பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
வீடுமின் முற்றவும்* வீடு செய்து* உம் உயிர்
வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)
மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்*
என்னும் இடத்து* இறை உன்னுமின் நீரே.
நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து* இறை
சேர்மின் உயிர்க்கு* அதன் நேர் நிறை இல்லே.
இல்லதும் உள்ளதும்* அல்லது அவன் உரு*
எல்லை இல் அந் நலம்* புல்கு பற்று அற்றே.
அற்றது பற்று எனில்* உற்றது வீடு உயிர்*
செற்ற அது மன் உறில்* அற்று இறை பற்றே.
பற்று இலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*
பற்று இலையாய்* அவன் முற்றில் அடங்கே.
அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு* ஈசன்
அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.
உள்ளம் உரை செயல்* உள்ள இம் மூன்றையும்*
உள்ளிக் கெடுத்து* இறை உள்ளில் ஒடுங்கே.
ஒடுங்க அவன்கண்* ஒடுங்கலும் எல்லாம்*
விடும் பின்னும் ஆக்கை* விடும்பொழுது எண்ணே.
எண் பெருக்கு அந் நலத்து* ஒண் பொருள் ஈறு இல*
வண் புகழ் நாரணன்* திண் கழல் சேரே.
சேர்த்தடத்* தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*
சீர்த் தொடை ஆயிரத்து* ஓர்த்த இப்பத்தே. (2)
திண்ணன் வீடு* முதல் முழுதும் ஆய்,*
எண்ணின் மீதியன்* எம் பெருமான்,*
மண்ணும் விண்ணும் எல்லாம்* உடன் உண்ட,* நம்
கண்ணன் கண் அல்லது* இல்லை ஓர் கண்ணே.
ஏ பாவம் பரமே* ஏழ் உலகும்,*
ஈ பாவம் செய்து* அருளால் அளிப்பார் ஆர்,*
மா பாவம் விட* அரற்குப் பிச்சை பெய்,*
கோபால கோளரி* ஏறு அன்றியே.
ஏறனை பூவனை* பூமகள் தன்னை,*
வேறுஇன்றி விண் தொழத்* தன்னுள் வைத்து,*
மேல் தன்னை மீதிட* நிமிர்ந்து மண் கொண்ட.*
மால் தனின் மிக்கும் ஓர்* தேவும் உளதே.
தேவும் எப் பொருளும் படைக்கப்,*
பூவில் நான்முகனைப் படைத்த,*
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,*
பூவும் பூசனையும் தகுமே.
தகும் சீர்த்* தன் தனி முதலினுள்ளே,*
மிகும் தேவும்* எப் பொருளும் படைக்கத்,*
தகும் கோலத்* தாமரைக் கண்ணன் எம்மான்,*
மிகும் சோதி* மேல் அறிவார் எவரே.
எவரும் யாவையும்* எல்லாப் பொருளும்,*
கவர்வு இன்றித்* தன்னுள் ஒடுங்க நின்ற,*
பவர் கொள் ஞான* வெள்ளச் சுடர் மூர்த்தி,*
அவர் எம் ஆழி* அம் பள்ளியாரே,
பள்ளி ஆல் இலை* ஏழ் உலகும் கொள்ளும்,*
வள்ளல்* வல் வயிற்றுப் பெருமான்,*
உள் உள் ஆர் அறிவார்* அவன் தன்,*
கள்ள மாய* மனக்கருத்தே.
கருத்தில் தேவும்* எல்லாப் பொருளும்,*
வருத்தித்த* மாயப் பிரான் அன்றி,* யாரே
திருத்தித்* திண் நிலை மூவுலகும்* தம்முள்
இருத்திக்* காக்கும் இயல்வினரே.
காக்கும் இயல்வினன்* கண்ண பெருமான்,*
சேர்க்கை செய்து* தன் உந்தியுள்ளே,*
வாய்த்த திசைமுகன்* இந்திரன் வானவர்,*
ஆக்கினான்* தெய்வ உலகுகளே.
கள்வா எம்மையும்* ஏழ் உலகும்,* நின்
உள்ளே தோற்றிய* இறைவ! என்று,*
வெள் ஏறன் நான்முகன்* இந்திரன் வானவர்,*
புள் ஊர்தி* கழல் பணிந்து ஏத்துவரே.
