பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    உயர்வு அற உயர் நலம்*  உடையவன் எவன் அவன்* 
    மயர்வு அற மதி நலம்*  அருளினன் எவன் அவன்*

    அயர்வு அறும் அமரர்கள்*  அதிபதி எவன் அவன்* 
    துயர் அறு சுடர் அடி*  தொழுது எழு என் மனனே! (2)   


    மனன்அகம் மலம் அற*  மலர்மிசை எழுதரும்* 
    மனன் உணர்வு அளவு இலன்,*  பொறி உணர்வு அவை இலன்* 

    இனன் உணர், முழு நலம்,*  எதிர் நிகழ் கழிவினும்* 
    இனன் இலன் எனன் உயிர்,*  மிகுநரை இலனே. 


    இலன் அது உடையன் இது*  என நினைவு அரியவன்* 
    நிலனிடை விசும்பிடை*  உருவினன் அருவினன்*

    புலனொடு புலன் அலன்,*  ஒழிவு இலன் பரந்த*  அந்- 
    நலன் உடை ஒருவனை*  நணுகினம் நாமே.*


    நாம் அவன் இவன் உவன்,*  அவள் இவள் உவள் எவள்* 
    தாம் அவர் இவர் உவர்,*  அது இது உது எது*

    வீமவை இவை உவை,*  அவை நலம், தீங்கு அவை* 
    ஆமவை ஆயவை ஆய்*  நின்ற அவரே.*


    அவரவர் தமதமது*  அறிவு அறி வகைவகை* 
    அவரவர் இறையவர்*  என அடி அடைவர்கள்*

    அவரவர் இறையவர்*  குறைவு இலர் இறையவர்* 
    அவரவர் விதிவழி*  அடைய நின்றனரே.  


    நின்றனர் இருந்தனர்*  கிடந்தனர் திரிந்தனர்* 
    நின்றிலர் இருந்திலர்*  கிடந்திலர் திரிந்திலர்* 

    என்றும் ஓர் இயல்வினர்*  என நினைவு அரியவர்* 
    என்றும் ஓர் இயல்வொடு*  நின்ற எம் திடரே.


    திட விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசைப்*
    படர் பொருள் முழுவதும் ஆய்*  அவைஅவைதொறும்* 

    உடல்மிசை உயிர் எனக்*  கரந்து எங்கும் பரந்துளன்* 
    சுடர் மிகு சுருதியுள்*  இவை உண்ட சுரனே.     


    சுரர் அறிவு அரு நிலை*  விண் முதல் முழுவதும்* 
    வரன் முதலாய் அவை*  முழுது உண்ட பரபரன்*

    புரம் ஒரு மூன்று எரித்து*  அமரர்க்கும் அறிவியந்து* 
    அரன் அயன் என*  உலகு அழித்து அமைத்து உளனே.


    உளன் எனில் உளன் அவன்*  உருவம் இவ் உருவுகள்* 
    உளன் அலன் எனில், அவன்*  அருவம் இவ் அருவுகள்* 

    உளன் என இலன் என*  இவை குணம் உடைமையில்* 
    உளன் இரு தகைமையொடு*  ஒழிவு இலன் பரந்தே.


    பரந்த தண் பரவையுள்*  நீர்தொறும் பரந்துளன்* 
    பரந்த அண்டம் இது என:*  நிலம் விசும்பு ஒழிவு அறக்*

    கரந்த சில் இடந்தொறும்*  இடம் திகழ் பொருள்தொறும்* 
    கரந்து எங்கும் பரந்துளன்:*  இவை உண்ட கரனே.   


    கர விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசை* 
    வரன் நவில் திறல் வலி*  அளி பொறை ஆய்நின்ற*

    பரன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொல்* 
    நிரல் நிறை ஆயிரத்து*  இவை பத்தும் வீடே. (2)


    வாயும் திரை உகளும்*  கானல் மடநாராய்,* 
    ஆயும் அமர் உலகும்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,* 

    நோயும் பயலைமையும்*  மீது ஊர எம்மேபோல்,* 
    நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.  


    கோள் பட்ட சிந்தையையாய்க்*  கூர்வாய அன்றிலே,* 
    சேண் பட்டயாமங்கள்*  சேராது இரங்குதியால்,*

    ஆள் பட்ட எம்மேபோல்,*  நீயும் அரவு அணையான்,* 
    தாள் பட்ட தண் துழாய்த்*  தாமம் காமுற்றாயே.   


    காமுற்ற கையறவோடு*  எல்லே இராப்பகல்,* 
    நீ முற்றக் கண்துயிலாய்*  நெஞ்சு உருகி ஏங்குதியால்,*

    தீ முற்றத் தென் இலங்கை*  ஊட்டினான் தாள் நயந்த,* 
    யாம் உற்றது உற்றாயோ?*  வாழி கனை கடலே


    கடலும் மலையும்*  விசும்பும் துழாய் எம்போல்,* 
    சுடர் கொள் இராப்பகல்*  துஞ்சாயால் தண் வாடாய்,* 

    அடல் கொள் படை ஆழி*  அம்மானைக் காண்பான் நீ,* 
    உடலம் நோய் உற்றாயோ*  ஊழிதோறு ஊழியே.


