பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*
பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)
மதுவார் தண் அம் துழாயான்* முது வேத முதலவனுக்கு*
எதுவே? என்பணி? என்னாது* அதுவே ஆள் செய்யும் ஈடே
ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*
பாடும் என் நா அவன் பாடல்* ஆடும் என் அங்கம் அணங்கே.
அணங்கு என ஆடும் என் அங்கம்* வணங்கி வழிபடும் ஈசன்*
பிணங்கி அமரர் பிதற்றும்* குணங்கெழு கொள்கையினானே*
கொள்கை கொளாமை இலாதான்* எள்கல் இராகம் இலாதான்*
விள்கை விள்ளாமை விரும்பி* உள் கலந்தார்க்கு ஓர் அமுதே.
அமுதம் அமரர்கட்கு ஈந்த* நிமிர் சுடர் ஆழி நெடுமால்*
அமுதிலும் ஆற்ற இனியன்* நிமிர் திரை நீள் கடலானே.
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்* தோள்கள் தலை துணிசெய்தான்*
தாள்கள் தலையில் வணங்கி* நாள்கள் தலைக்கழிமின்னே.
கழிமின் தொண்டீர்கள் கழித்துத்* தொழுமின் அவனை தொழுதால்*
வழி நின்ற வல்வினை மாள்வித்து* அழிவின்றி ஆக்கம் தருமே.
தரும அரும் பயன் ஆய* திருமகளார் தனிக் கேள்வன்*
பெருமை உடைய பிரானார்* இருமை வினை கடிவாரே.
கடிவார் தீய வினைகள்* நொடியாரும் அளவைக்கண்*
கொடியா அடு புள் உயர்த்த* வடிவு ஆர் மாதவனாரே.
மாதவன்பால் சடகோபன்* தீது அவம் இன்றி உரைத்த*
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து* ஓத வல்லார் பிறவாரே.
வைகுந்தா மணிவண்ணனே* என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,*
வைகும் வைகல் தோறும்* அமுது ஆய வான் ஏறே,
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய் குந்தா* உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..
சிக்கெனச் சிறிது ஓர் இடமும்* புறப்படாத் தன்னுள்ளே,* உலகுகள்
ஒக்கவே விழுங்கிப்* புகுந்தான் புகுந்ததற்பின்,*
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய்* துளக்கு அற்று அமுதம் ஆய்,* எங்கும்
பக்கம் நோக்கு அறியான்* என் பைந்தாமரைக் கண்ணனே.
தாமரைக் கண்ணனை* விண்ணோர் பரவும் தலைமகனை,* துழாய் விரைப்
பூ மருவு கண்ணி* எம் பிரானை பொன்மலையை,*
நாம் மருவி நன்கு ஏத்தி* உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட,* நாவு அலர்
பா மருவி நிற்கத் தந்த* பான்மையே வள்ளலே.
வள்ளலே மதுசூதனா* என் மரகத மலையே,* உனை நினைந்து,
எள்கல் தந்த எந்தாய்* உன்னை எங்ஙனம் விடுகேன்,?*
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடி* களித்து உகந்து உகந்து*
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து* உய்ந்து போந்திருந்தே.
உய்ந்து போந்து என் உலப்பு இலாத* வெம் தீவினைகளை நாசம் செய்து* உனது
அந்தம் இல் அடிமை* அடைந்தேன் விடுவேனோ,?*
ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப்* பாற்கடல் யோக நித்திரை,*
சிந்தை செய்த எந்தாய்* உன்னைச் சிந்தை செய்து செய்தே.
உன்னைச் சிந்தை செய்து செய்து,* உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி* என்
முன்னைத் தீவினைகள்* முழு வேர் அரிந்தனன் யான்,*
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த* இரணியன் அகல் மார்வம் கீண்ட* என்
முன்னைக் கோளரியே* முடியாதது என் எனக்கே.
முடியாதது என் எனக்கேல் இனி?* முழு ஏழ் உலகும் உண்டான்* உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான்* அகல்வானும் அல்லன் இனி,*
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து* எமர் கீழ் மேல் எழு பிறப்பும்,*
விடியா வெம் நரகத்து என்றும்* சேர்தல் மாறினரே.
