பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
ஆடி ஆடி* அகம் கரைந்து,* இசை
பாடிப் பாடிக்* கண்ணீர் மல்கி,* எங்கும்
நாடி நாடி* நரசிங்கா என்று,*
வாடி வாடும்* இவ் வாள் நுதலே.
வாள் நுதல்* இம் மடவரல்,* உம்மைக்
காணும் ஆசையுள்* நைகின்றாள்,* விறல்
வாணன்* ஆயிரம் தோள் துணித்தீர்,* உம்மைக்
காண* நீர் இரக்கம் இலீரே.
இரக்க மனத்தோடு* எரி அணை,*
அரக்கும் மெழுகும்* ஒக்கும் இவள்,*
இரக்கம் எழீர்* இதற்கு என் செய்கேன்,*
அரக்கன் இலங்கை* செற்றீருக்கே.
இலங்கை செற்றவனே என்னும்,* பின்னும்
வலம் கொள்* புள் உயர்த்தாய் என்னும்,* உள்ளம்
மலங்க* வெவ் உயிர்க்கும்,* கண்ணீர் மிகக்
கலங்கிக்* கைதொழும் நின்று இவளே
இவள் இராப்பகல்* வாய்வெரீ இத்,* தன
குவளை ஒண்* கண்ண நீர் கொண்டாள்,* வண்டு
திவளும்* தண் அம் துழாய் கொடீர்,* என
தவள வண்ணர்* தகவுகளே.
தகவு உடையவனே என்னும்,* பின்னும்
மிக விரும்பும்* பிரான் என்னும்,* எனது
அக உயிர்க்கு* அமுதே என்னும்,* உள்ளம்
உக உருகி* நின்று உள் உளே.
உள் உள் ஆவி* உலர்ந்து உலர்ந்து,* என
வள்ளலே* கண்ணனே என்னும்,* பின்னும்
வெள்ள நீர்க்* கிடந்தாய் என்னும்,* என
கள்விதான்* பட்ட வஞ்சனையே.
வஞ்சனே என்னும்* கைதொழும்,* தன
நெஞ்சம்வேவ* நெடிது உயிர்க்கும்,* விறல்
கஞ்சனை* வஞ்சனை செய்தீர்,* உம்மைத்
தஞ்சம் என்று* இவள் பட்டனவே.
பட்ட போது* எழு போது அறியாள்,* விரை
மட்டு அலர்* தண் துழாய் என்னும்,* சுடர்
வட்ட வாய்* நுதி நேமியீர்,* நுமது
இட்டம் என்கொல்* இவ்ஏழைக்கே.
ஏழை பேதை* இராப்பகல்,* தன
கேழ் இல் ஒண்* கண்ண நீர் கொண்டாள்,* கிளர்
வாழ்வை வேவ* இலங்கை செற்றீர்.* இவள்
மாழை நோக்கு ஒன்றும்* வாட்டேன்மினே
வாட்டம் இல் புகழ்* வாமனனை* இசை
கூட்டி* வண் சடகோபன் சொல்,* அமை
பாட்டு* ஓர் ஆயிரத்து இப் பத்தால்,* அடி
சூட்டலாகும்* அம் தாமமே.
புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,*
திகழும் தண் பரவை என்கோ!* தீ என்கோ! வாயு என்கோ,*
நிகழும் ஆகாசம் என்கோ!* நீள் சுடர் இரண்டும் என்கோ,*
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ* கண்ணனைக் கூவும் ஆறே!
கூவும் ஆறு அறியமாட்டேன்* குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
மேவு சீர் மாரி என்கோ!* விளங்கு தாரகைகள் என்கோ,*
நா இயல் கலைகள் என்கோ!* ஞான நல்ஆவி என்கோ,*
பாவு சீர்க் கண்ணன் எம்மான்* பங்கயக் கண்ணனையே!