ஏத்த ஏழ் உலகும் கொண்ட* கோலக்
கூத்தனைக்,* குருகூர்ச் சடகோபன் சொல்,*
வாய்த்த ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
ஏத்த வல்லவர்க்கு* இல்லை ஓர் ஊனமே.
முந்நீர் ஞாலம் படைத்த* எம் முகில் வண்ணனே,*
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*
வெம் நாள் நோய் வீய* வினைகளை வேர் அறப் பாய்ந்து,*
எந் நாள் யான் உன்னை* இனி வந்து கூடுவனே? (2)
வன் மா வையம் அளந்த* எம் வாமனா,* நின்
பல்மா மாயப்* பல் பிறவியில் படிகின்ற யான்,*
தொல் மா வல்வினைத்* தொடர்களை முதல் அரிந்து,*
நின் மா தாள் சேர்ந்து* நிற்பது எஞ்ஞான்றுகொலோ?
கொல்லா மாக்கோல்* கொலைசெய்து பாரதப் போர்,*
எல்லாச் சேனையும்* இரு நிலத்து அவித்த எந்தாய்,*
பொல்லா ஆக்கையின்* புணர்வினை அறுக்கல் அறா,*
சொல்லாய் யான் உன்னைச்* சார்வது ஓர் சூழ்ச்சியே.
சூழ்ச்சி ஞானச்* சுடர் ஒளி ஆகி,* என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி* எங்கணும் நிறைந்த எந்தாய்,*
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து* நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி,* யான் சேரும்* வகை அருளாய் வந்தே.
வந்தாய் போலே* வந்தும் என் மனத்தினை நீ,*
சிந்தாமல் செய்யாய்* இதுவே இது ஆகில்,*
கொந்து ஆர் காயாவின்* கொழு மலர்த் திருநிறத்த
எந்தாய்,* யான் உன்னை* எங்கு வந்து அணுகிற்பனே?
கிற்பன் கில்லேன்* என்று இலன் முனம் நாளால்,*
அற்ப சாரங்கள்* அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*
பற்பல் ஆயிரம்* உயிர் செய்த பரமா,* நின்
நற் பொன் சோதித்தாள்* நணுகுவது எஞ்ஞான்றே?
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து* இரங்கி நெஞ்சே!*
மெய்ஞ்ஞானம் இன்றி* வினை இயல் பிறப்பு அழுந்தி,*
எஞ்ஞான்றும் எங்கும்* ஒழிவு அற நிறைந்து நின்ற,*
மெய்ஞ் ஞானச் சோதிக்* கண்ணனை மேவுதுமே?
மேவு துன்ப வினைகளை* விடுத்துமிலேன்,*
ஓவுதல் இன்றி* உன் கழல் வணங்கிற்றிலேன்,*
பாவு தொல் சீர்க் கண்ணா!* என் பரஞ்சுடரே,*
கூவுகின்றேன் காண்பான்* எங்கு எய்தக் கூவுவனே?
கூவிக் கூவிக்* கொடுவினைத் தூற்றுள் நின்று*
பாவியேன் பல காலம்* வழி திகைத்து அலமர்கின்றேன்,*
மேவி அன்று ஆ நிரை காத்தவன்* உலகம் எல்லாம்,*
தாவிய அம்மானை* எங்கு இனித் தலைப்பெய்வனே?
தலைப்பெய் காலம்* நமன்தமர் பாசம் விட்டால்,*
அலைப்பூண் உண்ணும்* அவ் அல்லல் எல்லாம் அகல,*
கலைப் பல் ஞானத்து* என் கண்ணனைக் கண்டுகொண்டு,*
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது* நீடு உயிரே
உயிர்கள் எல்லா* உலகமும் உடையவனைக்,*
குயில் கொள் சோலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசை மாலை* ஆயிரத்துள் இப் பத்தும்,*
உயிரின்மேல் ஆக்கை* ஊனிடை ஒழிவிக்குமே. (2)
பாலன் ஆய்* ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,*
ஆல் இலை* அன்னவசம் செய்யும் அண்ணலார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
மாலுமால்,* வல்வினையேன்* மட வல்லியே. (2)
வல்லி சேர் நுண் இடை* ஆய்ச்சியர் தம்மொடும்,*
கொல்லைமை செய்து* குரவை பிணைந்தவர்,*
நல் அடிமேல் அணி* நாறு துழாய் என்றே
சொல்லுமால்,* சூழ் வினையாட்டியேன் பாவையே.