    ஊழிதோறு ஊழி*  உலகுக்கு நீர்கொண்டு,* 
    தோழியரும் யாமும் போல்*  நீராய் நெகிழ்கின்ற,*

    வாழிய வானமே*  நீயும் மதுசூதன்,* 
    பாழிமையில் பட்டு அவன்கண்*  பாசத்தால் நைவாயே.


    நைவாய எம்மேபோல்*  நாள் மதியே நீ இந் நாள்,* 
    மை வான் இருள் அகற்றாய்*  மாழாந்து தேம்புதியால்,*

    ஐ வாய் அரவு அணைமேல்*  ஆழிப் பெருமானார்,* 
    மெய் வாசகம் கேட்டு*  உன் மெய்ந்நீர்மை தோற்றாயே


    தோற்றோம் மட நெஞ்சம்*  எம் பெருமான் நாரணற்கு*  எம் 
    ஆற்றாமை சொல்லி*  அழுவோமை நீநடுவே,*

    வேற்றோர் வகையில்*  கொடிதாய் எனை ஊழி,* 
    மாற்றாண்மை நிற்றியோ*  வாழி கனை இருளே.


    இருளின் திணி வண்ணம்*  மாநீர்க்கழியே போய்,* 
    மருளுற்று இராப்பகல்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*

    உருளும் சகடம்*  உதைத்த பெருமானார்,* 
    அருளின் பெரு நசையால்*  ஆழாந்து நொந்தாயே.


    நொந்து ஆராக் காதல் நோய்*  மெல் ஆவி உள் உலர்த்த,* 
    நந்தா விளக்கமே,*  நீயும் அளியத்தாய்,*

    செந்தாமரைத் தடங்கண்*  செங்கனி வாய் எம் பெருமான்,* 
    அம் தாமம் தண் துழாய்*  ஆசையால் வேவாயே.  


    வேவு ஆரா வேட்கை நோய்*  மெல் ஆவி உள் உலர்த்த,* 
    ஓவாது இராப்பகல்*  உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*

    மா வாய் பிளந்து*  மருதிடை போய் மண் அளந்த,* 
    மூவா முதல்வா*  இனி எம்மைச் சோரேலே.


    சோராத எப் பொருட்கும்*  ஆதியாம் சோதிக்கே,* 
    ஆராத காதல்*  குருகூர்ச் சடகோபன்,*

    ஓராயிரம் சொன்ன*  அவற்றுள் இவை பத்தும்,* 
    சோரார் விடார் கண்டீர்*  வைகுந்தம் திண்ணனவே.


    முடிச்சோதியாய்*  உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,* 
    அடிச்சோதி நீநின்ற*  தாமரையாய் அலர்ந்ததுவோ,*

    படிச்சோதி ஆடையொடும்*  பல் கலனாய்,*  நின்பைம்பொன் 
    கடிச்சோதி கலந்ததுவோ?*  திருமாலே! கட்டுரையே. (2)   


    கட்டுரைக்கில் தாமரை*  நின் கண் பாதம் கை ஒவ்வா,* 
    சுட்டு உரைத்த நன்பொன்*  உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*

    ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்*  புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,* 
    பட்டுரையாய் புற்கு என்றே*  காட்டுமால் பரஞ்சோதீ!       


    பரஞ்சோதி! நீ பரமாய்*  நின் இகழ்ந்து பின்,*  மற்று ஓர் 
    பரம் சோதி இன்மையின்*  படி ஓவி நிகழ்கின்ற,*

    பரஞ்சோதி நின்னுள்ளே*  படர் உலகம் படைத்த,*  எம் 
    பரஞ்சோதி கோவிந்தா!*  பண்பு உரைக்கமாட்டேனே.


    மாட்டாதே ஆகிலும்*  இம் மலர் தலை மாஞாலம்,*  நின் 
    மாட்டு ஆய மலர்புரையும்*  திருவுருவம் மனம் வைக்க* 

    மாட்டாத பலசமய*  மதி கொடுத்தாய், மலர்த்துழாய்* 
    மாட்டேநீ மனம் வைத்தாய்*  மாஞாலம் வருந்தாதே?


    வருந்தாத அரும்தவத்த*  மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,* 
    வருந்தாத ஞானம் ஆய்*  வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*

    வரும் காலம் நிகழ் காலம்*  கழி காலம் ஆய்,*  உலகை 
    ஒருங்காக அளிப்பாய் சீர்*  எங்கு உலக்க ஓதுவனே?


    ஓதுவார் ஓத்து எல்லாம்*  எவ் உலகத்து எவ் எவையும்,* 
    சாதுவாய் நின் புகழின்*  தகை அல்லால் பிறிது இல்லை,*

    போது வாழ் புனம் துழாய்*  முடியினாய்,*  பூவின்மேல் 
    மாது வாழ் மார்பினாய்!*  என் சொல்லி யான் வாழ்த்துவனே?  