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து* அடியை அடைந்து உள்ளம் தேறி*
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம்* யான் மூழ்கினன்,*
பாறிப் பாறி அசுரர் தம்* பல் குழாங்கள் நீறு எழ,* பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய்* உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.
எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய்* இலங்கை செற்றாய்,* மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ* ஒரு வாளி கோத்த வில்லா,*
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே* உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா,* வான் ஏறே* இனி எங்குப் போகின்றதே?
போகின்ற காலங்கள் போய காலங்கள்* போகு காலங்கள்* தாய் தந்தை உயிர்-
ஆகின்றாய்* உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்* நாதனே! பரமா,* தண் வேங்கடம்
மேகின்றாய்* தண் துழாய் விரை நாறு கண்ணியனே.
கண்ணித் தண் அம் துழாய் முடிக்* கமலத் தடம் பெருங் கண்ணனைப்,* புகழ்
நண்ணி தென் குருகூர்ச்* சடகோபன் மாறன் சொன்ன,*
எண்ணில் சோர்வு இல் அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,*
பண்ணில் பாட வல்லார்* அவர் கேசவன் தமரே.
செய்ய தாமரைக் கண்ணன் ஆய்* உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,*
வையம் வானம் மனிசர் தெய்வம்* மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்* வெளிப் பட்டு இவை படைத்தான்* பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான்* ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)
மூவர் ஆகிய மூர்த்தியை* முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,*
சாவம் உள்ளன நீக்குவானை* தடங் கடல் கிடந்தான் தன்னை,*
தேவ தேவனை தென் இலங்கை* எரி எழச் செற்ற வில்லியை,*
பாவ நாசனை பங்கயத்தடங் கண்ணனைப்* பரவுமினோ.
பரவி வானவர் ஏத்த நின்ற* பரமனை பரஞ்சோதியை,*
குரவை கோத்த குழகனை* மணி வண்ணனை குடக் கூத்தனை,*
அரவம் ஏறி அலை கடல் அமரும்* துயில்கொண்ட அண்ணலை,*
இரவும் நன் பகலும் விடாது* என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.
வைம்மின் நும் மனத்து என்று* யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை*
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும்,* வானவர்
தம்மை ஆளும் அவனும்* நான்முகனும் சடைமுடி அண்ணலும்,*
செம்மையால் அவன் பாத பங்கயம்* சிந்தித்து ஏத்தித் திரிவரே.
திரியும் காற்றோடு அகல் விசும்பு* திணிந்த மண் கிடந்த கடல்,*
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்,* மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்* கண்ணன் விண்ணோர் இறை,*
சுரியும் பல் கருங் குஞ்சி* எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே.
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்* அவன் ஒரு மூர்த்தியாய்,*
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப்* புகநின்ற செங்கண்மால்,*
நாற்றம் தோற்றம் சுவை ஒலி* உறல் ஆகி நின்ற,* எம் வானவர்
ஏற்றையே அன்றி* மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.
எழுமைக்கும் எனது ஆவிக்கு* இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்,*
கெழுமிய கதிர்ச் சோதியை* மணிவண்ணனை குடக் கூத்தனை,*
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்* கன்னல் கனியினை,*
தொழுமின் தூய மனத்தர் ஆய்* இறையும் நில்லா துயரங்களே.
துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய்* அவை அல்லன் ஆய்,*
உயர நின்றது ஓர் சோதி ஆய்* உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,*
அயர வாங்கும் நமன் தமர்க்கு* அரு நஞ்சினை அச்சுதன் தன்னை,*
தயரதற்கு மகன் தன்னை அன்றி* மற்று இலேன் தஞ்சமாகவே.
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு* தானும் ஆய் அவை அல்லன் ஆய்,*
எஞ்சல் இல் அமரர் குலமுதல்* மூவர் தம்முள்ளும் ஆதியை,*
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்!* அவன் இவன் என்று கூழேன்மின்,*
நெஞ்சினால் நினைப்பான் எவன்* அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே.
