பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
உயர்வு அற உயர் நலம்* உடையவன் எவன் அவன்*
மயர்வு அற மதி நலம்* அருளினன் எவன் அவன்*
அயர்வு அறும் அமரர்கள்* அதிபதி எவன் அவன்*
துயர் அறு சுடர் அடி* தொழுது எழு என் மனனே! (2)
மனன்அகம் மலம் அற* மலர்மிசை எழுதரும்*
மனன் உணர்வு அளவு இலன்,* பொறி உணர்வு அவை இலன்*
இனன் உணர், முழு நலம்,* எதிர் நிகழ் கழிவினும்*
இனன் இலன் எனன் உயிர்,* மிகுநரை இலனே.
இலன் அது உடையன் இது* என நினைவு அரியவன்*
நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*
புலனொடு புலன் அலன்,* ஒழிவு இலன் பரந்த* அந்-
நலன் உடை ஒருவனை* நணுகினம் நாமே.*
நாம் அவன் இவன் உவன்,* அவள் இவள் உவள் எவள்*
தாம் அவர் இவர் உவர்,* அது இது உது எது*
வீமவை இவை உவை,* அவை நலம், தீங்கு அவை*
ஆமவை ஆயவை ஆய்* நின்ற அவரே.*
அவரவர் தமதமது* அறிவு அறி வகைவகை*
அவரவர் இறையவர்* என அடி அடைவர்கள்*
அவரவர் இறையவர்* குறைவு இலர் இறையவர்*
அவரவர் விதிவழி* அடைய நின்றனரே.
நின்றனர் இருந்தனர்* கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலர் இருந்திலர்* கிடந்திலர் திரிந்திலர்*
என்றும் ஓர் இயல்வினர்* என நினைவு அரியவர்*
என்றும் ஓர் இயல்வொடு* நின்ற எம் திடரே.
திட விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசைப்*
படர் பொருள் முழுவதும் ஆய்* அவைஅவைதொறும்*
உடல்மிசை உயிர் எனக்* கரந்து எங்கும் பரந்துளன்*
சுடர் மிகு சுருதியுள்* இவை உண்ட சுரனே.
சுரர் அறிவு அரு நிலை* விண் முதல் முழுவதும்*
வரன் முதலாய் அவை* முழுது உண்ட பரபரன்*
புரம் ஒரு மூன்று எரித்து* அமரர்க்கும் அறிவியந்து*
அரன் அயன் என* உலகு அழித்து அமைத்து உளனே.
உளன் எனில் உளன் அவன்* உருவம் இவ் உருவுகள்*
உளன் அலன் எனில், அவன்* அருவம் இவ் அருவுகள்*
உளன் என இலன் என* இவை குணம் உடைமையில்*
உளன் இரு தகைமையொடு* ஒழிவு இலன் பரந்தே.
பரந்த தண் பரவையுள்* நீர்தொறும் பரந்துளன்*
பரந்த அண்டம் இது என:* நிலம் விசும்பு ஒழிவு அறக்*
கரந்த சில் இடந்தொறும்* இடம் திகழ் பொருள்தொறும்*
கரந்து எங்கும் பரந்துளன்:* இவை உண்ட கரனே.
கர விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசை*
வரன் நவில் திறல் வலி* அளி பொறை ஆய்நின்ற*
பரன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிரல் நிறை ஆயிரத்து* இவை பத்தும் வீடே. (2)
வாயும் திரை உகளும்* கானல் மடநாராய்,*
ஆயும் அமர் உலகும்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
நோயும் பயலைமையும்* மீது ஊர எம்மேபோல்,*
நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.
கோள் பட்ட சிந்தையையாய்க்* கூர்வாய அன்றிலே,*
சேண் பட்டயாமங்கள்* சேராது இரங்குதியால்,*
ஆள் பட்ட எம்மேபோல்,* நீயும் அரவு அணையான்,*
தாள் பட்ட தண் துழாய்த்* தாமம் காமுற்றாயே.
காமுற்ற கையறவோடு* எல்லே இராப்பகல்,*
நீ முற்றக் கண்துயிலாய்* நெஞ்சு உருகி ஏங்குதியால்,*
தீ முற்றத் தென் இலங்கை* ஊட்டினான் தாள் நயந்த,*
யாம் உற்றது உற்றாயோ?* வாழி கனை கடலே
கடலும் மலையும்* விசும்பும் துழாய் எம்போல்,*
சுடர் கொள் இராப்பகல்* துஞ்சாயால் தண் வாடாய்,*
அடல் கொள் படை ஆழி* அம்மானைக் காண்பான் நீ,*
உடலம் நோய் உற்றாயோ* ஊழிதோறு ஊழியே.