    வாழ்த்துவார் பலர் ஆக*  நின்னுள்ளே நான்முகனை,* 
    மூழ்த்த நீர் உலகு எல்லாம்*  படை என்று முதல் படைத்தாய்*  

    கேழ்த்த சீர் அரன் முதலாக்*  கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,* 
    சூழ்த்து அமரர் துதித்தால்*  உன் தொல் புகழ் மாசூணாதே?     


    மாசூணாச் சுடர் உடம்புஆய்*  மலராது குவியாது,* 
    மாசூணா ஞானம் ஆய்*  முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*

    மாசூணா வான் கோலத்து*  அமரர் கோன் வழிப்பட்டால்,* 
    மாசூணா உனபாத*  மலர்ச் சோதி மழுங்காதே?     


    மழுங்காத வைந் நுதிய*  சக்கர நல் வலத்தையாய்,* 
    தொழும் காதல் களிறு அளிப்பான்*  புள் ஊர்ந்து தோன்றினையே,* 

    மழுங்காத ஞானமே*  படை ஆக மலர் உலகில்* 
    தொழும்பாயார்க்கு அளித்தால்*  உன் சுடர்ச் சோதி மறையாதே? 


    மறை ஆய நால் வேதத்துள் நின்ற*  மலர்ச் சுடரே,* 
    முறையால் இவ் உலகு எல்லாம்*  படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய் 

    பிறை ஏறு சடையானும்*  நான்முகனும் இந்திரனும்* 
    இறை ஆதல் அறிந்து ஏத்த*  வீற்றிருத்தல் இது வியப்பே?   


    வியப்பாய வியப்புஇல்லா*  மெய்ஞ் ஞான வேதியனைச்,* 
    சயப்புகழார் பலர் வாழும்*  தடம் குருகூர்ச் சடகோபன்,*

    துயக்கு இன்றித் தொழுது உரைத்த*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்*  ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)


    ஒரு நாயகமாய்*  ஓட உலகு உடன் ஆண்டவர்,* 
    கரு நாய் கவர்ந்த காலர்*  சிதைகிய பானையர்,*

    பெரு நாடு காண*  இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,* 
    திருநாரணன் தாள்*  காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.


    உய்ம்மின் திறைகொணர்ந்து*  என்று உலகு ஆண்டவர்,*  இம்மையே 
    தம் இன்சுவை மடவாரைப்*  பிறர் கொள்ளத் தாம் விட்டு* 

    வெம் மின் ஒளிவெயில்*  கானகம் போய்க் குமைதின்பர்கள்,* 
    செம்மின் முடித் திருமாலை*  விரைந்து அடி சேர்மினோ. 


    அடி சேர் முடியினர் ஆகி*  அரசர்கள் தாம் தொழ,* 
    இடி சேர் முரசங்கள்*  முற்றத்து இயம்ப இருந்தவர்,* 

    பொடி சேர் துகளாய்ப் போவர்கள்*  ஆதலில் நொக்கெனக்,* 
    கடி சேர் துழாய்முடிக்*  கண்ணன் கழல்கள் நினைமினோ. 


    நினைப்பான் புகில் கடல் எக்கலின்*  நுண்மணலில் பலர்,* 
    எனைத்தோர் உகங்களும்*  இவ் உலகு ஆண்டு கழிந்தவர்,* 

    மனைப்பால் மருங்கு*  அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,* 
    பனைத் தாள் மத களிறு அட்டவன்*  பாதம் பணிமினோ.


    பணிமின் திருவருள் என்னும்*  அம் சீதப் பைம் பூம் பள்ளி,* 
    அணி மென் குழலார்*  இன்பக் கலவி அமுது உண்டார்,* 

    துணி முன்பு நால*  பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்,* 
    மணி மின்னு மேனி*  நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.  


    வாழ்ந்தார்கள் வாழ்ந்தது*  மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,* 
    ஆழ்ந்தார் என்று அல்லால்*  அன்று முதல் இன்று அறுதியா,*

    வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்*  என்பது இல்லை நிற்குறில்,* 
    ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி*  அண்ணல் அடியவர் ஆமினோ.  


    ஆம் இன் சுவை அவை*  ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்,* 
    தூ மென் மொழி மடவார்*  இரக்கப் பின்னும் துற்றுவார்,* 

    ஈமின் எமக்கு ஒரு துற்று என்று*  இடறுவர் ஆதலின்,* 
    கோமின் துழாய் முடி*  ஆதி அம் சோதி குணங்களே.        


    குணம் கொள் நிறை புகழ் மன்னர்*  கொடைக்கடன் பூண்டிருந்து,* 
    இணங்கி உலகு உடன் ஆக்கிலும்*  ஆங்கு அவனை இல்லார்,*

    மணம் கொண்ட போகத்து மன்னியும்*  மீள்வர்கள் மீள்வு இல்லை,* 
    பணம் கொள் அரவு அணையான்*  திருநாமம் படிமினோ.


    படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து*  ஐம்புலன் வென்று,* 
    செடி மன்னு காயம் செற்றார்களும்*  ஆங்கு அவனை இல்லார்,* 

    குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும்*  மீள்வர்கள் மீள்வு இல்லை,* 
    கொடி மன்னு புள் உடை*  அண்ணல் கழல்கள் குறுகுமினோ.


