பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    ஆடி ஆடி*  அகம் கரைந்து,*  இசை 
    பாடிப் பாடிக்*  கண்ணீர் மல்கி,*  எங்கும்

    நாடி நாடி*  நரசிங்கா என்று,* 
    வாடி வாடும்*  இவ் வாள் நுதலே.   


    வாள் நுதல்*  இம் மடவரல்,*  உம்மைக் 
    காணும் ஆசையுள்*  நைகின்றாள்,*  விறல்

    வாணன்*  ஆயிரம் தோள் துணித்தீர்,*  உம்மைக் 
    காண*  நீர் இரக்கம் இலீரே. 


    இரக்க மனத்தோடு*  எரி அணை,* 
    அரக்கும் மெழுகும்*  ஒக்கும் இவள்,*

    இரக்கம் எழீர்*  இதற்கு என் செய்கேன்,* 
    அரக்கன் இலங்கை*  செற்றீருக்கே.   


    இலங்கை செற்றவனே என்னும்,*  பின்னும் 
    வலம் கொள்*  புள் உயர்த்தாய் என்னும்,*  உள்ளம்

    மலங்க*  வெவ் உயிர்க்கும்,*  கண்ணீர் மிகக் 
    கலங்கிக்*  கைதொழும் நின்று இவளே


    இவள் இராப்பகல்*  வாய்வெரீ இத்,*  தன 
    குவளை ஒண்*  கண்ண நீர் கொண்டாள்,*  வண்டு

    திவளும்*  தண் அம் துழாய் கொடீர்,*  என 
    தவள வண்ணர்*  தகவுகளே. 


    தகவு உடையவனே என்னும்,*  பின்னும் 
    மிக விரும்பும்*  பிரான் என்னும்,*  எனது

    அக உயிர்க்கு*  அமுதே என்னும்,*  உள்ளம் 
    உக உருகி*  நின்று உள் உளே.


    உள் உள் ஆவி*  உலர்ந்து உலர்ந்து,*  என 
    வள்ளலே*  கண்ணனே என்னும்,*  பின்னும்

    வெள்ள நீர்க்*  கிடந்தாய் என்னும்,*  என 
    கள்விதான்*  பட்ட வஞ்சனையே.


    வஞ்சனே என்னும்*  கைதொழும்,*  தன 
    நெஞ்சம்வேவ*  நெடிது உயிர்க்கும்,*  விறல்

    கஞ்சனை*  வஞ்சனை செய்தீர்,*  உம்மைத் 
    தஞ்சம் என்று*  இவள் பட்டனவே.     


    பட்ட போது*  எழு போது அறியாள்,*  விரை 
    மட்டு அலர்*  தண் துழாய் என்னும்,*  சுடர்

    வட்ட வாய்*  நுதி நேமியீர்,*  நுமது 
    இட்டம் என்கொல்*  இவ்ஏழைக்கே.


    ஏழை பேதை*  இராப்பகல்,*  தன 
    கேழ் இல் ஒண்*  கண்ண நீர் கொண்டாள்,*  கிளர்

    வாழ்வை வேவ*  இலங்கை செற்றீர்.*  இவள் 
    மாழை நோக்கு ஒன்றும்*  வாட்டேன்மினே      


    வாட்டம் இல் புகழ்*  வாமனனை*  இசை 
    கூட்டி*  வண் சடகோபன் சொல்,*  அமை 

    பாட்டு*  ஓர் ஆயிரத்து இப் பத்தால்,*  அடி 
    சூட்டலாகும்*  அம் தாமமே.      


    புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,* 
    திகழும் தண் பரவை என்கோ!*  தீ என்கோ! வாயு என்கோ,*

    நிகழும் ஆகாசம் என்கோ!*  நீள் சுடர் இரண்டும் என்கோ,* 
    இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ*  கண்ணனைக் கூவும் ஆறே! 


    கூவும் ஆறு அறியமாட்டேன்*  குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
    மேவு சீர் மாரி என்கோ!*  விளங்கு தாரகைகள் என்கோ,*

    நா இயல் கலைகள் என்கோ!*  ஞான நல்ஆவி என்கோ,* 
    பாவு சீர்க் கண்ணன் எம்மான்*  பங்கயக் கண்ணனையே! 


    பங்கயக் கண்ணன் என்கோ!*  பவளச் செவ்வாயன் என்கோ,*
    அம் கதிர் அடியன் என்கோ!*  அஞ்சன வண்ணன் என்கோ,*

    செங்கதிர் முடியன் என்கோ!*  திரு மறு மார்பன் என்கோ,*
    சங்கு சக்கரத்தன் என்கோ!*  சாதி மாணிக்கத்தையே!      


