பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
பிறவித்துயர் அற* ஞானத்துள் நின்று.*
துறவிச் சுடர் விளக்கம்* தலைப்பெய்வார்,*
அறவனை* ஆழிப்படை அந்தணனை,*
மறவியை இன்றி* மனத்து வைப்பாரே.
வைப்பாம் மருந்து ஆம்* அடியரை வல்வினைத்*
துப்பாம் புலன் ஐந்தும்* துஞ்சக்கொடான் அவன்,*
எப்பால் எவர்க்கும்* நலத்தால் உயர்ந்து உயர்ந்து,*
அப்பாலவன் எங்கள்* ஆயர் கொழுந்தே.
ஆயர் கொழுந்தாய்* அவரால் புடையுண்ணும்,*
மாயப் பிரானை* என் மாணிக்கச் சோதியை,*
தூய அமுதைப்* பருகிப் பருகி,* என்-
மாயப் பிறவி* மயர்வு அறுத்தேனே.
மயர்வு அற என் மனத்தே* மன்னினான் தன்னை,*
உயர்வினையே தரும்* ஒண் சுடர்க் கற்றையை,*
அயர்வு இல் அமரர்கள்,* ஆதிக் கொழுந்தை,* என்
இசைவினை* என் சொல்லி யான் விடுவேனோ?
விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,*
நடுவே வந்து* உய்யக் கொள்கின்ற நாதனை,*
தொடுவே செய்து* இள ஆய்ச்சியர் கண்ணினுள்,*
விடவே செய்து* விழிக்கும் பிரானையே.
பிரான்* பெரு நிலம் கீண்டவன்,* பின்னும்
விராய்* மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*
மராமரம் எய்த மாயவன்,* என்னுள்
இரான் எனில்* பின்னை யான் ஒட்டுவேனோ?
யான் ஒட்டி என்னுள்* இருத்துவன் என்றிலன்,*
தான் ஒட்டி வந்து* என் தனி நெஞ்சை வஞ்சித்து,*
ஊன் ஒட்டி நின்று* என் உயிரில் கலந்து,* இயல்
வான் ஒட்டுமோ?* இனி என்னை நெகிழ்க்கவே.
என்னை நெகிழ்க்கிலும்* என்னுடை நன் நெஞ்சம்-
தன்னை,* அகல்விக்கத் தானும்* கில்லான் இனி,*
பின்னை நெடும் பணைத் தோள்* மகிழ் பீடு உடை,*
முன்னை அமரர்* முழுமுதல் தானே.
அமரர் முழுமுதல்* ஆகிய ஆதியை,*
அமரர்க்கு அமுது ஈந்த* ஆயர் கொழுந்தை,*
அமர அழும்பத்* துழாவி என் ஆவி,*
அமரத் தழுவிற்று* இனி அகலும்மோ.
அகலில் அகலும்* அணுகில் அணுகும்,*
புகலும் அரியன்* பொரு அல்லன் எம்மான்,*
நிகர் இல் அவன் புகழ்* பாடி இளைப்பு இலம்,*
பகலும் இரவும்* படிந்து குடைந்தே.
குடைந்து வண்டு உண்ணும்* துழாய் முடியானை,*
அடைந்த தென் குருகூர்ச்* சடகோபன்,*
மிடைந்த சொல் தொடை* ஆயிரத்து இப்பத்து,*
உடைந்து நோய்களை* ஓடுவிக்குமே.
கேசவன் தமர்* கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மா சதிர் இது பெற்று* நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்* விண்ணோர்
நாயகன்,* எம் பிரான் எம்மான்* நாராயணனாலே.
நாரணன் முழு ஏழ் உலகுக்கும்* நாதன் வேத மயன்,*
காரணம் கிரிசை கருமம் இவை* முதல்வன் எந்தை,*
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்* தொழுது ஏத்த நின்று,*
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்* என் மாதவனே.
மாதவன் என்றதே கொண்டு* என்னை இனி இப்பால் பட்டது,*
யாது அவங்களும் சேர்கொடேன் என்று* என்னுள் புகுந்து இருந்து,*
தீது அவம் கெடுக்கும் அமுதம்* செந்தாமரைக் கண் குன்றம்,*
கோது அவம் இல் என் கன்னல் கட்டி* எம்மான் என் கோவிந்தனே.
கோவிந்தன் குடக் கூத்தன்* கோவலன் என்று என்றே குனித்துத்*
தேவும் தன்னையும்* பாடி ஆடத் திருத்தி* என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும்* பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மேவும் தன்மையம் ஆக்கினான்* வல்லன் எம்பிரான் விட்டுவே.
