பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வீடுமின் முற்றவும்* வீடு செய்து*  உம் உயிர்

    வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)  


    மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்* 

    என்னும் இடத்து*  இறை உன்னுமின் நீரே.


    நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து*  இறை

    சேர்மின் உயிர்க்கு*  அதன் நேர் நிறை இல்லே.


    இல்லதும் உள்ளதும்* அல்லது அவன் உரு*

    எல்லை இல் அந் நலம்* புல்கு பற்று அற்றே.


    அற்றது பற்று எனில்* உற்றது வீடு உயிர்*

    செற்ற அது மன் உறில்* அற்று இறை பற்றே.


    பற்று இலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*

    பற்று இலையாய்* அவன் முற்றில் அடங்கே.


    அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு*  ஈசன்

    அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.


    உள்ளம் உரை செயல்* உள்ள இம் மூன்றையும்*

    உள்ளிக் கெடுத்து*  இறை உள்ளில் ஒடுங்கே.


    ஒடுங்க அவன்கண்*  ஒடுங்கலும் எல்லாம்*

    விடும் பின்னும் ஆக்கை*  விடும்பொழுது எண்ணே.


    எண் பெருக்கு அந் நலத்து*  ஒண் பொருள் ஈறு இல*

    வண் புகழ் நாரணன்*  திண் கழல் சேரே.


    சேர்த்தடத்*  தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*

    சீர்த் தொடை ஆயிரத்து*  ஓர்த்த இப்பத்தே. (2)


    திண்ணன் வீடு*  முதல் முழுதும் ஆய்,* 
    எண்ணின் மீதியன்*  எம் பெருமான்,*

    மண்ணும் விண்ணும் எல்லாம்*  உடன் உண்ட,*  நம் 
    கண்ணன் கண் அல்லது*  இல்லை ஓர் கண்ணே.


    ஏ பாவம் பரமே*  ஏழ் உலகும்,* 
    ஈ பாவம் செய்து*  அருளால் அளிப்பார் ஆர்,*

    மா பாவம் விட*  அரற்குப் பிச்சை பெய்,* 
    கோபால கோளரி* ஏறு அன்றியே.


    ஏறனை பூவனை*  பூமகள் தன்னை,* 
    வேறுஇன்றி விண் தொழத்*  தன்னுள் வைத்து,*

    மேல் தன்னை மீதிட*  நிமிர்ந்து மண் கொண்ட.* 
    மால் தனின் மிக்கும் ஓர்*  தேவும் உளதே.  


    தேவும் எப் பொருளும் படைக்கப்,* 
    பூவில் நான்முகனைப் படைத்த,*

    தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,* 
    பூவும் பூசனையும் தகுமே.


    தகும் சீர்த்*  தன் தனி முதலினுள்ளே,* 
    மிகும் தேவும்*  எப் பொருளும் படைக்கத்,*

    தகும் கோலத்*  தாமரைக் கண்ணன் எம்மான்,* 
    மிகும் சோதி*  மேல் அறிவார் எவரே. 


    எவரும் யாவையும்*  எல்லாப் பொருளும்,* 
    கவர்வு இன்றித்*  தன்னுள் ஒடுங்க நின்ற,*

    பவர் கொள் ஞான*  வெள்ளச் சுடர் மூர்த்தி,* 
    அவர் எம் ஆழி*  அம் பள்ளியாரே,  


    பள்ளி ஆல் இலை*  ஏழ் உலகும் கொள்ளும்,* 
    வள்ளல்*  வல் வயிற்றுப் பெருமான்,*

    உள் உள் ஆர் அறிவார்*  அவன் தன்,* 
    கள்ள மாய*  மனக்கருத்தே.


    கருத்தில் தேவும்*  எல்லாப் பொருளும்,* 
    வருத்தித்த*  மாயப் பிரான் அன்றி,*  யாரே

    திருத்தித்*  திண் நிலை மூவுலகும்*  தம்முள் 
    இருத்திக்*  காக்கும் இயல்வினரே. 


    காக்கும் இயல்வினன்*  கண்ண பெருமான்,* 
    சேர்க்கை செய்து*  தன் உந்தியுள்ளே,*

    வாய்த்த திசைமுகன்*  இந்திரன் வானவர்,* 
    ஆக்கினான்*  தெய்வ உலகுகளே.  