    சாதி மாணிக்கம் என்கோ!*  சவி கொள் பொன் முத்தம் என்கோ*
    சாதி நல் வயிரம் என்கோ,*  தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,*

    ஆதி அம் சோதி என்கோ!*  ஆதி அம் புருடன் என்கோ,* 
    ஆதும் இல் காலத்து எந்தை*  அச்சுதன் அமலனையே!    


    அச்சுதன் அமலன் என்கோ,*  அடியவர் வினை கெடுக்கும்,* 
    நச்சும் மா மருந்தம் என்கோ!*  நலங் கடல் அமுதம் என்கோ,*

    அச்சுவைக் கட்டி என்கோ!*  அறுசுவை அடிசில் என்கோ,*
    நெய்ச் சுவைத் தேறல் என்கோ!*  கனி என்கோ! பால் என்கேனோ!


    பால் என்கோ!*  நான்கு வேதப் பயன் என்கோ,*  சமய நீதி 
    நூல் என்கோ!*  நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல

    மேல் என்கோ,*  வினையின் மிக்க பயன் என்கோ,*  கண்ணன் என்கோ!- 
    மால் என்கோ! மாயன் என்கோ*  வானவர் ஆதியையே!    


    வானவர் ஆதி என்கோ!*  வானவர் தெய்வம் என்கோ,*
    வானவர் போகம் என்கோ!*  வானவர் முற்றும் என்கோ,*

    ஊனம் இல் செல்வம் என்கோ!*  ஊனம் இல் சுவர்க்கம் என்கோ,*
    ஊனம் இல் மோக்கம் என்கோ!*  ஒளி மணி வண்ணனையே!


    ஒளி மணி வண்ணன் என்கோ!*  ஒருவன் என்று ஏத்த நின்ற* 
    நளிர் மதிச் சடையன் என்கோ!*  நான்முகக் கடவுள் என்கோ,*

    அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்*  படைத்து அவை ஏத்த நின்ற,* 
    களி மலர்த் துளவன் எம்மான்*  கண்ணனை மாயனையே!   


    கண்ணனை மாயன் தன்னை*  கடல் கடைந்து அமுதம் கொண்ட,* 
    அண்ணலை அச்சுதனை*  அனந்தனை அனந்தன் தன்மேல்,* 

    நண்ணி நன்கு உறைகின்றானை*  ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை,* 
    எண்ணும் ஆறு அறியமாட்டேன்,*  யாவையும் எவரும் தானே. 


    யாவையும் எவரும் தானாய்*  அவரவர் சமயம் தோறும்,* 
    தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்*  சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*

    ஆவி சேர் உயிரின் உள்ளால்*  ஆதும் ஓர் பற்று இலாத,* 
    பாவனை அதனைக் கூடில்*  அவனையும் கூடலாமே.   


    கூடி வண்டு அறையும் தண் தார்க்*  கொண்டல் போல் வண்ணன் தன்னை* 
    மாடு அலர் பொழில்*  குருகூர் வண் சடகோபன் சொன்ன,* 

    பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்தும் வல்லார்,* 
    வீடு இல போகம் எய்தி*  விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)   


    மண்ணை இருந்து துழாவி*  'வாமனன் மண் இது' என்னும்,* 
    விண்ணைத் தொழுது அவன் மேவு*  வைகுந்தம் என்று கை காட்டும்,* 

    கண்ணை உள்நீர் மல்க நின்று*  'கடல்வண்ணன்' என்னும் அன்னே!*  என் 
    பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு*  என் செய்கேன் பெய் வளையீரே? (2)      


    பெய்வளைக் கைகளைக் கூப்பி*  'பிரான்கிடக்கும் கடல்' என்னும்,* 
    செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி,*  'சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,* 

    நையும் கண்ணீர் மல்க நின்று*  'நாரணன்' என்னும் அன்னே,*  என் 
    தெய்வ உருவில் சிறுமான்*  செய்கின்றது ஒன்று அறியேனே.


    அறியும் செந்தீயைத் தழுவி*  'அச்சுதன்' என்னும்மெய்வேவாள்,* 
    எறியும்தண் காற்றைத் தழுவி*  'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,*

    வெறிகொள் துழாய் மலர் நாறும்*  வினையுடையாட்டியேன் பெற்ற* 
    செறிவளை முன்கைச் சிறுமான்*  செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?   