ஊழிதோறு ஊழி* உலகுக்கு நீர்கொண்டு,*
தோழியரும் யாமும் போல்* நீராய் நெகிழ்கின்ற,*
வாழிய வானமே* நீயும் மதுசூதன்,*
பாழிமையில் பட்டு அவன்கண்* பாசத்தால் நைவாயே.
நைவாய எம்மேபோல்* நாள் மதியே நீ இந் நாள்,*
மை வான் இருள் அகற்றாய்* மாழாந்து தேம்புதியால்,*
ஐ வாய் அரவு அணைமேல்* ஆழிப் பெருமானார்,*
மெய் வாசகம் கேட்டு* உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
தோற்றோம் மட நெஞ்சம்* எம் பெருமான் நாரணற்கு* எம்
ஆற்றாமை சொல்லி* அழுவோமை நீநடுவே,*
வேற்றோர் வகையில்* கொடிதாய் எனை ஊழி,*
மாற்றாண்மை நிற்றியோ* வாழி கனை இருளே.
இருளின் திணி வண்ணம்* மாநீர்க்கழியே போய்,*
மருளுற்று இராப்பகல்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
உருளும் சகடம்* உதைத்த பெருமானார்,*
அருளின் பெரு நசையால்* ஆழாந்து நொந்தாயே.
நொந்து ஆராக் காதல் நோய்* மெல் ஆவி உள் உலர்த்த,*
நந்தா விளக்கமே,* நீயும் அளியத்தாய்,*
செந்தாமரைத் தடங்கண்* செங்கனி வாய் எம் பெருமான்,*
அம் தாமம் தண் துழாய்* ஆசையால் வேவாயே.
வேவு ஆரா வேட்கை நோய்* மெல் ஆவி உள் உலர்த்த,*
ஓவாது இராப்பகல்* உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*
மா வாய் பிளந்து* மருதிடை போய் மண் அளந்த,*
மூவா முதல்வா* இனி எம்மைச் சோரேலே.
சோராத எப் பொருட்கும்* ஆதியாம் சோதிக்கே,*
ஆராத காதல்* குருகூர்ச் சடகோபன்,*
ஓராயிரம் சொன்ன* அவற்றுள் இவை பத்தும்,*
சோரார் விடார் கண்டீர்* வைகுந்தம் திண்ணனவே.
முடிச்சோதியாய்* உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,*
அடிச்சோதி நீநின்ற* தாமரையாய் அலர்ந்ததுவோ,*
படிச்சோதி ஆடையொடும்* பல் கலனாய்,* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ?* திருமாலே! கட்டுரையே. (2)
கட்டுரைக்கில் தாமரை* நின் கண் பாதம் கை ஒவ்வா,*
சுட்டு உரைத்த நன்பொன்* உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்* புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,*
பட்டுரையாய் புற்கு என்றே* காட்டுமால் பரஞ்சோதீ!
பரஞ்சோதி! நீ பரமாய்* நின் இகழ்ந்து பின்,* மற்று ஓர்
பரம் சோதி இன்மையின்* படி ஓவி நிகழ்கின்ற,*
பரஞ்சோதி நின்னுள்ளே* படர் உலகம் படைத்த,* எம்
பரஞ்சோதி கோவிந்தா!* பண்பு உரைக்கமாட்டேனே.
மாட்டாதே ஆகிலும்* இம் மலர் தலை மாஞாலம்,* நின்
மாட்டு ஆய மலர்புரையும்* திருவுருவம் மனம் வைக்க*
மாட்டாத பலசமய* மதி கொடுத்தாய், மலர்த்துழாய்*
மாட்டேநீ மனம் வைத்தாய்* மாஞாலம் வருந்தாதே?
வருந்தாத அரும்தவத்த* மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,*
வருந்தாத ஞானம் ஆய்* வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*
வரும் காலம் நிகழ் காலம்* கழி காலம் ஆய்,* உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர்* எங்கு உலக்க ஓதுவனே?
ஓதுவார் ஓத்து எல்லாம்* எவ் உலகத்து எவ் எவையும்,*
சாதுவாய் நின் புகழின்* தகை அல்லால் பிறிது இல்லை,*
போது வாழ் புனம் துழாய்* முடியினாய்,* பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய்!* என் சொல்லி யான் வாழ்த்துவனே?
வாழ்த்துவார் பலர் ஆக* நின்னுள்ளே நான்முகனை,*
மூழ்த்த நீர் உலகு எல்லாம்* படை என்று முதல் படைத்தாய்*
கேழ்த்த சீர் அரன் முதலாக்* கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,*
சூழ்த்து அமரர் துதித்தால்* உன் தொல் புகழ் மாசூணாதே?