விட்டு இலங்கு செஞ்சோதித்* தாமரை பாதம் கைகள் கண்கள,*
விட்டு இலங்கு கருஞ்சுடர்* மலையே திரு உடம்பு,*
விட்டு இலங்கு மதியம் சீர்* சங்கு சக்கரம் பரிதி,*
விட்டு இலங்கு முடி அம்மான்* மதுசூதனன் தனக்கே.
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று* எத்தாலும் கருமம் இன்றி,*
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட* நின்று ஊழி ஊழிதொறும்,*
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்* எனக்கே அருள்கள் செய்ய,*
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்* திரிவிக்கிரமனையே.
திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண்* எம்மான் என் செங்கனி வாய்*
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு* நிறத்தனன் என்று என்று,* உள்ளி
பரவிப் பணிந்து* பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,*
மருவித் தொழும் மனமே தந்தாய்* வல்லைகாண் என் வாமனனே
வாமனன் என் மரகத வண்ணன்* தாமரைக் கண்ணினன்-
காமனைப் பயந்தாய்,* என்று என்று உன் கழல்* பாடியே பணிந்து,*
தூ மனத்தனனாய்ப்* பிறவித் துழதி நீங்க,* என்னைத்
தீ மனம் கெடுத்தாய்* உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.
சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்* என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ,* அலமந்து கண்கள் நீர் மல்கி* வெவ்வுயிர்த்து உயிர்த்து,*
மரீஇய தீவினை மாள இன்பம் வளர* வைகல் வைகல்
இரீஇ* உன்னை என்னுள் வைத்தனை* என் இருடீகேசனே.
இருடீகேசன் எம் பிரான்* இலங்கை அரக்கர் குலம்,*
முருடு தீர்த்த பிரான் எம்மான்* அமரர் பெம்மான் என்று என்று,*
தெருடியாகில் நெஞ்சே வணங்கு* திண்ணம் அறி அறிந்து,*
மருடியேலும் விடேல் கண்டாய்* நம்பி பற்பநாபனையே.
பற்பநாபன் உயர்வு அற உயரும்* பெரும் திறலோன்,*
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு* எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்,* என் அமுதம் கார் முகில் போலும்* வேங்கட நல்
வெற்பன்,* விசும்போர் பிரான்* எந்தை தாமோதரனே.
தாமோதரனை தனி முதல்வனை* ஞாலம் உண்டவனை,*
ஆமோ தரம் அறிய* ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*
தாமோதரன் உரு ஆகிய* சிவற்கும் திசைமுகற்கும்,*
ஆமோ தரம் அறிய* எம்மானை என் ஆழி வண்ணனையே.
வண்ண மா மணிச் சோதியை* அமரர் தலைமகனை,*
கண்ணனை நெடுமாலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
பண்ணிய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,*
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு* அண்ணல் தாள் அணைவிக்குமே.
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை* பங்கயக் கண்ணனை,*
பயில இனிய* நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,*
பயிலும் திரு உடையார்* எவரேலும் அவர் கண்டீர்,*
பயிலும் பிறப்பிடை தோறு* எம்மை ஆளும் பரமரே. (2)
ஆளும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான் தன்னை,*
தோளும் ஓர் நான்கு உடைத்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை*
தாளும் தடக் கையும் கூப்பிப்* பணியும் அவர் கண்டீர்,*
நாளும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளுடை நாதரே.
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்* நறும் துழாய்ப்
போதனை* பொன் நெடும் சக்கரத்து* எந்தை பிரான் தன்னை*
பாதம் பணிய வல்லாரைப்* பணியும் அவர் கண்டீர்,*
ஓதும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளுடையார்களே.
உடை ஆர்ந்த ஆடையன்* கண்டிகையன் உடை நாணினன்*
புடை ஆர் பொன் நூலினன்* பொன் முடியன் மற்றும் பல்கலன்,*
நடையா உடைத் திருநாரணன்* தொண்டர் தொண்டர் கண்டீர்,*
இடை ஆர் பிறப்பிடைதோறு* எமக்கு எம் பெருமக்களே.
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,* அமரர்கட்கு*
அருமை ஒழிய* அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை,*
பெருமை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
வருமையும் இம்மையும்* நம்மை அளிக்கும் பிராக்களே.
அளிக்கும் பரமனை கண்ணனை* ஆழிப் பிரான் தன்னை,*
துளிக்கும் நறும் கண்ணித்* தூமணி வண்ணன் எம்மான்தன்னை,*
ஒளிக் கொண்ட சோதியை* உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்,*
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச்* சன்ம சன்மாந்தரம் காப்பரே.
சன்ம சன்மாந்தரம் காத்து* அடியார்களைக் கொண்டுபோய்,*
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்* கொள்ளும் அப்பனை,*
தொன்மை பிதற்ற வல்லாரைப்* பிதற்றும் அவர் கண்டீர்,*
நன்மை பெறுத்து எம்மை* நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே.
