பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை* அருவினையேன்-
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட* கள்வா! என்பன்; பின்னையும்*
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்* வல் ஆன் ஆயர் தலைவனாய்*
இள ஏறு ஏழும் தழுவிய* எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி* இமையோர் பலரும் முனிவரும்*
புனைந்த கண்ணி நீர் சாந்தம்* புகையோடு ஏந்தி வணங்கினால்*
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்* வித்துஆய் முதலில் சிதையாமே*
மனம் செய் ஞானத்து உன் பெருமை* மாசூணாதோ? மாயோனே!
மா யோனிகளாய் நடை கற்ற* வானோர் பலரும் முனிவரும்*
நீ யோனிகளைப் படை என்று* நிறை நான்முகனைப் படைத்தவன்*
சேயோன் எல்லா அறிவுக்கும்;* திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன்* எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்* தான் ஓர் உருவனே.
தான் ஓர் உருவே தனிவித்தாய்* தன்னின் மூவர் முதலாய*
வானோர் பலரும் முனிவரும்* மற்றும் மற்றும் முற்றும் ஆய்*
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி* அதனுள் கண்வளரும்*
வானோர் பெருமான் மா மாயன்* வைகுந்தன் எம் பெருமானே.
மானேய் நோக்கி மடவாளை* மார்பில் கொண்டாய்! மாதவா!*
கூனே சிதைய உண்டை வில்* நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*
வான் ஆர் சோதி மணிவண்ணா!* மதுசூதா! நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே.
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!* விண்ணோர் தலைவா! கேசவா!*
மனை சேர் ஆயர் குல முதலே!* மா மாயனே! மாதவா!*
சினை ஏய் தழைய மராமரங்கள்* ஏழும் எய்தாய்! சிரீதரா!*
இனையாய் இனைய பெயரினாய்!* என்று நைவன் அடியேனே.
அடியேன் சிறிய ஞானத்தன்;* அறிதல் ஆர்க்கும் அரியானை*
கடி சேர் தண் அம் துழாய்க்* கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*
செடி ஆர் ஆக்கை அடியாரைச்* சேர்தல் தீர்க்கும் திருமாலை*
அடியேன் காண்பான் அலற்றுவன்;* இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே?
உண்டாய் உலகு ஏழ் முன்னமே;* உமிழ்ந்து மாயையால் புக்கு*
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்* உவலை ஆக்கை நிலை எய்தி*
மண் தான் சோர்ந்தது உண்டேலும்* மனிசர்க்கு ஆகும் பீர்* சிறிதும்-
அண்டாவண்ணம் மண் கரைய* நெய் ஊண் மருந்தோ? மாயோனே!
மாயோம் தீய அலவலைப்* பெரு மா வஞ்சப் பேய் வீயத்*
தூய குழவியாய் விடப் பால் அமுதா* அமுது செய்திட்ட-
மாயன் வானோர் தனித் தலைவன்* மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்-
தாயோன் தம்மான் என் அம்மான்* அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து* மாயப் பற்று அறுத்து*
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்* திருத்தி வீடு திருத்துவான்*
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி* அகலம் கீழ் மேல் அளவு இறந்து*
நேர்ந்த உருவாய் அருவாகும்* இவற்றின் உயிராம் நெடுமாலே!
மாலே மாயப் பெருமானே!* மா மாயவனே! என்று என்று*
மாலே ஏறி மால் அருளால்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
பால் ஏய் தமிழர் இசைகாரர்* பத்தர் பரவும் ஆயிரத்தின்-
பாலே பட்ட இவை பத்தும்* வல்லார்க்கு இல்லை பரிவதே.
அம் தாமத்து அன்பு செய்து* என் ஆவி சேர் அம்மானுக்கு,*
அம் தாமம் வாழ் முடி சங்கு* ஆழி நூல் ஆரம் உள,*
செந்தாமரைத்தடம் கண்* செங்கனி வாய் செங்கமலம்,*
செந்தாமரை அடிகள்* செம்பொன் திரு உடம்பே.
திரு உடம்பு வான் சுடர்* செந்தாமரை கண் கை கமலம்,*
திரு இடமே மார்வம்* அயன் இடமே கொப்பூழ்,*
ஒருவு இடமும்* எந்தை பெருமாற்கு அரனே ஓ,*
ஒருவு இடம் ஒன்று இன்றி* என்னுள் கலந்தானுக்கே.
