பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
மூவரில் முன்முதல்வன்* முழங்குஆர் கடலுள்கிடந்து,*
பூவளர்உந்தி தன்னுள்* புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*
தேவர்கள் நாயகனை* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கோவலர் கோவிந்தனை* கொடிஏர்இடை கூடும்கொலோ! (2)
புனைவளர் பூம்பொழில் ஆர்* பொன்னி சூழ் அரங்க நகருள்-
முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*
சினைவளர் பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்றான்*
கனைகழல் காணும்கொலோ?* கயல் கண்ணி எம்காரிகையே! (2)
உண்டு உலகுஏழினையும்* ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
கண்துயில் கொண்டுஉகந்த* கருமாணிக்க மாமலையை,*
திண்திறல் மாகரிசேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
அண்டரதம் கோவினை இன்று* அணுகும் கொல்? என்ஆய்இழையே!
சிங்கம்அதுஆய் அவுணன்* திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,*
பங்கய மாமலர்க் கண்* பரனை எம் பரம்சுடரை,*
திங்கள்நல் மாமுகில் சேர்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நங்கள் பிரானை இன்று* நணுகும்கொல் என்நல்நுதலே!
தானவன் வேள்வி தன்னில்* தனியே குறள்ஆய் நிமிர்ந்து,*
வானமும் மண்ணகமும்* அளந்த திரி விக்கிரமன்,*
தேன்அமர் பூம்பொழில் சூழ்* திரமாலிருஞ் சோலைநின்ற,*
வானவர் கோனை இன்று* வணங்கித் தொழவல்லள் கொலோ!
நேசம்இலாதவர்க்கும்* நினையாதவர்க்கும் அரியான்,*
வாசமலர்ப் பொழில்சூழ்* வடமா மதுரைப் பிறந்தான்,*
தேசம்எல்லாம் வணங்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
கேசவ நம்பி தன்னைக்* கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ! (2)
புள்ளினை வாய்பிளந்து* பொருமா கரி கொம்புஒசித்து,*
கள்ளச் சகடுஉதைத்த* கருமாணிக்க ம மலையை,*
தெள்அருவி கொழிக்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
வள்ளலை வாள்நுதலாள்* வணங்கித் தொழவல்லள் கொலோ!
பார்த்தனுக்கு அன்றுஅருளி* பாரதத்து ஒருதேர்முன்நின்று,*
காத்தவன் தன்னை* விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*
தீர்த்தனை பூம்பொழில் சூழ்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
மூர்த்தியைக் கைதொழவும்* முடியும்கொல்? என்மொய்குழற்கே!
வலம்புரி ஆழியனை* வரைஆர் திரள்தோளன் தன்னை,*
புலம்புரி நூலவனை* பொழில் வேங்கட வேதியனை,*
சிலம்புஇயல் ஆறுஉடைய* திருமாலிருஞ் சோலைநின்ற,*
நலம்திகழ் நாரணனை* நணுகும்கொல்? என்நல்நுதலே! (2)
தேடற்கு அரியவனை* திருமாலிருஞ் சோலை நின்ற,*
ஆடல் பறவையனை* அணிஆய்இழை காணும்என்று,*
மாடக் கொடிமதிள் சூழ்* மங்கையார் கலிகன்றிசொன்ன,*
பாடல் பனுவல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே! (2)
மல்லிகைகமழ் தென்றல் ஈரும்ஆலோ!* வண்குறிஞ்சி இசைதவரும்ஆலோ*
செல்கதிர் மாலையும் மயக்கும்ஆலோ!* செக்கர்நல் மேகங்கள் சிதைக்கும்ஆலோ*
அல்லிஅம் தாமரைக் கண்ணன் எம்மான்* ஆயர்கள்ஏறு அரிஏறு எம்மாயோன்*
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு* புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ! (2)
புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ! புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ*
பகலடுமாலைவண் சாந்தமாலோ!* பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*
அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து- அளந்து* எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்*
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்* இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?
இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்* இணைமுலை நமுக நுண்இடை நுடங்க*
துனிஇரும்கலவி செய்து ஆகம்தோய்ந்து* துறந்துஎம்மை இட்டுஅகல் கண்ணன்கள்வன்*
தனிஇளம்சிங்கம் எம்மாயன்வாரான்* தாமரைக் ண்ணும் செவ்வாயும் நீலப்*
பனிஇரும்குழல்களும் நான்கு தோளும்* பாவியேன் மனத்தே நின்றுஈரும்ஆலோ!
பாவியேன் மனத்தே நின்றுஈருமாலோ!* வாடை தண்வாடை வெவ்வாயாலோ*
மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!* மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*
தூவிஅம் புள்உடைத் தெய்வ வண்டுதுதைந்த* எம்பெண்மைஅம் பூஇதுதாலோ*
ஆவியின் பரம்அல்ல வகைகள்ஆலோ!* யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*
யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!* ஆ புகுமாலையும் ஆகின்றுஆலோ,*
யாமுடை ஆயன்தன் மனம் கல்ஆலோ!* அவனுடைத் தீம்குழல் ஈரும்ஆலோ*
யாமுடைத் துணைஎன்னும் தோழிமாரும்* எம்மில் முன்அவனுக்கு மாய்வர்ஆலோ*
யாமுடை ஆர்உயிர் காக்குமாறுஎன்? அவனுடை அருள் பெறும்போது அரிதே.
அவனுடைஅருள் பெறும்போது அரிதால்* அவ்அருள்அல்லன அருளும் அல்ல*
அவன்அருள் பெறுமளவு ஆவிநில்லாது* அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்*
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை* சேர்திருஆகம் எம்ஆவிஈரும்*
எவன் இனிப்புகும்இடம்? எவன் செய்கேனோ? ஆருக்குஎன் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னைமீர்காள்!* ஆர்உயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை*
கார்ஒக்கும்மேனி நம்கண்ணன் கள்வம்* கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கண் அஃதே*
சீர்உற்றஅகில் புகையாழ்நரம்பு* பஞ்சமம்தண் பசும்சாந்துஅணைந்து*
போர்உற்றவாடைதண் மல்லிகைப்பூப்* புதுமணம்முகந்துகொண்டு எறியும்ஆலோ!
புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ!* பொங்குஇளவாடை புன்செக்கர்ஆலோ*
அதுமணந்துஅகன்றநம் கண்ணன்கள்வம்* கண்ணனில் கொடிது இனிஅதனில்உம்பர்*
மதுமண மல்லிகை மந்தக்கோவை* வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து*
அதுமணந்து இன்அருள் ஆய்ச்சியர்க்கே* ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!
ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!* அதுமொழிந்துஇடை இடைதன் செய்கோலத்*
தூதுசெய் கண்கள் கொண்டுஒன்று பேசி* தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து* பேதைநெஞ்சுஅறவுஅறப் பாடும்பாட்டை*
யாதும்ஒன்று அறிகிலம் அம்மஅம்ம!* மாலையும்வந்தது மாயன்வாரான்.
மாலையும்வந்தது மாயன்வாரான்* மாமணிபுலம்ப வல்ஏறுஅணைந்த*
கோல நல்நாகுகள் உகளும்ஆலோ! கொடியன குழல்களும் குழறும்ஆலோ*
வால்ஒளி வளர்முல்லை கருமுகைகள்* மல்லிகை அலம்பி வண்டுஆலும்ஆலோ*
வேலையும் விசும்பில் விண்டுஅலறும்ஆலோ!* என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே?
அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா* அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்*
அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி* அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*
அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த* ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு*
அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்! அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே! (2)