    ஒன்றிய திங்களைக் காட்டி*  'ஒளிமணி வண்ணனே' என்னும்* 
    நின்ற குன்றத்தினை நோக்கி* நெடுமாலே! வா 'என்று கூவும்,* 

    நன்று பெய்யும் மழை காணில்*  நாரணன் வந்தான் என்று ஆலும்,* 
    என்று இன மையல்கள் செய்தான்*  என்னுடைக் கோமளத்தையே?


    கோமள வான் கன்றைப் புல்கி*  கோவிந்தன் மேய்த்தன' என்னும்,* 
    போம் இள நாகத்தின் பின்போய்*  அவன் கிடக்கை ஈது என்னும்,*

    ஆம் அளவு ஒன்றும் அறியேன்*  அருவினையாட்டியேன் பெற்ற,* 
    கோமள வல்லியை மாயோன்*  மால் செய்து செய்கின்ற கூத்தே.


    கூத்தர் குடம் எடுத்து ஆடில்*  'கோவிந்தன்ஆம்' எனா ஓடும்,* 
    வாய்த்த குழல் ஓசை கேட்கில்*  'மாயவன்' என்று மையாக்கும்,*

    ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்*  அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,* 
    பேய்ச்சி முலை சுவைத்தாற்கு*  என் பெண்கொடி ஏறிய பித்தே!


    ஏறிய பித்தினோடு*  எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,* 
    நீறு செவ்வே இடக் காணில்*  நெடுமால் அடியார்' என்று ஓடும்,*

    நாறு துழாய் மலர் காணில்*  நாரணன் கண்ணி ஈது என்னும்,* 
    தேறியும் தேறாதும் மாயோன்*  திறத்தனளே இத் திருவே.


    திரு உடை மன்னரைக் காணில்,*  திருமாலைக் கண்டேனே என்னும்,* 
    உரு உடை வண்ணங்கள் காணில்*  'உலகு அளந்தான்' என்று துள்ளும்,*

    கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்*  'கடல்வண்ணன் கோயிலே' என்னும்* 
    வெருவிலும் வீழ்விலும் ஓவாள்*  கண்ணன் கழல்கள் விரும்புமே.      


    விரும்பிப் பகவரைக் காணில்*  'வியல் இடம் உண்டானே!' என்னும்,* 
    கரும் பெரு மேகங்கள் காணில்*  'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்,*

    பெரும் புல ஆ நிரை காணில்*  'பிரான் உளன்' என்று பின் செல்லும்,* 
    அரும் பெறல் பெண்ணினை மாயோன்*  அலற்றி அயர்ப்பிக்கின்றானே!    


    அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி*  அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,* 
    வியர்க்கும் மழைக்கண் துளும்ப*  வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்,* 
     

    பெயர்த்தும் கண்ணா! என்று பேசும்,*  பெருமானே! வா! என்று கூவும்,* 
    மயல் பெருங் காதல் என் பேதைக்கு*  என்செய்கேன் வல்வினையேனே!   


    வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,* 
    சொல் வினையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இவை பத்தும்,*

    நல் வினை என்று கற்பார்கள்*  நலனிடை வைகுந்தம் நண்ணி,*
    தொல்வினை தர எல்லாரும்*  தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)


    ஊர் எல்லாம் துஞ்சி*  உலகு எல்லாம் நள் இருள் ஆய்* 
    நீர் எல்லாம் தேறி*  ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்* 

    பார் எல்லாம் உண்ட*  நம் பாம்பு அணையான் வாரானால்* 
    ஆர் எல்லே! வல்வினையேன்*  ஆவி காப்பார் இனியே?* (2)   


    ஆவி காப்பார் இனி யார்?*  ஆழ் கடல் மண் விண் மூடி* 
    மா விகாரம் ஆய்*  ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்*

    காவி சேர் வண்ணன்*  என் கண்ணனும் வாரானால்* 
    பாவியேன் நெஞ்சமே!*  நீயும் பாங்கு அல்லையே?*.      


