  வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*  
    தூதுஉரைத்தல் செப்புதிரேல்*  சுடர்வளையும் கலையுமே.


    சுடர்வளையும் கலையும்கொண்டு*  அருவினையேன் தோள்துறந்த*  
    படர்புகழான்*  திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்* 

    சுடர்பவள வாயனைக்கண்டு*  ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*  
    படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!*  எனக்கு ஒன்று பணியீரே. 


    எனக்குஒன்று பணியீர்கள்*  இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*  
    மனக்குஇன்பம் படமேவும்*  வண்டுஇனங்காள்! தும்பிகாள்* 

    கனக்கொள் திண்மதிள்புடைசூழ்*  திருமூழிக் களத்துஉறையும்*  
    புனக்கொள் காயாமேனிப்*  பூந்துழாய் முடியார்க்கே.


    பூந்துழாய் முடியார்க்கு*  பொன்ஆழிக் கையாருக்கு* 
    ஏந்துநீர் இளம்குருகே!*  திருமூழிக்களத்தாருக்கு*

    ஏந்துபூண் முலைபயந்து*  என்இணைமலர்க்கண் நீர்ததும்ப* 
    தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்*  தகவுஅன்றுஎன்று உரையீரே   


    தகவுஅன்றுஎன்று உரையீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேர்ந்து* 
    மிகஇன்பம் படமேவும்*  மேல்நடைய அன்னங்காள்*

    மிகமேனி மெலிவுஎய்தி*  மேகலையும் ஈடுஅழிந்து*  என் 
    அகமேனி ஒழியாமே*  திருமூழிக் களத்தார்க்கே.


    ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்*  ஒண்சுடரை* 
    ஒழிவுஇல்லா அணிமழலைக்*  கிளிமொழியாள் அலற்றியசொல்* 

    வழுஇல்லா வண்குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்துஉரைத்த*  
    அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்*  நோய் அறுக்குமே   (2) 


    செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்*  திருமாலிருஞ்சோலை* 
    வஞ்சக் கள்வன் மாமாயன்*  மாயக் கவியாய் வந்து*  என்-

    நெஞ்சும் உயிரும் உள்கலந்து*  நின்றார் அறியா வண்ணம்*  என்- 
    நெஞ்சும் உயிரும் அவைஉண்டு*  தானே ஆகி நிறைந்தானே.   (2) 


    தானே ஆகி நிறைந்து*  எல்லாஉலகும் உயிரும் தானேஆய்* 
    தானே யான்என்பான்ஆகி*  தன்னைத் தானே துதித்து*  எனக்குத்-

    தேனே பாலே கன்னலே அமுதே*  திருமாலிருஞ்சோலைக்* 
    கோனே ஆகி நின்றொழிந்தான்*  என்னை முற்றும் உயிர்உண்டே.


    என்னை முற்றும் உயிர்உண்டு*  என் மாயஆக்கை இதனுள்புக்கு* 
    என்னை முற்றும் தானேஆய்*  நின்ற மாய அம்மான் சேர்*

    தென்நன் திருமாலிருஞ்சோலைத்*  திசைகை கூப்பிச் சேர்ந்தயான்* 
    இன்னும் போவேனே கொலோ!*  என்கொல் அம்மான் திருஅருளே?


    என்கொல் அம்மான் திருஅருள்கள்?*  உலகும் உயிரும் தானேயாய்*
    நன்கு என் உடலம் கைவிடான்*  ஞாலத்தூடே நடந்து உழக்கி*

    தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற*  திருமாலிருஞ்சோலை* 
    நங்கள் குன்றம் கைவிடான்*  நண்ணா அசுரர் நலியவே.


    நண்ணா அசுரர் நலிவுஎய்த*  நல்ல அமரர் பொலிவுஎய்த* 
    எண்ணாதனகள் எண்ணும்*  நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப*

    பண்ணார் பாடலின் கவிகள்*  யானாய்த் தன்னைத் தான்பாடி* 
    தென்னா என்னும் என்அம்மான்*  திருமாலிருஞ்சோலையானே.


    திருமாலிருஞ்சோலை யானேயாகி*  செழு மூவுலகும்*  தன்- 
    ஒருமா வயிற்றின்உள்ளே வைத்து*  ஊழி ஊழி தலையளிக்கும்*

    திருமால்என்னை ஆளும்மால்*  சிவனும் பிரமனும்காணாது* 
    அருமால் எய்தி அடிபரவ*  அருளை ஈந்த அம்மானே. 


    அருளை ஈ என்அம்மானே! என்னும்*  முக்கண் அம்மானும்* 
    தெருள்கொள் பிரமன்அம்மானும்*  தேவர் கோனும் தேவரும்*

    இருள்கள் கடியும் முனிவரும்*  ஏத்தும் அம்மான் திருமலை* 
    மருள்கள் கடியும் மணிமலை*  திருமாலிருஞ்சோலை மலையே.   


    திருமாலிருஞ்சோலை மலையே*  திருப்பாற் கடலே என்தலையே* 
    திருமால்வைகுந்தமே*  தண் திருவேங்கடமே எனதுஉடலே*

    அருமாமாயத்து எனதுஉயிரே*  மனமே வாக்கே கருமமே* 
    ஒருமா நொடியும் பிரியான்*  என் ஊழி முதல்வன் ஒருவனே.  (2)


    ஊழி முதல்வன் ஒருவனேஎன்னும்*  ஒருவன் உலகுஎல்லாம்* 
    ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து*  காத்து கெடுத்துஉழலும்*

    ஆழி வண்ணன் என்அம்மான்*  அம்தண் திருமாலிருஞ்சோலை* 
    வாழி மனமே! கைவிடேல்*  உடலும் உயிரும் மங்கஒட்டே. 


    மங்க ஒட்டு உன் மாமாயை*  திருமாலிருஞ்சோலைமேய* 
    நங்கள் கோனே! யானேநீஆகி*  என்னை அளித்தானே*

    பொங்குஐம் புலனும் பொறிஐந்தும்*  கருமேந்திரியம் ஐம்பூதம்* 
    இங்கு இவ்உயிர்ஏய் பிரகிருதி*  மான்ஆங்காரம் மனங்களே. 


    மான்ஆங்காரம் மனம்கெட*  ஐவர் வன்கையர் மங்க* 
    தான்ஆங்கார மாய்ப்புக்கு*  தானே தானே ஆனானைத்*

    தேனாங் காரப் பொழில்குருகூர்ச்*  சடகோபன் சொல்ஆயிரத்துள்* 
    மான்ஆங்காரத்துஇவை பத்தும்*  திருமாலிருஞ் சோலைமலைக்கே.  (2)