பங்கயக் கண்ணன் என்கோ!* பவளச் செவ்வாயன் என்கோ,*
அம் கதிர் அடியன் என்கோ!* அஞ்சன வண்ணன் என்கோ,*
செங்கதிர் முடியன் என்கோ!* திரு மறு மார்பன் என்கோ,*
சங்கு சக்கரத்தன் என்கோ!* சாதி மாணிக்கத்தையே!
சாதி மாணிக்கம் என்கோ!* சவி கொள் பொன் முத்தம் என்கோ*
சாதி நல் வயிரம் என்கோ,* தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,*
ஆதி அம் சோதி என்கோ!* ஆதி அம் புருடன் என்கோ,*
ஆதும் இல் காலத்து எந்தை* அச்சுதன் அமலனையே!
அச்சுதன் அமலன் என்கோ,* அடியவர் வினை கெடுக்கும்,*
நச்சும் மா மருந்தம் என்கோ!* நலங் கடல் அமுதம் என்கோ,*
அச்சுவைக் கட்டி என்கோ!* அறுசுவை அடிசில் என்கோ,*
நெய்ச் சுவைத் தேறல் என்கோ!* கனி என்கோ! பால் என்கேனோ!
பால் என்கோ!* நான்கு வேதப் பயன் என்கோ,* சமய நீதி
நூல் என்கோ!* நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ,* வினையின் மிக்க பயன் என்கோ,* கண்ணன் என்கோ!-
மால் என்கோ! மாயன் என்கோ* வானவர் ஆதியையே!
வானவர் ஆதி என்கோ!* வானவர் தெய்வம் என்கோ,*
வானவர் போகம் என்கோ!* வானவர் முற்றும் என்கோ,*
ஊனம் இல் செல்வம் என்கோ!* ஊனம் இல் சுவர்க்கம் என்கோ,*
ஊனம் இல் மோக்கம் என்கோ!* ஒளி மணி வண்ணனையே!
ஒளி மணி வண்ணன் என்கோ!* ஒருவன் என்று ஏத்த நின்ற*
நளிர் மதிச் சடையன் என்கோ!* நான்முகக் கடவுள் என்கோ,*
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்* படைத்து அவை ஏத்த நின்ற,*
களி மலர்த் துளவன் எம்மான்* கண்ணனை மாயனையே!
கண்ணனை மாயன் தன்னை* கடல் கடைந்து அமுதம் கொண்ட,*
அண்ணலை அச்சுதனை* அனந்தனை அனந்தன் தன்மேல்,*
நண்ணி நன்கு உறைகின்றானை* ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை,*
எண்ணும் ஆறு அறியமாட்டேன்,* யாவையும் எவரும் தானே.
யாவையும் எவரும் தானாய்* அவரவர் சமயம் தோறும்,*
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*
ஆவி சேர் உயிரின் உள்ளால்* ஆதும் ஓர் பற்று இலாத,*
பாவனை அதனைக் கூடில்* அவனையும் கூடலாமே.
கூடி வண்டு அறையும் தண் தார்க்* கொண்டல் போல் வண்ணன் தன்னை*
மாடு அலர் பொழில்* குருகூர் வண் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்தும் வல்லார்,*
வீடு இல போகம் எய்தி* விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)
மண்ணை இருந்து துழாவி* 'வாமனன் மண் இது' என்னும்,*
விண்ணைத் தொழுது அவன் மேவு* வைகுந்தம் என்று கை காட்டும்,*
கண்ணை உள்நீர் மல்க நின்று* 'கடல்வண்ணன்' என்னும் அன்னே!* என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு* என் செய்கேன் பெய் வளையீரே? (2)
பெய்வளைக் கைகளைக் கூப்பி* 'பிரான்கிடக்கும் கடல்' என்னும்,*
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி,* 'சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,*
நையும் கண்ணீர் மல்க நின்று* 'நாரணன்' என்னும் அன்னே,* என்
தெய்வ உருவில் சிறுமான்* செய்கின்றது ஒன்று அறியேனே.