    கள்வா எம்மையும்*  ஏழ் உலகும்,*  நின் 
    உள்ளே தோற்றிய*  இறைவ! என்று,*

    வெள் ஏறன் நான்முகன்*  இந்திரன் வானவர்,* 
    புள் ஊர்தி*  கழல் பணிந்து ஏத்துவரே.   


    ஏத்த ஏழ் உலகும் கொண்ட*  கோலக் 
    கூத்தனைக்,*  குருகூர்ச் சடகோபன் சொல்,*

    வாய்த்த ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
    ஏத்த வல்லவர்க்கு*  இல்லை ஓர் ஊனமே.   


    முந்நீர் ஞாலம் படைத்த*  எம் முகில் வண்ணனே,* 
    அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*

    வெம் நாள் நோய் வீய*  வினைகளை வேர் அறப் பாய்ந்து,* 
    எந் நாள் யான் உன்னை*  இனி வந்து கூடுவனே? (2)


    வன் மா வையம் அளந்த*  எம் வாமனா,*  நின் 
    பல்மா மாயப்*  பல் பிறவியில் படிகின்ற யான்,*

    தொல் மா வல்வினைத்*  தொடர்களை முதல் அரிந்து,* 
    நின் மா தாள் சேர்ந்து*  நிற்பது எஞ்ஞான்றுகொலோ?


    கொல்லா மாக்கோல்*  கொலைசெய்து பாரதப் போர்,* 
    எல்லாச் சேனையும்*  இரு நிலத்து அவித்த எந்தாய்,*

    பொல்லா ஆக்கையின்*  புணர்வினை அறுக்கல் அறா,* 
    சொல்லாய் யான் உன்னைச்*  சார்வது ஓர் சூழ்ச்சியே.    


    சூழ்ச்சி ஞானச்*  சுடர் ஒளி ஆகி,*  என்றும் 
    ஏழ்ச்சி கேடு இன்றி*  எங்கணும் நிறைந்த எந்தாய்,*

    தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து*  நின் தாள் இணைக்கீழ் 
    வாழ்ச்சி,*  யான் சேரும்*  வகை அருளாய் வந்தே.  


    வந்தாய் போலே*  வந்தும் என் மனத்தினை நீ,* 
    சிந்தாமல் செய்யாய்*  இதுவே இது ஆகில்,* 

    கொந்து ஆர் காயாவின்*  கொழு மலர்த் திருநிறத்த 
    எந்தாய்,*  யான் உன்னை*  எங்கு வந்து அணுகிற்பனே?   


    கிற்பன் கில்லேன்*  என்று இலன் முனம் நாளால்,* 
    அற்ப சாரங்கள்*  அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*

    பற்பல் ஆயிரம்*  உயிர் செய்த பரமா,*  நின் 
    நற் பொன் சோதித்தாள்*  நணுகுவது எஞ்ஞான்றே?


    எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து*  இரங்கி நெஞ்சே!* 
    மெய்ஞ்ஞானம் இன்றி*  வினை இயல் பிறப்பு அழுந்தி,*

    எஞ்ஞான்றும் எங்கும்*  ஒழிவு அற நிறைந்து நின்ற,* 
    மெய்ஞ் ஞானச் சோதிக்*  கண்ணனை மேவுதுமே?


    மேவு துன்ப வினைகளை*  விடுத்துமிலேன்,*
    ஓவுதல் இன்றி*  உன் கழல் வணங்கிற்றிலேன்,*

    பாவு தொல் சீர்க் கண்ணா!*  என் பரஞ்சுடரே,* 
    கூவுகின்றேன் காண்பான்*  எங்கு எய்தக் கூவுவனே?


    கூவிக் கூவிக்*  கொடுவினைத் தூற்றுள் நின்று*
    பாவியேன் பல காலம்*  வழி திகைத்து அலமர்கின்றேன்,*

    மேவி அன்று ஆ நிரை காத்தவன்*  உலகம் எல்லாம்,* 
    தாவிய அம்மானை*  எங்கு இனித் தலைப்பெய்வனே?  