கடல்வண்ணன் கண்ணன்* விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்*
படஅரவின் அணைக்கிடந்த* பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,*
அடவரும் படை மங்க* ஐவர்கட்கு ஆகி வெம்சமத்து,* அன்றுதேர்
கடவிய பெருமான்* கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே?
கண்கள் காண்டற்கு அரியன் ஆய்* கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,*
மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்* வானவர் ஈசனை,*
பண்கொள் சோலை வழுதி நாடன்* குருகைக்கோன் சடகோபன் சொல்,*
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)
தீர்ப்பாரை யாம் இனி* எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்* உற்ற நல் நோய் இது தேறினோம்,*
போர்ப்பாகு தான் செய்து* அன்று ஐவரை வெல்வித்த,* மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு* இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?
திசைக்கின்றதே இவள் நோய்* இது மிக்க பெருந் தெய்வம்,*
இசைப்பு இன்றி* நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது,*
திசைப்பு இன்றியே* சங்கு சக்கரம் என்று இவள் கேட்க,* நீர்
இசைக்கிற்றிராகில்* நன்றே இல் பெறும் இது காண்மினே.
இது காண்மின் அன்னைமீர்!* இக் கட்டுவிச்சி சொல் கொண்டு,* நீர்
எதுவானும் செய்து* அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,*
மது வார் துழாய்முடி* மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்,*
அதுவே இவள் உற்ற நோய்க்கும்* அரு மருந்து ஆகுமே.
மருந்து ஆகும் என்று அங்கு ஓர்* மாய வலவை சொல் கொண்டு,* நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும்* களன் இழைத்து என் பயன்?*
ஒருங்காகவே உலகு ஏழும்* விழுங்கி உமிழ்ந்திட்ட,*
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில்* இவளைப் பெறுதிரே.
இவளைப் பெறும்பரிசு* இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ,*
குவளைத் தடங் கண்ணும்* கோவைச் செவ்வாயும் பயந்தனள்,*
கவளக் கடாக் களிறு அட்ட பிரான்* திருநாமத்தால்,*
தவளப் பொடிக்கொண்டு* நீர்இட்டிடுமின் தணியுமே.
தணியும் பொழுது இல்லை* நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்,*
பிணியும் ஒழிகின்றது இல்லை* பெருகும் இது அல்லால்,*
மணியின் அணிநிற மாயன்* தமர் அடி நீறுகொண்டு*
அணிய முயலின்* மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.
அணங்குக்கு அரு மருந்து என்று* அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்*
துணங்கை எறிந்து* நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
உணங்கல் கெடக்* கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்* தமர் வேதம் வல்லாரையே.
வேதம் வல்லார்களைக் கொண்டு* விண்ணோர் பெருமான் திருப்-
பாதம் பணிந்து,* இவள் நோய்* இது தீர்த்துக் கொள்ளாது போய்*
ஏதம் பறைந்து அல்ல செய்து* கள் ஊடு கலாய்த் தூய்,*
கீதம் முழவு இட்டு* நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.
கீழ்மையினால் அங்கு ஓர்* கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,*
நாழ்மை பல சொல்லி* நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்,*
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்* இந் நோய்க்கும் ஈதே மருந்து,*
ஊழ்மையில் கண்ணபிரான்* கழல் வாழ்த்துமின் உன்னித்தே.
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள்* அவனை அல்லால்,*
நும் இச்சை சொல்லி* நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*
மன்னப்படும் மறைவாணனை* வண் துவராபதி-
மன்னனை,* ஏத்துமின் ஏத்துதலும்* தொழுது ஆடுமே.
தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு* ஆட்செய்து நோய் தீர்ந்த*
வழுவாத தொல்புகழ் வண் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வழுவாத ஆயிரத்துள்* இவை பத்து வெறிகளும்,*
தொழுது ஆடிப் பாடவல்லார்* துக்க சீலம் இலர்களே.