    நீயும் பாங்கு அல்லைகாண்*  நெஞ்சமே நீள் இரவும்* 
    ஓயும் பொழுது இன்றி*  ஊழி ஆய் நீண்டதால்* 

    காயும் கடும் சிலை*  என் காகுத்தன் வாரானால்* 
    மாயும் வகை அறியேன்*  வல்வினையேன் பெண் பிறந்தே*


    பெண் பிறந்தார் எய்தும்*  பெரும் துயர் காண்கிலேன் என்று* 
    ஒண் சுடரோன்*  வாராது ஒளித்தான்*  இம்மண்அளந்த-

    கண் பெரிய செவ்வாய்*  எம் கார் ஏறு வாரானால்* 
    எண் பெரிய சிந்தைநோய்*  தீர்ப்பார் ஆர் என்னையே?*


    ஆர் என்னை ஆராய்வார்?*  அன்னையரும் தோழியரும்* 
    'நீர் என்னே?' என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்* 

    கார் அன்ன மேனி*  நம் கண்ணனும் வாரானால்* 
    பேர் என்னை மாயாதால்*  வல்வினையேன் பின் நின்றே*.


    பின்நின்று காதல் நோய்*  நெஞ்சம் பெரிது அடுமால்* 
    முன்நின்று இரா ஊழி*  கண் புதைய மூடிற்றால்* 

    மன் நின்ற சக்கரத்து*  எம் மாயவனும் வாரானால்* 
    இந் நின்ற நீள் ஆவி*  காப்பார் ஆர் இவ் இடத்தே?*


    காப்பார் ஆர் இவ் இடத்து?*  கங்கு இருளின் நுண் துளி ஆய்* 
    சேண் பாலது ஊழி ஆய்*  செல்கின்ற கங்குல்வாய்த்* 

    தூப் பால வெண்சங்கு*  சக்கரத்தன் தோன்றானால்* 
    தீப் பால வல்வினையேன்*  தெய்வங்காள்! என் செய்கேனோ?*   


    தெய்வங்காள்! என் செய்கேன்?*  ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்* 
    மெய் வந்து நின்று*  எனது ஆவி மெலிவிக்கும்,* 

    கைவந்த சக்கரத்து*  என் கண்ணனும் வாரானால்* 
    தைவந்த தண் தென்றல்*  வெம் சுடரில் தான் அடுமே* 


    வெம் சுடரில் தான் அடுமால்*  வீங்கு இருளின் நுண் துளி ஆய்* 
    அம் சுடர வெய்யோன்*  அணி நெடும் தேர் தோன்றாதால்* 

    செஞ் சுடர்த் தாமரைக்கண்*  செல்வனும் வாரானால்* 
    நெஞ்சு இடர் தீர்ப்பார் இனியார்?*  நின்று உருகுகின்றேனே!*            


    நின்று உருகுகின்றேனே போல*  நெடு வானம்* 
    சென்று உருகி நுண் துளி ஆய்*  செல்கின்ற கங்குல்வாய்* 

    அன்று ஒருகால் வையம்*  அளந்த பிரான் வாரான் என்று* 
    ஒன்று ஒருகால் சொல்லாது*  உலகோ உறங்குமே*      


    உறங்குவான் போல்*  யோகுசெய்த பெருமானை* 
    சிறந்த பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொல்*

    நிறம் கிளர்ந்த அந்தாதி*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
    இறந்து போய் வைகுந்தம்*  சேராவாறு எங்ஙனேயோ?*    


    குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்*  குன்றம் ஒன்று ஏந்தியதும்* 
    உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்*  உட்பட மற்றும் பல* 

    அரவில் பள்ளிப் பிரான்தன்*  மாய வினைகளையே அலற்றி,* 
    இரவும் நன் பகலும் தவிர்கிலன்*  என்ன குறை எனக்கே?        


    கேயத் தீம்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்*  கெண்டை ஒண்கண்* 
    வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்*  மணந்ததும் மற்றும்பல,* 

    மாயக் கோலப் பிரான்தன்*  செய்கை நினைந்து மனம்குழைந்து,* 
    நேயத்தோடு கழிந்த போது*  எனக்கு எவ் உலகம் நிகரே?      


    நிகர் இல் மல்லரைச் செற்றதும்*  நிரை மேய்த்ததும் நீள் நெடும் கைச்,* 
    சிகர மா களிறு அட்டதும்*  இவை போல்வனவும் பிறவும்,* 

    புகர்கொள் சோதிப் பிரான்தன்*  செய்கை நினைந்து புலம்பி என்றும்* 
    நுகர வைகல் வைகப்பெற்றேன்*  எனக்கு என் இனி நோவதுவே?    


    நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*  இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்* 
    சாவப் பால் உண்டதும்*  ஊர் சகடம் இறச் சாடியதும்,* 

    தேவக் கோலப் பிரான்தன்*  செய்கை நினைந்து மனம்குழைந்து,* 
    மேவக் காலங்கள் கூடினேன்*  எனக்கு என் இனி வேண்டுவதே?  


    வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்*  வீங்கு இருள்வாய்- 
    பூண்டு*  அன்று அன்னைப் புலம்ப போய்*  அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்* 

    காண்டல் இன்றி வளர்ந்து*  கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்,* 
    ஈண்டு நான் அலற்றப்பெற்றேன்*  எனக்கு என்ன இகல் உளதே?    


    இகல் கொள் புள்ளைப் பிளந்ததும்*  இமில் ஏறுகள் செற்றதுவும்,* 
    உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்*  உட்பட மற்றும்பல,* 

    அகல் கொள் வையம் அளந்த மாயன்*  என்னப்பன் தன் மாயங்களே,* 
    பகல் இராப் பரவப் பெற்றேன்*  எனக்கு என்ன மனப் பரிப்பே?         


    மனப் பரிப்போடு அழுக்கு*  மானிட சாதியில் தான்பிறந்து,* 
    தனக்கு வேண்டு உருக்கொண்டு*  தான் தன சீற்றத்தினை முடிக்கும்,* 

    புனத் துழாய் முடி மாலை மார்பன்*  என் அப்பன் தன் மாயங்களே,* 
    நினைக்கும் நெஞ்சு உடையேன்*  எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே?


    நீள் நிலத்தொடு வான் வியப்ப*  நிறை பெரும் போர்கள் செய்து* 
    வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்*  உட்பட மற்றும்பல,* 

    மாணி ஆய் நிலம் கொண்ட மாயன்*  என் அப்பன் தன் மாயங்களே* 
    காணும் நெஞ்சு உடையேன்*  எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே?


    கலக்க ஏழ் கடல் ஏழ்*  மலை உலகு ஏழும் கழியக் கடாய்* 
    உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்*  உட்பட மற்றும் பல,* 

    வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்*  இவை உடை மால்வண்ணனை,* 
    மலக்கும் நா உடையேற்கு*  மாறு உளதோ இம் மண்ணின் மிசையே?


    மண்மிசைப் பெரும் பாரம் நீங்க*  ஓர் பாரத மா பெரும் போர் 
    பண்ணி,*  மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட*  நூற்றிட்டுப் போய்,* 

    விண்மிசைத் தன தாமமேபுக*  மேவிய சோதிதன்தாள்,* 
    நண்ணி நான் வணங்கப்பெற்றேன்*  எனக்கு ஆர்பிறர் நாயகரே?       


    நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய்*  முழு ஏழ் உலகும்,*  தன் 
    வாயகம் புக வைத்து உமிழ்ந்து*  அவை ஆய் அவை அல்லனும் ஆம்,* 

    கேசவன் அடி இணைமிசைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
    தூய ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆவர் துவள் இன்றியே.         


    ஆழிஎழ*  சங்கும் வில்லும்எழ,*  திசை 
    வாழிஎழ*  தண்டும் வாளும்எழ,*  அண்டம்

    மோழைஎழ*  முடி பாதம்எழ,*  அப்பன் 
    ஊழிஎழ*  உலகம் கொண்டவாறே   (2)


    ஆறு மலைக்கு*  எதிர்ந்துஓடும் ஒலி,*  அரவு 
    ஊறு சுலாய்*  மலை தேய்க்கும் ஒலி,*  கடல்

    மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,*  அப்பன் 
    சாறுபட*  அமுதம்கொண்ட நான்றே.


    நான்றிலஏழ்*  மண்ணும் தானத்தவே,*  பின்னும் 
    நான்றில ஏழ்*  மலை தானத்தவே,*  பின்னும்

    நான்றில ஏழ்*  கடல் தானத்தவே,*  அப்பன் 
    ஊன்றி இடந்து*  எயிற்றில் கொண்ட நாளே.    