நம்பனை ஞாலம் படைத்தவனை* திரு மார்பனை,*
உம்பர் உலகினில் யார்க்கும்* உணர்வு அரியான் தன்னை,*
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்* அவர் கண்டீர்,*
எம் பல் பிறப்பிடைதோறு* எம் தொழுகுலம் தாங்களே.
குலம் தாங்கு சாதிகள்* நாலிலும் கீழ் இழிந்து,* எத்தனை
நலம் தான் இலாத* சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,*
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்* மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார்,* அடியார் தம் அடியார் எம் அடிகளே.
அடி ஆர்ந்த வையம் உண்டு* ஆல் இலை அன்னவசம் செய்யும,*
படி யாதும் இல் குழவிப்படி* எந்தை பிரான் தனக்கு,*
அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*
அடியார் அடியார் தம்* அடியார் அடியோங்களே.
அடி ஓங்கு நூற்றுவர் வீய* அன்று ஐவர்க்கு அருள்செய்த-
நெடியோனைத்,* தென் குருகூர்ச் சடகோபன்* குற்றேவல்கள்,*
அடி ஆர்ந்த ஆயிரத்துள்* இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு,* ஆரக் கற்கிற்கில்* சன்மம் செய்யாமை முடியுமே. (2)
சீலம் இல்லாச் சிறியனேலும்* செய்வினையோ பெரிதால்,*
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி* 'நாராயணா! என்று என்று,*
காலந்தோறும் யான் இருந்து* கைதலைபூசல் இட்டால்*
கோல மேனி காண வாராய்* கூவியும் கொள்ளாயே.
கொள்ள மாளா இன்ப வெள்ளம்* கோது இல தந்திடும்,* என்
வள்ளலேயோ! வையம் கொண்ட* வாமனாவோ! என்று என்று,*
நள் இராவும் நன் பகலும்* நான் இருந்து ஓலம் இட்டால்,*
கள்ள மாயா! உன்னை* என் கண் காண வந்து ஈயாயே.
'ஈவு இலாத தீவினைகள்* எத்தனை செய்தனன்கொல்?*
தாவி வையம் கொண்ட எந்தாய்!* தாமோதரா! என்று என்று*
கூவிக் கூவி நெஞ்சு உருகி* கண்பனி சோர நின்றால்,*
பாவி நீ என்று ஒன்று சொல்லாய்* பாவியேன் காண வந்தே.
'காண வந்து என் கண்முகப்பே* தாமரைக்கண் பிறழ,*
ஆணி செம்பொன் மேனி எந்தாய்!* நின்று அருளாய் என்று என்று,*
நாணம் இல்லாச் சிறு தகையேன்* நான் இங்கு அலற்றுவது என்,*
பேணி வானோர் காணமாட்டாப்* பீடு உடை அப்பனையே?
அப்பனே! அடல் ஆழியானே,* ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே,* உன் தோள்கள் நான்கும்* கண்டிடக்கூடுங்கொல்? என்று*
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு* ஆவி துவர்ந்து துவர்ந்து,*
இப்பொழுதே வந்திடாய் என்று* ஏழையேன் நோக்குவனே.
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்* யான் எனது ஆவியுள்ளே,*
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை* நாள்தோறும் என்னுடைய,*
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்* அல்ல புறத்தினுள்ளும்,*
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்!* நின்னை அறிந்து அறிந்தே.
அறிந்து அறிந்து தேறித் தேறி* யான் எனது ஆவியுள்ளே,*
நிறைந்த ஞான மூர்த்தியாயை* நின்மலமாக வைத்து,*
பிறந்தும் செத்தும் நின்று இடறும்* பேதைமை தீர்ந்தொழிந்தேன்*
நறுந் துழாயின் கண்ணி அம்மா!* நான் உன்னைக் கண்டுகொண்டே!
கண்டுகொண்டு என் கைகள் ஆர* நின் திருப்பாதங்கள்மேல்,*
எண் திசையும் உள்ள பூக்கொண்டு* ஏத்தி உகந்து உகந்து,*
தொண்டரோங்கள் பாடி ஆட* சூழ் கடல் ஞாலத்துள்ளே,*
வண் துழாயின் கண்ணி வேந்தே!* வந்திடகில்லாயே.
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன்* ஐம்புலன் வெல்ல கில்லேன்,*
கடவன் ஆகி காலந்தோறும்* பூப்பறித்து ஏத்த கில்லேன்,*
மட வல் நெஞ்சம் காதல் கூர* வல்வினையேன் அயர்ப்பாய்த்,*
தடவுகின்றேன் எங்குக் காண்பன்* சக்கரத்து அண்ணலையே?