அறியும் செந்தீயைத் தழுவி* 'அச்சுதன்' என்னும்மெய்வேவாள்,*
எறியும்தண் காற்றைத் தழுவி* 'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,*
வெறிகொள் துழாய் மலர் நாறும்* வினையுடையாட்டியேன் பெற்ற*
செறிவளை முன்கைச் சிறுமான்* செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?
ஒன்றிய திங்களைக் காட்டி* 'ஒளிமணி வண்ணனே' என்னும்*
நின்ற குன்றத்தினை நோக்கி* நெடுமாலே! வா 'என்று கூவும்,*
நன்று பெய்யும் மழை காணில்* நாரணன் வந்தான் என்று ஆலும்,*
என்று இன மையல்கள் செய்தான்* என்னுடைக் கோமளத்தையே?
கோமள வான் கன்றைப் புல்கி* கோவிந்தன் மேய்த்தன' என்னும்,*
போம் இள நாகத்தின் பின்போய்* அவன் கிடக்கை ஈது என்னும்,*
ஆம் அளவு ஒன்றும் அறியேன்* அருவினையாட்டியேன் பெற்ற,*
கோமள வல்லியை மாயோன்* மால் செய்து செய்கின்ற கூத்தே.
கூத்தர் குடம் எடுத்து ஆடில்* 'கோவிந்தன்ஆம்' எனா ஓடும்,*
வாய்த்த குழல் ஓசை கேட்கில்* 'மாயவன்' என்று மையாக்கும்,*
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்* அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,*
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு* என் பெண்கொடி ஏறிய பித்தே!
ஏறிய பித்தினோடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,*
நீறு செவ்வே இடக் காணில்* நெடுமால் அடியார்' என்று ஓடும்,*
நாறு துழாய் மலர் காணில்* நாரணன் கண்ணி ஈது என்னும்,*
தேறியும் தேறாதும் மாயோன்* திறத்தனளே இத் திருவே.
திரு உடை மன்னரைக் காணில்,* திருமாலைக் கண்டேனே என்னும்,*
உரு உடை வண்ணங்கள் காணில்* 'உலகு அளந்தான்' என்று துள்ளும்,*
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்* 'கடல்வண்ணன் கோயிலே' என்னும்*
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்* கண்ணன் கழல்கள் விரும்புமே.
விரும்பிப் பகவரைக் காணில்* 'வியல் இடம் உண்டானே!' என்னும்,*
கரும் பெரு மேகங்கள் காணில்* 'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்,*
பெரும் புல ஆ நிரை காணில்* 'பிரான் உளன்' என்று பின் செல்லும்,*
அரும் பெறல் பெண்ணினை மாயோன்* அலற்றி அயர்ப்பிக்கின்றானே!
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி* அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,*
வியர்க்கும் மழைக்கண் துளும்ப* வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்,*
பெயர்த்தும் கண்ணா! என்று பேசும்,* பெருமானே! வா! என்று கூவும்,*
மயல் பெருங் காதல் என் பேதைக்கு* என்செய்கேன் வல்வினையேனே!
வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,*
சொல் வினையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இவை பத்தும்,*
நல் வினை என்று கற்பார்கள்* நலனிடை வைகுந்தம் நண்ணி,*
தொல்வினை தர எல்லாரும்* தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)
ஊர் எல்லாம் துஞ்சி* உலகு எல்லாம் நள் இருள் ஆய்*
நீர் எல்லாம் தேறி* ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்*
பார் எல்லாம் உண்ட* நம் பாம்பு அணையான் வாரானால்*
ஆர் எல்லே! வல்வினையேன்* ஆவி காப்பார் இனியே?* (2)
ஆவி காப்பார் இனி யார்?* ஆழ் கடல் மண் விண் மூடி*
மா விகாரம் ஆய்* ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்*
காவி சேர் வண்ணன்* என் கண்ணனும் வாரானால்*
பாவியேன் நெஞ்சமே!* நீயும் பாங்கு அல்லையே?*.