    நாளும்எழ*  நிலம் நீரும்எழ*  விண்ணும் 
    கோளும்எழ*  எரி காலும்எழ,*  மலை

    தாளும்எழ*  சுடர் தானும்எழ,*  அப்பன் 
    ஊளிஎழ*  உலகம்உண்ட ஊணே     


    ஊணுடை மல்லர்*  ததர்ந்த ஒலி,*  மன்னர் 
    ஆண்உடைச் சேனை*  நடுங்கும் ஒலி,*  விண்ணுள்

    ஏண்உடைத் தேவர்*  வெளிப்பட்ட ஒலி,*  அப்பன் 
    காணுடைப் பாரதம்*  கைஅறை போழ்தே


    போழ்து மெலிந்த*  புன் செக்கரில்,*  வான்திசை 
    சூழும் எழுந்து*  உதிரப்புனலா,*  மலை

    கீழ்து பிளந்த*  சிங்கம்ஒத்ததால்,*  அப்பன் 
    ஆழ்துயர் செய்து*  அசுரரைக் கொல்லுமாறே.  


    மாறு நிரைத்து*  இரைக்கும் சரங்கள்,*  இன 
    நூறு பிணம்*  மலை போல் புரள,*  கடல்

    ஆறு மடுத்து*  உதிரப்புனலா,*  அப்பன் 
    நீறுபட*  இலங்கை செற்ற நேரே


    நேர்சரிந்தான்*  கொடிக் கோழிகொண்டான்,*  பின்னும் 
    நேர்சரிந்தான்*  எரியும் அனலோன்,*  பின்னும்

    நேர்சரிந்தான்*  முக்கண் மூர்த்திகண்டீர்,*  அப்பன் 
    நேர்சரி வாணன்*  திண்தோள் கொண்ட அன்றே 


    அன்றுமண் நீர்எரிகால்*  விண் மலைமுதல்,* 
    அன்று சுடர்*  இரண்டு பிறவும்,*  பின்னும்

    அன்று மழை*  உயிர் தேவும் மற்றும்,* அப்பன் 
    அன்று முதல்*  உலகம் செய்ததுமே


    மேய்நிரை கீழ்புக*  மாபுரள,*  சுனை 
    வாய்நிறை நீர்*  பிளிறிச்சொரிய,*  இன

    ஆநிரை பாடி*  அங்கேஒடுங்க,*  அப்பன் 
    தீமழை காத்து*  குன்றம் எடுத்தானே     


    குன்றம் எடுத்தபிரான்*  அடியாரொடும்,* 
    ஒன்றிநின்ற*  சடகோபன்உரைசெயல்,*

    நன்றி புனைந்த*  ஓர்ஆயிரத்துள் இவை* 
    வென்றி தரும்பத்தும்*  மேவிக் கற்பார்க்கே (2)


    வார்கடா அருவி யானை மாமலையின்*   மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி* 
    ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து*  அரங்கின்  மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*

    போர்கடா அரசர் புறக்கிட*  மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த* 
    சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே  (2)  


    எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்*   இமையவர் அப்பன் என்அப்பன்* 
    பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்*   பொருந்துமூவுருவன் எம்அருவன்*

    செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்*   திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு- 
    அங்கு அமர்கின்ற*  ஆதியான் அல்லால்*   யாவர்மற்றுஎன்அமர் துணையே?  


    என்அமர்பெருமான் இமையவர்பெருமான்*   இருநிலம் இடந்த எம்பெருமான்* 
    முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள*   என்னைஆள்கின்ற எம்பெருமான்*

    தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாற்றங்கரைமீபால்- 
    நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண்   நினைப்பிலும்*  பிறிதுஇல்லை எனக்கே.


    பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்*   நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த* 
    குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த*   கோலமாணிக்கம் என்அம்மான்*

    செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்*  திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு 
    அறிய*  மெய்ம்மையே நின்ற எம்பெருமான்*   அடிஇணை அல்லதுஓர் அரணே.  


    அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை*   அது பொருள்ஆகிலும்*  அவனை 
    அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது*   ஆதலால் அவன் உறைகின்ற*

    நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த*   நறும்புகை விசும்புஒளி மறைக்கும்* 
    நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.


    எனக்கு நல்அரணை எனதுஆருயிரை*   இமையவர் தந்தைதாய் தன்னை* 
    தனக்கும் தன் தன்மை அறிவரியானை*   தடம்கடல்பள்ளி அம்மானை*

    மனக்கொள்சீர் மூவாயிரவர்*  வண்சிவனும்  அயனும்தானும் ஒப்பார்வாழ்* 
    கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே. 


    திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட*  அத்திருவடி என்றும்* 
    திருச்செய்ய கமலக்கண்ணும்*  செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*

    திருச்செய்யகமல உந்தியும்*  செய்யகமலை மார்பும் செய்யஉடையும்* 
    திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்*   திகழ என் சிந்தையுளானே.  


