பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
ஓடும் புள் ஏறி,* சூடும் தண் துழாய்,*
நீடு நின்றவை,* ஆடும் அம்மானே.
அம்மானாய்ப் பின்னும்,* எம்மாண்பும் ஆனான்,*
வெம் மா வாய் கீண்ட,* செம்மா கண்ணனே.
கண் ஆவான் என்றும்,* மண்ணோர் விண்ணோர்க்கு,*
தண் ஆர் வேங்கட,* விண்ணோர் வெற்பனே.
வெற்பை ஒன்று எடுத்து,* ஒற்கம் இன்றியே,*
நிற்கும் அம்மான் சீர்,* கற்பன் வைகலே.
வைகலும் வெண்ணெய்,* கைகலந்து உண்டான்,*
பொய் கலவாது,* என் மெய்கலந்தானே.
கலந்து என் ஆவி,* நலம்கொள்நாதன்,*
புலன் கொள் மாணாய்,* நிலம்கொண்டானே.
கொண்டான் ஏழ் விடை,* உண்டான் ஏழ்வையம்,*
தண் தாமம் செய்து,* என் எண்தானானானே.
ஆனான் ஆன் ஆயன்,* மீனோடேனமும்;*
தான் ஆனான் என்னில்,* தானாயசங்கே.
சங்கு சக்கரம்,* அங்கையில் கொண்டான்,*
எங்கும் தானாய,* நங்கள் நாதனே.
நாதன்ஞாலம்கொள்* பாதன், என்னம்மான்,*
ஓதம்போல்கிளர்,* வேதநீரனே.
நீர்புரைவண்ணன்,* சீர்சடகோபன்,*
நேர்தல் ஆயிரத்து,* ஓர்தல்இவையே.
அணைவது அரவு அணைமேல்* பூம்பாவை ஆகம்
புணர்வது,* இருவர் அவர் முதலும் தானே,*
இணைவன்* ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,*
புணைவன்* பிறவிக்கடல் நீந்துவார்க்கே.
நீந்தும் துயர்ப் பிறவி* உட்பட மற்று எவ் எவையும்,*
நீந்தும் துயர் இல்லா* வீடு முதல் ஆம்,*
பூந் தண் புனல் பொய்கை* யானை இடர் கடிந்த,*
பூந் தண் துழாய்* என் தனி நாயகன் புணர்ப்பே.
புணர்க்கும் அயன் ஆம்* அழிக்கும் அரன் ஆம்,*
புணர்த்த தன் உந்தியொடு* ஆகத்து மன்னி,*
புணர்த்த திருஆகித்* தன் மார்வில் தான்சேர்,*
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு* எங்கும் புலனே.
புலன் ஐந்து மேயும்* பொறி ஐந்தும் நீங்கி,*
நலம் அந்தம் இல்லது ஓர்* நாடு புகுவீர்,*
அலமந்து வீய* அசுரரைச் செற்றான்,*
பலம் முந்து சீரில்* படிமின் ஒவாதே.
ஓவாத் துயர்ப் பிறவி* உட்பட மற்று எவ் எவையும்,*
மூவாத் தனி முதலாய்* மூவுலகும் காவலோன்,*
மா ஆகி ஆமை ஆய்* மீன் ஆகி மானிடம் ஆம்,*
தேவாதி தேவ பெருமான்* என் தீர்த்தனே.
தீர்த்தன் உலகு அளந்த* சேவடிமேல் பூந்தாமம்,*
சேர்த்தி அவையே* சிவன் முடிமேல் தான் கண்டு,*
பார்த்தன் தெளிந்தொழிந்த* பைந்துழாயான் பெருமை,*
பேர்த்தும் ஒருவரால்* பேசக் கிடந்ததே?
கிடந்து இருந்து நின்று அளந்து* கேழல் ஆய் கீழ்ப் புக்கு
இடந்திடும்,* தன்னுள் கரக்கும் உமிழும்,*
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும்* பார் என்னும்
மடந்தையை,* மால் செய்கின்ற,* மால் ஆர் காண்பாரே?