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்* கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்* கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்*
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்* கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?*
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்* கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?*
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்* காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்*
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்* காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்*
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்* காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,* காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?*
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்* செய்வான் நின்றனகளும் யானே என்னும்*
செய்து முன் இறந்தவும் யானே என்னும்* செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்*
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்* செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?*
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* செய்ய கனி வாய் இள மான் திறத்தே?*
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்* திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்*
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்* திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்*
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்* திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்* திறம்பாது என் திருமகள் எய்தினவே?*
இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்* இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்*
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்* இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்*
இன ஆயர் தலைவனும் யானே என்னும்* இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?*
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்* இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?*
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்* உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்*
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்* உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்*
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்* உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?*
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?* உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?*
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்* உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்*
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்* உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்*
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்* உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?,
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே*.
கொடிய வினை யாதும் இலனே என்னும்* கொடிய வினை ஆவேனும் யானே என்னும்*
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்* கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்*
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்* கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?*
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கொடியேன் கொடி என் மகள் கோலங்களே?*
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்* கோலம் இல் நரகமும் யானே என்னும்*
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்* கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்*
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்* கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே!*
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்* குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை*
வாய்ந்த வழுதி வள நாடன்* மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து*
ஆய்ந்த தமிழ் மாலை* ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்* உலகில்-
ஏந்து பெரும் செல்வத்தராய்த்* திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)
மாலுக்கு* வையம் அளந்த மணாளற்கு,*
நீலக் கருநிற* மேக நியாயற்கு,*
கோலச் செந்தாமரைக்* கண்ணற்கு,*
என் கொங்குஅலர்ஏலக் குழலி* இழந்தது சங்கே.
சங்கு வில் வாள் தண்டு* சக்கரக் கையற்கு,*
செங்கனிவாய்ச்* செய்ய தாமரைக் கண்ணற்கு,*
கொங்கு அலர் தண் அம் துழாய்* முடியானுக்கு,* என்
மங்கை இழந்தது* மாமை நிறமே.
நிறம் கரியானுக்கு* நீடு உலகு உண்ட,*
திறம் கிளர் வாய்ச்* சிறுக் கள்வன் அவற்கு,*
கறங்கிய சக்கரக்* கையவனுக்கு,* என்
பிறங்கு இரும் கூந்தல்* இழந்தது பீடே.
பீடு உடை நான்முகனைப்* படைத்தானுக்கு,*
மாடு உடை வையம் அளந்த* மணாளற்கு,*
நாடு உடை மன்னர்க்குத்* தூதுசெல் நம்பிக்கு,* என்
பாடு உடை அல்குல்* இழந்தது பண்பே.
பண்பு உடை வேதம்* பயந்த பரனுக்கு,*
மண் புரை வையம் இடந்த* வராகற்கு,*
தெண் புனல் பள்ளி* எம் தேவ பிரானுக்கு,* என்
கண்புனை கோதை* இழந்தது கற்பே.
கற்பகக் கா அன* நல் பல தோளற்கு,*
பொன் சுடர்க் குன்று அன்ன* பூந்தண் முடியற்கு,*
நல் பல தாமரை* நாள் மலர்க் கையற்கு,* என்
வில் புருவக்கொடி* தோற்றது மெய்யே.
மெய் அமர் பல்கலன்* நன்கு அணிந்தானுக்கு,*
பை அரவின் அணைப்* பள்ளியினானுக்கு,*
கையொடு கால்செய்ய* கண்ண பிரானுக்கு,* என்
தையல் இழந்தது* தன்னுடைச் சாயே.
சாயக் குருந்தம் ஒசித்த* தமியற்கு,*
மாயச் சகடம் உதைத்த* மணாளற்கு,*
பேயைப் பிணம்படப்* பால் உண் பிரானுக்கு,* என்
வாசக் குழலி* இழந்தது மாண்பே .
மாண்பு அமை கோலத்து* எம் மாயக் குறளற்கு,*
சேண் சுடர்க் குன்று அன்ன* செஞ்சுடர் மூர்த்திக்கு,*
காண் பெரும் தோற்றத்து* எம் காகுத்த நம்பிக்கு,* என்
பூண் புனை மென்முலை* தோற்றது பொற்பே.
