பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
பொன்இவர் மேனி மரகதத்தின்* பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்* வேதியர் வானவர் ஆவர் தோழீ,*
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி* ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,*
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்* அச்சோ ஒருவர் அழகியவா! (2)
தோடுஅவிழ் நீலம் மணம் கொடுக்கும்* சூழ்புனல்சூழ் குடந்தைக் கிடந்த,*
சேடர்கொல் என்று தெரிக்க மாட்டேன்* செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி,*
பாடக மெல்அடியார் வணங்க* பல்மணி முத்தொடு இலங்குசோதி,*
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்* அச்சோ ஒருவர் அழகியவா!
வேய்இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த* மெய்ய மணாளர் இவ் வையம்எல்லாம்,*
தாயின நாயகர் ஆவர் தோழீ!* தாமரைக் கண்கள் இருந்தஆறு,*
சேய்இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்* செவ்விய ஆகி மலர்ந்தசோதி,*
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்* அச்சோ ஒருவர் அழகியவா!
வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்* கையன ஆழியும் சங்கும் ஏந்தி,*
நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்* நாகரிகர் பெரிதும் இளையர்,*
செம்பவளம் இவர் வாயின் வண்ணம்* தேவர் இவரது உருவம் சொலலில்,*
அம்பவளத்திரளேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*
பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா!
வெம்சின வேழ மருப்புஒசித்த* வேந்தர்கொல் ஏந்திழையார் மனத்தைத்,*
தஞ்சுஉடை ஆளர்கொல் யான் அறியேன்,* தாமரைக் கண்கள் இருந்தஆறு,*
கஞ்சனை அஞ்சமுன் கால் விசைத்த* காளையர் ஆவர் கண்டார் வணங்கும்,*
அஞ்சன மாமலையேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
பிணிஅவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்* பேர்அருளாளர் கொல்? யான் அறியேன்,*
பணியும் என் நெஞ்சம் இதுஎன்கொல் தோழீ!* பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
அணிகெழு தாமரை அன்ன கண்ணும்* அம்கையும் பங்கயம் மேனிவானத்து,*
அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா!
மஞ்சுஉயர் மாமதி தீண்ட நீண்ட* மாலிருஞ் சோலை மணாளர் வந்து,* என்-
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்* நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*
மஞ்சுஉயர் பொன்மலை மேல் எழுந்த* மாமுகில் போன்றுஉளர் வந்துகாணீர்,*
அம்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்* அச்சோ ஒருவர் அழகியவா!
எண்திசையும் எறிநீர்க் கடலும்* ஏழ்உலகும் உடனே விழுங்கி,*
மண்டி ஓர் ஆல்இலைப் பள்ளி கொள்ளும்* மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*
கொண்டல் நல் மால்வரை யேயும் ஒப்பர்* கொங்குஅலர் தாமரை கண்ணும்வாயும்*
அண்டத்து அமரர் பணிய நின்றார்* அச்சோ ஒருவர் அழகியவா!
அன்னமும் கேழலும் மீனும்ஆய* ஆதியை நாகை அழகியாரை,*
கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்* காமரு சீர்க்கலி கன்றி,* குன்றா-
இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை* ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
மன்னவர்ஆய் உலகுஆண்டு* மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே. (2)
பண்டைநாளாலே நின்திருஅருளும்* பங்கயத்தாள் திருஅருளும்
கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்* குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்*
தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து* உன்தாமரைக்கண்களால் நோக்காய்*
தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த* திருப்புளிங்குடிக் கிடந்தானே! (2)
குடிக்கிடந்து ஆக்கம்செய்து* நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து* உன்பொன்
அடிக்கடவாதே வழிவருகின்ற* அடியரோர்க்கு அருளி* நீஒருநாள்
படிக்குஅளவாக நிமிர்த்த* நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்*
கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை* திருப்புளிங் குடிக்கிடந்தானே.
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி* உன்திருஉடம்புஅசைய*
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்* தொண்டரோர்க்கு அருளி*
தடம்கொள் தாமரைக்கண்விழித்து* நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்*
இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்* திருப்புளிங்குடிக்கிடந்தானே!
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து* வைகுந்தத்துள் நின்று*
தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே* என்னைஆள்வாய் எனக்குஅருளி*
நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப* நாங்கள்கூத்துஆடி நின்றுஆர்ப்ப*
பளிங்குநீர் முகிலின்பவளம்போல்* கனிவாய்சிவப்பநீ காணவாராயே
பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து* நின்பல்நிலா முத்தம்*
தவழ்கதிர்முறுவல்செய்து* நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*
பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்* காய்சினப்பறவைஊர்ந்தானே!
காய்சினப்பறவைஊர்ந்து* பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல*
மாசினமாலி மாலிமான்என்று* அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*
காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்*
காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி* எம்இடர்கடிவானே!
எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!* இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்*
செம்மடல்மலருந் தாமரைப்பழனத்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து* நாம்களித்து உளம்நலம்கூர*
இம்மடஉலகர்காண நீஒருநாள்* இருந்திடாய் எங்கள்கண் முகப்பே.
எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்* இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி*
தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்* தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*
திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!* திருவைகுந்தத்துள்ளாய்! தேவா*
இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்* இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.
வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து* இதனுளும் இருந்திடாய்* அடியோம்
போற்றி ஓவாதே கண்இணை குளிர* புதுமலர்ஆகத்தைப்பருக*
சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்* செழும்பனைத் திருப்புளிங்குடியாய்*
கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த* கொடுவினைப்படைகள் வல்லானே!
கொடுவினைப்படைகள் வல்லையாய்* அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்*
கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே* கலிவயல் திருப்புளிங்குடியாய்*
வடிவுஇணைஇல்லா மலர்மகள்* மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்*
கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்* கூவுதல்வருதல் செய்யாயே.
'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று* குரைகடல் கடைந்தவன் தன்னை*
மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்* வழுதிநாடன் சடகோபன்*
நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்* இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்*
ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்* அடிஇணை உள்ளத்துஓர்வாரே (2)