காண்பார் ஆர்? எம் ஈசன்* கண்ணனை என்காணுமாறு,?*
ஊண் பேசில் எல்லா* உலகும் ஓர் துற்று ஆற்றா,*
சேணபாலவீடோ* உயிரோ மற்று எப் பொருட்கும்,*
ஏண் பாலும் சோரான்* பரந்து உளன் ஆம் எங்குமே.
எங்கும் உளன் கண்ணன் என்ற* மகனைக் காய்ந்து,*
இங்கு இல்லையால் என்று* இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்
சிங்கப் பிரான் பெருமை* ஆராயும் சீர்மைத்தே?
சீர்மை கொள் வீடு* சுவர்க்கம் நரகு ஈறா,*
ஈர்மை கொள் தேவர்* நடுவா மற்று எப் பொருட்கும்,*
வேர் முதல் ஆய் வித்து ஆய்* பரந்து தனி நின்ற,*
கார் முகில் போல் வண்ணன்* என் கண்ணனை நான் கண்டேனே.
கண் தலங்கள் செய்ய* கரு மேனி அம்மானை,*
வண்டு அலம்பும் சோலை* வழுதி வள நாடன்,*
பண் தலையில் சொன்ன தமிழ்* ஆயிரத்து இப் பத்தும் வலார்,*
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்* எம் மா வீடே.
முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்* சீர்
அடியானே,* ஆழ் கடலைக் கடைந்தாய்!* புள் ஊர்
கொடியானே,* கொண்டல் வண்ணா!* அண்டத்து உம்பரில்
நெடியானே!,* என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)
நெஞ்சமே! நீள் நகர் ஆக* இருந்த என்
தஞ்சனே,* தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே,* ஞாலம் கொள்வான்* குறள் ஆகிய
வஞ்சனே,* என்னும் எப்போதும்,* என் வாசகமே
வாசகமே ஏத்த அருள் செய்யும்* வானவர் தம்-
நாயகனே,* நாள் இளம் திங்களைக்* கோள் விடுத்து,*
வேய் அகம் பால் வெண்ணெய்* தொடு உண்ட ஆன் ஆயர்-
தாயவனே,* என்று தடவும் என் கைகளே.
கைகளால் ஆரத்* தொழுது தொழுது உன்னை,*
வைகலும் மாத்திரைப்* போதும் ஓர் வீடு இன்றி,*
பை கொள் பாம்பு ஏறி* உறை பரனே,* உன்னை
மெய்கொள்ளக் காண( விரும்பும் என் கண்களே.
கண்களால் காண* வருங்கொல்? என்று ஆசையால்,*
மண் கொண்ட வாமனன்* ஏற மகிழ்ந்து செல்,*
பண் கொண்ட புள்ளின்* சிறகு ஒலி பாவித்து,*
திண் கொள்ள ஓர்க்கும்* கிடந்து என் செவிகளே.
செவிகளால் ஆர* நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே* காலப் பண் தேன்* உறைப்பத் துற்று,*
புவியின்மேல்* பொன் நெடும் சக்கரத்து உன்னையே.*
அவிவு இன்றி ஆதரிக்கும்* எனது ஆவியே.
ஆவியே! ஆர் அமுதே!* என்னை ஆளுடைத்,*
தூவி அம் புள் உடையாய்!* சுடர் நேமியாய்,*
பாவியேன் நெஞ்சம்* புலம்பப் பலகாலும்,*
கூவியும் காணப்பெறேன்* உன கோலமே.
கோலமே! தாமரைக் கண்ணது ஓர்* அஞ்சன
நீலமே,* நின்று எனது ஆவியை* ஈர்கின்ற
சீலமே,* சென்று செல்லாதன* முன் நிலாம்
காலமே,* உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?
கொள்வன் நான் மாவலி* மூவடி தா என்ற
கள்வனே,* கஞ்சனை வஞ்சித்து* வாணனை
உள் வன்மை தீர,* ஓர் ஆயிரம் தோள் துணித்த*
புள் வல்லாய்,* உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?
பொருந்திய மா மருதின் இடை போய* எம்
பெருந்தகாய்,* உன் கழல்* காணிய பேதுற்று,*
வருந்திநான்* வாசகமாலை கொண்டு* உன்னையே
இருந்து இருந்து* எத்தனை காலம் புலம்புவனே?