    தலைப்பெய் காலம்*  நமன்தமர் பாசம் விட்டால்,* 
    அலைப்பூண் உண்ணும்*  அவ் அல்லல் எல்லாம் அகல,*

    கலைப் பல் ஞானத்து*  என் கண்ணனைக் கண்டுகொண்டு,* 
    நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது*  நீடு உயிரே  


    உயிர்கள் எல்லா*  உலகமும் உடையவனைக்,* 
    குயில் கொள் சோலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*

    செயிர் இல் சொல் இசை மாலை*  ஆயிரத்துள் இப் பத்தும்,* 
    உயிரின்மேல் ஆக்கை*  ஊனிடை ஒழிவிக்குமே. (2)      


    பாலன் ஆய்*  ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,* 
    ஆல் இலை*  அன்னவசம் செய்யும் அண்ணலார்,* 

    தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
    மாலுமால்,*  வல்வினையேன்*  மட வல்லியே. (2)  


    வல்லி சேர் நுண் இடை*  ஆய்ச்சியர் தம்மொடும்,* 
    கொல்லைமை செய்து*  குரவை பிணைந்தவர்,* 

    நல் அடிமேல் அணி*  நாறு துழாய் என்றே 
    சொல்லுமால்,*  சூழ் வினையாட்டியேன் பாவையே.   


    பா இயல் வேத*  நல் மாலை பல கொண்டு,* 
    தேவர்கள் மா முனிவர்*  இறைஞ்ச நின்ற* 

    சேவடிமேல் அணி*  செம் பொன் துழாய் என்றே 
    கூவுமால்,*  கோள் வினையாட்டியேன் கோதையே.   


    கோது இல வண்புகழ்*  கொண்டு சமயிகள்,* 
    பேதங்கள் சொல்லிப்*  பிதற்றும் பிரான்பரன்,*

    பாதங்கள் மேல் அணி*  பைம் பொன் துழாய் என்றே 
    ஓதுமால்,*  ஊழ்வினையேன்*  தடந் தோளியே.     


    தோளி சேர் பின்னை பொருட்டு*  எருது ஏழ் தழீஇக் 
    கோளியார்*  கோவலனார்*  குடக் கூத்தனார்,* 

    தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
    நாளும்நாள்,*  நைகின்றதால்*  என்தன் மாதரே       


    மாதர் மா மண்மடந்தைபொருட்டு*  ஏனம் ஆய்,* 
    ஆதி அம் காலத்து*  அகல் இடம் கீண்டவர்,* 

    பாதங்கள்மேல் அணி*  பைம் பொன் துழாய் என்றே 
    ஓதுமால்,*  எய்தினள் என் தன் மடந்தையே.    


    மடந்தையை*  வண் கமலத் திருமாதினை,* 
    தடம் கொள் தார் மார்பினில்*  வைத்தவர் தாளின்மேல்,* 

    வடம் கொள் பூம் தண் அம் துழாய்மலர்க்கே*  இவள் 
    மடங்குமால்*  வாள் நுதலீர்!! என் மடக்கொம்பே. 


    கொம்பு போல் சீதைபொருட்டு*  இலங்கை நகர்* 
    அம்பு எரி உய்த்தவர்*  தாள் இணைமேல் அணி,*

    வம்பு அவிழ் தண் அம் துழாய்*  மலர்க்கே இவள்- 
    நம்புமால்,*  நான் இதற்கு என்செய்கேன்* நங்கைமீர்!


    நங்கைமீர்! நீரும்*  ஓர் பெண் பெற்று நல்கினீர்,* 
    எங்ஙனே சொல்லுகேன்*  யான் பெற்ற ஏழையை,* 

    சங்கு என்னும் சக்கரம் என்னும்*  துழாய் என்னும்,* 
    இங்ஙனே சொல்லும்*  இராப் பகல் என்செய்கேன்?   


    என் செய்கேன்? என்னுடைப் பேதை*  என் கோமளம்,* 
    என் சொல்லும்*  என் வசமும் அல்லள் நங்கைமீர்,*

    மின் செய் பூண் மார்பினன்*  கண்ணன் கழல் துழாய்,* 
    பொன் செய்பூண்*  மென்முலைக்கு என்று மெலியுமே


    மெலியும் நோய் தீர்க்கும்*  நம் கண்ணன் கழல்கள்மேல்,* 
    மலி புகழ் வண் குருகூர்ச்*  சடகோபன் சொல்,*

    ஒலி புகழ் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்* 
    மலி புகழ் வானவர்க்கு ஆவர்*  நல் கோவையே. (2)    


    பொலிக பொலிக பொலிக!*  போயிற்று வல் உயிர்ச் சாபம்* 
    நலியும் நரகமும் நைந்த*  நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*