சக்கரத்து அண்ணலே என்று* தாழ்ந்து கண்ணீர் ததும்ப,*
பக்கம் நோக்கி நின்று அலந்தேன்* பாவியேன் காண்கின்றிலேன்,*
மிக்க ஞான மூர்த்தி ஆய* வேத விளக்கினை* என்
தக்க ஞானக் கண்களாலே* கண்டு தழுவுவனே.
தழுவிநின்ற காதல் தன்னால்* தாமரைக் கண்ணன் தன்னை,*
குழுவு மாடத் தென் குருகூர்* மாறன் சடகோபன்,* சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
தழுவப் பாடி ஆட வல்லார்* வைகுந்தம் ஏறுவரே.
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்* ஆகிலும் இனி உன்னை விட்டு*
ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்* அரவின் அணை அம்மானே*
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்* சிரீவரமங்கல நகர்*
வீற்றிருந்த எந்தாய்!* உனக்கு மிகை அல்லேன் அங்கே*.
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்* உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து* நான்
எங்குற்றேனும் அல்லேன்* இலங்கை செற்ற அம்மானே*
திங்கள் சேர் மணி மாடம் நீடு* சிரீவரமங்கலநகர் உறை*
சங்கு சக்கரத்தாய்!* தமியேனுக்கு அருளாயே*.
கருளப் புள் கொடி சக்கரப் படை* வான நாட! என் கார்முகில் வண்ணா*
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி* அடிமைகொண்டாய்*
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்* சிரீவரமங்கலநகர்க்கு*
அருள்செய்து அங்கு இருந்தாய்!* அறியேன் ஒரு கைம்மாறே*
மாறு சேர் படை நூற்றுவர் மங்க* ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி*
நீறு செய்த எந்தாய்!* நிலம் கீண்ட அம்மானே*
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்* சிரீவரமங்கலநகர்*
ஏறி வீற்றிருந்தாய்!* உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?* எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று*
கைதவங்கள் செய்யும்* கரு மேனி அம்மானே*
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்* சிரீவரமங்கலநகர்*
கைதொழ இருந்தாய்* அது நானும் கண்டேனே*.
ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!* என்றும் என்னை ஆளுடை*
வான நாயகனே!* மணி மாணிக்கச்சுடரே*
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்* கைதொழ உறை*
வானமாமலையே!* அடியேன் தொழ வந்தருளே*. (2)
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட* வானவர் கொழுந்தே!* உலகுக்கு ஓர்-
முந்தைத் தாய் தந்தையே!* முழு ஏழ் உலகும் உண்டாய்!*
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்* சிரீவரமங்கலநகர்*
அந்தம் இல் புகழாய்!* அடியேனை அகற்றேலே*.
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை* நன்கு அறிந்தனன்*
அகற்றி என்னையும் நீ* அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்*
பகல் கதிர் மணி மாடம் நீடு* சிரீவரமங்கை வாணனே* என்றும்-
புகற்கு அரிய எந்தாய்!* புள்ளின் வாய் பிளந்தானே!*
புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!* எருது ஏழ் அடர்த்த* என்-
கள்ள மாயவனே!* கருமாணிக்கச் சுடரே*
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்* மலி தண் சிரீவரமங்கை*
யுள் இருந்த எந்தாய்!* அருளாய் உய்யுமாறு எனக்கே*.
ஆறு எனக்கு நின் பாதமே* சரண் ஆகத் தந்தொழிந்தாய்* உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன்* எனது ஆவியும் உனதே*
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்* மலி தண் சிரீவரமங்கை*
நாறு பூந் தண் துழாய் முடியாய்!* தெய்வ நாயகனே!*.
தெய்வ நாயகன் நாரணன்* திரிவிக்கிரமன் அடி இணைமிசை*
கொய் கொள் பூம் பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன்*
செய்த ஆயிரத்துள் இவை* தண் சிரீவரமங்கை மேய பத்துடன்*
வைகல் பாட வல்லார்* வானோர்க்கு ஆரா அமுதே*. (2)
உண்ணும் சோறு பருகும்நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்,* எம்பெருமான் என்று என்றே* கண்கள் நீர்மல்கி,*
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே.
ஊரும் நாடும் உலகமும்* தன்னைப்போல் அவனுடைய*
பேரும் தார்களுமே பிதற்ற* கற்பு வான் இடறி,*
சேரும் நல் வளம்சேர்* பழனத் திருக்கோளூர்க்கே,*
போரும் கொல் உரையீர்* கொடியேன் கொடி பூவைகளே!