புலம்பு சீர்ப்* பூமி அளந்த பெருமானை,*
நலம்கொள்சீர்* நன் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்து,
இலங்குவான்* யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)
ஏறு ஆளும் இறையோனும்* திசைமுகனும் திருமகளும்,*
கூறு ஆளும் தனி உடம்பன்* குலம் குலமா அசுரர்களை,*
நீறு ஆகும்படியாக* நிருமித்து படை தொட்ட,*
மாறாளன் கவராத* மணி மாமை குறைவு இலமே. (2)
மணி மாமை குறைவு இல்லா* மலர்மாதர் உறை மார்பன்,*
அணி மானத் தட வரைத்தோள்* அடல் ஆழித் தடக்கையன்,*
பணி மானம் பிழையாமே* அடியேனைப் பணிகொண்ட,*
மணிமாயன் கவராத* மட நெஞ்சால் குறைவு இலமே.
மட நெஞ்சால் குறைவு இல்லா* மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி,*
விட நஞ்ச முலை சுவைத்த* மிகு ஞானச் சிறு குழவி,*
பட நாகத்து அணைக் கிடந்த* பரு வரைத் தோள் பரம்புருடன்,*
நெடுமாயன் கவராத* நிறையினால் குறைவு இலமே.
நிறையினால் குறைவு இல்லா* நெடும் பணைத் தோள் மடப் பின்னை,*
பொறையினால் முலை அணைவான்* பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த,*
கறையினார் துவர் உடுக்கை* கடை ஆவின் கழி கோல் கைச்,*
சறையினார் கவராத* தளிர் நிறத்தால் குறைவு இலமே
தளிர் நிறத்தால் குறைவு இல்லாத்* தனிச் சிறையில் விளப்பு உற்ற,*
கிளிமொழியாள் காரணமாக்* கிளர் அரக்கன் நகர் எரித்த,*
களி மலர்த் துழாய் அலங்கல்* கமழ் முடியன் கடல் ஞாலத்து,*
அளிமிக்கான் கவராத,* அறிவினால் குறைவு இலமே.
அறிவினால் குறைவு இல்லா* அகல் ஞாலத்தவர் அறிய,*
நெறி எல்லாம் எடுத்து உரைத்த* நிறை ஞானத்து ஒருமூர்த்தி,*
குறிய மாண் உரு ஆகி* கொடுங் கோளால் நிலம் கொண்ட,*
கிறி அம்மான் கவராத* கிளர் ஒளியால் குறைவு இலமே.
கிளர் ஒளியால் குறைவு இல்லா* அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,*
கிளர் ஒளிய இரணியனது* அகல் மார்பம் கிழித்து உகந்த,*
வளர் ஒளிய கனல் ஆழி* வலம்புரியன் மணி நீல,*
வளர் ஒளியான் கவராத* வரி வளையால் குறைவு இலமே.
வரி வளையால் குறைவு இல்லாப்* பெரு முழக்கால் அடங்காரை,*
எரி அழலம் புக ஊதி* இரு நிலம் முன் துயர் தவிர்த்த,*
தெரிவு அரிய சிவன் பிரமன்* அமரர் கோன் பணிந்து ஏத்தும்,*
விரி புகழான் கவராத* மேகலையால் குறைவு இலமே.
மேகலையால் குறைவு இல்லா* மெலிவு உற்ற அகல் அல்குல்,*
போகமகள் புகழ்த் தந்தை* விறல் வாணன் புயம் துணித்து,*
நாகமிசைத் துயில்வான்போல்* உலகு எல்லாம் நன்கு ஒடுங்க,*
யோகு அணைவான் கவராத* உடம்பினால் குறைவு இலமே.
உடம்பினால் குறைவு இல்லா* உயிர் பிரிந்த மலைத்துண்டம்,*
கிடந்தனபோல் துணி பலவா* அசுரர் குழாம் துணித்து உகந்த,*
தடம் புனல சடைமுடியன்* தனி ஒருகூறு அமர்ந்து உறையும்,*
உடம்பு உடையான் கவராத* உயிரினால் குறைவு இலமே.