என்னுள் கலந்தவன்* செங்கனி வாய் செங்கமலம்,*
மின்னும் சுடர் மலைக்குக்* கண் பாதம் கை கமலம்,*
மன்னும் முழு ஏழ் உலகும்* வயிற்றின் உள,*
தன்னுள் கலவாதது* எப் பொருளும் தான் இலையே.
எப் பொருளும் தான் ஆய்* மரகதக் குன்றம் ஒக்கும்.*
அப்பொழுதைத் தாமரைப்பூக்* கண் பாதம் கை கமலம்,*
எப்பொழுதும் நாள் திங்கள்* ஆண்டு ஊழி ஊழிதொறும்,*
அப்பொழுதைக்கு அப்பொழுது* என் ஆரா அமுதமே.
ஆரா அமுதமாய்* அல் ஆவியுள் கலந்த,*
கார் ஆர் கருமுகில் போல்* என் அம்மான் கண்ணனுக்கு,*
நேரா வாய் செம்பவளம்* கண் பாதம் கை கமலம்,*
பேர் ஆரம் நீள் முடி நாண்,* பின்னும் இழை பலவே.
பலபலவே ஆபரணம்* பேரும் பலபலவே,*
பலபலவே சோதி* வடிவு பண்பு எண்ணில்,*
பலபல கண்டு உண்டு* கேட்டு உற்று மோந்து இன்பம்,*
பலபலவே ஞானமும்* பாம்பு அணை மேலாற்கேயோ.
பாம்பு அணைமேல் பாற்கடலுள்* பள்ளி அமர்ந்ததுவும்,*
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்* ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,*
தேம் பணைய சோலை* மராமரம் ஏழ் எய்ததுவும்,*
பூம் பிணைய தண் துழாய்ப்* பொன் முடி அம் போர் ஏறே.
பொன் முடி அம் போர் ஏற்றை* எம்மானை நால் தடம் தோள்,*
தன் முடிவு ஒன்று இல்லாத* தண் துழாய் மாலையனை,*
என் முடிவு காணாதே* என்னுள் கலந்தானை,*
சொல்முடிவு காணேன் நான்* சொல்லுவது என் சொல்லீரே.
சொல்லீர் என் அம்மானை* என் ஆவி ஆவிதனை,*
எல்லை இல் சீ* ர் என் கருமாணிக்கச் சுடரை,*
நல்ல அமுதம்* பெறற்கு அரிய வீடும் ஆய்,*
அல்லி மலர் விரை ஒத்து* ஆண் அல்லன் பெண் அலனே.
ஆண் அல்லன் பெண் அல்லன்* அல்லா அலியும் அல்லன்,*
காணலும் ஆகான்* உளன் அல்லன் இல்லை அல்லன்,*
பேணுங்கால் பேணும்* உரு ஆகும் அல்லனும் ஆம்,*
கோணை பெரிது உடைத்து* எம் பெம்மானைக் கூறுதலே.
கூறுதல் ஒன்று ஆராக்* குடக் கூத்த அம்மானைக்,*
கூறுதலே மேவிக்* குருகூர்ச் சடகோபன்,*
கூறின அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
கூறுதல் வல்லார் உளரேல்* கூடுவர் வைகுந்தமே.
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை* முதலைச் சிறைப்பட்டு நின்ற,*
கைம்மாவுக்கு அருள் செய்த* கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,*
எம்மானைச் சொல்லிப் பாடி* எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,*
தம்மாம் கருமம் என் சொல்லீர்* தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)
தண்கடல் வட்டத்து உள்ளாரைத்* தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்,*
திண்கழல்கால் அசுரர்க்குத்* தீங்கு இழைக்கும் திருமாலைப்,*
பண்கள் தலைக்கொள்ளப் பாடி* பறந்தும் குனித்தும் உழலாதார்,*
மண்கொள் உலகில் பிறப்பார்* வல்வினை மோத மலைந்தே.
மலையை எடுத்து கல்மாரி* காத்து* பசுநிரை தன்னைத்,*
தொலைவு தவிர்த்த பிரானைச்* சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*
தலையினோடு ஆதனம் தட்டத்* தடுகுட்டமாய்ப் பறவாதார்,*
அலை கொள் நரகத்து அழுந்திக்* கிடந்து உழைக்கின்ற வம்பரே.