    கலியும் கெடும் கண்டுகொண்மின்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
    மலியப் புகுந்து இசைபாடி*  ஆடி உழிதரக் கண்டோம்*. (2) 


    கண்டோம் கண்டோம் கண்டோம்*  கண்ணுக்கு இனியன கண்டோம்* 
    தொண்டீர்! எல்லீரும் வாரீர்*  தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*

    வண்டுஆர் தண் அம் துழாயான்*  மாதவன் பூதங்கள் மண்மேல்* 
    பண் தான் பாடி நின்று ஆடி*   பரந்து திரிகின்றனவே*


    திரியும் கலியுகம் நீங்கி*  தேவர்கள் தாமும் புகுந்து* 
    பெரிய கிதயுகம் பற்றி*  பேரின்ப வெள்ளம் பெருக* 

    கரிய முகில்வண்ணன் எம்மான்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
    இரியப் புகுந்து இசை பாடி*  எங்கும் இடம் கொண்டனவே*


    இடம் கொள் சமயத்தை எல்லாம்*  எடுத்துக் களைவன போலே* 
    தடம் கடல் பள்ளிப் பெருமான்*  தன்னுடைப் பூதங்களே ஆய்* 

    கிடந்தும் இருந்தும் எழுந்தும்*  கீதம் பலபல பாடி* 
    நடந்தும் பறந்தும் குனித்தும்*  நாடகம் செய்கின்றனவே*.  


    செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே*  ஒக்கின்றது இவ் உலகத்து* 
    வைகுந்தன் பூதங்களே ஆய்*  மாயத்தினால் எங்கும் மன்னி*

    ஐயம் ஒன்று இல்லை அரக்கர்*  அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்* 
    உய்யும் வகை இல்லை தொண்டீர்!*  ஊழி பெயர்த்திடும் கொன்றே*


    கொன்று உயிர் உண்ணும் விசாதி*  பகை பசி தீயன எல்லாம்* 
    நின்று இவ் உலகில் கடிவான்*  நேமிப் பிரான் தமர் போந்தார்* 

    நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும்*  ஞாலம் பரந்தார்* 
    சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!*  சிந்தையைச் செந்நிறுத்தியே*.


    நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்*  தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்* 
    மறுத்தும் அவனோடே கண்டீர்*  மார்க்கண்டேயனும் கரியே* 

    கறுத்த மனம் ஒன்றும் வேண்டா*  கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை* 
    இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி*  யாயவர்க்கே இறுமினே*.    


    இறுக்கும் இறை இறுத்து உண்ண*  எவ் உலகுக்கும் தன் மூர்த்தி* 
    நிறுத்தினான் தெய்வங்கள் ஆக*  அத் தெய்வ நாயகன் தானே* 

    மறுத் திரு மார்வன் அவன் தன்*  பூதங்கள் கீதங்கள் பாடி* 
    வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்*  மேவித் தொழுது உய்ம்மின் நீரே*.


    மேவித் தொழுது உய்ம்மின்நீர்கள்*  வேதப் புனித இருக்கை* 
    நாவில் கொண்டு அச்சுதன் தன்னை*  ஞானவிதி பிழையாமே* 

    பூவில் புகையும் விளக்கும்*  சாந்தமும் நீரும் மலிந்து* 
    மேவித் தொழும் அடியாரும்*  பகவரும் மிக்கது உலகே*.     


    மிக்க உலகுகள் தோறும்*  மேவி கண்ணன் திருமூர்த்தி* 
    நக்க பிரானோடு*  அயனும் இந்திரனும் முதலாகத்* 

    தொக்க அமரர் குழாங்கள்*  எங்கும் பரந்தன தொண்டீர்!* 
    ஒக்கத் தொழ கிற்றிராகில்*  கலியுகம் ஒன்றும் இல்லையே*.      


    கலியுகம் ஒன்றும் இன்றிக்கே*  தன்அடியார்க்கு அருள்செய்யும்* 
    மலியும் சுடர் ஒளி மூர்த்தி*  மாயப் பிரான் கண்ணன் தன்னை*

    கலிவயல் தென் நன் குருகூர்க்*  காரிமாறன் சடகோபன்* 
    ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து*  உள்ளத்தை மாசு அறுக்குமே*.        


    மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்*  முன்பு நான் அது அஞ்சுவன்* 
    மன்உடை இலங்கை*  அரண் காய்ந்த மாயவனே* 

    உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்*  இனி அதுகொண்டு செய்வது என்? 
    என்னுடைய பந்தும் கழலும்*  தந்து போகு நம்பீ!*. (2) 


    போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும்*  செவ்வாய் முறுவலும்* 
    ஆகுலங்கள் செய்ய*  அழிதற்கே நோற்றோமேயாம்?* 

    தோகை மாமயிலார்கள் நின் அருள் சூடுவார்*  செவி ஓசை வைத்து எழ*
    ஆகள் போகவிட்டு*  குழல் ஊது போயிருந்தே*.          


    போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ!*  நின்செய்ய- 
    வாய் இருங் கனியும் கண்களும்*  விபரீதம் இந் நாள்* 

    வேய் இரும் தடம் தோளினார்*  இத்திருவருள் பெறுவார்எவர் கொல்*  
    மா இரும் கடலைக் கடைந்த*  பெருமானாலே?*         


    ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு*  அன்று நீ கிடந்தாய்*  உன் மாயங்கள்- 
    மேலை வானவரும் அறியார்*  இனி எம் பரமே?* 

    வேலின் நேர் தடம் கண்ணினார்*  விளையாடு சூழலைச் சூழவே நின்று* 
    காலி மேய்க்க வல்லாய்!*  எம்மை நீ கழறேலே*.


    கழறேல் நம்பீ!*  உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும்*  திண் சக்கர- 
    நிழறு தொல் படையாய்!*  உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்* 

    மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க*  எம்- 
    குழறு பூவையொடும்*  கிளியோடும் குழகேலே*.  


    குழகி எங்கள் குழமணன்கொண்டு*  கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை* 
    பழகி யாம் இருப்போம்*  பரமே இத் திரு அருள்கள்?*

    அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும்*  தேவிமை ஈதகுவார் பலர் உளர்* 
    கழகம் ஏறேல் நம்பீ!*  உனக்கும் இளைதே கன்மமே*.


    கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது*  கடல் ஞாலம் உண்டிட்ட* 
    நின்மலா! நெடியாய்!*  உனக்கேலும் பிழை பிழையே* 

    வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி*  அது கேட்கில் என் ஐம்மார்* 
    தன்ம பாவம் என்னார்*  ஒரு நான்று தடி பிணக்கே*.


    பிணக்கி யாவையும் யாவரும்*  பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்* 
    கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்*  கதிர் ஞான மூர்த்தியினாய், 

    இணக்கி எம்மை எம் தோழிமார்*  விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை* 
    உணக்கி நீ வளைத்தால்*  என் சொல்லார் உகவாதவரே?* 


    உகவையால் நெஞ்சம் உள் உருகி*  உன் தாமரைத் தடம் கண் விழிகளின்* 
    அக வலைப் படுப்பான்*  அழித்தாய் உன் திருவடியால்* 

    தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்*  யாம் அடு சிறு சோறும் கண்டு*  நின்- 
    முக ஒளி திகழ*  முறுவல் செய்து நின்றிலையே*.


    நின்று இலங்கு முடியினாய்!*  இருபத்தோர் கால் அரசு களைகட்ட* 
    வென்றி நீள்மழுவா!*  வியன் ஞாலம் முன் படைத்தாய்!* 

    இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய*  கருமாணிக்கச் சுடர்* 
    நின்தன்னால் நலிவே படுவோம் என்றும்*  ஆய்ச்சியோமே*.       


    ஆய்ச்சி ஆகிய அன்னையால்*  அன்று வெண்ணெய் வார்த்தையுள்*  சீற்ற முண்டு அழு- 
    கூத்த அப்பன் தன்னை*  குருகூர்ச் சடகோபன்* 

    ஏத்திய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்* 
    நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு*  இல்லை நல்குரவே*. (2)  


    கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்*  கண்ண நீர் கைகளால் இறைக்கும்,* 
    சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்*  தாமரைக் கண் என்றே தளரும்,* 

    எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்*  இரு நிலம் கை துழா இருக்கும்,* 
    செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!*  இவள் திறத்து என் செய்கின்றாயே?  (2)   


    என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா!   என்னும்*  கண்ணீர்மல்க இருக்கும்,* 
    என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?  என்னும்*  வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*

    முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்*  முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,* 
    முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!*  என்கொலோமுடிகின்றது இவட்கே?


    வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்*  வானமே நோக்கும் மையாக்கும்,* 
    உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட*  ஒருவனே! என்னும் உள்உருகும்,*

    கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்*  காகுத்தா! கண்ணனே! என்னும்,* 
    திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் செய்திட்டாயே?


    இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்*  எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,* 
    கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்*  கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*   

    வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,* 
    சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் சிந்தித்தாயே? 


    சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*  திருவரங் கத்துள்ளாய்! என்னும் 
    வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க*  வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*

    அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!*  அலை கடல் கடைந்த ஆர்அமுதே,* 
    சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*  தையலை மையல் செய்தானே!


    மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே!  என்னும்*  மா மாயனே! என்னும்,* 
    செய்யவாய் மணியே! என்னும்*  தண் புனல்சூழ்  திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*

    வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்*  விண்ணோர் முதல்! என்னும்,* 
    பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்*   பாவியேன் செயற்பாலதுவே. 


    பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!*  பற்றிலார் பற்றநின்றானே,* 
    காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட*  கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*

    சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்!  என்னும்*  என்தீர்த்தனே என்னும்,* 
    கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்*  என்னுடைக் கோமளக் கொழுந்தே


    கொழுந்து வானவர்கட்கு என்னும்*  குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,* 
    அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்*  அஞ்சன வண்ணனே! என்னும்,*

    எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*  எங்ஙனே நோக்குகேன்? என்னும்,* 
    செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!*  என்செய்கேன் என்திருமகட்கே?


    என் திருமகள் சேர்மார்வனே! என்னும்*  என்னுடை ஆவியே! என்னும்,* 
    நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட*  நிலமகள் கேள்வனே! என்னும்,*

    அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட*  ஆய்மகள் அன்பனே! என்னும்,* 
    தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!*  தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.  (2)


    முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்*  மூவுலகுஆளியே! என்னும்,* 
    கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்*  நான்முகக் கடவுளே! என்னும்,*

    வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்*  வண் திருவரங்கனே! என்னும்,* 
    அடிஅடையாதாள் போல்இவள் அணுகி  அடைந்தனள்*  முகில்வண்ணன் அடியே 


    முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி  உய்ந்தவன்*  மொய்புனல் பொருநல்,* 
    துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*  வண்பொழில்சூழ்  வண்குருகூர்ச் சடகோபன்,*

    முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*  ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,* 
    முகில்வண்ண வானத்து இமையவர் சூழ  இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே   (2)


    நங்கள் வரிவளையாய் அங்காளோ*   நம்முடை ஏதலர் முன்பு நாணி* 
    நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்*   நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*

    சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்*   தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்* 
    வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்*  வேங்கடவாணனை வேண்டிச்சென்றே.   (2)


    வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்*   என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்* 
    ஈண்டுஇதுஉரைக்கும்படியை அந்தோ*  காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*

    காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்*  விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்* 
    ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்*  எத்தனைகாலம் இளைக்கின்றேனே!


    காலம் இளைக்கில் அல்லால் வினையேன்  நான் இளைக்கின்றிலன்*  கண்டு கொள்மின்* 
    ஞாலம் அறியப் பழிசுமந்தேன்*  நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*

    நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த*   நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட* 
    கோலவளையொடும் மாமைகொள்வான்*  எத்தனைகாலமும் கூடச்சென்றே? 


    கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?*  கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்* 
    பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்*   பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*

    மாடக்கொடிமதிள் தென்குளந்தை*   வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்* 
    ஆடல்பறவை உயர்த்தவெல்போர்*  ஆழிவலவனை ஆதரித்தே.


    ஆழிவலவனை ஆதரிப்பும்*  ஆங்குஅவன் நம்மில் வரவும் எல்லாம்* 
    தோழியர்காள்! நம்உடையமேதான்?*  சொல்லுவதோ இங்கு அரியதுதான்*

    ஊழிதோறுஊழி ஒருவனாக*   நன்குஉணர்வார்க்கும் உணரலாகாச்* 
    சூழல்உடைய சுடர்கொள்ஆதித்*  தொல்லைஅம்சோதி நினைக்குங்காலே.  


    தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்*  என்  சொல்அளவன்று இமையோர் தமக்கும்* 
    எல்லைஇலாதன கூழ்ப்புச்செய்யும்*  அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*

    அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்*  ஆர்க்கு இடுகோ இனிப்பூசல்? சொல்லீர்* 
    வல்லிவளவயல்சூழ் குடந்தை*  மாமலர்க்கண் வளர்கின்றமாலே.