    திகழ என்சிந்தையுள் இருந்தானை*  செழுநிலத்தேவர் நான்மறையோர்* 
    திசை கைகூப்பி ஏத்தும்*  திருச்செங்குன்றூரில்  திருச்சிற்றாற்றங்கரையானை*

    புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை*   அசுரர்வன்கையர் வெம்கூற்றை* 
    புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்*   படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!


    படைப்பொடு கெடுப்புக் காப்பவன்*  பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே* 
    இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே*  புகழ்வுஇல்லையாவையும் தானே*

    கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்*  கூரியவிச்சையோடு ஒழுக்கம்* 
    நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.


    அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி*  அவர்க்குஅருள் அருளும் அம்மானை* 
    அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாற்றங்கரையானை*

    அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்*   தம்பதி அவனிதேவர் வாழ்வு* 
    அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை*   நான்முகனை அமர்ந்தேனே. 


    தேனைநன்பாலை கன்னலைஅமுதை*  திருந்துஉலகுஉண்ட அம்மானை* 
    வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்*  மலர்மிசைப் படைத்தமாயோனை*

    கோனை வண்குருகூர் வண்சடகோபன்*  சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்* 
    வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்*  பிறவிமாமாயக் கூத்தினையே.   (2)


    மையார்கருங்கண்ணி*  கமல மலர்மேல்* 
    செய்யாள் திருமார்வினில்சேர்*  திருமாலே*

    வெய்யார்சுடர்ஆழி*  சுரிசங்கம்ஏந்தும்*  
    கையா உன்னைக்காணக்*  கருதும் என்கண்ணே.    (2)


    கண்ணேஉன்னைக் காணக்கருதி*  என்நெஞ்சம் 
    எண்ணேகொண்ட*  சிந்தையதாய்  நின்றுஇயம்பும்*

    விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்புஅரியாயை* 
    நண்ணாது  ஒழியேன் என்று*  நான் அழைப்பனே


    அழைக்கின்ற அடிநாயேன்*  நாய்கூழை வாலால்* 
    குழைக்கின்றது போல*  என்உள்ளம் குழையும்*

    மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து*  ஆநிரைகாத்தாய். 
    பிழைக்கின்றதுஅருள்என்று*  பேதுறுவனே


    உறுவது இதுஎன்று*  உனக்கு ஆள்பட்டு*  நின்கண் 
    பெறுவது எதுகொல்என்று*  பேதையேன் நெஞ்சம்*

    மறுகல்செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்* 
    அறிவதுஅரிய*  அரியாய அம்மானே!    


    அரியாய அம்மானை*  அமரர் பிரானை* 
    பெரியானை*  பிரமனை முன்படைத்தானை*

    வரிவாள் அரவின்அணைப்*  பள்ளிகொள்கின்ற* 
    கரியான்கழல் காணக்*  கருதும் கருத்தே.


    கருத்தே உன்னைக்*  காணக்கருதி*  என்நெஞ்சத்து 
    இருத்தாக இருத்தினேன்*  தேவர்கட்குஎல்லாம்*

    விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி*  உயரத்து 
    ஒருத்தா*  உன்னைஉள்ளும்*  என்உள்ளம் உகந்தே


    உகந்தேஉன்னை*  உள்ளும் என்உள்ளத்து அகம்பால்* 
    அகம்தான் அமர்ந்தே*  இடம்கொண்ட அமலா*

    மிகும்தானவன் மார்வுஅகலம்*  இருகூறா* 
    நகந்தாய் நரசிங்கம்அதுஆய உருவே!


    உருவாகிய*  ஆறுசமயங்கட்குஎல்லாம்* 
    பொருவாகி நின்றான்*  அவன் எல்லாப்பொருட்கும்*

    அருவாகிய ஆதியை*  தேவர்கட்குஎல்லாம்* 
    கருவாகிய கண்ணனை*  கண்டுகொண்டேனே.


    கண்டுகொண்டு*  என்கண்இணை ஆரக்களித்து* 
    பண்டைவினையாயின*  பற்றோடுஅறுத்து*

    தொண்டர்க்கு அமுதுஉண்ணச்*  சொல்மாலைகள் சொன்னேன்* 
    அண்டத்துஅமரர் பெருமான்!* அடியேனே.       