பூவை பைங்கிளிகள்* பந்து தூதை பூம் புட்டில்கள்,*
யாவையும் திருமால்* திருநாமங்களே கூவி எழும்,* என்
பாவை போய் இனித்* தண் பழனத் திருக்கோளூர்க்கே,*
கோவை வாய் துடிப்ப* மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ?
கொல்லை என்பர்கொலோ* குணம் மிக்கனள் என்பர்கொலோ,*
சில்லை வாய்ப் பெண்டுகள்* அயல் சேரி உள்ளாரும் எல்லே,*
செல்வம் மல்கி அவன்கிடந்த* திருக்கோளூர்க்கே,*
மேல் இடை நுடங்க* இளமான் செல்ல மேவினளே.
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்* என் சிறுத்-
தேவிபோய்,* இனித்தன் திருமால்* திருக்கோளூரில்,*
பூ இயல் பொழிலும்* தடமும் அவன் கோயிலும் கண்டு,*
ஆவி உள் குளிர* எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?
இன்று எனக்கு உதவாது அகன்ற* இளமான் இனிப்போய்,*
தென் திசைத் திலதம் அனைய* திருக்கோளூர்க்கே
சென்று,* தன் திருமால் திருக்கண்ணும்* செவ்வாயும் கண்டு,*
நின்று நின்று நையும்* நெடும் கண்கள் பனி மல்கவே.
மல்கு நீர்க் கண்ணொடு* மையல் உற்ற மனத்தினளாய்,*
அல்லும் நன் பகலும்* நெடுமால் என்று அழைத்து இனிப்போய்,*
செல்வம் மல்கி அவன் கிடந்த* திருக்கோளுர்க்கே,*
ஒல்கி ஒல்கி நடந்து* எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே?
ஒசிந்த நுண் இடைமேல்* கையை வைத்து நொந்து நொந்து,*
கசிந்த நெஞ்சினளாய்* கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்,*
ஒசிந்த ஒண் மலராள்* கொழுநன் திருக்கோளூர்க்கே,*
கசிந்த நெஞ்சினளாய்* எம்மை நீத்த எம் காரிகையே?
காரியம் நல்லனகள்* அவை காணில் என் கண்ணனுக்கு என்று,*
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம்* கிடக்க இனிப் போய்,*
சேரி பல் பழி தூஉய் இரைப்ப* திருக்கோளூர்க்கே,*
நேரிழை நடந்தாள்* எம்மை ஒன்றும் நினைந்திலளே.
நினைக்கிலேன் தெய்வங்காள்* நெடும் கண் இளமான் இனிப்போய்*
அனைத்து உலகும் உடைய* அரவிந்தலோசனனைத்,*
தினைத்தனையும் விடாள்* அவன் சேர் திருக்கோளூர்க்கே,*
மனைக்கு வான் பழியும் நினையாள்* செல்ல வைத்தனளே.
வைத்த மா நிதியாம்* மதுசூதனையே அலற்றி,*
கொத்து அலர் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பத்து நூற்றுள் இப்பத்து* அவன்சேர் திருக்கோளூர்க்கே,*
சித்தம் வைத்து உரைப்பார்* திகழ் பொன் உலகு ஆள்வாரே.
ஏழையர் ஆவிஉண்ணும்* இணைக் கூற்றம்கொலோ அறியேன்,*
ஆழிஅம் கண்ணபிரான்* திருக்கண்கள் கொலோ அறியேன்,*
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,*
தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே? (2)
ஆட்டியும் தூற்றியும் நின்று* அன்னைமீர் என்னை நீர்நலிந்துஎன்?*
மாட்டு உயர் கற்பகத்தின்* வல்லியோ? கொழுந்தோ? அறியேன்,*
ஈட்டிய வெண்ணெய்உண்டான்* திருமூக்கு எனதுஆவியுள்ளே,*
மாட்டிய வல்விளக்கின்* சுடராய்நிற்கும் வாலியதே.
வாலியதுஓர் கனிகொல்* வினையாட்டியேன் வல்வினைகொல்,*
கோலம் திரள்பவளக்* கொழும்துண்டம்கொலோ? அறியேன்,*
நீல நெடுமுகில்போல்* திருமேனி அம்மான் தொண்டைவாய்,*
ஏலும் திசையுள்எல்லாம்* வந்து தோன்றும் என்இன்உயிர்க்கே.