பா இயல் வேத* நல் மாலை பல கொண்டு,*
தேவர்கள் மா முனிவர்* இறைஞ்ச நின்ற*
சேவடிமேல் அணி* செம் பொன் துழாய் என்றே
கூவுமால்,* கோள் வினையாட்டியேன் கோதையே.
கோது இல வண்புகழ்* கொண்டு சமயிகள்,*
பேதங்கள் சொல்லிப்* பிதற்றும் பிரான்பரன்,*
பாதங்கள் மேல் அணி* பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்,* ஊழ்வினையேன்* தடந் தோளியே.
தோளி சேர் பின்னை பொருட்டு* எருது ஏழ் தழீஇக்
கோளியார்* கோவலனார்* குடக் கூத்தனார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
நாளும்நாள்,* நைகின்றதால்* என்தன் மாதரே
மாதர் மா மண்மடந்தைபொருட்டு* ஏனம் ஆய்,*
ஆதி அம் காலத்து* அகல் இடம் கீண்டவர்,*
பாதங்கள்மேல் அணி* பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்,* எய்தினள் என் தன் மடந்தையே.
மடந்தையை* வண் கமலத் திருமாதினை,*
தடம் கொள் தார் மார்பினில்* வைத்தவர் தாளின்மேல்,*
வடம் கொள் பூம் தண் அம் துழாய்மலர்க்கே* இவள்
மடங்குமால்* வாள் நுதலீர்!! என் மடக்கொம்பே.
கொம்பு போல் சீதைபொருட்டு* இலங்கை நகர்*
அம்பு எரி உய்த்தவர்* தாள் இணைமேல் அணி,*
வம்பு அவிழ் தண் அம் துழாய்* மலர்க்கே இவள்-
நம்புமால்,* நான் இதற்கு என்செய்கேன்* நங்கைமீர்!
நங்கைமீர்! நீரும்* ஓர் பெண் பெற்று நல்கினீர்,*
எங்ஙனே சொல்லுகேன்* யான் பெற்ற ஏழையை,*
சங்கு என்னும் சக்கரம் என்னும்* துழாய் என்னும்,*
இங்ஙனே சொல்லும்* இராப் பகல் என்செய்கேன்?
என் செய்கேன்? என்னுடைப் பேதை* என் கோமளம்,*
என் சொல்லும்* என் வசமும் அல்லள் நங்கைமீர்,*
மின் செய் பூண் மார்பினன்* கண்ணன் கழல் துழாய்,*
பொன் செய்பூண்* மென்முலைக்கு என்று மெலியுமே
மெலியும் நோய் தீர்க்கும்* நம் கண்ணன் கழல்கள்மேல்,*
மலி புகழ் வண் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
ஒலி புகழ் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்*
மலி புகழ் வானவர்க்கு ஆவர்* நல் கோவையே. (2)
பொலிக பொலிக பொலிக!* போயிற்று வல் உயிர்ச் சாபம்*
நலியும் நரகமும் நைந்த* நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*
கலியும் கெடும் கண்டுகொண்மின்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
மலியப் புகுந்து இசைபாடி* ஆடி உழிதரக் கண்டோம்*. (2)
கண்டோம் கண்டோம் கண்டோம்* கண்ணுக்கு இனியன கண்டோம்*
தொண்டீர்! எல்லீரும் வாரீர்* தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*
வண்டுஆர் தண் அம் துழாயான்* மாதவன் பூதங்கள் மண்மேல்*
பண் தான் பாடி நின்று ஆடி* பரந்து திரிகின்றனவே*
திரியும் கலியுகம் நீங்கி* தேவர்கள் தாமும் புகுந்து*
பெரிய கிதயுகம் பற்றி* பேரின்ப வெள்ளம் பெருக*
கரிய முகில்வண்ணன் எம்மான்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
இரியப் புகுந்து இசை பாடி* எங்கும் இடம் கொண்டனவே*
இடம் கொள் சமயத்தை எல்லாம்* எடுத்துக் களைவன போலே*
தடம் கடல் பள்ளிப் பெருமான்* தன்னுடைப் பூதங்களே ஆய்*
கிடந்தும் இருந்தும் எழுந்தும்* கீதம் பலபல பாடி*
நடந்தும் பறந்தும் குனித்தும்* நாடகம் செய்கின்றனவே*.