    மாலரிகேசவன் நாரணன்*  சீமாதவன்  கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று* 
    ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு*   ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*

    ஏலமலர்  குழல் அன்னைமீர்காள்!*  என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?* 
    காலம்பலசென்றும் காண்பதுஆணை*  உங்களோடு எங்கள் இடைஇல்லையே.


    இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்*  பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
    உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்*  ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*

    அடையும் வைகுந்தமும் பாற்கடலும்*   அஞ்சனவெற்பும் அவைநணிய* 
    கடையறப்பாசங்கள் விட்டபின்னை*  அன்றி அவன்அவை காண்கொடானே.  


    காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை*  கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்* 
    மாண்குறள் கோலவடிவுகாட்டி*  மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*

    சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த*  தேவபிராற்கு என் நிறைவினோடு* 
    நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்*  என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்


    என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!*   யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை* 
    நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி*  நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*

    பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு*   பால்மதி ஏந்தி ஓர்கோலநீல* 
    நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்*   நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே


    பாதம் அடைவதன் பாசத்தாலே*   மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு* 
    கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்*   வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*

    தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்*  இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்* 
    ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி*  இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே.      (2)


    பண்டைநாளாலே நின்திருஅருளும்*  பங்கயத்தாள் திருஅருளும்
    கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்*  குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்* 

    தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து*  உன்தாமரைக்கண்களால் நோக்காய்* 
    தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த*  திருப்புளிங்குடிக் கிடந்தானே!  (2)  


    குடிக்கிடந்து ஆக்கம்செய்து*  நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*  உன்பொன் 
    அடிக்கடவாதே வழிவருகின்ற*  அடியரோர்க்கு அருளி*  நீஒருநாள்

    படிக்குஅளவாக நிமிர்த்த*  நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்* 
    கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை*  திருப்புளிங் குடிக்கிடந்தானே.  


    கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி*  உன்திருஉடம்புஅசைய*  
    தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்*  தொண்டரோர்க்கு அருளி*

    தடம்கொள் தாமரைக்கண்விழித்து*  நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்* 
    இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்*  திருப்புளிங்குடிக்கிடந்தானே!


    புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து*  வைகுந்தத்துள் நின்று* 
    தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே*  என்னைஆள்வாய் எனக்குஅருளி*

    நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப*  நாங்கள்கூத்துஆடி நின்றுஆர்ப்ப* 
    பளிங்குநீர் முகிலின்பவளம்போல்*  கனிவாய்சிவப்பநீ காணவாராயே   


    பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து*  நின்பல்நிலா முத்தம்* 
    தவழ்கதிர்முறுவல்செய்து*  நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*

    பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்* 
    கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்*  காய்சினப்பறவைஊர்ந்தானே!  


    காய்சினப்பறவைஊர்ந்து*  பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல* 
    மாசினமாலி மாலிமான்என்று*  அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*

    காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்* 
    காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி*  எம்இடர்கடிவானே!  


    எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!*  இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்* 
    செம்மடல்மலருந் தாமரைப்பழனத்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*

    நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து*  நாம்களித்து உளம்நலம்கூர* 
    இம்மடஉலகர்காண நீஒருநாள்*  இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 


    எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்*  இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி* 
    தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்*  தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*

    திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!*  திருவைகுந்தத்துள்ளாய்! தேவா* 
    இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்*  இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.


    வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து*  இதனுளும் இருந்திடாய்*  அடியோம் 
    போற்றி ஓவாதே கண்இணை குளிர*  புதுமலர்ஆகத்தைப்பருக* 

    சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்*  செழும்பனைத் திருப்புளிங்குடியாய்* 
    கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த*  கொடுவினைப்படைகள் வல்லானே! 


    கொடுவினைப்படைகள் வல்லையாய்*  அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்* 
    கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே*   கலிவயல் திருப்புளிங்குடியாய்*

    வடிவுஇணைஇல்லா மலர்மகள்*  மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்* 
    கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்*   கூவுதல்வருதல் செய்யாயே.    


    'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று*  குரைகடல் கடைந்தவன் தன்னை* 
    மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்*  வழுதிநாடன் சடகோபன்*

    நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்*  இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்* 
    ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்*  அடிஇணை உள்ளத்துஓர்வாரே  (2)


    கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 
    கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*

    விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 
    தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே     (2)


    இன்றுபோய்ப் புகுதிராகில்*  எழுமையும் ஏதம்சாரா* 
    குன்றுநேர் மாடம்மாடே*  குருந்துசேர் செருந்திபுன்னை*

    மன்றலர் பொழில்*  அனந்தபுரநகர் மாயன்நாமம்*
    ஒன்றும்ஓர் ஆயிரமாம்*  உள்ளுவார்க்கு உம்பர்ஊரே


    ஊரும்புள் கொடியும் அஃதே*  உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தான்* 
    சேரும் தண்அனந்தபுரம்*  சிக்கெனப் புகுதிராகில்*

    தீரும்நோய் வினைகள்எல்லாம்*  திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* 
    பேரும் ஓர்ஆயிரத்துள்*  ஒன்றுநீர் பேசுமினே   


    பேசுமின் கூசம்இன்றி*  பெரியநீர் வேலைசூழ்ந்து* 
    வாசமே கமழும் சோலை*  வயலணிஅனந்தபுரம்*

    நேசம்செய்து உறைகின்றானை*  நெறிமையால் மலர்கள்தூவி* 
    பூசனை செய்கின்றார்கள்*  புண்ணியம் செய்தவாறே.   


    புண்ணியம் செய்து*  நல்ல புனலொடு மலர்கள்தூவி* 
    எண்ணுமின் எந்தைநாமம்*  இப்பிறப்புஅறுக்கும் அப்பால்*

    திண்ணம்நாம் அறியச்சொன்னோம்*  செறிபொழில் அனந்தபுரத்து* 
    அண்ணலார் கமலபாதம்*  அணுகுவார் அமரர்ஆவார் 


    அமரராய்த் திரிகின்றார்கட்கு*  ஆதிசேர் அனந்தபுரத்து* 
    அமரர்கோன் அர்ச்சிக்கின்று*  அங்குஅகப்பணி செய்வர் விண்ணோர்*

    நமர்களோ! சொல்லக்கேள்மின்*  நாமும்போய் நணுகவேண்டும்* 
    குமரனார் தாதை*  துன்பம் துடைத்த கோவிந்தனாரே


    துடைத்த கோவிந்தனாரே*  உலகுஉயிர் தேவும்மற்றும்* 
    படைத்த எம்பரமமூர்த்தி*  பாம்பணைப் பள்ளிகொண்டான்*

    மடைத்தலை வாளைபாயும்*  வயல்அணிஅனந்தபுரம்* 
    கடைத்தலை சீய்க்கப்பெற்றால்*  கடுவினை களையலாமே  


    கடுவினை களையலாகும்*  காமனைப் பயந்தகாளை* 
    இடவகை கொண்டதுஎன்பர்*  எழில்அணிஅனந்தபுரம்*

    படம்உடைஅரவில் பள்ளி*  பயின்றவன் பாதம்காண* 
    நடமினோ நமர்கள்உள்ளீர்!*  நாம் உமக்குஅறியச் சொன்னோம்.


    நாம் உமக்கு அறியச்சொன்ன*  நாள்களும் நணியஆன* 
    சேமம் நன்குஉடைத்துக்கண்டீர்*  செறிபொழில்அனந்தபுரம்*

    தூமநல் விரைமலர்கள்*  துவள்அற ஆய்ந்துகொண்டு* 
    வாமனன் அடிக்குஎன்று ஏத்த*  மாய்ந்துஅறும் வினைகள்தாமே.  


    மாய்ந்துஅறும் வினைகள்தாமே*  மாதவா என்ன நாளும்- 
    ஏய்ந்தபொன் மதிள்*  அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*

    சாந்தொடு விளக்கம்தூபம்*  தாமரை மலர்கள்நல்ல* 
    ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்*  அந்தம்இல் புகழினாரே. 


    அந்தம்இல் புகழ்*  அனந்தபுர நகர் ஆதிதன்னைக்* 
    கொந்துஅலர் பொழில்*  குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*

    ஐந்தினோடு ஐந்தும்வல்லார்*  அணைவர்போய் அமர்உலகில்* 
    பைந்தொடி மடந்தையர்தம்*  வேய்மரு தோள்இணையே.   (2)