மாசூணாச் சுடர் உடம்புஆய்* மலராது குவியாது,*
மாசூணா ஞானம் ஆய்* முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*
மாசூணா வான் கோலத்து* அமரர் கோன் வழிப்பட்டால்,*
மாசூணா உனபாத* மலர்ச் சோதி மழுங்காதே?
மழுங்காத வைந் நுதிய* சக்கர நல் வலத்தையாய்,*
தொழும் காதல் களிறு அளிப்பான்* புள் ஊர்ந்து தோன்றினையே,*
மழுங்காத ஞானமே* படை ஆக மலர் உலகில்*
தொழும்பாயார்க்கு அளித்தால்* உன் சுடர்ச் சோதி மறையாதே?
மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,*
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய்
பிறை ஏறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறை ஆதல் அறிந்து ஏத்த* வீற்றிருத்தல் இது வியப்பே?
வியப்பாய வியப்புஇல்லா* மெய்ஞ் ஞான வேதியனைச்,*
சயப்புகழார் பலர் வாழும்* தடம் குருகூர்ச் சடகோபன்,*
துயக்கு இன்றித் தொழுது உரைத்த* ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்* ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)
ஒரு நாயகமாய்* ஓட உலகு உடன் ஆண்டவர்,*
கரு நாய் கவர்ந்த காலர்* சிதைகிய பானையர்,*
பெரு நாடு காண* இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,*
திருநாரணன் தாள்* காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.
உய்ம்மின் திறைகொணர்ந்து* என்று உலகு ஆண்டவர்,* இம்மையே
தம் இன்சுவை மடவாரைப்* பிறர் கொள்ளத் தாம் விட்டு*
வெம் மின் ஒளிவெயில்* கானகம் போய்க் குமைதின்பர்கள்,*
செம்மின் முடித் திருமாலை* விரைந்து அடி சேர்மினோ.
அடி சேர் முடியினர் ஆகி* அரசர்கள் தாம் தொழ,*
இடி சேர் முரசங்கள்* முற்றத்து இயம்ப இருந்தவர்,*
பொடி சேர் துகளாய்ப் போவர்கள்* ஆதலில் நொக்கெனக்,*
கடி சேர் துழாய்முடிக்* கண்ணன் கழல்கள் நினைமினோ.
நினைப்பான் புகில் கடல் எக்கலின்* நுண்மணலில் பலர்,*
எனைத்தோர் உகங்களும்* இவ் உலகு ஆண்டு கழிந்தவர்,*
மனைப்பால் மருங்கு* அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,*
பனைத் தாள் மத களிறு அட்டவன்* பாதம் பணிமினோ.
பணிமின் திருவருள் என்னும்* அம் சீதப் பைம் பூம் பள்ளி,*
அணி மென் குழலார்* இன்பக் கலவி அமுது உண்டார்,*
துணி முன்பு நால* பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்,*
மணி மின்னு மேனி* நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது* மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,*
ஆழ்ந்தார் என்று அல்லால்* அன்று முதல் இன்று அறுதியா,*
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்* என்பது இல்லை நிற்குறில்,*
ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி* அண்ணல் அடியவர் ஆமினோ.
ஆம் இன் சுவை அவை* ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்,*
தூ மென் மொழி மடவார்* இரக்கப் பின்னும் துற்றுவார்,*
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று* இடறுவர் ஆதலின்,*
கோமின் துழாய் முடி* ஆதி அம் சோதி குணங்களே.
குணம் கொள் நிறை புகழ் மன்னர்* கொடைக்கடன் பூண்டிருந்து,*
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்* ஆங்கு அவனை இல்லார்,*
மணம் கொண்ட போகத்து மன்னியும்* மீள்வர்கள் மீள்வு இல்லை,*
பணம் கொள் அரவு அணையான்* திருநாமம் படிமினோ.
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து* ஐம்புலன் வென்று,*
செடி மன்னு காயம் செற்றார்களும்* ஆங்கு அவனை இல்லார்,*
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும்* மீள்வர்கள் மீள்வு இல்லை,*
கொடி மன்னு புள் உடை* அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி* எல்லாம்விட்ட,*
இறுகல் இறப்பு என்னும்* ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,*
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்* பின்னும் வீடு இல்லை,*
மறுகல் இல் ஈசனைப் பற்றி* விடாவிடில் வீடு அஃதே.
அஃதே உய்யப் புகும் ஆறு என்று* கண்ணன் கழல்கள் மேல்,*
கொய் பூம் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,*
செய் கோலத்து ஆயிரம்* சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,*
அஃகாமல் கற்பவர்* ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.