நீயும் பாங்கு அல்லைகாண்* நெஞ்சமே நீள் இரவும்*
ஓயும் பொழுது இன்றி* ஊழி ஆய் நீண்டதால்*
காயும் கடும் சிலை* என் காகுத்தன் வாரானால்*
மாயும் வகை அறியேன்* வல்வினையேன் பெண் பிறந்தே*
பெண் பிறந்தார் எய்தும்* பெரும் துயர் காண்கிலேன் என்று*
ஒண் சுடரோன்* வாராது ஒளித்தான்* இம்மண்அளந்த-
கண் பெரிய செவ்வாய்* எம் கார் ஏறு வாரானால்*
எண் பெரிய சிந்தைநோய்* தீர்ப்பார் ஆர் என்னையே?*
ஆர் என்னை ஆராய்வார்?* அன்னையரும் தோழியரும்*
'நீர் என்னே?' என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்*
கார் அன்ன மேனி* நம் கண்ணனும் வாரானால்*
பேர் என்னை மாயாதால்* வல்வினையேன் பின் நின்றே*.
பின்நின்று காதல் நோய்* நெஞ்சம் பெரிது அடுமால்*
முன்நின்று இரா ஊழி* கண் புதைய மூடிற்றால்*
மன் நின்ற சக்கரத்து* எம் மாயவனும் வாரானால்*
இந் நின்ற நீள் ஆவி* காப்பார் ஆர் இவ் இடத்தே?*
காப்பார் ஆர் இவ் இடத்து?* கங்கு இருளின் நுண் துளி ஆய்*
சேண் பாலது ஊழி ஆய்* செல்கின்ற கங்குல்வாய்த்*
தூப் பால வெண்சங்கு* சக்கரத்தன் தோன்றானால்*
தீப் பால வல்வினையேன்* தெய்வங்காள்! என் செய்கேனோ?*
தெய்வங்காள்! என் செய்கேன்?* ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்*
மெய் வந்து நின்று* எனது ஆவி மெலிவிக்கும்,*
கைவந்த சக்கரத்து* என் கண்ணனும் வாரானால்*
தைவந்த தண் தென்றல்* வெம் சுடரில் தான் அடுமே*
வெம் சுடரில் தான் அடுமால்* வீங்கு இருளின் நுண் துளி ஆய்*
அம் சுடர வெய்யோன்* அணி நெடும் தேர் தோன்றாதால்*
செஞ் சுடர்த் தாமரைக்கண்* செல்வனும் வாரானால்*
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனியார்?* நின்று உருகுகின்றேனே!*
நின்று உருகுகின்றேனே போல* நெடு வானம்*
சென்று உருகி நுண் துளி ஆய்* செல்கின்ற கங்குல்வாய்*
அன்று ஒருகால் வையம்* அளந்த பிரான் வாரான் என்று*
ஒன்று ஒருகால் சொல்லாது* உலகோ உறங்குமே*
உறங்குவான் போல்* யோகுசெய்த பெருமானை*
சிறந்த பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிறம் கிளர்ந்த அந்தாதி* ஆயிரத்துள் இப்பத்தால்*
இறந்து போய் வைகுந்தம்* சேராவாறு எங்ஙனேயோ?*
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்* குன்றம் ஒன்று ஏந்தியதும்*
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்* உட்பட மற்றும் பல*
அரவில் பள்ளிப் பிரான்தன்* மாய வினைகளையே அலற்றி,*
இரவும் நன் பகலும் தவிர்கிலன்* என்ன குறை எனக்கே?
கேயத் தீம்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்* கெண்டை ஒண்கண்*
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்* மணந்ததும் மற்றும்பல,*
மாயக் கோலப் பிரான்தன்* செய்கை நினைந்து மனம்குழைந்து,*
நேயத்தோடு கழிந்த போது* எனக்கு எவ் உலகம் நிகரே?
நிகர் இல் மல்லரைச் செற்றதும்* நிரை மேய்த்ததும் நீள் நெடும் கைச்,*
சிகர மா களிறு அட்டதும்* இவை போல்வனவும் பிறவும்,*
புகர்கொள் சோதிப் பிரான்தன்* செய்கை நினைந்து புலம்பி என்றும்*
நுகர வைகல் வைகப்பெற்றேன்* எனக்கு என் இனி நோவதுவே?