வம்பு அவிழ் கோதைபொருட்டா* மால்விடை ஏழும் அடர்த்த,*
செம்பவளத் திரள் வாயன்* சிரீதரன் தொல்புகழ் பாடி,*
கும்பிடு நட்டம் இட்டு ஆடி* கோகு உகட்டுண்டு உழலாதார்,*
தம்பிறப்பால் பயன் என்னே* சாது சனங்களிடையே?
சாது சனத்தை நலியும்* கஞ்சனைச் சாதிப்பதற்கு,*
ஆதி அம் சோதி உருவை* அங்கு வைத்து இங்குப் பிறந்த,,*
வேத முதல்வனைப் பாடி* வீதிகள் தோறும் துள்ளாதார்,*
ஓதி உணர்ந்தவர் முன்னா* என் சவிப்பார் மனிசரே?
மனிசரும் மற்றும் முற்றும் ஆய்* மாயப் பிறவி பிறந்த,*
தனியன் பிறப்பிலி தன்னை* தடங்கடல் சேர்ந்த பிரானை,*
கனியை கரும்பின் இன் சாற்றை* கட்டியை தேனை அமுதை,*
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்* முழுது உணர் நீர்மையினார.
நீர்மை இல் நூற்றுவர் வீய* ஐவர்க்கு அருள்செய்து நின்று,*
பார்மல்கு சேனை அவித்த* பரஞ்சுடரை நினைந்து ஆடி*
நீர்மல்கு கண்ணினர் ஆகி* நெஞ்சம் குழைந்து நையாதே,*
ஊன் மல்கி மோடு பருப்பார்* உத்தமர்கட்கு என் செய்வாரே?
வார்புனல் அம் தண் அருவி* வடதிருவேங்கடத்து எந்தை,*
பேர்பல சொல்லிப் பிதற்றி* பித்தர் என்றே பிறர்கூற,*
ஊர்பல புக்கும் புகாதும்* உலோகர் சிரிக்க நின்று ஆடி,*
ஆர்வம் பெருகிக் குனிப்பார்* அமரர் தொழப்படுவாரே.
அமரர் தொழப்படுவானை* அனைத்து உலகுக்கும் பிரானை,*
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து* அவன் தன்னோடு ஒன்று ஆக,*
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய* அல்லாதவர் எல்லாம்,*
அமர நினைந்து எழுந்து ஆடி* அலற்றுவதே கருமமே.
கருமமும் கரும பலனும் ஆகிய* காரணன் தன்னை,*
திருமணி வண்ணனை செங்கண் மாலினை* தேவபிரானை,*
ஒருமை மனத்தினுள் வைத்து* உள்ளம் குழைந்து எழுந்து ஆடி,*
பெருமையும் நாணும் தவிர்ந்து* பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.
தீர்ந்த அடியவர் தம்மைத்* திருத்திப் பணிகொள்ளவல்ல,*
ஆர்ந்த புகழ் அச்சுதனை* அமரர் பிரானை எம்மானை,*
வாய்ந்த வளவயல்சூழ்* தண் வளங் குருகூர்ச்சடகோபன்,*
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து* அருவினை நீறு செய்யுமே. (2)
வீற்றிருந்து ஏழ் உலகும்* தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,*
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை* வெம் மா பிளந்தான் தன்னை,*
போற்றி என்றே கைகள் ஆரத்* தொழுது சொல் மாலைகள்,*
ஏற்ற நோற்றேற்கு* இனி என்ன குறை எழுமையுமே? (2)
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்* உறை மார்பினன்,*
செய்ய கோலத் தடங் கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப்பெற்றேன்,*
வெய்ய நோய்கள் முழுதும்* வியன் ஞாலத்து வீயவே.
வீவு இல் இன்பம்மிக* எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்,*
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி* மேவப்பெற்றேன்,*
வீவு இல் இன்பம்மிக* எல்லை நிகழ்ந்தனன் மேவியே.
மேவி நின்று தொழுவார்* வினை போக மேவும் பிரான்,*
தூவி அம் புள் உடையான்* அடல் ஆழி அம்மான் தன்னை,
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி* நண்ணப் பெற்றேன்,*
ஆவி என் ஆவியை* யான் அறியேன் செய்த ஆற்றையே.