கை ஆர் சக்கரத்து* என் கருமாணிக்கமே! என்று என்று,*
பொய்யே கைம்மைசொல்லி* புறமே புறமே ஆடி.*
மெய்யே பெற்றொழிந்தேன்,* விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
ஐயோ கண்ணபிரான்!* அறையோ இனிப்போனாலே. (2)
போனாய் மாமருதின் நடுவே* என் பொல்லா மணியே,*
தேனே! இன்அமுதே!'* என்று என்றே சில கூத்துச்சொல்ல,*
தானேல் எம்பெருமான்* அவன் என் ஆகி ஒழிந்தான்,*
வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.
உள்ளன மற்று உளவா* புறமே சில மாயம் சொல்லி,*
வள்ளல் மணிவண்ணனே!* என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*
கள்ள மனம் தவிர்ந்தே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,*
வெள்ளத்து அணைக்கிடந்தாய்* இனி உன்னை விட்டு என் கொள்வனே?
என் கொள்வன் உன்னை விட்டு என்னும்* வாசகங்கள் சொல்லியும்,*
வன் கள்வனேன் மனத்தை வலித்து* கண்ண நீர் கரந்து,*
நின்கண் நெருங்கவைத்தே* எனது ஆவியை நீக்ககில்லேன்,*
என்கண் மலினம் அறுத்து* என்னைக்கூவி அருளாய்கண்ணனே!
கண்ணபிரானை* விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,*
நண்ணியும் நண்ணகில்லேன்* நடுவே ஓர் உடம்பில் இட்டு,*
திண்ணம் அழுந்தக் கட்டிப்* பல செய்வினை வன் கயிற்றால்,*
புண்ணை மறையவரிந்து* என்னைப் போர வைத்தாய் புறமே.
புறம் அறக் கட்டிக்கொண்டு* இரு வல்வினையார் குமைக்கும்,*
முறை முறை யாக்கை புகல்ஒழியக்* கண்டு கொண்டொழிந்தேன்,*
நிறம் உடை நால்தடம்தோள்* செய்யவாய் செய்ய தாமரைக்கண்,*
அறம்முயல் ஆழிஅங்கைக்* கருமேனி அம்மான் தன்னையே.
அம்மான் ஆழிப்பிரான்* அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,*
எம் மா பாவியர்க்கும்* விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,*
'கைம்மா துன்பு ஒழித்தாய்!' என்று கைதலைபூசல் இட்டே,*
மெய்ம் மால் ஆயொழிந்தேன்* எம்பிரானும் என் மேலானே.
மேலாத் தேவர்களும்* நிலத் தேவரும் மேவித் தொழும்,*
மாலார் வந்து இனநாள்* அடியேன் மனத்தே மன்னினார்,*
சேல் ஏய் கண்ணியரும்* பெரும் செல்வமும் நன்மக்களும்,*
மேலாத் தாய் தந்தையும்* அவரே இனி ஆவாரே.
ஆவார் ஆர் துணை என்று* அலை நீர்க் கடலுள் அழுந்தும்-
நாவாய் போல்,* பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,*
தேவு ஆர் கோலத்தொடும்* திருச் சக்கரம் சங்கினொடும்,*
ஆஆ என்று அருள்செய்து* அடியேனொடும் ஆனானே.
ஆனான் ஆளுடையான் என்று* அஃதே கொண்டு உகந்துவந்து*
தானே இன்அருள் செய்து* என்னை முற்றவும் தான் ஆனான்,*
மீன் ஆய் ஆமையும் ஆய்* நரசிங்கமும் ஆய் குறள் ஆய்,*
கான் ஆர் ஏனமும் ஆய்* கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே.
கார்வண்ணன் கண்ண பிரான்* கமலத்தடங்கண்ணன் தன்னை,*
ஏர்வள ஒண்கழனிக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்*
ஆர்வண்ணத்தால் உரைப்பார்* அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.
வைகல் பூங் கழிவாய்* வந்து மேயும் குருகினங்காள்*
செய் கொள் செந்நெல் உயர்* திருவண்வண்டூர் உறையும்*
கை கொள் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
கைகள் கூப்பி சொல்லீர்* வினையாட்டியேன் காதன்மையே*. (2)
காதல் மென் பெடையோடு* உடன் மேயும் கரு நாராய்*
வேத வேள்வி ஒலி முழங்கும்* தண் திருவண்வண்டூர்*
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட* நம் பெருமானைக் கண்டு*
பாதம் கைதொழுது பணியீர்* அடியேன் திறமே*.