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க* இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்*
சாவப் பால் உண்டதும்* ஊர் சகடம் இறச் சாடியதும்,*
தேவக் கோலப் பிரான்தன்* செய்கை நினைந்து மனம்குழைந்து,*
மேவக் காலங்கள் கூடினேன்* எனக்கு என் இனி வேண்டுவதே?
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்* வீங்கு இருள்வாய்-
பூண்டு* அன்று அன்னைப் புலம்ப போய்* அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்*
காண்டல் இன்றி வளர்ந்து* கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,*
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன்* எனக்கு என்ன இகல் உளதே?
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும்* இமில் ஏறுகள் செற்றதுவும்,*
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்* உட்பட மற்றும்பல,*
அகல் கொள் வையம் அளந்த மாயன்* என்னப்பன் தன் மாயங்களே,*
பகல் இராப் பரவப் பெற்றேன்* எனக்கு என்ன மனப் பரிப்பே?
மனப் பரிப்போடு அழுக்கு* மானிட சாதியில் தான்பிறந்து,*
தனக்கு வேண்டு உருக்கொண்டு* தான் தன சீற்றத்தினை முடிக்கும்,*
புனத் துழாய் முடி மாலை மார்பன்* என் அப்பன் தன் மாயங்களே,*
நினைக்கும் நெஞ்சு உடையேன்* எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே?
நீள் நிலத்தொடு வான் வியப்ப* நிறை பெரும் போர்கள் செய்து*
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்* உட்பட மற்றும்பல,*
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன்* என் அப்பன் தன் மாயங்களே*
காணும் நெஞ்சு உடையேன்* எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே?
கலக்க ஏழ் கடல் ஏழ்* மலை உலகு ஏழும் கழியக் கடாய்*
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்* உட்பட மற்றும் பல,*
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்* இவை உடை மால்வண்ணனை,*
மலக்கும் நா உடையேற்கு* மாறு உளதோ இம் மண்ணின் மிசையே?
மண்மிசைப் பெரும் பாரம் நீங்க* ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி,* மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட* நூற்றிட்டுப் போய்,*
விண்மிசைத் தன தாமமேபுக* மேவிய சோதிதன்தாள்,*
நண்ணி நான் வணங்கப்பெற்றேன்* எனக்கு ஆர்பிறர் நாயகரே?
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய்* முழு ஏழ் உலகும்,* தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்து* அவை ஆய் அவை அல்லனும் ஆம்,*
கேசவன் அடி இணைமிசைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
தூய ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆவர் துவள் இன்றியே.
ஆழிஎழ* சங்கும் வில்லும்எழ,* திசை
வாழிஎழ* தண்டும் வாளும்எழ,* அண்டம்
மோழைஎழ* முடி பாதம்எழ,* அப்பன்
ஊழிஎழ* உலகம் கொண்டவாறே (2)
ஆறு மலைக்கு* எதிர்ந்துஓடும் ஒலி,* அரவு
ஊறு சுலாய்* மலை தேய்க்கும் ஒலி,* கடல்
மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,* அப்பன்
சாறுபட* அமுதம்கொண்ட நான்றே.
நான்றிலஏழ்* மண்ணும் தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழ்* மலை தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழ்* கடல் தானத்தவே,* அப்பன்
ஊன்றி இடந்து* எயிற்றில் கொண்ட நாளே.