இன்உயிர்க்கு ஏழையர்மேல்* வளையும் இணை நீலவிற்கொல்,*
மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,* மதனன்
தன்உயிர்த் தாதை* கண்ணபெருமான் புருவம்அவையே,*
என்உயிர் மேலனவாய்* அடுகின்றன என்றும் நின்றே
என்றும் நின்றேதிகழும்* செய்ய ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்,*
அன்றி என்ஆவிஅடும்* அணி முத்தம்கொலோ? அறியேன்,*
குன்றம் எடுத்தபிரான்* முறுவல் எனதுஆவிஅடும்*
ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்வுஇடமே
உய்விடம் ஏழையர்க்கும்* அசுரர்க்கும் அரக்கர்கட்கும்*
எவ்விடம் என்றுஇலங்கி* மகரம் தழைக்கும் தளிர்கொல்,*
பைவிடப் பாம்புஅணையான்* திருக்குண்டலக் காதுகளே?*
கைவிடல் ஒன்றும்இன்றி* அடுகின்றன காண்மின்களே
காண்மின்கள் அன்னையர்காள்*! என்று காட்டும் வகைஅறியேன்,*
நாள்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு நச்சுஇலைகொல்,*
சேண்மன்னு நால்தடம்தோள்* பெருமான்தன் திருநுதலே?,*
கோள்மன்னி ஆவிஅடும்* கொடியேன் உயிர் கோள்இழைத்தே
கோள்இழைத் தாமரையும்* கொடியும் பவளமும் வில்லும்,.*
கோள்இழைத் தண் முத்தமும்* தளிரும் குளிர்வான் பிறையும்,*
கோள்இழையாஉடைய* கொழும்சோதி வட்டம்கொல் கண்ணன்,
கோள்இழை வாள் முகமாய்* கொடியேன் உயிர் கொள்கின்றதே?
கொள்கின்ற கோள் இருளைச்* சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்,*
உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்?* அன்று மாயன் குழல்,*
விள்கின்ற பூந்தண்துழாய்* விரை நாற வந்து என் உயிரைக்,*
கள்கின்றவாறு அறியீர்* அன்னைமீர்! கழறாநிற்றிரே.
நிற்றி முற்றத்துள் என்று* நெரித்த கையர் ஆய்*
என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும்* வைதிர் சுடர்ச் சோதி மணிநிறம்ஆய்,*
முற்ற இம்மூவுலகும்* விரிகின்ற சுடர்முடிக்கே,*
ஒற்றுமை கொண்டது உள்ளம்* அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?
கட்கு அரிய பிரமன் சிவன்* இந்திரன் என்று இவர்க்கும்,*
கட்கு அரிய கண்ணனைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
உட்கு உடை ஆயிரத்துள்* இவையும் ஒரு பத்தும் வல்லார்,*
உட்கு உடை வானவரோடு* உடனாய் என்றும் மாயாரே. (2)
இருத்தும் வியந்து என்னைத்* தன் பொன்அடிக்கீழ் என்று*
அருத்தித்து எனைத்துஓர்* பலநாள் அழைத்தேற்கு*
பொருத்தம்உடை* வாமனன்தான் புகுந்து* என்தன்
கருத்தைஉற* வீற்றிருந்தான் கண்டுகொண்டே. (2)
இருந்தான் கண்டுகொண்டு* எனதுஏழை நெஞ்சுஆளும்*
திருந்தாத ஓர்ஐவரைத்* தேய்ந்துஅறமன்னி*
பெரும்தாள் களிற்றுக்கு* அருள்செய்த பெருமான்*
தரும்தான் அருள்தான்* இனியான் அறியேனே. (2)
அருள்தான் இனியான் அறியேன்* அவன்என்உள்*
இருள்தான்அற* வீற்றிருந்தான் இதுஅல்லால்*
பொருள் தான்எனில்* மூவுலகும் பொருளல்ல*
மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே.
மாயமயக்கு மயக்கான்* என்னை வஞ்சித்து*
ஆயன் அமரர்க்கு* அரிஏறு எனதுஅம்மான்*
தூய சுடர்ச்சோதி* தனதுஎன்னுள் வைத்தான்*
தேசம் திகழும்* தன்திருவருள் செய்தே.
திகழும்தன் திருவருள் செய்து* உலகத்தார்-
புகழும் புகழ்* தானதுகாட்டித் தந்து என்உள்-
திகழும்* மணிக்குன்றம்ஒன்றே ஒத்துநின்றான்*
புகழும் புகழ்* மற்றுஎனக்கும் ஓர்பொருளே?
பொருள்மற்றுஎனக்கும் ஓர்பொருள்தன்னில்* சீர்க்கத்
தருமேல்* பின்னையார்க்குஅவன் தன்னைக் கொடுக்கும்?*
கருமாணிக்கக் குன்றத்துத்* தாமரைபோல்*
திருமார்பு கால்கண்கை* செவ்வாய் உந்தியானே.
செவ்வாய்உந்தி* வெண்பல் சுடர்க்குழை தம்மோடு*
எவ்வாய்ச் சுடரும்* தம்மில்முன்வளாய்க் கொள்ள*
செவ்வாய் முறுவலோடு* எனதுஉள்ளத்துஇருந்த*
அவ்வாயன்றி* யான் அறியேன் மற்றுஅருளே.