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே* ஒக்கின்றது இவ் உலகத்து*
வைகுந்தன் பூதங்களே ஆய்* மாயத்தினால் எங்கும் மன்னி*
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்* அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்*
உய்யும் வகை இல்லை தொண்டீர்!* ஊழி பெயர்த்திடும் கொன்றே*
கொன்று உயிர் உண்ணும் விசாதி* பகை பசி தீயன எல்லாம்*
நின்று இவ் உலகில் கடிவான்* நேமிப் பிரான் தமர் போந்தார்*
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும்* ஞாலம் பரந்தார்*
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!* சிந்தையைச் செந்நிறுத்தியே*.
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்* தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்*
மறுத்தும் அவனோடே கண்டீர்* மார்க்கண்டேயனும் கரியே*
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா* கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை*
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி* யாயவர்க்கே இறுமினே*.
இறுக்கும் இறை இறுத்து உண்ண* எவ் உலகுக்கும் தன் மூர்த்தி*
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக* அத் தெய்வ நாயகன் தானே*
மறுத் திரு மார்வன் அவன் தன்* பூதங்கள் கீதங்கள் பாடி*
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்* மேவித் தொழுது உய்ம்மின் நீரே*.
மேவித் தொழுது உய்ம்மின்நீர்கள்* வேதப் புனித இருக்கை*
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை* ஞானவிதி பிழையாமே*
பூவில் புகையும் விளக்கும்* சாந்தமும் நீரும் மலிந்து*
மேவித் தொழும் அடியாரும்* பகவரும் மிக்கது உலகே*.
மிக்க உலகுகள் தோறும்* மேவி கண்ணன் திருமூர்த்தி*
நக்க பிரானோடு* அயனும் இந்திரனும் முதலாகத்*
தொக்க அமரர் குழாங்கள்* எங்கும் பரந்தன தொண்டீர்!*
ஒக்கத் தொழ கிற்றிராகில்* கலியுகம் ஒன்றும் இல்லையே*.
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே* தன்அடியார்க்கு அருள்செய்யும்*
மலியும் சுடர் ஒளி மூர்த்தி* மாயப் பிரான் கண்ணன் தன்னை*
கலிவயல் தென் நன் குருகூர்க்* காரிமாறன் சடகோபன்*
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து* உள்ளத்தை மாசு அறுக்குமே*.
மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்* முன்பு நான் அது அஞ்சுவன்*
மன்உடை இலங்கை* அரண் காய்ந்த மாயவனே*
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்* இனி அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும்* தந்து போகு நம்பீ!*. (2)
போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும்* செவ்வாய் முறுவலும்*
ஆகுலங்கள் செய்ய* அழிதற்கே நோற்றோமேயாம்?*
தோகை மாமயிலார்கள் நின் அருள் சூடுவார்* செவி ஓசை வைத்து எழ*
ஆகள் போகவிட்டு* குழல் ஊது போயிருந்தே*.
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ!* நின்செய்ய-
வாய் இருங் கனியும் கண்களும்* விபரீதம் இந் நாள்*
வேய் இரும் தடம் தோளினார்* இத்திருவருள் பெறுவார்எவர் கொல்*
மா இரும் கடலைக் கடைந்த* பெருமானாலே?*
ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு* அன்று நீ கிடந்தாய்* உன் மாயங்கள்-
மேலை வானவரும் அறியார்* இனி எம் பரமே?*
வேலின் நேர் தடம் கண்ணினார்* விளையாடு சூழலைச் சூழவே நின்று*
காலி மேய்க்க வல்லாய்!* எம்மை நீ கழறேலே*.
கழறேல் நம்பீ!* உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும்* திண் சக்கர-
நிழறு தொல் படையாய்!* உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்*
மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க* எம்-
குழறு பூவையொடும்* கிளியோடும் குழகேலே*.
குழகி எங்கள் குழமணன்கொண்டு* கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை*
பழகி யாம் இருப்போம்* பரமே இத் திரு அருள்கள்?*
அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும்* தேவிமை ஈதகுவார் பலர் உளர்*
கழகம் ஏறேல் நம்பீ!* உனக்கும் இளைதே கன்மமே*.
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது* கடல் ஞாலம் உண்டிட்ட*
நின்மலா! நெடியாய்!* உனக்கேலும் பிழை பிழையே*
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி* அது கேட்கில் என் ஐம்மார்*
தன்ம பாவம் என்னார்* ஒரு நான்று தடி பிணக்கே*.