நாளும்எழ* நிலம் நீரும்எழ* விண்ணும்
கோளும்எழ* எரி காலும்எழ,* மலை
தாளும்எழ* சுடர் தானும்எழ,* அப்பன்
ஊளிஎழ* உலகம்உண்ட ஊணே
ஊணுடை மல்லர்* ததர்ந்த ஒலி,* மன்னர்
ஆண்உடைச் சேனை* நடுங்கும் ஒலி,* விண்ணுள்
ஏண்உடைத் தேவர்* வெளிப்பட்ட ஒலி,* அப்பன்
காணுடைப் பாரதம்* கைஅறை போழ்தே
போழ்து மெலிந்த* புன் செக்கரில்,* வான்திசை
சூழும் எழுந்து* உதிரப்புனலா,* மலை
கீழ்து பிளந்த* சிங்கம்ஒத்ததால்,* அப்பன்
ஆழ்துயர் செய்து* அசுரரைக் கொல்லுமாறே.
மாறு நிரைத்து* இரைக்கும் சரங்கள்,* இன
நூறு பிணம்* மலை போல் புரள,* கடல்
ஆறு மடுத்து* உதிரப்புனலா,* அப்பன்
நீறுபட* இலங்கை செற்ற நேரே
நேர்சரிந்தான்* கொடிக் கோழிகொண்டான்,* பின்னும்
நேர்சரிந்தான்* எரியும் அனலோன்,* பின்னும்
நேர்சரிந்தான்* முக்கண் மூர்த்திகண்டீர்,* அப்பன்
நேர்சரி வாணன்* திண்தோள் கொண்ட அன்றே
அன்றுமண் நீர்எரிகால்* விண் மலைமுதல்,*
அன்று சுடர்* இரண்டு பிறவும்,* பின்னும்
அன்று மழை* உயிர் தேவும் மற்றும்,* அப்பன்
அன்று முதல்* உலகம் செய்ததுமே
மேய்நிரை கீழ்புக* மாபுரள,* சுனை
வாய்நிறை நீர்* பிளிறிச்சொரிய,* இன
ஆநிரை பாடி* அங்கேஒடுங்க,* அப்பன்
தீமழை காத்து* குன்றம் எடுத்தானே
குன்றம் எடுத்தபிரான்* அடியாரொடும்,*
ஒன்றிநின்ற* சடகோபன்உரைசெயல்,*
நன்றி புனைந்த* ஓர்ஆயிரத்துள் இவை*
வென்றி தரும்பத்தும்* மேவிக் கற்பார்க்கே (2)
வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட* மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (2)
எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்* இமையவர் அப்பன் என்அப்பன்*
பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்* பொருந்துமூவுருவன் எம்அருவன்*
செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்* திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு-
அங்கு அமர்கின்ற* ஆதியான் அல்லால்* யாவர்மற்றுஎன்அமர் துணையே?
என்அமர்பெருமான் இமையவர்பெருமான்* இருநிலம் இடந்த எம்பெருமான்*
முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள* என்னைஆள்கின்ற எம்பெருமான்*
தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரைமீபால்-
நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண் நினைப்பிலும்* பிறிதுஇல்லை எனக்கே.
பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்* நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த*
குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த* கோலமாணிக்கம் என்அம்மான்*
செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்* திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய* மெய்ம்மையே நின்ற எம்பெருமான்* அடிஇணை அல்லதுஓர் அரணே.
அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை* அது பொருள்ஆகிலும்* அவனை
அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது* ஆதலால் அவன் உறைகின்ற*
நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த* நறும்புகை விசும்புஒளி மறைக்கும்*
நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.
எனக்கு நல்அரணை எனதுஆருயிரை* இமையவர் தந்தைதாய் தன்னை*
தனக்கும் தன் தன்மை அறிவரியானை* தடம்கடல்பள்ளி அம்மானை*
மனக்கொள்சீர் மூவாயிரவர்* வண்சிவனும் அயனும்தானும் ஒப்பார்வாழ்*
கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே.
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட* அத்திருவடி என்றும்*
திருச்செய்ய கமலக்கண்ணும்* செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*
திருச்செய்யகமல உந்தியும்* செய்யகமலை மார்பும் செய்யஉடையும்*
திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்* திகழ என் சிந்தையுளானே.