திறங்கள் ஆகி எங்கும்* செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்*
சிறந்த செல்வம் மல்கு* திருவண்வண்டூர் உறையும்*
கறங்கு சக்கரக் கைக்* கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
இறங்கி நீர் தொழுது பணியீர்* அடியேன் இடரே*
இடர் இல் போகம் மூழ்கி* இணைந்து ஆடும் மட அன்னங்காள்!*
விடல் இல் வேத ஒலி முழங்கும்* தண் திருவண்வண்டூர்*
கடலின் மேனிப்பிரான்* கண்ணனை நெடுமாலைக் கண்டு*
உடலம் நைந்து ஒருத்தி* உருகும் என்று உணர்த்துமினே*
உணர்த்தல் ஊடல் உணர்ந்து* உடன் மேயும் மட அன்னங்காள்*
திணர்த்த வண்டல்கள்மேல்* சங்கு சேரும் திருவண்வண்டூர்*
புணர்த்த பூந் தண் துழாய்முடி* நம் பெருமானைக் கண்டு*
புணர்த்த கையினராய்* அடியேனுக்கும் போற்றுமினே*
போற்றி யான் இரந்தேன்* புன்னைமேல் உறை பூங் குயில்காள்*
சேற்றில் வாளை துள்ளும்* திருவண்வண்டூர் உறையும்*
ஆற்றல் ஆழி அங்கை* அமரர் பெருமானைக் கண்டு*
மாற்றம் கொண்டருளீர்* மையல் தீர்வது ஒருவண்ணமே*
ஒருவண்ணம் சென்று புக்கு* எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே*
செரு ஒண் பூம் பொழில் சூழ்* செக்கர் வேலைத் திருவண்வண்டூர்*
கரு வண்ணம் செய்யவாய்* செய்ய கண் செய்ய கை செய்யகால்*
செரு ஒண் சக்கரம் சங்கு* அடையாளம் திருந்தக் கண்டே*.
திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய்* ஒண் சிறு பூவாய்*
செருந்தி ஞாழல் மகிழ்* புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்*
பெரும் தண் தாமரைக்கண்* பெரு நீள் முடி நால் தடந்தோள்*
கருந் திண் மா முகில் போல்* திருமேனி அடிகளையே*
அடிகள் கைதொழுது* அலர்மேல் அசையும் அன்னங்காள்*
விடிவை சங்கு ஒலிக்கும்* திருவண்வண்டூர் உறையும்*
கடிய மாயன் தன்னை* கண்ணனை நெடுமாலைக் கண்டு*
கொடிய வல்வினையேன்* திறம் கூறுமின் வேறுகொண்டே*
வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்* வெறி வண்டினங்காள்*
தேறு நீர்ப் பம்பை* வடபாலைத் திருவண்வண்டூர்*
மாறு இல் போர் அரக்கன்* மதிள் நீறு எழச் செற்று உகந்த*
ஏறு சேவகனார்க்கு* என்னையும் உளள் என்மின்களே*
மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்* அகல் ஞாலம் கொண்ட*
வன் கள்வன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருவண்வண்டூர்க்கு*
இன்கொள் பாடல் வல்லார்* மதனர் மின்னிடை யவர்க்கே* (2)
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி* என்னை உன் பாதபங்கயம்,*
நண்ணிலாவகையே* நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,*
எண் இலாப் பெறுமாயனே! இமையோர்கள் ஏத்தும்* உலகம் மூன்று உடை,*
அண்ணலே! அமுதே! அப்பனே!* என்னை ஆள்வானே! (2)
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து* இராப்பகல் மோதுவித்திட்டு,*
உன்னை நான் அணுகாவகை* செய்து போதிகண்டாய்,*
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!* கடல் ஞாலம் காக்கின்ற*
மின்னு நேமியினாய்!* வினையேனுடை வேதியனே!
வேதியாநிற்கும் ஐவரால்* வினையேனை மோதுவித்து* உன் திருவடிச்
சாதியாவகை* நீ தடுத்து என் பெறுதிஅந்தோ,*
ஆதி ஆகி அகல் இடம் படைத்து* உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட-
சோதி நீள் முடியாய்!* தொண்டனேன் மதுசூதனனே!
சூது நான் அறியாவகை* சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி* உன் அடிப்போது-
நான் அணுகாவகை* செய்து போதிகண்டாய்,*
யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி* ஓர் ஆலின் நீள் இலை,*
மீது சேர் குழவி!* வினையேன் வினைதீர் மருந்தே!