    குறுக மிக உணர்வத்தொடு நோக்கி*  எல்லாம்விட்ட,* 
    இறுகல் இறப்பு என்னும்*  ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,* 

    சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்*  பின்னும் வீடு இல்லை,* 
    மறுகல் இல் ஈசனைப் பற்றி*  விடாவிடில் வீடு அஃதே. 


    அஃதே உய்யப் புகும் ஆறு என்று*  கண்ணன் கழல்கள் மேல்,* 
    கொய் பூம் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,* 

    செய் கோலத்து ஆயிரம்*  சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,* 
    அஃகாமல் கற்பவர்*  ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.      


    கை ஆர் சக்கரத்து*  என் கருமாணிக்கமே! என்று என்று,* 
    பொய்யே கைம்மைசொல்லி*  புறமே புறமே ஆடி.* 

    மெய்யே பெற்றொழிந்தேன்,*  விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
    ஐயோ கண்ணபிரான்!*  அறையோ இனிப்போனாலே. (2)


    போனாய் மாமருதின் நடுவே*  என் பொல்லா மணியே,* 
    தேனே! இன்அமுதே!'*  என்று என்றே சில கூத்துச்சொல்ல,* 

    தானேல் எம்பெருமான்*  அவன் என் ஆகி ஒழிந்தான்,* 
    வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.


    உள்ளன மற்று உளவா*  புறமே சில மாயம் சொல்லி,* 
    வள்ளல் மணிவண்ணனே!*  என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*

    கள்ள மனம் தவிர்ந்தே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,* 
    வெள்ளத்து அணைக்கிடந்தாய்*  இனி உன்னை விட்டு என் கொள்வனே? 


    என் கொள்வன் உன்னை விட்டு என்னும்*  வாசகங்கள் சொல்லியும்,* 
    வன் கள்வனேன் மனத்தை வலித்து*  கண்ண நீர் கரந்து,* 

    நின்கண் நெருங்கவைத்தே*  எனது ஆவியை நீக்ககில்லேன்,* 
    என்கண் மலினம் அறுத்து*  என்னைக்கூவி அருளாய்கண்ணனே!         


    கண்ணபிரானை*  விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,* 
    நண்ணியும் நண்ணகில்லேன்*  நடுவே ஓர் உடம்பில் இட்டு,* 

    திண்ணம் அழுந்தக் கட்டிப்*  பல செய்வினை வன் கயிற்றால்,* 
    புண்ணை மறையவரிந்து*  என்னைப் போர வைத்தாய் புறமே.


    புறம் அறக் கட்டிக்கொண்டு*  இரு வல்வினையார் குமைக்கும்,* 
    முறை முறை யாக்கை புகல்ஒழியக்*  கண்டு கொண்டொழிந்தேன்,*

    நிறம் உடை நால்தடம்தோள்*  செய்யவாய் செய்ய தாமரைக்கண்,* 
    அறம்முயல் ஆழிஅங்கைக்*  கருமேனி அம்மான் தன்னையே.      


    அம்மான் ஆழிப்பிரான்*  அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,* 
    எம் மா பாவியர்க்கும்*  விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,* 

    'கைம்மா துன்பு ஒழித்தாய்!'  என்று கைதலைபூசல் இட்டே,* 
    மெய்ம் மால் ஆயொழிந்தேன்*  எம்பிரானும் என் மேலானே.   


    மேலாத் தேவர்களும்*  நிலத் தேவரும் மேவித் தொழும்,* 
    மாலார் வந்து இனநாள்*  அடியேன் மனத்தே மன்னினார்,*

    சேல் ஏய் கண்ணியரும்*  பெரும் செல்வமும் நன்மக்களும்,* 
    மேலாத் தாய் தந்தையும்*  அவரே இனி ஆவாரே.   


    ஆவார் ஆர் துணை என்று*  அலை நீர்க் கடலுள் அழுந்தும்- 
    நாவாய் போல்,*  பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,* 

    தேவு ஆர் கோலத்தொடும்*  திருச் சக்கரம் சங்கினொடும்,* 
    ஆஆ என்று அருள்செய்து*  அடியேனொடும் ஆனானே.    


    ஆனான் ஆளுடையான் என்று*  அஃதே கொண்டு உகந்துவந்து*
    தானே இன்அருள் செய்து*  என்னை முற்றவும் தான் ஆனான்,* 

    மீன் ஆய் ஆமையும் ஆய்*  நரசிங்கமும் ஆய் குறள் ஆய்,* 
    கான் ஆர் ஏனமும் ஆய்*  கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே.    


    கார்வண்ணன் கண்ண பிரான்*  கமலத்தடங்கண்ணன் தன்னை,* 
    ஏர்வள ஒண்கழனிக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஆர்வண்ணத்தால் உரைப்பார்*  அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.


    வைகல் பூங் கழிவாய்*  வந்து மேயும் குருகினங்காள்* 
    செய் கொள் செந்நெல் உயர்*  திருவண்வண்டூர் உறையும்* 

    கை கொள் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    கைகள் கூப்பி சொல்லீர்*  வினையாட்டியேன் காதன்மையே*. (2)   


    காதல் மென் பெடையோடு*  உடன் மேயும் கரு நாராய்* 
    வேத வேள்வி ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 

    நாதன் ஞாலம் எல்லாம் உண்ட*  நம் பெருமானைக் கண்டு* 
    பாதம் கைதொழுது பணியீர்*  அடியேன் திறமே*.


