பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
காவார் மடல்பெண்ணை* அன்றில்அரி குரலும்,*
ஏவாயின் ஊடுஇயங்கும்* எஃகின் கொடிதாலோ,*
பூஆர் மணம்கமழும்* புல்லாணி கைதொழுதேன்,*
பாவாய்! இதுநமக்குஓர்* பான்மையே ஆகாதே. (2)
முன்னம் குறள்உருஆய்* மூவடிமண் கொண்டுஅளந்த,*
மன்னன் சரிதைக்கே* மால்ஆகி பொன்பயந்தேன்,*
பொன்னம் கழிக்கானல்* புள்இனங்காள்! புல்லாணி*
அன்னம்ஆய் நூல்பயந்தாற்கு* ஆங்குஇதனைச் செப்புமினே
வவ்வி துழாய்அதன்மேல்* சென்ற தனிநெஞ்சம்,*
செவ்வி அறியாது* நிற்கும்கொல் நித்திலங்கள்*
பவ்வத் திரைஉலவு* புல்லாணி கைதொழுதேன்,*
தெய்வச் சிலையாற்கு* என் சிந்தைநோய் செப்புமினே.
பரிய இரணியனது ஆகம்* அணிஉகிரால்,*
அரிஉருஆய்க் கீண்டான் அருள்* தந்தவா! நமக்கு,*
பொருதிரைகள் போந்துஉலவு* புல்லாணி கைதொழுதேன்,*
அரிமலர்க்கண் நீர்ததும்ப* அம்துகிலும் நில்லாவே.
வில்லால் இலங்கை மலங்க* சரம்துரந்த,*
வல்லாளன் பின்போன* நெஞ்சம் வரும் அளவும்,*
எல்லாரும் என்தன்னை* ஏசிலும் பேசிடினும்,*
புல்லாணி எம்பெருமான்* பொய் கேட்டுஇருந்தேனே (2)
சுழன்றுஇலங்கு வெம்கதிரோன்* தேரோடும் போய்மறைந்தான்,*
அழன்று கொடிதுஆகி* அம்சுடரோன் தான்அடுமால்,*
செழுந்தடம் பூஞ்சோலை சூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
இழந்திருந்தேன் என்தன்* எழில்நிறமும் சங்குமே.
கனைஆர் இடிகுரலின்* கார்மணியின் நாஆடல்,*
தினையேனும் நில்லாது* தீயில் கொடிதாலோ,*
புனைஆர் மணிமாடப்* புல்லாணி கைதொழுதேன்,*
வினையேன்மேல் வேலையும்* வெம்தழலே வீசுமே.
தூம்புஉடைக்கை வேழம்* வெருவ மருப்புஒசித்த*
பாம்பின் அணையான்* அருள்தந்தவா நமக்கு,*
பூஞ்செருந்தி பொன்சொரியும்* புல்லாணி கைதொழுதேன்,*
தேம்பல் இளம்பிறையும்* என்தனக்கு ஓர்வெம்தழலே.
வேதமும் வேள்வியும்* விண்ணும் இருசுடரும்,*
ஆதியும் ஆனான்* அருள் தந்தவா நமக்கு,*
போதுஅலரும் புன்னைசூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
ஓதமும் நானும்* உறங்காது இருந்தேனே.
பொன்அலரும் புன்னைசூழ்* புல்லாணி அம்மானை*
மின்இடையார் வேட்கைநோய் கூர* இருந்ததனை,*
கல்நவிலும் திண்தோள்* கலியன் ஒலிவல்லார்,*
மன்னவர்ஆய் மண்ஆண்டு* வான்நாடும் முன்னுவரே (2)
மையார்கருங்கண்ணி* கமல மலர்மேல்*
செய்யாள் திருமார்வினில்சேர்* திருமாலே*
வெய்யார்சுடர்ஆழி* சுரிசங்கம்ஏந்தும்*
கையா உன்னைக்காணக்* கருதும் என்கண்ணே. (2)
கண்ணேஉன்னைக் காணக்கருதி* என்நெஞ்சம்
எண்ணேகொண்ட* சிந்தையதாய் நின்றுஇயம்பும்*
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்புஅரியாயை*
நண்ணாது ஒழியேன் என்று* நான் அழைப்பனே
அழைக்கின்ற அடிநாயேன்* நாய்கூழை வாலால்*
குழைக்கின்றது போல* என்உள்ளம் குழையும்*
மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து* ஆநிரைகாத்தாய்.
பிழைக்கின்றதுஅருள்என்று* பேதுறுவனே
உறுவது இதுஎன்று* உனக்கு ஆள்பட்டு* நின்கண்
பெறுவது எதுகொல்என்று* பேதையேன் நெஞ்சம்*
மறுகல்செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்*
அறிவதுஅரிய* அரியாய அம்மானே!
அரியாய அம்மானை* அமரர் பிரானை*
பெரியானை* பிரமனை முன்படைத்தானை*
வரிவாள் அரவின்அணைப்* பள்ளிகொள்கின்ற*
கரியான்கழல் காணக்* கருதும் கருத்தே.
கருத்தே உன்னைக்* காணக்கருதி* என்நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன்* தேவர்கட்குஎல்லாம்*
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி* உயரத்து
ஒருத்தா* உன்னைஉள்ளும்* என்உள்ளம் உகந்தே
உகந்தேஉன்னை* உள்ளும் என்உள்ளத்து அகம்பால்*
அகம்தான் அமர்ந்தே* இடம்கொண்ட அமலா*
மிகும்தானவன் மார்வுஅகலம்* இருகூறா*
நகந்தாய் நரசிங்கம்அதுஆய உருவே!
உருவாகிய* ஆறுசமயங்கட்குஎல்லாம்*
பொருவாகி நின்றான்* அவன் எல்லாப்பொருட்கும்*
அருவாகிய ஆதியை* தேவர்கட்குஎல்லாம்*
கருவாகிய கண்ணனை* கண்டுகொண்டேனே.
கண்டுகொண்டு* என்கண்இணை ஆரக்களித்து*
பண்டைவினையாயின* பற்றோடுஅறுத்து*
தொண்டர்க்கு அமுதுஉண்ணச்* சொல்மாலைகள் சொன்னேன்*
அண்டத்துஅமரர் பெருமான்!* அடியேனே.
அடியான் இவன்என்று* எனக்குஆர்அருள்செய்யும்
நெடியானை* நிறைபுகழ் அம்சிறைப்* புள்ளின்
கொடியானை* குன்றாமல்* உலகம்அளந்த
அடியானை* அடைந்து அடியேன்* உய்ந்தவாறே
ஆறாமதயானை* அடர்த்தவன்தன்னை*
சேறுஆர்வயல்* தென்குருகூர்ச் சடகோபன்*
நூறேசொன்ன* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
ஏறேதரும்* வானவர்தம் இன்உயிர்க்கே (2)