உயிரினால் குறைவு இல்லா* உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,*
தயிர் வெண்ணெய் உண்டானைத்,* தடம் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசைமாலை* ஆயிரத்துள் இப்பத்தால்*
வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2)
ஆரா அமுதே! அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்* செழு நீர்த் திருக்குடந்தை*
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!* (2)
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!* என்னை ஆள்வானே*
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்* ஆவாய் எழில் ஏறே*
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்* திருக்குடந்தை*
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)
என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
உன்னால் அல்லால் யாவராலும்* ஒன்றும் குறை வேண்டேன்*
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!* அடியேன் அரு வாழ்நாள்*
செல் நாள் எந் நாள்? அந்நாள்* உன தாள் பிடித்தே செலக்காணே*
செலக் காண்கிற்பார் காணும் அளவும்* செல்லும் கீர்த்தியாய்*
உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய* ஒரு மூர்த்தி*
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!* உன்னைக் காண்பான் நான்-
அலப்பு ஆய்* ஆகாசத்தை நோக்கி* அழுவன் தொழுவனே*.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்* பாடி அலற்றுவன்*
தழு வல்வினையால் பக்கம் நோக்கி* நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!* செந்தாமரைக் கண்ணா!*
தொழுவனேனை உன தாள் சேரும்* வகையே சூழ்கண்டாய்*.
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து* உன் அடிசேரும்-
ஊழ் கண்டிருந்தே* தூராக்குழி தூர்த்து* எனை நாள் அகன்று இருப்பன்?*
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!* வானோர் கோமானே*
யாழின் இசையே! அமுதே!* அறிவின் பயனே! அரிஏறே!*.
அரிஏறே! என் அம் பொன் சுடரே!* செங்கண் கருமுகிலே!*
எரி ஏய்! பவளக் குன்றே!* நால் தோள் எந்தாய் உனது அருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்* குடந்தைத் திருமாலே*
தரியேன் இனி உன் சரணம் தந்து* என் சன்மம் களையாயே*.
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்* களைகண் மற்று இலேன்*
வளை வாய் நேமிப் படையாய்!* குடந்தைக் கிடந்த மா மாயா*
தளரா உடலம் எனது ஆவி* சரிந்து போம்போது*
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்* போத இசை நீயே*.
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்* இருத்தும் அம்மானே*
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா* ஆதிப் பெரு மூர்த்தி*
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்* திருக்குடந்தை*
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!* காண வாராயே*.
வாரா அருவாய் வரும் என் மாயா!* மாயா மூர்த்தியாய்*
ஆரா அமுதாய் அடியேன் ஆவி* அகமே தித்திப்பாய்*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!* திருக்குடந்தை-
ஊராய்!* உனக்கு ஆள் பட்டும்* அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு* அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)
பொன் உலகு ஆளீரோ?* புவனி முழுது ஆளீரோ?,*
நல் நலப் புள்ளினங்காள்!* வினையாட்டியேன் நான் இரந்தேன்,*
முன் உலகங்கள் எல்லாம் படைத்த* முகில்வண்ணன் கண்ணன்,*
என் நலம் கொண்ட பிரான் தனக்கு* என் நிலைமை உரைத்தே?.
மையமர் வாள் நெடும்கண்* மங்கைமார் முன்பு என் கை இருந்து,*
நெய்யமர் இன் அடிசில்* நிச்சல் பாலொடு மேவீரோ,*
கையமர் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
மெய்யமர் காதல் சொல்லி* கிளிகாள்! விரைந்து ஓடிவந்தே?
ஓடிவந்து என் குழல்மேல்* ஒளிமாமலர் ஊதீரோ,*
கூடிய வண்டினங்காள்!* குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்*
ஆடிய மா நெடும் தேர்ப்படை* நீறு எழச் செற்ற பிரான்,*
சூடிய தண் துளவம் உண்ட* தூமது வாய்கள் கொண்டே?
தூமதுவாய்கள் கொண்டுவந்து* என் முல்லைகள்மேல் தும்பிகாள்,*
பூ மது உண்ணச் செல்லில்* வினையேனைப் பொய்செய்து அகன்ற,*
மாமதுவார் தண்துழாய்முடி* வானவர் கோனைக் கண்டு,*
யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்* கண்டீர் நுங்கட்கே.