தீர் மருந்து இன்றி ஐந்து நோய்* அடும் செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை,*
நேர் மருங்கு உடைத்தா அடைத்து* நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,*
ஆர் மருந்து இனி ஆகுவார்?* அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம்,*
வேர் மருங்கு அறுத்தாய்!* விண்ணுளார் பெருமானே? ஓ!
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்* ஐம்புலன் இவை,
மண்ணுள் என்னைப் பெற்றால்* என் செய்யா மற்று நீயும் விட்டால்?*
பண்ணுளாய் கவி தன்னுளாய்!* பத்தியின் உள்ளாய்! பரமீசனே,* வந்து என்-
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத* ஓர் ஐவர் வன் கயவரை,*
என்று யான் வெல்கிற்பன்* உன் திருவருள் இல்லையேல்?,*
அன்று தேவர் அசுரர் வாங்க* அலைகடல் அரவம் அளாவி,* ஓர்
குன்றம் வைத்த எந்தாய்!* கொடியேன் பருகு இன் அமுதே!
இன் அமுது எனத் தோன்றி* ஓர் ஐவர் யாவரையும் மயக்க,* நீ வைத்த-
முன்னம் மாயம் எல்லாம்* முழு வேர் அரிந்து* என்னை உன்-
சின்னமும் திரு மூர்த்தியும்* சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு,*
என் அம்மா! என் கண்ணா!* இமையோர் தம் குலமுதலே !
குலம் முதல் அடும் தீவினைக்* கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை*
வலம் முதல் கெடுக்கும்* வரமே தந்தருள்கண்டாய்,*
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும்* நிற்பன செல்வன எனப்,* பொருள்-
பல முதல் படைத்தாய்!* என் கண்ணா! என் பரஞ்சுடரே!
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி* உன் இணைத் தாமரைகட்கு,*
அன்பு உருகி நிற்கும்* அது நிற்க சுமடு தந்தாய்,*
வன் பரங்கள் எடுத்து ஐவர்* திசை திசை வலித்து எற்றுகின்றனர்:*
முன் பரவை கடைந்து* அமுதம் கொண்ட மூர்த்தி ஓ!
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்* குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,* அப்
புண்டரீகக் கொப்பூழ்ப்* புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்
தொண்டர் தொண்டர் தொண்டன்* சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,*
கண்டு பாட வல்லார்* வினை போம் கங்குலும் பகலே. (2)
தேவிமார் ஆவார் திருமகள்பூமி* ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்*
மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி* வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்* பவளவாய் மணியே*
ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே!* காணுமாறு அருளாய் (2)
காணுமாறுஅருளாய் என்றுஎன்றே கலங்கி* கண்ணநீர் அலமர* வினையேன்
பேணுமாறுஎல்லாம் பேணி* நின்பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ*
காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!* தொண்டனேன் கற்பகக்கனியே*
பேணுவார் அமுதே! பெரிய தண்புனல்சூழ்* பெருநிலம் எடுத்த பேராளா!
எடுத்தபேராளன் நந்தகோபன்தன்* இன்உயிர்ச் சிறுவனே* அசோதைக்கு
அடுத்தபேரின்பக் குலஇளம்களிறே* அடியனேன் பெரிய அம்மானே*
கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்* கைஉகிர் ஆண்ட எம்கடலே,*
அடுத்ததுஓர் உருவாய் இன்று நீ வாராய்* எங்ஙனம் தேறுவர் உமரே?
உமர்உகந்துஉகந்த உருவம்நின்உருவம்ஆகி* உன்தனக்கு அன்பர் ஆனார்*
அவர் உகந்துஅமர்ந்த செய்கை உன்மாயை* அறிவுஒன்றும் சங்கிப்பன் வினையேன்*
அமர்அதுபண்ணி அகல்இடம்புடைசூழ்* அடுபடை அவித்த அம்மானே*
அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே* என்னுடை ஆர்உயிரேயோ!
ஆர்உயிரேயோ அகல்இடம்முழுதும்* படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்துஅளந்த*
பேர்உயிரேயோ பெரியநீர் படைத்து* அங்கு உறைந்து அது கடைந்துஅடைத்து உடைத்த*
சீர்உயிரேயோ மனிசர்க்குத்தேவர் போலத்* தேவர்க்கும்தேவாவோ*
ஓர்உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்து உறுகோ?
எங்குவந்துஉறுகோ என்னைஆள்வானே* ஏழ்உலகங்களும் நீயே*
அங்கு அவர்க்குஅமைத்த தெய்வமும்நீயே* அவற்றுஅவை கருமமும் நீயே*
பொங்கியபுறம்பால் பொருள்உளவேலும்* அவையுமோ நீ இன்னேஆனால்*
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே* வான்புலன் இறந்ததும் நீயே.