பொற்பு அமை நீள் முடிப்* பூந்தண் துழாயற்கு,*
மல் பொரு தோள் உடை* மாயப் பிரானுக்கு,*
நிற்பன பல் உருவாய்* நிற்கும் மாயற்கு,* என்
கற்பு உடையாட்டி* இழந்தது கட்டே.
கட்டு எழில் சோலை* நல் வேங்கடவாணனைக்,*
கட்டு எழில் தென் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
கட்டு எழில் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்,*
கட்டு எழில் வானவர்* போகம் உண்பாரே.
பாமரு மூவுலகும் படைத்த* பற்ப நாபாவோ,*
பாமரு மூவுலகும் அளந்த* பற்ப பாதாவோ,*
தாமரைக் கண்ணாவோ!* தனியேன் தனிஆளாவோ,*
தாமரைக் கையாவோ!* உன்னை என்றுகொல் சேர்வதுவே? (2)
என்றுகொல் சேர்வது அந்தோ* அரன் நான்முகன் ஏத்தும்,* செய்ய
நின் திருப்பாதத்தை* யான்நிலம் நீர்எரி கால்,* விண்உயிர்
என்றுஇவை தாம்முதலா* முற்றுமாய் நின்ற எந்தாய்யோ,*
குன்றுஎடுத்து ஆநிரை மேய்த்து* அவை காத்த எம்கூத்தாவோ!
காத்த எம்கூத்தாவோ!* மலைஏந்திக் கல்மாரி தன்னை,*
பூத்தண் துழாய்முடியாய்!* புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*
வாய்த்த என் நான்முகனே!* வந்துஎன் ஆர்உயிர் நீஆனால்,*
ஏத்துஅரும் கீர்த்தியினாய்!* உன்னை எங்குத் தலைப்பெய்வனே?
எங்குத் தலைப்பெய்வன் நான்?* எழில் மூவுலகும் நீயே,*
அங்கு உயர் முக்கண்பிரான்* பிரம பெருமான் அவன்நீ,*
வெங்கதிர் வச்சிரக் கை* இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*
கொங்குஅலர் தண்அம் துழாய்முடி* என்னுடைக் கோவலனே?
என்னுடைக் கோவலனே!* என் பொல்லாக் கருமாணிக்கமே,*
உன்னுடை உந்தி மலர்* உலகம் அவைமூன்றும் பரந்து,*
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்* உன்னைக் கண்டுகொண்டிட்டு,*
என்னுடை ஆர்உயிரார்* எங்ஙனேகொல் வந்து எய்துவரே?
வந்துஎய்து மாறுஅறியேன்* மல்கு நீலச் சுடர்தழைப்ப,*
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து* ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*
அந்தரமேல் செம்பட்டோடு* அடி உந்திகை மார்புகண்வாய்,*
செஞ்சுடர்ச் சோதி விடஉறை* என்திரு மார்பனையே.
என்திரு மார்பன் தன்னை* என் மலைமகள் கூறன்தன்னை,*
என்றும் என்நாமகளை* அகம்பால்கொண்ட நான்முகனை,*
நின்ற சசிபதியை* நிலம்கீண்டு எயில் மூன்றுஎரித்த,*
வென்று புலன்துரந்த* விசும்புஆளியை காணேனோ!
ஆளியைக் காண்பரியாய்* அரிகாண் நரியாய்,* அரக்கர்
ஊளைஇட்டு அன்று இலங்கைகடந்து* பிலம்புக்குஒளிப்ப,*
மீளியம் புள்ளைக்கடாய்* விறல் மாலியைக் கொன்று,* பின்னும்
ஆள்உயர் குன்றங்கள் செய்து* அடர்த்தானையும் காண்டும்கொலோ?
காண்டும்கொலோ நெஞ்சமே!* கடிய வினையே முயலும்,*
ஆண்திறல் மீளிமொய்ம்பின்* அரக்கன் குலத்தைத் தடிந்து,*
மீண்டும் அவன் தம்பிக்கே* விரி நீர்இலங்கைஅருளி,*
ஆண்டு தன் சோதிபுக்க* அமரர் அரியேற்றினையே?