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை,* அமரர்தம்-
ஏற்றை* எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை,*
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி* நாளும் மகிழ்வு எய்தினேன்,*
காற்றின் முன்னம் கடுகி* வினை நோய்கள் கரியவே.
கரிய மேனிமிசை* வெளிய நீறு சிறிதே இடும்,*
பெரிய கோலத் தடங்கண்ணன்* விண்ணோர் பெருமான் தன்னை,*
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி* உள்ளப்பெற்றேற்கு,*
அரியது உண்டோ எனக்கு* இன்று தொட்டும் இனி என்றுமே?
என்றும் ஒன்று ஆகி* ஒத்தாரும் மிக்கார்களும்,* தன் தனக்கு -
இன்றி நின்றானை* எல்லா உலகும் உடையான் தன்னை,*
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை* சொல் மாலைகள்,*
நன்று சூட்டும் விதி எய்தினம்* என்ன குறை நமக்கே?
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்* இன்பனை,* ஞாலத்தார்-
தமக்கும்* வானத்தவர்க்கும் பெருமானை,* தண் தாமரை-
சுமக்கும்* பாதப் பெருமானை* சொல்மாலைகள் சொல்லுமாறு-
அமைக்க வல்லேற்கு* இனி யாவர் நிகர் அகல் வானத்தே?
வானத்தும் வானத்துள் உம்பரும்* மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும்,* எண் திசையும் தவிராது* நின்றான் தன்னை,*
கூனல் சங்கத் தடக்கையவனை* குடம் ஆடியை
வானக் கோனை,* கவி சொல்ல வல்லேற்கு* இனி மாறுஉண்டே?
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்* கிடந்தும் நின்றும்,*
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்* மணம் கூடியும்,*
கண்ட ஆற்றால் தனதே* உலகு என நின்றான் தன்னை,*
வண் தமிழ் நூற்க நோற்றேன்* அடியார்க்கு இன்ப மாரியே.
மாரி மாறாத தண் அம் மலை* வேங்கடத்து அண்ணலை,*
வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்* குருகூர் நகர்க்,*
காரி மாறன் சடகோபன்* சொல் ஆயிரத்து இப் பத்தால்,*
வேரி மாறாத பூமேல் இருப்பாள்* வினை தீர்க்குமே.
எங்ஙனேயோ அன்னைமீர்காள்!* என்னை முனிவது நீர்?*
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சங்கினோடும் நேமியோடும்* தாமரைக் கண்களோடும்*
செங்கனி வாய் ஒன்றினோடும்* செல்கின்றது என்நெஞ்சமே*. (2)
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்* என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
மின்னு நூலும் குண்டலமும்* மார்பில் திருமறுவும்*
மன்னு பூணும் நான்கு தோளும்* வந்து எங்கும் நின்றிடுமே*.
நின்றிடும் திசைக்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
வென்றி வில்லும் தண்டும் வாளும்* சக்கரமும் சங்கமும்*
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா* நெஞ்சுள்ளும் நீங்காவே*.
நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று* அன்னையரும் முனிதிர்*
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
பூந்தண் மாலைத் தண் துழாயும்* பொன் முடியும் வடிவும்*
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்* பாவியேன் பக்கத்தவே*.
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
தொக்க சோதித் தொண்டை வாயும்* நீண்ட புருவங்களும்*
தக்க தாமரைக் கண்ணும்* பாவியேன் ஆவியின் மேலனவே*.
மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
கோலநீள் கொடி மூக்கும்* தாமரைக் கண்ணும் கனிவாயும்*
நீலமேனியும் நான்கு தோளும்* என் நெஞ்சம் நிறைந்தனவே*.
நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த* நீண்ட பொன் மேனியொடும்*
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்* நேமி அங்கை உளதே*.
கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று* அன்னையரும் முனிதிர்*
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்* சிற்றிடையும் வடிவும்*
மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்* பாவியேன் முன் நிற்குமே*.
முன் நின்றாய் என்று தோழிமார்களும்* அன்னையரும் முனிதிர்*
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சென்னி நீள்முடி ஆதிஆய* உலப்பு இல் அணிகலத்தன்*
கன்னல் பால் அமுதுஆகி வந்து* என் நெஞ்சம் கழியானே*.
கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
குழுமித் தேவர் குழாங்கள்* கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே*
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்* ஆர்க்கும் அறிவு அரிதே*.