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின்* யான் வளர்த்த கிளிகாள்,*
வெம் கண் புள் ஊர்ந்து வந்து* வினையேனை நெஞ்சம் கவர்ந்த*
செங்கண் கருமுகிலை* செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை,*
எங்குச் சென்றாகிலும் கண்டு* இதுவோ தக்கவாறு என்மினே.
என் மின்னு நூல் மார்வன்* என் கரும் பெருமான் என் கண்ணன்,*
தன் மன்னு நீள் கழல்மேல்* தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்,*
கல்மின்கள் என்று உம்மையான்* கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,*
செல்மின்கள் தீவினையேன்* வளர்த்த சிறு பூவைகளே!
பூவைகள் போல் நிறத்தன்* புண்டரீகங்கள் போலும் கண்ணன்,*
யாவையும் யாவரும் ஆய்* நின்ற மாயன் என் ஆழிப் பிரான்,*
மாவை வல் வாய் பிளந்த* மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி,*
பாவைகள்! தீர்க்கிற்றிரே* வினையாட்டியேன் பாசறவே.
பாசறவு எய்தி இன்னே* வினையேன் எனை ஊழி நைவேன்?*
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே!* அருள்செய்து ஒருநாள்,*
மாசு அறு நீலச்சுடர்முடி* வானவர் கோனைக் கண்டு,*
ஏசு அறும் நும்மை அல்லால்* மறுநோக்கு இலள் பேர்த்துமற்றே.
பேர்த்து மற்று ஓர் களைகண்* வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்,*
நீர்த் திரைமேல் உலவி* இரை தேரும் புதா இனங்காள்*
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன்* விண்ணவர் கோனைக் கண்டு,*
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர்* வைகல் வந்திருந்தே.
வந்திருந்து உம்முடைய* மணிச் சேவலும் நீரும் எல்லாம்,*
அந்தரம் ஒன்றும் இன்றி* அலர்மேல் அசையும் அன்னங்காள்,*
என் திரு மார்வற்கு என்னை* இன்னவாறு இவள் காண்மின் என்று,*
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர்* மறுமாற்றங்களே.
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு* மதுசூத பிரான் அடிமேல்,*
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தோற்றங்கள் ஆயிரத்துள்* இவையும் ஒருபத்தும் வல்லார்*
ஊற்றின்கண் நுண் மணல்போல்* உருகாநிற்பர் நீராயே.
மாயா! வாமனனே!* மதுசூதா நீ அருளாய்,*
தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்* விசும்பு ஆய் கால் ஆய்,*
தாயாய் தந்தையாய்* மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,*
நீயாய் நீ நின்றவாறு* இவை என்ன நியாயங்களே! (2)
அங்கண் மலர்த் தண் துழாய்முடி* அச்சுதனே! அருளாய்,*
திங்களும் ஞாயிறும் ஆய்* செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்,*
பொங்கு பொழி மழை ஆய்* புகழ் ஆய் பழி ஆய் பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றமும் ஆம்* இவை என்ன விசித்திரமே!
சித்திரத் தேர் வலவா!* திருச் சக்கரத்தாய்! அருளாய்,*
எத்தனை ஓர் உகமும்* அவை ஆய் அவற்றுள் இயலும்,*
ஒத்த ஓண் பல் பொருள்கள்* உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*
வித்தகத்தாய் நிற்றி நீ* இவை என்ன விடமங்களே!
கள் அவிழ் தாமரைக்கண்* கண்ணனே! எனக்கு ஒன்று அருளாய்,*
உள்ளதும் இல்லதும் ஆய்* உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*
வெள்ளத் தடம் கடலுள்* விட நாகு அணைமேல் மருவி,*
உள்ளப் பல் யோகு செய்தி* இவை என்ன உபாயங்களே!
பாசங்கள் நீக்கி* என்னை உனக்கே அறக் கொண்டிட்டு,* நீ
வாச மலர்த் தண் துழாய்முடி* மாயவனே! அருளாய்,*
காயமும் சீவனும் ஆய்* கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும்நீ,*
மாயங்கள் செய்துவைத்தி* இவை என்ன மயக்குக்களே!