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே* நிகழ்வதோ நீ இன்னேஆனால்*
சிறந்தநின் தன்மை அதுஇதுஉதுஎன்று* அறிவுஒன்றும் சங்கிப்பன்வினையேன்*
கறந்தபால் நெய்யே நெய்யின் சுவையே!* கடலினுள் அமுதமே அமுதில்*
பிறந்த இன்சுவையே சுவையதுபயனே!* பின்னைதோள் மணந்தபேர்ஆயா!
மணந்தபேர்ஆயா! மாயத்தால்முழுதும்* வல்வினையேனை ஈர்கின்ற*
குணங்களை உடையாய் அசுரர் வன்கையர்கூற்றமே!* கொடிய புள்உயர்த்தாய்*
பணங்கள்ஆயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!* பாற்கடல் சேர்ப்பா*
வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்* செய்கையும் யானும் நீதானே.
யானும் நீதானே ஆவதோமெய்யே* அருநரகுஅவையும் நீ ஆனால்*
வான்உயர் இன்பம் எய்தில்என்* மற்றை நரகமே எய்தில்என்? எனினும்,*
யானும் நீதானாய்த் தெளிதொறும், நன்றும் அஞ்சுவன்* நரகம் நான்அடைதல்*
வான்உயர்இன்பம் மன்னிவீற்றிருந்தாய்* அருளுநின் தாள்களைஎனக்கே.
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்* த பேர்உதவிக்கைம்மாறாத்*
தோள்களை ஆரத்தழுவி என்உயிரை* அறவிலை செய்தனன் சோதீ,
தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்* துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்*
தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்* தமியனேன் பெரிய அப்பனே!
பெரிய அப்பனை பிரமன் அப்பனை* உருத்திரன் அப்பனை* முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை* உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*
பெரியவண்குருகூர் வண்சடகோபன்* பேணின ஆயிரத்துள்ளும்*
உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்* உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (2)
கொண்ட பெண்டிர் மக்கள்உற்றார்* சுற்றத்தவர் பிறரும்*
கண்டதோடு பட்டதுஅல்லால்* காதல்மற்றுயாதும்இல்லை*
எண்திசையும் கீழும்மேலும்* முற்றவும் உண்டபிரான்*
தொண்டரோமாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர் துணையே (2)
துணையும் சார்வும்ஆகுவார்போல்* சுற்றத்தவர்பிறரும்*
அணையவந்த ஆக்கம்உண்டேல்* அட்டைகள்போல் சுவைப்பர்*
கணைஒன்றாலே ஏழ்மரமும் எய்த* எம்கார்முகிலைப்*
புணைஎன்றுஉய்யப் போகல்அல்லால்* இல்லைகண்டீர்பொருளே.
பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்* போற்றிஎன்றுஏற்றுஎழுவர்*
இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்* என்னே என்பாரும்இல்லை*
மருள்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப் பிறந்தாற்கு*
அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்* இல்லைகண்டீர்அரணே.
அரணம்ஆவர் அற்றகாலைக்கு* என்றென்று அமைக்கப்பட்டார்*
இரணம்கொண்ட தெப்பர்ஆவர்* இன்றியிட்டாலும் அஃதே*
வருணித்துஎன்னே?* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்* இல்லைகண்டீர் சதிரே.
சதுரம்என்று தம்மைத்தாமே* சம்மதித்து இன்மொழியார்*
மதுரபோகம் துற்றவரே* வைகிமற்றுஒன்றுஉறுவர்*
அதிர்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப்பிறந்தாற்கு*
எதிர்கொள்ஆளாய் உய்யல்அல்லால்* இல்லைகண்டீர் இன்பமே.
இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!* உள்ளது நினையாதே*
தொல்லையார்கள் எத்தனைவர்* தோன்றிக் கழிந்தொழிந்தார்?*
மல்லை மூதூர்* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சொல்லிஉய்யப் போகல்அல்லால்* மற்றொன்றுஇல்லைசுருக்கே.
மற்றொன்றுஇல்லை சுருங்கச்சொன்னோம்* மாநிலத்துஎவ்உயிர்க்கும்*
சிற்றவேண்டா சிந்திப்பேஅமையும்* கண்டீர்கள்அந்தோ!*
குற்றம்அன்றுஎங்கள் பெற்றத்தாயன்* வடமதுரைப்பிறந்தான்*
குற்றம்இல்சீர் கற்றுவைகல்* வாழ்தல்கண்டீர்குணமே.