அறிவு அரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*
நறிய நன் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன்மேல்*
அறியக் கற்று வல்லார் வைட்டவர்* ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு* தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்!* உமக்கு ஆசை இல்லை விடுமினோ,*
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்* தாமரைத் தடம் கண் என்றும்,*
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க* நின்று நின்று குமுறுமே.
குமுறும் ஓசை விழவு ஒலித்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
அமுத மென் மொழியாளை* நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,*
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்* மற்று இவள்தேவ தேவபிரான் என்றே,*
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க* நெக்கு ஒசிந்து கரையுமே.
கரை கொள் பைம் பொழில் தண்பணைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
உரை கொள் இன் மொழியாளை* நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,*
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்* திசை ஞாலம் தாவி அளந்ததும்,*
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி* நெடும் கண் நீர் மல்க நிற்குமே.
நிற்கும் நால்மறைவாணர் வாழ்* தொலைவில்லிமங்கலம் கண்டபின்,*
அற்கம் ஒன்றும் அற உறாள்* மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,*
கற்கும் கல்வி எல்லாம்* கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே,*
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து* உள் மகிழ்ந்து குழையுமே.
குழையும் வாள் முகத்து ஏழையைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்* இருந்தமை காட்டினீர்,*
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு* அன்று தொட்டும் மையாந்து,* இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர்!* தொழும் அத் திசை உற்று நோக்கியே.
நோக்கும் பக்கம் எல்லாம்* கரும்பொடு செந்நெல்ஓங்கு செந்தாமரை,*
வாய்க்கும் தண் பொருநல்* வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,*
நோக்குமேல் அத்திசை அல்லால்* மறு நோக்கு இலள் வைகல் நாள்தொறும்,*
வாய்க்கொள் வாசகமும்* மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!
அன்னைமீர்! அணிமாமயில்* சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து*
என்ன வார்த்தையும் கேட்குறாள்* தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்,*
முன்னம் நோற்ற விதிகொலோ* முகில் வண்ணன் மாயம் கொலோ,* அவன்
சின்னமும் திருநாமமும்* இவள் வாயனகள் திருந்தவே.
திருந்து வேதமும் வேள்வியும்* திருமா மகளிரும் தாம்,* மலிந்து
இருந்து வாழ் பொருநல்* வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,*
கருந் தடம் கண்ணி கைதொழுத* அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்*
இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'* என்று என்றே நைந்து இரங்குமே.
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ* இவள் கண்ண நீர்கள் அலமர,*
மரங்களும் இரங்கும் வகை* 'மணிவண்ணவோ!' என்று கூவுமால்,*
துரங்கம் வாய் பிளந்தான் உறை* தொலைவில்லிமங்கலம் என்று,* தன்
கரங்கள் கூப்பித் தொழும்* அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.
பின்னைகொல் நிலமாமகள்கொல்?* திருமகள்கொல் பிறந்திட்டாள்,*
என்ன மாயம்கொலோ?* இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்,*
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும்* தொலைவில்லிமங்கலம்-
சென்னியால் வணங்கும்* அவ் ஊர்த் திருநாமம்* கேட்பது சிந்தையே.
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்* தேவ பிரானையே,*
தந்தை தாய் என்று அடைந்த* வண் குருகூரவர் சடகோபன்,*
முந்தை ஆயிரத்துள் இவை* தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,*
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்* அடிமைசெய்வார் திருமாலுக்கே
கற்பார் இராம பிரானை அல்லால்* மற்றும் கற்பரோ?,*
புல்பா முதலா* புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*
நல்பால் அயோத்தியில் வாழும்* சராசரம் முற்றவும்,*
நல்பாலுக்கு உய்த்தனன்* நான்முக னார்பெற்ற நாட்டுளே? (2)
நாட்டில் பிறந்தவர்* நாரணற்கு ஆள்அன்றி ஆவரோ,*
நாட்டில் பிறந்து படாதன பட்டு* மனிசர்க்காய்,*
நாட்டை நலியும் அரக்கரை* நாடித் தடிந்திட்டு,*
நாட்டை அளித்துஉய்யச் செய்து* நடந்தமை கேட்டுமே?
கேட்பார்கள் கேசவன் கீர்த்திஅல்லால்* மற்றும் கேட்பரோ,*
கேட்பார் செவிசுடு* கீழ்மை வசைவுகளே வையும்,*
சேண்பால் பழம்பகைவன்* சிசு பாலன்,* திருவடி
தாள்பால் அடைந்த* தன்மை அறிவாரை அறிந்துமே?