மயக்கா! வாமனனே!* மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,*
அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய்* அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்,*
வியப்பு ஆய் வென்றிகள் ஆய்* வினை ஆய் பயன் ஆய் பின்னும்நீ,*
துயக்கு ஆய் நீ நின்றவாறு* இவை என்ன துயரங்களே!
துயரங்கள் செய்யும் கண்ணா!* சுடர் நீள் முடியாய் அருளாய்,*
துயரம் செய் மானங்கள் ஆய்* மதன் ஆகி உகவைகள் ஆய்,*
துயரம் செய் காமங்கள் ஆய்* துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,*
துயரங்கள் செய்துவைத்தி* இவை என்ன சுண்டாயங்களே.
என்ன சுண்டாயங்களால்* நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா,*
இன்னது ஓர் தன்மையை என்று* உன்னை யாவர்க்கும் தேற்றரியை,*
முன்னிய மூவுலகும்* அவை ஆய் அவற்றைப் படைத்து,*
பின்னும் உள்ளாய்! புறத்தாய்*! இவை என்ன இயற்கைகளே!
என்ன இயற்கைகளால்* எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?,*
துன்னு கரசரணம் முதலாக* எல்லா உறுப்பும்,*
உன்னு சுவை ஒளி* ஊறு ஒலி நாற்றம் முற்றும்நீயே,*
உன்னை உணரவுறில்* உலப்பு இல்லை நுணுக்கங்களே.
இல்லை நுணுக்கங்களே* இதனில் பிறிது என்னும் வண்ணம்*
தொல்லை நல் நூலில் சொன்ன* உருவும் அருவும் நீயே:*
அல்லித் துழாய் அலங்கல்* அணி மார்ப என் அச்சுதனே,*
வல்லது ஓர் வண்ணம் சொன்னால்* அதுவே உனக்கு ஆம்வண்ணமே.
ஆம் வண்ணம் இன்னது ஒன்று* என்று அறிவது அரிய அரியை,*
ஆம் வண்ணத்தால்* குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த*
ஆம் வண்ண ஒண் தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்,*
ஆம் வண்ணத்தால் உரைப்பார்* அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)
கண்கள் சிவந்து பெரியவாய்* வாயும் சிவந்து கனிந்து* உள்ளே
வெண்பல் இலகு சுடர்இலகு* விலகு மகர குண்டலத்தன்*
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்* நான்கு தோளன் குனிசார்ங்கன்*
ஒண் சங்கதை வாள்ஆழியான்* ஒருவன் அடியேன் உள்ளானே. (2)
அடியேன்உள்ளான் உடல்உள்ளான்* அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்*
படியேஇது என்றுஉரைக்கலாம் படியன்* அல்லன் பரம்பரன்*
கடிசேர் நாற்றத்துள்ஆலை* இன்பத் துன்பக் கழிநேர்மை*
ஒடியா இன்பப் பெருமையோன்* உணர்வில்உம்பர் ஒருவனே
உணர்வில்உம்பர் ஒருவனை* அவனது அருளால் உறற்பொருட்டு* என்
உணர்வின்உள்ளே இருத்தினேன்* அதுவும் அவனது இன்அருளே*
உணர்வும் உயிரும் உடம்பும்* மற்று உலப்பிலனவும் பழுதேயாம்*
உணர்வைப் பெறஊர்ந்துறஏறி* யானும் தானாய் ஒழிந்தானே.
யானும் தானாய் ஒழிந்தானை* யாதும் எவர்க்கும் முன்னோனை*
தானும் சிவனும் பிரமனும்ஆகிப்* பணைத்த தனிமுதலை*
தேனும் பாலும் கன்னலும்* அமுதும்ஆகித் தித்தித்து* என்
ஊனில் உயிரில் உணர்வினில்* நின்ற ஒன்றை உணர்ந்தேனே
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு* அதனுள் நேர்மை அதுஇதுஎன்று*
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது* உணர்ந்தும் மேலும் காண்புஅரிது*
சென்று சென்று பரம்பரமாய்* யாதும்இன்றித் தேய்ந்துஅற்று*
நன்று தீதுஎன்று அறிவரிதாய்* நன்றாய் ஞானம் கடந்ததே
நன்றாய் ஞானம் கடந்துபோய்* நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து*
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்* உலப்புஇல் அதனை உணர்ந்துஉணர்ந்து*
சென்றுஆங்கு இன்பத் துன்பங்கள்* செற்றுக் களைந்து பசைஅற்றால்*
அன்றே அப்போதேவீடு* அதுவே வீடு வீடாமே.