பிணக்கி யாவையும் யாவரும்* பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்*
கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்* கதிர் ஞான மூர்த்தியினாய்,
இணக்கி எம்மை எம் தோழிமார்* விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை*
உணக்கி நீ வளைத்தால்* என் சொல்லார் உகவாதவரே?*
உகவையால் நெஞ்சம் உள் உருகி* உன் தாமரைத் தடம் கண் விழிகளின்*
அக வலைப் படுப்பான்* அழித்தாய் உன் திருவடியால்*
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்* யாம் அடு சிறு சோறும் கண்டு* நின்-
முக ஒளி திகழ* முறுவல் செய்து நின்றிலையே*.
நின்று இலங்கு முடியினாய்!* இருபத்தோர் கால் அரசு களைகட்ட*
வென்றி நீள்மழுவா!* வியன் ஞாலம் முன் படைத்தாய்!*
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய* கருமாணிக்கச் சுடர்*
நின்தன்னால் நலிவே படுவோம் என்றும்* ஆய்ச்சியோமே*.
ஆய்ச்சி ஆகிய அன்னையால்* அன்று வெண்ணெய் வார்த்தையுள்* சீற்ற முண்டு அழு-
கூத்த அப்பன் தன்னை* குருகூர்ச் சடகோபன்*
ஏத்திய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்*
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு* இல்லை நல்குரவே*. (2)
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்* கண்ண நீர் கைகளால் இறைக்கும்,*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்,*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்* இரு நிலம் கை துழா இருக்கும்,*
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்கின்றாயே? (2)
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா! என்னும்* கண்ணீர்மல்க இருக்கும்,*
என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்? என்னும்* வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*
முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்* முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,*
முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!* என்கொலோமுடிகின்றது இவட்கே?
வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்* வானமே நோக்கும் மையாக்கும்,*
உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள்உருகும்,*
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்,*
திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் செய்திட்டாயே?
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்* எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,*
கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்* கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*
வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் சிந்தித்தாயே?
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்* திருவரங் கத்துள்ளாய்! என்னும்
வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!* அலை கடல் கடைந்த ஆர்அமுதே,*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே!
மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,*
செய்யவாய் மணியே! என்னும்* தண் புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்* விண்ணோர் முதல்! என்னும்,*
பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்* பாவியேன் செயற்பாலதுவே.
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பற்றிலார் பற்றநின்றானே,*
காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட* கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*
சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்! என்னும்* என்தீர்த்தனே என்னும்,*
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்* என்னுடைக் கோமளக் கொழுந்தே
கொழுந்து வானவர்கட்கு என்னும்* குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,*
அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்,*
எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்* எங்ஙனே நோக்குகேன்? என்னும்,*
செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!* என்செய்கேன் என்திருமகட்கே?
என் திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே! என்னும்,*
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே! என்னும்,*
அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்,*
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே. (2)
முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்* மூவுலகுஆளியே! என்னும்,*
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்* நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்* வண் திருவரங்கனே! என்னும்,*
அடிஅடையாதாள் போல்இவள் அணுகி அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே
முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி உய்ந்தவன்* மொய்புனல் பொருநல்,*
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்* வண்பொழில்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,*
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே (2)
நங்கள் வரிவளையாய் அங்காளோ* நம்முடை ஏதலர் முன்பு நாணி*
நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்* நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*
சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்* தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்*
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்* வேங்கடவாணனை வேண்டிச்சென்றே. (2)
வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்* என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்*
ஈண்டுஇதுஉரைக்கும்படியை அந்தோ* காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*
காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்* விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்*
ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்* எத்தனைகாலம் இளைக்கின்றேனே!
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன்* கண்டு கொள்மின்*
ஞாலம் அறியப் பழிசுமந்தேன்* நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*
நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த* நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட*
கோலவளையொடும் மாமைகொள்வான்* எத்தனைகாலமும் கூடச்சென்றே?
கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?* கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்*
பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்* பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*
மாடக்கொடிமதிள் தென்குளந்தை* வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்*
ஆடல்பறவை உயர்த்தவெல்போர்* ஆழிவலவனை ஆதரித்தே.