தன்மை அறிபவர்* தாம் அவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
பன்மைப் படர்பொருள்* ஆதும்இல்பாழ் நெடும்காலத்து,*
நன்மைப் புனல்பண்ணி* நான்முகனைப்பண்ணி தன்னுள்ளே*
தொன்மை மயக்கிய தோற்றிய* சூழல்கள் சிந்தித்தே?
சூழல்கள் சிந்திக்கில்* மாயன் கழல்அன்றி சூழ்வரோ,*
ஆழப் பெரும்புனல்* தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்,*
தாழப் படாமல்* தன் பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட,*
கேழல் திருஉருஆயிற்றுக்* கேட்டும் உணர்ந்துமே?
கேட்டும் உணர்ந்தவர்* கேசவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
வாட்டம்இலா வண்கை* மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*
ஈட்டம்கொள் தேவர்கள்* சென்றுஇரந்தார்க்கு இடர் நீக்கிய,*
கோட்டுஅங்கை வாமனன்ஆய்* செய்த கூத்துக்கள் கண்டுமே?
கண்டும் தெளிந்தும் கற்றார்* கண்ணற்கு ஆளன்றி ஆவரோ,*
வண்டுஉண் மலர்த்தொங்கல்* மார்க்கண்டேயனுக்கு வாழும்நாள்*
இண்டைச் சடைமுடி* ஈசன்உடன்கொண்டு உசாச்செல்ல,*
கொண்டுஅங்கு தன்னொடும் கொண்டு* உடன்சென்றது உணர்ந்துமே?
செல்ல உணர்ந்தவர்* செல்வன்தன் சீர்அன்றி கற்பரோ,*
எல்லை இலாத பெரும்தவத்தால்* பல செய்மிறை,*
அல்லல் அமரரைச் செய்யும்* இரணியன் ஆகத்தை,*
மல்லல் அரிஉருஆய்* செய்த மாயம் அறிந்துமே?
மாயம் அறிபவர்* மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க* ஓர்ஐவர்க்குஆய்,*
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று* சேனையை
நாசம் செய்திட்டு,* நடந்த நல் வார்த்தை அறிந்துமே?
வார்த்தை அறிபவர்* மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,*
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு* இறப்புஇவை
பேர்த்து,* பெரும்துன்பம் வேர்அற நீக்கி* தன் தாளின்கீழ்ச்
சேர்த்து,* அவன் செய்யும்* சேமத்தைஎண்ணித் தெளிவுற்றே?
தெளிவுற்று வீவுஇன்றி* நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,*
தெளிவுற்ற கண்ணனைத்* தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*
தெளிவுற்ற ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்,* அவர்
தெளிவுற்ற சிந்தையர்* பாமரு மூவுலகத்துள்ளே (2)
மாயக்கூத்தா!வாமனா!* வினையேன்கண்ணா! கண்கைகால்*
தூயசெய்ய மலர்களா* சோதிச்செவ்வாய் முகிழதா*
சாயல்சாமத் திருமேனி* தண்பாசடையா* தாமரைநீள்
வாசத்தடம்போல் வருவானே!* ஒருநாள் காண வாராயே.
'காணவாராய்' என்றுஎன்று* கண்ணும்வாயும் துவர்ந்து* அடியேன்
நாணி நல்நாட்டு அலமந்தால்* இரங்கி ஒருநாள் நீஅந்தோ*
காணவாராய்! கருநாயிறுஉதிக்கும்* கருமாமாணிக்க*
நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி* முடிசேர் சென்னி அம்மானே!
'முடிசேர் சென்னி அம்மா!* நின்மொய்பூம்தாமத் தண்துழாய்க்*
கடிசேர் கண்ணிப் பெருமானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
படிசேர்மகரக் குழைகளும்* பவளவாயும் நால்தோளும்*
துடிசேர் இடையும் அமைந்தது ஓர்* தூநீர் முகில்போல் தோன்றாயே.
தூநீர் முகில்போல் தோன்றும்* நின்சுடர்கொள் வடிவும் கனிவாயும்*
தேநீர்க்கமலக் கண்களும்* வந்து என்சிந்தை நிறைந்தவா*
மாநீர்வெள்ளிமலை தன்மேல்* வண்கார் நீல முகில்போல*
தூநீர்க்கடலுள் துயில்வானே!* எந்தாய்! சொல்லமாட்டேனே.