அதுவே வீடு வீடு பேற்று* இன்பம்தானும் அதுதேறி*
எதுவே தானும் பற்றுஇன்றி* யாதும் இலிகள்ஆகிற்கில்*
அதுவே வீடு வீடு பேற்று* இன்பம்தானும் அதுதேறாது*
'எதுவே வீடு ஏது இன்பம்?' என்று* எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே.
எய்த்தார் எய்த்தார் எய்த்தார்என்று* இல்லத்தாரும் புறத்தாரும்-
மொய்த்து* ஆங்கு அறிமுயங்க* தாம் போகும் போது* உன்மத்தர்போல்
பித்தேஏறி அநுராகம் பொழியும்போது* எம் பெம்மானோடு-
ஒத்தேசென்று* அங்குஉள்ளம்கூடக்* கூடிற்றாகில் நல்உறைப்பே.
கூடிற்றாகில் நல்உறைப்பு* கூடாமையைக் கூடினால்*
ஆடல் பறவை உயர்கொடி* எம்மாயன் ஆவதது அதுவே*
வீடைப் பண்ணி ஒருபரிசே* எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்*
ஓடித் திரியும் யோகிகளும்* உளரும்இல்லை அல்லரே.
உளரும்இல்லை அல்லராய்* உளராய்இல்லை ஆகியே*
உளர்எம்ஒருவர் அவர்வந்து* என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*
வளரும் பிறையும் தேய்பிறையும்போல* அசைவும் ஆக்கமும்*
வளரும் சுடரும் இருளும்போல்* தெருளும் மருளும் மாய்த்தோமே.
தெருளும் மருளும் மாய்த்து* தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்*
அருளிஇருத்தும் அம்மானாம்* அயனாம் சிவனாம்* திருமாலால்
அருளப்பட்ட சடகோபன்* ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்*
அருளி அடிக்கீழ் இருத்தும்* நம்அண்ணல் கருமாணிக்கமே (2)
அறுக்கும் வினையாயின* ஆகத்து அவனை*
நிறுத்தும் மனத்துஒன்றிய* சிந்தையினார்க்கு*
வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
குறுக்கும்வகை உண்டுகொலோ* கொடியேற்கே? (2)
கொடிஏர்இடைக்* கோகனகத்தவள் கேள்வன்*
வடிவேல் தடம்கண்* மடப்பின்னை மணாளன்*
நெடியான்உறை சோலைகள்சூழ்* திருநாவாய்*
அடியேன் அணுகப்பெறும்நாள்* எவைகொலோ!
எவைகொல் அணுகப் பெறும்நாள்?'* என்று எப்போதும்*
கவையில் மனம்இன்றி* கண்ணீர்கள் கலுழ்வன்*
நவைஇல் திருநாரணன்சேர்* திருநாவாய்*
அவையுள் புகலாவதுஓர்* நாள் அறியேனே
நாளேல் அறியேன்* எனக்குஉள்ளன* நானும்
மீளா அடிமைப்* பணி செய்யப் புகுந்தேன்*
நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வாள்ஏய் தடம்கண்* மடப்பின்னை மணாளா!
மணாளன் மலர்மங்கைக்கும்* மண் மடந்தைக்கும்*
கண்ணாளன் உலகத்துஉயிர்* தேவர்கட்குஎல்லாம்*
விண்ணாளன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
கண்ஆரக் களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்டே?
கண்டே களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்கள்*
தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்* துரிசுஇன்றி*
வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
கொண்டே உறைகின்ற* எம்கோவலர்கோவே!
கோவாகிய* மாவலியை நிலம்கொண்டாய்*
தேவாசுரம் செற்றவனே!* திருமாலே*
நாவாய்உறைகின்ற* என்நாரணநம்பீ*
'ஆஆ அடியான்* இவன் என்று அருளாயே.