ஏற்றுஅரும் வைகுந்தத்தை* அருளும் நமக்கு,* ஆயர்குலத்து
ஈற்றுஇளம் பிள்ளைஒன்றாய்ப்புக்கு* மாயங்களே இயற்றி,*
கூற்றுஇயல் கஞ்சனைக் கொன்று* ஐவர்க்காய் ஆக்கொடும்சேனைதடிந்து,*
ஆற்றல் மிக்கான் பெரிய* பரஞ்சோதி புக்க அரியே
புக்க அரிஉருஆய்* அவுணன்உடல் கீண்டுஉகந்த,*
சக்கரச் செல்வன்தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
மிக்க ஓர்ஆயிரத்துள்* இவைபத்தும் வல்லார் அவரைத்,*
தொக்கு பல்லாண்டுஇசைத்து* கவரி செய்வர் ஏழையரே (2)
எல்லியும் காலையும்* தன்னை நினைந்துஎழ*
நல்ல அருள்கள்* நமக்கேதந்து அருள்செய்வான்*
அல்லிஅம் தண்ணம்துழாய்* முடிஅப்பன்ஊர்*
செல்வர்கள் வாழும்* திருக்கடித் தானமே (2)
திருக்கடித் தானமும்* என்னுடையச் சிந்தையும்*
ஒருக்கடுத்துஉள்ளே* உறையும்பிரான் கண்டீர்*
செருக்கடுத்துஅன்று* திகைத்த அரக்கரை*
உருக்கெடவாளி* பொழிந்த ஒருவனே.
ஒருவர் இருவர் ஓர்* மூவர்என நின்று*
உருவுகரந்து* உள்ளும்தோறும் தித்திப்பான்*
திருஅமர் மார்வன்* திருக்கடித்தானத்தை*
மருவிஉறைகின்ற* மாயப்பிரானே.
மாயப்பிரான்* எனவல்வினை மாய்ந்துஅற*
நேசத்தினால் நெஞ்சம்* நாடு குடிகொண்டான்*
தேசத்துஅமரர்* திருக்கடித்தானத்தை*
வாசப்பொழில்மன்னு* கோயில்கொண்டானே.
கோயில் கொண்டான்தன்* திருக்கடித் தானத்தை*
கோயில்கொண்டான்* அதனோடும் என்நெஞ்சகம்*;
கோயில்கொள்* தெய்வம்எல்லாம் தொழ* வைகுந்தம்
கோயில்கொண்ட* குடக்கூத்த அம்மானே.
கூத்தஅம்மான்* கொடியேன்இடர் முற்றவும்*
மாய்த்தஅம்மான்* மதுசூத அம்மான்உறை*
பூத்தபொழில்தண்* திருக்கடித் தானத்தை*
ஏத்தநில்லா* குறிக்கொள்மின் இடரே.
கொண்டமின் இடர்கெட* உள்ளத்து கோவிந்தன்*
மண்விண் முழுதும்* அளந்தஒண்தாமரை*
மண்ணவர் தாம்தொழ* வானவர் தாம்வந்து*
நண்ணு திருக்கடித்தான நகரே
தான நகர்கள்* தலைச்சிறந்து எங்கெங்கும்*
வான்இந் நிலம்கடல்* முற்றும் எம்மாயற்கே*
ஆனவிடத்தும் என் நெஞ்சும்* திருக்கடித்
தான நகரும்* தனதாயப் பதியே.
தாயப்பதிகள்* தலைச்சிறந்து எங்கெங்கும்*
மாயத்தினால் மன்னி* வீற்றிருந்தான்உறை*
தேசத்துஅமரர்* திருக்கடித்தானத்துள்*
ஆயர்க்குஅதிபதி* அற்புதன்தானே.