சொல்லமாட்டேன் அடியேன்* உன்துளங்குசோதித் திருப்பாதம்*
எல்லைஇல் சீர்இள நாயிறு* இரண்டுபோல் என்உள்ளவா!*
அல்லல் என்னும் இருள்சேர்தற்கு* உபாயம் என்னே? ஆழிசூழ்*
மல்லை ஞாலம் முழுதுஉண்ட* மாநீர்க் கொண்டல் வண்ணனே!
'கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!* வினையேன் கண்ணா! கண்ணா* என்
அண்டவாணா!' என்றுஎன்னை* ஆளக் கூப்பிட்டுஅழைத்தக்கால்*
விண்தன்மேல்தான் மண்மேல்தான்* விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்*
தொண்டனேன் உன்கழல்காண* ஒருநாள்வந்து தோன்றாயே.
வந்து தோன்றாய்அன்றேல்* உன் வையம்தாய மலர்அடிக்கீழ்*
முந்தி வந்து யான்நிற்ப* முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்*
செந்தண்கமலக் கண்கைகால்* சிவந்தவாய்ஓர் கருநாயிறு*
அந்தம் இல்லாக் கதிர்பரப்பி* அலர்ந்ததுஒக்கும் அம்மானே!
ஒக்கும் அம்மான் உருவம்என்று* உள்ளம் குழைந்து நாள்நாளும்*
தொக்க மேகப் பல்குழாங்கள்* காணும்தோறும் தொலைவன்நான்*
தக்க ஐவர் தமக்காய்அன்று* ஈர்ஐம்பதின்மர் தாள்சாயப்*
புக்கநல்தேர்த் தனிப்பாகா!* வாராய் இதுவோ பொருத்தமே?
'இதுவோ பொருத்தம்? மின்ஆழிப் படையாய்!* ஏறும் இரும்சிறைப்புள்*
அதுவே கொடியா உயர்த்தானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
எதுவேயாகக் கருதுங்கொல்* இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்*
மதுவார் சோலை* உத்தர மதுரைப் பிறந்த மாயனே?
பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!* நீஇன்னே*
சிறந்தகால் தீநீர்வான்* மண்பிறவும்ஆய பெருமானே*
கறந்த பாலுள் நெய்யேபோல்* இவற்றுள்எங்கும் கண்டுகொள்*
இறந்து நின்ற பெருமாயா!* உன்னை எங்கே காண்கேனே?
'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை* யான்?' என்றுஎன்று*
அங்கே தாழ்ந்த சொற்களால்* அம்தண் குருகூர்ச் சடகோபன்*
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்* எல்லியும் காலையே. (2)
இன்னுயிர்சேவலும் நீரும் கூவிக்கொண்டு* இங்கு எத்தனை*
என்னுயிர் நோவ மிழற்றேல்மின்* குயில் பேடைகாள்*
என்னுயிர்க் கண்ணபிரானை* நீர் வரக்கூவுகிலீர்*
என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்* இத்தனை வேண்டுமோ? (2)
இத்தனை வேண்டுவதுஅன்றுஅந்தோ!* அன்றில் பேடைகாள்*
எத்தனை நீரும் நும்சேவலும்* கரைந்துஏங்குதிர்*
வித்தகன் கோவிந்தன்* மெய்யன்அல்லன் ஒருவர்க்கும்*
அத்தனைஆம் இனி* என்உயிர் அவன்கையதே.
அவன்கையதே எனதுஆர்உயிர்* அன்றில் பேடைகாள்*
எவன்சொல்லி நீர்குடைந்துஆடுதிர்* புடைசூழவே*
தவம்செய்தில்லா* வினையாட்டியேன் உயிர் இங்குஉண்டோ*
எவன்சொல்லி நிற்றும்* நும்ஏங்கு கூக்குரல் கேட்டுமே.
