பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
தன்னை நைவிக்கிலேன்* வல்வினையேன் தொழுதும்எழு,*
பொன்னை நைவிக்கும்* அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*
என்னை நைவித்து* எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,*
புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து* அழகுஆய புல்லாணியே. (2)
உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?* தொழுதும் எழு,*
முருகுவண்டுஉன் மலர்க் கைதையின்* நீழலில் முன்ஒருநாள்,*
பெருகுகா தன்மை என்உள்ளம்* எய்தப் பிரிந்தான்இடம்,*
பொருதுமுந் நீர்கரைக்கே* மணிஉந்து புல்லாணியே.
ஏது செய்தால் மறக்கேன்* மனமே! தொழுதும் எழு,*
தாது மல்கு தடம்சூழ் பொழில்* தாழ்வர் தொடர்ந்து,* பின்-
பேதை நின்னைப் பிரியேன்இனி* என்று அகன்றான்இடம்,*
போது நாளும் கமழும்* பொழில்சூழ்ந்த புல்லாணியே.
கொங்குஉண் வண்டே கரியாக வந்தான்* கொடியேற்கு,* முன்-
நங்கள்ஈசன்* நமக்கே பணித்த மொழிசெய்திலன்*
மங்கை நல்லாய்! தொழுதும் எழு* போய் அவன் மன்னும்ஊர்,*
பொங்கு முந்நீர் கரைக்கே* மணி உந்து புல்லாணியே
உணரில் உள்ளம் சுடுமால்* வினையேன் தொழுதும் எழு,*
துணரி நாழல் நறும்போது* நம்சூழ் குழல்பெய்து,* பின்-
தணரில் ஆவி தளரும்என* அன்பு தந்தான்இடம்,*
புணரி ஓதம் பணில* மணிஉந்து புல்லாணியே.
எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?* தொழுதும் எழு,*
வள்ளல் மாயன்* மணிவண்ணன் எம்மான் மருவும்இடம்,*
கள் அவிழும் மலர்க் காவியும்* தூமடல் கைதையும்,*
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த* புல்லாணியே.
பரவி நெஞ்சே! தொழுதும்எழு* போய் அவன் பாலம்ஆய்,*
இரவும் நாளும் இனிகண் துயிலாது* இருந்து என்பயன்?*
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,* வெண்திரை*
புரவி என்னப் புதம்செய்து* வந்துஉந்து புல்லாணியே
அலமும் ஆழிப் படையும் உடையார்* நமக்கு அன்பர்ஆய்,*
சலம்அதுஆகி தகவுஒன்று இலர்* நாம் தொழுதும்எழு,*
உலவு கால்நல் கழிஓங்கு* தண்பைம் பொழிலூடு,* இசை-
புலவு கானல்* களிவண்டுஇனம் பாடு புல்லாணியே.
ஓதி நாமம்குளித்து உச்சி தன்னால்,* ஒளிமாமலர்ப்*
பாதம் நாளும் பணிவோம்* நமக்கே நலம்ஆதலின்,*
ஆது தாரான்எனிலும் தரும்,* அன்றியும் அன்பர்ஆய்ப்*
போதும் மாதே! தொழுதும்* அவன்மன்னு புல்லாணியே
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்* எழில்தாமரைப்,*
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த* அழகுஆய புல்லாணிமேல்*
கலங்கல் இல்லாப் புகழான்* கலியன் ஒலிமாலைகள்,*
வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது* பாடுஇல் வைகுந்தமே (2)
ஓராயிரமாய்* உலகுஏழ்அளிக்கும்*
பேராயிரம்கொண்டதுஓர்* பீடுஉடையன்*
காராயின* காளநல்மேனியினன்*
நாரயணன்* நங்கள்பிரான்அவனே. (2)
அவனேஅகல்ஞாலம்* படைத்துஇடந்தான்*
அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான் அளந்தான்*
அவனேஅவனும்* அவனும்அவனும்*
அவனே மற்றுஎல்லாமும்* அறிந்தனமே.
அறிந்தனவேத* அரும்பொருள்நூல்கள்*
அறிந்தனகொள்க* அரும்பொருள்ஆதல்*
அறிந்தனர்எல்லாம்* அரியைவணங்கி*
அறிந்தனர்* நோய்கள்அறுக்கும்மருந்தே.
மருந்தேநங்கள்* போக மகிழ்ச்சிக்குஎன்று*
பெரும்தேவர் குழாங்கள்* பிதற்றும்பிரான்*
கரும்தேவன்எம்மான்* கண்ணன்விண்உலகம்*
தரும்தேவனைச்* சோரேல்கண்டாய்மனமே!
மனமே! உன்னை* வல்வினையேன்இரந்து*
கனமேசொல்லினேன்* இதுசோரேல்கண்டாய்*
புனம்மேவிய* பூந்தண்துழாய் அலங்கல்*
இனம்ஏதும்இலானை* அடைவதுமே.
அடைவதும்அணியார்* மலர்மங்கைதோள்*
மிடைவதும்* அசுரர்க்குவெம்போர்களே*
கடைவதும்* கடலுள்அமுதம்* என்மனம்
உடைவதும்* அவற்கேஒருங்காகவே.
ஆகம்சேர்* நரசிங்கம்அதுஆகி ஓர்*
ஆகம்வள்உகிரால்* பிளந்தான்உறை*
மாகவைகுந்தம்* காண்பதற்கு என்மனம்*
ஏகம்எண்ணும்* இராப்பகல்இன்றியே (2)
இன்றிப்போக* இருவினையும்கெடுத்து*
ஒன்றியாக்கைபுகாமை* உய்யக்கொள்வான்*
நின்றவேங்கடம்* நீள்நிலத்துஉள்ளது,
சென்றதேவர்கள்* கைதொழுவார்களே.
தொழுதுமாமலர்* நீர்சுடர்தூபம்கொண்டு*
எழுதும்என்னும்இது* மிகைஆதலின்*
பழுதுஇல்தொல்புகழ்ப்* பாம்புஅணைப்பள்ளியாய்*
தழுவுமாறுஅறியேன்* உனதாள்களே
தாளதாமரையான்* உனதுஉந்தியான்*
வாள்கொள் நீளமழுஆளி* உன்ஆகத்தான்*
ஆளராய்த்தொழுவாரும்* அமரர்கள்*
நாளும் என்புகழ்கோ* உனசீலமே?
சீலம்எல்லைஇலான்* அடிமேல்* அணி
கோலம்நீள்* குருகூர்ச்சடகோபன்* சொல்
மாலைஆயிரத்துள்* இவை பத்தினின்
பாலர்* வைகுந்தம்ஏறுதல் பான்மையே (2)