பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய* வாள்அரவின் அணை மேவி,*
சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி* சாமமா மேனி என் தலைவன்,*
அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்* அருங்கலை பயின்று,* எரி மூன்றும்-
செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே. (2)
கவளமா கதத்த கரி உய்ய* பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-
துவள* மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட* சுடுபடை துரந்தோன்,*
குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்* கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வாதை வந்து அடர வானமும் நிலனும்* மலைகளும் அலைகடல் குளிப்ப,*
மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி* விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*
போதுஅலர் புன்னை மல்லிகை* மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,*
சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி* வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*
பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்* பஞ்சவர் பாகன்*
ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து* உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்* மூவடி நீரொடும் கொண்டு,*
பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து* அலைபுனல் இலைக்குடை நீழல்,*
செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்* மணிமுடி பொடிபடுத்து* உதிரக்-
குழுவுவார் புனலுள் குளித்து* வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*
குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்* குளிர்தரு சூதம்மாதவியும்*
செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
வான்உளார் அவரை வலிமையால் நலியும்* மறிகடல் இலங்கையார் கோனை,*
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்* பருமுடி உதிர வில் வளைத்தோன்,*
கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட* கணமுகில் முரசம் நின்றுஅதிர,*
தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை* அஞ்சிடாதே இட,* அதற்கு-
பெரியமா மேனி அண்டம் ஊடுருவ* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
வரையின்மா மணியும் மரகதத் திரளும்* வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,*
திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய* பாரத மாபெரும் போரில்,*
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்* மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்* சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,*
தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்* திருக்கண்ணங் குடியுள் நின்றானே.
கலைஉலா அல்குல் காரிகை திறத்து* கடல்பெரும் படையொடும் சென்று,*
சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற* திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*
மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்* வல்லவர்க்கு இல்லை நல்குரவே. (2)
கொண்ட பெண்டிர் மக்கள்உற்றார்* சுற்றத்தவர் பிறரும்*
கண்டதோடு பட்டதுஅல்லால்* காதல்மற்றுயாதும்இல்லை*
எண்திசையும் கீழும்மேலும்* முற்றவும் உண்டபிரான்*
தொண்டரோமாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர் துணையே (2)
துணையும் சார்வும்ஆகுவார்போல்* சுற்றத்தவர்பிறரும்*
அணையவந்த ஆக்கம்உண்டேல்* அட்டைகள்போல் சுவைப்பர்*
கணைஒன்றாலே ஏழ்மரமும் எய்த* எம்கார்முகிலைப்*
புணைஎன்றுஉய்யப் போகல்அல்லால்* இல்லைகண்டீர்பொருளே.
பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்* போற்றிஎன்றுஏற்றுஎழுவர்*
இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்* என்னே என்பாரும்இல்லை*
மருள்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப் பிறந்தாற்கு*
அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்* இல்லைகண்டீர்அரணே.
அரணம்ஆவர் அற்றகாலைக்கு* என்றென்று அமைக்கப்பட்டார்*
இரணம்கொண்ட தெப்பர்ஆவர்* இன்றியிட்டாலும் அஃதே*
வருணித்துஎன்னே?* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்* இல்லைகண்டீர் சதிரே.
சதுரம்என்று தம்மைத்தாமே* சம்மதித்து இன்மொழியார்*
மதுரபோகம் துற்றவரே* வைகிமற்றுஒன்றுஉறுவர்*
அதிர்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப்பிறந்தாற்கு*
எதிர்கொள்ஆளாய் உய்யல்அல்லால்* இல்லைகண்டீர் இன்பமே.
இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!* உள்ளது நினையாதே*
தொல்லையார்கள் எத்தனைவர்* தோன்றிக் கழிந்தொழிந்தார்?*
மல்லை மூதூர்* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சொல்லிஉய்யப் போகல்அல்லால்* மற்றொன்றுஇல்லைசுருக்கே.
மற்றொன்றுஇல்லை சுருங்கச்சொன்னோம்* மாநிலத்துஎவ்உயிர்க்கும்*
சிற்றவேண்டா சிந்திப்பேஅமையும்* கண்டீர்கள்அந்தோ!*
குற்றம்அன்றுஎங்கள் பெற்றத்தாயன்* வடமதுரைப்பிறந்தான்*
குற்றம்இல்சீர் கற்றுவைகல்* வாழ்தல்கண்டீர்குணமே.
வாழ்தல்கண்டீர் குணம்இது அந்தோ!* மாயவன் அடிபரவிப்*
போழ்துபோக உள்ளகிற்கும்* புன்மைஇலாதவர்க்கு*
வாழ்துணையா* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
வீழ்துணையாப் போம்இதனில்* யாதும்இல்லைமிக்கதே.
யாதும்இல்லை மிக்குஅதனில்* என்றுஎன்று அதுகருதி*
காதுசெய்வான் கூதைசெய்து* கடைமுறை வாழ்க்கையும்போம்*
மாதுகிலின் கொடிக்கொள்மாட* வடமதுரைப்பிறந்த*
தாதுசேர்தோள் கண்ணன் அல்லால்* இல்லை கண்டீர் சரணே.
கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்* சரண்அதுநிற்கவந்து*
மண்ணின் பாரம் நீக்குதற்கே* வடமதுரைப்பிறந்தான்*
திண்ணமாநும் உடைமை உண்டேல்* அவன்அடி சேர்த்துஉய்ம்மினோ*
எண்ணவேண்டா நும்மதுஆதும்* அவன்அன்றிமற்றுஇல்லையே.
ஆதும்இல்லை மற்றுஅவனில்* என்றுஅதுவே துணிந்து*
தாதுசேர்தோள் கண்ணனைக்* குருகூர்ச்சடகோபன்சொன்ன*
தீதுஇலாத ஒண்தமிழ்கள்* இவைஆயிரத்துள் இப்பத்தும்*
ஓதவல்லபிராக்கள்* நம்மை ஆளுடையார்கள் பண்டே. (2)