அற்புதன் நாராயணன்* அரி வாமனன்*
நிற்பது மேவி* இருப்பது என்நெஞ்சகம்*
நல்புகழ் வேதியர்* நான்மறை நின்றுஅதிர்*
கற்பகச் சோலைத்* திருக்கடித் தானமே. (2)
சோலைத் திருக்கடித்தானத்து* உறைதிரு
மாலை* மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*
பாலோடு அமுதுஅன்ன* ஆயிரத்து இப்பத்தும்*
மேலை வைகுந்தத்து* இருத்தும் வியந்தே. (2)
உருகுமால் நெஞ்சம்* உயிரின் பரமன்றி*
பெருகுமால் வேட்கையும்* என்செய்கேன் தொண்டனேன்*
தெருவுஎல்லாம் காவிகமழ்* திருக்காட்கரை*
மருவிய மாயன்தன்* மாயம் நினைதொறே. (2)
நினைதொறும் சொல்லும்தொறும்* நெஞ்சு இடிந்துஉகும்*
வினைகொள்சீர் பாடிலும்* வேம்எனதுஆர்உயிர்*
சுனைகொள் பூஞ்சோலைத்* தென்காட்கரைஎன்அப்பா*
நினைகிலேன் நான்உனக்கு* ஆட்செய்யும் நீர்மையே.
நீர்மையால் நெஞ்சம்* வஞ்சித்துப் புகுந்து* என்னை
ஈர்மைசெய்து* என்உயிர்ஆய் என்உயிர் உண்டான்*
சீர்மல்குசோலைத்* தென்காட்கரைஎன்அப்பன்*
கார்முகில் வண்ணன்தன்* கள்வம் அறிகிலேன்.
அறிகிலேன் தன்னுள்* அனைத்துஉலகும் நிற்க*
நெறிமையால் தானும்* அவற்றுள் நிற்கும் பிரான்*
வெறிகமழ்சோலைத்* தென்காட்கரை என்அப்பன்*
சிறியவென்னாயிருண்ட திருஅருளே.
திருவருள் செய்பவன்போல* என்னுள்புகுந்து*
உருவமும் ஆருயிரும்* உடனே உண்டான்*
திருவளர்சோலைத்* தென்காட்கரைஎன்அப்பன்*
கருவளர்மேனி* என்கண்ணன் கள்வங்களே.
என்கண்ணன் கள்வம்* எனக்குச் செம்மாய்நிற்கும்*
அம்கண்ணன் உண்ட* என்ஆர்உயிர்க்கோதுஇது*
புன்கண்மை எய்தி* புலம்பி இராப்பகல்*
என்கண்ணன் என்று* அவன்காட்கரைஏத்துமே
காட்கரைஏத்தும்* அதனுள் கண்ணாஎன்னும்*
வேட்கை நோய்கூர* நினைந்து கரைந்துகும்*
ஆட்கொள் வான்ஒத்து* என்னுயிருண்ட மாயனால்*
கோள்குறைபட்டது* என்னாருயிர் கோள்உண்டே.
கோள்உண்டான் அன்றிவந்து* என்உயிர் தான்உண்டான்*
நாளும்நாள்வந்து* என்னை முற்றவும் தான்உண்டான்*
காளநீர்மேகத்* தென்காட்கரை என்அப்பற்கு*
ஆள்அன்றேபட்டது* என்ஆர்உயிர் பட்டதே.
ஆருயிர் பட்டது* எனதுஉயிர் பட்டது*
பேர்இதழ்த் தாமரைக்கண்* கனிவாயதுஓர்*
கார்எழில் மேகத்* தென்காட்கரை கோயில்கொள்,
சீர்எழில் நால்தடம்தோள்* தெய்வ வாரிக்கே.
வாரிக்கொண்டு* உன்னைவிழுங்குவன் காணில்' என்று*
ஆர்வுஉற்ற என்னை ஒழிய* என்னில் முன்னம்
பாரித்துத்* தான்என்னை* முற்றப் பருகினான்*
கார்ஒக்கும்* காட்கரைஅப்பன் கடியனே.