கூக்குரல்கேட்டும்* நம்கண்ணன் மாயன் வெளிப்படான்*
மேல்கிளை கொள்ளேல்மின்* நீரும் சேவலும் கோழிகாள்*
வாக்கும்மனமும்* கருமமும் நமக்குஆங்கதே*
ஆக்கையும் ஆவியும்* அந்தரம் நின்றுஉழலுமே
அந்தரம் நின்றுஉழல்கின்ற* யானுடைப் பூவைகாள்*
நும்திறத்துஏதும் இடைஇல்லை* குழறேல்மினோ*
இந்திரஞாலங்கள் காட்டி* இவ்ஏழ்உலகும் கொண்ட*
நம் திருமார்பன்* நம்ஆவி உண்ண நன்குஎண்ணினான்.
நன்குஎண்ணி நான்வளர்த்த* சிறுகிளிப்பைதலே*
இன்குரல் நீ மிழற்றேல்* என்ஆர்உயிர்க் காகுத்தன்*
நின்செய்ய வாய்ஒக்கும் வாயன்* கண்ணன்கை காலினன்*
நின்பசும்சாம நிறத்தன்* கூட்டுண்டு நீங்கினான்.
கூட்டுண்டு நீங்கிய* கோலத்தாமரைக் கண்செவ்வாய்*
வாட்டம்இல்என் கருமாணிக்கம்* கண்ணன் மாயன்போல்*
கோட்டிய வில்லொடு* மின்னும் மேகக்குழாங்கள்காள்*
காட்டேல்மின் நும்உரு* என்உயிர்க்கு அதுகாலனே.
உயிர்க்குஅது காலன்என்று* உம்மை யான்இரந்தேற்குநீர்*
குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*
தயிர்ப்பழஞ்சோற்றொடு* பால்அடிசிலும் தந்து* சொல்
பயிற்றிய நல்வளம்ஊட்டினீர்* பண்புஉடையீரே!
பண்புடை வண்டொடு தும்பிகாள்* பண்மிழற்றேல்மின்*
புண்புரை வேல்கொடு* குத்தால்ஒக்கும் நும்இன்குரல்
தண்பெருநீர்த் தடம்தாமரை* மலர்ந்தால்ஒக்கும்
கண்பெரும்கண்ணன்* நம்ஆவிஉண்டுஎழ நண்ணினான்
எழநண்ணி நாமும்* நம்வானநாடனோடு ஒன்றினோம்*
பழன நல்நாரைக் குழாங்கள்காள்* பயின்றுஎன்இனி*
இழைநல்லஆக்கையும்* பையவே புயக்குஅற்றது*
தழைநல்ல இன்பம் தலைப்பெய்து* எங்கும் தழைக்கவே.
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த* பல்ஊழிக்குத்*
தன்புகழ்ஏத்தத்* தனக்குஅருள் செய்தமாயனைத்*
தென்குருகூர்ச் சடகோபன்* சொல்ஆயிரத்துள் இவை*
ஒன்பதோடு ஒன்றுக்கும்* மூவுலகும் உருகுமே (2)
கண்ணன் கழல்இணை* நண்ணும் மனம்உடையீர்*
எண்ணும் திருநாமம்* திண்ணம் நாரணமே. (2)
நாரணன் எம்மான்* பாரணங்காளன்*
வாரணம் தொலைத்த* காரணன் தானே.
தானே உலகுஎல்லாம்* தானே படைத்துஇடந்து*
தானே உண்டுஉமிழ்ந்து* தானே ஆள்வானே.
ஆள்வான் ஆழிநீர்க்* கோள்வாய் அரவுஅணையான்*
தாள்வாய் மலர்இட்டு* நாள்வாய் நாடீரே.
நாடீர் நாள்தோறும்* வாடா மலர்கொண்டு*
பாடீர் அவன்நாமம்* வீடே பெறலாமே.
மேயான் வேங்கடம்* காயாமலர் வண்ணன்*
பேயார் முலைஉண்ட* வாயான் மாதவனே. (2)
மாதவன் என்றுஎன்று* ஓத வல்லீரேல்*
தீதுஒன்றும் அடையா* ஏதம் சாராவே.
சாரா ஏதங்கள்* நீரார் முகில்வண்ணன்*
பேர் ஆர் ஓதுவார்* ஆரார் அமரரே.
அமரர்க்கு அரியானை* தமர்கட்கு எளியானை*
அமரத் தொழுவார்கட்கு* அமரா வினைகளே.
வினைவல் இருள்என்னும்* முனைகள் வெருவிப்போம்*
சுனை நல் மலர்இட்டு* நினைமின் நெடியானே.
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்துஇப்பத்து அடியார்க்கு அருள்பேறே (2)