திகழ என்சிந்தையுள் இருந்தானை* செழுநிலத்தேவர் நான்மறையோர்*
திசை கைகூப்பி ஏத்தும்* திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையானை*
புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை* அசுரர்வன்கையர் வெம்கூற்றை*
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்* படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்* பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே*
இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே* புகழ்வுஇல்லையாவையும் தானே*
கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்* கூரியவிச்சையோடு ஒழுக்கம்*
நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.
அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி* அவர்க்குஅருள் அருளும் அம்மானை*
அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரையானை*
அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்* தம்பதி அவனிதேவர் வாழ்வு*
அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை* நான்முகனை அமர்ந்தேனே.
தேனைநன்பாலை கன்னலைஅமுதை* திருந்துஉலகுஉண்ட அம்மானை*
வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்* மலர்மிசைப் படைத்தமாயோனை*
கோனை வண்குருகூர் வண்சடகோபன்* சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்*
வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்* பிறவிமாமாயக் கூத்தினையே. (2)
மையார்கருங்கண்ணி* கமல மலர்மேல்*
செய்யாள் திருமார்வினில்சேர்* திருமாலே*
வெய்யார்சுடர்ஆழி* சுரிசங்கம்ஏந்தும்*
கையா உன்னைக்காணக்* கருதும் என்கண்ணே. (2)
கண்ணேஉன்னைக் காணக்கருதி* என்நெஞ்சம்
எண்ணேகொண்ட* சிந்தையதாய் நின்றுஇயம்பும்*
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்புஅரியாயை*
நண்ணாது ஒழியேன் என்று* நான் அழைப்பனே
அழைக்கின்ற அடிநாயேன்* நாய்கூழை வாலால்*
குழைக்கின்றது போல* என்உள்ளம் குழையும்*
மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து* ஆநிரைகாத்தாய்.
பிழைக்கின்றதுஅருள்என்று* பேதுறுவனே
உறுவது இதுஎன்று* உனக்கு ஆள்பட்டு* நின்கண்
பெறுவது எதுகொல்என்று* பேதையேன் நெஞ்சம்*
மறுகல்செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்*
அறிவதுஅரிய* அரியாய அம்மானே!
அரியாய அம்மானை* அமரர் பிரானை*
பெரியானை* பிரமனை முன்படைத்தானை*
வரிவாள் அரவின்அணைப்* பள்ளிகொள்கின்ற*
கரியான்கழல் காணக்* கருதும் கருத்தே.
கருத்தே உன்னைக்* காணக்கருதி* என்நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன்* தேவர்கட்குஎல்லாம்*
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி* உயரத்து
ஒருத்தா* உன்னைஉள்ளும்* என்உள்ளம் உகந்தே
உகந்தேஉன்னை* உள்ளும் என்உள்ளத்து அகம்பால்*
அகம்தான் அமர்ந்தே* இடம்கொண்ட அமலா*
மிகும்தானவன் மார்வுஅகலம்* இருகூறா*
நகந்தாய் நரசிங்கம்அதுஆய உருவே!
உருவாகிய* ஆறுசமயங்கட்குஎல்லாம்*
பொருவாகி நின்றான்* அவன் எல்லாப்பொருட்கும்*
அருவாகிய ஆதியை* தேவர்கட்குஎல்லாம்*
கருவாகிய கண்ணனை* கண்டுகொண்டேனே.
கண்டுகொண்டு* என்கண்இணை ஆரக்களித்து*
பண்டைவினையாயின* பற்றோடுஅறுத்து*
தொண்டர்க்கு அமுதுஉண்ணச்* சொல்மாலைகள் சொன்னேன்*
அண்டத்துஅமரர் பெருமான்!* அடியேனே.