கடியனாய்க் கஞ்சனைக்* கொன்றபிரான் தன்னை*
கொடிமதிள் தென்குருகூர்ச்* சடகோபன்சொல்*
வடிவுஅமைஆயிரத்து* இப்பத்தினால் சன்மம்-
முடிவுஎய்தி* நாசம்கண்டீர்கள் எம்கானலே (2)
அருள்பெறுவார் அடியார் தம்* அடியனேற்கு* ஆழியான்-
அருள்தருவான் அமைகின்றான்* அதுநமது விதிவகையே*
இருள்தருமா ஞாலத்துள்* இனிப்பிறவி யான்வேண்டேன்*
மருள்ஒழி நீமடநெஞ்சே!* வாட்டாற்றான் அடிவணங்கே. (2)
வாட்டாற்றான் அடிவணங்கி* மாஞாலப் பிறப்புஅறுப்பான்*
கேட்டாயே மடநெஞ்சே!* கேசவன் எம் பெருமானைப்*
பாட்டுஆய பலபாடி* பழவினைகள் பற்றுஅறுத்து*
நாட்டாரோடு இயல்வுஒழிந்து* நாரணனை நண்ணினமே.
நண்ணினம் நாராயணனை* நாமங்கள் பலசொல்லி*
மண்உலகில் வளம்மிக்க* வாட்டாற்றான் வந்துஇன்று*
விண்உலகம் தருவானாய்* விரைகின்றான் விதிவகையே*
எண்ணின வாறுகா* இக்கருமங்கள் என்நெஞ்சே!
என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு* இரும்தமிழ்நூல்இவைமொழிந்து*
வல்நெஞ்சத்து இரணியனை* மார்வு இடந்த வாட்டாற்றான்*
மன்னஞ்ச பாரதத்துப்* பாண்டவர்க்காப் படை தொட்டான்*
நல்நெஞ்சே! நம்பெருமான்* நமக்கு அருள்தான் செய்வானே.
வான்ஏற வழிதந்த* வாட்டாற்றான் பணிவகையே*
நான்ஏறப் பெறுகின்றேன்* நரகத்தை நகுநெஞ்சே*
தேன்ஏறு மலர்த்துளவம்* திகழ்பாதன்* செழும்பறவை-
தான்ஏறித் திரிவான* தாள்இணை என்தலைமேலே
தலைமேல தாள்இணைகள்* தாமரைக்கண் என்அம்மான்*
நிலைபேரான் எனநெஞ்சத்து* எப்பொழுதும் எம்பெருமான்*
மலைமாடத்து அரவுஅணைமேல்* வாட்டாற்றான் மதம்மிக்க*
கொலையானை மருப்புஒசித்தான்* குரைகழல்கள் குறுகினமே.
குரைகழல்கள் குறுகினம்* நம் கோவிந்தன் குடிகொண்டான்*
திரைகுழுவு கடல்புடைசூழ்* தென்நாட்டுத் திலதமன்ன*
வரைகுழுவு மணிமாட* வாட்டாற்றான் மலர்அடிமேல்*
விரைகுழுவு நறும்துளவம்* மெய்ந்நின்று கமழுமே.
மெய்ந்நின்று கமழ்துளவ* விரைஏறு திருமுடியன்*
கைந்நின்ற சக்கரத்தன்* கருதும்இடம் பொருதுபுனல்*
மைந்நின்ற வரைபோலும்* திருஉருவ வாட்டாற்றாற்கு*
எந்நன்றி செய்தேனா* என்நெஞ்சில் திகழ்வதுவே?
திகழ்கின்ற திருமார்பில்* திருமங்கை தன்னோடும்*
திகழ்கின்ற திருமாலார்* சேர்விடம்தண் வாட்டாறு*
புகழ்நின்ற புள்ஊர்தி* போர்அரக்கர் குலம்கெடுத்தான்*
இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து* எப்பொழுதும் பிரியானே.
பிரியாதுஆட் செய்என்று* பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்*
அரியாகி இரணியனை* ஆகம்கீண்டான் அன்று*
பெரியார்க்கு ஆட்பட்டக்கால்* பெறாதபயன் பெறுமாறு*
வரிவாள் வாய்அரவுஅணைமேல்* வாட்டாற்றான் காட்டினனே.
காட்டித்தன் கனைகழல்கள்* கடுநரகம் புகல்ஒழித்த*
வாட்டாற்று எம்பெருமானை* வளங்குருகூர்ச் சடகோபன்*
பாட்டாய தமிழ்மாலை* ஆயிரத்துள் இப்பத்தும்-
கேட்டு ஆரார் வானவர்கள்* செவிக்குஇனிய செஞ்சொல்லே. (2)