பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்* கலவியை விடுதடு மாறல்,*
அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய* எம் அடிகள்தம் கோயில்,*
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்* தழுவி வந்து அருவிகள் நிரந்து,*
வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே! (2)
இண்டையும் புனலும் கொண்டுஇடை இன்றி* எழுமினோ தொழுதும்என்று,* இமையோர்-
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற* சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*
விண்டுஅலர் தூளி வேய்வளர் புறவில்* விரைமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே
பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த* பெருநிலம் அருளின் முன்அருளி,*
அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும்* அளந்த எம் அடிகள்தம் கோயில்,*
கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்* குறவர்தம் கவணிடைத் துரந்த,*
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
சூர்மையில்ஆய பேய்முலை சுவைத்து* சுடுசரம் அடுசிலைத் துரந்து,*
நீர்மை இலாத தாடகை மாள* நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*
கார்மலி வேங்கை கோங்குஅலர் புறவில்* கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
வார்புனல்சூழ் தண் மாலிருஞ்சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
வணங்கல்இல் அரக்கன் செருக்களத்து அவிய* மணிமுடி ஒருபதும் புரள,*
அணங்குஎழுந்துஅவன் தன் கவந்தம் நின்றுஆட* அமர்செய்த அடிகள்தம் கோயில்,*
பிணங்கலின் நெடுவேய் நுதிமுகம் கிழிப்ப* பிரசம் வந்துஇழிதர பெருந்தேன்,*
மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
விடம்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று* விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
குடம்கலந்துஆடி குரவைமுன் கோத்த* கூத்த எம் அடிகள்தம் கோயில்,*
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிற* தடவரைக் களிறுஎன்று முனிந்து,*
மடங்கல் நின்றுஅதிரும் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
தேனுகன் ஆவி போய்உக* அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,*
தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்* எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
வானகச் சோலை மரகதச் சாயல்* மாமணிக் கல்அதர் நுழைந்து,*
மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
புதம்மிகு விசும்பில் புணரி சென்று அணவ* பொருகடல் அரவணைத் துயின்று,*
பதம்மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த* பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*
கதம்மிகு சினத்த கடதடக் களிற்றின்* கவுள்வழி களிவண்டு பருக,*
மதம்மிகு சாரல் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
புந்திஇல் சமணர் புத்தர் என்றுஇவர்கள்* ஒத்தன பேசவும் உவந்திட்டு,*
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்* எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்* தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை* வணங்குதும் வா! மட நெஞ்சே!
வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை* மாமணி வண்ணரை வணங்கும்,*
தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்* சூழ் வயல்ஆலி நல்நாடன்*
கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்* ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)
அறுக்கும் வினையாயின* ஆகத்து அவனை*
நிறுத்தும் மனத்துஒன்றிய* சிந்தையினார்க்கு*
வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
குறுக்கும்வகை உண்டுகொலோ* கொடியேற்கே? (2)
கொடிஏர்இடைக்* கோகனகத்தவள் கேள்வன்*
வடிவேல் தடம்கண்* மடப்பின்னை மணாளன்*
நெடியான்உறை சோலைகள்சூழ்* திருநாவாய்*
அடியேன் அணுகப்பெறும்நாள்* எவைகொலோ!
எவைகொல் அணுகப் பெறும்நாள்?'* என்று எப்போதும்*
கவையில் மனம்இன்றி* கண்ணீர்கள் கலுழ்வன்*
நவைஇல் திருநாரணன்சேர்* திருநாவாய்*
அவையுள் புகலாவதுஓர்* நாள் அறியேனே
நாளேல் அறியேன்* எனக்குஉள்ளன* நானும்
மீளா அடிமைப்* பணி செய்யப் புகுந்தேன்*
நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வாள்ஏய் தடம்கண்* மடப்பின்னை மணாளா!
மணாளன் மலர்மங்கைக்கும்* மண் மடந்தைக்கும்*
கண்ணாளன் உலகத்துஉயிர்* தேவர்கட்குஎல்லாம்*
விண்ணாளன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
கண்ஆரக் களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்டே?
கண்டே களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்கள்*
தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்* துரிசுஇன்றி*
வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
கொண்டே உறைகின்ற* எம்கோவலர்கோவே!
கோவாகிய* மாவலியை நிலம்கொண்டாய்*
தேவாசுரம் செற்றவனே!* திருமாலே*
நாவாய்உறைகின்ற* என்நாரணநம்பீ*
'ஆஆ அடியான்* இவன் என்று அருளாயே.
அருளாது ஒழிவாய்* அருள்செய்து* அடியேனைப்
பொருளாக்கி* உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*
மருளேஇன்றி* உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்*
தெருளேதரு* தென்திருநாவாய் என்தேவே!
தேவர் முனிவர்க்குஎன்றும்* காண்டற்குஅரியன்*
மூவர் முதல்வன்* ஒருமூவுலகுஆளி*
தேவன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
யாவர் அணுகப்பெறுவார்* இனிஅந்தோ!
அந்தோ! அணுகப்பெறும்நாள்* என்றுஎப்போதும்*
சிந்தை கலங்கித்* திருமால் என்றுஅழைப்பன்*
கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வந்தே உறைகின்ற* எம்மா மணிவண்ணா!.
வண்ணம் மணிமாட* நல்நாவாய் உள்ளானைத்*
திண்ணம் மதிள்* தென்குருகூர்ச் சடகோபன்*
பண்ணார் தமிழ்* ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*
மண்ணாண்டு* மணம்கமழ்வர் மல்லிகையே. (2)