அறியேன் மற்றருள்* என்னைஆளும் பிரானார்*
வெறிதே அருள்செய்வர்* செய்வார்கட்கு உகந்து*
சிறியேனுடைச்* சிந்தையுள் மூவுலகும்* தன்
நெறியா வயிற்றில்கொண்டு* நின்றொழிந்தாரே.
வயிற்றில் கொண்டு* நின்றொழிந்தாரும் எவரும்*
வயிற்றில் கொண்டு* நின்று ஒருமூவுலகும்* தம்
வயிற்றில் கொண்டு* நின்றவண்ணம் நின்றமாலை*
வயிற்றில் கொண்டு* மன்னவைத்தேன் மதியாலே.
வைத்தேன் மதியால்* எனதுஉள்ளத்துஅகத்தே*
எய்த்தே ஒழிவேன்அல்லேன்* என்றும் எப்போதும்*
மொய்த்துஏய்திரை* மோது தண்பாற் கடலுளால்*
பைத்துஏய் சுடர்ப்பாம்பணை* நம்பரனையே
சுடர்ப்பாம்பணை நம்பரனை* திருமாலை*
அடிச்சேர்வகை* வண்குருகூர்ச் சடகோபன்*
முடிப்பான் சொன்னஆயிரத்து* இப்பத்தும் சன்மம்
விடத்* தேய்ந்தற நோக்கும்* தன்கண்கள் சிவந்தே (2)
எம்கானல் அகம்கழிவாய்* இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்*
செங்கால மடநாராய்!* திருமூழிக்களத்து உறையும்*
கொங்குஆர் பூந்துழாய்முடி* எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்*
நும்கால்கள் என்தலைமேல்* கெழுமீரோ நுமரோடே. (2)
நுமரோடும் பிரியாதே* நீரும் நும் சேவலுமாய்*
அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*
எமராலும் பழிப்புண்டு* இங்கு என்தம்மால் இழிப்புண்டு*
தமரோடுஅங்கு உறைவார்க்குத்* தக்கிலமே! கேளீரே.
தக்கிலமே கேளீர்கள்* தடம்புனல்வாய் இரைதேரும்*
கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!* குளிர் மூழிக்களத்து உறையும்*
செக்கமலத்துஅலர் போலும்* கண்கைகால் செங்கனிவாய்*
அக்கமலத்துஇலைப்போலும்* திருமேனி அடிகளுக்கே.
திருமேனி அடிகளுக்குத்* தீவினையேன் விடுதூதாய்*
திருமூழிக்களம் என்னும்* செழுநகர்வாய் அணிமுகில்காள்*
திருமேனி அவட்குஅருளீர்* என்றக்கால் உம்மைத்தன்*
திருமேனி ஒளிஅகற்றி* தெளிவிசும்பு கடியுமே?
தெளிவிசும்பு கடிதுஓடி* தீவளைத்து மின்இலகும்*
ஒளிமுகில்காள்!* திருமூழிக்களத்துஉறையும் ஒண்சுடர்க்கு*
தெளிவிசும்பு திருநாடாத்* தீவினையேன் மனத்துஉறையும்*
துளிவார்கள்குழலார்க்கு* என்தூதுஉரைத்தல் செப்புமினே.
தூதுஉரைத்தல் செப்புமின்கள்* தூமொழிவாய் வண்டுஇனங்காள்*
போதுஇரைத்து மதுநுகரும்* பொழில் மூழிக்களத்துஉறையும்*
மாதரைத்தம் மார்வகத்தே* வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*
தூதுஉரைத்தல் செப்புதிரேல்* சுடர்வளையும் கலையுமே.
சுடர்வளையும் கலையும்கொண்டு* அருவினையேன் தோள்துறந்த*
படர்புகழான்* திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்*
சுடர்பவள வாயனைக்கண்டு* ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*
படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!* எனக்கு ஒன்று பணியீரே.
எனக்குஒன்று பணியீர்கள்* இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*
மனக்குஇன்பம் படமேவும்* வண்டுஇனங்காள்! தும்பிகாள்*
கனக்கொள் திண்மதிள்புடைசூழ்* திருமூழிக் களத்துஉறையும்*
புனக்கொள் காயாமேனிப்* பூந்துழாய் முடியார்க்கே.