    திறங்கள் ஆகி எங்கும்*  செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்* 
    சிறந்த செல்வம் மல்கு*  திருவண்வண்டூர் உறையும்* 

    கறங்கு சக்கரக் கைக்*  கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    இறங்கி நீர் தொழுது பணியீர்*  அடியேன் இடரே*


    இடர் இல் போகம் மூழ்கி*  இணைந்து ஆடும் மட அன்னங்காள்!* 
    விடல் இல் வேத ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 

    கடலின் மேனிப்பிரான்*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
    உடலம் நைந்து ஒருத்தி*  உருகும் என்று உணர்த்துமினே*


    உணர்த்தல் ஊடல் உணர்ந்து*  உடன் மேயும் மட அன்னங்காள்* 
    திணர்த்த வண்டல்கள்மேல்*  சங்கு சேரும் திருவண்வண்டூர்* 

    புணர்த்த பூந் தண் துழாய்முடி*  நம் பெருமானைக் கண்டு* 
    புணர்த்த கையினராய்*  அடியேனுக்கும் போற்றுமினே*  


    போற்றி யான் இரந்தேன்*  புன்னைமேல் உறை பூங் குயில்காள்* 
    சேற்றில் வாளை துள்ளும்*  திருவண்வண்டூர் உறையும்* 

    ஆற்றல் ஆழி அங்கை*  அமரர் பெருமானைக் கண்டு* 
    மாற்றம் கொண்டருளீர்*  மையல் தீர்வது ஒருவண்ணமே*


    ஒருவண்ணம் சென்று புக்கு*  எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே* 
    செரு ஒண் பூம் பொழில் சூழ்*  செக்கர் வேலைத் திருவண்வண்டூர்* 

    கரு வண்ணம் செய்யவாய்*  செய்ய கண் செய்ய கை செய்யகால்* 
    செரு ஒண் சக்கரம் சங்கு*  அடையாளம் திருந்தக் கண்டே*.  


    திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய்*  ஒண் சிறு பூவாய்* 
    செருந்தி ஞாழல் மகிழ்*  புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்*

    பெரும் தண் தாமரைக்கண்*  பெரு நீள் முடி நால் தடந்தோள்* 
    கருந் திண் மா முகில் போல்*  திருமேனி அடிகளையே*  


    அடிகள் கைதொழுது*  அலர்மேல் அசையும் அன்னங்காள்* 
    விடிவை சங்கு ஒலிக்கும்*  திருவண்வண்டூர் உறையும்* 

    கடிய மாயன் தன்னை*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
    கொடிய வல்வினையேன்*  திறம் கூறுமின் வேறுகொண்டே*


    வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்*  வெறி வண்டினங்காள்* 
    தேறு நீர்ப் பம்பை*  வடபாலைத் திருவண்வண்டூர்* 

    மாறு இல் போர் அரக்கன்*  மதிள் நீறு எழச் செற்று உகந்த* 
    ஏறு சேவகனார்க்கு*  என்னையும் உளள் என்மின்களே*  


    மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்*  அகல் ஞாலம் கொண்ட* 
    வன் கள்வன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருவண்வண்டூர்க்கு* 
    இன்கொள் பாடல் வல்லார்*  மதனர் மின்னிடை யவர்க்கே* (2)


    உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி*  என்னை உன் பாதபங்கயம்,* 
    நண்ணிலாவகையே*  நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,* 

    எண் இலாப் பெறுமாயனே!  இமையோர்கள் ஏத்தும்*  உலகம் மூன்று உடை,* 
    அண்ணலே! அமுதே! அப்பனே!*  என்னை ஆள்வானே! (2)


    என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து*  இராப்பகல் மோதுவித்திட்டு,* 
    உன்னை நான் அணுகாவகை*  செய்து போதிகண்டாய்,* 

    கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!*  கடல் ஞாலம் காக்கின்ற* 
    மின்னு நேமியினாய்!*  வினையேனுடை வேதியனே! 


    வேதியாநிற்கும் ஐவரால்*  வினையேனை மோதுவித்து*  உன் திருவடிச் 
    சாதியாவகை*  நீ தடுத்து என் பெறுதிஅந்தோ,*

    ஆதி ஆகி அகல் இடம் படைத்து*  உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட-
    சோதி நீள் முடியாய்!*  தொண்டனேன் மதுசூதனனே!     


    சூது நான் அறியாவகை*  சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி*  உன் அடிப்போது-
    நான் அணுகாவகை*  செய்து போதிகண்டாய்,* 

    யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி*  ஓர் ஆலின் நீள் இலை,* 
    மீது சேர் குழவி!*  வினையேன் வினைதீர் மருந்தே!


    தீர் மருந்து இன்றி ஐந்து நோய்*  அடும் செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை,* 
    நேர் மருங்கு உடைத்தா அடைத்து*  நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,* 

    ஆர் மருந்து இனி ஆகுவார்?*  அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம்,* 
    வேர் மருங்கு அறுத்தாய்!*  விண்ணுளார் பெருமானே? ஓ! 


    விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்*  ஐம்புலன் இவை, 
    மண்ணுள் என்னைப் பெற்றால்*  என் செய்யா மற்று நீயும் விட்டால்?*

    பண்ணுளாய் கவி தன்னுளாய்!*  பத்தியின் உள்ளாய்! பரமீசனே,*  வந்து என்-
    கண்ணுளாய்!  நெஞ்சுளாய்!  சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.     


    ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத*  ஓர் ஐவர் வன் கயவரை,* 
    என்று யான் வெல்கிற்பன்*  உன் திருவருள் இல்லையேல்?,* 

    அன்று தேவர் அசுரர் வாங்க*  அலைகடல் அரவம் அளாவி,*  ஓர் 
    குன்றம் வைத்த எந்தாய்!*  கொடியேன் பருகு இன் அமுதே!     


    இன் அமுது எனத் தோன்றி*  ஓர் ஐவர் யாவரையும் மயக்க,* நீ வைத்த- 
    முன்னம் மாயம் எல்லாம்*  முழு வேர் அரிந்து*  என்னை உன்- 

    சின்னமும் திரு மூர்த்தியும்*  சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு,* 
    என் அம்மா! என் கண்ணா!*  இமையோர் தம் குலமுதலே !       


    குலம் முதல் அடும் தீவினைக்*  கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை* 
    வலம் முதல் கெடுக்கும்*  வரமே தந்தருள்கண்டாய்,* 

    நிலம் முதல் இனி எவ் உலகுக்கும்*  நிற்பன செல்வன எனப்,*  பொருள்- 
    பல முதல் படைத்தாய்!*  என் கண்ணா! என் பரஞ்சுடரே!            


    என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி*  உன் இணைத் தாமரைகட்கு,*
    அன்பு உருகி நிற்கும்*  அது நிற்க சுமடு தந்தாய்,* 

    வன் பரங்கள் எடுத்து ஐவர்*  திசை திசை வலித்து எற்றுகின்றனர்:* 
    முன் பரவை கடைந்து*  அமுதம் கொண்ட மூர்த்தி ஓ!


    கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்*  குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,*  அப் 
    புண்டரீகக் கொப்பூழ்ப்*  புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்

    தொண்டர் தொண்டர் தொண்டன்*  சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    கண்டு பாட வல்லார்*  வினை போம் கங்குலும் பகலே. (2)


    தேவிமார் ஆவார் திருமகள்பூமி*   ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்* 
    மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி*  வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*

    பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்*  பவளவாய் மணியே* 
    ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த  அப்பனே!*  காணுமாறு அருளாய்   (2)


    காணுமாறுஅருளாய் என்றுஎன்றே கலங்கி*   கண்ணநீர் அலமர*  வினையேன் 
    பேணுமாறுஎல்லாம் பேணி*  நின்பெயரே  பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ*

    காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!*  தொண்டனேன் கற்பகக்கனியே* 
    பேணுவார் அமுதே! பெரிய தண்புனல்சூழ்*   பெருநிலம் எடுத்த பேராளா!         


    எடுத்தபேராளன் நந்தகோபன்தன்*   இன்உயிர்ச் சிறுவனே*  அசோதைக்கு 
    அடுத்தபேரின்பக் குலஇளம்களிறே*   அடியனேன் பெரிய அம்மானே*

    கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்*   கைஉகிர் ஆண்ட எம்கடலே,* 
    அடுத்ததுஓர் உருவாய் இன்று நீ வாராய்*  எங்ஙனம் தேறுவர் உமரே?


    உமர்உகந்துஉகந்த உருவம்நின்உருவம்ஆகி*  உன்தனக்கு அன்பர் ஆனார்* 
    அவர் உகந்துஅமர்ந்த செய்கை உன்மாயை*   அறிவுஒன்றும் சங்கிப்பன் வினையேன்*

    அமர்அதுபண்ணி அகல்இடம்புடைசூழ்*   அடுபடை அவித்த அம்மானே* 
    அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே*   என்னுடை ஆர்உயிரேயோ!    


    ஆர்உயிரேயோ அகல்இடம்முழுதும்*  படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்துஅளந்த* 
    பேர்உயிரேயோ பெரியநீர் படைத்து*  அங்கு உறைந்து அது கடைந்துஅடைத்து உடைத்த*

    சீர்உயிரேயோ மனிசர்க்குத்தேவர் போலத்*  தேவர்க்கும்தேவாவோ* 
    ஓர்உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்*   உன்னை நான் எங்கு வந்து உறுகோ?       


    எங்குவந்துஉறுகோ என்னைஆள்வானே*   ஏழ்உலகங்களும் நீயே* 
    அங்கு அவர்க்குஅமைத்த தெய்வமும்நீயே*  அவற்றுஅவை கருமமும் நீயே*

    பொங்கியபுறம்பால் பொருள்உளவேலும்*   அவையுமோ நீ இன்னேஆனால்* 
    மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே*   வான்புலன் இறந்ததும் நீயே.  


    இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே*   நிகழ்வதோ நீ இன்னேஆனால்* 
    சிறந்தநின் தன்மை அதுஇதுஉதுஎன்று*  அறிவுஒன்றும் சங்கிப்பன்வினையேன்*

    கறந்தபால் நெய்யே நெய்யின்  சுவையே!*  கடலினுள் அமுதமே அமுதில்* 
    பிறந்த இன்சுவையே சுவையதுபயனே!*   பின்னைதோள் மணந்தபேர்ஆயா!


    மணந்தபேர்ஆயா! மாயத்தால்முழுதும்*   வல்வினையேனை ஈர்கின்ற* 
    குணங்களை உடையாய் அசுரர் வன்கையர்கூற்றமே!*  கொடிய புள்உயர்த்தாய்*

    பணங்கள்ஆயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!*  பாற்கடல் சேர்ப்பா* 
    வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்*   செய்கையும் யானும் நீதானே.   


    யானும் நீதானே ஆவதோமெய்யே*   அருநரகுஅவையும் நீ ஆனால்* 
    வான்உயர் இன்பம் எய்தில்என்*  மற்றை   நரகமே எய்தில்என்? எனினும்,*

    யானும் நீதானாய்த் தெளிதொறும், நன்றும் அஞ்சுவன்*  நரகம் நான்அடைதல்* 
    வான்உயர்இன்பம் மன்னிவீற்றிருந்தாய்*  அருளுநின் தாள்களைஎனக்கே.


    தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்* த பேர்உதவிக்கைம்மாறாத்* 
    தோள்களை ஆரத்தழுவி என்உயிரை*  அறவிலை செய்தனன் சோதீ,

    தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்*   துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்* 
    தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்*   தமியனேன் பெரிய அப்பனே!


    பெரிய அப்பனை பிரமன் அப்பனை*   உருத்திரன் அப்பனை*  முனிவர்க்கு 
    உரிய அப்பனை அமரர் அப்பனை*   உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*

    பெரியவண்குருகூர் வண்சடகோபன்*   பேணின ஆயிரத்துள்ளும்* 
    உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்*   உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே  (2)


    கொண்ட பெண்டிர் மக்கள்உற்றார்*  சுற்றத்தவர் பிறரும்* 
    கண்டதோடு பட்டதுஅல்லால்*  காதல்மற்றுயாதும்இல்லை*

    எண்திசையும் கீழும்மேலும்*  முற்றவும் உண்டபிரான்* 
    தொண்டரோமாய் உய்யலல்லால்*  இல்லைகண்டீர் துணையே  (2)


    துணையும் சார்வும்ஆகுவார்போல்*  சுற்றத்தவர்பிறரும்* 
    அணையவந்த ஆக்கம்உண்டேல்*  அட்டைகள்போல் சுவைப்பர்*

    கணைஒன்றாலே ஏழ்மரமும் எய்த*  எம்கார்முகிலைப்* 
    புணைஎன்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர்பொருளே.  


    பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்*  போற்றிஎன்றுஏற்றுஎழுவர்* 
    இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்*  என்னே என்பாரும்இல்லை*

    மருள்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப் பிறந்தாற்கு* 
    அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர்அரணே.


    அரணம்ஆவர் அற்றகாலைக்கு*  என்றென்று அமைக்கப்பட்டார்* 
    இரணம்கொண்ட தெப்பர்ஆவர்*  இன்றியிட்டாலும் அஃதே*

    வருணித்துஎன்னே?*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
    சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர் சதிரே. 


    சதுரம்என்று தம்மைத்தாமே*  சம்மதித்து இன்மொழியார்* 
    மதுரபோகம் துற்றவரே*  வைகிமற்றுஒன்றுஉறுவர்*

    அதிர்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப்பிறந்தாற்கு* 
    எதிர்கொள்ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர் இன்பமே. 


    இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!*  உள்ளது நினையாதே* 
    தொல்லையார்கள் எத்தனைவர்*  தோன்றிக் கழிந்தொழிந்தார்?*

    மல்லை மூதூர்*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
    சொல்லிஉய்யப் போகல்அல்லால்*  மற்றொன்றுஇல்லைசுருக்கே.


    மற்றொன்றுஇல்லை சுருங்கச்சொன்னோம்*  மாநிலத்துஎவ்உயிர்க்கும்* 
    சிற்றவேண்டா சிந்திப்பேஅமையும்*  கண்டீர்கள்அந்தோ!*

    குற்றம்அன்றுஎங்கள் பெற்றத்தாயன்*  வடமதுரைப்பிறந்தான்* 
    குற்றம்இல்சீர் கற்றுவைகல்*  வாழ்தல்கண்டீர்குணமே. 


    வாழ்தல்கண்டீர் குணம்இது அந்தோ!*  மாயவன் அடிபரவிப்* 
    போழ்துபோக உள்ளகிற்கும்*  புன்மைஇலாதவர்க்கு*

    வாழ்துணையா*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
    வீழ்துணையாப் போம்இதனில்*  யாதும்இல்லைமிக்கதே. 