ஆழிவலவனை ஆதரிப்பும்* ஆங்குஅவன் நம்மில் வரவும் எல்லாம்*
தோழியர்காள்! நம்உடையமேதான்?* சொல்லுவதோ இங்கு அரியதுதான்*
ஊழிதோறுஊழி ஒருவனாக* நன்குஉணர்வார்க்கும் உணரலாகாச்*
சூழல்உடைய சுடர்கொள்ஆதித்* தொல்லைஅம்சோதி நினைக்குங்காலே.
தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்* என் சொல்அளவன்று இமையோர் தமக்கும்*
எல்லைஇலாதன கூழ்ப்புச்செய்யும்* அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*
அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்* ஆர்க்கு இடுகோ இனிப்பூசல்? சொல்லீர்*
வல்லிவளவயல்சூழ் குடந்தை* மாமலர்க்கண் வளர்கின்றமாலே.
மாலரிகேசவன் நாரணன்* சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று*
ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு* ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*
ஏலமலர் குழல் அன்னைமீர்காள்!* என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?*
காலம்பலசென்றும் காண்பதுஆணை* உங்களோடு எங்கள் இடைஇல்லையே.
இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்* பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்* ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்* அஞ்சனவெற்பும் அவைநணிய*
கடையறப்பாசங்கள் விட்டபின்னை* அன்றி அவன்அவை காண்கொடானே.
காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை* கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்*
மாண்குறள் கோலவடிவுகாட்டி* மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*
சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த* தேவபிராற்கு என் நிறைவினோடு*
நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்* என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்
என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!* யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை*
நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி* நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*
பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு* பால்மதி ஏந்தி ஓர்கோலநீல*
நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்* நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே
பாதம் அடைவதன் பாசத்தாலே* மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு*
கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்* வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*
தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்* இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்*
ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி* இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே. (2)
பண்டைநாளாலே நின்திருஅருளும்* பங்கயத்தாள் திருஅருளும்
கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்* குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்*
தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து* உன்தாமரைக்கண்களால் நோக்காய்*
தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த* திருப்புளிங்குடிக் கிடந்தானே! (2)
குடிக்கிடந்து ஆக்கம்செய்து* நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து* உன்பொன்
அடிக்கடவாதே வழிவருகின்ற* அடியரோர்க்கு அருளி* நீஒருநாள்
படிக்குஅளவாக நிமிர்த்த* நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்*
கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை* திருப்புளிங் குடிக்கிடந்தானே.
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி* உன்திருஉடம்புஅசைய*
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்* தொண்டரோர்க்கு அருளி*
தடம்கொள் தாமரைக்கண்விழித்து* நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்*
இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்* திருப்புளிங்குடிக்கிடந்தானே!
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து* வைகுந்தத்துள் நின்று*
தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே* என்னைஆள்வாய் எனக்குஅருளி*
நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப* நாங்கள்கூத்துஆடி நின்றுஆர்ப்ப*
பளிங்குநீர் முகிலின்பவளம்போல்* கனிவாய்சிவப்பநீ காணவாராயே
பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து* நின்பல்நிலா முத்தம்*
தவழ்கதிர்முறுவல்செய்து* நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*
பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்* காய்சினப்பறவைஊர்ந்தானே!
காய்சினப்பறவைஊர்ந்து* பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல*
மாசினமாலி மாலிமான்என்று* அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*
காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்*
காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி* எம்இடர்கடிவானே!
எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!* இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்*
செம்மடல்மலருந் தாமரைப்பழனத்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து* நாம்களித்து உளம்நலம்கூர*
இம்மடஉலகர்காண நீஒருநாள்* இருந்திடாய் எங்கள்கண் முகப்பே.
எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்* இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி*
தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்* தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*
திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!* திருவைகுந்தத்துள்ளாய்! தேவா*
இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்* இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.
வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து* இதனுளும் இருந்திடாய்* அடியோம்
போற்றி ஓவாதே கண்இணை குளிர* புதுமலர்ஆகத்தைப்பருக*
சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்* செழும்பனைத் திருப்புளிங்குடியாய்*
கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த* கொடுவினைப்படைகள் வல்லானே!
கொடுவினைப்படைகள் வல்லையாய்* அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்*
கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே* கலிவயல் திருப்புளிங்குடியாய்*
வடிவுஇணைஇல்லா மலர்மகள்* மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்*
கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்* கூவுதல்வருதல் செய்யாயே.