வாழ்தல்கண்டீர் குணம்இது அந்தோ!* மாயவன் அடிபரவிப்*
போழ்துபோக உள்ளகிற்கும்* புன்மைஇலாதவர்க்கு*
வாழ்துணையா* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
வீழ்துணையாப் போம்இதனில்* யாதும்இல்லைமிக்கதே.
யாதும்இல்லை மிக்குஅதனில்* என்றுஎன்று அதுகருதி*
காதுசெய்வான் கூதைசெய்து* கடைமுறை வாழ்க்கையும்போம்*
மாதுகிலின் கொடிக்கொள்மாட* வடமதுரைப்பிறந்த*
தாதுசேர்தோள் கண்ணன் அல்லால்* இல்லை கண்டீர் சரணே.
கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்* சரண்அதுநிற்கவந்து*
மண்ணின் பாரம் நீக்குதற்கே* வடமதுரைப்பிறந்தான்*
திண்ணமாநும் உடைமை உண்டேல்* அவன்அடி சேர்த்துஉய்ம்மினோ*
எண்ணவேண்டா நும்மதுஆதும்* அவன்அன்றிமற்றுஇல்லையே.
ஆதும்இல்லை மற்றுஅவனில்* என்றுஅதுவே துணிந்து*
தாதுசேர்தோள் கண்ணனைக்* குருகூர்ச்சடகோபன்சொன்ன*
தீதுஇலாத ஒண்தமிழ்கள்* இவைஆயிரத்துள் இப்பத்தும்*
ஓதவல்லபிராக்கள்* நம்மை ஆளுடையார்கள் பண்டே. (2)
தாள தாமரைத்* தடம்அணி வயல் திருமோகூர்*
நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று* அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குஉடைச்* சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்*
காள மேகத்தை அன்றி* மற்றொன்றுஇலம் கதியே. (2)
இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்* ஈன்தண் துழாயின்*
அலங்கலங்கண்ணி* ஆயிரம் பேர்உடை அம்மான்*
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்* திருமோகூர்*
நலங்கழல் அவன் அடிநிழல்* தடமன்றி யாமே.
அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றுஎன்று அலற்றி*
நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*
வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்* திருமோகூர்*
நன்று நாம் இனி நணுகுதும்* நமதுஇடர் கெடவே.
இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்* என்றுஎன்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர்! வம்மினே.
தொண்டீர்! வம்மின்* நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்*
அண்டம் மூவுலகு அளந்தவன்* அணி திருமோகூர்*
எண் திசையும் ஈன்கரும்பொடு* பெரும்செந்நெல் விளையக்*
கொண்ட கோயிலை வலஞ்செய்து* இங்கு ஆடுதும் கூத்தே.
கூத்தன் கோவலன்* குதற்று வல்லசுரர்கள் கூற்றம்*
ஏத்தும் நங்கட்கும்* அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*
வாய்த்த தண்பணை வளவயல்சூழ்* திருமோகூர்-
ஆத்தன்* தாமரை அடிஅன்றி* மற்றுஇலம் அரணே.
மற்றிலம் அரண்* வான்பெரும் பாழ்தனி முதலாச்*
சுற்றும் நீர்படைத்து* அதன்வழித் தொல்முனி முதலா*
முற்றும் தேவரோடு* உலகுசெய்வான் திருமோகூர்*
சுற்றிநாம் வலஞ்செய்ய* நம் துயர்கெடும் கடிதே.
துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து* அடியவர் தொழுமின்*
உயர்கொள் சோலை* ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*
பெயர்கள் ஆயிரம்உடைய* வல்லரக்கர் புக்குஅழுந்த*
தயரதன் பெற்ற* மரகத மணித் தடத்தினையே.
மணித் தடத்தடி மலர்க்கண்கள்* பவளச் செவ்வாய்*
அணிக்கொள் நால்தடம்தோள்* தெய்வம் அசுரரை என்றும்*
துணிக்கும் வல்அரட்டன்* உறைபொழில் திருமோகூர்*
நணித்து நம்முடை நல்லரண்* நாம் அடைந்தனமே.
நாம்அடைந்த நல்அரண்* நமக்குஎன்று நல்அமரர்*
தீமை செய்யும் வல்அசுரரை* அஞ்சிச் சென்றுஅடைந்தால்*
காமரூபம் கொண்டு* எழுந்துஅளிப்பான் திருமோகூர்*
நாமமே நவின்று எண்ணுமின்* ஏத்துமின் நமர்காள்!
ஏத்துமின் நமர்காள்* என்றுதான் குடம்ஆடு-
கூத்தனைக்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*
வாய்த்த ஆயிரத்துள் இவை* வண் திருமோகூர்க்கு*
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு* இடர் கெடுமே. (2)