அடியான் இவன்என்று* எனக்குஆர்அருள்செய்யும்
நெடியானை* நிறைபுகழ் அம்சிறைப்* புள்ளின்
கொடியானை* குன்றாமல்* உலகம்அளந்த
அடியானை* அடைந்து அடியேன்* உய்ந்தவாறே
ஆறாமதயானை* அடர்த்தவன்தன்னை*
சேறுஆர்வயல்* தென்குருகூர்ச் சடகோபன்*
நூறேசொன்ன* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
ஏறேதரும்* வானவர்தம் இன்உயிர்க்கே (2)
சார்வே தவநெறிக்குத்* தாமோதரன் தாள்கள்*
கார்மேக வண்ணன்* கமல நயனத்தன்*
நீர்வானம் மண்எரி கால்ஆய்* நின்ற நேமியான்*
பேர் வானவர்கள்* பிதற்றும் பெருமையனே. (2)
பெருமையனே வானத்து இமையோர்க்கும்* காண்டற்கு-
அருமையனே* ஆகத்தணை யாதார்க்கு* என்றும்-
திருமெய் உறைகின்ற* செங்கண்மால்* நாளும்-
இருமை வினைகடிந்து* இங்கு என்னைஆள்கின்றானே.
ஆள்கின்றான் ஆழியான்* ஆரால் குறைவுஉடையம்?*
மீள்கின்றதுஇல்லை* பிறவித் துயர்கடிந்தோம்*
வாள்கெண்டை ஒண்கண்* மடப்பின்னை தன்கேள்வன்*
தாள்கண்டு கொண்டு* என் தலைமேல் புனைந்தேனே.
தலைமேல் புனைந்தேன்* சரணங்கள்* ஆலின்-
இலைமேல் துயின்றான்* இமையோர் வணங்க*
மலைமேல்தான் நின்று* என்மனத்துள் இருந்தானை*
நிலைபேர்க்கல்ஆகாமை* நிச்சித்துஇருந்தேனே.
நிச்சித்துஇருந்தேன்* என்நெஞ்சம் கழியாமை*
கைச்சக்கரத்துஅண்ணல்* கள்வம் பெரிதுஉடையன்*
மெச்சப்படான் பிறர்க்கு* மெய்போலும் பொய்வல்லன்*
நச்சப்படும் நமக்கு* நாகத்து அணையானே.
நாகத்து அணையானை* நாள்தோறும் ஞானத்தால்*
ஆகத்தணைப் பார்க்கு* அருள்செய்யும் அம்மானை*
மாகத்து இளமதியம்* சேரும் சடையானைப்*
பாகத்து வைத்தான் தன்* பாதம் பணிந்தேனே.
பணிநெஞ்சே! நாளும்* பரம பரம்பரனை*
பிணிஒன்றும் சாரா* பிறவி கெடுத்துஆளும்*
மணிநின்ற சோதி* மதுசூதன் என்அம்மான்*
அணிநின்ற செம்பொன்* அடல்ஆழி யானே.
ஆழியான் ஆழி* அமரர்க்கும் அப்பாலான்*
ஊழியான் ஊழி படைத்தான்* நிரைமேய்த்தான்*
பாழிஅம் தோளால்* வரைஎடுத்தான் பாதங்கள்*
வாழி என்நெஞ்சே!* மறவாது வாழ்கண்டாய்.
கண்டேன் கமல மலர்ப்பாதம்* காண்டலுமே*
விண்டே ஒழிந்த* வினையாயின எல்லாம்*
தொண்டேசெய்து என்றும்* தொழுது வழியொழுக*
பண்டே பரமன் பணித்த* பணிவகையே.
வகையால் மனம்ஒன்றி* மாதவனை* நாளும்-
புகையால் விளக்கால்* புதுமலரால் நீரால்*
திசைதோறு அமரர்கள்* சென்று இறைஞ்ச நின்ற*
தகையான் சரணம்* தமர்கட்குஓர் பற்றே.
பற்றுஎன்று பற்றி* பரம பரம்பரனை*
மல் திண்தோள் மாலை* வழுதி வளநாடன்*
சொல் தொடைஅந்தாதி* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
கற்றார்க்கு ஓர்பற்றாகும்* கண்ணன் கழல்இணையே. (2)