'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று* குரைகடல் கடைந்தவன் தன்னை*
மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்* வழுதிநாடன் சடகோபன்*
நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்* இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்*
ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்* அடிஇணை உள்ளத்துஓர்வாரே (2)
கெடும் இடர்ஆயஎல்லாம்* கேசவா என்ன* நாளும்
கொடுவினை செய்யும்* கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
விடம்உடை அரவில்பள்ளி* விரும்பினான் சுரும்பலற்றும்*
தடம்உடை வயல்* அனந்தபுரநகர் புகுதும்இன்றே (2)
இன்றுபோய்ப் புகுதிராகில்* எழுமையும் ஏதம்சாரா*
குன்றுநேர் மாடம்மாடே* குருந்துசேர் செருந்திபுன்னை*
மன்றலர் பொழில்* அனந்தபுரநகர் மாயன்நாமம்*
ஒன்றும்ஓர் ஆயிரமாம்* உள்ளுவார்க்கு உம்பர்ஊரே
ஊரும்புள் கொடியும் அஃதே* உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தான்*
சேரும் தண்அனந்தபுரம்* சிக்கெனப் புகுதிராகில்*
தீரும்நோய் வினைகள்எல்லாம்* திண்ணம்நாம் அறியச்சொன்னோம்*
பேரும் ஓர்ஆயிரத்துள்* ஒன்றுநீர் பேசுமினே
பேசுமின் கூசம்இன்றி* பெரியநீர் வேலைசூழ்ந்து*
வாசமே கமழும் சோலை* வயலணிஅனந்தபுரம்*
நேசம்செய்து உறைகின்றானை* நெறிமையால் மலர்கள்தூவி*
பூசனை செய்கின்றார்கள்* புண்ணியம் செய்தவாறே.
புண்ணியம் செய்து* நல்ல புனலொடு மலர்கள்தூவி*
எண்ணுமின் எந்தைநாமம்* இப்பிறப்புஅறுக்கும் அப்பால்*
திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* செறிபொழில் அனந்தபுரத்து*
அண்ணலார் கமலபாதம்* அணுகுவார் அமரர்ஆவார்
அமரராய்த் திரிகின்றார்கட்கு* ஆதிசேர் அனந்தபுரத்து*
அமரர்கோன் அர்ச்சிக்கின்று* அங்குஅகப்பணி செய்வர் விண்ணோர்*
நமர்களோ! சொல்லக்கேள்மின்* நாமும்போய் நணுகவேண்டும்*
குமரனார் தாதை* துன்பம் துடைத்த கோவிந்தனாரே
துடைத்த கோவிந்தனாரே* உலகுஉயிர் தேவும்மற்றும்*
படைத்த எம்பரமமூர்த்தி* பாம்பணைப் பள்ளிகொண்டான்*
மடைத்தலை வாளைபாயும்* வயல்அணிஅனந்தபுரம்*
கடைத்தலை சீய்க்கப்பெற்றால்* கடுவினை களையலாமே
கடுவினை களையலாகும்* காமனைப் பயந்தகாளை*
இடவகை கொண்டதுஎன்பர்* எழில்அணிஅனந்தபுரம்*
படம்உடைஅரவில் பள்ளி* பயின்றவன் பாதம்காண*
நடமினோ நமர்கள்உள்ளீர்!* நாம் உமக்குஅறியச் சொன்னோம்.
நாம் உமக்கு அறியச்சொன்ன* நாள்களும் நணியஆன*
சேமம் நன்குஉடைத்துக்கண்டீர்* செறிபொழில்அனந்தபுரம்*
தூமநல் விரைமலர்கள்* துவள்அற ஆய்ந்துகொண்டு*
வாமனன் அடிக்குஎன்று ஏத்த* மாய்ந்துஅறும் வினைகள்தாமே.
மாய்ந்துஅறும் வினைகள்தாமே* மாதவா என்ன நாளும்-
ஏய்ந்தபொன் மதிள்* அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*
சாந்தொடு விளக்கம்தூபம்* தாமரை மலர்கள்நல்ல*
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்* அந்தம்இல் புகழினாரே.
அந்தம்இல் புகழ்* அனந்தபுர நகர் ஆதிதன்னைக்*
கொந்துஅலர் பொழில்* குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*
ஐந்தினோடு ஐந்தும்வல்லார்* அணைவர்போய் அமர்உலகில்*
பைந்தொடி மடந்தையர்தம்* வேய்மரு தோள்இணையே. (2)