    அடியான் இவன்என்று*  எனக்குஆர்அருள்செய்யும் 
    நெடியானை*  நிறைபுகழ் அம்சிறைப்*  புள்ளின்

    கொடியானை*  குன்றாமல்*  உலகம்அளந்த 
    அடியானை*  அடைந்து அடியேன்*  உய்ந்தவாறே


    ஆறாமதயானை*  அடர்த்தவன்தன்னை* 
    சேறுஆர்வயல்*  தென்குருகூர்ச் சடகோபன்*

    நூறேசொன்ன*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஏறேதரும்*  வானவர்தம் இன்உயிர்க்கே   (2)


    சார்வே தவநெறிக்குத்*  தாமோதரன் தாள்கள்* 
    கார்மேக வண்ணன்*  கமல நயனத்தன்*

    நீர்வானம் மண்எரி கால்ஆய்*  நின்ற நேமியான்* 
    பேர் வானவர்கள்*  பிதற்றும் பெருமையனே.   (2)


    பெருமையனே வானத்து இமையோர்க்கும்*  காண்டற்கு- 
    அருமையனே*  ஆகத்தணை யாதார்க்கு*  என்றும்-

    திருமெய் உறைகின்ற*  செங்கண்மால்*  நாளும்- 
    இருமை வினைகடிந்து*  இங்கு என்னைஆள்கின்றானே.


    ஆள்கின்றான் ஆழியான்*  ஆரால் குறைவுஉடையம்?* 
    மீள்கின்றதுஇல்லை*  பிறவித் துயர்கடிந்தோம்*

    வாள்கெண்டை ஒண்கண்*  மடப்பின்னை தன்கேள்வன்* 
    தாள்கண்டு கொண்டு*  என் தலைமேல் புனைந்தேனே. 


    தலைமேல் புனைந்தேன்*  சரணங்கள்*  ஆலின்- 
    இலைமேல் துயின்றான்*  இமையோர் வணங்க*

    மலைமேல்தான் நின்று*  என்மனத்துள் இருந்தானை* 
    நிலைபேர்க்கல்ஆகாமை*  நிச்சித்துஇருந்தேனே.


    நிச்சித்துஇருந்தேன்*  என்நெஞ்சம் கழியாமை* 
    கைச்சக்கரத்துஅண்ணல்*  கள்வம் பெரிதுஉடையன்*

    மெச்சப்படான் பிறர்க்கு*  மெய்போலும் பொய்வல்லன்* 
    நச்சப்படும் நமக்கு*  நாகத்து அணையானே.  


    நாகத்து அணையானை*  நாள்தோறும் ஞானத்தால்* 
    ஆகத்தணைப் பார்க்கு*  அருள்செய்யும் அம்மானை*

    மாகத்து இளமதியம்*  சேரும் சடையானைப்* 
    பாகத்து வைத்தான் தன்*  பாதம் பணிந்தேனே.


    பணிநெஞ்சே! நாளும்*  பரம பரம்பரனை* 
    பிணிஒன்றும் சாரா*  பிறவி கெடுத்துஆளும்*

    மணிநின்ற சோதி*  மதுசூதன் என்அம்மான்* 
    அணிநின்ற செம்பொன்*  அடல்ஆழி யானே. 


    ஆழியான் ஆழி*  அமரர்க்கும் அப்பாலான்* 
    ஊழியான் ஊழி படைத்தான்*  நிரைமேய்த்தான்*

    பாழிஅம் தோளால்*  வரைஎடுத்தான் பாதங்கள்* 
    வாழி என்நெஞ்சே!*  மறவாது வாழ்கண்டாய்.


    கண்டேன் கமல மலர்ப்பாதம்*  காண்டலுமே* 
    விண்டே ஒழிந்த*  வினையாயின எல்லாம்*

    தொண்டேசெய்து என்றும்*  தொழுது வழியொழுக* 
    பண்டே பரமன் பணித்த*  பணிவகையே.  


    வகையால் மனம்ஒன்றி*  மாதவனை*  நாளும்- 
    புகையால் விளக்கால்*  புதுமலரால் நீரால்*

    திசைதோறு அமரர்கள்*  சென்று இறைஞ்ச நின்ற* 
    தகையான் சரணம்*  தமர்கட்குஓர் பற்றே.


    பற்றுஎன்று பற்றி*  பரம பரம்பரனை* 
    மல் திண்தோள் மாலை*  வழுதி வளநாடன்*

    சொல் தொடைஅந்தாதி*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    கற்றார்க்கு ஓர்பற்றாகும்*  கண்ணன் கழல்இணையே.   (2)