பூந்துழாய் முடியார்க்கு* பொன்ஆழிக் கையாருக்கு*
ஏந்துநீர் இளம்குருகே!* திருமூழிக்களத்தாருக்கு*
ஏந்துபூண் முலைபயந்து* என்இணைமலர்க்கண் நீர்ததும்ப*
தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்* தகவுஅன்றுஎன்று உரையீரே
தகவுஅன்றுஎன்று உரையீர்கள்* தடம்புனல்வாய் இரைதேர்ந்து*
மிகஇன்பம் படமேவும்* மேல்நடைய அன்னங்காள்*
மிகமேனி மெலிவுஎய்தி* மேகலையும் ஈடுஅழிந்து* என்
அகமேனி ஒழியாமே* திருமூழிக் களத்தார்க்கே.
ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்* ஒண்சுடரை*
ஒழிவுஇல்லா அணிமழலைக்* கிளிமொழியாள் அலற்றியசொல்*
வழுஇல்லா வண்குருகூர்ச்* சடகோபன் வாய்ந்துஉரைத்த*
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்* நோய் அறுக்குமே (2)
செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்* திருமாலிருஞ்சோலை*
வஞ்சக் கள்வன் மாமாயன்* மாயக் கவியாய் வந்து* என்-
நெஞ்சும் உயிரும் உள்கலந்து* நின்றார் அறியா வண்ணம்* என்-
நெஞ்சும் உயிரும் அவைஉண்டு* தானே ஆகி நிறைந்தானே. (2)
தானே ஆகி நிறைந்து* எல்லாஉலகும் உயிரும் தானேஆய்*
தானே யான்என்பான்ஆகி* தன்னைத் தானே துதித்து* எனக்குத்-
தேனே பாலே கன்னலே அமுதே* திருமாலிருஞ்சோலைக்*
கோனே ஆகி நின்றொழிந்தான்* என்னை முற்றும் உயிர்உண்டே.
என்னை முற்றும் உயிர்உண்டு* என் மாயஆக்கை இதனுள்புக்கு*
என்னை முற்றும் தானேஆய்* நின்ற மாய அம்மான் சேர்*
தென்நன் திருமாலிருஞ்சோலைத்* திசைகை கூப்பிச் சேர்ந்தயான்*
இன்னும் போவேனே கொலோ!* என்கொல் அம்மான் திருஅருளே?
என்கொல் அம்மான் திருஅருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கு என் உடலம் கைவிடான்* ஞாலத்தூடே நடந்து உழக்கி*
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே.
நண்ணா அசுரர் நலிவுஎய்த* நல்ல அமரர் பொலிவுஎய்த*
எண்ணாதனகள் எண்ணும்* நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப*
பண்ணார் பாடலின் கவிகள்* யானாய்த் தன்னைத் தான்பாடி*
தென்னா என்னும் என்அம்மான்* திருமாலிருஞ்சோலையானே.
திருமாலிருஞ்சோலை யானேயாகி* செழு மூவுலகும்* தன்-
ஒருமா வயிற்றின்உள்ளே வைத்து* ஊழி ஊழி தலையளிக்கும்*
திருமால்என்னை ஆளும்மால்* சிவனும் பிரமனும்காணாது*
அருமால் எய்தி அடிபரவ* அருளை ஈந்த அம்மானே.
அருளை ஈ என்அம்மானே! என்னும்* முக்கண் அம்மானும்*
தெருள்கொள் பிரமன்அம்மானும்* தேவர் கோனும் தேவரும்*
இருள்கள் கடியும் முனிவரும்* ஏத்தும் அம்மான் திருமலை*
மருள்கள் கடியும் மணிமலை* திருமாலிருஞ்சோலை மலையே.
திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனதுஉடலே*
அருமாமாயத்து எனதுஉயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒருமா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2)
ஊழி முதல்வன் ஒருவனேஎன்னும்* ஒருவன் உலகுஎல்லாம்*
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து* காத்து கெடுத்துஉழலும்*
ஆழி வண்ணன் என்அம்மான்* அம்தண் திருமாலிருஞ்சோலை*
வாழி மனமே! கைவிடேல்* உடலும் உயிரும் மங்கஒட்டே.
மங்க ஒட்டு உன் மாமாயை* திருமாலிருஞ்சோலைமேய*
நங்கள் கோனே! யானேநீஆகி* என்னை அளித்தானே*
பொங்குஐம் புலனும் பொறிஐந்தும்* கருமேந்திரியம் ஐம்பூதம்*
இங்கு இவ்உயிர்ஏய் பிரகிருதி* மான்ஆங்காரம் மனங்களே.
மான்ஆங்காரம் மனம்கெட* ஐவர் வன்கையர் மங்க*
தான்ஆங்கார மாய்ப்புக்கு* தானே தானே ஆனானைத்*
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்* சடகோபன் சொல்ஆயிரத்துள்*
மான்ஆங்காரத்துஇவை பத்தும்* திருமாலிருஞ் சோலைமலைக்கே. (2)