    யாதும்இல்லை மிக்குஅதனில்*  என்றுஎன்று அதுகருதி* 
    காதுசெய்வான் கூதைசெய்து*  கடைமுறை வாழ்க்கையும்போம்*

    மாதுகிலின் கொடிக்கொள்மாட*  வடமதுரைப்பிறந்த* 
    தாதுசேர்தோள் கண்ணன் அல்லால்*  இல்லை கண்டீர் சரணே.


    கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்*  சரண்அதுநிற்கவந்து* 
    மண்ணின் பாரம் நீக்குதற்கே*  வடமதுரைப்பிறந்தான்*

    திண்ணமாநும் உடைமை உண்டேல்*  அவன்அடி சேர்த்துஉய்ம்மினோ* 
    எண்ணவேண்டா நும்மதுஆதும்*  அவன்அன்றிமற்றுஇல்லையே.


    ஆதும்இல்லை மற்றுஅவனில்*  என்றுஅதுவே துணிந்து* 
    தாதுசேர்தோள் கண்ணனைக்*  குருகூர்ச்சடகோபன்சொன்ன*

    தீதுஇலாத ஒண்தமிழ்கள்*  இவைஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஓதவல்லபிராக்கள்*  நம்மை ஆளுடையார்கள் பண்டே.   (2)


    தாள தாமரைத்*  தடம்அணி வயல் திருமோகூர்* 
    நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று*  அசுரரைத் தகர்க்கும்*

    தோளும் நான்குஉடைச்*  சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்* 
    காள மேகத்தை அன்றி*  மற்றொன்றுஇலம் கதியே.  (2)


    இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்*  ஈன்தண் துழாயின்* 
    அலங்கலங்கண்ணி*  ஆயிரம் பேர்உடை அம்மான்*

    நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்*  திருமோகூர்* 
    நலங்கழல் அவன் அடிநிழல்*  தடமன்றி யாமே. 


    அன்றியாம் ஒரு புகலிடம்*  இலம் என்றுஎன்று அலற்றி* 
    நின்று நான்முகன் அரனொடு*  தேவர்கள் நாட*

    வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்*  திருமோகூர்* 
    நன்று நாம் இனி நணுகுதும்*  நமதுஇடர் கெடவே.  


    இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்*  என்றுஎன்று ஏத்தி* 
    சுடர்கொள் சோதியைத்*  தேவரும் முனிவரும் தொடர*

    படர்கொள் பாம்பணைப்*  பள்ளிகொள்வான் திருமோகூர்* 
    இடர் கெடவடி பரவுதும்*  தொண்டீர்! வம்மினே.  


    தொண்டீர்! வம்மின்*  நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்* 
    அண்டம் மூவுலகு அளந்தவன்*  அணி திருமோகூர்*

    எண் திசையும் ஈன்கரும்பொடு*  பெரும்செந்நெல் விளையக்* 
    கொண்ட கோயிலை வலஞ்செய்து*  இங்கு ஆடுதும் கூத்தே.


    கூத்தன் கோவலன்*  குதற்று வல்லசுரர்கள் கூற்றம்* 
    ஏத்தும் நங்கட்கும்*  அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*

    வாய்த்த தண்பணை வளவயல்சூழ்*  திருமோகூர்- 
    ஆத்தன்*  தாமரை அடிஅன்றி*  மற்றுஇலம் அரணே.        


    மற்றிலம் அரண்*  வான்பெரும் பாழ்தனி முதலாச்* 
    சுற்றும் நீர்படைத்து*  அதன்வழித் தொல்முனி முதலா*

    முற்றும் தேவரோடு*  உலகுசெய்வான் திருமோகூர்* 
    சுற்றிநாம் வலஞ்செய்ய*  நம் துயர்கெடும் கடிதே.


    துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து*  அடியவர் தொழுமின்* 
    உயர்கொள் சோலை*  ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*

    பெயர்கள் ஆயிரம்உடைய*  வல்லரக்கர் புக்குஅழுந்த* 
    தயரதன் பெற்ற*  மரகத மணித் தடத்தினையே.   


    மணித் தடத்தடி மலர்க்கண்கள்*  பவளச் செவ்வாய்* 
    அணிக்கொள் நால்தடம்தோள்*  தெய்வம் அசுரரை என்றும்*

    துணிக்கும் வல்அரட்டன்*  உறைபொழில் திருமோகூர்* 
    நணித்து நம்முடை நல்லரண்*  நாம் அடைந்தனமே.


    நாம்அடைந்த நல்அரண்*  நமக்குஎன்று நல்அமரர்* 
    தீமை செய்யும் வல்அசுரரை*  அஞ்சிச் சென்றுஅடைந்தால்*

    காமரூபம் கொண்டு*  எழுந்துஅளிப்பான் திருமோகூர்* 
    நாமமே நவின்று எண்ணுமின்*  ஏத்துமின் நமர்காள்! 


    ஏத்துமின் நமர்காள்*  என்றுதான் குடம்ஆடு- 
    கூத்தனைக்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*

    வாய்த்த ஆயிரத்துள் இவை*  வண் திருமோகூர்க்கு* 
    ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு*  இடர் கெடுமே.   (2)