அருளாது ஒழிவாய்* அருள்செய்து* அடியேனைப்
பொருளாக்கி* உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*
மருளேஇன்றி* உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்*
தெருளேதரு* தென்திருநாவாய் என்தேவே!
தேவர் முனிவர்க்குஎன்றும்* காண்டற்குஅரியன்*
மூவர் முதல்வன்* ஒருமூவுலகுஆளி*
தேவன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
யாவர் அணுகப்பெறுவார்* இனிஅந்தோ!
அந்தோ! அணுகப்பெறும்நாள்* என்றுஎப்போதும்*
சிந்தை கலங்கித்* திருமால் என்றுஅழைப்பன்*
கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வந்தே உறைகின்ற* எம்மா மணிவண்ணா!.
வண்ணம் மணிமாட* நல்நாவாய் உள்ளானைத்*
திண்ணம் மதிள்* தென்குருகூர்ச் சடகோபன்*
பண்ணார் தமிழ்* ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*
மண்ணாண்டு* மணம்கமழ்வர் மல்லிகையே. (2)
திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால்வந்து* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
குருமா மணிஉந்து புனல்* பொன்னித் தென்பால்*
திருமால்சென்று சேர்விடம்* தென் திருப்பேரே. (2)
பேரே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
பேரேன்என்று* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
கார்ஏழ் கடல்ஏழ்* மலைஏழ் உலகு உண்டும்*
ஆராவயிற்றானை* அடங்கப் பிடித்தேனே.
பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பிணிசாரேன்*
மடித்தேன் மனைவாழ்க்கையுள்* நிற்பதுஓர் மாயையை*
கொடிக் கோபுரமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
அடிச்சேர்வது எனக்கு* எளிதுஆயின வாறே.
எளிதாயினவாறுஎன்று* என்கண்கள் களிப்பக்*
களிதாகிய சிந்தையனாய்க்* களிக்கின்றேன்*
கிளிதாவிய சோலைகள்சூழ்* திருப்பேரான்*
தெளிதாகிய* சேண்விசும்பு தருவானே.
வானே தருவான்* எனக்காய் என்னோடுஒட்டி*
ஊன்ஏய் குரம்பை* இதனுள் புகுந்து* இன்று-
தானே தடுமாற்ற* வினைகள் தவிர்த்தான்*
தேனேய் பொழில்* தென்திருப்பேர் நகரானே.
திருப்பேர் நகரான்* திருமாலிருஞ்சோலைப்*
பொருப்பே உறைகின்றபிரான்* இன்றுவந்து*
இருப்பேன் என்று* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
விருப்பே பெற்று* அமுதம்உண்டு களித்தேனே.
உண்டு களித்தேற்கு* உம்பர்என் குறை* மேலைத்-
தொண்டு உகளித்து* அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*
வண்டு களிக்கும் பொழில்சூழ்* திருப்பேரான்*
கண்டு களிப்ப* கண்ணுள்நின்று அகலானே.
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின்கண் பெரியன்*
எண்ணில்நுண் பொருள்* ஏழ்இசையின் சுவைதானே*
வண்ணநல் மணிமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என்மனத்துப்* புகுந்தான் செறிந்துஇன்றே.
இன்று என்னைப் பொருளாக்கி* தன்னை என்னுள் வைத்தான்*
அன்று என்னைப் புறம்போகப்* புணர்த்தது என் செய்வான்?*
குன்றுஎன்னத் திகழ்மாடங்கள்சூழ்* திருப்பேரான்*
ஒன்று எனக்குஅருள்செய்ய* உணர்த்தல்உற்றேனே.
உற்றேன் உகந்து பணிசெய்து* உன்பாதம்-
பெற்றேன்* ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்சூழ்* திருப்பேராற்கு*
அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே. (2)
நில்லா அல்லல்* நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்*
நல்லார் பலர்வாழ்* குருகூர்ச் சடகோபன்*
சொல்லார் தமிழ்* ஆயிரத்துள் இவைபத்தும்-
வல்லார்* தொண்டர்ஆள்வது* சூழ்பொன் விசும்பே. (2)